இனிய இணைய நட்புகளுக்கு வணக்கம்..
மனிதனாக வாழ்பவர் அனைவருக்குமே தான் வாழ பிறரும் வாழணும் என்ற அடிப்படை எண்ணம் நிச்சயமாக இருக்கும்… ஏனென்றால் நாம் வாழும் வாழ்க்கை பிறருக்காக வாழும்போது நம் வாழ்க்கை அர்த்தமுள்ளதாகும்.
முதலில் தான் வாழ்வதற்கான அடிப்படை தேவைகளை குறித்து பொருள் தேடுதலை ஆரம்பிக்கிறான்… அடிப்படை தேவைகள் நிறைவேறிய பின் மீண்டும் தன் சௌகரியங்களுக்காக, வாரிசுகள் வளம் பெற, தன் சுற்றம் தன்னை மதிக்க என தேடல் முடிவதில்லை... ஆனால் நிம்மதியை தொலைத்து விடுகிறான்...
இது நாட்டை விட்டு வெளிநாடு செல்லும்போது தேடல் கொஞ்சம் வேறுபடுகிறது. ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான பிரச்னைகள், சூழல்கள், அதற்கென தன்னை தயார்படுத்திக்கொள்கிறான். தேடல் ஓய்ந்தபாடில்லை...
அதே போல் எந்த நாட்டுக்கு சென்றாலும் தன் வேறான தாய்நாட்டைப் பற்றி கவலை கொள்ளாமல் இல்லை. தன் சமூகம், தன்னை சுற்றியுள்ள அனைத்து மக்களும் நிம்மதியாக இருந்தால் நமக்கும் நல்லது என்ற ஒரு சுயநல எண்ணம் கூட இருக்கலாம்.
இருக்கட்டும்.. தவறில்லை.. அப்படியாவது என்னென்ன பிரச்னையில் தன் நாடு சிக்கித் தவிக்கிறது, எப்படியெல்லாம் சீர்படுத்தலாம், எத்தகைய சமூக மாற்றத்தை ஏற்படுத்தலாம் என எண்ண ஆரம்பிக்கிறான்... தன்னால் முடிந்த பங்களிப்பை செய்ய துடிக்கிறான்... இத்தகைய எண்ணம் வராதவர்களை விரல் விட்டு எண்ணிடலாம்...
என்ன வித்யாசம் என்றால் ஒரு சிலருக்கு அவர்கள் வாழும் சூழலால் வெகு சீக்கிரம் சமூக ஆர்வம் வந்துவிடும். சிலருக்கு அனுபவம் சேரும்போது வரும். இன்னும் சிலருக்கு வாழ்க்கையில் ஒரு திருப்தி வந்ததும் நாமும் நம் சமூகத்துக்கு ஏதாகிலும் செய்யணும், அதுவே நிறைவு என்ற எண்ணத்தில் வரலாம்..
ஆனால் வரும்...
எகிப்தில் மிகப்பெரிய புரட்சி சமீபத்தில் வந்தமைக்கு இணையம் ஒரு முக்கிய காரணி என்பது மகிழ்வான செய்தி. ஆக நமக்கு கிடைத்துள்ள இந்த இணைய வசதி மூலம் நேர்மறையான எண்ணத்தோடு நாம் நம் சமூகத்தில் மாற்றம் கொண்டு வர என்ன செய்யலாம்?
ஏற்கனவே பல பதிவர்கள் சமூக பார்வையோடு மிக நல்ல பதிவுகளை, பல தகவல்கள் சேகரித்து நமக்கு தருகிறார்கள்தான் (அவர்களுக்கு நம் பாராட்டுகள்).
இதே போல இன்னும் அதிகமான கட்டுரைகள், கருத்துகள், விவாதங்கள் வருமானால், அவை எல்லா மக்களையும் சென்றடையுமானால் ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவோமேயானால் நிச்சயம் நம்மால், நாம் நினைக்கும் சமூக மாற்றம் கொண்டுவரமுடியும்...
சமூகத்தில் முக்கியமா பயமுறுத்தும் பிரச்னைகள் எவை எவை என பட்டியலிடுவோம்... அவை தீர்ப்பதற்கான வழிமுறைகள், எப்படி வேர்களை களைவது என அலசுவோம்..
நன்றாக தெரியும், அனைவருக்கும் நேரம் இருப்பதில்லை. இணையத்துக்கு வருவதே மனம் லேசாக இருக்கத்தான்.. இதில் ஏன் இந்த வேலையெல்லாம் என நினைப்பவர்கள் உண்டு. தவறேயில்லை... அவசரமுமில்லை... கட்டாயமுமில்லை... நிதானமாக உங்கள் விருப்பப்படி மகிழ்ச்சியாக இருந்துகொண்டு அலுத்து சலித்த பின் சமூக ஆர்வம வந்தபின் பங்கெடுத்தால் போதும்... சமூக ஆரவ்ம் என்பது ஒருபோதும் கட்டாயப்படுத்தி வரவைக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
சமூக பிரச்னைகளை குறித்து புரிதல் இருக்கணும்.. கோபம் இருக்கணும்... அப்போது மட்டுமே உறுதி வரும்... சமூக மாற்றம் குறித்து தெளிவான பார்வை வரும்...
