தினந்தோறும் திருப்புகழ்

2,046 views
Skip to first unread message

Sundara Rajan

unread,
Sep 23, 2015, 6:53:16 AM9/23/15
to bangalor...@googlegroups.com, thiruppugazh anbargal
தினந்தோறும் திருப்புகழ் என்ற இந்தப் பகுதியில், திருப்புகழுடைய யாப்பு அமைப்பு, யாப்பில் அதன் தனிப்பட்ட சிறப்பு போன்றவற்றோடு, அன்றாடம் ஒவ்வொரு திருப்புகழை எடுத்துக்கொண்டு, அதற்கு விளக்கமாக சில குறிப்புரைகளையும், அந்தப் பாடலில் அமைந்திருக்கும் பொருளையும் விளக்க இருக்கிறார் ஹரி கிருஷ்ணன்.

திருப்புகழ் குறித்து… 

திருவள்ளுவர் தான் இயற்றிய நூலுக்குத் திருக்குறள் என்ற பெயரைச் சூட்டவில்லை. அதற்கு முப்பால் என்றும் வேறு பல பெயர்களும் வழக்கில் இருந்தன. குறள் என்பது இரண்டடியில் இயற்றப்படும் குறள் வெண்பாவுக்கான பெயர். அதுவே, ‘திரு’ என்ற அடைமொழியோடு திருக்குறள் என்ற நூற்பெயராக மாறியது. சொல்லப்போனால், நூலை இயற்றியவர் பெயர் திருவள்ளுவர் என்பதே, பிற்காலத்தில் திருவள்ளுவ மாலைக்குப் பின்னால் எழுந்த பெயர். அவரை தேவர் என்றும் வேறு பல பெயர்களாலும் பழைய நூல்கள் குறிக்கின்றன.

இதைப்போலவே, கம்பன் தன் காப்பியத்துக்கு இராமாவதாரம் என்றுதான் பெயர் சூட்டினான்.

நடையின்நின்று உயர் நாயகன் தோற்றத்தின்
இடை நிகழ்ந்த இராமாவதாரப் பேர்த்
தொடை நிரம்பிய தோம் அறு மாக்கதை
சடையன் வெண்ணெய் நல்லூர்வயின் தந்ததே

என்பது கம்பராமாயணம். காலப்போக்கில் இந்தப் பெயர் மறைந்து, இயற்றியவனுடைய பெயராலேயே ‘கம்பராமாயணம்’ என்று மக்களால் அழைக்கப்பட்டு, அந்தப் பெயரே நிலைத்துவிட்டது. இயற்றியவனுடைய பெயரால் வழங்கப்படும் ஒரே காப்பியம் என்று இக்காப்பியத்தைச் சொல்லலாம்.

ஆனால் திருப்புகழோ, இறைவனாலேயே சூட்டப்பட்ட பெயர். அருணகிரிநாதர் பல இடங்களில் இதைச் சொல்கிறார். எண் வரிசைப்படி, திருப்புகழில் இரண்டாவது பாடலாகக் கொள்ளப்படும் பக்கரை விசித்ரமணியில் அவர் சொல்கிறார் –  ( ref our article திருப்புகழ் பெயர் காரணம்)

செய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமொடு
செப்பெனஎ னக்கருள்கை மறவேனே

விருப்பத்தோடு திருப்புகழைச் சொல் என்று முருகா, நீ எனக்கருளியதை மறவேன் என்கிறார். இப்படிப் பல இடங்கள் உண்டு


இன்னும் வரும்


From    Dinamani

Rajans





.Yogah karmasu kausalam = gita 2-50

Sundara Rajan

unread,
Sep 23, 2015, 6:59:51 AM9/23/15
to thiruppugazh anbargal, bangalor...@googlegroups.com
பாடல் எழுந்த வரிசையில், முதலாவது ‘முத்தைத்தரு பத்தித்திருநகை’யும், அகரவரிசையில் முதலாவது ‘அகத்தினைக் கொண்டு’ என்ற திருக்கழுக்குன்ற திருப்புகழும்.

ஆனால், எண் வரிசையில் முதலாவதாகக் கருதப்படுவது விநாயகர் துதியாக உள்ளது இந்தப் பிரபலமான பாடல்.

