சென்னை மவுண்ட் ரோடு ஆரம்பிக்கும் இடத்தில், குதிரை மீது அமர்ந்த தாமஸ் மன்றோ என்பவர் சிலை யாரும் கவனித்திருக்க மாட்டீர்கள்! சிலையாக மட்டுமல்ல, வரலாற்றிலும் அவ்வளவு கவனிக்கப்படவில்லை. அந்த தாமஸ் மன்றோ தான், இன்றைக்கு இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் நாம் பார்க்கும் அத்தனை சீர்திருத்தங்களுக்கும் ஆரம்ப புள்ளி, அவரைப் பற்றி தான் வரலாற்றில் சரியாக பதியப்படவில்லை.
நாம் காலப் பயணம் செய்து பின்னோக்கிச் சென்றால், 1820 ஆம் வருடம், வரலாற்றில் சரியாக 200 வருடம் பின்னோக்கி சென்றால், சிலையாய் இருக்கும் அந்த தமிழ்நாட்டின் முதல் நேர்மையான ஆட்சியாளரை, நீங்கள் நேரிலேயே சென்னையில் பார்க்க முடியும்.
ஆம் Sir Thomas Munro அப்போது அவர் பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரலாக மாறிவிட்டார்!!
கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை ஆளுவதற்கு காரணமானவர்கள் முக்கியமான இரண்டு பேர், 1. ராபர்ட் கிளைவ், மற்றொன்று 2. சர் தாமஸ் மன்றோ!
ராபர்ட் கிளைவ் இந்தியாவில் ஊழல் தோன்றுவதற்கு காரணம். இன்றைய ராஜா முதல் அரசாங்க அலுவலகத்தில், தலையை சொரிந்து கொண்டிருக்கும் ஒரு கடைநிலை ஊழியர் வரை எல்லோருக்கும் லஞ்சம் என்பது ஒரு கலை என்று சொல்லிக் கொடுத்தது ராபர்ட் கிளைவ்!
ஆனால் இந்தியாவில் இன்று நிர்வாகத்தில் நேர்மை தோன்றுவதற்கும் அதே கிழக்கு இந்திய கம்பெனி சிப்பாய் ஒருவர் தான் காரணம். அவர்தான் தாமஸ் மன்றோ.
கலெக்டர் என்ற வார்த்தை தோன்றுவதற்கும் அவர்தான் காரணம்.
ஜமீன்தார் முறையை தென்னிந்தியாவில் ஒழித்து, Ryotwari System என்ற புதிய முறையை அறிமுகப்படுத்தியது, தாமஸ் மன்றோ அவர்கள்தான்!!
தமிழ்நாட்டில் விவசாயம் நன்கு வளர்ந்ததற்கு தாமஸ் மன்றோ தான் காரணம்!
இந்தியர்களுக்கு பிரிட்டிஷ் நிர்வாகத்தில் மரியாதை கிடைப்பதற்கும் அவர்தான் காரணம்.
இந்திய மொழி தெரியாமல் இந்தியாவை ஆள்பவர்கள் இந்தியாவை ஆளக்கூடாது என்று சொன்னவர் அவர்தான்.
இன்று நாம் சொல்லும், " தமிழ் வளர்ச்சி ", " தமிழ் கலாச்சார வளர்ச்சி" எல்லாவற்றிற்கும் அடித்தளம் போட்டது தாமஸ் மன்றோ தான்.
ராஜாஜி சொல்லுவார், " கலெக்டர் ஆக வேண்டிய ஒவ்வொருவரும், தாமஸ் மன்றோ பற்றி படிக்க வேண்டும். நேர்மையாக ஆட்சி செய்ய நினைக்கும் ஒவ்வொருவரும், கண்டிப்பாக சர்.தாமஸ் மன்றோ அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்!" என்று முக்கியமான இடங்களில் சொல்லுவார்.
