ஹிஜ்ரிகமிட்டியின் நோன்பு பெருநாள் அறிவிப்பு
இறைவேதம் திருக்குர்ஆன் மற்றும் இறைதூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் படி இந்த வருடத்தின் நோன்புப் பெருநாள் தினம் எதிர்வரும் ஆகஸ்டு 7-ஆம் தேதி (07-08-2013) புதன்கிழமையாகும் என்பதை ஹிஜ்ரி கமிட்டி மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது.
கடந்த ஜூலை- 09 செவ்வாய்க்கிழமையன்று துவங்கிய ரமழான் மாதம் 29 நாட்களில் ஆகஸ்டு 6-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. எதிர்வரும் ஆகஸ்டு 7-ஆம் தேதி புதன்கிழமை பெருநாள் தினம் என்பதே சரியானதாகும்.
முஸ்லிம்களில் பலர் காலையில் பிறந்த பிறையை மஃரிபு நேரத்தில் மறையும் போது புறக்கண்ணால் பார்த்துவிட்டு, அடுத்த நாளை மாதத்தின் முதல்நாளாக எண்ணுகின்றனர். இன்னும் மேகமூட்டம் அப்பிறையை மறைத்தால், அந்த மாதத்தை முப்பதாக ஆக்கவேண்டும் என்று கூறுகின்றனர். இதற்கு குர்ஆனின் கட்டளையோ அல்லது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அங்கீகாரமோ இல்லை என்பதை அறியத் தருகிறோம். பலஹீனமான நபி மொழிகள் மார்க்க ஆதாரமாகாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சூரியனையும் சந்திரனையும் அறிந்து கொள்வதற்கு புறக்கண்ணால் பார்ப்பது என்ற ஒரு நிலை மட்டும்தான் இருந்தது. பிறைகளை துல்லியமாக கணக்கீடு செய்யமுடிந்த விஞ்ஞான வளர்ச்சி பெற்ற காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இஸ்லாமிய மார்க்கம் பிறைகளை கணக்கிடுவதற்கு வலியுறுத்துகிறது, ஆர்வமூட்டுகிறது. ஒருபோதும் தடுக்கவில்லை.
நேரத்தையும் காலத்தையும் மனிதர்களுக்கு அறிவிக்கும் அல்லாஹ்வின் பிரம்மாண்ட படைப்புகளான சூரியனும் சந்திரனும் அவைகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கணக்கின்படியே இயங்குகின்றன என்கிறது திருக்குர்ஆன் (55:5). தொழுகை நேர அட்டவணை போன்ற கணக்கீட்டு முறையை முஸ்லிம் சமுதாயம் ஏற்றுக் கொண்டு பின்பற்றியும் வருகின்றனர்.
இந்நிலையில் புறக்கண்ணால் பிறையை பார்த்த பிறகே மாதத்தை துவங்க வேண்டும் என்று கூறும் அறிஞர்களும் ஜமாஅத்தின் தலைவர்களும் தங்களது புறக்கண்ணால் பிறையை பார்ப்பது இல்லை. கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக பிறைகளின் நிலைகளை தொடர்ந்து கவனமாக அவதானித்து வந்ததில், துல்லியமாக கணக்கீடு செய்யப்பட்டுள்ள ஹிஜ்ரி நாட்காட்டியின் தேதிகள் பிறையின் படித்தரங்களோடு மிகவும் சரியாக ஒத்துப்போவதை நாமும் பிற மக்களும் உறுதி செய்துள்ளனர். எனவே ஆகஸ்டு 7-ஆம் தேதி (07-08-2013) புதன்கிழமை அன்றுதான் நோன்புப் பெருநாள் எனும் ஈகைத்திருநாளாகும்.
இஸ்லாமிய
மார்க்கம் பெருநாள் தினத்தில் நோன்பு வைப்பதை ஹராம் என கூறி தடைசெய்துள்ளது. எனவே முஸ்லிம்கள்
யாரும் அன்று நோன்பு வைத்திடாமல், இறைவனைப் புகழ்ந்து, ஏழைகளுக்கு
உணவளித்து,
சரியான தினமான புதன்கிழமையன்று ஈகைத் திருநாளை ஒற்றுமையுடன்
கொண்டாட வேண்டுகிறோம். ஹிஜ்ரி கமிட்டியினரால் தமிழகம் தழுவிய அளவில் நடத்தப்படும் பெருநாள்
தொழுகை பற்றிய மேலதிக விபரங்களையும், ஹிஜ்ரி கமிட்டியின் செயல்பாடுகள்
பற்றியும் அறிந்திட www.mooncalendar.in என்ற
இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.