வ அலைக்குமுஸ் ஸலாம் வரஹ்...
சகோதரர் ராஸின் அவர்கள் மனம் திறந்து தன் கருத்தை வைத்தது பாராட்டத்தக்கது. இது போன்ற (சரி, தவறு குறித்தக்) கருத்துப் பரிமாற்றங்கள் நம் சமுதாயத்திற்கு மிகுந்த பலனளிக்கக் கூடிய விஷயம்.
இங்கே கருத்துப் பகிர்ந்த பல சகோதரர்கள், புலிகள் குறித்த முஸ்லிமின் நிலைபாடு எப்படி இருக்க வேண்டும் என்பதைக் கிட்டத்தட்ட தெளிவுபடுத்தி விட்டனர். இதில் கூடுதலாக கூறுவதற்கு எதுவும் இல்லை. இருப்பினும் சகோதரர் முஸ்லிம் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, புலிகள் குறித்தான என் சிறு கருத்தை இங்கு வைக்கின்றேன். தவறுகள் இருப்பின் சுட்டிக் காட்டுங்கள். இது ஒரு கருத்தாய்வு மட்டுமே. யார் எழுதுவதும் முழுமையான தீர்வுகளோ முடிவுகளோ அல்ல. மஷூராவில் பரிமாறப்படும் பல கருத்துகள் நமக்குச் சிந்தனை தெளிவைத் தரும். அவ்வகையில் என் சிறு கருத்தை இங்கு வைக்கின்றேன்.
சகோதரர் ராஸின் அவர்களைப் போன்றே விடுதலைப் புலிகள் மீது அளப்பரிய மதிப்பும் அன்பும் கொண்ட பல முஸ்லிம் சகோதரர்கள் உண்டு. ஒரு காலத்தில் நானும் அந்தக் கூட்டத்தில் இருந்தவனே. அதிலும் சகோதரர் பிரபாகரன் மீது, எனக்கு அளவுகடந்த மதிப்பும் அன்பும் இருந்ததுண்டு. அவர் ஒரு வீர புருசர்; பாதிக்கப்பட்டவர்களுக்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்தவர் என்ற வகையில். புலிகளின் மீதான முஸ்லிம்களின் பாசத்திற்குக் காரணம், தமிழர்களின் சுயமரியாதைக்காகவும் உரிமைக்காகவும் அவர்கள் தங்களை அர்ப்பணித்துக் கொண்டதாகும். அதே போன்று, இலங்கை தமிழ் முஸ்லிம்களைக்(உதா:காத்தான் குடி- மூதூர்) கருவறுத்த காரணத்தை எடுத்துக் கூறி, விடுதலைப் புலிகளை எதிர்க்கும் சகோதரர்களும் உண்டு.
ஒரு முஸ்லிமை பொறுத்தவரை எந்த ஒரு விஷயத்தையும் நீதியுடனும் நடுநிலைமையுடன் அணுகியே இறுதி நிலைபாட்டுக்கு வர வேண்டும் என இஸ்லாம் கற்றுத் தருகிறது.
அவ்வகையில், விடுதலை புலிகளைக் குறித்த ஒரு முஸ்லிமின் நிலைபாடும் இஸ்லாமிய அடிப்படையிலேயே அணுகப்பட வேண்டும்.
விடுதலை புலிகளின் 33 ஆண்டு கால போராட்ட வாழ்வை எடுத்துக் கொண்டால், அதனை மூன்று கால கட்டங்களாகப் பிரிக்கலாம்.
1. தமிழர்களின் சுய நிர்ணயம், உரிமை, சுதந்திரம் போன்றவற்றை முன்வைத்து விடுதலை புலிகளின் இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட துவக்கக் காலம்.
2. அவர்களின் போராட்டம் வீரியம் அடைந்த இடைப்பட்டகாலம்.
3. தமிழ் ஈழம் ஒன்று அமைந்தால், அதில் இலங்கையின் எந்தெந்தப் பாகங்கள் உட்பட வேண்டும் என்று திட்டம் வகுத்திருந்தார்களோ அப்பகுதிகளில் சுமார் 80 சதவீதத்தைக் கையகப்படுத்திக் கோலோச்சிக் கொண்டிருந்த இந்த இறுதிகட்டம்.
