நம்மை சூழ்ந்துள்ள, மீண்டும் மீண்டும் தலையெடுத்து, நம் அரைகுறை வெற்றிகளையும் அரித்து வருகிற ஆதிக்க சக்திகளைப் பல முனைகளில் நாம் எதிர்த்துப் பணியாற்ற வேண்டியுள்ளது. இத்தலைமுறையில் அது ஓரளவு நடந்து வருகிறது என்பது நமக்கு ஊக்கமளிக்கிறது.
திராவிட இயக்கத்தால் படிப்பும் வாழ்வும் பெற்ற அனைவரும் சோடைகளாகவோ சோரம்போனவர்களாகவோ ஆகி விடவில்லை.
ஐ ஏ எஸ் அதிகாரி ஓடிசா பாலகிருஷ்ணன் போன்றோர் வெளிப்படையாகவே நாம் பண்பாட்டு அரசியலிலும் போராட வேண்டும் என்று அறைகூவிச் சிறப்பாகப் பணியாற்றி வருகிறார்.
பெரியாரின் புரட்சி என்பது அடிப்படையில் பண்பாட்டுப் புரட்சி. அதைச் சரியாகச் செய்தால் அரசியல் தானாகச் சரிப்படும்.
தமிழ்நாட்டு மக்களிடம் எதைப் பேசினால் வாக்குகள் பெற முடியும் என்ற அடிப்படையில் தான் இன்று எல்லோரும் இயங்க வேண்டிய நெருக்கடியை உருவாக்கியதுதான் திராவிடம் என்ற பண்பாட்டுப் புரட்சி.
அதில் சில கூறுகள் சென்ற தலைமுறையில் சரியாகக் கவனிக்கப் படவில்லை. அதை ஆதிக்க சக்திகள் தங்களுடையதாக ஆக்கிரமித்துக் கொண்டன. அதில் பக்தி, மெய்யுணர்வு என்பன முக்கியமானவை என்பது கருத்து. அவற்றை நாம் மீட்டெடுத்துப் பணியாற்ற வேண்டிய அவசியமும் அவசரமும் உள்ளன. மூடநம்பிக்கை அற்ற பக்தியும், மதச்சார்பற்ற மெய்யுணர்வும் (secular spiritualism) நமக்குச் சொத்தாக ஏற்கனவே நம் பழந்தமிழ் இலக்கியங்களில் உள்ளன.
பக்தி எல்லோருக்கும் தேவைப்படாது. ஆனால் மெய்யுணர்வின் அடிப்படைகள் ஏதோ ஒருவகையில் எல்லோருக்கும் தேவை. அதை நாம் மெய்யுணர்வு என்று அறியாமல், அழைக்காமல் இருக்கலாம். அதைத் தத்துவம் என்ற அளவில் புரிந்து கொண்டால் கூடப் போதும். உலகப்பார்வை (world view) என்றும் கொள்ளலாம். குடும்பம், உறவு மற்றும் நட்புச் சுற்றம், குழு, இயக்கம், சமுதாயம் என எல்லா முனைகளிலும் தொய்வில்லாமல் தன்முனைப்பில்லாமல் பணி செய்ய இது அவசியம் ஆகும். அது மட்டுமல்லாது இன்று உலகை, மனித இனத்தை நோக்கியுள்ள சவால்களுக்குத் தேவையான சிந்தனைத் திருத்தத்திற்கும் அடிப்படையாக அமையும்.