சிறப்புக் கட்டுரை: நீதிமன்றத்திலிருந்து நாடாளுமன்றத்துக்கு!
ரவிக்குமார்
காவிரிப் பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் 18.05.2018 அன்று பிறப்பித்துள்ள
உத்தரவோடு பல ஆண்டுகளாக நடந்துவந்த சட்டப் போராட்டம் முடிவுக்கு
வந்திருக்கிறது. ‘காவிரி மேலாண்மை ஆணையம்’ (Cauvery Management
Authority) என்ற அமைப்பை உருவாக்கப்போவதாக உச்ச நீதிமன்றத்தில்
சமர்ப்பிக்கப்பட்ட பதினான்கு பக்க வரைவுத் திட்டத்தில் மத்திய அரசு
கூறியிருந்தது. அதை அப்படியே உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. “பருவ
மழை தொடங்குவதற்கு முன்பாக இந்த வரைவுத் திட்டத்தை மத்திய அரசு,
அரசிதழில் வெளியிட்டு நடைமுறைப்படுத்தும் என நம்புகிறோம்” என்று உச்ச
நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டுக்கு நீதி கிடைத்துவிட்டதா?
கர்நாடக அரசியல் குழப்பங்களே போதும் போதும் என்கிற அளவுக்கு செய்திகளைத்
தந்துகொண்டிருக்கும் நிலையில் இதுவரை தமிழ்நாட்டின் உயிராதாரப்
பிரச்சினையாக வர்ணிக்கப்பட்டுவந்த காவிரிப் பிரச்சினையை ஊடகங்கள்
கண்டுகொள்ளவில்லை. தமிழ்நாட்டுக்கு வெற்றி எனத் தமிழக அமைச்சர் சொன்னதையே
அவை வழிமொழிந்து தமது கடமையை முடித்துக்கொண்டன. விவசாய சங்கங்களின்
தலைவர்களும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பைப் பார்ப்பதற்கு முன்பே அதை
வரவேற்றுக் கருத்து தெரிவித்துவிட்டனர். அரசியல் கட்சிகளும் இதுவரை
பெரிதாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இவற்றையெல்லாம் பார்க்கும்போது
“காவிரி நதி நீர் பங்கீட்டு வழக்கில் தமிழக மக்களும், விவசாயிகளும்
எதிர்பார்த்தபடி நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளது” என்று சட்டத் துறை
அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ள கருத்து உண்மைதானோ என்ற சந்தேகம்
நமக்கு எழுகிறது.
கர்நாடக, கேரள அரசுகளின் ஆட்சேபனைகள்
உச்ச நீதிமன்றம் 18.05.2018 அன்று வழங்கியுள்ள 28 பக்கங்கள் கொண்ட
இறுதித் தீர்ப்பில், மத்திய அரசு சமர்ப்பித்த வரைவுத் திட்டத்தை அப்படியே
எவ்விதத் திருத்தமும் இன்றி ஏற்றுக்கொண்டு வெளியிட்டுள்ளது. கடந்த 17ஆம்
தேதி மத்திய அரசால் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட திருத்தம்
செய்யப்பட்ட வரைவுத் திட்டத்தில் எந்தெந்த மாநிலங்கள், என்னென்ன
கருத்துகளைக் கூறின என்பது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில்
விவரிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்
ஷியாம் திவான், கேரளாவுக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா
ஆகியோர், “மத்திய அரசு சமர்ப்பித்துள்ள வரைவுத் திட்டம், மாநில
உரிமைகளில் தலையிடுகிறது, தண்ணீரைச் சேமிப்பது, பயன்படுத்துவது ஆகியவை
மாநில அதிகாரம் சம்பந்தப்பட்டவை. அரசியலமைப்புச் சட்டத்தின் 7ஆவது
அட்டவணையில் 2ஆவது பட்டியலில் 17ஆவது அம்சமாக அந்த அதிகாரம்
குறிப்பிடப்பட்டுள்ளது” என்று வாதாடினார்கள் என உச்ச நீதிமன்றம் பதிவு
செய்துள்ளது.
மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் அந்த ஆட்சேபனைகளை
மறுத்தார். “வரைவுத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள அந்த அம்சங்கள்
இந்தத் திட்டத்தை சுமுகமாகச் செயல்படுத்துவதற்காகத்தானே ஒழிய வேறல்ல”
என்று அவர் கூறினார். “நடுவர் மன்றத்தால் முன்வைக்கப்பட்டு, உச்ச
நீதிமன்றத்தால் திருத்தம் செய்யப்பட்ட தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள
அளவு தண்ணீரை நான்கு மாநிலங்களுக்கும் பகிர்ந்தளிப்பதே இந்தத்
திட்டத்தின் நோக்கம்” என்று அவர் கூறினார்.
எந்த ஆட்சேபனையும் தெரிவிக்காத தமிழ்நாடு
புதுச்சேரி மாநிலத்துக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.எஸ்.நம்பியார்,
“இந்த வரைவுத் திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்படும் ஆணையம், இந்தத்
திட்டத்தை செயல்படுத்தக்கூடிய முழுமையான அதிகாரம் கொண்ட அமைப்பாக இருக்க
வேண்டும் என்று வலியுறுத்தினார்” என்பதைப் பதிவு செய்துள்ள உச்ச
நீதிமன்றம், “திருத்தப்பட்ட வரைவுத் திட்டத்தின் மீது தமிழக அரசின்
சார்பில் எந்தவொரு ஆட்சேபனையோ, ஆலோசனையோ தெரிவிக்கப்படவில்லை” என்றும்
கூறியுள்ளது.
“தமிழ்நாட்டுக்குரிய தண்ணீரை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்”
என்று கூறிய தமிழகத் தரப்பு வழக்கறிஞர் நபாடே, தமிழ்நாட்டில் தற்போது
தண்ணீர்ப் பற்றாக்குறை நிலவுகிறது. இந்தத் திட்டத்தைச் சரியாக
நடைமுறைப்படுத்தினால்தான் அதைத் தீர்க்க முடியும் என்று மட்டுமே
தெரிவித்ததாக உச்ச நீதிமன்றம் பதிவு செய்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் நிலைப்பாடு
நான்கு மாநிலங்களின் வாதங்களையும் கேட்ட பிறகு கர்நாடகா, கேரளா ஆகிய
மாநிலங்கள் எழுப்பிய ஆட்சேபனைகளில் எவ்விதப் பொருளும் இல்லை என்ற
முடிவுக்குத் தாம் வந்ததாக உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இந்த
வரைவுத் திட்டம் எவ்விதத்திலும் மாநில அதிகாரத்தில் தலையிடுவதாக
அர்த்தமாகாது. நடுவர் மன்றத்தால் முன்வைக்கப்பட்டு, நீதிமன்றத்தால்
திருத்தம் செய்யப்பட்ட செயல் திட்டத்தைச் சுமுகமாகவும், சிறப்பாகவும்
நடைமுறைப்படுத்துவதற்கே வழி வகுக்கும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது
(பக்கம்: 23 - 24). வரைவுத் திட்டத்தின் பிரிவு 9 உட்பிரிவு(1) மற்றும்
(4) ஆகியவற்றில் கூறப்பட்டுள்ளவை தேவையற்றவை என கர்நாடகாவும் கேரளாவும்
ஆட்சேபம் தெரிவித்திருந்ததை சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம், அந்த
ஆட்சேபனைகளை நிராகரித்துவிட்டது.
ஆட்சேபனைகளை எழுப்புவதன் மூலம் இந்த வழக்கை மீண்டும் விசாரிப்பதற்கு
மாநில அரசுகள் மறைமுகமாக வலியுறுத்துவதைத் தம்மால் ஏற்க முடியாது என்று
திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்ட உச்ச நீதிமன்றம், உருவாக்கப்பட இருக்கும்
ஆணையம் அப்போது எழும்பும் பிரச்சினைகளைக் கையாள வேண்டும் என்றும், நீர்ப்
பற்றாக்குறைச் சூழல் ஏற்பட்டால் அதை எப்படிக் கையாள்வது என்று முடிவு
செய்துகொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளது.