இந்தத் துவக்கக் காலகட்டத்தில், விடுதலை புலிகளின் நிலைபாட்டை ஒரு சுதந்திரத்துக்கான புரட்சியை முன்னெடுக்கும் காலமாக வர்ணிக்கலாம். இஸ்லாத்தைப் பொறுத்தவரை, அடக்கி ஒடுக்கப்படும் மக்களுக்காக போராடுவதும் அவர்களின் உரிமைகளைப் பெற்றுத்தருவதற்காக ஏகாதிபத்தியத்திற்கு எதிராக களமிறங்குவதும் கடமையான விஷயங்களே. இந்த வகையில் விடுதலை புலிகளின் ஆரம்பம் என்பது, ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியதும் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்கப்பட வேண்டியதுமான விஷயம் என்பது என் கருத்து. அந்த வகையில், விடுதலை புலிகளுடன் இலங்கை தமிழ் முஸ்லிம்களும் ஆரம்பக்காலங்களில் இணைந்தே போராட்டக்களம் கண்டனர் என கருதுகிறேன்(நான் நேரில் ஆய்வு செய்யவோ, உறுதியாக அறியவோ செய்யாத வெறும் படிப்பறிவை மட்டும் வைத்து எழுதுவதால், இது போன்ற விஷயங்களில் அவற்றை என் கருத்தாக மட்டுமே வைக்கிறேன். ஒருவேளை உண்மை இதற்கு நேர்மாறாக இருக்கலாம்).
ஒரு அரசுக்கு எதிராக உரிமைக்காக முன்னெடுக்கப்படும் போராட்டங்கள், அரசின் தொடர்ந்த அடக்கு முறைகளின் காரணமாக அழிந்துப் போவதற்கும் வாய்ப்புண்டு; அதுவே வீரியமான போராட்டமாக மாறுவதற்கும் வாய்ப்புண்டு. இங்கே விடுதலைப் புலிகளின் விஷயத்தில் இரண்டாவது விஷயம் நடந்தது. அவர்கள் தங்களின் போராட்டத்தை வீரியமான ஆயுதப் போராட்டமாக நடத்தத் துவங்கினர். இக்காலகட்டத்தில் இவர்களுக்குக் கொரில்லா முறையிலான தாக்குதல்களைக் கற்றுக் கொடுத்தவர்கள், தாலிபான்கள் என்றும் வாசித்ததாக நினைவு. அந்த அளவிற்கு அவர்களின் அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்திற்கு முஸ்லிம்களின் ஆதரவு, ஆரம்பத்தில் இருந்தது என்று நான் கருதுகிறேன்.
போராட்டத்தை(ஜிஹாதை)க் கடமையாக விதிக்கும் இஸ்லாம், அதேப் போராட்டம் ஆயுதம் தாங்கியப் போராட்டமாக மாறும் போது, போர்களத்தில் கடைபிடிக்க பல்வேறு நிபந்தனைகளையும் கட்டுப்பாடுகளையும் முஸ்லிம்களுக்கு விதிக்கிறது.
இக்கட்டுப்பாடுகளில் மிக முக்கியமானவை:
"அப்பாவி மக்கள் கொல்லப்படக் கூடாது; வயோதிகர், நோயாளிகள், பெண்கள், குழந்தைகள் போன்றோரைப் பாதுகாக்க வேண்டும்; கைதிகளிடம் நீதமாக நடந்துக் கொள்ள வேண்டும்" என போராட்டம் ஆயுதம் தாங்கியதாக மாறுகின்ற வேளையில் ஏற்படும் உயிர்சேதங்களைக் கணக்கில் எடுத்து, மிகக் கவனமாக அநியாயமாக உயிர்கள் கொல்லப்படுவதைத் தவிர்க்கும் வகையில் கடுமையான கட்டுப்பாடுகளை இஸ்லாம் விதிக்கிறது.
ஒரு போராட்டம் ஆயுதம் தாங்கியதாக மாறும் போது, அதில் பங்கு பெற்றிருக்கும் ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை இந்தக் கட்டுப்பாடுகள் மிக முக்கியமானது. இவற்றைப் பேணாதபட்சத்தில், அந்தப் போராட்டத்தை மட்டுமல்ல, அதில் பங்குபெற்றுள்ள முஸ்லிமின் செயல்களும் பாழ்பட்டு விடும்.
