கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா
திருவள்ளூரை அடுத்துள்ள ஆவடி வேல்டெக் ரங்கா சங்கு கலைக்கல்லூரியின் முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழாவானது சிறப்பாக நடைபெற்றது. காலை 10 மணியளவில் தொடங்கிய இவ்விழாவில் முதலாமாண்டு மாணவ மாணவியர், பெற்றோர் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
விழாவில் வரவேற்புரையாக வேல்டெக் ரங்கா சங்கு கலைக்கல்லூரியின் முதல்வர் முனைவர் தி. ஜெயச்சந்திரன் அவர்கள் மாணவர்களுக்கான ஒழுக்க நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கினார். அவர் பேசும்போது, “ஒழுக்கத்துடன் கூடிய கல்வியே மாணவர்களுக்கு முதன்மையானது என்றும் பள்ளிக்கூடம் போன்றே கல்லூரியும் கல்வி கற்கும் இடமென்பதை மாணவர்கள் மறந்து விடக்கூடாது. பெற்றோர்களும் பிள்ளைகளின் அன்றாட செயல்பாடுகளைக் கண்காணிக்க வேண்டும். ஒழுக்கத்துடன் கூடிய சிறந்த மாணவர்களை உருவாக்குவதே எங்களின் நோக்கம் இதற்கு மாணவர்களும் பெற்றோர்களும் ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
வேல்டெக் கல்விக் குழுமத்தின் தலைவர் பேராசிரியர் முனைவர் வேல் ரங்கராஜன் மற்றும் துணைத்தலைவர் முனைவர் சகுந்தலா ரங்கராஜன் ஆகியோர் இவ்விழாவில் தமது வாழ்த்துரை வழங்கினார்கள். வேல்டெக் கல்விக் குழுமத்தின் நிர்வாகக் குழுத்தலைவர் முனைவர் ரங்கராஜன் மகாலட்சுமி தலைமையுரை ஆற்றினார். அவர் பேசும் போது, “கல்வியின் தளம், காலத்தால் விரிந்து செல்கிறது. தமது திறமையைப் பன்மடங்கு உயர்த்திக் கொள்ள மாணவர்கள் முனைய வேண்டும். சந்தோசத்துடன் தமது வாழ்க்கை குறித்த தேடலும் இருக்க வேண்டும்” என்றார்.
இவ்விழாவிற்கு எம்பஸிஸ் நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டாளர் (HR) திரு . ஜோஷுவா டேவிட் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவர்களுக்குக் கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், மனித நேயம் குறித்தும் விரிவாக உரையாற்றினார். மேலும் அவர் கூறுகையில், “மாணவர்கள் பெற்றோர்களிடம் நன்றிவுணர்வோடு நடந்து கொள்ள வேண்டும். பெற்றோரின் தியாகத்தால் தான் கல்லூரிப் படிப்பை எட்டியுள்ளீர்கள் என்றும், பிள்ளைகள் பெற்றோர்களுடனும் பெற்றோர்கள் பிள்ளைகளுடனும் கூடுதலான நேரத்தைச் செலவிட வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்.
மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளுடனும் விழாவானது சிறப்பாக நடந்தேறியது. கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.