சிலப்பதிகாரம் சிலம்பு- அதிகாரம் என்ற இரு சொற்களால் ஆனது. சிலம்பு
காரணமாக விளைந்த கதை ஆனதால் சிலப்பதிகாரம் ஆயிற்று. இந்நூல் தமிழில் எழுதப்பட்ட
ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று.இது பாட்டிடையிட்ட தொடர்நிலைச் செய்யுள் எனவும்
வழங்கப்படுகிறது. இக்காப்பியத்தில் இயல், இசை, நாடகம் என்னும் மூன்றனையும் காணலாம். கி.
பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்பர். ஏனைய நூல்கள் அரசனையோ தெய்வங்களையோ
பாட்டுடைத் தலைவனாகக் கொண்டிருக்க சிலப்பதிகாரம் கோவலன் என்ற குடிமகனைப் பாட்டுடைத்
தலைவனாகக் கொண்டதால் இதனை 'குடிமக்கள் காப்பியம்' என்றும் கூறுவர். இன்பியலும்
துன்பியலும் கலந்து எழுதப்பட்ட இந்நூலை இயற்றியவர் இளங்கோ அடிகள் என்பவராவார். இவர் புகழ்
பெற்ற சேரமன்னன் செங்குட்டுவனுடைய தம்பி எனக் கருதப்படுகின்றது.
முதன்மைக் கட்டுரை: சிலப்பதிகாரம் தோன்றிய காலம்
காலம்
•சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள்.[1]
•மலையாள மொழி [2] கி.பி. ஆறாம் நூற்றாண்டில் தோன்றியது. மணிமேகலை வஞ்சி மூதூர்
சென்று பல்வேறு சமயங்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தது மலையாளத்தில் அன்று. தமிழில்.
எனவே மணிமேகலை காலம் ஆறாம் நூற்றாண்டுக்கு முந்தையது.
•புகார் நகரத்தில் சிவன்கோயில் இருந்ததாச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. [3] 276
ஊர்களிலிருந்த சிவன்கோயில்களைக் குறிப்பிடும் தேவாரம் இதனைக் குறிப்பிடவில்லை. எனவே
புகார் நகரைக் கடல் கொண்டது தேவாரம் தோன்றிய 7 ஆம் நூற்றாண்டுக்கு முந்தியது.
•புகார் நகரத்தில் பலராமனுக்கும், கண்ணனுக்கும் தனித்தனிக் கோயில்கள் இருந்ததைச்
சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. [4] 108 திருப்பதிகளைக் காட்டும் நாலாயிர திவ்வியப்
பிரபந்தம் நூலில் இந்தக் கோயில் பற்றிய செய்தியே இல்லை. இதனாலும் சிலப்பதிகாரம் 7 ஆம்
நூற்றாண்டுக்கு முந்தியது என்பது உறுதியாகிறது.
•கண்ணகி விழாவுக்குச் சென்றிருந்த இலங்கை மன்னன் கயவாகு தன் நாட்டு இலங்கையில்
எழுப்பப்போகும் கோயிலிலும் எழுந்தருளும்படி, கண்ணகி தெய்வத்தை வேண்டிக்கொள்கிறான். [5]
•இந்தக் கயவாகு காலம் கி.பி. 171-193 [6]
•தேவாரம், திவ்வியப் பிரபந்தம், கம்பராமாயணம், சீவகசிந்தாமணி முதலான நூல்கள் விருத்தப்பா
என்னும் பா வகையைத் தோற்றுவிப்பதற்கு முன்னர் வழக்கில் இருந்த ஆசிரியப்பா [7] நடையில்
அமைந்துள்ள சிலப்பதிகாரமும், மணிமேகலையும் அந்த நூல்களுக்கு முந்தியவை. [8]
•எனவே இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காப்பியங்களின் காலம்
கி.பி. இரண்டாம் நூற்றாண்டு.
இளங்கோவடிகள்
முதன்மைக் கட்டுரை: இளங்கோவடிகள்
இவர் இளவரசுப் பட்டத்தை விடுத்துத் துறவு வாழ்க்கையை மேற்கொண்டார். தன் அண்ணன்
செங்குட்டுவனுடன் மலை வளம் காணச் சென்றபோது, கண்ணகியைப் பற்றிய செய்தியை சீத்தலைச்
சாத்தனார் எனும் புலவர் மூலமாக அறிந்தார் இளங்கோ. கண்ணகியின் கற்பொழுக்கமும், பாண்டிய
மன்னன் நெடுஞ்செழியனின் நேர்மையும் அரசியல் நடுநிலைமையும் அவரை மிகவும் கவர,
மூவேந்தர்களுக்கும் உரிய தமிழின் உயர் காவியமாக சிலப்பதிகாரத்தை கவிபுனைந்தார் அவர்.
