நாடும் கொடியும்

1,345 views
Skip to first unread message

Khaleel Baaqavee / கலீல் பாகவீ

unread,
Jan 28, 2013, 1:29:54 AM1/28/13
to kaleel Ab
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...
 
தேசியக் கொடி குறித்தும், அதன் விளக்கம் குறித்தும் சமீபத்தில் "நாடும் கொடியும்" என்ற ஒரு நூல் கிடைத்தது.
 
நமது மார்க்கத்துக்கு முரணான சில செய்திகளும், செயல்களும் சிகப்பு வண்ணமிடப்பட்டு சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
 
தேசியக் கொடி குறித்து மிக உயர்வான கருத்துக்கள் விதைக்கப்பட்டுள்ள நமது சமுதாயம் சிந்திக்க வேண்டிய தருணம் இது.
 
ஹிந்துத்துவ சிந்தனைகள் "தேசியம்" என்ற பெயரில் பல இடங்களில் பரவியிருப்பதை பாருங்கள்... விழிப்புணர்வு பெறுவோம்....
 
--------------------------------
 
ஒருநாடு என்றால் அதற்குக் குறிப்பிட்ட எல்லைக்கு ஒரு நிலப்பரப்பு இருக்க வேண்டும். அதில் வாழ குடிமக்கள் இருக்க வேண்டும். அவர்களை ஆள்வதற்கு அரசாங்கமும், ஆட்சியும் இருக்கவேண்டும்.
 
அந்த நாட்டுக்கென்று ஒரு தேசியக்கொடியும், தேசிய கீதமும், சின்னமும் (இலச்சினை) இருக்கவேண்டும். இந்திய தேசத்திற்கென்று ஒரு கொடி இருக்கிறது. மூவண்ணக்கொடி அது. மேலே ஆரஞ்சு, நடுவில் வெள்ளை, அதன் நடுவில் அசோகச் சக்கரம், கீழே பச்சை ஆகியவற்றைக் கொண்டதுதான் இந்தியத் தேசியக் கொடியாகும்.
 
இந்தியாவின் தேசிய கீதம்—‘ஜன கண மன‘ என்ற பாடலாகும். இந்தியத் தேசப் பாடல் ‘வந்தே மாதரம்‘ ஆகும்.
 
இந்திய நாட்டின் தேசியச் சின்னம் (இலச்சினை) மூன்று சிங்கங்களின் முகங்கள். இந்தியத் தேசிய வாசம் ‘சத்யமேவ ஜெயதே‘ இந்தியாவின் தேசிய விலங்கு புலி.
 
தேசியப் பறவை மயில். தேசிய மலர் தாமரை. உலக வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் மிகப் பழங்காலம் தொட்டே உலக நாடுகள் பலவும் தனித்தனிக் கொடிகளைக் கொண்டிருந்ததற்குச் சான்றுகள் உள்ளன.
 
இன்று உலகநாடுகள் அனைத்துக்குமே அவற்றின் தேசியச் சின்னமாகக் கொடிகள் அமைந்திருக்கின்றன. அந்தக் கொடிகளின் நிறமும், அவை அமைந்துள்ள பாங்கும், அவற்றில் பொறிக்கப்பட்டுள்ள இதர சின்னங்களும் அந்த நாடுகளின் கொள்கைகளை விளக்குவனவாக இருப்பதையும் காணலாம்.
 
இவ்வாறு ஒவ்வொரு நாடும் தனக்கென ஒரு கொடியைத் சின்னமாகத் தேர்வு செய்து பயன்படுத்த ஆரம்பித்தது. எப்பொழுது தெரியுமா? பைபிள் காலத்திற்கும் முன்னதாகவே இந்தப் பழக்கம் உலகத்தில் இருந்துவந்திருக்கிறது. ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனி தேசியக்கொடி தோன்றியது ஒரு சுவையான கதையாகும். பண்டைக் காலத்தில் தோன்றிய தேசியக் கொடிகள் துணியில் செய்யப்பட்டிருக்கவில்லை.
 
ஒரு கம்பத்தின் மீது மரத்தினால் ஏதாவதொரு பொருள் அல்லது பறவை அல்லது விலங்கினத்தின் உருவத்தைச் செதுக்கிவைத்து விடுவார்கள். உலகத்தில் தோன்றிய முதல் கொடி இப்படி மரக்கொடியாகத்தான் தோன்றியது. அதுவும் ஓர் அவசியத்தை முன்னிட்டுத்தான் தோன்றியது. அதாவது இரண்டு நாடுகள் போரிடும்பொழுது இருநாட்டுப் படைகளும் நேர் எதிர்த்திசைகளிலிருந்து புறப்பட்டு ஒரு பொது இடத்திற்குச் சென்று சங்கு அல்லது ஏதாவதொரு ஒலிப்பானை ஒலிக்கச் செய்துவிட்டு போரிடத் தொடங்குவதுதான் பண்டைக் காலத்திய வழக்கமாகும்.
 
அப்படிப் போருக்குச் செல்லும் ஒரு நாடு அல்லது குழுவின் வீரர்கள் ஒரே அணியாகச் செல்லவும், அடையாளம் கண்டு கொள்ளவும்தான் இப்படிப்பட்ட மரக்கொடிகளைத் தயார் செய்து பயன்படுத்தினார்கள். போர்க்களத்தில் போர் நடக்கும்பொழுது இந்த மரக்கொடிகளை வெட்டிச் சாய்ப்பதையே இருதரப்பு வீரர்களும் முதல் பணியாகக் கருதி முயற்சிப்பார்கள். ஒவ்வொர் தரப்பினரும் தங்கள் கொடி சாய்ந்துவிட்டால் அவர்களுடைய அரசன் அல்லது படைத்தலைவனே சாய்ந்து விட்டதாக அவர்கள் கருதியதுதாம் இதற்குக் காரணமாகும். துணியினால் ஆன முதல் கொடியை ரோமானிய நாட்டவர்தான் முதன் முதலாக உலகத்திற்கு அறிமுகப்படுத்தியதாக ஒரு வரலாறு கூறுகிறது.
 
பண்டைய ரோமானியர்கள் போர்க்களத்தில் வண்ணத்துணிகளை ஒரு கம்பத்தில் கட்டி வைத்துவிடுவார்கள். அந்த இடத்திற்கு அவர்களுடைய படைவீரர்கள் வந்து சேர்ந்து விடுவார்கள். பின்னர் அவர்கள் வரிசையாக அணிவகுத்து நிற்க, எதிரிநாட்டுப் படைகள் வந்து சேர்ந்ததும் போர் குழப்பமில்லாமல் நடக்கும். யூதர்கள் ஒரு தனிக்கொடியைப் பயன்படுத்தியதாகப் பைபிளிலேயே ஒரு குறிப்பு காணப்படுகிறது. ஆனால் கி.பி. 1218-ஆம் ஆண்டில் ஒரு கொடியை உருவாக்கி அதைத் தேசியச் சின்னமாக ஏற்று முதன்முதலில் உலகத்திற்கு அறிமுகப்படுத்திய நாடு டென்மார்க்தான்.
 
அடுத்து 1339 ஆம் ஆண்டில் ஸ்விட்ஸர்லாந்து நாடும் தன்னுடைய தேசியச் சின்னமாக ஒரு கொடியை அமைத்துக் கொண்டது. அதற்குப் பின்னர் சில நூற்றாண்டுகள் கழித்துத் தான் பிரிட்டன் தன் தேசியக் கொடியை அமைத்துக் கொண்டது. யூனியன் அமெரிக்கத் தேசியக் கொடி தோன்றியது. அமெரிக்காவின் கொடியில் அதன் 50 மாநிலங்களையும் குறிக்கும் வகையில் 50 நட்சத்திரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன! பின்னர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் அமெரிக்காவைப் பின்பற்றிப் பல ஐரோப்பிய நாடுகள் தங்கள் கொடிகளை அமைத்துக் கொண்டன.
 
உலகத்தின் மிகப்பழமையான கொடி ஏதாவது உள்ளதா என்று தேடியபோது 1972ஆம் ஆண்டில் ஈரான் நாட்டில் உள்ள கபிளில் என்ற ஊரில் ஒரு பழமையான கொடி கிடைத்தது. உலோகத்தால் செய்யப்பட்ட அந்தக் கொடி கிறிஸ்து பிறப்பதற்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியதாக இருக்க வேண்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இன்றைக்கு. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய கொடியாகும் அது! ஆனால், உலகத்திலேயே மிகப்பெரிய கொடி ஒன்று 1980 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது. 411X210 சதுர அடி பரப்பளவும் 7.7 டன் எடையும் கொண்ட அந்தக் கருங்கல் கொடியை உருவாக்கியவர் லென் சில்வர் பைன் என்பவராவார், ஃதி கிரேட் அமெரிக்கன் ஃபிளாக்“ என அழைக்கப்படும் அந்தப் பிரமாண்டமான கொடியை அவர் அமெரிக்க ஜனாதிபதிக்குப் பரிசளித்தார்.
 
இன்று அந்தக் கொடி வாஷிங்டனில் உள்ள ஜனாதிபதியின் வெள்ளை மாளிகையில் இருக்கிறது. உலகத்திலேயே கொடிக் கம்பங்களில் பறக்கும் கொடிகளில் மிகவும் பெரிய கொடி தென் அமெரிக்காவில் உள்ள பிரேஸில் கொடி தான்! பிரெஸில் நாட்டின் தலைநகரான பிரேஸிலியாவில் பறந்து கொண்டிருக்கும் அந்தக் கொடியின் நீளம் 328 அடி 1 அங்குலம்; பெரிய பொடி சோவியத்யூனியன் உட்பட உலகின் எந்த நாட்டிலும் பறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். நம் இந்திய நாட்டை எடுத்துக் கொண்டால் நமது கடவுள்களுக்குக் கூட தனித்தனிக் கொடிகள் உண்டு. உதாரணம்: முருகப் பெருமானின் சேவல் கொடி.
 
பண்டைத் தமிழ் மன்னர்களை எடுத்துக் கொண்டால் சேர மன்னர்களுக்கு வில் கொடியும், பாண்டிய மன்னர்களுக்கு மீன் கொடியும், சோழமன்னர்களுக்கு புலிக்கொடியும் இருந்திருக்கின்றன. ஒரு நாட்டின் கொடிக்கு எப்பொழுதும் தனிமரியாதை உண்டு. அந்தக் கொடிக்கு அரசன் முதல் ஆண்டிவரை தலை வணங்கி மரியாதை செலுத்துவார்கள். ஒரு நாட்டின் கொடியை எவரேனும் அவமதித்தால், அது அந்த நாட்டையே அவமானப்படுத்துவதாகும். அந்தக் காலத்தில் அரசர்களின் தேர்களில் அவர்களுடைய நாட்டுக் கொடிகள் கம்பீரமாகப் பறந்துகொண்டிருந்தன. இந்தக் காலத்தில் நாட்டுத் தலைவர்கள், அமைச்சர்கள் ஆகியோரின் கார்களில் தேசியக்கொடிகள் கம்பீரமாகப் பறக்கின்றன. தேசியக் கொடியைப் பற்றி இந்திய தேசத்தின் தந்தை‘ யாகிய அண்ணல் மகாத்மா காந்தியடிகள் சொல்லியிருப்பவை வருமாறு: “எல்லா நாடுகளுக்கும் கொடி இருப்பது அவசியம். அதற்காக இலட்சக்கணக்கானோர் உயிரைக் கொடுத்திருக்கிறார்கள்.
 
இது ஒரு வகையான விக்கிரக ஆராதனை என்பதில் சந்தேகமில்லை. என்றாலும் இதை ஒழிப்பது பாவம். ஏனென்றால் ஓர் இலட்சியத்தின் சின்னமாகக் கொடி விளங்குகிறது. யூனியன் ஜாக் கொடியை ஏற்றிவைக்கும் போது ஆங்கிலேயரின் நெஞ்சத்தில் அளப்பரிய வலிமையுடன் உணர்ச்சிகள் பொங்கி எழுகின்றன. நட்சத்திரங்களும் பட்டைகளும் பொறித்த கொடியை ஓர் உலகத்துக்கே ஈடாகப் போற்றுகின்றனர் அமெரிக்கர்கள்.
 
நட்சத்திரத்துடன் கூடிய பிறைக் கொடியைக் கண்டால் இஸ்லாமியர்களுக்கு வீர உணர்வு பொங்கி எழும். இந்தியர்களாகிய நாம் இந்துக்கள் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், யூதர்கள், பார்ஸிகள், இன்னும் இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட மற்றவர்கள் ஒரு பொதுக் கொடியை தேசியக் கொடியாக வரித்துக் கொண்டு அதற்காக வாழவும், சாகவும் முன் வருவது அவசியம்“ என்கிறார் அண்ணல் அவர்கள் தேசியக் கொடியின் முக்கியத்துவத்தைப் பற்றிக் காந்தியடிகள் மட்டுமின்றி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ஜவஹர்லால் நேரும், டாக்டர் ராஜேந்திர பிரசாத், வல்லபாய் பட்டேல் போன்ற தேசியத் தலைவர்களும் பல்வேறு சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டுள்ளனர்.
 
ஒரு சமயம் சுபாஷ் சந்திரபோஸ் அயல் நாடுகளிலிருந்து திரும்பி, பம்பாய் துறைமுகதத்தில் வந்து இறங்கியதும் பிரிட்டிஷ் அரசால் கைது செய்யப்பட்டார். அப்பொழுது பத்திரிகை நிருபர் ஒருவர் சுபாஷ் பாபுவை நெருங்கி “நாட்டு மக்களுக்குத் தாங்கள் விடுக்கும் செய்திகள் என்ன?“ என்று கேட்டபோது அந்தத் தியாகத் தலைவன் சொன்ன ஒற்றை வரிச் செய்தி, “தாயின் மணிக்கொடியைத் தாழவிடாதீர்கள்!“ என்பதுதான்.
 