விடுதலை புலிகள், தங்களது போராட்டத்தை வீரியமாக முன்னெடுத்த வேளையில், இஸ்லாம் விதிக்கும் மனிதாபிமான கட்டுப்பாடுகள் அத்தனையையும் தகர்த்தெறுந்து எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி செயல்பட்டதாகவே அறிய முடிகிறது.
சயனைடு சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்தல், சிறு குழந்தைகளையும் கட்டாயப்படுத்தி போராட்டத்தில் இணைத்தல், அரசைச் செயலிழக்க வைக்க, மக்கள் கூடும் இடங்களில் கண்மூடித்தனமாக வெடிகுண்டு தாக்குதல் நடத்துதல், தற்கொலை தாக்குதல்கள் மூலம் கடல் கடந்தும் கொலைகளை அரங்கேற்றுதல், எதிரானவர்களை அழிக்கிறோம் என்ற பெயரில் ஒருவருக்கு வைக்கும் குறியில் பல அப்பாவிகள் கொல்லப்படுவதைக் கணக்கிலேயே எடுத்துக் கொள்ளாமை, தன்னை மட்டும் நிறுவனப்படுத்தும் நோக்கில், ஒரே கொள்கையில் போராடும் சக போராட்ட இயக்கங்களை அழித்தல் என, தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட விடுதலை புலிகளின் போராட்டம், தமிழ்நாடு முதலான சர்வதேச நாடுகளிலுள்ள தமிழ் உணர்வாளர்களின் அனைத்துவித உதவிகளின் மூலம் சிறிது சிறிதாக மோசமான தீவிரவாதமாக மாறியது.
தமிழ் மக்களின் உரிமைக்காக வீரியமாக போராடும் ஒரு இயக்கம் என்பதை மட்டுமே பார்த்து விடுதலைப் புலிகளுக்கு உதவிய பல நாட்டு ஆதரவாளர்களும் அவர்களின் இத்தகைய மனித உயிர்களுக்கு விலை வைக்காமல், ஏகாதிபத்திய அரசுகள் செய்யும் இன அழிப்புகளின் மற்றொரு வடிவமாக இவர்களே மாறிப் போனதைக் குறித்துப் பேசுவதற்கோ, அதனைக் கண்டிப்பதற்கோ, அவர்களின் போராட்டத்தைச் சரியான திசையில் வழிநடத்துவதற்கோ முன்வரவில்லை. இவர்களின் மக்களுக்கு எதிரான அனைத்துச் செயல்பாடுகளையும் உரிமைக்கான போராட்டத்தின் ஒரு பாகமாவே பார்த்து சர்வதேசத்திலிருந்து விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் வழங்கிய கண்மூடித்தனமான ஆதரவும் உதவிகளும் விடுதலை புலிகள், தங்களின் செய்கைகளில் உள்ள தவறுகளை உணர்ந்துக் கொள்வதற்கோ சுயபரிசோதனை செய்து கொள்வதற்கோ இடமளிக்கவில்லை.
புலிகளின் இத்தகைய கண்மூடித்தனமான செயல்பாடுகளால் அப்பாவி மக்கள் வெகுவாகப் பாதிக்கப்படுவதை உணர்ந்த பல இலங்கை அரசுகளும் புலிகளுக்கு எதிராக தற்போது முன்னெடுத்தக் கடுமையான இராணுவ நடவடிக்கைகளைப் போன்று தொடர்ச்சியான, புலிகளை ஒட்டுமொத்தமாக அழிக்கும் நோக்குடனான ஒரு இராணுவ நடவடிக்கை எடுப்பதைத் தள்ளிப்போட்டன. இதனால், கிட்டத்தட்ட தாங்கள் எதிர்பார்த்த தமிழ் ஈழ நாட்டில் 80 சதவீதத்திலான இடங்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் விடுதலை புலிகள் கொண்டு வந்தனர்.
விடுதலை புலிகளின் மனித உயிர்களுக்கு விலைகொடுக்காத, கண்மூடித்தனமான தாக்குதல்களை அவதானித்தப் பல முஸ்லிம் தலைவர்கள் சிறிது சிறிதாக புலிகளிடமிருந்து விலக ஆரம்பித்தனர்.