மன்றோ ஒரு பிரிட்டிஷ் அதிகாரி தான். ஆங்கிலேயன் என்றாலும் இந்தியர்களைத் தம் ஆட்சிக்குட்பட்டவர்கள் என்று கருதினாரே ஒழிய, ஒருபோதும் அவர்களை அடிமை என்று நினைத்ததில்லை. அவருடைய பல நடவடிக்கைகள் எப்போதும் பொதுமக்களுக்குச் சாதகமாகவே இருந்தன. இந்தியாவின் செல்வத்தைச் சுரண்டி யெடுத்துச் செல்வதற்காகவே இங்கே அதிகாரிகளாகப் பலரும் குடியேறிக்கொண்டிருந்த சமயத்தில், வேலைக்கான சம்பளத்தைத் தவிர வேறு எதையும் எண்ணிப் பார்க்காதவர் அவர்.
இப்படிப்பட்ட தாமஸ் மன்றோ, ஒரு கட்டத்தில் இந்திய ஆட்சியாளராகவே மாறிவிட்டார். அவர் திருப்பதி சென்று வெங்கடாஜலபதியை பார்த்த போது, " பங்காரு தோரணம்" என்று பெருமாள் கழுத்தில் ஒரு தங்க மாலையை பார்த்தார். "அது ஆஞ்சநேயர் அணிவித்த மாலை, யார் கண்ணுக்கும் தெரியாது, மிகவும் பரிசுத்தமான ஆன்மாவுக்கு மட்டும்தான் தெரியும் ", என்று சில ஆந்திர மக்கள் சொல்லுவார்கள். அது அவர் கண்ணுக்கு மட்டும் தான் தெரிந்தது.
அது மட்டுமா ? ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி அவர்களின் மந்த்ராலயம் மடம் அமைந்துள்ள இடத்திற்கு பிரிட்டிஷ் அரசு சார்பாக, அவர் சென்ற போது, அவர் கண்களுக்கு மட்டும் ராகவேந்திரர் தோன்றி, அவருடன் ஆங்கிலத்தில் பேசினார். அவர் தனியாக பேசிக் கொண்டிருப்பதை எல்லோரும் பார்த்து இருக்கிறார்கள். அவர், ஒருவர் என்னுடன் ஆங்கிலத்தில் பேசினார் என்று, ஆவணங்களில் குறிப்பு எழுதியுள்ளார். இந்த உண்மை, பதிவேடுகளில் பதியப்பட்டுள்ளது!
இது அத்தனையும் உண்மையா என்று நீங்கள் கேட்பது புரிகிறது! வாருங்கள் கொஞ்சம், வரலாற்றில் பயணித்து, நடந்து உண்மைகளை தெரிந்து கொள்வோம்.
மன்றோவின் வாழ்க்கை வரலாறு, ராபர்ட் கிளைவ் வரலாறு போல் தான் ஆரம்பித்தது . இருவருமே மிக எளிய ஒரு சிறிய வேலையை ஏற்றுக்கொண்டு இந்தியாவுக்கு வந்த வர்கள். ஆங்கிலேய ஆட்சியின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு உழைத்தவர்கள். ஒரு போரில் ஈட்டித் தந்த வெற்றி, அவரே எதிர்பார்க்காதபடி வாழ்க்கையின் மிக உயர்ந்த இடத்துக்கு அழைத்துச் சென்றது. ஆனால் அதை அவரால் தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. அவருடைய அதிகார ஆணவம், தன்னிச்சையான போக்கு, தந்திரங்கள் அவரை வெகுவிரைவில் கீழே சரியவைத்துவிட்டன. பதவியிலிருந்து இறக்கப்பட்டு, விசாரணைக்காக அழைக்கப்படும் அளவுக்கு அவருடைய நடவடிக் கைகள் இருந்தன. இதற்கு நேர்மாறாக, மன்றோவின் வளர்ச்சி மிகமிக நிதானமாகவே மேல்நோக்கிச் செல்கிறது. பதினைந்து ரூபாய் சம்பளம் வாங்கும் சிப்பாயாக வேலையில் சேர்ந்து, தொடர்ச்சியாக ஒவ்வொரு கட்டத்திலும் தன் திறமையை நிரூபித்து மேல்நிலையை அடைந்தார். இறுதியில் விடுப்பில் ஊருக்குச் சென்றுவிட்டவரை அழைத்து இங்கிலாந்து அரசாங்கம் அவருக்கு கவர்னர் பதவியை அளித்தது, என்றால் அவர் நிர்வாகத் திறமையை நீங்கள் புரிந்து கொள்ளலாம்!
