அறிவியல் ஆயிரம் : சூழலை காக்கும் கரப்பான் பூச்சி
பூமியில் உள்ள 4500 வகை கரப்பான் பூச்சிகளில் 30 மட்டுமே மனிதர்கள் சார்ந்த இடங்களில் வசிக்கின்றன. மற்றவை காடு, குகை, புல்வெளி, மண்ணில் வசிக்கின்றன. உதிர்ந்த இலை, சிதைந்த தாவரப் பொருட்கள், விலங்குகளின் கழிவுகளை உட்கொண்டு நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியத்தை மண்ணில் விடுகின்றன. இதனால் தாவரங்கள் அவற்றை உறிஞ்ச முடிகிறது. ஊட்டச்சத்து சுழற்சியை தக்க வைத்தல், மண் வளம் பேணுதல், உணவுச்சங்கிலி உறுதி செய்தல் உள்ளிட்ட பணிகளை செய்து, பூமியின் சூழல் அமைப்பை இயக்குகின்றன என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
தகவல் சுரங்கம் : உலக மாலுமிகள் தினம்
கடல் பயணம் என்பது பல்வேறு இயற்கை சவால்களை கடந்தது. இத்தகைய கடல் போக்குவரத்தை சுமூகமாக மேற்கொள்ள உதவும் கப்பல் மாலுமிகளின் பணியை கவுரவிக்கும் விதமாக சர்வதேச கடல்சார் அமைப்பு சார்பில் 2010 முதல் ஜூன் 25ல் உலக மாலுமிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகில் 90 சதவீத சரக்கு போக்குவரத்து வர்த்தகம் கடல் வழியே தான் நடைபெறுகிறது. இதிலிருந்து கப்பல் மாலுமிகளின் பணி எந்தளவுக்கு முக்கியம் என்பது தெளிவாகிறது. 'உலக வர்த்தகத்தை கையாளுதல்; ஆபத்தை கையாளுதல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.