ஒரு அரசுக்கு எதிரான போராட்டம் என்பது, இறுதி வரை ஆயுதப் போராட்டமாகவே இருந்து ஆயுதப் போராட்டத்தின் வழியிலேயே அரசைப் பிடிப்பதோ அல்லது தாங்கள் நினைத்த உரிமைகளை நிலைநாட்டுவதோ எவ்வகையிலும் சாத்தியமில்லை என்பதை ஏனோ புலிகள் உணரவில்லை.
ஒரு அரசுக்கு எதிராகச் செய்யும் ஆயுதப் போராட்டம் என்பது, அரசை அசைத்துப் பார்க்க மட்டுமே பயன்படுமேயன்றி, அந்த அரசு பயந்துபோய் மொத்தமாக கீழிறங்கி வருவதற்கு எவ்வகையிலும் உதவாது. ஒரு அரசு முழுமையாக மாற்றியமைக்கப்படுவதற்கு மக்கள் போராட்டம் மட்டுமே ஒரே வழி.
எனவே ஆயுதம் ஏந்திப் போராடும் போராட்டங்கள், ஒரு காலகட்டத்தில் தங்களின் வல்லமையை அரசுகளுக்கு உணர்த்தப்பட்டுவிட்டதாக உணரும் நேரத்திலேயே, அரசியல் ரீதியாக பரிகாரம் தேடும் வழிகளிலும் மாற வேண்டியது முக்கியம்.
சுமார் 80 சதவிகித பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்ட புலிகள், உண்மையிலேயே தமிழ் மக்களின் உரிமைகளுக்காகத் தான் தங்கள் போராட்டத்தைத் தொடர்கின்றனர் எனில், நார்வேயின் முன்னிலையில் அரசு இறங்கி வந்து பேசப்பட்ட பேச்சுவார்த்தையில் தங்கள் பக்கமிருந்தும் சிறு விட்டுக் கொடுப்பைச் செய்து, விடுதலை புலிகளின் தலைமையில் தனி மாநில அந்தஸ்தில் தமிழ் மக்கள் வசிக்கும் பகுதிகள் அங்கீகரிக்கப்படுவதற்குச் சம்மதித்த வேளையில் ராஜ தந்திர நடவடிக்கையில் ஈடுபட்டிருக்க வேண்டும்.
அதை விடுத்து, இலங்கையிலிருந்து தமிழ் மக்கள் வசிக்கும் மக்களுக்கு தமிழீழம் என்ற தனி நாடு பிரித்துத் தருவது தான் ஒரே தீர்வு என்று நின்றது, எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ளத்தக்க முடியாததாகும்.(ஒரு அரசின் பக்கமிருந்து இதனைச் சிந்தித்துப் பார்த்தால், இந்த நியாயம் விளங்கும்).
இவ்விஷயத்தில் புலிகள் எடுத்த இந்த நிலைபாட்டை அப்படியே கண்மூடி ஆதரித்தத் தமிழக தலைவர்களின் இரட்டை நிலைபாட்டைக் கூட, புலிகள் புரிந்துக் கொள்ளாதது துரதிஷ்டவசமானது.
தமிழ்நாட்டில் கூட, திராவிடர் கழகங்களின் ஆரம்பகாலத்தில் "தனித் தமிழ்நாடு" என்ற ஒரு சுயநிர்ணய சிந்தனைப் போராட்டம் இருந்தது. அண்ணா முதல் கருணாநிதி வரை இந்தச் சிந்தனையில் ஊறியவர்களே. பழ. நெடுமாறன் இப்பொழுதும் இந்த எண்ணத்திலேயே இருப்பதும் கவனிக்கத்தக்கது.
தனி நாடு என்ற கொள்கை வெற்றிபெற வேண்டுமெனில், மக்கள் போராட்டம் மட்டுமே வேண்டும். அல்லாமல் ஆயுதப்போராட்டம் அல்ல. தமிழகத்தில் தனி தமிழ்நாடு என்பது மக்கள் போராட்டம் நடத்தாமல் சாத்தியம் இல்லை என்பதை உணர்ந்துக் கொண்ட, திராவிடர் கழகங்கள், தங்கள் போராட்டங்களை விடுத்து அரசியல் தீர்வு கண்டு, இன்று கிடைத்ததைச் சுருட்டிக் கொண்டு தமிழகத்தில் முடங்கிக் கிடக்கின்றனர். இவர்கள் தான், இலங்கை என்ற நாட்டில், தமிழர்களுக்குத் தனி நாடு என்ற புலிகளின் கோரிக்கைக்குக் கொடி பிடிப்பவர்கள்! எத்தகைய இரட்டை நிலைபாடு இது! தன் சொந்த நாட்டில் சாத்தியப்படுத்த வக்கற்றவர்கள், மற்றொரு நாட்டில் ஆயுதம் ஏந்தும் குழுவுக்கு ஆதரவு கொடுத்து, "அப்படித்தான். செய் செய்" என்று தூண்டி விடுவது எத்தகைய கோழைத்தனம்!
