இதுதான் நம்ம தமிழ்நாடு.. கிருஷ்ணகிரி கோயிலில் யார் பாருங்க? பூரித்த ஓசூர்.. வளரும் தொப்புள்கொடி உறவு
By Hemavandhana Updated: Monday, February 19, 2024, 18:52 [IST] சென்னை:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே நடைபெற்றுள்ள சம்பவம் காண்போரை நெகிழ செய்து வருகிறது. அப்படி என்ன நடந்தது?
தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலும், குறிப்பாக, திருப்புவனம், முதுவந்திடல், தஞ்சாவூர் காசவளநாடு புதூர், உட்பட பல்வேறு இடங்களில் மொகரம் பண்டியை இந்துக்கள் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம். ரம்ஜான், மொகரம், தீபாவளி போன்ற இரு மதங்களின் பண்டிகைகளையும், முஸ்லிம்களும், இந்துக்களும் ஒன்றாக சேர்ந்தே இங்கெல்லாம் கொண்டாடியும் சிறப்பித்தும் வருகிறார்கள்.
சுபகாரியங்கள்: அதுமட்டுமல்ல, வீடுகளில் நடக்கும் சுபகாரியங்கள் முதல், தொழில் துவங்குவது, அறுவடை வரை, பள்ளிவாசலில் வந்து அனுமதி கேட்டபிறகுதான் இந்துக்கள் அவைகளை துவங்கும் நடைமுறையும் இருந்து வருகிறது. இப்படியான மதநல்லிணக்க உணர்வுகள் தமிழக மக்களிடம் காலம் காலமாகவே இழைந்து காணப்படுகிறது.
இது எல்லாவற்றையும் முக்கியமாக, மழை,வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களின்போது, சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டு, ஒருவருக்கொருவர் கைதூக்கி விடுவதும், அரவணைத்து கொள்வதும், ஒட்டுமொத்த தமிழகத்தையும் நெகிழ வைத்துவிடும்.. சிலிர்க்க வைத்தது!!
திறப்பு விழா: சமீபத்தில்கூட, இளையான்குடி அருகே உள்ள சாலைக்கிராமத்தில் மஸ்ஜிதே இலாஹி பள்ளிவாசல் திறப்பு விழா நடந்தது. அப்போது, இந்துக்கள் தாம்பூலத்தில் நெல்மணிகள், மிளகாய், வெற்றிலைப் பாக்கு போன்றவற்றை சீர்வரிசையாக பள்ளிவாசலுக்கு எடுத்து வந்து தந்தனர்.
அதேபோல கிறிஸ்தவர்களும், மெழுகுவர்த்தி, பழங்களை சீர்வரிசையாக கொண்டு வந்து தந்தனர். மதநல்லிணக்கத்தை போற்றும் வகையில் இரு தரப்பு மக்களும், பள்ளிவாசல் திறப்பு விழாவுக்கு வந்து அசத்திவிட்டார்கள், இதோ இப்போதும் ஒரு அருமையான நிகழ்வு நடந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பாகலூரில் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு இஸ்லாமியர்கள் சீர்வரிசை வழங்கியிருக்கிறார்கள்.. இந்த பழமையான கோயிலை சுமார் 7 கோடி ரூபாய் செலவில் புரணமைக்கும் பணிகள் நடந்து முடிந்து, மகா கும்பாபிஷேக விழாவும் நடைபெற்று வருகிறது.
கும்பாபிஷேகம்: இந்த கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாகலூர் பகுதியில் வாழும் இஸ்லாமியர்கள் ஒன்றிணைந்து தாய் வீட்டு சீதனமாக சீர்வரிசை பொருள்களை ஊர்வலமாக எடுத்து வந்தனர். இதில், 1 லட்சம் ரூபாய் பணம், பட்டுச்சேலை, பழங்கள், இனிப்புகள், மலர் மாலைகள் உள்ளிட்ட பொருள்களை தாம்பூல தட்டில் கொண்டு வந்த இஸ்லாமியர்கள், அவைகளை அம்மன் கோயில் நிர்வாகத்தினரிடம் வழங்கினார்கள். பிறகு, இஸ்லாமியர்களும், இந்துக்களும் ஒருவருக்கொருவர் இனிப்புகளை ஊட்டி மகிழ்ந்தனர்.
பாகலூர் பகுதியில் இஸ்லாமியர்களும் இந்துக்களும் ஒற்றுமையாக இருப்பதை போல நாட்டில் உள்ள அனைவரும் சகோதரத்துடன் தொப்புள் கொடி உறவாய் வாழ வேண்டும் என்று 2 தரப்பினருமே கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
இதுபோன்ற சம்பவங்கள்தான் மனித பிறப்பின் அருமையையும், அதன் உன்னதத்தையும், நமக்கு உணர்த்தி கொண்டேயிருக்கின்றன. அன்பு: எவ்வளவுதான் இடர்பாடுகளையும், இன, மத ரீதியான பிளவுகளையும், சிலர் கட்டவிழ்த்து விட்டாலும், மனிதாபிமானமும், ஈரம் கசியும் உள்ளமும் இங்குள்ளவரை, சகிப்புத்தன்மையையும், மத நல்லிணக்கத்தையும், நம்மிடமிருந்து யாராலும் ஒருபோதும் பிரித்து விட முடியாது என்பதைதான் இந்த "சகோதர உறவுகள்" நாட்டுக்கு பறைசாற்றி கொண்டிருக்கின்றன... தொடர்ந்து தழைத்தோங்கட்டும் மனித நேயம்..!!! அன்புக்கும் உண்டோ அடைக்குந்தாழ்..!!!