அன்பார்ந்த தமிழ் உறவுகளுக்கு வணக்கம்.
உலகின் திசைகளைத் தமிழால் இணைக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்டுள்ள பன்னாட்டுத் தமிழ் இயக்கமான “உலக முத்தமிழ்க் கூட்டமைப்பு” தமிழ் – தமிழர் மேம்பாடு – தமிழ்ப்படைப்பாளர்களை அங்கீகரித்தல் என்னும் இலக்குடன் செயலாற்றி வருகின்றது. அமெரிக்காவை மையமாக வைத்து உலகெங்கும் சிறகுகளை விரித்திருக்கும் இம்முத்தமிழ்க்கூட்டமைப்பு, பன்னாட்டுத் தமிழன்பர்களை இணைத்திடும் இலட்சியத்துடன் இந்தியா – இலங்கை ஆகிய நாடுகளில் உலகத் தமிழ் மாநாடுகளை எதிர்வரும் அக்டோபர் (2023) திங்களில் நிகழ்த்திட விழைந்துள்ளது.
இயல்-இசை-நாடகத்தமிழின் பன்முகப் பரிமாணங்களை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகளுடன், ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பிக்கும் வகையில் அரங்கங்கள் அமைக்கப்படவுள்ளன. பன்னாட்டுப் பேராளர்களால் வாசிக்கப்படும் கட்டுரைகளின் தொகுப்பாக ஆய்வு மலரும் வெளியிடப்படவுள்ளது. எக்காலத்துக்கும் பொருந்தும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ள தமிழரின் மாண்பினை மையப்பொருளாகக் கொண்டு இம்மாநாட்டு ஆய்வுத்தலைப்பு உருவாக்கப்பட்டுள்ளது