அறிவியல் ஆயிரம்உயிரினங்களை பாதிக்காத மின் உற்பத்தி
நெதர்லாந்தின் ஜூவோலியில் உள்ள செயற்கை ஏரியில், 2020ல் மிதக்கும் சோலார் நிலையம் அமைக்கப்பட்டது. 70 ஆயிரம் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன. 27 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. சோலார் பேனல்களுக்கு கீழ் 'பயோ குடில்கள்' நிறுவப்பட்டு மூன்று ஆண்டுகள் கண்காணிக்கப்பட்டன.
இந்நிலையில் தற்போது இவற்றின் கீழ் நுாற்றுக்கணக்கான மீன்கள், நீர்வாழ் உயிரினங்கள் வாழ்வதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். சோலார் பேனல்கள் பறவைகளின் பார்வையை மறைப்பதால், குடில்களில் வாழும் மீன்களுக்கு கூடுதல் பாதுகாப்பு கிடைக்கிறது.
தகவல் சுரங்கம் : உலகின் பெரிய சூரிய கடிகாரம்
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் 'ஜந்தர் மந்தர்' எனும் திறந்தவெளி வானியல் கோளரங்கம் உள்ளது. பரப்பளவு 4.6 ஏக்கர். 19 வானியல் கருவிகள் உள்ளன. வானியல் நிலைகளை நேரடியாக பார்க்கலாம். இங்கு உலகின் பெரிய சூரிய கடிகாரமும் உள்ளது. உயரம் 90 அடி. அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முன், நேரத்தை அறியும் விதமாக அமைக்கப்பட்டது. இது 1734ல் ராஜ்புத் மன்னர் சவாய் ஜெய் சிங் ஆட்சியில் கட்டப்பட்டது. இது யுனெஸ்கோவின் பாரம்பரிய பண்பாட்டு சின்னங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. டில்லி, மதுரா, உஜ்ஜயினி, வாரணாசியிலும் 'ஜந்தர் மந்தர்'களை அமைத்தார்.