Professor S. DIVAKAR
unread,Feb 8, 2016, 11:48:06 AM2/8/16Sign in to reply to author
Sign in to forward
You do not have permission to delete messages in this group
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
to valluva...@googlegroups.com, brail...@googlegroups.com
மொத்தம் எத்தனை நாயன்மார்கள்? 63ஆ 72ஆ? நல்லா யோசிச்சி பதில் சொல்லுங்க!
மயிலை அறுபத்து மூவர் விழாவுக்குப் போயிருக்கீங்க தானே? நாயன்மார்கள் மொத்தம் 63ஆ or
72ஆ? ஹிஹி! இது என்ன புதுக்கதை? பார்க்கலாம் வரீங்களா?
நாயன்மார்கள் - தொண்டில் பழுத்த சிவனடியார்கள்!
ஆழ்வார்கள் பட்டியலை விட நாயன்மார்கள் தொகுப்பு எனக்கு மிகவும் பிடிக்கும்! ஏன்?
ஆழ்வார்கள் பன்னிரண்டு பேர் தான்! அத்தனை பேரும் பாசுரம் பாடி இருக்கணும்! அப்படித் தான்
பட்டியலைத் தொகுத்துள்ளார்கள்!
ஆனால் நாயன்மார்களில் அப்படி இல்லை! இவர்கள் அத்தனை பேர்களுமே பாடலோ பதிகங்களோ
எழுதியிருக்கணும் என்பது அவசியம் இல்லை!
சுமார் இருபது பேர் தான் பதிகங்கள் செய்திருப்பார்கள்! மீதமுள்ளவர் எல்லாம் சிவபிரானின்
தொண்டு புரிந்தவர்கள் மட்டுமே!
அவர்களையும் பட்டியலில் சேர்த்து விட்டதால், இன்னும் பல அடியவர்களின் கதை, நமக்குத் தெரிய
வருகிறது அல்லவா? அதனால் தான் நாயன்மார்களின் தொகுப்பு முறை எனக்கு மிகவும் பிடிக்கும்!
Aalwars
ஆழ்வார்கள் பன்னிருவர் மட்டுமே! இறைவனின் ஒவ்வொரு அம்சமாய் ஒவ்வொருவர் தோன்றினர்
என்பதாலும், துவா+தச ரூபமாய், பன்னிரெண்டிலேயே நின்று போய் விடுகிறது!
அடியேன் முன்பே சொன்னது போல, உலக மக்கள் தொகையான 660 கோடி பேரும் ஆழ்வார்கள் தான்!
இறைவனை எண்ணி, வாழ்வில் ஒரு முறையேனும் கண்ணீர் சிந்தி இருப்பார்கள் அல்லவா! ஆழ்ந்து
இருப்பார்கள் அல்லவா! ஆக மொத்தம் 660 கோடி ஆழ்வார்கள்!
இறைவனிடம் ஆழ்ந்தவர்கள் அனைவரையும் "ஆழ்வான்" என்று சொல்லும் மரபு உள்ளது! கருடாழ்வார்,
இளையாழ்வான், பரதாழ்வான், சத்ருக்கனாழ்வான், விபீஷணாழ்வான் முதற்கொண்டு கூரத்தாழ்வான், கம்ப
நாட்டாழ்வான் வரை பலப்பல ஆழ்வார்கள்!
ஆனாலும் இவர்களைப் பன்னிருவர் பட்டியலில் பொதுவாகச் சேர்ப்பதில்லை! அடியார்கள் என்ற
தனிப்பட்டியலில் தான் சேர்ப்பார்கள்!
வேதங்களைத் தமிழ் செய்து, பாசுரங்களாகப் "பாடியவர்கள்" மட்டுமே பன்னிரு ஆழ்வார்களில் சேர்த்தி!
ஆனால் நாயன்மார்களை மட்டும் யார் இப்படி அழகாகத் தொகுத்து வைத்தார்கள்? பதிகம்
பாடியவர்கள்/பாடாதவர்கள் என்று எல்லாரையும் அரவணைத்துத் தொகுத்தவர் யார்?
* தம்பிரான் தோழர்!
* முன்னூட்டமோ, பின்னூட்டமோ....இறைவனுடனே சண்டை போடக் கூடியவர்!
* வன் தொண்டர்! இறைவனையே பித்தா என்று "டகால்ட்டியாகப்" பேசக் கூடியவர்! :)
சுந்தரமூர்த்தி நாயனார் தான் இப்படித் தொகுத்தது! அவர் காலத்தில் நாயன்மார்களின் எண்ணிக்கை
60+9!
135969193_eae437c57f_b
திருவாரூர் பரவை நாச்சியார் வீட்டிலிருந்து, ஆலயத்துக்குச் செல்கிறார் புது மாப்பிள்ளை
சுந்தரர்! வீதி விடங்கப் பெருமானைத் தரிசிக்க உள்ளே நுழைகிறார்!