சிலப்பதிகாரம் கோவலன், கண்ணகி மற்றும் கோவலனின் துணைவி மாதவி ஆகியோரது வரலாற்றை
விவரிக்கின்றது. இதன் இரட்டைக் காப்பியமாகத் திகழும் மணிமேகலை, ஆடலரசி மாதவியின் மகள்
மணிமேகலையின் வரலாற்றை உரைக்கும் காவியமாகும். இதனை எழுதியவர் கூலவாணிகன் சீத்தலைச்
சாத்தனார் எனும் புலவர் ஆவார்.
நூலமைப்பு
காப்பியங்களுக்கான இலக்கண அமைப்பு அனைத்தும் பொருந்தி வரும்படி இயற்றப்பட்ட
காப்பியமாகும். காவிரி, வைகை முதலான ஆறுகளும் புகார், உறந்தை, மதுரை , வஞ்சி
முதலான் நகரங்களும், குரவைக் கூத்து முதலிய கூத்துகளும், திருமால் முதலிய
தெய்வங்களும், அடர்ந்து வளர்ந்த பெருங்காடுகளும் இந்நூலில் நன்கு வருணிக்கப்பட்டுள்ளன.
அக்காலத் தமிழ் மக்களின் வாழ்க்கை பற்றிய செய்திகள் இதில் இடம் பெற்றுள்ளன. சிலப்பதிகாரப்
பதிகம் இதனை உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் எனக் குறிக்கின்றது. இடையிடையே
உரைகளும் வரிப்பாட்டுகளும் கலந்து வந்துள்ளன. பொருட்செறிவு, தெளிவான இனிய எளிய
நடையுடன், அணிகள் பல பொதிந்த தமிழின் வளமான நூலாகும். இறையனார் களவியல் உரைகாரர்,
இளம்பூரனார் போன்ற உரையாசிரியர்களால் மேற்கோளாக எடுத்தாளப்பட்ட பெருமை உடையது.
தமிழறிஞர்களால் மிகுதியாக ஆய்வுக்கு உட்பட்ட நூல் இதுவேயாகும். சிலப்பதிகாரம் , நூல்
முகத்தில் உரைப் பாட்டினையும், கானல் வரி, வேட்டுவ வரி, ஆற்றுவரி, ஊசல்வரி,
கண்புகுவரி என்னும் இசைப்பாட்டுகளும் நிறைந்தது. புகார் காண்டம், மதுரைக் காண்டம் மற்றும்
வஞ்சிக் காண்டம் எனும் உட்பகுப்புகளால் பிரிக்கப்பட்டுள்ளது.
காண்டங்கள்
•புகார் காண்டம்
•மதுரை காண்டம்
•வஞ்சிக் காண்டம்
கதை
காவிரிப்பூம்பட்டினத்து பெரு வணிகன் மாசாத்துவானின் மகன் கோவலன். இவன் கலையுணர்வும்,
வறியோர்க்கு உதவும் நற்பண்பும் மிக்கவன். காவிரிப்பூம்பட்டினத்துப் பெருவணிகன் மாநாய்கனின்
மகள் கண்ணகி. இவள் திருமகள் போன்ற அழகும்,அழகிய பெண்கள் போற்றும் பெருங்குணச்சிறப்பும்,
கற்புத்திறமும் கொண்டவள். இவ்விருவரும் மனையறம் பூண்டு, இன்புற்று வாழ்ந்தனர்.
கோவலன் ஆடலரசி மாதவியை விரும்பிக் கண்ணகியை விட்டுப் பிரிந்தான். அவன் மாதவி
இல்லத்திலேயே தங்கித் தன் செல்வத்தையெல்லாம் இழந்தான். மாதவி இந்திர விழாவில் கானல் வரிப்
பாடலைப் பாடினாள். பாடலின் பொருளைத் தவறாகப்ப் புரிந்து கொண்ட கோவலன், மாதவியை
விட்டுப் பிரிந்தான், பிரிந்தவன் தன் மனைவி கண்ணகியிடம் சென்றான். தான் இழந்த செல்வத்தை
ஈட்ட எண்ணினான்.வணிகம் செய்தற்பொருட்டுக் கண்ணகியுடன் மதுரைக்குச் சென்றான். அவர்களுக்கு
வழித்துணையாகக் கவுந்தியடிகள் என்னும் சமணத் துறவி சென்றார்.அவர்,மதுரை நகர்ப்புறத்தில்
மாதரி என்னும் இடைக்குல மூதாட்டியிடம் அவ்விருவரையும் அடைக்கலப்படுத்தினார். கோவலன்
சிலம்பு விற்று வர மதுரை நகரக் கடை வீதிக்க்குச் சென்றான். விலை மதிப்பற்ற காற்சிலம்பு
ஒன்றைக் கோவலன் விற்பதைப் பாண்டிய மன்னனின் பொற்கொல்லன் அறிந்தான்.