 
----------------
என்றும் மாறா அன்புடன்...
குவைத்திலிருந்து...
பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ

Khaleel Baaqavee / கலீல் பாகவீ

unread,
Jan 28, 2013, 1:39:12 AM1/28/13
to kaleel Ab
அதாவது தாயின் மணிக்கொடியைத் தாழவிடாமல் தேசத்து விடுதலைப் போராட்டப் பணியைத் தொடர்ந்து நடத்துங்கள் என்பதே அதன் பொருளாகும்.
 
இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் இலட்சோப லட்சம் விடுதலைப் போர் வீரர்களுக்கு இது வீர உணர்ச்சியை அளித்தது காங்கிரஸ் இயக்கத்தின் மூவண்ணக் கொடிதான். அது வெறும் கொடியாக மட்டும் இருக்கவில்லை. இந்திய மக்கள் அனைவரின் நம்பிக்கையின் சின்னமாகவும், உத்வேகத்தின் அடையாளமாகவும், வீர உணர்வின் வெளிப்பாடாகவும் திகழ்ந்தது.
   
அந்தக் கொடியைத் தாழ விடாமல் உயர்த்திப் பிடித்ததற்காகத்தான் தியாக சீலன் திருப்பூர் குமரனின் தலையில் அடித்து மூளையைச் சிதறடித்துச் சாகடித்தனர் பிரிட்டிடீஷ் போலீஸார்! அந்தத் தாயின் மணிக்கொடியை ஏந்திப் பிடித்ததால்தான் பம்பாய் வீதியில் பாபுகனு என்ற பதின்மூன்று வயதுச் சிறுவனின் மீது லாரியை ஏற்றிக் கொன்றனர் பிரிட்டிஷ் போலீஸார்!அந்தக் கொடியை உயர்த்திப் பிடித்து ஊர்வலமாகச் சென்றதற்காகத்தான் லாகூர் வீதியில் பாஞ்சால சிங்கம் லாலாலஜபதிராயின் மீது பிரிட்டிஷ் போலீஸார் மிருகத்தனமான தடியடியை நடத்தி நெஞ்சிலும் தோளிலும் இரத்தக்காயங்களை ஏற்படுத்தி, அடுத்த சில நாட்களிலேயே மரணத்தைத் தழுவச் செய்தனர்!
   
அந்த வீரமணிக் கொடியை ஏந்தி ஊர்வலம் சென்றதற்காகத்தான் தியாகத்தழும் பேறிய ஜவஹர்லால் நேருவின் அன்னை ஸ்வரூபராணியையும், மனைவில் கமலா நேருவையும், மகள் இந்திராவையும், அலகாபாத் தெருக்களில் சரமாரியாகத் தடியடி நடத்தி இரத்தவெள்ளத்தில் மிதக்கச் செய்தனர்.
    
நம் தேசியக் கொடியைப் பகிரங்கமாகத் தோளில் சுமந்து கொண்டு போகக் கூடாது என்று பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தடை விதித்ததை எதிர்த்துத்தான் நாகவுரி கொடிப் போராட்டம் நடந்தது. நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் கொடியேற்றி நடந்து தடையை உடைத்தெறிந்தார்கள். சிறைச்சாலைகளையும் நிரப்பினார்கள்.
    
இப்படி எண்ணற்ற தியாக சீலர்கள் சிந்திய இரத்தத்திலும், கண்ணீரிலும் தோய்ந்து தோய்ந்து உரம் பெற்று ஓங்கிப் பறந்ததுதான் தாயின் மணிக்கொடி!
    
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிங்கப்பூரில் தற்காலிக சுதந்தர இந்திய அரசை அமைத்த போதும், அந்தமான் தீவை முதன் முதலாகச் சுதந்தரம் பெற்ற இந்திய பூமியாக அறிவித்தபோதும் ஏற்றி மகிழ்ந்த கொடிதான் தாயின் மணிக்கொடி! நமது இம்மூவண்ணக் கொடி!
   
இந்தியதேசிய இராணுவ வீரர்களோடு பர்மா எல்லையிலிருந்து இம்பால் போர்முனையில் பிரவேசித்து ஒரு பகுதி இந்திய பூமியை விடுவித்தபோது ஏற்றிய சுதந்தரக் கொடியும் இதே தாயின் மணிக்கொடிதான்!
   
அந்த விடுதலைப் போராட்ட வீரர் தம் மணிக்கரங்களில் தவழ்ந்த மூவண்ணக் கொடியிலிருந்துதான் இன்றைய நம் தேசியக்கொடி உதயமானது.
 
தேசியக் கொடியின் தோற்றம்!

இந்த இருபதாம் நூற்றாண்டில் நம் நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாறுதல்களையெல்லாம் நமது தேசியக் கொடியின் வரலாறு பிரதிபலிக்கிறது. நம் நாட்டின் பல்வேறு அரசியல் இயக்கங்கள், வகுப்புப் பிரச்சினைகள், உணர்ச்சிக் கொந்தளிப்புகள் முதலியவை எல்லாம் கொடி பற்றி நமது மக்கள் கொண்டுள்ள மனோபாவத்தில் வெளிப்படுகின்றன.

முதல்கொடி

நம்முடைய தேசியக் கொடி முதன் முதலாக 1906 ஆம் ஆண்டு ஆகஸ்டு 7 ஆம் தேதியன்று கல்கத்தா பார்ஸி பகான் சதுக்கத்தில் (இன்றைய கிரீன் பார்க்) ஏற்றி வைக்கப்பட்டதாக ஒரு வரலாற்றுக் குறிப்பு கூறுகிறது. அந்தக் கொடியில் மேலே பச்சையும் ஆரஞ்சும் கீழே சிவப்புமாக மூன்று வண்ணப் பட்டைகள் இருந்தன என்றும். மேலே உள்ள பச்சைப் பட்டையில் எட்டுத் தாமரை மலர்களின் உருவங்கள் சம அளவில் வரிசையாகப் பொறிக்கப்பட்டிருந்தன என்றும். நடுவில் உள்ள ஆரஞ்சு வண்ணப்பட்டையில் ‘வந்தே மாதரம்‘ என்ற சொற்கள் தேவநாகரி எழுத்தில் கருநீல வண்ணத்தில் பொறிக்கப்பட்டிருந்தன என்றும் அந்தக் குறிப்பில் காணப்படுகிறது.

ஆனால் முதல் தேசியக்கொடி கல்கத்தாவில் ஏற்றப்படவில்லையென்றும், அது பெர்லின் நகரில் ஒரு சர்வதேச மாநாட்டில் மேடம் காமா என்னும் இந்தியப் புரட்சிக்காரரால் 1905 ஆம் ஆண்டிலேயே ஏற்றி வைக்கப்பட்டதாகவும் இன்னொரு வரலாற்றுக் குறிப்பு கூறுகிறது. மேடம் காமாவால் தயாரிக்கப்பட்ட அந்தத் தேசியக் கொடியில் மேலே சிவப்பு, நடுவில் மஞ்சள், கீழே பச்சை என்று மூன்று பட்டைகளும், சிவப்புப் பட்டையில் ஒரு தாமரை மலரும், ஏழு நட்சத்திரங்களும் (சப்தரிஷி நட்சத்திரங்கள்) பொறிக்கப்பட்டிருந்த தாகவும், மஞ்சள் பட்டையில் நீலவண்ணத்தில் வந்தே மாதரம் பொறிக்கப்பபட்டிருந்ததாகவும், கீழேயுள்ள பச்சைப்பட்டையின் இடது மூலையில் சூரியனின் உருவமும், வலது மூலையில் இளம் பிறையும் இருந்ததாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இரண்டாவது கொடி

மேடம் காமாவால் பெர்லின் நகரில் ஏற்றப்பட்ட தேசியக்கொடி 1905 இல் ஏற்றப்பட்டதாக ஒரு குறிப்பும், 1907 இல் ஏற்றப்பட்டதாக மற்றொரு குறிப்பும் கூறுகிறது.

மேடம் காமா என்றழைக்கப்படும் ருஸ்தம் பிகாஜி கர்மா, 1861 செப்டம்பர் 24ஆம் தேதியன்று, பம்பாயில் வாழ்ந்து வந்த சோரப்ஜி ஃபிரேம்ஜி பட்டேல் என்ற பார்ஸி செல்வந்தரின் மகளாகப் பிறந்து, அலெக்ஸாண்ட்ரா பார்ஸி. பெண்கள் பள்ளியில் கல்வி பயின்று அனைத்துப் பாடங்களிலும் முதல் நிலையில் தேர்ச்சி பெற்றவர். இளம் வயது முதல் தேச விடுதலைப் போரிலும், விடுதலைப் போரில் உயிர் நீத்த தியாக சிலர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பதிலும் பேரார்வம் கொண்டிருந்த மேடம் காமா, தாமும் விடுதலைப் போரில் குதித்தார்.

அதைக் கண்டு வருத்தமுற்ற அவருடைய தந்தை மகளின் போக்கை மாற்றுவதற்காக 1885 ஆகஸ்டு 3 ஆம் தேதியன்று ருஸ்தம் காமா என்பவருக்கு மனமுடித்து வைத்தார்.

ருஸ்தம் காமா பிரிட்டிஷ் ஆட்சியின் பலத்த ஆதரவாளர். மேடம் காமாவோ அவருக்கு நேர் விரோதமானவர். அதனால் செல்வச் செழிப்பு மிக்க கணவரின் வீடு போக்களமாயிற்று. ஏராளமான வசதியும், சுகபோகங்களும், அந்தஸ்தும் மேடம் காமாவைத் துளியும் கவரவில்லை.

கிரிதான் (கண்ணன்) மேல் கொண்ட பக்தியினால் கணவனைப் பிரிந்து சென்ற மீராவைப் போலத், தேசத்தின் மீது கொண்ட பக்தியினால் தம் கணவரைப் பிரிந்தார் காமா அம்மையார்!

அப்பொழுது பம்பாயில் பிளேக் நோய் பரவி பெருவாரியான மக்களைப் பலி கொண்டு வந்தது. பயங்கரமான அந்தத் தொற்று நோயைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல், நோயாளிகளுக்குச் சிகிச்சை செய்வதில் ஈடுபட்டார் காமா அம்மையார். அதன் விளைவாக அவருக்கும் அந்நோய் பிடித்தது. இருப்பினும் தேச சேவையையே தன் உயிர் மூச்சாகக் கொண்ட அந்த வீரப் பெண் மணியைச் சாவும் நெருங்க அஞ்சியது! விரைவிலேயே குணமாகி எழுந்து நடமாடிய காமா அம்மையார், மிகவும் நலிந்து பலவீனமாக இருந்ததால் அவரை ஐரோப்பாவுக்குச் சென்று ஓய்வெடுக்குமாறு வற்புறுத்தினர்.

அதனால் மேடம் காமா 1902 ஆம் ஆண்டில் ஐரோப்பாவுக்குப் புறப்பட்டுச் சென்றார். ஜெர்மணி, ஸ்காட்லாந்து, பிரான்ஸ் முதலிய நாடுகளில் மூன்றாண்டு காலம் தங்கி சிகிச்சையும் ஓய்வும் பெற்ற மேடம் காமா 1905 இல் லண்டனுக்குச் சென்றார். அங்கே அவருக்கு ஓர் அறுவைச் சிகிச்சை நடந்தது. முழு ஓய்வும் சிகிச்சையும் அவரை முழு நலம் பெறச் செய்தது.

அப்பொழுது லண்டனில் இருந்த மிகச் சிறந்த அறிவாளியும், கல்விமானும், தேச பக்தருமான தாதாபாய் நெளரோஜியைச் சந்தித்த மேடம் காமா, சுமார் ஒன்றரை ஆண்டுக் காலம் அவருடைய செயலாளராகப் பணியாற்றினார். அந்தக் காலத்தில் ‘இந்தியா ஹவுண்‘ என்ற பெயரால் ஒரு விடுதியை அமைத்து இந்திய விடுதலைக்காகப் பாடு படுவோரையெல்லாம் ஒன்று திரட்டி வந்த ஷியாம்ஜி கிருஷ்ண வர்மா, வ.வே. சு. ஐயர், வீரசாவர்க்கார் போன்ற தேசபக்தர்களின் அறிமுகமும் நட்பும் மேடம் காமாவிற்குக் கிட்டியது.

1907 ஆகஸ்டில் ஜெர்மனியில் உள்ள ஸ்டடட்கார்ட் நகரில் சர்வதேச சோசலிஸ்ட் மாநாடு ஒன்று நடக்க இருப்பதாகக் கேள்விப்பட்ட மேடம் காமா, அந்த மாநாட்டுக்குச் சென்று அடிமை இந்திய மக்களின் இன்னல்களைப் பற்றிப் பேசி பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் கொடுங்கோன்மையை உலகறியப் பறை சாற்றுவதென்று முடிவு செய்தார்.

அந்த மாநாட்டில் பல்வேறு உலக நாடுகளிலிருந்தும் சுமார் ஆயிரம் பிரதிநிதிகள் வந்து கலந்து கொண்டனர் மாநாட்டு மேடையில் பல வண்ணங்கள் ஜொலிக்கும் இந்தியப் புடவையை அணிந்து கொண்டு அழகே உருவான காமா அம்மையார், கம்பீரமாக அமர்ந்திருந்ததைக் கண்ட அந்த மாநாட்டுப் பிரதிநிதிகள் அவரை ஒர் இந்திய மகாராணி என்றே நினைத்தனர்.

அந்த மாநாட்டில் பேசிய மேடம் காமா இந்தியர்களின் அவல வாழ்க்கையையும், ஆண்டுதோறும் 35 மில்லியன் பவுன்களை இந்தியாவிலிருந்து சுரண்டிச் செல்லும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கொள்ளைக்காரப் புத்தியையும் எடுத்துரைத்து, இந்திய விடுதலைக்கு இந்த மாநாடு ஆதரவு தர வேண்டும் என்று ஒரு தீர்மானத்தையும் முன்மொழிந்தார், தீர்மானம் நிறைவேறியதும் இந்திய தேசியக்கொடி ஒன்றை எடுத்து விரித்து உயர்த்திக் காட்டிய மேடம் காமா “இதுதான் இந்தியச் சுதந்தரத்தைப் பிரதிபலிக்கும் எங்கள் தேசியக் கொடி, இந்தக் கொடி இப்பொழுது வானவளாவப் பறக்கிறது. இது 1905 ஆம் ஆண்டிலே லண்டனில் உருவாகி, பெர்லினில் பறந்து இப்பொழுது உங்கள் மத்தியில் பறந்து கொண்டிருக்கிறது.