கைவிடப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
மத்திய அரசு போதுமான விளக்கங்களைக் கொடுத்துவிட்டதால், அதற்கு எதிராகத்
தமிழக அரசால் தொடுக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கைவிடப்படுகிறது
எனவும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
இறுதியாக, மத்திய அரசின் சார்பில் இந்தச் செயல் திட்டம் சட்டப்படி
நடைமுறைப்படுத்தப்படும் என்று வழங்கப்பட்டிருக்கும் உத்தரவாதத்தை
ஏற்றுக்கொண்டு இது தொடர்பான அனைத்து வழக்குகளையும் முடித்து வைப்பதாகக்
கூறியுள்ள உச்ச நீதிமன்றம், இந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள
மத்திய அரசின் வரைவுத் திட்டம் எதிர்வரும் மழைக்காலத்துக்கு முன்பாகவே
அரசிதழில் வெளியிடப்பட்டு, நடைமுறைப்படுத்தப்படும் எனத் தாம் நம்புவதாகக்
கூறியுள்ளது.
அலுப்படைந்துவிட்டதா உச்ச நீதிமன்றம்?
வரைவுத் திட்டத்தை அரசிதழில் வெளியிட வேண்டும் என்று நம்பிக்கை மட்டுமே
உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அத்துடன் தனது கடமை முடிந்துவிட்டதாக
அது கருதுவதுபோல் தெரிகிறது. இதற்கு மேல் இந்த வழக்கை ஊன்றி கவனித்துத்
தீர்ப்பு வழங்கும் பொறுமையை உச்ச நீதிமன்றம் இழந்துவிட்டதோ, காவிரி
விவகாரத்தில் அலுப்படைந்துவிட்டதோ என நாம் எண்ணும்விதமாகவே 18.05.2018
அன்று அது வழங்கிய தீர்ப்பு உள்ளது.
மத்திய அரசால் உருவாக்கப்படும் ஆணையம் முழுமையான அதிகாரம் கொண்ட
சுதந்திரமான அமைப்பாக இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் எங்கும்
வலியுறுத்தவில்லை. மத்திய அரசின் வரைவுத் திட்டத்திலும் அப்படி எதுவும்
குறிப்பிடப்படவில்லை. புதுச்சேரி மாநிலத்துக்காக வாதாடிய மூத்த
வழக்கறிஞர் நம்பியாரின் நிலைப்பாட்டை உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுப்
பாராட்டியுள்ளது. “இந்த ஆணையம் எந்திர கதியாக உத்தரவுகளைப்
பிறப்பிக்கின்ற ஒரு அமைப்பாக இருக்கக் கூடாது. மாறாக, நடுவர் மன்றமும்,
உச்ச நீதிமன்றமும் வழங்கியுள்ள இறுதித் தீர்ப்பை செயல்படுத்தும்
முழுமையான அதிகாரம் கொண்ட அமைப்பாக இருக்க வேண்டும்” என்று அவர்
கூறியதைப் பதிவு செய்திருக்கும் உச்ச நீதிமன்றம், “இதைத் தவிர நாங்கள்
சொல்வதற்கு வேறு ஏதும் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளது. அவரது
நிலைப்பாட்டை உச்ச நீதிமன்றம் வழிமொழிவதாக இதற்குப் பொருள் கூறலாம்
என்றாலும், அதை ஏனோ வெளிப்படையாக அந்தத் தீர்ப்பில் நீதிபதிகள் பதிவு
செய்யவில்லை.
திரிசங்கு நிலையில் தமிழ்நாடு
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழ்நாட்டுக்கு மிகப் பெரிய ஆறுதலைத்
தந்திருப்பது போலவும், குறுவை சாகுபடிக்கே தண்ணீர் வந்துவிடும் என்பதைப்
போலவும் இங்கே ஒரு மாயத் தோற்றம் உருவாக்கப்படுகிறது. இந்தத் தீர்ப்போடு
நீதிமன்றம் சார்ந்த நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துள்ளன. ஆனால்,
நாடாளுமன்றம் சார்ந்த நடவடிக்கைகள் இனிமேல்தான் தொடங்கப்பட வேண்டும்.