பாண்டிமாதேவியின் காற்சிலம்பைக் களவாடிய பொற்கொல்லன், பொய்யான பழியைக் கோவலன் மேல்
சுமத்தினான். அதனை ஆரய்ந்து பாராத மன்னன் அவனைக் கொன்று, சிலம்பைக் கொணர்க என்று
ஆணையிட்டான். கோவலன் கொலை செயப்பட்ட செய்தியை மாதரி மூலம் அறிந்த கண்ணகி;
பெருந்துயருற்றாள். அவள் தன் கணவன் கள்வன் அல்லன் என்பதை மன்னனுக்கும் உலகோர்க்கும் உணர்த்த
எண்ணினாள்.மன்னனின் அனுமதியோடு, வாயிற்காவலன், கண்ணகியை பாண்டிய மன்னனிடம் அழைத்துச்
சென்றான். மன்னன் கண்ணகியை நோக்கி " நீரொழுகும் கண்களுடன் எம்முன் வந்து நிற்கும் நீ, யார்?"
என வினவினான். கண்ணகி மன்னனை நோக்கி, "ஆராய்ந்து நீதி வழங்காத மன்னனே! உன்னிடம்
கூறுவது ஒன்றொண்டு என உரைக்கத் தொடங்கினாள். "புறாவின் துன்பத்தைப் போக்கிய சிபி
மன்னனும் தன் அரண்மனை மணி ஒலித்ததைக் கேட்டுப் பசுவின் துயர் அறிந்து தன் ஒப்பற்ற மகனையே
தேர்ச்சக்கரத்திலிட்டுக் கொன்ற மனுநீதிச் சோழனும் வாழ்ந்த, பெரும்புகழுடைய புகர் நகரமே,
யான் பிறந்த ஊர். அப்புகார் நகரில் பழியில்லாத சிறப்பினையுடைய புகழ்மிக்க குடியில்
தோன்றிய மாசத்துவான் மகனை மணம் புரிந்தேன். வீரக்கழலணிந்த மன்னனே! ஊழ்வினைப் பயனால்
வாழ்வதற்க்காக நின் மதுரை நகரத்திற்கு வந்து, என் காற்சிலம்பினை விற்க முயன்று, உன்னால்
கொலை செய்யப்பட்ட கோவலன் மனைவி, நான். கண்ணகி என்பது என் பெயர் " என்று கூறினாள்.
பாண்டிய மன்னன் கண்ணகியிடம்" கள்வனைக் கொலை செய்தல் கொடுங்கோலன்று. அதுவே அரச நீதி என்று
கூறினான். அதற்குக் கண்ணகி "அறநெறியில் செல்லாத அரசனே! என் காற்சிலம்பு, மாணிக்கப்
பரல்களைக் கொண்டது" என்றாள். அதற்கு அரசன் "நீ கூறியது, நல்லதே! எம்முடைச் சிலம்பின்
பரல்கள் முத்துகளே" என்றான். கோவலனிடமிருந்து கைப்பற்றிய சிலம்பைத் தருவித்து, அவள் முன்
வைத்தான்.வைத்த அச்சிலம்பைனைக் கண்ணகி எடுத்து ஓங்கி உடைத்தாள். அதிலிருந்து வெளிப்பட்ட
மாணிக்கப்பரல் ஒன்று பாண்டிய மன்னனின் உதட்டில்பட்டுத் தெறித்தது. அம்மாணிக்கப் பரல்களைக்
கண்ட பாண்டிய மன்னன் தாழ்வுற்ற குடையனாய், சோர்வுற்ற செங்கோலனாய், "பொன் தொழில் செய்யும்
கொல்லனின் பொய்யுரை கேட்டு, அறநெறி தவறிய, நானோஅரசன்! நானே கள்வன். அறந்தவறாது
குடிமக்களைக் காக்கும் தொன்மையாட்சி என் முதல் தவறியது. என் வாழ்நாள் அழியட்டும்"
என்றவாறே மயங்கி வீழ்ந்தான். மன்னனின் மனைவி உள்ளங்கலங்கி, உடல் நடுங்கி,கணவனை இழந்த
மகளிர்க்கு, எவ்விதத்திலும் ஆறுதல் கூற இயலாது என்று கூறித் தன் கணவனின் திருவடிகளை
வணங்கி நிலத்தில் வீழ்ந்து இறந்தாள்.
தொடரும்!.
--
இவன் முனைவர். சே. திவாகர்.
வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர் தம்
உள்ளத் தனையது உயர்வு.
மின்னஞ்சல்:
divak...@gmail.com,
nagad...@gmail.com
அலைப் பேசி எண்: 9444143645