பரிபாடல் என்னும் நூல் சங்க இலக்கியம் தொகுப்பில் எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது. இது ஒரு பண்ணிசை இலக்கியம். ‘பரிபாட்டு’ என்னும் பெயராலும் இது வழங்கப்பட்டிருக்கிறது.
தொன்று தொட்டு நிகழும் இயற்கை நிகழ்வு என்னவெனில், புதிய உலகம் படைக்கப்படுவதும் பின்னர் அந்த உலகம் மிச்சம் மீதியில்லாமல் அழிக்கப்படுவதுமே ஆகும். அந்த தொன்மை மரபின்படி, பசும்பொன் நிறத்திலிருந்த வான் உலகமும், மண் உலகமும் ஊழிக் காலத்தில் அழிந்து போயின. வெளியாகிய விசும்பும் கூட இல்லாமல் போயிற்று. அதாவது, ஏற்கனவே இருந்த உலகம் பின்னர் அழிந்தது.வெளியும் ஒடுங்கிய அந்த ஊழியில் மீண்டும் ஓர் கரு தோன்றியது. அந்தக் கருவின் உருவம் இன்னதென்று அறிய இயலாதது. உருவமே அறிய இயலாத கரு வளரத் துவங்கியதே, அதுவே முதல் ஊழி! அதாவது அழிவில் தோன்றிய முதல் பிறப்பு!
பின்னர், உந்தி வீசும் காற்று பிறந்தது. உருவற்ற கரு வளர்ந்த வெளியை, அசைத்தது காற்று. உருவற்ற நிலை அழிந்து, உரு பிறந்தது. இது இரண்டாம் ஊழி.வளர்ந்த கருவோடு காற்று வீச, காற்றின் இயல்புக்கு மாறான, தீ எரியத் துவங்கியது. இத் தீ, மூன்றாம் ஊழி! அதன் பின்னர், தீயின் இயல்புக்கு மாறான, நீர் தோன்றி மழை பெய்தது. தீயை அணைத்தது. இது நான்காம் ஊழி!
நீரின் இயல்பான மென்மைக்கும் தண்மைக்கும் மாறான நிலம் தோன்றியது. இது ஐந்தாம் ஊழி!’’
பரிபாடலின் இரண்டாம் பாடல் இப்படி விவரிக்கிறது. வெளி, காற்று, தீ, நீர், நிலம் ஆகிய ஐம்பூதங்களின் தோற்றம் குறித்து இப்பாடல் பாடுகிறது. சுருங்கச் சொல்ல வேண்டுமானால், உலகம் எப்படித் தோன்றியது என விளக்குகிறது இப்பாடல். இந்தப் பாடலில் ஊழி என்ற சொல், ’ஏற்கனவே நிலவும் பொருளின் அழிவையும், அப் பொருளுக்கு நேர் முரணான தன்மை கொண்ட புதிய பொருளின் பிறப்பையும்’ குறிக்கிறது.
உலகைப் படைத்தது யார்? என்ற கேள்வியே இன்றைய பெருமதங்களின் ஆதாரமாக விளங்குவதைக் காண்கிறோம். ‘கர்த்தர்’ என்கிறது கிறித்துவம். ‘இறைவன் அல்லது அல்லா’ என்கிறது இஸ்லாம். இவ்விரண்டு மதங்களின் புனித நூல்களின்படி, உலகம் ‘படைக்கப்பட்டது’ என்பதே கேள்விகளுக்கு அப்பாற்பட்ட முடிவு.
ஆனால், உலகம் படைக்கப்பட்டதல்ல, அது எப்போதும் ‘இருந்துவருவது’ என்ற கொள்கையைப் பரிபாடல் முன்வைக்கிறது. இயற்கை என்பது எப்போதும் ‘இருப்பது’. அதற்கு முன் இல்லை பின் இல்லை, நாம் நிகழ்காலத்தில் வாழ்கிறோம், அவ்வளவே என்ற கருத்தை பரிபாடல் வலியுறுத்துகிறது.
உலகிற்குத் தோற்றமும் இல்லை, முடிவும் இல்லை’ என்ற கருத்து, ஒரு மாபெரும் அறிவியல் கண்டுபிடிப்பாக 18 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் ஐரோப்பிய தத்துவவாதிகளால் முன் வைக்கப்பட்டது. மார்க்சியம் இக்கருத்தைத் தெள்ளத் தெளிவாக வரையறுத்தது. தனது ‘கடவுள் மறுப்புக் கோட்பாட்டுக்கு’ சாரமான கருத்தாக மார்க்சியம் இதையே முன் வைத்தது.
