ஒரு குழந்தையின் குமுறல்

3 views
Skip to first unread message

Sourirajan Saravanan

unread,
Aug 3, 2010, 10:03:59 PM8/3/10
to bc_te...@googlegroups.com
 
ஒரு குழந்தையின் குமுறல்

நான்
எத்தனை மணிக்கு
எழுந்திருக்க வேண்டும்
கடிகாரம்
தீர்மானிக்கிறது!

நான்
எதைச் சாப்பிடவேண்டும்
அம்மா
தீர்மானிக்கிறார்!

நான்
எதைப் படிக்கவேண்டும்
அப்பா
தீர்மானிக்கிறார்!

நான்
எதை உடுத்த வேண்டும்
பள்ளி தீர்மானிக்கிறது!

நான்
எத்தனை மணிக்குப்
படுக்க வேண்டும்
வீட்டுப்பாடம்
தீர்மானிக்கிறது!


நான்
எப்போது
உறங்க வேண்டும்
பசுமையில்லாத நினைவுகளும்,
ஈரமான எதிர்பார்ப்புகளும்
தீர்மானிக்கின்றன!


நான்
எவ்வாறு
உட்காரவேண்டும்
எப்படி
நடக்கவேண்டும்
கலாசாரம்
தீர்மானிக்கிறது!


நான்
ஓவியராக
விரும்புகிறேன்.


அப்பா
கையில் ஊசியைக்
கொடுக்கிறார்!

அம்மா
கையில் அளவுநாடா
கொடுக்கிறார்!

அண்ணன்
கையில் கந்தகத்தைக்
கொடுக்கிறார்!


எவருமே
என் கையில்
கொடுக்கவில்லை
தூரிகையை!

இருந்தும் நான்
ஓவியராக விரும்புகிறேன்.

அவரவர்
ஆசையை என்மீது
அடுக்கி வைக்கின்றனர்.
சுமை
பொறுக்காமல்
என் ஓவியக்கனவுகள்
கண் பிதுங்குகின்றன!



எனக்கு
விளங்கவேயில்லை
இவர்கள்
என்மீது பொழிவது
பாசமா,
பாரமா?



மனதிற்குள்
இவ்வாறு
கேள்வி வரும்
பெற்ற கடன் வசூலிக்க
மற்ற கடனை
சுமத்துகிறார்களோ?


உணர்ந்துகொள்ளுங்கள்
பெற்றோர்களே!

பாசத்தின் அர்த்தம்
உரிமை மீறலில்லை!
உறுதுணையாதல்.

சிறகுகளை
சிநேகிப்பவரை
நீர்க்குமிழிக்குள்
பயணம் செய்யச்சொல்லி
நிர்பந்திக்காதீர்கள்!


சிற்றெறும்பு கூட
தன் பாதையைத்
தானே தீர்மானிக்கிறது.
நீங்கள் ஏன்
என்
நந்தவனப் பாதையைப்
புறக்கணித்து
நகர சாலையைக்
கொடுக்கிறீர்கள்?


சாதனை என்பது
துறையால்
நிர்ணயிக்கப்படுவதில்லை,
நிறையால்
நிர்ணயிக்கப்படுகிறது!

என் வானத்தை
நானே
ஏற்படுத்திக்கொள்கிறேன்.
எதிர்வீட்டுக்காரனின்
எட்டாவது மாடியை
என் வானமென்று
ஏற்கச்சொல்லாதீர்கள்!


இப்படிக்கு
சாதிக்க நினைக்கும் குழந்தை
Reply all
Reply to author
Forward
0 new messages