கிளாஸ்கோ நகரில் 27.05.1761 அன்று மன்றோ பிறந்தார். நான்கு சகோதரர்களையும் இரண்டு சகோதரிகளையும் கொண்ட பெரிய குடும்பம் அவருடையது. தந்தை அலெக்ஸாண்டர் மன்றோ. தாய் மார்கரெட் ஸ்டார்க். சிறுவயதில் மன்றோ அம்மை நோயால் பாதிக்கப்பட்டார். அதன் தாக்கம் கடுமையாக இருந்தது. அம்மையின் தழும்புகள் அவர் முகத்தில் அழுத்தமாகப் பதிந்தன. அம்மையின் காரணமாக இளம்வயதிலேயே காது கேட்கும் திறன் குறைந்துபோனது. வணிகத்துறையில் ஈடு பட்டிருந்த தந்தை கடுமையான பொருளிழப்புக்கு ஆளானார். வறுமை வாட்டிய நிலையில், மகன் மன்றோவை இந்தியாவில் இருந்த வேலைவாய்ப்பைக் கேள்விப்பட்டு அனுப்பி வைத்தார். இந்திய ராணு வத்தில் சிப்பாய் வேலைக்காக மன்றோ தேர்ந் தெடுக்கப்பட்டார். பத்து மாதங்களுக்கும் மேற்பட்ட நீண்ட கப்பற்பயணத்தில் கப்பலில் கிடைத்த பணியாள் வேலையைப் பார்த்தபடி இந்தியாவை அடைந்தார்.
மன்றோவின் நிர்வாகப்பணி பாராமகால் என்னும் இடத்திலிருந்து தொடங்கியது. தற்போதைய தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களின் பெரும் பகுதியும் வட ஆர்க்காட்டின் திருப்பத்தூர் பகுதி யையும் சேர்த்து அக்காலத்தில் பாராமகால் எனப் பட்டது. ஜெகதேவி, மத்தூர், வீரபத்திர துர்க்கம், காவேரிப்பட்டணம், ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி, மலப்பாடி, தட்டக்கல், மகாராஜா கடை போன்ற பன்னிரண்டு கோட்டைகளைக் கொண்ட நிர்வாகப் பிரிவுகளைக் கொண்டது பாராமகால். ஏறத்தாழ ஏழாண்டுகளுக்கும் மேலாக இந்த இடத்தில் பணி புரிந்தார் மன்றோ. தனது நிர்வாகத்துக்குட்பட்ட பகுதிகளில் குதிரையில் வலம் வந்தபடி இருந்தார் மன்றோ.
பெரும்பாலும் கூடாரங்களில் தங்கிய படியே வேலை செய்தார். மக்களையும் ஊர்களையும் நாட்டுநிலைமையையும் நேரில் கண்டறிந்தால் தான் தன் பணி சிறக்கும் என நினைத்தார் மன்றோ. தருமபுரியில் அவர் தனக்கென ஒரு வீட்டைக் கட்டிக் கொண்டார். அதன் அருகில் அழகான ஒரு தோட்டத் தையும் குளத்தையும் உருவாக்கினார்.
மாவட்டம் முழுக்க அலைந்து நில அளவை செய்ததும், அதன் தரத்துக்கேற்றபடி நன்செய், புன்செய், தரிசு என வகைப்படுத்தியதும், அதில் பயிர்செய்யப்படுகிற பயிர்களின் விளைச்சலுக் கேற்றபடி வரியை நிர்ணயம் செய்ததும், விவசாயிகள் செலுத்தக்கூடிய வரியின் வருமானம் நேரிடையாக அரசாங்கத்துக்குக் கிடைக்கும்படி நிர்வாக ஏற்பாடு களைச் செய்ததும் அவருடைய முக்கியமான பணிகள். விருப்பம்போல விவசாயிகளின்மீது வரிச்சுமையை ஏற்றிக் கொள்ளையடித்துக்கொண் டிருந்த பழைய முறைகளை முற்றிலுமாக இல்லாமல் ஆக்கினார் மன்றோ. இந்த முறை உடனடியாக இரண்டு பயன்களைத் தந்தது.
