மின் கட்டணம் செலுத்தும் வசதி: மண்டல அளவில் விரிவாக்கம்
ஈரோடு: தமிழகத்தில், ஒன்பது மண்டலங்களில் தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் இயங்குகிறது. ஒவ்வொரு மண்டலத்தின் தாழ்வழுத்த மின்நுகர்வோர்கள், தங்கள் மண்டலத்துக்குள் உள்ள எந்த பிரிவு அலுவலகத்தில், வேண்டுமானாலும், மின் கட்டணத்தை செலுத்தும் வசதி, 2008 முதல் செயல்பாட்டில் உள்ளது.
தற்போது, மின்தொடர் மூலம் ஏற்படும் தொழில் நுட்ப மற்றும் வணிக விரயங்களை கண்டறிய, "மறுசீரமைக்கப்பட்ட முடுக்கிவிடப்பட்ட மின்வளர்ச்சி மற்றும் சீர்திருத்த திட்டம்' என்ற புதிய திட்டம் மூலம், புதிய தகவல் தொழில் நுட்ப கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டம், தமிழகத்தில் உள்ள, 30 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட, 110 நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில், நுகர்வோர் சேவைகள் ஒருங்கிணைக்கப்பட உள்ளதால், எங்கு வேண்டுமானாலும் மின் கட்டணம் செலுத்தலாம். இத்திட்டத்தின் கீழ் வராத, பிற பிரிவு அலுவலகங்களில் மின் கட்டணம் செலுத்த இயலாது. இத்திட்டத்தில், கோபி நகரத்துக்கு உட்பட்ட கோபி நகரம், புதுப்பாளையம் பிரிவுகளில் உள்ள மின் நுகர்வோருக்கு மட்டும், ஏற்கனவே உள்ள மண்டலமெங்கும் மின் கட்டணம் செலுத்தும் வசதி தற்காலிகமாக நிறுத்தப்படும்.
அதேநேரம், இத்திட்டம் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு, மாநில அளவில் எந்த பிரிவு அலுவலகத்திலும், மின் கட்டணம் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்படும். இருப்பினும், தற்போது பயன்பாட்டில் உள்ள
இணையதளம், வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் வாயிலாக, தமிழகத்தில் உள்ள அனைத்து மின் நுகர்வோர்களும், மின் கட்டணங்களை செலுத்தும் வசதி தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும், என தலைமை பெறியாளர் மணிவேல் தெரிவித்துள்ளார்.