இந்தியச் சுதந்தரத்திற்காகத் தங்கள் இன்னுயிரை ஈந்த எத்தனையோ இளைஞர்களின் புனித இரத்தத்தால் உருவாக்கப்பட்ட கொடி இது! இங்கே குழுமியுள்ள கனவான்கள் அனைவரையும் ஒரு நிமிடம் எழுந்து நின்று இந்திய சுதந்தரக் கொடிக்கு வணக்கம் செலுத்துமாறு நான் கேட்டுக் கொள்கிறேன். உலகம் முழுவதிலும் உள்ள சுதந்தர விரும்பிகளையெல்லாம் இந்தக் கொடியோடு ஓத்துழைக்குமாறு இந்தக் கொடியின் பெயரால் நான் கேட்டுக் கொள்கிறேன்!“ என்று முழங்கினார் மேடம் காமா.

அவர் அப்படிக் கூறியதும் ஏதோ ஒரு மந்திர சக்திக்குக் கட்டுப்பட்டவர்கள் போல அங்கே அமர்ந்திருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகளும் எழுந்து நின்று மேடம் காமாவால் உயர்த்திக் காட்டப்பட்ட இந்தியத் தேசியக் கொடிக்கு வணக்கம் செலுத்தினார்கள்!

இவ்வாறு இந்தியத் தேசியக் கொடியை முதன் முதல் அந்நிய நாடுகளில் பறக்க விட்ட முதல் பெண்மணி மேடம் காமாதான்! அந்த மாநாட்டில் மட்டுமல்ல; வேறு எந்தக் கூட்டத்தில் அவர் பேசினாலும் தேசியக் கொடியைப் பறக்கவிட்ட பின்னர்தான் பேசுவது வழக்கம்.

1905 ஆம் ஆண்டில் ஒருநாள் லண்டன் நகர ‘இந்தியா ஹவிஸ்‘ மாளிகையில் மேடம் காமாவும் வீரசாவர்க்காரும், வ.வெ.சு. ஐயரும், ஷியாம்ஜி கிருஷ்ணவர்மாவும் பேசிக் கொண்டிருந்தபோது இந்தியத் தேசியக் கொடி ஒன்றை உருவாக்க வேண்டும் என்று யோசித்து ஆளுக்கு ஒரு யோசனையைக் கூறியபோது அனைத்தையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டதுதான் முதல் மூவண்ண இந்தியத் தேசியக் கொடியாகும்.

அப்பொழுது கொடியின் மாதிரியை உருவாக்க சிவப்புத் துணி கிடைக்காததால் மேடம் காமா தம் புடவையின் ஒரு பகுதியைக் கிழித்துக் கொடுத்தார் என்றும், அதை இணைத்து மாதிரிக் கொடியை வீர சாவர்க்கார் உருவாக்கினார் என்றும் ஒரு செய்தி, பிரபல இந்தியப் புரட்சி வீரரான மன்மதநாத் குப்தா எழுதிய “அவர்கள் அபாய நிலையில் வாழ்ந்தார்கள் (They lived dangerously) என்ற நூலில் இடம் பெற்றுள்ளது. 1905 இல் லண்டனில் உருவான அந்த இந்தியத் தேசியக் கொடி அதே ஆண்டின் பெர்லின் நகரிலும், 1906 ஆம் ஆண்டில் வங்காளத் தலை நகரான கல்கத்தாவிலும ஏற்றப்பட்டது? 1907 ஆம் ஆண்டில் ஸ்டட்கார்ட் நகர சர்வதேச சோசலிஸ்ட் மாநாட்டில் பறக்க விடப்பட்டது என்றும் அந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேடம் காமாவும், வீரசாவர்க்கார் முதலிய புரட்சி வீரர்களும் சேர்ந்து தயாரித்த முதலாவது தேசியக் கொடியில் அடிப்பக்கம் இடம் பெற்ற ஆரஞ்சு (காவி) வண்ணம் வெற்றியையும், தைரியத்தையும், பச்சைப் பட்டையில் உள்ள எட்டுத் தாமரை மலர்கள் எட்டு இந்திய மாநிலங்களையும் (அப்பொழுது இந்தியா எட்டு மாநிலங்களாகவே பிரிக்கப்பட்டிருந்தது.) குறிப்பதாகவும், வந்தே மாதரம் என்பது தாயகத்தை வணங்குகிறோம் என்பதைக் குறிப்பதாகவும், உதயசூரியனும், பிறை வடிவமும் இந்து முஸ்லிம் ஒற்றுமையைக் குறிப்பதாகவும் அப்பொழுது விளக்கம் தரப்பட்டது.

இந்த முதல் தேசியக் கொடியை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தவர் வீர சாவர்க்கார்தான் என்று மேடம் காமாவே குறிப்பிட்டிருக்கிறார்.

அதே 1907 அக்டோபர் 28ஆம் தேதி அன்று அமெரிக்காவில் வால்டோர்ஃப் அஸ்டோரியா ஓட்டலில் நடந்த ஒரு கூட்டத்திலும் மேடம் காமா இந்தியத் தேசியக் கொடியை ஏற்றி வைத்து அதற்கு அனைவரையும் வணக்கம் தெரிவிக்கச் செய்து அதன் பின்னர் இந்தியா விடுதலை பெறவேண்டிய அவசியத்தைப் பற்றிப் பேசினார்.

1908-இல் லண்டனுக்குத் திரும்பிய மேடம் காமா அங்கேயும் ‘இந்தியா ஹவுஸ்‘ விடுதியில் சில கூட்டங்களை நடத்தி வீரவுரையாற்றினார். இந்தியத் தேசியக் கொடியையும் பறக்க விட்டார். அப்பொழுது மேடம் காமாவின் நடவடிக்கைகளால் நடுக்கமுற்ற பிரிட்டீஷ் அரசு தன் ஒற்றர் மூலம் அவருக்குத் தொல்லை கொடுக்கத் தொடங்கியது, ஒரு சமயம் அந்த வீராங்கனையைக் கொலை செய்து விடவும் முயற்சி செய்தது.

பிரிட்டிஷ் உளவாளிகளின் தொல்லையைத் தாளமுடியாத மேடம் காமா பாரிஸ் நகருக்குச் சென்று ‘வந்தே மாதரம்‘ என்ற பத்திரிகையைத் தொடங்கி புரட்சி இயக்கத்திற்கு ஆதரவான பிரச்சாரத்தைத் தொடங்கினார்.

மூன்றாவது கொடி

அதன் பின்னர் இந்திய அரசியலில் அன்னிபெஸண்ட் அம்மையாரின் தொண்டும் லோகமான்யத் திலகரின் சேவையும் வெகுவாக ஓங்கின. ‘ஹோம் ரூல் இயக்கம்‘ என்ற அன்னிபெஸண்ட் அம்மையாரின் இயக்கம் இந்தியாவின் படித்த வர்க்கத்தினரை வெகுவாகக் கவர்ந்தது. அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த அன்னிபெஸண்ட் அம்மையார் இந்திய மக்களைத் தட்டியெழுப்பி சுயாட்சி உரிமைபெறும் போராட்டத்தில் ஈடுபட அறை கூவி அழைத்தார். இந்தியத் தேசியக் காங்கிரஸ் கட்சிக்கும் தலைமை வகித்தார். மிகவும் தீவிரவாதத் தலைவர் என்று கருதப்பட்ட லோகமான்ய பால கங்காதர திலகர் கூட அன்னிபெஸண்ட் அம்மையாரோடு ஒத்துழைத்துச் சுயாட்சிக் கோரிக்கையை (ஹோம் ரூல்) ஏற்றுக் கொண்டார்.

சுதேசியப் பொருள்களை ஆதரித்தல், அன்னியப் பொருள்களைப் புறக்கணித்தல், தேசியக் கல்வியை வளர்த்தல், சுயாட்சிக் கோரிக்கையை வலியுறுத்தல் முதலியவை அடங்கிய செயல் திட்டம் வகுக்கப்பட்டது. டாக்டர் அருண்டேல் தலைமையில் தேசியக் கல்வி வளர்ச்சி சங்கம் ஒன்றை ஆரம்பித்த அன்னிபெஸண்ட் சென்னை அடையாறில் தேசியப் பள்ளி ஒன்றைத் தொடங்கினார். நியூஇந்தியா என்ற ஒரு பத்திரிகையையும் தொடங்கினார்.

அந்தக் காலகட்டத்தில்தான், 1917 ஆம் ஆண்டில் மூன்றாவது தேசியக் கொடி உருவாயிற்று. திலகரும். அன்னிபெஸண்ட் அம்மையாரும் சேர்ந்து உருவாக்கிய கொடி அது.

அந்தக் கொடியில் மேலிருந்து கீழாக ஐந்து சிவப்புப் பட்டைகளும், நான்கு பச்சைப் பட்டைகளும் மாறி மாறி வரும் வகையில் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றின் முதல் ஏழு நட்சத்திரங்கள் (சப்தரிஷி நட்சத்திரங்கள்) பொறிக்கப்பட்டிருந்தன. கொடியின் வலது உச்சியில் வெள்ளை நிற இளம்பிறையும் அதற்குமேல் ஒரு நட்சத்திரமும் இடம் பெற்றிருந்தன.

உச்சியின் இடது மூலையில் பிரிட்டிஷ் கொடியும் சிறிய அளவில் இணைக்கப்பட்டிருந்தது.

இது அப்போதைய இலட்சியங்களையும் விருப்பங்களையும் பிரதிபலிப்பதாக இருந்தது. பூரண சுயராஜ்யம் என்ற கோரிக்கையே உதயமாகாத அந்தக் காலத்தில் சுயாட்சி உரிமைக்கு வழிவிடும் டொமினியன் அந்தஸ்தே போதும் என்ற நிலை அப்போது இருந்ததால் பிரிட்டிஷ் கொடிக்கும் தேசியக் கொடியில் இடம் அளிக்கப் பெற்றிருந்தது.

ஆனால், தேசியக் கொடியில் யூனியன் ஜாக்குக்கு இடமளிக்கப் பட்டிருந்ததைத் தேச பக்தர்கள் ஆதரிக்கவில்லை. இவ்வளவு பச்சையாகப் பிரிட்டிஷ் ஆட்சியோடு சமரசமாகப் போக வேண்டுமா? என்று பலரும் குமுறினார். நாட்டு மக்களும், காங்கிரஸ் கட்சியினரும் தங்களை வழிநடத்திச் செல்ல வேறு ஒரு புதிய தலைவரை எதிர்பார்க்கத் தொடங்கினர்.

1915 ஆம் ஆண்டில் கோபால கிருஷ்ண கோகலே உயிர் நீத்தார். அதே ஆண்டின் இறுதியில் மற்றொரு பிரபல காங்கிரஸ் தலைரவரான பெரோஷா மேத்தாவும் காலமாகி விட்டார். பண்டித மதன் மோகன் மாளவியா மிதவாதிகளின் தலைவராக இருந்ததால் அவராலும் காங்கிரசுக்கு வழிகாட்ட முடியவில்லை. 1915 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பிய காந்திஜி அப்பொழுதுதான் காங்கிரஸ் கட்சிக்கு அறிமுகமாகிக் கொண்டிருந்தார்.

1917 குஜராத் விவசாயிகள் பிரச்சினை, 1918 ஆமதாபாத் ஆலைத் தொழிலாளர் வேலை நிறுத்தம், 1919 ஆம் ஆண்டில் ரெளலட் சட்ட எதிர்ப்பு சத்தியாக்கிரகம், 1920 பாஞ்சாலப் படுகொலைக்கு எதிராகவும் கிலாபத் இயக்கத்திற்கு ஆதரவாகவும் மேற்கொண்ட சாத்வீக சட்ட மறுப்பின் ஆடிப்படையிலான ஒத்துழையாமை இயக்கம் ஆகியவற்றின் மூலம் பிரபலமடைந்த காந்திஜி, 1921 ஆம் ஆண்டில் காங்கிரஸ் இயக்கத்தின் சக்தி மிக்க தலைவராக மாறிவிட்டார். 1920 இல் லோகமான்ய பால கங்காதர திலகரும் மரணமடைந்து விட்டார். அப்பாழுது காங்கிரஸ் இயக்கத்தின் தலைமைப் பீடம் வெற்றிடமாக இருந்தது!

அந்த இடத்தை காந்திஜி சுலபமாகக் பூர்த்தி செய்தார். 1920 ஆம் ஆண்டு இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிகவும் முக்கியமான ஓர் ஆண்டு ஆகும். இந்திய மக்கள் மனதில் அலைவீசி நின்ற அரசியல் விருப்பங்களும், ஆசைகளும் ஒருமுகமாகப் பொங்கி எழுந்து உலகமே என்றும் காணாத வகையில் ஒரு மகத்தான ஒத்துழையாமை இயக்கத்தில் நாட்டை ஆழ்த்திய ஆண்டு அதுதான்! காந்தி என்ற சூரியன் இந்திய அரசியல் வானில் தன் செம்பொற் கிரணங்களை வீசிப் படர்ந்து பூரண ஜோதியுடன் தோன்றி ஒத்துழையாமை இயக்கத்திற்கு வழி காட்டியதும் தலைமை தாங்கியதும் அந்த ஆண்டில்தான்! அவருடைய அற்வுதமான செயலாற்றலையும், ஆன்ம சக்தியையும் கண்டு உலகமே பிரமித்து நின்றது அக்காலத்தில்தான்! அகில இந்திய சுயாட்சி சங்கத்தின் (ஹோம் ரூல்) தலைமைப் பதவியைக் காந்திஜி ஏற்றுக் கொண்டதும் அதே ஆண்டில்தான்.

நான்காவது கொடி

1921 ஆம் ஆண்டில் ஆந்திராவில் உள்ள விஜயவாடாவில் அனைத்து இந்திய காங்கிரஸ் செயற் குழுக் கூட்டம் நடந்தது. காந்திஜி காங்கிரசின் தளகர்த்தரானார்.