20ஆம் நூற்றாண்டின் மாபெரும் இயற்பியல் கண்டுபிடிப்பாகக் கருதப்படும் பெருவெடிப்புக் கோட்பாடு (Big Bang theory) புவித் தோற்றம் மற்றும் பிரபஞ்ச ஆக்கம் குறித்துக் கூறும் முடிவுகள் பரிபாடலின் மேற்கண்ட பாடல் வரிகளுடன் பொருந்துவதைக் கண்டு என்னால் வியக்காமல் இருக்க முடியவில்லை.
பெருவெடிப்புக் கோட்பாடு என்பது, பரந்த அறிவியல் தளத்தைக் கொண்டது. மேலே குறிப்பிடப்பட்டவை, அக் கோட்பாட்டின் சுருக்கமும், இக்கட்டுரையின் எல்லைக்குப் பொருந்தும் புள்ளிகளும் மட்டுமே.புவித் தோற்றம் மற்றும் ஊழிகள் குறித்து பரிபாடல் முன் வைக்கும் செய்திகளில்;
1. வெளியில் (space) தீ தோற்றம்
2. பின்னர் மழை
3. பின்னர் நிலம்
என்ற படிநிலையைத்தான் பெருவெடிப்புக் கோட்பாடு முன்வைக்கிறது.
ஆனால், ஏறத்தாழ 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இலக்கிய வடிவமான பரிபாடல், உலகின் தோற்றம் குறித்த தெளிவான முடிவுகளை முன்வைத்தது என்ற உண்மை இன்றுவரை தமிழர்களாலேயே அங்கீகரிக்கப்படவில்லை.’ஒன்றுமற்ற வெளியில் ஒரு கரு தோன்றியது’ என்று போகிற போக்கில் எவராலும் எழுதிவிட முடியாது. வெளி (space) என்பதே ஐம்பூதங்களில் முதலில் இருந்தது என்ற அறிவியல் தெளிவு இருந்தால்தான், அந்த வெளியில் இருந்து ’உருவற்ற கரு’ தோன்றியது என்ற முடிவுக்கு வர இயலும். இரண்டாம் பூதமான காற்று பேரசைவுடன் வீசியதால் வெளியில் மிதந்த கருக்கள் மோதி தீ பிடித்தது. தீ எழுப்பிய வெம்மையின் விளைவால், மேகம் உருவாகி மழை பிறந்தது. மழை குளிர்வித்த கருத் திரட்சிப் பகுதிகள் நிலமாக மாறின என்ற வரிசையைப் பரிபாடல் முன் வைக்கிறது. நிலம் தோன்றிய பின்னர் இருக்கும் உலகை, மேற்கண்ட பாடல், ‘இரு நிலத்து ஊழி’ என்கிறது. பூமியில் நிலமும் கடலும் இருப்பதை இவ்வரி குறிக்கிறது. கடலும் நிலமே, அது இரண்டாம் நிலம் என்பது பொருள். பூமி என்பதே நிலம்தான். ஆனாலும் அது ஒரு நிலம் அல்ல; இரு நிலம் ஆகும். ஏனெனில், கடல் நீருக்குள் இருக்கும் நிலம் தனி வகைப்பட்டது என்ற துல்லியம் ‘இரு நிலத்து ஊழி’ எனும் சொல்லால் குறிக்கப்பட்டது.
’’ஆதியில், பூமி முழுதும் வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்தது. மிக நீண்ட நெடிய காலம் இவ்வாறே வெள்ளத்திற்குள் நிலம் மூழ்கி இருந்தது. இவ்வாறான மிக நீண்ட காலம் எவ்வளவு நீளமானது என்றால், நெய்தல், குவளை, ஆம்பல், சங்கம், கமலம் ஆகிய பேரெண்களால் குறிக்கத்தக்க காலம் ஆகும்” –காலத்தைக் குறிக்க, மணி, நாழிகை, நொடி, திங்கள், கிழமை, ஆண்டு உள்ளிட்ட சொற்களைப் பயன்படுத்துகிறோம். இவற்றில் ’ஆண்டு’ என்பதே நமக்கு ’பெரிய கணக்கு அல்லது பெரிய எண் (பேரெண்)’ ஆகிறது.
பூமி எவ்வளவு காலம் வெள்ளத்தினுள் மூழ்கிக் கிடந்தது என்பதை, ‘நெய்தல், குவளை, ஆம்பல், சங்கம், கமலம்’ ஆகிய மலர்களின் பெயரால் வழங்கப்பட்ட பேரெண்களால் குறிக்கிறது பரிபாடல். ஒவ்வொரு மலரும் ஒரு பெரும் கால எல்லையைக் குறிக்கிறது. அதாவது, நெய்தல் என்னும் மலரின் பெயர், இங்கு மலரைக் குறிக்கவில்லை; மாறாக, சில கோடி ஆண்டுகளைக் குறிக்கிறது. பூமியில் உயிர்கள் தோன்றுவதற்கு முன்பிருந்த காலத்தையும், உயிர்கள் தோன்றிய காலத்தையும் மலர்களின் பெயர்களால் வழங்கப்பட்ட ‘பேரெண்கள்’ குறிப்பிடுகின்றன. ஒவ்வொரு மலருக்கும் ஒவ்வொரு கால நீட்சி கணக்கு உண்டு. அக் கணக்கு என்ன என ஆய்வு செய்யப்பட வேண்டும்.
