அறிவியல் ஆயிரம் : வேகமாக மூழ்கும் நகரம்
கடல் நீர்மட்டம் உயர்வால் லட்சக்கணக்கான மக்கள் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள நிலையில், இது மேலும் அதிகரிக்கிறது என ஜெர்மனியின் முனிச் தொழில்நுட்ப பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. இதன்படி வேகமாக மூழ்கும் நகரங்களில் இந்தோனேஷியாவின் ஜகார்தா, முதலிடத்தில் உள்ளது. அங்கு ஆண்டுக்கு 13.7 மி.மீ., அளவில் கடல் நீர்மட்டம் உயர்கிறது. அடுத்து சீனாவின் டியான்ஜின் (1.5 மி.மீ.,), தாய்லாந்தின் பாங்காக் (8.5 மி.மீ.,) உள்ளன. பருவநிலை மாற்றம், வெப்பமயமாதலால் உருகும் பனி ஆறுகள், வெப்ப நீரின் விரிவாக்கம் ஆகியவை கடல் நீர்மட்டம் உயர்வுக்கு காரணமாகிறது.
தகவல் சுரங்கம் : பல்லுயிர் பாதுகாப்பு தினம்
ஒவ்வொரு உயிரினத்துக்கும் வெவ்வேறு வாழ்க்கை முறை, வாழ்விடம் உள்ளது. பல்லுயிரிகள் இருந்தால் தான் பூமியில் சமநிலை ஏற்படும். நாம் உணவு உள்ளிட்ட தேவைக்கு பல்லுயிர்களை சார்ந்துள்ளோம். இவற்றை பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா. சார்பில் மே 22ல் சர்வதேச பல்லுயிர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. நீர், நிலத்தில் வாழும் உயிரின வகைகளின் தொகுப்பு தான் 'பல்லுயிர் பரவல்'. பூமியில் 10 லட்சம் விலங்குகள், தாவர இனங்கள் அழியும் நிலையில் உள்ளன. 'உலகளாவிய தாக்கத்திற்காக உள்ளூரில் செயல்படுதல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.