அப்பொழுதுதான் இந்தியாவின் இன்றைய தேசியக் கொடியின் முன் மாதியின மூவண்ணக் கொடியும் அறிமுகமானது. அதை உருவாக்கியவர் ஆந்திர இளைஞர் ஒருவர் தான். அவர் உருவாக்கிய அந்தக் கொடியில் இரண்டு பட்டைகள் இருந்தன. மேல்புறம் பச்சையும், கீழ்புறம் சிவப்பும் இருந்தன. பச்சையும் சிவப்பும் இந்தியாவின் இரண்டு பிரதான வகுப்பு மக்களை (இந்து, முஸ்லிம்), குறிக்கிறது என்றார் அந்த இளைஞர்.


2013/1/28 Khaleel Baaqavee / கலீல் பாகவீ <abka...@gmail.com>

Khaleel Baaqavee / கலீல் பாகவீ

unread,
Jan 28, 2013, 1:45:19 AM1/28/13
to kaleel Ab

அதைக் கவனமுடம் பரிசீலித்த காந்திஜி, அந்த இளைஞரை வெகுவாகப் பாராட்டி விட்டு ஒரு புதிய யோசனையையும் வழங்கினார். கொடியின் மேல்புறத்தில் இந்தியாவின் இதர வகுப்பு மக்களைக் குடறக்க ஒரு வெள்ளைப் பட்டையைச் சேர்க்க வேண்டும். முன்னேற்றத்தின் சின்னமாக நடுவில் ஓர் இராட்டைச் சின்னத்தைச் சேர்க்க வேண்டும் என்பது காந்திஜி கூறிய யோசனை. அதை அந்த இளைஞர் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டு அன்றே அந்தக் கொடியை உருவாக்கி காந்திஜியிடம் கொண்டு வந்து கொடுத்தார்.

இப்படித் தான் மூவண்ணக் கொடி பிறந்தது. அந்தக் கொடியை அகில இந்திய காங்கிரஸ் கட்சி அங்கீகரிப்பதற்கு முன்னரே காந்திஜி அங்கீகரித்து விட்டதால் அது மிகவும் பிரபலமடைந்து விட்டது. காங்கிரஸ் கூட்டங்களிலும் மாநாடுகளிலும் அந்த மூவண்ணக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது.

அதன் பின்னர் அந்தக் கொடியை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியும் அங்கீகரித்தது. அடுத்த பத்தாண்டு காலத்திற்கு அந்த மூவண்ணக் கொடிதான் தேசியக் கொடியாக விளங்கியது. அதாவது இந்தியக் தேசிய விடுதலைப் பேரியக்கமான காங்கிரஸ் கொடியாக விளங்கி வந்தது.

என்றாலும் கொடியில் இம் பெற்றிருந்த நிறங்களின் தத்துவார்த்தம் சம்பந்தமாமக இந்துக்களுக்கிடையிலும், முஸ்லிம்களுக் கிடையிலும். சீக்கியர் முதலிய இதரவகுப்பாருக்கிடையிலும் சில கடுமையான கருத்து வேற்றுமைகள் ஏற்பட்டு பலத்த விவாதங்கள் நடந்து வந்தன. அதன் காரணமாக சில இடங்களில் வகுப்புப் பூசல்களும் நடந்தன. இந்து முஸ்லிம் வகுப்பாருக்கிடையே பெரும கருத்து வேற்றுமையும் ஏற்பட்டு வளர்ந்து கொண்டிருந்தது. கொடிக்கு வகுப்புவாத விளக்கம் கொடுக்கும் போக்கும் வலுத்து வந்தது.

இதனால், 1931ஆம் ஆண்டில் கராச்சியில் காங்கிரஸ் மகாசபை கூடியபோது கொடிப் பிரச்சினைக்கு முடிவு காண்பதற்காக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காங்கிரஸ் கட்சி முழுமையாக ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் ஒரு கொடியை உருவாக்குவது அவசியம் என்றும், அதை விரைவில் முடிக்க வேண்டுமென்றும் அந்தத் தீர்மானம் கூறியது.

இதற்கிடையில் பொது மக்களின் கருத்தை அறிந்து காரியக் கமிட்டிக்குக்கூறுவதற்காக ஏழு பேர் கொண்ட குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. சீக்கியர்கள் தங்களுக்குப் பிடித்தமான வண்ணத்தை தேசியக் கொடியில் சேர்க்க வேண்டும் என்று மிகவும் வலியுறுத்தினார்கள். அதனால்தான் பொது மக்கள் கருத்தறிய ஒரு தனிக்குழு நியமிக்கப்பட்டது. கராச்சி காங்கிரசுக்குச் சர்தார் வல்லபாய் பட்டேல் தலைமை வகித்தார்.

உப்புச் சத்தியாக்கிரகம் முடிந்து காங்கிரஸ் தலைவர்களெல்லாம் கைது செய்யப்பட்டு விடுதலையான காலகட்டத்தில் கூடிய கராச்சி காங்கிரஸ் கொடி சம்பந்தமாக அநாவசியமான சர்ச்சைகள் ஏற்படுவதை விரும்பவில்லை.

கமிட்டியின் சிபாரிசு

பொதுமக்களிடம் விசாரணை (கருத்துக கணிப்பு) நடத்தி அதற்கேற்ப புதிய கொடியை உருவாக்க புதிய யோசனைகளைக் கூறுவதற்காக நியமிக்கப்பட்ட குழு தன் கருத்துக் கணிப்பை முடித்து ஓர் அறிக்கையை அளித்தது.

ஐந்தாவது கொடி

அதன்படி வெறும் குங்குமப்பூ வண்ணத் துணியின் இடது கோடியில் செங்கபில நிறத்தில். ஒரு கைராட்டைச் சின்னத்தைப் பொறிக்கலாம் என்பதே அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்த சிபாரிசு. ஆனால், அந்த யோசனையை அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி ஏற்றுக் கொள்ளவில்லை. பின்னர் வேறு பல யோசனைகளும், மாற்று யோசனைகளும் தெரிவிக்கப்பட்டன.

 
ஆறாவது கொடி

தேசியக் கொடி வரலாற்றின் 1931 ஆம் ஆண்டு ஒரு முக்கியமான ஆண்டு ஆகும். அந்த ஆண்டின் மத்தியில்தான் இப்போதைய தேசியக் கொடியின் தந்தையான மூவண்ணக் கொடி தேசியக் கொடியாக அங்கீகரிக்கப்பட்டது.

மூவண்ணக்கொடியில் ஆரஞ்சு, வெள்ளை பச்சை ஆகிய மூன்று பட்டைகள் இருக்கும். நடுவில் உள்ள வெள்ளைப் பட்டையில் நீல நிறத்தில் கைராட்டைச் சின்னம் பொறிக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது.

· துரத்துக்கும், தியாக உணர்வக்கும் ஆரஞ்சு நிறம்.

· சத்தியத்துக்கும், சாந்திக்கும் வெள்ளை நிறம்.

· நம்பிக்கை, தயை, கருணை வளத்துக்கு பச்சை நிறம்.

· முன்னேற்றத்தைக் குறிக்க இராட்டைச் சின்னம்.
 

மூன்றுக்கு இரண்டு பங்கு என்ற அளவில் நீள அகலம் இருக்கும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இது தவிர கொடியில் உள்ள நிறங்கள் வகுப்புவாதம் எதையும் குறிக்காது. அப்படிப் பட்ட உட்பொருளோ, மறைபொருளோ இல்லை என்றும் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டது.

இந்தத் தீர்மானத்தின் மூலமாக மூவண்ண இராட்டைக் கொடி தேசியக் கொடியாக காங்கிரஸ் கட்சியால் அதிகாரம் பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.

அன்று முதல் அதுவே நமது தேசியக் கொடியாக ஆயிற்று. நமது சுதந்திரப் போரின் சின்னமாகவும் அது ஆயிற்று. 1947 ஜூலை 22 ஆம் தேதியன்று அதே கொடியைச் சுதந்திர இந்தியாவின் தேசியக் காடியாகவும் இந்திய அரசியல் நிர்ணய சபை அங்கீகரித்தது.

சுதந்திரம் பெற்ற பின்னரும் அக்கொடியின் தத்துவார்த்த விளக்கமும் வண்ணங்களும் மாறவில்லை, மாற்றப்பட வேண்டும் என்று கோரப்படவும் இல்லை.

ஆனால், காங்கிரஸ் கட்சியின் கொடியாகவும் அதுவே விளங்கி வந்ததால், அரசாங்கக் கொடிக்கும், கட்சிக் கொடிக்கும் வித்தியாசம் இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு சிறிய மாறுதல் மட்டும் செய்யப்பட்டது. நடுவில் உள்ள கைராட்டைக்குப் பதிலாக அசோகச் சக்கரம் சேர்க்கப்பட்டது.

ஆனால், காங்கிரஸ் கட்சியின் கொடியில் இன்னமும் கைராட்டைச் சின்னமே நீடித்து வருகிறது.

கொடித் தீர்மானம்

1947 ஜூலை 22 ஆம் தேதியன்று இந்தியாவின் அரசியல் நிர்ணய சபைக் கூட்டத்தில் அதன் தலைவராகிய ஜவஹர்லால் நேரு தேசியக் கொடி பற்றிய தீர்மானத்தை முன்மொழிந்தார் அது வருமாறு

ஆழ்ந்த குங்குமப்பூ நிறம், வெள்ளை, கரும் பச்சை ஆகிய மன்று வண்ணங்கள் சம அளவில், (குறுக்கில்) அமைந்தது இந்தியாவின் தேசியக் கொடியாக இருக்க வேண்டும் என்று இச்சபை தீர்மானிக்கிறது. வெள்ளைப் பட்டையின் மத்திய்ல சர்க்கா (ராட்டை) வுக்குப் பதிலாகக் கருநீல நிறத்தில் உள்ள ஒரு சக்கரம் இடம்பெற வேண்டும். சாரநாத்தில் அசோக மன்னன் நிறுவிய தூணின் தலைப்பாகத்தின் விலாப்புறத்தில் உள்ள சக்கரத்தைப் போல இந்தச் சக்கரத்தில் உருவம் இருக்க வேண்டும்.

ஏறக்குறைய வெள்ளைப் பட்டையின் அகலத்தைப் போல சக்கரத்தின் விட்டம் அமைய வேண்டும்.

கொடியின் நீளத்துக்கும் அகலத்துககும் இடையே உள்ள விகிதாச்சாரம் மூன்றுக்கு இரண்டு என்ற அளவில் இருக்க வேண்டும்.

இந்தத் தீர்மானத்தை முன்மொழிந்து பிரதமர் நேரு நிகழ்த்திய சொற்பொழிவு நமது தேசியக் கொடியைப் பற்றிய பல்வேறு சர்ச்சைகளுக்கும் முடிவு கட்டியது. அது வருமாறு

“இப்பொழுது நான் பெற்றுள்ள விறுவிறுப்பையும் எழுச்சியையும் இச்சபையின் உறுப்பினர்கள் பலரும் பெற்றுள்ளனர் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஏனென்றால், சபையின் அங்கீகாரத்துக்காக நான். பெருமிதத்தோடு சமர்ப்பித்துள்ள இந்தத் தீர்மானத்துககும் கொடிக்கும் பின்னணியில் ஒரு வரலாறே இருக்கிறது. ஒரு நாட்டின் வரலாற்றைச் சேர்ந்த சாரமிகுந்த சிறிய கால கட்டம் ஒன்று இருக்கிறது.

சில சமயங்களில், நூற்றாண்டுகளின் அனுபவங்களைக்கூட ஒரு சிறு கால கட்டத்தில் நாம் பெற்று விடுகிறோம்.... நமது மகத்தான தேசத்தின் மகத்தான போராட்டத்தின் ஏற்ற இறக்கங்கள் என் நினைவில் இருக்கின்றன. பெருமிதத்துடனும் உற்சாகத்துடனும் மாத்திரமின்றி, நரம்புத் துடிப்போடும், உணர்வுக் கிளர்ச்சியோடும் இந்தக் கொடியை முன்பு நாம் நோக்கிய துண்டு. சில சமயங்களில் நாம் சோர்ந்து கிடந்தபோது இந்தக் கொடியைப் பார்த்து ஊக்கம் பெற்றுத் தொடர்ந்து முன்னேறியதுண்டு. இவையெல்லாம் எனக்கு நினைவில் இருக்கின்றன. இந்தச் சபையிலுள்ள பலருக்கும் நினைவில் இருக்கும்.


இன்று இங்கே நம்மிடையே இல்லாத பலர், காலம் சென்ற நமது தோழர்கள் இந்தக் கொடியை விடாப்பிடியாக ஏந்தி நின்றனர். இறக்கும் தறுவாயில்கூட அதைப் பிறரிடம் கொடுத்து உயர்த்திப் பிடித்துக் கொள்ளச் செய்தனர். ஆகவே மேடு பள்ளங்களும், சோதனைகளும் நாசங்களும் நிறைந்த மக்களின் சுதந்திரப் போராட்டமும், அந்தப் போராட்டம் முடிவுற்றதால் ஏற்பட்ட வெற்றிப் பெருமிதமும் இந்தத் தீர்மானத்தின் எளிய சொற்களுக்குப் பின்னணியில் உள்ளன. நானும் அப்படிப்பட்ட பெருமித உணர்வுடன் தான் இந்தத் துர்மானத்தை முன்மொழிகின்றேன்...“

“இந்தக் கொடி பலவிதமாக வருணிக்கப் பட்டிருக்கிறது. சிலர் அதன் தத்துவத்தைச் சரிவரப் புரிந்து கொள்ளவில்லை. அப்படித் சரியாகப் புரிந்துகொள்ளாமல், வகுப்பு வாத அடிப்படையில் அர்த்தம் செய்து கொண்டனர். இந்தக் கொடியின் ஒருபாகம் இந்த வகுப்பையோ அந்த வகுப்பையோ பிரதிபலிப்பதாக அவர்கள் நம்பினர்.

