வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்
ஆணின் திருமண வயதைக் குறிப்பிட்டு ஆதாரங்கள் எதுவும் நாமறிந்து இல்லை! என்றாலும் நபிவழிச் செய்திகளிலிருந்து குறிப்பால் அறிந்து கொள்ளலாம்.
மீசை வளர்தல், மறைவிடத்தில் முடி வளர்வது, தூக்கத்தில் ஸ்கலிதம் ஏற்படுதல் இவற்றைக் கொண்டு ஓர் ஆண், சிறுவருக்கும் பருவமடையும் நிலைக்குமுள்ள வயதைக் குறிப்பால் விளங்கிக்கொள்ளலாம்.
நான் பதினான்கு வயதுடையவனாக இருக்கும்போது, உஹுதுப் போர் நடந்த காலகட்டத்தில் நபி(ஸல்) அவர்கள் என்னைத் தமக்கு முன்பாக வரவழைத்தார்கள்; ஆனால், (போரில் கலந்து கொள்ள) எனக்கு அனுமதியளிக்கவில்லை. அகழ்ப் போரின் போதும் என்னைத் தமக்கு முன்பாக வரவழைத்தார்கள். அப்போது நான் பதினைந்து வயதுடையவனாயிருந்தேன். அப்போது, போரில் கலந்துகொள்ள எனக்கு அனுமதியளித்தார்கள். அறிவிப்பவர் இப்னு உமர் (ரலி) (நூல் - புகாரி 2664)
உஹுதுப் போரின்போது (படை வீரர்களைப் பார்வையிட்டு ஒழுங்குப்படுத்திக் கொண்டிருந்த) நபி(ஸல்) அவர்களிடம் நானாக முன்சென்று (என்னைப் படையில் சேர்த்துக் கொள்ளும்படி) கேட்டேன். அப்போது எனக்குப் பதினான்கு வயது எனவே, என்னை நபி(ஸல்) அவர்கள் அனுமதிக்கவில்லை. பிறகு (அடுத்த ஆண்டு) அகழ்ப்போரின்போது நானாக முன்சென்று கேட்டேன். அப்போது எனக்கு வயது பதினைந்து. எனவே, என்னை அனுமதித்தார்கள். அறிவிப்பவர் இப்னு உமர் (ரலி) (நூல்கள் - புகாரி 4097. முஸ்லிம், திர்மிதீ)
நான் பங்கேற்ற முதல் (போர்த்) தினம் அகழ்ப்போர் தினமாகும். அறிவிப்பவர் இப்னு உமர் (ரலி) (நூல் - புகாரி 4107)
அல்அஹ்ஜாப் போர் எனும் அகழ் போர் ஹிஜ்ரி 4ம் ஆண்டு நடைபெற்றதாகவும், ஹிஜ்ரி 5ம் ஆண்டில் நடைபெற்றதாகவும் இரு கருத்துகள் நிலவுகின்றன. இதில் ஹிஜ்ரி 5ம் ஆண்டு ஷவ்வால் மாதம் அகழ் போர் நிகழ்ந்தது என்பதையே வரலாற்று ஆசிரியர்கள் உறுதிப்படுத்துகின்றனர்.
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தமது 15 ம் வயதில் அகழ் போர் படையில் சேர்க்கப்பட்டுள்ளார். போராளிகளுக்கு வீரம், விவேகம் மிக அவசியமாகும். ஓர் ஆண் மகனுக்கு இவை 15 வயதில் ஏற்படுகிறது. அதாவது, சிறுவன் என்ற எல்லையைக் கடந்து வாலிபன், இளைஞன் என்ற மெச்சுரிட்டி ஆண் மகனுக்கு 15 ம் வயதில் ஏற்படுகிறது.
நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் என் மனைவியை மணவிலக்குச் செய்துவிட்டேன். அப்போது அவள் மாதவிடாய்ப் பருவத்தில் இருந்தாள்.