ஆங்கிலேயர்களின் அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள விளைச்சல் நிலங்களின் மொத்த அளவு என்ன என்பது மதிப்பிடப்பட்டது. அவற்றின் மூலமாக அரசாங்கத்துக்குக் கிடைக்கக்கூடிய ஆண்டு வருவாய் என்ன என்பதும் மதிப்பிடப்பட்டது. அக்காலத்தில் விவசாயிகள் நிலத்தை ஏற்றுக்கொள்வதில் அவ் வளவாக ஆர்வம் கொண்டிருக்கவில்லை என் பதையும் சாதிப்பிரிவுக்கேற்றபடி தீர்வையின் அளவு மாறுபடும் தன்மையைக் கொண்டிருந்தது என் பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
அரசாங்கத்துக்கு நிரந்தரமான வரித்தொகை வரவேண்டும் என்றால், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள விளைச்சல் நிலத்தில் தொடர்ச்சியாக விவசாயம் நிகழவேண்டும். தரிசு நிலங்களையும் விவசாயத்துக்குத் தகுந்ததாக மாற்றவேண்டும். அதற்கு விவசாயிகளை நிலத்தைநோக்கி ஈர்க்க வேண்டும். அதற்கு வரி விகிதத்தில் பொருத்தமான மாற்றத்தைக் கொண்டு வருவதைத் தவிர வேறு வழியில்லை.
இந்த வழிமுறைக்கும் தொடக்கத்தில் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. அதனால், இன்னும் சற்றே இறங்கி வந்து, ஐந்தாண்டுகளுக்கான குத்தகை முறை அல்லது இருபதாண்டுகளுக்கான குத்தகைமுறையை அறிவித்து வரியை வசூல் செய்யத் தீர்மானிக்கப்பட்டது. மற்ற அரசு அதிகாரிகளோடும் ஆட்சியரோடும் தொடர்ச்சியான விவாதங்களை நிகழ்த்தி, மன்றோ கொண்டுவந்த வரி சீர்திருத்தம் ஒரு பக்கம் மக்களை விவசாயத்தை நோக்கி ஈர்த்தது. மறுபக்கம் அரசுக்கு நிரந்தர வருமானத்துக்கு வழிவகுத்துத் தந்தது.
திப்பு சுல்தான் மறைவுக்குப் பிறகு, ஒப்பந்தத்தின் அடிப்படையில் கிடைத்த மங்களூர்ப்பகுதியில் நிர்வாகியாகப் பணியாற்ற மன்றோ அனுப்பி வைக்கப்பட்டார். உள்ளூர அந்த மாற்றத்தில் அவருக்குச் சிறிதும் விருப்பமில்லை. ஆனால் அவர் கோரிக்கையை சென்னைக் கோட்டையினர் ஏற்றுக்கொள்ளாத காரணத்தால் மன்றோ மங்களூர் செல்லவேண்டியிருந்தது. சில ஆண்டுகளுக்குப் பிறகு, இதேபோலவே வேறொரு போரில் கிடைத்த கடப்பைப் பகுதியில் பணியாற்ற அனுப்பிவைக்கப் பட்டார். விருப்பத்துக்கு மாறாக அனுப்பிவைக்கப் படுவதை ஒட்டி மனவருத்தம் இருந்தாலும், பணி யாற்றும் பகுதியில் வசிக்கக்கூடிய மக்கள்மீது அவர் கொண்ட நேசம் எப்போதும் குறைந்ததில்லை.
பணத்தேவையை ஒட்டித்தான் மன்றோ பதினேழுவயதில் இந்தியாவுக்கு வந்தார். அப் பணப்பற்றாக்குறையை - இறுதி வரையில் அவரால் தீர்க்கவே முடியவில்லை. ஒரு சமயத்தில் மூன்று சகோதரர்களும் இந்தியாவில் வேலை பார்த்து, தந்தைக்குப் பணம் அனுப்பினார்கள். பிள்ளைகள் அனுப்பும் சிறிய தொகையை வைத்துக்கொண்டு தான் மன்றோவின் குடும்பம் வாழ்க்கையை நடத்த வேண்டியிருந்தது. பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மன்றோ உதவி கலெக்டரானார். அப்போதும் அவரால் அதிக தொகையை அனுப்பிவைக்க இயலாத நிலையிலேயே இருந்தார். குடும்பச் செலவுக்காக அவரது குடும்பம் தம் கோடைக்கால வீட்டை விற்கவேண்டி வந்தது. கலெக்டரான பிறகுதான் ஓரளவு கூடுதலான தொகையை அவரால் அனுப்பமுடிந்தது. குடும்பத்தின் பொருளாதார நிலைமை சீரானது. பின்னர் ஒரு வீடு வாங்கும் அளவுக்குப் பணம் அனுப்பினார் மன்றோ.