ஆனால், இந்தக் கொடி உருவாக்கப்பட்ட போது அதற்கு வகுப்புவாதப் பொருள் எதுவும் கற்பிக்கப்படவில்லை. கொடியின் அழகான அமைப்பு என்றுதான் அதைப்பற்றி நாங்கள் எண்ணினோம். ஏனெனில் ஒரு நாட்டின் சின்னம் பார்ப்பதற்கு அழகாக இருக்க வேண்டும். நாட்டு மக்களின் உள்ளுணர்வை, பல்லாயிரம் ஆண்டுகளாக நமது தனிச் சிறப்பாக இருந்துவரும் ஐக்கியப் பாரம்பரியத்தை அந்தக் கொடியின் முழு உருவமும், அதன் பாகங்களும் பிரதிபலிக்க்கும் என்று நினைத்தோம்...,“

“இந்தக் கொடியைப் பற்றி நான் ஒரு சில வார்த்தைகள் கூற விரும்புகிறேன். நம்முள் பலர் முன்பு கையாண்டு வந்த கொடியிலிருந்து இது வேறுபட்டிருக்கிறது. ஆழ்ந்த குங்குமப்பூ வண்ணம், வெள்ளை, கரும்பச்சை போன்ற முந்திய வண்ணங்களே இதிலும் உள்ளன. வெள்ளைப்பட்டையில் முன்பு ஒரு ராட்டை இருந்தது. பாமார இந்திய மக்களின், தொழில் சின்னமாகவும், நமக்கொல்லாம் மகாத்மா காந்தி அருளிய உபதேசத்தின் சின்னமாகவும் அது விளங்கியது.

இப்பொழுது இந்தக் கொடியில் அந்த ராட்டைச் சின்னம் சிறிது மாற்றப்பட்டுள்ளது. அது அடியோடு அகற்றப்படவில்லை. சாதாரணமாக கொடியின் ஒரு பக்கத்தில் உள்ள சின்னமே மறுபக்கத்திலும் இருக்க வேண்டும். இவ்வாறு இல்லாவிட்டால் அது சம்பிரதாயத்துக்கு மாறுபட்டதாகக் கருதப்படும். ஆனால், இந்தக் கொடியில் முன்னர் இடம் பெற்றிருந்த ராட்டையின் ஒரு பக்கத்தில் சக்கரமும் மறுபக்கத்தில் கதிரும் இடம் பெற்றிருந்தன. கொடியின் பின்புறத்தில் பார்த்தால் கதிரும் சக்கரமும் இடம் மாறித் தெரியும். இப்படி ஒரு நடைமுறைச் சங்கடம் இருந்தது. அதனால்தான் நாங்கள் தீர்க்கமாக யோசித்து மக்களுக்கு உற்சாக மூட்டிய இந்த மகத்தான சின்னத்தை ஒரு சிறய மாறுதலோடு நீடிக்கச் செய்ய வேண்டுமென்று முடிவு செய்தோம். ராட்டையின் சக்கரத்தை மட்டும் வைத்துக்கொண்டு, குழப்பத்துக்குக் காரணமான கதிர் மாற்றும் கயிறு போன்ற மற்ற பகுதிகளை நீக்கி விடலாம் என்று தீர்மானித்தோம்.

ராட்டையின் பிரதானமான பாகமாகிய சக்கரம் அதில் நீடித்து இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்தோம். இவ்வாறு ராட்டைச் சக்கரம் பற்றிய பழைய சம்பிரதாயம் நீடித்திருக்கும்.

ஆனால், அந்தச் சக்கரம் எப்படி இருக்க வேண்டும் என்று சிந்தித்தபோது பலவகைச் சக்கரங்கள் நினைவுக்கு வந்தன. ஆனால், அவற்றில் ஒரு குறிப்பிட்ட சக்கரம் மிகவும் எடுப்பாகத் தோன்றியது. பல இடங்களில் பரவலாக இருப்பதும், நாம் அனைவரும் பார்த்திருப்பதுமான புகழ் பெற்ற சக்கரம் அது. அசோக ஸ்தூபியின் தலைப்பாகத்திலும், வேறு பல இடங்களிலும் உள்ள சக்கரம் அது. பழம்பெரும் பாரதப் பண்பாட்டின் சின்னமாகச் சக்கரம் விளங்குகிறது. பல சகாப்தங்களாக இந்தியா பின்பற்றிப் போற்றிவரும் லட்சியங்கள் பலவற்றின் சின்னம் அது! ஆகவே, நமது கொடியில் இந்தச் சக்கரம் இடம் பெற வேண்டும் என்று நினைத்தோம். என்னைப் பொறுத்த வரை இந்தக் கொடியுடன் இந்தச் சின்னத்தை இணைத்ததோடு, இந்திய சரித்திரத்திலும், உலக வரலாற்றிலும், மிக உன்னதமான புருஷர்களில் ஒருவரான அசோகரின் திருநாமத்தையும் சம்பந்தப்படுத்துவது அளப்பரிய மகிழ்ச்சியை அளிக்கிறது. பூசலும், மோகலும், சகிப்பின்மையும் நிறைந்த இந்தக் காலத்தில் நம மனமானது தொன்மைக் காலத்தில் விரும்பிப் போற்றிய இலட்சியத்தை, யுகயுகாந்தரமாக விரும்பி பரும் அடிப்படை இலட்சியத்தை எண்ணிப்பார்ப்பது மிகவும் பொருத்தமானதே...

“அசோகரின் பெயரைக் குறிப்பிட்டேன். இந்திய வரலாற்றிலே அசோகரின் காலம் முக்கியமாக, ஒரு அனைத்துத் தேசியக் காலமாக விளங்கியது என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். குறுகிய தேசியக் காலம் அல்ல அது! சாம்ராஜ்யம். அல்லது ஏகாதிபத்தியத்தின் தூதர்களாக அல்லாமல் சாந்தி, பண்பாடு, நல்லெண்ணம் ஆகியவற்றின் பிரதிநிதிகளாக இந்தியாவன் தூதர்கள் தொலை தூர நாடுகளுக்கெல்லாம் சென்ற காலம் அது!

ஆகவே, நான் உங்கள் முன் சமர்ப்பித்துள்ளன இந்தக் கொடியானது ஒரு சாம்ராஜ்யத்தின் கொடியாகவோ, ஏகாதிபத்தியத்தின் கொடியாகவே, யார்மீதும் ஆதிக்கம் செலுத்தும் கொடியாகவோ அல்லாமல், சுதந்திரத்தின் கொடியாக விளங்கும் என்று நம்புகிறேன். நமக்கு மட்டும் அல்ல, இதைப் பார்ப்போர் எல்லோருக்குமே சுதந்திரத்தின் கொடியாக விளங்கும் என்று நம்புகிறேன்.

நமது தூதர்களாக இந்தியர்கள் சென்று வசிக்கும் இடங்களுக்கு மட்டுமின்றித் தூரக் கடல்களைக் கடந்து நம்முடைய கப்பல்கள் போகும் நாடுகளுக்கெல்லாம் அது செல்லும் என்று நினைக்கிறேன். அது எங்கு சென்றாலும் சுதந்தரம் என்ற செய்தியை, தோழமை என்ற செய்தியை உலகில் உள்ள எல்லாத் தேசங்களுடனும் இந்தியா நட்புறவு கொள்ள விரும்புகிறது என்ற செய்தியை, சுதந்திரத்தை நாடும் மக்களுக்கெல்லாம் உதவி செய்வதற்கு இந்தியா விரும்புகிறது என்ற செய்தியை ஏந்திச் செல்லும் என்று நம்புகிறேன்!

இவ்வாறு இந்தியாவின் தேசியக் கொடியின் பின்னால் உள்ள பாராம்பரியப் பெருமையையும், இலட்சியத்தையும் பற்றி பிரதமர் ஜவஹர்லால் நேரு உணர்ச்சி பூர்வமாகப் பேசினார்.

கொடி வருணணை

தேசியக்கொடி பற்றிய தீர்மானத்தி இடம் பெற்றுள்ள கொடி வருணணை வருமாறு

சம அளவில் அமைந்த மூன்று நீண்ட சதுரப் பாகங்கள் கொண்ட, நீண்ட சதுர மூவண்ணக் கொடியை அரசியல் நிர்ணய சபையில் பிரதமர் நேரு சமர்ப்பித்தார். உச்சிப் பாகம் குங்குமப்பூ நிறத்திலும், அடிப்பாகம் பச்சை நிறத்திலும் உள்ளன. நடுமத்தியில் உள்ள பாகத்தின் நிறம் வெள்ளை. இதன் மையத்தில் கருநீல நிறத்தில் அசோகச் சக்கரத்தின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கிறது.

கொடியின் இருபக்கங்களிலும் இச் சக்கரத்தை ஸ்கிரீன் அச்சு முறையில் அச்சிடுவது நல்லது. அல்லது சக்கரத்தை அச்சிடவோ, ஸ்டென்ஸில் (உருவத்தை வெடடியெடுத்து மை தடவி துணிமீது பதிப்பது) முறையில் பதிக்கவோ, அல்லது பூத்தையல் போடவோ செய்யலாம். எப்படிச் செய்தாலும் கொடியின் இருபக்கங்களிலும் சக்கரம் இருக்க வேண்டும்.

இதுதான் கொடியைப் பற்றிய வருணனையாக அரசியல் நிர்ணய சபைத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாகும்.

பிரதமர் ஜவஹர்லால் நேரு மட்டுமின்றி அரசியல் நிர்ணய சபையில் இருந்த டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் முதலிய வேறு பலம தேசியக் கொடியின் வண்ணங்களுக்கு வகுப்பு வாதப் பொருள் எதுவும் கிடையாது என்பதைத் தெளிவுபடுததினார்கள்.

இது தவிர தேசியக் கொடியின் வண்ணங்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் தத்துவார்த்த விளக்கமும் கொடுத்திருக்கிறார். குங்குமப்பூ வண்ணம் துறவு அல்லது பற்றின்மையைக் குறிக்கிறது என்றும், அதனால் உலகியல் லாபங்களைப் பற்றிக் கவலைப்படாமல் அரசியல் தலைவர்கள் அனைவரும் பொதுப்பணிக்கே தங்களை முழுக்க முழுக்க அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார். நடுவீல் உள்ள வெள்ளை நிறம் நமக்கு வெளிச்சத்தையும், சத்தியமார்க்கத்தையும் காட்டுகிறதென்றும், மண்ணுடன் நமக்குள்ள உறவை, உயிர்களுக்கெல்லாம் ஆதாரமாக இருக்கும் தாவர உயிர்களுடன் நமக்குள்ள உறவைப் பச்சைநிறம் காட்டுகிறது என்றும் குறிப்பிட்ட தத்துவஞானி டாக்டர் இராதாகிருஷ்னன், வெள்ளைப்பட்டையின் மத்தியில் உள்ள அசாகச் சக்கரத்தைப் பற்றிக் கூறிய விளக்கம் வருமாறு:

அசாகச் சக்கரம் தர்மச் சக்கரத்தைப் பிரதிபலிக்கிறது. இந்தக் கொடியின்கீழ் பணிபுரிவோர் அனைவரும் சத்தியம், தர்மம், அல்லது ஒழுக்கம் என்ற கோட்பாடுகளுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். மற்றம் தொடர்ச்சியான இயக்கத்தையும் சக்கரம் குறிக்கும். தேக்கம் என்பது மரணம். இயக்கம் என்பது உயிர். இனிமேல் மாறுதல்களை இந்தியா எதிர்க்காமல் முன்னோக்கி இயங்கவேண்டும். முன்னேற வேண்டும். அமைதியான சீரான மாறுதலுக்கான இயக்கத்தை இந்தச் சக்கரம் பிரதிபலிக்கிறது. ஆகவே தேசியக் கொடியில் இராட்டைச் சக்கரத்தைப் பொறித்திருத்தற்குக் காரணமான மூலக் கருத்து இந்த மாறுதலால் பாதிக்கப்படவில்லை!“ என்று கூறினார் டாக்டர் ராதா கிருஷ்ணன்.

அசோகர் காலத்துக்கும் முன்னரே சக்கரத்தின் மகத்துவம் உணரப்பட்டிருந்தது என்பதைச் சில வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.

Khaleel Baaqavee / கலீல் பாகவீ

unread,
Jan 28, 2013, 1:51:24 AM1/28/13
to kaleel Ab
பௌத்த மதத்தின் ஆதிச் சின்னமே சக்கரம்தான். அதற்கு முன்னரே இந்து மதத்திலும் அது ஒரு முக்கிய சின்னமாக விளங்கி வந்தது என்றும் சில அறிஞர்கள் கருதுகின்றனர். கண்ணன் முதலிய இந்துக் கடவுள்கள் சக்கராயுதங்களை ஏந்தியிருப்பதும் இதற்குச் சான்றாகும்.

சரித்திர காலத்துக்கு முந்திய சிந்துச் சமவெளி நாகரிகக் காலத்தின் இடிபாடுகளில் கூடச் சக்கரத்தின் சின்னம் காணப்படுகிறது. இந்தியா, பாரசீகம், புராதன எகிப்து, கிரேக்க மதங்களில் எல்லாம் சக்கரம் என்பது சூரியனின் சினனமாகவே விளங்கியது.

இன்று நம் தேசியக்கொடியில் இடம் பெற்றுள்ள சக்கரம் 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியாவிலும், வேறு பலநாடுகளிலும் ஒரு புனிதச் சின்னமாகவும், புரட்சிகரமான முன்னேற்றத்தின் சின்னமாகவும் தான் விளங்கி வந்திருக்கிறது! போற்றப்பட்டு வந்திருக்கிறது.

ஓரிஸா மாநிலத்தில் உள்ள கொனாரக் சூரிய தேவன் ஆலயத்தில் இன்றும் இந்தச் சக்கரத்தைப் பார்க்கலாம்!

கொடியை உபயோகிக்கும் முறைகள்!

ஒவ்வொரு நாட்டிலும் அதன் தேசியக் கொடியை உபயோகிப்பது சம்பந்தமாக சில விரிவான, கண்டிப்பான விதிமுறைகள் உண்டு. அவற்றை ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து கொண்டு அக்கறையோடு கடைப்பிடிப்பது தான் தேசியக் கொடிக்கும் நாம் செலுத்துகின்ற மரியாதை ஆகும்.