மாநிலங்களுக்கிடையிலான நதி நீர் தாவா சட்டத்தின் பிரிவு 6 (7)இன்படி
மத்திய அரசால் உருவாக்கப்படும் திட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும்
வைத்து ஒப்புதல் பெறப்பட வேண்டும். அங்கே ஏதேனும் திருத்தங்கள்
செய்யப்பட்டால் அதையும் அதில் உள்ளடக்கிக் கொள்ள வேண்டும் என்று உள்ளது.
எனவே, இந்த வரைவுத் திட்டத்தை அப்படியே அரசிதழில் வெளியிட்டுவிட
முடியாது. அதை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்து
சட்டமாக்கியதற்குப் பிறகே அரசிதழில் வெளியிட முடியும்.
நாடாளுமன்றத்தின் கூட்டத் தொடர் நடைபெற்றுக்கொண்டிருந்தால் அதில் இந்தத்
திட்டத்தைத் தாக்கல் செய்து ஒப்புதல் பெற வேண்டும் எனவும், கூட்டத் தொடர்
நடைபெறவில்லை என்றால், அடுத்து எப்போது நடக்கிறதோ, அப்போது அதில் வைத்து
ஒப்புதல் பெற வேண்டும் எனவும் மாநிலங்களுக்கிடையிலான நதி நீர் தாவா
சட்டத்தின் பிரிவு 6 (A ) (7) கூறுகிறது.
சில வாரங்களுக்கு முன்புதான் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடிவுக்கு
வந்தது. அடுத்து மழைக்காலக் கூட்டத் தொடர் ஜூலை மாதத்தில் தொடங்கப்பட
வேண்டும். மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் தாக்கல்
செய்யப்பட்டிருப்பதால், கடந்த கூட்டத் தொடர் முழுவதையுமே நடக்கவிடாமல்
செய்துவிட்டார்கள். அதற்கு அதிமுக உறுப்பினர்கள், பாஜகவால்
பயன்படுத்தப்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டு எதிர்க்கட்சிகளால்
முன்வைக்கப்பட்டன. மழைக்காலக் கூட்டத் தொடரிலும் அதைப் போலவே எந்தவொரு
விவாதமும் நடக்காமல் பாஜக பார்த்துக்கொள்ளும் என்றே கருதப்படுகிறது.
ஏனென்றால், விவாதம் நடைபெற்றால் முதல் விஷயமாக நம்பிக்கையில்லாத்
தீர்மானத்தையே எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது நாடாளுமன்ற விதி. அதற்கு
பாஜக சம்மதிக்குமா என்று தெரியவில்லை.
எனவே, காவிரி நதி நீர் ஆணைய மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும்
வைத்து ஒப்புதல் பெறுவதென்பது உடனடியாக நடைபெறக்கூடிய ஒன்று அல்ல. அதற்கு
ஓராண்டுகூட ஆகலாம். அதற்குள் இப்போதுள்ள பாஜக ஆட்சி முடிவுக்கு
வந்துவிடலாம். இதனால், உச்ச நீதிமன்றத்துக்கும் செல்ல முடியாமல்,
ஆணையமும் அமைக்கப்படாமல் ஒரு திரிசங்கு நிலைக்குத் தமிழகம்
தள்ளப்பட்டிருக்கிறது.