அப்போது அங்கு தேவாசரிய மண்டபத்தில் உள்ள சிவனடியார்களை பலரைக் காண்கிறார்!
இவர்களை விடத் தான் மட்டும், அப்படி என்ன பெருசா பக்தியில் சிறந்து விட்டோம்? இறைவன் நம்
மீது மட்டும் இவ்வளவு கருணை காட்டுகிறாரே? என்ற எண்ணம் அவர் சிந்தையில் ஓடுகிறது! அந்த
ஓட்டத்தில், அடியார்களுக்கு வெளிப்புற வணக்கம் சொல்லாது, ஆழ்ந்த யோசனையில் உள்ளே சென்று
விடுகிறார்!
ஆனால் இதைத் தவறாகப் புரிந்து கொண்டார் அங்கிருந்த விறன்மிண்டர்!
"இனி சுந்தரர் எங்கள் குழுவில் இல்லை, அவருக்கு அருள் செய்யும் ஈசனும் எங்கள் குழுவில்
இல்லை"-ன்னு ஒரு கமென்ட் அடிச்சிட்டாரு! :)
இறைவன் பதறிப் போய் சுந்தரருக்கு அடி எடுத்துக் கொடுக்க...சுந்தரர் அத்தனை பேரையும்
மனதாலேயே வணங்கிக் கொள்கிறார்!
இவர்களுக்கு எல்லாம் நான் "அடியேன்" ஆக மாட்டேனா என்று நினைக்கிறார்!
அதாச்சும் தொண்டர்களுக்கு எல்லாம் அடியேன்! தொண்டரடிப்பொடி!
சைவத் தொண்டரடிப்பொடியாழ்வார் அல்லவோ சுந்தரமூர்த்தி சுவாமிகள்!
ஈசன் அடியார்கள் பற்றி முதலடி எடுத்துக் கொடுக்க,
"தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்" என்று பாடத் துவங்குகிறார்!
அதாச்சும் தில்லை இறைவனுக்குத் தன்னை "உண்மையாலுமே" அர்ப்பணித்துக் கொண்ட தில்லை வாழ்
அந்தணர்கள்! அவர்களுக்கு அடியேன் என்று துவங்குகிறார்! பின்னாடியே
* திருநீலகண்டர்,
* இயற்பகை நாயனார்,
* இளையான்குடி மாற நாயனார்,
* மெய்ப்பொருள் நாயனார்,
* விறன்மிண்ட நாயனார்,
* அமர்நீதி நாயனார்
என்று...பட்டியல் அழகாய்த் தொடர்கிறது!
பாட்டைப் பார்க்கலாம் வரீங்களா? அப்படியே ஒரு ஓதுவார் நமக்குப் சொல்லியும் கொடுக்குறாரு!
தாளம் தப்பினால் மென்மையா கண்டிக்கறாரு! :)
தமிழிசை கேட்போமா? (கொல்லிக் கெளவாணம் என்ற திருமுறைப் பண்ணில்)! அப்படியே
கேட்டுக்கிட்டே படிங்க!
Powered by Podbean.com
natarajan
தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்!
திருநீல கண்டத்துக் குயவனார்க்கு அடியேன்!
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்!
இளையான்றன் குடி மாறன் அடியார்க்கும் அடியேன்!
வெல்லுமா மிக வல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன்!
விரிபொழில் சூழ் குன்றையார் விறன் மிண்டர்கு அடியேன்!
அல்லி மென் முல்லை அந்தார் அமர் நீதிக்கு அடியேன்!
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே!!
இப்படி உருவானது தான் திருத்தொண்டத் தொகை என்னும் நூல்! சைவத்தில் அடியார்களின் முதல்
நூல்! மொத்தம் 60+9 மக்களை, பேர் சொல்லிப் பாடுகிறார் சுந்தரர்!
பின்னாளில், இராசராசன் காலத்தில், நம்பியாண்டார் நம்பிகள் என்பவர் தேவாரப் பதிகங்களைத்
தில்லைச் ச(ன்னி)தியில் இருந்து மீட்டார் அல்லவா?
அப்போது, திருமுறைகள் எல்லாம் தொகுக்கப்பட்டன! நம்பியாண்டார் நம்பிகள் திருத்தொண்டர்
திருவந்தாதி என்று ஒரு நூலைப் பாடினார்!
அதில் சுந்தரரும் ஒரு நாயன்மாராக வைக்கப்பட்டார்! அவர் பெற்றோர்கள் சடையனார்-இசைஞானியார்
இருவரும் நாயன்மார்களாக வைக்கப்பட்டார்கள்!
60 என்பது 63 ஆகியது! அதனால் இப்போ 63+9!
