அறிவியல் ஆயிரம் : சோலைவனமாகும் பாலைவனம்
பாலைவனத்தை சோலைவனமாக்கும் விதமாக அங்கு மரங்களை வளர்க்கும் 'பசுமை பெருஞ்சுவர்' திட்டத்தை சீனா 48 ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது. இதன்படி அந்நாட்டின் கோபி, டக்லமக்கான் உள்ளிட்ட பாலைவனங்களில் இதுவரை 6600 கோடி மரக்கன்றுகளை நட்டுள்ளது. மற்ற இயற்கை காடுகளை விட, இதன் இலை பரப்பு 66 சதவீதம் வேகமான விகிதத்தில் அதிகரித்தது என கண்டறியப்பட்டுள்ளது. 2050க்குள் மேலும் 3400 கோடி மரக்கன்றுகளை நட சீனா திட்டமிட்டுள்ளது. சுற்றுச்சூழலை பாதிக்கும் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சுவதே இத்திட்டத்தின் நோக்கம்.
தகவல் சுரங்கம் : சர்வதேச கூட்டுறவு தினம்
நாட்டின் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பில் கூட்டுறவு துறை முக்கிய பங்கு வகிக்கிறது. உலகில் 30 லட்சம் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. மக்கள்தொகையில் 12 சதவீதம் பேர் இதில் இணைந்துள்ளனர். 28 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறது. ஐ.நா., சார்பில் ஜூலை முதல் சனி (ஜூலை 4ல்) சர்வதேச கூட்டுறவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'அமைதியான உலகிற்கு கூட்டுறவு' என்பது இந்தாண்டு மையக்கருத்து. உலகில் 1761ல் ஸ்காட்லாந்தில் கூட்டுறவு அறிமுகமானது. 1844ல் இங்கிலாந்தில் பருத்தி மில் பணியாளர்கள் 28 பேர் உலகின் முதல் நவீன கூட்டுறவு சங்கத்தை தொடங்கினர்.