|
| |||
|
32ஆம் வாரம் - புதன் - 14 11 2018 இரண்டாம் ஆண்டு முதல் வாசகம் தம் இரக்கத்தை முன்னிட்டு கடவுள் நம்மை மீட்டார். திருத்தூதர் பவுல் தீத்துக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 1-7 அன்பிற்குரியவரே, நீ அவர்களுக்கு நினைவூட்ட வேண்டியவை: தலைவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் அவர்கள் பணிந்து கீழ்ப்படிய வேண்டும்; அனைத்து நற்செயல்களையும் செய்ய ஆயத்தமாயிருக்க வேண்டும். எவரையும் பழித்துரைக்கலாகாது; சண்டையிடலாகாது; கனிந்த உள்ளத்தினராய் மக்கள் அனைவரோடும் நிறைந்த பணிவுடன் பழக வேண்டும். ஏனெனில் நாமும் ஒரு காலத்தில் அறியாமையில் இருந்தோம்; கீழ்ப்படியாமல் இருந்தோம்; நெறிதவறிச் சென்றோம்; தீய நாட்டங்களுக்கும் பல்வகைச் சிற்றின்பங்களுக்கும் அடிமைகளாய் இருந்தோம்; தீமையிலும் பொறாமையிலும் உழன்றோம்; காழ்ப்புணர்ச்சி கொண்டவராய் ஒருவர் மற்றவரை வெறுத்தோம். நம் மீட்பராம் கடவுளின் நன்மையும் மனித நேயமும் வெளிப்பட்டபோது, நாம் செய்த அறச்செயல்களை முன்னிட்டு அல்ல, மாறாகத் தம் இரக்கத்தை முன்னிட்டு, புதுப்பிறப்பு அளிக்கும் நீரினாலும் புதுப்பிக்கும் தூய ஆவியாலும் கடவுள் நம்மை மீட்டார். அவர் நம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாகத் தூய ஆவியை நம்மீது நிறைவாகப் பொழிந்தார். நாம் அவரது அருளால் அவருக்கு ஏற்புடையவர்களாகி, நாம் எதிர்நோக்கி இருக்கும் நிலைவாழ்வை உரிமைப்பேறாகப் பெறும்பொருட்டே இவ்வாறு செய்தார். இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல் திபா 23: 1-3ய. 3b-4. 5. 6 (பல்லவி: 1) பல்லவி: ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை. 1 ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை. 2 பசும் புல்வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார். 3ய அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார். பல்லவி 3b தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்; 4 மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். பல்லவி 5 என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. பல்லவி 6 உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் எனைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி 1 தெச 5: 18 அல்லேலூயா, அல்லேலூயா! எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள். உங்களுக்காகக் கிறிஸ்து இயேசு வழியாய்க் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே. அல்லேலூயா.
நற்செய்தி வாசகம் கடவுளைப் போற்றிப் புகழ அன்னியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே. லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 11-19 அக்காலத்தில் இயேசு எருசலேமுக்குப் போய்க்கொண்டிருந்தபோது கலிலேய, சமாரியப் பகுதிகள் வழியாகச் சென்றார். ஓர் ஊருக்குள் வந்தபொழுது, பத்துத் தொழுநோயாளர்கள் அவருக்கு எதிர்கொண்டு வந்து, தூரத்தில் நின்றுகொண்டே, ``ஐயா! இயேசுவே, எங்களுக்கு இரங்கும்'' என்று உரக்கக் குரலெழுப்பி வேண்டினார்கள். அவர் அவர்களைப் பார்த்து, ``நீங்கள் போய் உங்களைக் குருக்களிடம் காண்பியுங்கள்'' என்றார். அவ்வாறே அவர்கள் புறப்பட்டுப் போகும் போது அவர்கள் நோய் நீங்கிற்று. அவர்களுள் ஒருவர் தம் பிணி தீர்ந்திருப்பதைக் கண்டு உரத்த குரலில் கடவுளைப் போற்றிப் புகழ்ந்துகொண்டே இயேசுவிடம் திரும்பி வந்தார்; அவருடைய காலில் முகங்குப்புற விழுந்து அவருக்கு நன்றி செலுத்தினார். அவரோ ஒரு சமாரியர். இயேசு அவரைப் பார்த்து, ``பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே? கடவுளைப் போற்றிப் புகழ அன்னியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே!'' என்றார். பின்பு அவரிடம், ``எழுந்து செல்லும், உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது'' என்றார். இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
சிந்தனை மற்ற ஒன்பது பேர் எங்கே? நன்றியுள்ள இதயங்கள் இன்று அருகிக் கொண்டே போவதைப் பார்க்கின்றோம். எதற்கு நன்றி சொல்ல வேண்டும்? அவங்க கடமையைத் தானே செய்தார்கள். அவங்க பொறுப்பு அது அதை செய்தார்கள் இதற்கு நான் ஏன் நன்றி சொல்ல வேண்டும். நான் சொல்லுகின்ற நன்றியாலே அவங்க என்ன உயர்ந்து விடவா போகின்றார்கள் என்றெல்லாம் இன்றைக்கு கேட்டுப் பார்க்கச் சொல்லுகின்றது இதயம். நன்றி மறந்ததாலேயே இன்றைக்கு தொட்டில் குழந்தை திட்டம், ஆதரவற்றோர் இல்லம், முதியோர் இல்லம் எல்லாம் நிரம்பி வழிகின்றது. வயிற்றின் கனி ஆண்டவா தந்த வெகுமதியென்பதை மறந்து விடுகின்றார்கள். பெற்றோர் கண்கண்ட தெய்வம் என்பதை மறந்து விடுகின்றது உலகம். பெரியவர்கள், உடன்பிறப்புக்கள் நமக்கு சொத்து என்பதை வசதியாக மறந்து விடுகின்றோம் காரணம் நன்றியுள்ள இதயம் நமதாகாமல் இருப்பதாலேயே. நன்றி கொண்ட இதயம் நமக்கு இருந்தால் அது மேலும் ஆசீர் பெறக் காரணமாக இருக்கும் என்பதுவே உண்மை. சுகம் பெற்றவர்கள் திரும்ப வந்திருந்தால், அந்த சமாரியருக்கு திரும்ப கிடைத்த ஆசீர் அவர்களுக்கும் கிடைத்திருக்கும் அல்லவா? நன்றியுள்ள இதயத்தை நமதாக்கி கொள்ள வருந்தி முயல்வோம்.
"GOD IS LOVE" Rev. Fr. Amirtha Raj Sundar J.,
+ 91 944 314 0660;
Parish Priest,
R C Church,
PAVOORCHATHIRAM - 627 808
Tirunelveli Dist
Tamilnadu
South India
| |||
|
|