பின்னால் வந்த சேக்கிழாரும் இதை ஒட்டியே 63+9 என்று பெரிய புராணம் பாடினார்!
எல்லாம் சரி தான்! அது என்னங்க 60+9-ன்னு சொல்றீங்க? அப்புறம் 63+9-ன்னு சொல்றீங்க?
இது என்ன சினிமா படத்தில் வருமே, குடும்பமே +2 ஆகி விட்டது என்பது போல, இங்கு +9
ஆகி விட்டதா என்ன? :) அது என்ன 63+9?
nalvar
தனியடியார் = 63!
தொகையடியார் = 9!
* அதாச்சும் ஊர், பேர் என்று அனைத்து தகவலும் உள்ளவர்கள்; தனிப்பட்ட மனிதர்கள் =
தனியடியார் = 63!
* இது தான் ஊர், இது தான் பேர் என்றில்லாது, பொதுவாகப் பல பேர்களும் செய்யும் தொண்டை
வைத்துப் போற்றுவது = தொகையடியார் = 9!
யார் யாரெல்லாம் இந்த ஒன்பது தொகையடியார்? சுந்தரர் சொல்வதையே கேளுங்களேன்!
1. தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்!
2. பொய்யடிமை யில்லாத புலவர்க்கும் அடியேன்
3. பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்!
4. பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்!
5. சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்!
6. திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்!
7. முப்போதுந் திருமேனி தீண்டுவார்க்கு அடியேன்!
8. முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்!
9. அப்பாலும் அடிச்சார்ந்த அடியார்க்கும் அடியேன்!
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே! ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே!
கொஞ்சம் விளக்கமாய்ப் பார்க்கலாமா தொகையடியார்களை?
1. தில்லை வாழ் அந்தணர் = இறைவனின் ஆலயப் பூசைக்கு/பணிக்கும் மட்டுமே தம்மை ஆட்படுத்திக்
கொண்டவர்கள்! இறைவனின் அம்பலத்தையே இறைவனாகக் கருதிக் காப்பாற்றுபவர்கள்! அந்தணர் என்போர்
அறவோர்! தில்லை வாழ் அந்தண சிவாச்சாரியார்கள்! (சிதம்பரம் தீட்சிதர்கள் என்போர் வேறு!)
2. பொய்யடிமை இல்லாத புலவர் = இறைவன் மேல் பொய் இல்லாத பாக்களை எழுதும் புலவர்கள்!
சமயம் காக்கும் பொருட்டும் கூட, பொய் கலவாது, மெய் மட்டுமே எழுதுவோர்! பொய்யிலாப் புலவர்கள்!
3. பத்தராய்ப் பணிவார்கள் = ஆணவம் இல்லாது பணிவு ஒன்றே தகுதியாகக் கொண்ட பக்தர்கள்!
இன்ன பிற அடியார்களைக் குலம்/மொழி/பால்/வேறு சமயம் என்று வெறுக்காது, பணிவை மட்டுமே
உடையவர்கள்!
4. பரமனையே பாடுவார் = இசைக் கலையில் தேர்ந்து, பரமனை மட்டும் தென்தமிழும் வடகலையும்
தேசிகமும் பேசிப் பாடுவார்கள்!
நாக்கொண்டு மானிடம் பாடாதவர்கள்! நாமார்க்கும் குடி அல்லோம்! நமனை அஞ்சாதவர்கள்!
5. சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார் = சதா சர்வ காலமும் சிவன் என்றே இருக்கும் சித்தர்கள்!
பிரம்ம ஞானிகள்! சதா சிவத்தவர்கள்!
6. திருவாரூர்ப் பிறந்தார்கள் = திருவாரூரிலே புற்றிடம் கொண்ட பெருமானின்
"தொண்டுக்கென்றே" பிறந்தவர்கள்!
7. முப்போதும் திருமேனி தீண்டுவார் = இறைவனின் ஆலயத் திருமேனியை முக்காலங்களிலும் தீண்ட
வல்ல சிவாச்சாரியார்கள்! கருவறையையே கயிலாயமாகக் கருதி ஒழுகுபவர்கள்! கருவறைக்குள்
ஆதியை அல்லாது அன்னிய வார்த்தைகள் பேசாதவர்கள்! ஆதிசைவ முனிவர்கள்!
8. முழுநீறு பூசிய முனிவர் = திருநீறு முழுதும் பூசிய முனி புங்கவர்கள்!
திருநீற்றினை உருவாக்கி ஊருக்குத் தரும் உத்தம நம்பிகள்! கற்பம், அனுகற்பம், உபகற்பம்
என்னும் மூன்று வகையான விபூதிகளைத் (திருநீற்றை) தயாரிப்பவர்கள்!