கொடி ஏற்றுதல், கொடிக்கும் வணக்கம் செலுத்துதல், கொடியை இறக்குதல், அரைக் கம்பத்தில் பறக்க விடுதல் ஆகியவை சம்பந்தமான சம்பிரதாயங்களையெல்லாம் அனைத்துக் குடிமக்களும், நிறுவனங்களும் கண்டிப்பாக அணுசரித்தாக வேண்டும்.

கொடி தயாரிப்பதற்கான துணி, கொடியின் உருவ அளவு, வண்ணங்கள் ஆகியவற்றுக்கும் சில தரங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. உருக்குலைந்த அல்லது சரியான அளவில் இல்லாத அல்லது நல்ல வண்ணங்களில் இல்லாத தேசியகொடிகளை உபயோகிப்பது அதை அவமானப்படுத்துவதாகும்.

இந்திய அரசின் வேண்டுகோளின்படி. இந்திய தர நிர்ணயக் கழகம் தேசியக்கொடி சம்பந்தமான தரங்களையும் நிர்ணயித்திருக்கிறது. அதிகாரப்பூர்வமான அரசுப் பணிகளுக்காகப் பயண்படுத்தப்படும் கொடிகள் எல்ம் இந்தத் தரநிர்ணயப்படியே அமைந்திருக்க வேண்டும். மற்ற சந்தர்பங்களிலும் கூடக் குறிப்பிட்ட அளவுகளில் உள்ள கொடிகளை உபயோகிப்பதே சிறப்பாகும்.

மோட்டார் கார் முதலிய வாகனங்களில் பறக்கவிடுவதற்கான சிறு கொடிகள் உட்பட ஐந்து அடிப்படைக் கொடிகளுக்கான அளவுகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

21 X 14 ”, 12 “ X 8 “, 6 “ X 4 “, 3” X 2 “. 9” X 6 “ என்பவைதாம் அந்த அளவுகள்.

கொடிக்குத் தேவையான சாயங்கள் மற்றும் துணிகள் முதலியவை எல்லாம் அறிவியல் அடிப்படையில் துல்லியமாகச் சோதிக்கப்படுகின்றன. ஆதாரக் கொடியின் மாதிரி ஒன்று இந்திய தரநிர்ணயக் கழக அலுவலகத்தில் முத்திரையிட்டு வைக்கப்பட்டிருக்கிறது. தேசியக் கொடிகளைப் பல்வேறு அளவுகளில் தயாரித்துக் கொடுப்பதற்கு ஷாஜஹான்பூர் இராணுவ உடைத்தயாரிப்புத் தொழிற்சாலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

நமது கொடியில் உள்ள இரண்டு வண்ணங்களுக்கு ‘இந்தியக் கேஸரி‘, ‘இந்தியப் பச்சை‘ என்று பெயர், உலகத்தில் உள்ள வண்ணத் தரநிர்ணயப் பட்டியல்‘ களில் இவ்விரு வண்ணங்களும் இல்லை. எனவே இந்தியத் தேசியக் கொடிக்கென்றே விஞ்ஞான முறைப்படி தயாரிக்கப்பட்டு தரநிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிறங்கள் இவ.

கையினால் நூற்று நெய்யப்பட்ட துணியையே எப்பொழுதும் கொடிக்காக நாம் பயன்படுத்தி வந்திருக்கிறோம். பொதுமக்களும், அரசாங்கமும் இதற்கு ஆதரவாக இருந்தததால் காதி எனப்படும் பருத்தித் துணீ, கையால் நூற்று நெய்த கம்பளித் துணி, மற்றும் பட்டுத் துணி ஆகியவை சம்பந்தமாக மட்டுமே தரங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

தேசியக் கொடிகளுக்கு உலகம் முழுவதிலுமே சில மரியாதைகள் உண்டு. கொடியைச் சரியான முறையில் உபயோகிப்பது சம்பந்தமாகச் சில சம்பிரதாயங்களை இந்தியாவும் நிர்ணயித்துக் கொண்டுள்ளது, கடைப்பிடித்தும் வருகிறது. இவற்றுக்குச் சட்ட ரீதியான அங்கீகாரம் அளிப்பதற்காக ‘இந்தியக் கொடிப்பத்ததி‘ என்ற விதிமுறைப் பட்டியலையும் இந்திய அரசு வகுத்துள்ளது.

தேசியக் கொடிக்கு மரியாதை

தேசியக் கொடியைப் பறக்க விடும்போது சில விதிகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். எங்கே பறக்க விடுவதானாலும் கௌரவமான, எடுப்பான இடங்களாக இருக்க வேண்டும்.

பொதுக்கட்டங்களில் தேசியக் கொடியைப் பறக்க விடுவதானால், விடுறை நாட்கள், ஞாயிற்றுக் கிழமைகள் உட்பட எல்லா நாட்களிலும், பருவநிலை எப்படியிருந்த போதிலும் சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை அது பறந்து கொண்டிருக்க வேண்டும், மிக விசேசமான நாட்களில் மட்டும் இரவு நேரங்களிலும் அரசாங்கக் கட்டடங்களில் தேசியக்கொடியைப் பறக்கவிடலாம்.

கொடியை ஏற்றும் போது சரசரவென்று விரைவாக ஏற்ற வேண்டும். கீழே இறக்கும் போது சற்று மெதுவாகவும், அலங்காரமாகவும் இறக்க வேண்டும். எக்காள ஒலியுடன் கொடியை ஏற்றவோ இறக்கவோ செய்தல் அந்த ஒலியும், கொடியின் ஏற்ற இறக்கச் செயலும் ஏககாலத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஜன்னல், பலகணி கட்டட முகப்பு ஆகியவற்றிலிருநது, படுக்கை மட்டத்திலோ, சாய்வாகவோ உள்ள ஒரு கொம்பில் கொடியைத் தொங்கவிடுவதானால் கொம்பின் மேல் நுனி அருகே கொடியின் கேஸரி நிற்ப பகுதி இருக்கும் வகையில் தொடங்கவிட வேண்டும்.

கொடிக்கம்பம் தவிர வேறு விதமாகக் கொடியைத் தொங்கவிடுவதென்றால் ஒரு சுவர்மீது படுக்கை மட்டத்தில் கொடியைக் கட்டும்போது அதன் கேஸரிப்பகுதி உச்சிப் பக்கத்தில் இருக்க வேண்டும். சுவரில் கொடியை செங்குத்தாகத் தொங்கவிடுவதானால் அதைப் பார்த்து நிற்பவரின் இடப்பக்கத்தில் கேஸரிப் பகுதி இருக்க வேண்டும்.

கிழக்கு மேற்காக உள்ள ஒரு தெருவின் மத்தியில் தேசியக் கொடியைத் தொங்கவிடுவதானால் கேஸரிப் பகுதி வடக்குப் பக்கமாக இருக்கும்படி செங்குத்தாகத் தொங்கவிட வேண்டும். தெற்கு வடக்காகச் செல்லும் வீதியானால் கேஸரிப் பகுதி கிழக்குப்பக்கத்தில் இருக்க வேண்டும்.

சொற்பொழிவு ஆற்றும் பொதுக்கூட்ட மேடைகள் மற்றும் மாநாட்டு மேடைகளில் தேசியக் கொடியைப் பறக்கவிடுவதானால், அதை ஒரு கொம்பில் சொருகி சொற்பொழிவாளரின் வலப்பக்கம் இருக்கும் வகையில் நாட்டப்பட வேண்டும். மேடைகளில் வேறு விதமாகக் கொடிகளைத் தொங்க விடுவதானால் சொற்பொழிவாளரின் பின் புறத்தில் அவரைவிட உயரமான இடத்தில் தொங்கவிட வேண்டும்.

சிலைத் திறப்புவிழா போன்ற இதர கொண்டாட்டங்களின்போது தேசியக் கொடி தனியாகவும், எடுப்பாகவும் இடம்பெற வேண்டும். சிலை அல்லது நினைவுச் சின்னத்தை மூடுவதற்குத் தேசியக்கொடியைப் பயன்படுத்தக் கூடாது.

கார்களில் கொடிகளைப் பறக்க விடுவதானால், காரின் முன்பகுதியில் நிலையாகப் பொருத்தப்பட்ட கம்பியில்தான் பறக்கவிட வேண்டும்.

ஊர்வலம் அல்லது அணி வகுப்புகளில் தேசியக் கொடியை ஏந்திச் செல்வதென்றால் வலப்பக்கமாகவே ஏந்திச் செல்லவேண்டும்! வேறு கொடிகளுடன் வரிசையாக ஏந்திச் செல்லப்பட்டால் அந்த வரிசையின் மத்தியில் மற்ற கொடிகளுக்கு முன்னால் தேசியக் கொடியை ஏந்திச் செல்ல வேண்டும்.

செய்யக் கூடாத தவறுகள்!

தேசியக் கொடிகளைப் பறக்க விடுவதில் செய்யக் கூடாத தவறுகள் வருமாறு:

பழுதடைந்த அல்லது கசங்கிய கொடியை பறக்க விடக்கூடாது. கொடி பழுதடையும் வகையில் அதைப் பறக்க விடுவதோ, கட்டி வைப்பதோ, பாதுகாத்து வைப்பதோ கூடாது.

எந்த நபருக்கும், அல்லது பொருளுக்கும் வணங்கும் நிலையிலோ, தாழும் நிலையிலோ தேசியக் கொடியைப் பறக்க விடக்கூடாது.

தேசியக் கொடியை விட உயரத்திலோ, அதன் மீதோ வேறு எந்தத் கொடியையோ, துணி பேனர்களையோ பிணைக்கக் கூடாது, மலர்கள், மலர் மாலைகள், சின்னங்கள் உட்பட எந்தப் பொருளையும் தேசியக் கொடிக் கம்பத்தின் மீதோ, அதைவிட உயரத்திலோ வைக்கக் கூடாது.

அலங்காரத்துக்காகத் தோரணம், சித்திரப்பூ, ஆரம் போன்ற வடிவங்களில் தேசியக் கொடியைப் பயன்படுத்தக்கூடாது. தேசியக் கொடியைப்போல் தோற்றமளிக்கும் வேறு வண்ணத் துணிகளையும் அவ்வாறு கட்டி வைக்கக்கூடாது.


சொற்பொழிவு மேடையில் போடப்படும் மேசைமீது விரிப்பாகவோ, மேடையை அலங்கரிக்கும் திரைச்சீலையாகவோ கொடியை உபயோகிக்கக்கூடாது.

கொடியின் கேஸரி வண்ணப் பகுதி அடிப்பாகமாக இருக்கும் வகையிலும் கொடியைத் தொங்க விடக்கூடாது.

பூமியையோ தளத்தையோ தொடும் வகையில் தேசியக் கொடியைத் தொங்க விடுவதும், தண்ணீரில் நனையும் வகையிலோ, இழுபடும் வகையிலோ கொடியை உபயோகிப்பதும் கூடாது.

அரசாங்கத் தலைவர் மற்றும் இராணுவ அதிகாரிகளின் சவ ஊர்வலங்களைத் தவிர இதர மனிதர்களின் சவ ஊர்வலங்களில் தேசியக் கொடியை அலங்காரச் சீலையாக உபயோகிக்கக் கூடாது. அத்தகைய ஊர்வலத்தின்போது சவக்கட்டில் அல்லது சவப்பெட்டியின் தலைப்பாகத்தை நோக்கி கேஸரி வண்ணப்பகுதி இருக்கும் வகையில் கொடியைச் சுற்றி வைக்கக் கூடாது. கல்லறையில் கொடியை இறக்குவதோஇ சிதையில் எரிப்பதோ கூடாது.

வாகனம், ரயில் அல்லது படகின் கூண்டு மீதோ, அவற்றின் உச்சியிலோ விலாப்பக்கங்களிலோ பின்புறத்திலோ, கொடியைத் தொங்கவிடக் கூடாது. கட்டடங்களைத் தேசியக் கொடிகளால் மூடிவைப்பதும்கூடாது.

எந்த ஓர் ஆடை அல்லது சீருடையின் ஒரு பாகமாகவும் தேசியக் கொடியை உபயோகிக்கக் கூடாது. மற்றும் மெத்தை, தலையாணை, கைக்குட்டை முதலியவற்றில் தேசியக் கொடியின் உருவத்தைப் பூத் தையலாகவோ, அச்சுப் பதிப்பாகவோ போடக் கூடாது. துடைப்புத் துணிகள் அல்லது பெட்டிகளின் உறைகளின் மீதும் தேசியக் கொடியின் உருவத்தைப் பதிக்கக் கூடாது.

தேசியக் கொடியின் முது எந்தவிதமான எழுத்துக்களையும் பதிக்கக் கூடாது.

வியாபார நிறுவனங்களின் விளம்பரங்கள் எதிலும் தேசியக் கொடியை உபயோகிக்கக் கூடாது. கொடிக் கம்பங்களில் விளம்பரப் பலகைகளை இணைத்து வைப்பதும் கூடாது. தேசியக் கொடியையோ அதைப் போன்ற போலி வண்ண உருவத்தையோ மத்திய அரசின் முன்னனுமதி இல்லாமல் வியாபாரம். தொழில் சின்னம், ‘பேடண்ட்‘ பெற்ற பெயர் முதலியவற்றில் உபயோகிப்பது சட்டப்படி குற்றமாகும்.

எந்த ஒரு பொருளையும் பொட்டலம் கட்டிக் கொடுப்பதற்கும் வாங்குவதற்கும் தேசியக் கொடியைப் பயன்படுத்தக் கூடாது.

தேசியக் கொடி பழுதடைந்தாலோ, அல்லது அதில் கறை படிந்தாலோ அதைத் தூர எறிந்துவிடுவது கூடாது. அதேபோல மரியாதையற்ற முறையில் அதை பல பேருக்கு நடுவில் வைத்து எரித்து அழிக்கவோ கூடாது. தனியாக எவ்வித விளம்பரமும் இல்லாமல் எரித்து அழிக்கலாம். நான்கு பேருக்கு மத்தியில் விளம்பரத்தோடு தேசியக் கொடியை எரிப்பது கடுமையான குற்றமாகும்.