துர திருஷ்டவசமாக, அந்தப் புதிய வீட்டில் வாழ்ந்து பார்க்க அவருடைய தாயார் உயிரோடு இல்லை. தந்தையோ வயது முதிர்ந்தவராக ஆகிவிட்டார். அவருடன் பணியாற்றிய பல ஆங்கிலேய அதிகாரிகள் கையூட்டுகளில் கைதேர்ந்தவர்களாக வாழ்ந்து செல்வத்தை மலைபோலக் குவித்தனர். ஆனால் அப்படிப்பட்ட வழிமுறைகளில் சிறிதும் நாட்ட மற்றவராக இருந்த மன்றோ ஒருமுறை தன் கடிதத்தில் “நாட்டின் வளத்தைக் கொள்ளையடிக்க பச்சைக் கொடி காட்டும் கலெக்டர் எவ்வாறு நாட்டைச் செழிப்பாக வைத்துக் கொள்ளமுடியும்?” என்று குறிப்பிட்டார்.
பதினேழு வயதில் இந்தியாவுக்கு வந்த மன்றோ, இருபத்தெட்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான் லண் டனுக்குத் திரும்பிச் சென்றார். அவர் தாய் அப் போது இறந்திருந்தார். மகனுடைய வளர்ச்சி யையும் அடைந்த பெருமைகளையும் ஆர்வமாகக் கவனித்துவந்த தந்தையோ மூப்பின் காரணமாக மகன் பெற்றிருக்கும் அந்தஸ்தையும் செல்வத்தையும் கண்டு மகிழ்ச்சியோடு பிறரோடு பேசிப் பகிர்ந்து பெருமைப்பட்டுக்கொள்ளும் துடிப்பில் இல்லை. மனத்தளவிலும் உடலளவிலும் மிகுந்த தளர்ச்சி யடைந்திருந்தார். மன்றோவின் தம்பிகளும் பல நண்பர்களும் இறந்துபோயிருந்தார்கள். ஐம்பது வயதை நெருங்கும்போதுதான் அவர் திருமணம் புரிந்துகொண்டார். பிறகு, தனக்குப் பிடித்தமான ரசாயனப் பாடத்தைப் படிப்பதில் காலம் கழித்தார்.
அச்சமயத்தில் கிழக்கிந்தியக் கம்பெனியின் பட்டயக் காலத்தை மேலும் நீட்டிப்பது தொடர்பாக இங்கிலாந்து அரசு பல்வேறு தரப்புகளிடமிருந்து ஆலோசனைகளைக் கேட்டது. மன்றோவும் தம் ஆலோசனைகளை விரிவாக முன்வைத்தார். அவற்றை ஏற்றுக்கொண்ட அரசாங்கம் வங்காளம் மற்றும் தென்னிந்தியாவில் நீதிமன்ற நிர்வாக முறைகளை ஆய்வு செய்து அறிக்கை தருவதற்காக ஒரு தனி ஆணையத்தை அமைத்து, அதன் தலைமைப் பொறுப்பை மன்றோவுக்குக் கொடுத்து மீண்டும் இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது.
அப்போது அவருக்கு வயது 53. முதலில் எல்லாப் பகுதி களிலும் பயணங்களை மேற்கொண்ட மன்றோ ஒவ்வொரு இடத்திலும் நிலவும் நீதி நிர்வாக முறை களைக் கண்டறிந்தார். எல்லாக் குறிப்புகளையும் தொகுத்துக்கொண்ட பிறகு, தன் அனுபவத்தின் அடிப்படையில் ஆலோசனைகளை அரசிடம் வழங்கினார். அவற்றில் சில ஏற்கப்பட்டன. சில ஏற்கப்படவில்லை. தான் ஏற்றுக்கொண்ட பணியைச் செவ்வனே முடித்த திருப்தியில் லண்டனுக்குத் திரும்பினார். இந்தியர்களுக்கு அரசு வேலைகளை வழங்கவேண்டும் என்று வெளிப்படையாகவே பேசினார் மன்றோ. ஒன்றரைக்கோடி மக்களைக் கொண்ட இந்தியாவில் மக்களுக்குத் தண்டனை வழங்கக்கூடிய பதவிகள் இந்தியருக்கும் தரப்பட வேண்டும் என்று வாதாடினார். அதில் அவரால் போதிய வெற்றி பெற முடியவில்லை என்றாலும் தம் கருத்தில் உறுதியாக இருந்தார் மன்றோ.
