|
| |||
|
31ஆம் வாரம் – வியாழன் - 08 11 2018 இரண்டாம் ஆண்டு முதல் வாசகம் எனக்கு ஆதாயமான அனைத்தும் கிறிஸ்துவின் பொருட்டு இழப்பு எனக் கருதினேன். திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 3-8 சகோதரர் சகோதரிகளே, உடலைச் சார்ந்தவற்றில் உறுதியான நம்பிக்கை கொள்ளாமல், கடவுளின் ஆவிக்கேற்ப வழிபட்டுக் கிறிஸ்து இயேசுவைப் பெருமைப்படுத்தும் நாமே உண்மையான விருத்தசேதனம் செய்து கொண்டவர்கள். உடலைச் சார்ந்தவற்றில் உறுதியான நம்பிக்கை வைக்கவேண்டுமானால் நானும் வைக்கலாம். உடலைச் சார்ந்தவற்றில் உறுதியான நம்பிக்கை கொள்ள முடியும் என யாராவது நினைத்தால், அவரை விட மிகுதியாக நானும் நம்பிக்கை கொள்ள முடியும். நான் பிறந்த எட்டாம் நாள் விருத்தசேதனம் பெற்றவன்; இஸ்ரயேல் இனத்தவன்; பென்யமின் குலத்தவன்; எபிரேயப் பெற்றோருக்குப் பிறந்த எபிரேயன்; திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில் பரிசேயன். திருச்சட்டத்தில் எனக்கிருந்த ஆர்வத்தால் திருச்சபையைத் துன்புறுத்தினேன். திருச்சட்டத்தின் அடிப்படையிலான நீதிநெறியைப் பொறுத்தமட்டில் குற்றமற்றவனாய் இருந்தேன். ஆனால் எனக்கு ஆதாயமான இவை அனைத்தும் கிறிஸ்துவின் பொருட்டு இழப்பு எனக் கருதினேன். உண்மையில், என்னைப் பொறுத்தமட்டில் என் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்ற செல்வம். இதன் பொருட்டு மற்ற எல்லாவற்றையும் இழப்பாகக் கருதுகிறேன். அவர் பொருட்டு நான் அனைத்தையும் இழந்துவிட்டேன். கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன். இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு. பதிலுரைப் பாடல் திபா 105: 2-3. 4-5. 6-7 (பல்லவி: 3b) பல்லவி: ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் மகிழ்வதாக! 2 அவருக்குப் பாடல் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்! அவர்தம் வியத்தகு செயல்கள் அனைத்தையும் எடுத்துரையுங்கள்! 3 அவர் தம் திருப்பெயரை மாட்சிப்படுத்துங்கள்; ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக! பல்லவி 4 ஆண்டவரையும் அவரது ஆற்றலையும் தேடுங்கள்! அவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்! 5 அவர் செய்த வியத்தகு செயல்களை நினைவுகூருங்கள்! அவர்தம் அருஞ்செயல்களையும், அவரது வாய் மொழிந்த நீதித் தீர்ப்புகளையும் நினைவில் கொள்ளுங்கள். பல்லவி 6 அவரின் ஊழியராம் ஆபிரகாமின் வழிமரபே! அவர் தேர்ந்துகொண்ட யாக்கோபின் பிள்ளைகளே! 7 அவரே நம் கடவுளாகிய ஆண்டவர்! அவரின் நீதித் தீர்ப்புகள் உலகம் அனைத்திற்கும் உரியன. பல்லவி நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி மத் 11: 28 அல்லேலூயா, அல்லேலூயா! பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா. நற்செய்தி வாசகம் மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்துக் கடவுளின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும். லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 1-10 அக்காலத்தில் வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கி வந்தனர். பரிசேயரும் மறைநூல் அறிஞரும், ``இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே'' என்று முணுமுணுத்தனர். அப்போது அவர் அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்: ``உங்களுள் ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று காணாமற் போனால் அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பாலை நிலத்தில் விட்டுவிட்டு, காணாமற்போனதைக் கண்டுபிடிக்கும்வரை தேடிச் செல்ல மாட்டாரா? கண்டுபிடித்ததும், அவர் அதை மகிழ்ச்சியோடு தம் தோள்மேல் போட்டுக் கொள்வார்; வீட்டுக்கு வந்து, நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, `என்னோடு மகிழுங்கள்; ஏனெனில் காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்து விட்டேன்' என்பார். அது போலவே மனம் மாறத் தேவையில்லாத் தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியை விட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். பெண் ஒருவரிடம் இருந்த பத்துத் திராக்மாக்களுள் ஒன்று காணாமற்போய்விட்டால் அவர் எண்ணெய் விளக்கை ஏற்றி வீட்டைப் பெருக்கி அதைக் கண்டுபிடிக்கும்வரை கவனமாகத் தேடுவதில்லையா? கண்டுபிடித்ததும், அவர் தோழியரையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, `என்னோடு மகிழுங்கள், ஏனெனில் காணாமற் போன திராக்மாவைக் கண்டுபிடித்துவிட்டேன்' என்பார். அவ்வாறே மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்துக் கடவுளின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும் என உங்களுக்குச் சொல்கிறேன்.'' இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி. சிந்தனை காணாமற் போன ஆடு, காணாமற் போன காசு. இன்றைக்கு காணாமல் போன மனிதர்கள் பலருண்டு. ஆட்கடத்தலை இன்று பத்திரிக்கைகள் அதிகம் பேசுகின்றன. நல்லாட்சிக்கு இது அறிகுறியா? என பத்திரிக்கைகள் கேள்வி எழுப்புகின்றன. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தி முறையான தகவல் பெற்று ஊழலை, லஞ்சத்தை, அக்கிரமத்தை வெளிக் கொணரும் துணிவு கொண்ட மாந்தர்கள் பலர் காணாமல் போகின்றார்கள் என்கிறது ஊடகங்கள். இப்படி மாந்தர்கள் காணாமல் போவது ஜனநாயக நாட்டிற்கு அழகா? ஆடு, காசு காணாமற் போனாலே தேடும் நிலையென்றால், மாந்தர்கள் என்ன இவற்றை விட தரம் தாழ்ந்தா போனார்கள். என் உறவில் யாரும் காணாமற் போனால் தான் அதனுடைய அருமை எனக்கு புரியுமா? என் கையை சுட்டுக் கொண்டால் மாத்திரம் தான் சுடுபட்டதின் வேதனை தெரியுமா? உறவு ஒன்று காணாமற் போனால் குடும்பங்கள் படும் வேதனையை என்றைக்கு உணரப் போகின்றோம். இப்படி பலர் காணாமற் போகின்ற நிலை நாட்டின் நிலையானால் உண்மை வாய்மை எங்கு நிலைநாட்டப்படும் நம்முடைய கிறிஸ்தவத் தன்மையில் நாம் என்ன செய்திடப் போகின்றோம். பார்த்துக் கொண்டு வேடிக்கை பார்க்கப் போகின்றோமா? இல்லை தவறு என அரசிற்கு குரல் கொடுக்கப் போகின்றோமா? தொடர்ந்தால் அரசினை மாற்றக் கூட தயங்க மாட்டோம் என சுழுரைக்கப் போகின்றோமா? இத்தகைய குடும்பத்தாருக்கு ஆறுதல் வழங்கிடுவது நமது கடமையே.
"GOD IS LOVE" Rev. Fr. Amirtha Raj Sundar J.,
+ 91 944 314 0660;
Parish Priest,
R C Church,
PAVOORCHATHIRAM - 627 808
Tirunelveli Dist
Tamilnadu
South India
| |||
|
|