உபயோகிக்கும் நாட்கள்

குடியரசுத் தினம், தேசிய வாரம், சுதந்தர தினம், காந்தி ஜெயந்தி, நேரு ஜெயந்தி, இந்திராகாந்தி பிறந்தநாள் முதலிய தேசியத் திருநாள்களில் தேசியக் கொடியை எந்தவிதக் கட்டுப்பாடும் இன்றிப் பறக்க விடலாம். ஆனால், அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் கூடக் கார்போன்ற வாகனங்களில் வழக்கமான விதிகளின்படிதான் தேசியக்கொடியைப் பறக்க விட வேண்டும்.

கொடி வணக்க முறை

கொடியை ஏற்றம்போதும் இறக்கும் போதும், ‘பரேட்‘ அல்லது அணிவகுப்பு மரியாதைகளில் கொடியைத் தாண்டிச் செல்லும்போதும் அங்கே இருப்பவர்கள் அனைவரும் கைகால்களை அடக்கிக்கொண்டு நிமிர்ந்து கொடியைப் பார்த்தவாறே நிற்க வேண்டும். சீருடை அணிந்தவர்கள் எல்லோரும் தங்களுக்கு உரியமுறையில் வணக்கம் செலுத்த வேண்டும்.. கொடியை ஒரு குழுவினர் ஏந்திச் செல்லும்போது, அது தங்களுக்கு முன்னால் வரும் சமயம் மற்றவர்கள் ‘அட்டன்ஷன்‘ நிலையில் நின்று வணக்கம் செலுத்தவேண்டும். உயர்நிலை அதிகாரி அல்லது அமைச்சர்கள் தலைஅணி எதுவும் இல்லாமல் அந்த வணக்கத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

இதர நாட்டுக் கொடிகளும் நமது தேசியக் கொடியும்

இதர நாடுகளின் கொடிகளோடு நமது நாட்டின் தேசியக் கொடியையும் சேர்த்துப் பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டிய சில முக்கிய விஷயங்கள் வருமாறு

மற்ற நாடுகளின் கொடிகளோடு நமது நாட்டுத தேசியக் கொடியை நேர் வரிசையில் பறக்கவிடும்போது நம்முடைய கொடி வலது கோடியில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அதையடுத்து இதர நாடுகளின் கொடிகளை அந்த நாட்டுப் பெயர்களின் ஆங்கில அகர வரிசைப்படி பறக்க விடலாம். அப்படிப்பட்ட சமயங்களில் வரிசையின் ஆரம்பித்திலும் முடிவிலும் நமது கொடியைப் பறக்க விடலாம். அதேபோல நாடுகளின் அகர வரிசைப் பெயர்களின் படி நமது நாட்டுக் கொடியையும் அதற்குரிய இடத்தில் பறக்க விடுவதும் அனுமதிக்கத் தக்கதே. ஆனால், இதர நாட்டுக் கொடிகளுக்கு முன்னால் நமது நாட்டுக் கொடியை ஏற்ற வேண்டும். இறக்கும்போது மற்ற நாட்டுக் கொடிகளையெல்லாம் இறக்கிய பின்னர் கடைசியாகத்தான் நமது கொடியை இறக்க வேண்டும்.

முற்றுப்பெறாத சக்கர வியூகத்திலோ, வளைகோட்டிலோ, பாதிவட்ட வியூகத்திலோ பல நாடுகளின் கொடிகளைப் பறக்கவிடும் போதும் மேற்கூறிய முறையிலேயே தேசியக் கொடியைப் பறக்கவிட வேண்டும்.

முழுவட்ட வியூகத்தில் கொடிகளைப் பறக்க விடுவதானால், வட்டத்தின் ஆரம்பத்தில் தேசியக் கொடி இருக்கவேண்டும். மற்றநாட்டுக் கொடிகளை கடிகார வரிசையில் நாட்ட வேண்டும். கடைசிக் கொடியானது தேசியக்கொடியை அடுத்து இருக்க வேண்டும். கொடிகளின் வட்டத்தின் ஆரம்பம் மற்றும் முடிவு இடங்களைக் குறிப்பதற்காக வெவ்வேறு கொடிகளை உபயோகிக்க வேண்டியதில்லை. இதைப்போன்ற முழுவட்ட வியூகத்திலும் அகர வரிசைப்படி தேசியக் கொடிகளை அமைக்கலாம்.

சுவர்களின் மீது குறுக்கக் கம்புகளில் வேற்று நாட்டுக் கொடியோடு நம்முடைய நாட்டுக் கொடியை மாட்டுவதானால் நமது தேசியக் கொடி வலதுபக்கத்தில் இருக்க வேண்டும். அதன் கம்பு மற்ற கொடியின் கம்புக்கு மேலே இருக்கவேண்டும்.

தேசியக் கொடிக்கு எந்த விலாப்பக்கத்தில் வேண்டுமானாலும் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் கொடியைப் பறக்கவிடலாம். தேசியக்கொடி எந்தப் பக்கத்தைப் பார்த்திருக்கிறதோ, அந்தப் பக்கத்தின் வலது கோடியில் இதைப் பறக்க விடுவதுதான் பொதுவான பழக்கம் ஆகும்.

மற்ற கொடிகளுடன் தேசியக் கொடியைப் பறக்கவிடும்போது, எல்லாக் கொடிக்கம்பங்களும் ஓதே உயரமுள்ளவையாக இருக்கவேண்டும். சமாதான காலத்தில் ஒரு நாட்டின் கொடியைவிட உயரமாக இன்னொரு நாட்டின் கொடியைப் பறக்க விடுவது சர்வதேச சம்பிரதாயத்துக்கு முரணானதாகும்.

ஒரே கம்பத்தில் வேறு எந்தக் கொடியுடனும் அல்லது கொடிகளுடனும் சேர்த்து தேசியக் கொடியைப் பறக்க விடக்கூடாது. வெவ்வேறு கொடிகளுக்கு வெவ்வேறு கம்பங்கள் இருப்பதுதான் முறையானதாகும்.

அயல்நாட்டு அரசுத் தலைவர்கள் நம் நாட்டுக்கு வருகை தரும்போது அரசாங்க வேண்டுகோளுக்கேற்ப பொதுமக்கள் இருதேசங்களின் தேசியக்கொடிகளை குறிப்பாகக் காகிதக் கொடிகளை கையில் ஏந்தி அசைத்து வரவேற்கலாம். வரவேற்பு முடிந்ததும் அந்தக் கொடிகளை கண்ட இடங்களில் எறிந்து காலில் மிதிபடவிடக்கூடாது.

அந்நிய நாட்டுத் தூதரகங்கள் மற்றும் வர்த்தகப் பிரதிநிதி இடங்கள் மற்றும் கிளைத் தூதரகங்கள் சார்பில் நடத்தப்படும் வரவேற்புகள், கலைநிகழ்ச்சிகள், திரைப்பட விழாக்கள், கண்காட்சிகள் முதலியவற்றில் தேசியக் கொடியையும் வேற்றுநாட்டுக் கொடியையும் அரசு அனுமதி பெற்றுப் பறக்க விடலாம்.

இந்திய நாட்டின் தேசிய விழா நாட்களின்போது ஓர் அந்நியர் அல்லது அந்நியக் கம்பெனி அல்லது பொது ஸ்தாபனம் ஆகியவை தங்கள் நாட்டு தேசியக்கொடியோடு இந்திய தேசியக்கொடியையும் சேர்த்துப் பறக்க விடலாம்.

கல்வி நிலையங்களும் தேசியக்கொடியும்

விசேஷ விழாக்களின் போதும் தேசியக்கொடிக்கு மரியாதை தருவதைப் போதிப்பதற்கான சந்தர்ப்பங்களிலும், பள்ளிகள், கல்லூரிகள், விளையாட்டு முகாம்கள், சாரணர் முகாம் மற்றும் தேசிய மாணவர் படை முகாம்கள் ஆயிவற்றில் தேசியக் கொடியை ஏற்றி வைக்கலாம்.

அப்பொழுது திறந்த வெளி மைதான அமைப்பில், மூன்று பக்கங்களில் மாணவர்கள் வரிசையாக நிற்கவேண்டும். நான்காவது பக்கத்தின் மத்தியில் கொடிக்கம்பம் இருக்கவேண்டும. தலைமை ஆசிரியர், பள்ளி மாணவர் தலைவர் ஆகியோர் கொடிக் கம்பத்தின் பின்னால் மூன்று அடி தூரத்தில் இருக்க வேண்டும்.

வகுப்பு வாரியாக பத்துப் பத்துப் பேராக அணிவகுத்து நிற்கவேண்டும். மாணவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அணியில் இருக்க வேண்டியவர்களின் எண்ணிக்கையை மாற்றிக் கொள்ளலாம். ஒன்றன்பின் ஒன்றாக அணிகள் வரிசையாக நிற்கவேண்டும். அந்தந்த வகுப்பின் மாணவத் தலைவன் தன் வகுப்பின் முதலாவது அணிக்கு வலப்பக்கத்தில் நிற்க வேண்டும். வகுப்பு ஆசிரியர் தம் வகுப்பு மாணவர் அணிவகுப்பின் கடைசி அணிக்கு மூன்று அடிகளுக்குப் பின்னால் நடுமததியில் நிற்க வேண்டும. மேல் வகுப்பிலிருந்து வரிசைக் கிரம வகுப்பு வாரியாக நிற்க வேண்டும்.

Khaleel Baaqavee / கலீல் பாகவீ

unread,
Jan 28, 2013, 1:55:39 AM1/28/13
to kaleel Ab
எல்லா வகுப்பு மாணவர்களும் தயாராக நின்றவுடன் பள்ளி மாணவர் தலைவன் தலைமை ஆசிரியரை நெருங்கி அவருக்கு வணக்கம் செலுத்துவான். தலைமை ஆசிரியர் உடனே பதில் வணக்கம் செலுத்துவார். பின்னர் தலைமை ஆசிரியர் (சில சமயம் விசேஷ விருந்தினர்) கொடியை ஏற்றி வைப்பார். அவருக்குப் பள்ளி மாணவர் தலைவன் உதவி புரிவான்.

கொடியைப் பறக்க விடுவதற்கு முன்னால் எல்லா மாணவர்களும் ‘அட்டன்ஷன்‘ நிலையில் நிற்குமாறு பள்ளி மாணவர் தலைவன் கேட்டுக் கொள்வான். கொடி விரிந்து பறக்கத் தொடங்கியதும் அதற்கு வணக்கம் செலுத்துமாறு எல்லோருக்கும் அவன் அறிவிப்பான். ஒரு விநாடி நேரம் அனைவரும் ‘சல்யூட்‘ செய்து கொடி வணக்கம் செலுத்துவர், பின்னர் தலைவனின் ஆணைப்படி அவர்கள் அனைவரும் மீண்டும் ‘அட்டன்ஷன்‘ நிலைக்குத் திரும்புவார்கள்.

கொடி வணக்கம் முடிந்ததும் அடுத்து தேசிய கீதம் இசைக்கப்படும். அல்லது அனைவரும் சேர்ந்து பாடுவார்கள். தேசிய கீதம் முடிந்ததும் ‘கொடி உறுதிமொழி‘ எடுத்துக் கொள்வார்கள். எல்லோரும் கைகளைக் கட்டிக்கொண்டு நிற்க, தலைமை ஆசிரியர் வரிவரியாக உறுதிமொழியைச் சொல்ல உடனே மற்றவர்கள் அதனைத் திருப்பிச் சொல்வார்கள்.

பள்ளி விழாக்களில் எடுக்கவேண்டிய கொடி உறுதிமொழி வருமாறு!

“நமது தேசியக் கொடிக்கும், அதை சின்னமாகக்கொண்ட ஜனநாயகக் குடியரசுக்கும், தாய்த்திருநாட்டுக்கும் விசுவாசமாக இருப்பேன். தாயகத்தின் உயர்வுக்காக என் உடல், பொருள், ஆவியையும் அர்ப்பணிக்க நான் தயாராக இருக்கிறேன் என உறுதியளிக்கிறேன்!

இந்த உறுதிமொழி முடிந்தவுடன் தலைமையாசிரியரும், இதர ஆசிரியர்களும் கலைந்து செல்வார்கள். அதன் பின்னர் மாணவர்கள் அமைதியாகக் கலைந்து செல்ல வேண்டும்!

தேசியக்கொடியும் அரசாங்க உபயோகமும்

மத்திய மாநில அரசுச் செயலகங்கள், தலைமைச் செயலகங்கள், உச்சநீதி மன்றம், உய்நீதி மன்றங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், காவல் துறை ஆணையாளர் அலுவலகங்கள், சிறைச்சாலைகள், மாவட்டக் கழக அலுவலகங்கள், நகரசபை மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முதலிய முக்கியமான பொதுக்கட்டடங்களிலெல்லாம் சாதாரண காலங்களிலும் தேசியக் கொடியைப் பறக்க விடலாம்.

துணை ஜனாதிபதி, முன்னாள் சமஸ்தான மன்னர்கள் ஆகியோரின் தலைமை அலுவலகங்கள், வெளிநாடுகளில் உள்ன இந்தியத் தூதரகங்கள், கிளைத் தூதரகங்கள், அவர்களின் அதிகாரப்பூர்வமான வீடுகள் ஆகியவற்றில் தேசியக்கொடி நிரந்தரமாகப் பறக்கலாம். முன்னாள் சமஸ்தான மன்னர்கள் தங்கள் சொந்தக் கொடியுடன், தேசியக்கொடியையும் சேர்த்துப் பறக்கவிட விரும்பினால் அவ்வாறே செய்யலாம்.

எல்லைப்புறப் பகுதிகளில் உள்ள சுங்க அலுவலகம், காவல் சாவடி, எல்லைச் சாவடி மற்றும் எல்லைப்புற ரோந்து குழுக்களின் முகாம்கள் ஆகியவற்றில் தேசியக் கொடியைப் பறக்கவிடலாம்.

ஜனாதிபதி, கவர்னர்கள், ஜம்மு காஷ்மீரின் ஸதர் ரியாஸத், லெப்டினண்ட் கவர்னர்கள் ஆகியோரின் சொந்தக் கொடிகளைப் பறக்கவிடுவது பற்றிய விதிகள் வருமாறு!