லண்டனில் சில மாதங்களும் ஸ்காட்லாந்தில் சில காலமும் எனத் தங்கி ஓய்வெடுத்துக்கொண் டிருந்தார். ஸ்காட்லாந்தில் இருந்த போது உடனடி யாக லண்டனுக்கு வரும்படி அவருக்குத் தகவல் தரப்பட்டது. அடுத்த சில வாரங்களில் அவருக்குச் சென்னை கவர்னராக பதவி உயர்வு அளிக்கப்பட்டது. எந்தக் கோட்டையில் பதினைந்து ரூபாய் சம்பளத்துக்கு சாதாரண சிப்பாயாகச் சேர்ந் தாரோ, அதே ராஜதானியின் உச்ச அதிகாரப் பதவி யான கவர்னர் பதவி அவருக்குக் கிடைத்தது.
ஏறத்தாழ நாற்பதாண்டு காலக் கடுமையான உழைப்புக்குக் கிடைத்த பரிசு இது. அவர் காலத்தில் மூடப் பட்டிருந்த திண்ணைப் பள்ளிக்கூடங்களைத் திரும்பவும் திறப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத் தலைநகரத்திலும் இந்துக் களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இரண்டு பள்ளிக் கூடங்கள் திறக்கப்பட்டன. அப்பள்ளிகளில் ஆங்கிலம் ஒரு பாடமாகக் கற்பிக்கப்பட்டது. தாலுகா தலை நகரங்களில் ஒரு பள்ளிக்கூடம் திறக்கப்பட்டது. அப்பள்ளிகளில் உள்ளூர் மொழிதான் பயிற்சி மொழி. ஆசிரியர்களுக்காகப் பயிற்சி தருவதற்குத் தனி அமைப்பு உருவாக்கப்பட்டது.
மிகச்சிறந்த நிர்வாகியான தாமஸ் மன்றோவுக்கு தனிப்பட்ட முறையில் சில பிரச்சனைகள் தோன்றியது. 1826ஆம் ஆண்டில் எதிர்பாராத விதமாக அவரது மனைவி, உடல்நிலை பாதிக்கப் பட்டது. அவருடைய இரண்டாவது மகனுக்கும் உடல்நலம் குன்றியது. அவர்கள் இருவரையும் இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்லும்படி மருத்து வர்கள் அறிவுறுத்தினார்கள். அதே ஆண்டின் இறுதியில் வேறு வழி தெரியாததால், மகனையும் மனைவியையும் ஊருக்கு அனுப்பிவைத்தார் மன்றோ ஏற்கனவே தன்னைப் பதவியிலிருந்து விடுவிக்கும்படி அரசாங்கத்துக்கு எழுதியிருந்தார். ஆனால் அவர்களிடமிருந்து தகுந்த விடை வராத தால், அவர் இந்தியாவிலேயே தங்கியிருக்கும்படி நேர்ந்தது.
சோர்வு அண்டாமலிருக்கும்பொருட்டு, அவர் ஒரு நீண்ட பயணத்தைத் திட்டமிட்டார். பல்லாவரம், மதுராந்தகம், தஞ்சாவூர், திருச்சிராப் பள்ளி, மதுரை, பாளையங்கோட்டை, திண்டுக்கல், கோயம்புத்தூர், நீலகிரி, மைசூர், கொள்ளேகால், சிவசமுத்திரம் எனப் பல இடங்களைத் தொடர்ச்சி யாகப் பார்வையிட்டபடி வந்தார்.
