அறிவியல் ஆயிரம் : புலிகளின் தனித்தன்மை
மனிதர்களைப்போல விலங்குகளுக்கு நிறங்கள் துல்லியமாக தெரியாது. பெரும்பாலான விலங்குகளுக்கு கறுப்பு வெள்ளையாகத்தான் காட்சி புலப்படும். இந்நிலையில் புலி, வரிக்குதிரை உள்ளிட்ட விலங்குகள் தங்களது உடலில் உள்ள கோடுகளை வைத்து எதிரிகளிடம் இருந்து தப்புகின்றன. அதாவது புலிகளின் கோடுகள் மூலம் அவற்றின் உருவம் முழுமையாகத் தென்படாது. அதனால் புலியை விரைவில் காணமுடியாது. புலிகள் புல்வெளியில் நடந்து செல்லும்போது அதன் கோடுகள்எதிரி விலங்குகளுக்கு புற்களின் நிழல் போன்ற தோற்றம் தரும். இதனால் புலி எளிதில் தப்பி விடுகிறது.
தகவல் சுரங்கம் : சர்வதேச 'ஜாஸ்' தினம்
பொதுவாக இசை என்பது மனதை மகிழ்விப்பதுடன், உலக மக்களை ஒருங்கிணைக்கும் கருவியாகவும் செயல்படுகிறது. உலகளவில் பல்வேறு இசை வகைகள் உள்ளன. 'ஜாஸ்' என்பது அமெரிக்காவின் பாரம்பரிய இசையாக கருதப்படுகிறது. 'ஜாஸ்' இசைக் கலைஞர்களை அங்கீகரிக்கும் விதமாக ஐ.நா.,வின் யுனெஸ்கோ சார்பில் சர்வதேச 'ஜாஸ்' தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'ஜாஸ்' தினம் என்பது இசையை கொண்டாடுவது மட்டுமல்ல. உலகளவில் கல்வி, பல்வேறு கலாசாரத்தை புரிந்து கொள்வதற்கான வாய்ப்பாகவும் அமைகிறது.