சட்டத்தில் உள்ள முரண்பாடு
இந்த இடத்தில் மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் தாவா சட்டத்தின்
பிரிவுகளுக்கு இடையேயுள்ள முரண்பாடு ஒன்றையும் நாம் கவனத்தில் கொள்ள
வேண்டியிருக்கிறது. அந்த முரண்பாடு காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித்
தீர்ப்பில் அப்போதே சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. (நடுவர் மன்ற இறுதித்
தீர்ப்பு தொகுதி 5, பக்கம் 220-221) “மாநிலங்களுக்கிடையிலான நதி நீர்
தாவா திருத்தச் சட்டம் 2002 பிரிவு 6 (2)இல், ‘நடுவர் மன்றத்தின் இறுதித்
தீர்ப்பு மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டால் உச்ச நீதிமன்றத்தின்
இறுதி உத்தரவுக்குச் சமமான அதிகாரத்தைப் பெறுகிறது” என்று
கூறப்பட்டுள்ளது. அதே சட்டத்தின் பிரிவு 6 (A) (7) ”இறுதித் தீர்ப்பின்
அடிப்படையில் உருவாக்கப்படும் செயல் திட்டம் நாடாளுமன்றத்தின் இரு
அவைகளிலும் வைக்கப்பட்டு அதில், திருத்தங்கள் ஏதும் செய்யப்பட்டால்
அதையும் உள்ளடக்கி அதன் பின்னர் நடைமுறைக்கு வரும்” எனக்
குறிப்பிடப்பட்டுள்ளது. “உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு
(Decree) இணையான ஓர் ஆணையை நாடாளுமன்றத்தில் வைத்துத் திருத்தம்
செய்யலாம் என்று சொல்வது முரண்பாடாக உள்ளது” என நடுவர் மன்றம் அப்போதே
கூறியிருந்தது. இதைத் தற்போது நடைபெற்ற உச்ச நீதிமன்ற வழக்கு
வாதத்தின்போது யாருமே சுட்டிக்காட்டவில்லை. அதனால், இந்த முரண்பாடு
இன்னும் களையப்படாமலேயே இருக்கிறது.
18.05.2018 அன்று அளித்துள்ள தீர்ப்பு, இறுதித் தீர்ப்பு என்றும், இந்த
வரைவுத் திட்டத்தை அரசிதழில் உடனடியாக வெளியிட வேண்டும் என்றும் உச்ச
நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால், நதி நீர் தாவா சட்டம் 6(A) (7)இல்
உள்ளபடி இந்த வரைவுத் திட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும்
வைக்கப்பட்டாக வேண்டும். அப்படி வைக்கப்படாமல் நேரடியாகவே அரசிதழில்
வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூற முடியாது. ஏனென்றால், அது
நாடாளுமன்றத்தின் சட்டம் இயற்றும் அதிகாரத்தில் தலையிடுவதாகிவிடும்.
நீதிமன்றத்திலிருந்து நாடாளுமன்றத்துக்கு
இந்தச் சட்ட முரண்பாடு இருப்பதால் தமிழ்நாட்டுக்குக் காவிரித் தண்ணீர்
உடனடியாகக் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும்
இந்த வரைவுத் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டாலன்றி காவிரி மேலாண்மை
ஆணையத்தையும் உருவாக்க முடியாது. இதெல்லாம் தமிழக அரசின் தரப்பில் ஆஜரான
வழக்கறிஞருக்குத் தெரியுமோ, தெரியாதோ. ஆனால், மத்திய அரசுக்கும், அதன்
சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலுக்கும் நன்றாகவே
தெரியும். அதனால்தான் அவர்கள் எப்படியாவது உச்ச நீதிமன்றத்தில் இந்த
வழக்கை முடித்துக்கொண்டால் போதும் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.
காவிரிப் பிரச்சினை உச்ச நீதிமன்றத்தில் முடிவுக்கு வந்துவிட்டது.
இப்போது அது, மத்திய அரசின் தயவை எதிர்பார்த்து நாடாளுமன்றத்தின் வாசலில்
காத்து நிற்கிறது. மத்தியில் ஆளும் மோடி அரசாங்கம் தமிழ்நாட்டுக்கு
நியாயம் செய்யுமா என்பதை இனிமேல்தான் நாம் பார்க்க வேண்டும்.
(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: முனைவர் ரவிக்குமார் அரசியல், கலை,
இலக்கிய விமர்சகர். மணற்கேணி ஆய்விதழின் ஆசிரியர். முன்னாள் சட்டமன்ற
உறுப்பினர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர். இவரைத்
தொடர்புகொள்ள:
adhe...@gmail.com)