|
| |||
|
பொதுக்காலம் 32ம் ஞாயிறு - 11 11 2018 - திருப்பலி முன்னுரை
"ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது" என்று ஏழ்மையையும் ஏழைக்கு இரங்கும் உள்ளத்தையும் வெளிப்படுத்த இன்றைய ஞாயிறு வழிபாடு நம்மை அழைக்கிறது. இறைவன் நமக்கு தந்த திறமை, செல்வம், வளங்கள் என அனைத்தையும் இறைவனுக்கு காணிக்கையாக்க அழைக்கிறார்.
தம்மிடம் மிகுதியாக உள்ளவற்றை அல்ல; தம்மிடம் உள்ளவற்றை எல்லாம் இறைவனுக்கு கையளித்த ஏழைக் கைம்பெண்ணின் உள்ளத்தையும் அவளிடம் உள்ளதையுமே இறைவன் பெரிதாகக் கருதினார்.
இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எலியா வழியாக ஏழைக் கைம்பெண்ணும் அவரின் மகனும் வாழ்வு பெறுவதைக் காண்கிறோம். தனக்கு போதுமானதாக இல்லாதிருந்தும் தன்னிடம் குறைவாக இருந்தததையும் நிறைவான மனதுடன் இறைவாக்கினருக்குப் படைத்தார். என்றும் குறைவில்லா ஆசீரைப் பெற்றார்.
"பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை." என்பது வள்ளுவர் வாக்கு. தனக்கு கிடைத்தவற்றை பிற உயிர்களோடு பகிர்ந்து வாழ்தல் நீதி நூல்கள் கூறும் அறங்களிலிலும் சிறந்தது என்பது இதன் பொருள்.
இன்றைய நற்செய்தியில் தன்னிடம் இருந்த அனைத்தையும் காணிக்கையாக்கிய ஏழைக் கைம்பெண் இறைவன் இதயத்தில் இடம் பிடிக்கிறார். நம்மிடம் உள்ள அனைத்தையும் தாழ்ச்சியோடு இறைவனுக்கு கையளிப்போம். இறைவன் நம்மை உயர்த்துவார். கருணை கொண்டு நம்மை முழுவதும் கையளிக்கும் தாழ்மை உள்ளம் வேண்டி இப்பலியில் இணைவோம். மன்றாட்டுகள்
1. ஏழையரின் உள்ளத்தோருக்கு விண்ணரசைப் பரிசளிப்பவரே! எம் திரு அவையை வழிநடத்தும் தலைவர்கள் தாழ்மை உள்ளம் கொண்டவர்களாய், ஏழை, எளிய மக்களின் நலனில் பாடுபட்டு, அவர்களின் உயர்வுக்கான முயற்சிகளில் உடனிருந்து ஆன்மீகப் பாதையில் வழிநடத்த வரம் வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
2. தம்மிடம் உள்ளது அனைத்தையும் காணிக்கையாக செலுத்நிய கைம்பெண்ணை பாராட்டியவரே! எம் பாரத நாட்டை ஆளும் தலைவர்கள் அந்த கைம்பெண் போல தம்மிடம் உள்ள திறமைகளை நாட்டின் நலனுக்காக பயன்படுத்தவும், பிரித்தாளும் திறமையை கைவிட்டு ஒற்றுமையை ஓங்கச் செய்யவும் வரம் வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
3. கைவிடப்பட்டோரை தூக்கி விடுபவரே இறைவா!
எம் சமூகத்தில் உற்ற துணையின்றி தவிப்போரையும், நாட்டினைப் பிரிந்து அகதிகளாக வாழ்வோரையும் கண்ணோக்கும். அவர்களை உம் அரவணைப்பில் வழிநடத்த வரம் வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
4. தமக்காக காத்திருப்போருக்கு ஆசியளிப்பவரே!
எம் பகுதி மக்களை ஆசீர்வதித்து, போதிய மழை பொழிந்து, விவசாயம் சிறந்து, பொருளாதார முன்னேற்றம் அடையவும், குடும்ப சமாதானம், சந்தோஷம் பெருகவும், மக்களிடையே அன்பு ஆட்சி செய்யவும், உள்ளத் தேவைகள் நிறைவடையவும் வரம் வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.
பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
நன்றி: ஆசிரியை. திருமதி. ஜோஸ்பின் சாந்தா லாரன்ஸ், பாவூர்சத்திரம்.
“GOD IS LOVE”
Rev. Fr. Amirtha Raj Sundar J., amirs...@gmail.com; + 91 944 314 0660; www.arulvakku.com
"GOD IS LOVE" Rev. Fr. Amirtha Raj Sundar J.,
+ 91 944 314 0660;
Parish Priest,
R C Church,
PAVOORCHATHIRAM - 627 808
Tirunelveli Dist
Tamilnadu
South India
| |||
|
|