தனது பதவி விலகல் கடிதம் ஏற்கப்பட்டு, புதிய கவர்னர் வருவதில் தாமதம் ஏற்பட்டதை அறிந்த மன்றோ, அதற்கு முன்பாகத் தனக்குப் பிடித்தமான கடப்பை மாவட்டப் பகுதிகளுக்குச் சென்றுவர விரும்பினார். அச்சமயத்தில் அங்கே கடுமையான காலரா நோய் பரவியிருப்பதாகவும், அங்கே செல்ல வேண்டாம் என்றும் அவருக்கு ஆலோசனை தரப்பட்டது. ஆனால் அதை ஏற்க வில்லை மன்றோ. அப்படிப்பட்ட தருணத்தில் நிர்வாகம் அங்கே எப்படிச் செயல்படுகிறது என் பதைக் கண்டறிவது தன்னுடைய கடமை என்று சொன்னபடி பிரயாணத்தைத் தொடங்கிவிட்டார். மெய்க்காப் பாளர்கள், அதிகாரிகள், கலெக்டர், உதவி கலெக்டர்கள், தாசில்தார்கள் எனப் பலரும் அவரோடு பயணம் செய்தார்கள். பட்டிகொண்டா என்னும் கிராமத்தில் தங்கி, கிராமத்து மக்களைச் சந்தித்துப் பேசினார்.
துரதிருஷ்டவசமாக அப் போது மன்றோவை காலரா நோய் தாக்கியது. அன்று இரவு அவர் உயிர் பிரிந்தது. தாமஸ் மன் றோவின் உடல், இறந்த ஒன்றரை மணிநேரம் கழித்து, குத்தி என்னும் இடத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. மலையடி வாரத்தில் கோட்டைக்குக் கீழே அமைந்திருந்த கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. புனித ஜார்ஜ் கோட்டைக்குச் செய்தி கிடைத்ததும், கோட்டையில் இருந்த கொடி உடனடியாக அரைக் கம்பத்தில் ஏற்றப்பட்டு சூரிய அஸ்தமனம் வரைக்கும் பறந்தது. இறந்துபோன மன்றோவின் வயதைக் குறிப்பிடும் வகையில் கோட்டையின் கொத்தளத்தி லிருந்து 65 முறைகள் பீரங்கிகள் முழங்கின. மன்றோவின் நண்பர்களும் உடன் பணிசெய்த அதிகாரிகளும் சேர்ந்து பணம் திரட்டி வெண் கலத்தாலான மன்றோ சிலையை உருவாக்கி நிறுவினர்.
எங்கிருந்தோ வந்தான்
இடைச்சாதி நான் என்றான்
இங்கு இவனை யான் பெறவே
என்ன தவம் செய்து விட்டேன்!!
என்று அந்த வெள்ளையர்களை எதிர்த்த பாரதி வரிகள் தான் எனக்கு நினைவுக்கு வருகிறது!
மன்றோ புத்தகம் வாசிப்பதிலும் கடிதங்கள் எழுதுவதிலும் தன் ஓய்வுப் பொழுதுகளைக் கழிப்பவராக இருந்தார். இந்தியாவில் தான் காண நேர்ந்த ஒவ்வொரு சம்பவத்தைப்பற்றியும் - அது அரசு சார்ந்த விஷயமாக இருந்தாலும் சரி, பொது வான விஷயமாக இருந்தாலும் சரி - தன் தந்தை யாருக்கு அதைப்பற்றி விரிவாகத் தெரிவித்து, அதையொட்டித் தன் நிலைப்பாடு என்ன என் பதையும் தெரிவித்துக் கடிதம் எழுதும் பழக்கம் மன்றோவிடம் இறுதி வரை இருந்தது.
தன் சகோதரிகளுக்கும், சகோதரர்களுக்கும் நண்பர் களுக்கும் மனைவிக்கும் இடைவிடாமல் அவர் பல கடிதங்களை எழுதியபடி இருந்தார். கடிதங்களில் அரசியல் விஷயங்களைமட்டுமல்ல, இங்குள்ள இயற்கைக் காட்சிகளைச் சுவைத்த அனுபவங்களையும் மிக அழகான குறிப்புகளாகக் கடிதங்களில் விவரித்துள்ளார். மக்கள்மீதான அன்பும் நேர்மையும் மன்றோவின் தனிப்பட்ட சிறப்பம்சங்கள். ஒரு திறந்த புத்தகமாக அதற்கு அவருடைய வாழ்வே சாட்சியாக விளங்குகிறது.