எனவே, (என் தந்தை) உமர் இப்னு கத்தாப்(ரலி) இதைப் பற்றி இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வினவியபோது, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் தந்தையாரிடம், 'உங்கள் புதல்வருக்குக் கட்டளையிடுங்கள்: அவர் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக்கொள்ளட்டும்! பிறகு, அவள் மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்து, அடுத்து மீண்டும் அவளுக்கு மாதவிடாய் ஏற்பட்டுப் பின்னர் அதிலிருந்து அவள் தூய்மையடையும் வரை அவளைத் தம்மிடமே வைத்திருக்கட்டும். பிறகு அவர் விரும்பினால், (இரண்டாம் மாதவிடாயிலிருந்து தூய்மையான) பின்னர் (தொடர்ந்து அவளை) தம்மிடமே (தம் மனைவியாக) வைத்திருக்கட்டும். அவர் விரும்பினால் அவளுடன் உடலுறவு கொள்வதற்கு முன்பாக அவளை மணவிலக்குச் செய்யட்டும். (மாதவிடாயிலிருந்து தூய்மையான) இந்தக் காலக் கட்டமே மனைவியரை மணவிலக்குச் செய்ய அல்லாஹ் (திருக்குர்ஆன் 02:228 வது வசனத்தில்) அனுமதித்துள்ள ('இத்தாக்' காலத்தைக் கணக்கிட்டுக் கொள்வதற்கு ஏற்ற) காலக் கட்டமாகும்' என்று கூறினார்கள். அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) (நூல் - புகாரி 5251)
ஹிஜ்ரி பத்தாம் ஆண்டு நபி (ஸல்) அவர்கள் மரணமடைந்தார்கள். ஹிஜ்ரி ஐந்தாம் ஆண்டு அகழ் யுத்தம் நடந்தபோது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுக்கு பதினைந்து வயது எனில், இந்த ஐந்து ஆண்டுகள் இடைவெளியில் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் திருமணம் செய்து, மனைவியை விவாகரத்துச் செய்யும் நிகழ்வும் ஏற்பட்டுள்ளன என்பதை மேல்கண்ட அறிவிப்பிலிருந்து விளங்கலாம். எனவே அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தமது பதினைந்தாம் வயதிலிருந்து இருபது வயதிற்குள், நபி (ஸல்) அவர்களின் காலத்திலேயே திருமணம் முடித்துள்ளனர்.
அக்கால மக்கள் உடல் வலிமை மிக்கவர்களாக இருந்தனர். இஸ்லாம் மார்க்கத்தின் வழிகாட்டலில் வாலிப வயதின் துவக்கத்திலேயே இல்லற வாழ்வில் இணைந்து வாழ்க்கையை சிறப்பாக நடத்திச் செல்லும் அறிவையும் பெற்று, இளம் வயதில் தாம்பத்திய உறவு கொள்ளும் வலிமையும் பெற்றிருந்தனர். இக்கால மக்கள் உடல் ஆரோக்கியத்திலும், வலிமையிலும் அக்கால மக்களுக்கு ஈடாக இல்லை! நபி (ஸல்) அவர்கள் கூறிய ''சிறந்த தலைமுறையினர்'' என்ற அந்தஸ்திலும் இக்கால மக்கள் பின் தங்கியராவர்.
திருமணம் முடிந்து தாம்பத்திய உறவுக்கு உடல் வலிமை போதும் என்றாலும், இல்லறம் நடத்திட அறிவுப்பூர்வமான அனுபவம் அவசியம் என்பதால் இக்காலத்தில் காலதாமதமாக - மிகவும் காலதாமதாக திருமணம் செய்யப்படுகின்றது. இதனால் ''ஆணின் திருமணம் வயது என்ன?'' என்ற கேள்வியும் எழுகிறது!
ஆண் தன்னை விட வயதில் மூத்த பெண்ணை மணமுடிக்கலாமா?
இதற்கு மார்க்கத்தில் தடையேதும் இல்லை! ஓர் ஆண் தன்னை விட வயதில் மூத்த பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளும் வழக்கம், நபி (ஸல்) அவர்கள் நபித்துவம் பெறும் காலத்திற்கு முன்பே நடைமுறையில் இருந்திருக்கின்றன! நபி (ஸல்) அவர்கள் தமது 25ம் வயதில் தம்மை விட 15 வயது மூத்திருந்த கதீஜா (ரலி) அவர்களை மணமுடித்திருந்தார்கள். இஸ்லாத்தில் இணைந்த பின்னும் இந்தத் தம்பதியர் சேர்ந்து வாழ்ந்தனர். எனவே, ஆண் தம்மை விட வயதில் மூத்த பெண்ணை மணந்து கொள்ளலாம்! மார்க்க ரீதியாக இதற்கு தடை இல்லை.
(அல்லாஹ் மிக அறிந்தவன்)
--
"நமக்குள் இஸ்லாம்" குழுமத்திலிருந்து வெளியேற நாடுபவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்து மெயில் ஐடியை நீக்கிக் கொள்ளலாம்.
To unsubscribe from this group, send email to
fromgn+un...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/fromgn?hl=en?hl=en