இந்தத் தமிழகத் தலைவர்களின் இரட்டை நிலைபாட்டைப் புரிந்துக் கொள்ளாத பிரபாகரன், தன் செயல்பாட்டுக்கு உலக அளவில் அங்கீகாரம் உள்ளது என்றும் தனிநாட்டுக்காக தான் செய்யும் செயல்பாடுகள் எல்லாமே சரியானது தான் என்றும் கண்மூடித்தனமான நம்பிக்கையில் இருந்து விட்டார். சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஒரு நாட்டுக்கு எதிராக, உரிமைக்காகப் போராடுபவர்கள், அதனை ஒரு நிலைக்குப் பின்னர் மக்கள் போராட்டமாக மாற்றி எடுக்க வேண்டும்; இல்லையேல் அழிவது உறுதி என்பதற்குப் புலிகள் ஒரு முன்மாதிரி.
சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஒரு நாடு, தான் நினைத்தால் தன் நாட்டுக்குள் தீவிரவாதம் செய்யும் ஒரு குழுவை, அது எத்தகைய சக்திபெற்றதாக இருந்தாலும் தன் சக்தி அனைத்தையும் பிரயோகித்து அழிக்க நினைத்து விட்டால், அதனை உலகில் எந்த நாடும் எதிர்க்க முன்வராது என்ற சாதாரண அறிவைக் கூடப் பெறாத வகையிலேயே பிரபாகரன் ஒரு கற்பனை உலகில் சஞ்சரித்துள்ளார் என்பது இப்போது புரிகிறது.
புலிகளின் தமிழர்களுக்கான உரிமை போராட்டத்தில் ஈகோவும் அக்கிரமமும் நியாயமற்ற செயல்பாடுகளும் மலிவதைக் கண்டப் பல முஸ்லிம்கள் சிறிது சிறிதாக அவர்களை விட்டு விலகி, அரசியல் தீர்வுகளைப் பெறுவதைக் குறித்துச் சிந்திக்க ஆரம்பித்தனர். அதன் விளைவு, அப்துல் ஹக்கீம் போன்ற சிறந்த அமைச்சர்கள் வரை முஸ்லிம்களுக்கு இடையில் உருவாகும் நிலை உருவானது.
தங்களின் இலட்சியப்போராட்டத்திற்கு, முஸ்லிம்கள் தங்களை விட்டுப் பிரிந்தது மிகப் பெரிய தடை என்று தவறாக விளங்கிக் கொண்ட புலிகள், தங்களின் உரிமைப்போராட்டத்தின் ஒரு பாகமாக முஸ்லிம்களைக் கருவறுப்பதையும் ஆக்கிக் கொண்டனர். உதாரணம் காத்தான்குடி.
சொந்த வீடு, நிலம், சொந்தங்கள் இழந்து அகதிகளாக சுற்றுவதன் வலி உணர்ந்த புலிகள், தாங்கள் எந்தத் தமிழர்களுக்காகப் போராடினார்களோ அதே தமிழ் பேசும் இன்னொரு பிரிவு மக்களை அகதிகளாக அவர்களே சுற்ற வைத்ததிலிருந்து, அவர்களின் தமிழர்களுக்கான உரிமைபோராட்டம் என்ற தூய சிந்தனையில் கசடு நிறைந்து, உண்மையான நோக்கம் புதைக்கப்பட்டு விட்டது என்பதைப் பறைசாற்றி விட்டது.
(காத்தான் குடி சம்பங்களைக் குறித்த சில தகவல்கள் இணைப்பில் உள்ளது. படியுங்கள்).