யோசித்துப் பாருங்கள். கார்ன்வாலிஸ் தலைமையில் மைசூர் போர், Anglo Mysore war, பர்மா போர் என்று எல்லா போர்களிலும் கலந்து கொண்ட வெற்றிவாகை சூடிய ஒரு வீரர், வெறும் போர் வீரனாக மற்றும் தன் வாழ்க்கையை முடித்துக் கொள்ளவில்லை.
போர் வீரனாக வாழ்க்கை ஆரம்பித்த தாமஸ் மன்றோ, தான் குடியேறிய நாட்டின் மீது ஒரு பெரிய ஈடுபாடு வளர்த்துக் கொண்டு, அங்கிருக்கும் மக்களுக்காக அந்த நாட்டின் விவசாயம் வளம் பெற வேண்டும் என்று பாடுபடும் ஒரு தலை சிறந்த நிர்வாகியாக மாறியுள்ளார்! தாமஸ் மன்றோ போல் ஒரு கவர்னர் ஜெனரல் கிடைத்ததால் தான், ஆங்கிலேய அரசு இந்தியாவை அவ்வளவு நாட்கள் பிரச்சனை இல்லாமல் ஆள முடிந்தது என்று சொல்லுவேன்.
இந்தியர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையே உண்மையான பாலமாக ஒரு மனிதன் விளங்க முடியும் என்றால், அது தாமஸ் மன்றோ.
இந்தியாவின் தலைநகரம், டெல்லிக்கு தமிழ்நாட்டின் பிரச்சனை புரியாது என்று சொல்லுவார்கள் இங்குள்ள தலைவர்கள். என்ன காரணம் என்று கேட்டு பாருங்கள்! மொழி காரணம். தமிழ் தெரியாத ஒருவருக்கு தமிழ்நாட்டின் பிரச்சினை புரியாது என்று சொல்லுவார்கள். ஆனால் டெல்லி இல்லை லண்டனுக்கே தமிழ்நாட்டின் பிரச்சனைகளை எடுத்துச் சென்ற தாமஸ் மன்றோ, தமிழ்நாட்டில் முதலில் கல்வி ஆரம்பித்த போது, தமிழில் தான் கல்வியை ஆரம்பித்தார். ஆங்கிலம் ஒரு பாடமாக வைத்தார் அவ்வளவுதான். ஆனால் தமிழ் தமிழ் என்று கூறிக்கொண்டு இப்பொழுது உள்ளவர்கள், ஆங்கிலத்தில் கல்வி நடத்துகிறார்கள். தமிழை ஒரு பாடமாக கூட கற்றுத் தருவதில்லை! தமிழ்நாட்டில் தமிழ் கல்வி வருவதற்கு மீண்டும் ஒரு தாமஸ் மன்றோ வர வேண்டுமா? கொடுமை!
அவர் அதோடு மட்டும் நிற்காமல், இந்திய கலாச்சாரத்தை மதித்து இந்து மதத்தின் மீது ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு திருப்பதி வெங்கடாஜலபதி மீது பக்தி கொள்ளும் அளவுக்கு அவர் இந்து மத ஈடுபாடு இருந்தது. திருப்பதியில் இன்று வரை "மன்றோ பொங்கல் ", என்று உணவு வழங்குவதற்கு, சித்தூர் மாவட்டத்தில் தன் கட்டுப்பாட்டில் ( ஆங்கிலேய அரசு ) உள்ள ஒரு கிராமத்தையே திருப்பதி கோவிலுக்கு எழுதி வைத்தார்!
தனது அனுபவங்களை எழுத்தால் வடிக்கும் ஒரு அற்புதமான எழுத்தாளராகவும் வாழ்ந்துள்ளார் தாமஸ் மன்றோ. மிக முக்கியமாக இன்று நாம் ஆவலுடன் எதிர்ப்பார்க்கும், " நேர்மையான ஆட்சி" ஒன்றை தமிழ்நாட்டில் என்றைக்கோ தோற்றுவித்து விட்டார். சில காலம் கழித்து காமராஜர் அதைத் தொடர்ந்தார். பிறகு அந்தத் தொடர்பு நின்று போனது. மீண்டும் தமிழ்நாட்டில் நேர்மையான ஆட்சி அமைய, தாமஸ் மன்றோ அவர்கள் ஆன்மா நமக்கெல்லாம் அருள் புரிய வேண்டும்!