இன்றைய அறிவியல் வழி ஆய்வுகள் பூமித் தோற்றம், உயிர்களின் தோற்றம் குறித்து வெளியிட்டுள்ள கால நீட்சிக் கணக்குகளைக் காண்போம். பூமி உருவானது – 455 கோடி ஆண்டுகளுக்கு முன்.கடின உடலிகள் தோன்றுவதற்கு முந்தைய காலம் (Pre – Cambrian period) – 55 கோடி ஆண்டுகளுக்கு முன் – இக்காலமே, முதல் மெல்லுடலிகள் தோன்றிய காலம். இவ்வுயிரிகள் ஒரு செல் முதல் பல செல் வரையிலானவை. முதலில் ஒரு செல் உயிரிகள் தோன்றின. பின்னர் பல செல் உயிரிகள் பரிணாம வளர்ச்சியில் தோன்றின. இவ்வுயிரிகள் மென்மையான உடலிகள். இவற்றால் உற்று உணர மட்டுமே இயலும். பின்னர் தோன்றிய உயிரிகளே, சுவை அறியும் நாவு, முகரும் நாசி, பார்த்து உணரும் விழிகள், கேட்டறியும் செவிகள் ஆகிய பிற ஐந்தறிவுடன் தோன்றின. இவ்வாறாக இன்று காணப்படும் உயிரிகள் வரை தோன்றிய கால நீட்சி, 18 லட்சம் ஆண்டுகள் வரை நீள்கிறது. பரிபாடல் வரையறுக்கும் நெய்தல், குவளை, ஆம்பல், சங்கம், கமலம் ஆகிய கால பேரெண்கள், மேலே உள்ள 55 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தைக் குறிப்பவை ஆகும். இவ்வெண்கள், பூமி எவ்வளவு காலம் நீரினுள் மூழ்கி இருந்தது என்பதைக் குறிக்கின்றன.
இந்த அடிப்படையில் புவித் தோற்றத்தைக் கணக்கிடுவதற்கு மாபெரும் அறிவும் ஆற்றலும் தேவை என்பதை மறுக்க இயலாது.
தொல்காப்பியர் உயிர்த் தோற்றம் குறித்து,
ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அதனொடு நாவே
மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே
நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே
ஆறறி வதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே’
(மரபியல் 27) என்று பரிணாம வளர்ச்சிக் கொள்கையைப் பதிவு செய்துள்ளார்.
Pre Cambrian காலம் என இன்றைய அறிவியல் வழங்கும் 55 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய நிலையில்தான் ’உற்றறியும்’ மெல்லுடலிகள் தோன்றின என மேலே கண்டோம். தொல்காப்பியர் வரையறுக்கும் பரிணாமக் கொள்கை, 55 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய நிலையைத் துல்லியமாக விளக்குகிறது. இவ்வாறான, கோடிக் கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய காலம் குறித்த ஆய்வு முடிவுகள் தொல்காப்பியம் எழுதப்பட்ட காலத்தில் உலகின் எந்த நாகரிகச் சமூகத்திலும் எழுதப்படவில்லை. தமிழ் மொழியில், பிரபஞ்சத் தோற்றம் முதல் மனிதத் தோற்றம் வரையிலான அறிவியல் கண்டு பிடிப்புகள் 3000 ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்டுவிட்டன. ஆனாலும், இந்த தொல் அறிவு குறித்த பதிவுகள் முறையாகச் செய்யப்படுவதில்லை. பரிபாடலின் மேற்கண்ட பிரபஞ்சத் தோற்றப் பாடல் கூட, ‘திருமால் வாழ்த்து’ எனும் தலைப்பின் கீழ்தான் உள்ளது. இதனாலேயே, அப்பாடல் பதிவு செய்துள்ள அறிவியல் கருத்துகளை ஒதுக்கித் தள்ளிவிடுவது முறையல்ல. இன்றுவரை, தமிழர்களின் வரலாறு முறையாக எழுதப்படவில்லை. அவ்வாறு எழுதப்படும்போது, உலகின் ஆகச் சிறந்த அறிவியல் இனம் தமிழ் இனம் என்ற உண்மை உலகிற்கு உரைக்கப்படும். மேலே கூறப்பட்டுள்ள அனைத்து பெரும் அறிவியல் செய்திகளும், பரிபாடல் – மூன்றாம் பாடலின் முதல் 14 வரிகளையும், தொல்காப்பியத்தின் ஒரு பாடலையும் மட்டுமே கொண்டு எழுதப்பட்டவை என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்.