9. அப்பாலும் அடிச்சார்ந்த அடியார் = நம் நாட்டு நில எல்லைகளையும் கடந்து,
நிலம்/மொழி/மதம்/திணை என்று அதற்கு அப்பாலும் இறைவனின் திருவடியைச் சார்ந்தவர்கள்!
இறைவனின் அடி-முடி தேடிய போது, ஈசனின் அடியைப் பற்றிய பெருமாளும் அப்பாலும் "அடிச்
சார்ந்தவர்" தான்!
ஆணவத்தால் தேடினால் தலையும் தலைமையும் தெரியுமா?
பணிவால் பெருமாள் ஈசனின் அடியைத் தொட்ட போது, பதறிப் போனார் ஈசன்! எம்பெருமானா
எம்மடியைத் தொடுவது?
படக்கென்று குனிந்து ஈசன் பெருமாளைத் தூக்க...ஈசனின் தலை தெரிந்தது...
அடியைத் தொட்டார்! தலை தேட அவசியம் இல்லாமல், பொய் சாட்சித் தாழம்பூவுக்குத் தேவையே
இல்லாமல், தலை தானே தெரிந்தது!
பணியுமாம் என்றும் பெருமை, சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து!
இந்தத் தொகையடியார் 9 பேருக்குள்ளேயே, மற்ற 63 நாயன்மாரையும் அடக்கி விடலாம்! அப்படிப்
பார்த்தால் ஒன்பதே நாயன்மார்கள் தான்! :)
ஏனென்றால் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு தொண்டு செய்தவர்கள் தான்!
அவ்வளவு ஏன்? நீங்கள் சிவாலயத்துக்குப் பக்தியுடன் பூக்கள் கொடுப்பவரா? உங்களைக் கூடத்
தொகையடியாரில் அடக்கி, நாயன்மார்களில் ஒருவராக குறித்து விடலாம்! :)
ஆக மொத்தம் நாயன்மார்கள் உலக வழக்கத்துக்கு 63 தான் என்றாலும்,
தொகையடியார்களும் சேர்த்து 63+9=72!
தொகையடியார்கள் ஒவ்வொருவரையும் அவிங்க பேர் சொல்லி அடுக்கப் போனால், அடியேன் முன்பே
சொன்ன ஆழ்வார்களின் தொகை தான் வரும்! மொத்தம் 660 கோடி நாயன்மார்கள்!
நான் அத்தனை சிவனடியார்க்கும் அடியேன் என்று பாடுவதில் ஒரு தனி மகிழ்ச்சி! ஆனாலும் இந்த
அடியேனுக்கு ஒரே ஒரு வருத்தம்!
vacakar
* திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்னும் பெருமை பெற்றவர்!
* தமிழ்ச் சைவத்தைத் திருமூலருக்குப் பின் போற்றி வளர்த்த ஒரே சைவ சித்தாந்த பெருமகன்!
* "திருவாதவூரன் சொல்ல திருச்சிற்றம்பலத்தான் எழுதியது" - என்று இறைவனே
திருக்கடைக்காப்பு இட்ட நூலை உடையவர்!
* இப்படித் தில்லைச் சிற்றம்பலத்தில், இறைவனே உட்கார்ந்து கொண்டு, தமிழை எழுதியும்,
ஓதியும் உள்ளான்!
ஆனால் இன்னமும் கூட, தில்லைத் தீட்சிதர்கள், "தமிழை நந்திக்கு முன்னால் இருந்து ஓதக்
கூடாது, பின்னால் இருந்து தான் ஓதணும்! அதான் சிற்றம்பலத்தில் பாட வேண்டாம் என்று
சொன்னோம்" என்று லாஜிக் பேசிக் கொண்டு உள்ளனர்! :(
இத்துணை சிறப்பு வாய்ந்த எங்கள் மாணிக்க வாசகப் பெருந்தகை!
ஆனால், நால்வருள் மற்ற மூவரை 63-இல் வைத்துவிட்டு,
மாணிக்கவாசகரை மட்டும் 63 நாயன்மார்களுள் ஒருவராக வைக்காதது ஏனோ? ஏனோ? ஏனோ?
சைவப் பெருமக்கள் யாருக்கேனும் விடை தெரிந்திருந்தால் அறியத் தருமாறு அடியேன்
விண்ணப்பித்துக் கேட்டுக் கொள்கிறேன்!
திருவாசகம் ஈந்த மணி வாசகத்துக்கு அடியேன்!
திருவாத வூரன் உரை தண் தமிழுக்கு அடியேன்!
என்று சுந்தரர் பாடிய வரிகளில் இன்னும் இரண்டு வரிகள் சேர்த்துப் பாட மனம் விரும்புதே!
திருச்சிற்றம்பலம்! திருச்சிற்றம்பலம்!!