ஊழல், லஞ்சம், சாதீ, மதவெறி, அடிமைத்தனம், இளக்காரம், விளிம்பு நிலை மனிதரின் வாழ்க்கை, பெண்ணடிமைத்தனம், குடி, ஊடகம், அடிப்படை வசதி இல்லாமை, ஏற்றத்தாழ்வு, மனிதத்தனமையற்ற செயல் போன்ற எதை குறித்தாவது வருந்தியிருக்கணும்... பாதிக்கப்பட்டிருக்கணும்...
அப்போது மட்டுமே எழுச்சியோடு மாற்றம் குறித்து எண்ணவே முடியும்...
இதுமாட்டுமில்லாது சமூகத்தில் அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி, குழந்தை தொழிலாளர் முறையை வேரோடு ஒழித்தல், பிச்சை எடுக்கும் குழந்தைகளுக்கு நிரந்தர தீர்வுக்கு வழிகாணல், வறுமையை ஒழித்து அனைவருக்கும் உணவு போன்ற அடிப்படை தேவைகளை தீர்த்தல், அனைத்து தரப்பு மக்களுக்கும் ஆரோக்கியமான வாழ்விற்கு வழிகாணுதல், நல்ல மருத்துவ வசதியை கிராமந்தோறும் உருவாக்குதல், தொழிற்சாலைகள் அமைப்பது, சுய சிறுதொழில் வாய்ப்பு போன்று பல வழிகளில் புதிதாக வேலைகளை இளைஞர்களுக்கு உருவாக்குவதன் மூலம் வேலையில்லா திண்டாட்டம் போக்குதல், விவாசாயம் பெருக்க வழிகாணல், மழையில்லா காலத்திற்காக நீர் ஆதாரங்களை பெருக்குதல், குறைந்த ஊதியம் பெரும் கிராம மக்கள் குடும்பத்தை முன்னேற்றாமல் குடி பழக்கத்திற்கு அடிமையாவதை நிறுத்துதல், மேற்படிப்பு பற்றி பள்ளி மாணவர்களுக்கு தெளிவாக்குதல், அரசு வேலைவாய்ப்பு பற்றி பகிருதல், அரசு அலுவலங்கள் மற்றும் அரசு இயந்திரத்தில் உள்ள லஞ்சம் எனும் கொடிய நோயை படிப்படியாக ஒழித்தல், ஆரோக்கியமான அரசியல் சூழலை ஏற்படுத்துதல், ஊடகங்களை உண்மை செய்திகள் மற்றும் நற்காரியங்களுக்கு மட்டும் பயன்படுத்துதல், பெண்ணடிமை சாதி போன்ற சமூக அநீதிகளை வேரோடு அழித்தல் என சமூகத்தில் சீர்திருத்தம், மாற்றம், எழுச்சி காண இளைஞர்கள் நாம் நம் பேதங்களை தாண்டி ஒன்றுமையோடு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்...
இங்கே எழுச்சியோடு இணைந்திருக்கும் நண்பர்கள் எல்லோரும் எல்லாவற்றிலும் ஒத்த எண்ணமுடையவர்கள் அல்லர்... பல்வேறு கருத்துகள், கொள்கைகள் கொண்டவர்களே... ஆனால் ஒரே ஒற்றுமை ஒரே கொள்கையாக சமூக மாற்றம் கொண்டு வர விரும்பும் எழுச்சியாளர்கள்...
இதில் எழுச்சியாளர்கள் யாருக்கும் எவ்வித லாபமுமில்லை... சொல்லப்போனால் நஷ்டம் மட்டுமே... ஆம்... நேர விரயம், மன உளைச்சல் வரலாம், சுய கட்டுப்போடு கூடிய நல்லொழுக்கம் (இதில் நம்மில் பலருக்கு மிகப் பெரிய சவால் என அறிவோம், நாம் கட்டுப்பாடோடு இல்லாமல் சமூகத்தில் சீர்திருத்தம் கொண்டுவர முடியாது), தகவல் சேகரிக்கும் உழைப்பு, சேவை உதவி என வரும்போது ஏற்படும் எண்ணிலடங்கா பிரச்சனைகள், சவால்கள்...
இதனால் நமக்கென்ன பயன் என சுய நலமாக பார்த்தால் “நாளை நம் சமூகம் நன்றாக இருந்தால் நம் குடும்பமும் நன்றாக இருக்கும்”, பொதுநலமாக பார்த்தால் “நம்மால் சிறுதுளியாவது நம் சமூகம் மாற்றம் கண்டிருக்கும், நம் அடுத்த தலைமுறை இளைஞர்கள் நம்மை பார்த்து நாம் காண விரும்பிய மிகப் பெரிய மாற்றத்தை வழிநடத்தி செல்வார்கள்”.
நீங்களும் இதே சமூக ஆர்வமுடையவராக இருந்தால், எழுச்சியுடைவரென்றால் கை கொடுங்கள்... இச்சமூக மாற்றத்துக்கு சிறு துளியாக...
மிகப் பெரிய அளவில் உங்களால் பங்களிப்பு கொடுக்க முடியாவிட்டாலும் குறைந்த பட்சம் உங்கள் பொன்னான நேரமாவது சிறிது செலவழித்தல் போதுமானது... ஆனால் இந்த சமூக மாற்றத்திற்கு உங்களின் பங்களிப்பிற்கு பரிசாக கிடைப்பது யாரும் கொடுக்க முடியாத மன நிம்மதி...
வாருங்கள்... சமூக எழுச்சிக்காக எழுச்சியோடு கை கோர்ப்போம் நட்புகளே!!!