இந்திய ஜனாதிபதிக்கென விசேசமான சொந்தக்கொடி ஒன்று உண்டு. செவ்வக வடிவில் நான்கு சமக் கட்டங்களாகப் பிரிக்கப்பட்டு இடது மேல் கட்டம் கருநீலமாகவும், இடது கீழ்க்கட்டம் சிவப்பாகவும் இருக்கும். மேல் கருநீலக் கட்டத்தில் மூன்று சிங்கமுள்ள இந்திய அரசின் முத்திரைச் சின்னம் மஞ்சள் வண்ணத்தில் பதிக்கப்பட்டிருக்கும், இடது கீழ்ப்பக்கக் கட்டத்தில் சிவப்பு வண்ணத்தின் நடுவே மஞ்சள் வண்ணத் தராசு உருவம் பொறிக்கப்பட்டிருக்கும். வலதுமேல் பக்க சிவப்புக் கட்டத்தில் மஞ்சள் வண்ண யானை உருவமும், வலது கீழ்ப்பக்க கருநீலக்கட்டத்தில் பூஜாடியும் பொறிக்கப்பட்டிருக்கும். இந்தக் கொடியை அவர் இடைவிடாமல் பறக்கவிடலாம்.

இதேபோல, கவர்னர்களுக்கும் விசேசமான சொந்தக் கொடிகள் உண்டு. அவற்றை அவர்கள் தங்கள் மாநில எல்லைகளுக்குள் இருக்கும்போது இடைவிடாமல் பறக்க விடலாம்.

இளம் ஆரஞ்சு வண்ண செவ்வக வடிவக் கொடியின் மத்தியில் இந்திய அரசின் முத்திரை பொறிக்கப்பட்ட கொடிதான் எல்லா மாநில கவர்னர்களுக்கும் பொதுவான கொடியாகும். அந்தந்த மாநிலத்தின் பெயர்களும் பொறிக்கப்பட்டிருக்கும். கவர்னர்கள் வெளி மாநிலங்களுக்குச் செல்லும்போது தங்குமிடங்களில் தேசியக் கொடியைத்தான் பறக்க விட வேண்டுமே தவிர தங்கள் விசேஷக் கொடியைப் பறக்கவிடக்கூடாது.

ஜனாதிபதி, துணைஜனாதிபதி அல்லது பிரதமர் ஒரு மாநிலத்திற்கு வருகை தரும்போது கவர்னர் மாளிகையில் தங்கினால் தேசியக்கொடியையும், கவர்னரின் விசேசக் கொடியையும் பறக்கவிடலாம். ஜனாதிபதி வருகையின் போது, அவருடைய விசேக் கொடியையும், ஆளுநரின் விஷேசக்கொடியையும் முக்கியமான ஓர் இடத்தில் பறக்க விட வேண்டும்!

துணை ஜனாபதிபதிக்கும், பிரதமருக்கும் ஆளுநர் கொடியோடு தேசியக் கொடியைப் பறக்கவிட்டால் போதுமானது.

ஜானதிபதி ஒரு நிறுவனத்துக்கு வருகை தந்தால், அப்பொழுது தேசியக் கொடியை மட்டும் பறக்கவிட்டால் போதும். ஜனாதிபதியின் விசேசக்கொடியைப் பறக்கவிடத் தேவையில்லை. துஐண ஜனாதிபதி, பிரதமர் முதலியோருக்கும் அப்படியே.

கார்களில் கொடி

பின்வருபவர்கள் மாத்திரமே தங்கள் கார்களில் தேசியக்கொடியைப் பறக்க விடலாம்.

1. துணை ஜனாதிபதி

2. கவர்னர்கள் (தங்கள் மாநிலத்துக்கு வெளியே இருக்கும் போது.)

சொந்த மாநிலத்தில் இருக்கும்போது தங்கள் விசேஷக் கொடிகளை மட்டுமே காரில் பறக்க விடுவார்கள். லெப்டினண்ட் கவர்னர்களும் அப்படியே.

3. முன்னாள் சமஸ்தான மன்னர்கள், இவர்கள் விரும்பினால் தங்கள் சொந்தக் கொடியோடு தேசியக் கொடியையும் காரில் பறக்கவிடலாம்.

4. வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதர்கள் அந்தந்த நாடுகளில் மட்டும கார்களில் தேசியக் கொடியைப் பறக்கவிடலாம்.

5. மத்திய மாநில அமைச்சர்கள்: தேசியமுக்கியத்துவம் வாய்ந்த நாட்களில் மட்டும தங்கள் கார்களில் தேசியக்கொடியைப் பறக்க விடலாம். சுற்றுப்பயணம் செய்யும் போது மக்கள் கூட்டம் மிகுந்த இடங்களை விரைந்து கடந்து செல்வதற்கு உதவும் பொருட்டு கார்களில் தேசியக்கொடியைப் பறக்கவிடலாம்.

ஜனாதிபதி, கவர்னர்கள் தங்கள் விசேஷக் கொடிகளையே பறக்க விடுவார்கள்.

ஜனாதிபதியோ, வேறு சில பதவிவகிக்கும் பிரமுகர்களோ சேர்ந்து பயணம் செய்தால் அவர்களில் மிகப்பெரிய அந்தஸ்துள்ள ஜனாதிபதியின் தனிக்கொடியை மட்டுமே காரில் பறக்க விட வேண்டும்.

கவர்னரும், பிரதமரும் ஒரே காரில் பயணம் செய்யும்போது தேசியக்கொடியை மட்டுமே காரில் பறக்கவிட வேண்டும்.

அந்நிய நாட்டு அரசுத் தலைவர்கள், அமைச்சர்கள் முதலியோர் நம்நாட்டுக்கு வரும்போது நமது அரசாங்கம் அளிக்கும் கார்களில் பறக்கவிட வேண்டிய கொடிகளின் விவரம் வருமாறு!

(அ) அந்த அந்நிய நாட்டுப பிரமுகரோடு நமது ஜனாதிபதி பயணம் செய்தால் காரின் இடது பக்கத்தில் அந்நிய நாட்டுப் பிரமுகரின் கொடியும், வலப் பக்கத்தில் நமது ஜனாதிபதியின் விசேஷக் கொடியும் பறக்கும்.

(ஆ) அந்த அந்நிய நாட்டுப பிரமுகரோடு கவர்னர்கள் பயணம் செய்தால் இடப் பக்கம் அயல்நாட்டுப் பிரமுகரின் கொடியும் வலப்பக்கம் கவர்னரின் விசேஷக் கொடியும் பறக்கும்.

(இ) அந்நிய நாட்டுப் பிரமுகரும், இந்திய பிரதமரும் ஒரே காரில் பயணம் செய்தால் இடப் பக்கம் அயல்நாட்டுப் பிரமுகரின் கொடியும், வலப் பக்கம் நமது தேசியக் கொடியும் பறக்கும்.

விமானங்களில்!

அந்நிய நாடுகளுக்கு விஜயம் செய்யும் இந்தியப் பிரதமர், துணை ஜனாதிபதி முதலியோர் பயணம் செய்யும் இந்திய விமானங்களில் நமது தேசியக் கொடியும், அவர்கள் செல்ல இருக்கும் நாடுகளின் தேசியக்கொடியும் சேர்ந்து பறக்கவிடப்பட வேண்டும்.

செல்லும் வழியில் வேறு நாடுகளில் விமானம் தரையிறங்கவோ தங்கிச் செல்லவோ நேர்ந்தால், அந்நாடுகளுக்கு நம்முடைய நல்லெண்ணத்தையும் மரியாதையையும் தெரிவிக்கின்ற வகையில் அந்நாடுகளின் கொடிகளையும் சேர்த்துப் பறக்க விடலாம். ஓர் அயல்நாட்டுக்கு நமது ஜனாதிபதி விஜயம் செய்யும்போது தேசியக் கொடிக்குப் பதில் அவரது சொந்தக் கொடியும், அந்நிய நாட்டின் தேசியக் கொடியும் பறக்கும்.


அரைக் கம்பத்தில் எப்போது பறக்கலாம்?

தேசியக் கொடியை கொடிக் கம்பங்களில் பறக்க விடும்போது எப்போதும் உச்சியில் பறக்கவிட வேண்டும். அரைக் கம்பத்திலோ, முக்கால் கம்பத்திலோ பறக்கவிடக்கூடாது.

அரசாங்கம் விசேஷமாக உத்தரவிட்டால் ஒழிய தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிடக் கூடாது.

குடியரசு தினம், மகாத்மா காந்தி ஜெயந்தி, சுதந்திர தினம் ஆகிய நாட்களில் ஜனாதிபதி, பிரதமர், கவர்னர் போன்ற பிரமுகர்கள் மரணமடைந்துவிட்டால், அவர்களுடைய உடல் வைக்கப்பட்டுள்ள கட்டடத்தில் மட்டும் அந்த உடலை எடுத்துச் செல்லும் வரை தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விட வேண்டும். மற்ற இடங்களில் அவ்வாறு அரைக் கம்பங்களில் பறக்கவிடக்கூடாது. இறந்தவரின் உடல் வைக்கப்பட்டுள்ள கட்டத்திலும், உடல் அப்புறப்படுத்தப் பட்டவுடனேயே தேசியக் கொடியை முழுக் கம்பத்துக்கு உயர்த்திவிட வேண்டும்.

சாதாரண நாட்களில் மேற்சொன்ன அரசுத் தலைவர்கள் இறந்துவிட்டால் நாள் முழுக்க எங்கும் எத்தனை நாள் வேண்டுமானாலும அரசாங்க உத்தரவுப்படி தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிடலாம்.

அந்நிய நாட்டு அரசுத் தலைவர்கள் இறந்து விட்டாலும் நமது அரசாங்கம் துக்கம் கொண்டாடும் நாட்களில் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கலாம்.

கவாத்துப் பழகும்மேபாதும், ஊர்வலம் செல்லும் போதும் ஏந்திச் செல்லும் தேசியக் கொடி கம்பத்தில் துக்கம் கொண்டாடுவதற்காகக் கொடிக் கம்பின் உச்சியில் கருப்புத் துணி நாடாக்கள் இரண்டைப் பிணைத்து அவற்றை இயற்கையாகத் தொங்கும்படி விட்டுவிடலாம்! அதையும் அரசாங்க உத்தரவின் மீதுதான் செய்யவேண்டும்.

தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விட வேண்டிய சந்தர்ப்பங்களிலும் ஒரு விநாடிநேரம் வரை உச்சிக் கம்பத்தில் பறக்க விட்ட பின்னர்தான் அரைக் கம்பத்துக்கு இறக்க வேண்டும்.

அன்று மாலையில் கொடியை இறக்கும் போதும் முதலில் கொடியை உச்சிக் கம்பத்துக்கு ஏற்றி ஒருநிமிடம் பறக்கவிட்ட பின்னர் தான் இறக்க வேண்டும்.

உச்சிக்கும் கயிறு கட்டும் ஸ்தானத்திற்கும் உள்ள தூரத்தில் பாதிவரை கொடியை இறக்கிக் கட்டுவதுதான் அரைக் கம்பத்தில் பறக்கவிடுவதாகும். கயிற்று ஸ்தானம் குறிப்பிடப்படாவிட்டால் உச்சிக் கம்பத்திற்கும் நடுவில் பாதிவரை கணக்கிட்டு கொடியை இறக்கவேண்டும்!

இதைத் தவிர இந்திய இராணுவத்தின் தரைப்படை, விமானப்படை, கப்பல்படை ஆகியவற்றுக்குத் தனித்தனி ‘சர்வீஸ் கொடி‘ கள் உள்ளன. தரைப்படை ரெஜிமெண்டுகளுக்குக் தனித்தனி ரெஜிமெண்டல் கொடிகளும், விமானப்படையின் நடவடிக்கை ஸ்குவாட்ரன் பிரிவுகளுக்குத் தனித்தனிக் கொடிகளும் உள்ளன.

நம் தேசியக் கொடி

என்றாலும் தரைப்படைப் பிரிவின் கோட்டைகள், ஏ. ஓ சி. நிலையங்கள், எல்லைப்புற கூட்டுக் கண்காணிப்பு நிலையங்கள், யுத்தக் கைதிகளின் முகாம்கள், பாதுகாப்பு சர்வீஸ் சிப்பந்திகள் கல்லூரி, தேசியப் பாதுகாப்பு அகாடமி, ஆயுதப்படை வைத்தியக் கல்லூரி, தேசியக் பாதுகாப்புக் கல்லூரி, சைனிக் பள்ளிகள், பேர்க்கள வைத்தியப் பிரிமுகாம்கள், இராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் நிலையங்கள் ஆகியவற்றில் எல்லாம் தேசியக்கொடிகள்தான் பறக்கின்றன.

ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் முதலியோர் இராணுவ அணிவகுப்பு மரியாதைகளை ஏற்கும் போதெல்லாம் தேசியக் கொடிதான் பறக்கவிடப்படுகிறது.

விமானப் படைத்தலைமைக் காரியாலயத்திலும் தேசியக் கொடிதான் பறக்கவிடப்படுகிறது, கப்பல்படை, தரைப்படைகளுக்குத் தனிக்கொடிகள் இருந்தாலும் அவற்றின் இடப் பக்க உச்சியில் இந்தியத் தேசியக் கொடியும் பொறிக்கப்பட்டுள்ளன.

கடற்படைக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதியின் வெள்ளைக்கொடி, இந்திய நீலக்கொடி, இந்திய சிவப்புக்கொடி என்று பல கொடிகள் அந்தந்த இலாகா வாரியாக ஒதுக்கப்பட்டிருந்தாலும் இராணுவ தலைமைக் காரியாலயங்கள் அனைத்திலும் தேசியக் கொடியே பட்டொளி வீசிப் பறக்கின்றது.

நமது இராணுவத்தின் எந்த ஒரு படைப் பிரிவு வெளிநாட்டின் எந்தப் பகுதியைப் போரில் கைப்பற்றினாலும் அந்த இடத்தில் நாட்டும் கொடி தேசியக் கொடிதான்!

 

முற்றும்

Reply all
Reply to author
Forward
0 new messages