எப்பொழுது தங்கள் ஆயுதப் போராட்டத்தில் அப்பாவிகள் கொல்லப்படுவதை ஒரு பொருட்டாகவே அவர்கள் எடுத்துக் கொள்ளாமல் செயல்பட ஆரம்பித்தார்களோ, அந்த நிமிடமே புலிகளின் மீதும் பிரபாகரன் மீதும் ஒரு முஸ்லிம் கொண்ட பாசமும் மதிப்பும் செத்து விட்டது.
இந்தக் காத்தான்குடி சம்பவங்கள், பிரபாகரன் மீது முஸ்லிம்கள் அதீத வெறுப்பு கொள்வதற்குக் காரணிகள் ஆயின.
ஈகோ மற்றும் தான் நினைப்பதே சரி என்ற கண்மூடித்தனமான எண்ணத்தில் திரியும் தலைவர்களுக்கும் பிரபாகரன் ஒரு படிப்பினையே. ஒரு கட்டத்தில் நார்வே முன்னிலையில் ஏற்பட இருந்த அரசியல் தீர்வை ஏற்றுக் கொள்ளவோ அவ்வகையில் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கவோ சம்மதிக்காத பிரபாகரனை விட்டு, புலிகளில் கருணா போன்ற முக்கியப் பல தலைவர்கள் பிரிந்து சென்றதும் பிரபாகரனின் ஏகாதிபத்திய சிந்தனைக்கு உதாரணங்கள்!
ஏகாதிபத்தியத்தை, அடக்குமுறை அரசை எதிர்த்து உரிமைக்காகப் போராடும் ஒரு குழுவின் தலைவரே, தான் நினைத்த சுதந்திரம் கிடைப்பதற்கு முன்னரே ஏகாதிபதியாகவும் அக்கிரமக்காரனாகவும் தன்னை எதிர்ப்பவர்களைக் கண்மூடித்தனமாக கொன்று அழிப்பவனாகவும் அப்பாவிகளின் உயிர்களை எடுப்பதில் எவ்விதக் கருணையும் காட்டாதவனாகவும் இருந்தால்..... அவன் கையில் அதிகாரம் கிடைக்கப்பெறின் எவ்வாறு இருக்கும்?
இந்த ஒரு காரணத்திற்காகவே பிரபாகரனின் அழிவை முஸ்லிம்களாகிய நாம் மனம் திறந்து வரவேற்கலாம்.
பிரபாகரனை, ஒரு இனத்துக்கான நீண்ட நெடிய போராட்டத்தை முன்னெடுத்த கதாநாயகனாகப் பார்க்கலாம் தான் - பிரபாகரனின் பாதை, மற்றொரு சர்வாதிகாரியின் பாதையாக மாறாமல் இருந்திருந்தால்!
சிங்கள அரசினால் எத்தனை உயிர்கள் அழிந்ததோ அதற்கு எவ்வகையிலும் சளைக்காத வகையில் பிரபாகரனாலும் ஆயிரக்கணக்கானஅப்பாவிகளின் உயிர்கள் சூறையாடப்பட்டுள்ளன.
அக்கிரமக்காரனை எதிர்ப்பதும் அக்கிரமங்களுக்கு எதிராக போராடுவதும் ஒரு முஸ்லிமின் கடமை என்ற வகையில், தமிழ் மக்களுக்கு எதிரான சிங்கள இனவாதிகளின் அக்கிரமங்களுக்கு எதிராக குரல் கொடுப்பதும் எதிர்ப்பதும் எப்படி சரியான செயலோ அதே போன்றே, அப்பாவிகளின் உயிர்களுக்கு எவ்வித மதிப்பும் கொடுக்காத கொடுங்கோலன் பிரபாகரனுக்கும் அவன் அடக்கியாண்ட புலிகளுக்கும் எதிராகக் குரல் உயர்த்த வேண்டியதும் போராடுவதும் ஒரு முஸ்லிமின் கட்டாயக் கடமையாகும்! இதில் அவன் மீது பாசமாவது; மதிப்பாவது; மண்ணாங்கட்டியாவது!
(இவை நான் வாசித்து அறிந்துக் கொண்டதை வைத்த என் தனிப்பட்ட நிலைபாடுகளே. இவற்றில் ஏதேனும் தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டுங்கள். இன்ஷா அல்லாஹ் திருத்திக் கொள்கிறேன்)
மிக்க அன்புடன்
சகோ. அபூ சுமையா.
--
அன்புடன்
சகோ. அபூ சுமையா.
*****************************************************
"நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே; ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்."(49:10)