எளிமையான திருப்புகழ்ப் பாக்களில் ஒன்றெனக் கருதப்படும் பாக்களில், நம் ‘இரட்டைப் பிள்ளையா’ரான ‘கைத்தல நிறைகனி’யும் ஒன்று.  பொருள் புரியும் வசதிக்காக, பாடலின் அமைப்பைக் கொஞ்சம் புதுக்கவிதையைப்போல பிரித்துப் போட்டுக்கொள்வோம்.

கைத்தல(ம்) நிறை கனி அப்பமொடு

அவல் பொரி

கப்பிய கரிமுகன் அடிபேணி..........

பெரும்பாலான பாக்கள், பெருமாளே என்று முடிவடையும். சில, தம்பிரானே என்று முடியும். ஈசன் என்பது திருமாலுக்கும் உரிய பெயர்தான். சிவனை மட்டுமே குறிப்பதாக எண்ணுகிறோம். அப்படியே பல பெயர்களும் பொதுப் பெயர்களே. திருமால் என்று சிவனையும், சிவன் என்று திருமாலையும் குறிக்கமுடியாது என்பதைத் தவிர, பெரும்பாலான பெயர்கள், அனைவருக்கும் பொதுவான ஒன்றே. முருகனை அருணகிரிநாதர் ‘பெருமாளே’ என்றழைப்பதைப் பார்த்து, ஓர் அன்பர் எழுப்பிய வினாவின் அடிப்படையில், இதை முதற் கருத்தாக வைக்கிறேன்.

என்னதான் பிரித்துப் போட்டாலும், இன்னமும் புரியாத சொற்கள் பல உள்ளன.  அவற்றை விளக்குவதற்காகத்தான் நாம் புகுந்திருக்கிறோம்.

முதல் அடியைப் பார்ப்போம் -

கைத்தல நிறைகனி அப்ப மொடு அவல் பொரி கப்பிய கரிமுகன் அடிபேணி...

இந்த அடியில், ‘கப்பிய’ என்ற சொல்லைத் தவிர, மற்றவை பழக்கப்பட்ட சொற்களாகத்தான் தெரிகின்றன.  ‘மூக்கப் பிடிக்க மொக்கினியா’ என்று நமக்குள் விளையாட்டாகக் கேட்டுக்கொள்வோம். அந்த முறையில்தான், ‘நிறைத்துக்கொண்ட’ என்ற பொருளில், ‘கப்பிய’ என்கிறார்.

இதுகூட பரவாயில்லை. கந்தரலங்காரக் காப்புச் செய்யுளில் சொல்கிறார் –

அடல் அருணைத் திருக்கோபுரத்தே அந்த வாயிலுக்கு

வடவருகில் சென்று கண்டுகொண்டேன் வருவார் தலையில்

தடபட எனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக்

கடதட கும்பக் களிற்றுக்கு இளைய களிற்றினையே.

நாம் பேசறோமே, ‘மூக்கப் பிடிக்க மொக்கறது’, அதே சொல்லைத்தான் இங்கே போடுகிறார் அருணகிரி.  (சர்க்கரை எனப்படுவது வெள்ளைச் சர்க்கரை இல்லை; வெல்லச் சர்க்கரை. அதை இன்னொரு சமயம் பாப்போம்).

கையாகிய தலத்தில், சுருக்கமாக கைநிறைய

கனி, அப்பம், அவல் பொரி

ஆகியவற்றை ‘கப்பிய’, கைநிறைய அள்ளி வைத்துக்கொண்டிருக்கிற

கரிமுகன் (யானைமுகன்). இங்கே ‘உடைய’ என்று வருவிச்சுக்கணும்.  யானைமுகனுடைய, அடிபேணி… அடியைப் பேணி, அதாவது போற்றி.

(பேணுதல்னா பாதுகாத்தல்னு ஒரு பொருள், விரும்புதல்னு ஒரு பொருள்.  இங்க விரும்புதல் அப்படிங்கற பொருள் பொருந்துது.  விரும்பினா போறாது.  விரும்பியதைப் போற்றவும் வேணும்.  அதனால போற்றின்னு சொன்னோம்).

கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ கற்பகம் எனவினை
கடிதேகும்

கற்பவர்களாகிய அடியவர்கள் (விநாயகனுடைய அடியைப் போற்றி, கற்பவர்களாகிய அடியார்) எதைக் கற்பவர்கள்னா, எதையும் சொல்லாம்.  நல்ல நூல்களைக் கற்பவர்கள் அப்படின்னு சொல்லலாம்.  அவன் நாமத்தைக் கற்பவர்கள் அப்படின்னும் சொல்லலாம். ஏதாவது ஒன்றைத் திரும்பத் திரும்பச் சொல்வதும் கற்பதுதானே. அப்படி அவனைப் போற்றி, அவன் நாமத்தை உச்சரித்துக்கொண்டிருக்கும் அடியார்களுடைய… 

புத்தியில் உறைபவ — அறிவில், மனத்தில் எண்ணத்தில் உறைகின்றவனே. (இது, விளி — addressing) கற்பகம்! கற்பகமே என்றெல்லாம் அவன் நாமத்தைச் சொல்லச் சொல்ல,

வினை கடிது ஏகும் - பற்றிய தீவினையானது விரைவில் விட்டுவிட்டு ஓடிவிடும்.

மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன் மற்பொரு
திரள்புய மதயானை…

மத்தம்னா ஊமத்தம், ஊமத்தைன்னு பொருள். ஊமத்தைப் பூவை விரும்பிச் சூடுபவர் சிவன். ஊமத்தம் பூவையும் பிறைநிலவையும் முடியிலே தரித்தவனாகிய அரன் — சிவன் — மகன், (அவன் எப்படிப்பட்டவன்னா),

மல்பொரு திரள் புய மதயானை. அவனொரு மதயானை. மற்போருக்கு ஏற்ற திரண்ட பெருந்தோள்களை உடையவன். பகைவர்களைச் சாடுவதற்காகத் திரண்ட தோள்களை உடைய மதயானை போன்றவன் இல்லை, மதயானையே இவன்தான். 

மத்தள வயிறனை உத்தமி புதல்வனை மட்டு அவிழ்
மலர்கொ(ண்)டு பணிவேனே

அருணகிரிநாதர், ஐங்கரனைச் செல்லமாகச் சொல்கிறார். அவருடைய வயிறு மத்தள வயிறாம். நாம பீப்பாய் வயிறு என்று சொல்வோம். அவர் மத்தள வயிறு என்கிறார்.

உத்தமி புதல்வன் - சொல்ல வேணாம்.  உமாதேவியின் மகன்.  இவனை,

மட்டு அவிழ் மலர் கொண்டு பணிவேனே - மட்டு அப்படின்னா, தேன். இதழ் அவிழ்ந்து தேன் சிந்துவதாகிய மலரைத் தூவிப் பணிவேன். நான் பணிவேன்.

முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய
முதல்வோனே

முத்தமிழ் அடைவு அப்படின்னா, இயல், இசை, நாடகம் அப்படிங்கற முத்தமிழ். இவற்றுக்கான இலக்கணத்தை விநாயகர் எழுதினாராம். எங்கே? முற்படு கிரிதனில். எல்லா மலைகளுக்கும் முதன்மையானதாகிய மேரு மலையில். எப்படி எழுதினார்? முற்பட எழுதினார். வேறு யாரும் இந்த மொழிக்கு இலக்கணம் வகுப்பதற்கு முன்னால், விநாயகர் மேருமலையில் ‘கல்மேல் எழுத்தாய்’ எழுதினாராம். (அப்படியொரு நம்பிக்கை).

முப்புரம் எரி செய்த அச்சிவன் உறை ரதம் அச்சு அது
பொடிசெய்த அதிதீரா

இது, நம் எல்லோருக்கும் தெரிந்த கதை. முப்புரம், அதாவது திரிபுரங்களை எரித்தவரான சிவன், சிரித்தே புரம் எரித்தார் என்பது புராணம். அதற்கு முன்னால், பூமியே தேராகவும், மேருவே வில்லாகவும் திருமாலே அம்பாகவும் புறப்பட்டாராம். புறப்படும்போது, முதல் வணக்கத்தை தன் பிள்ளைக்குச் செய்யவேணுங்கறத மறந்துவிட்டார். ‘எனக்குரிய மரியாதைய செய்யாமயா போற’ என்று சிரித்துக்கொண்ட விக்ன ஈஸ்வரன், தன் தந்தையின் தேருடைய அச்சை முறித்துவிட்டார். அந்த இடத்தைத்தான் அச்சு இறு பாக்கம், அச்சிறுபாக்கம் என்பார்கள். இது, மதுராந்தகம் அருகே உள்ள ஊர். இப்படி, சிவன் உறைகின்ற ரதத்தினுடைய அச்சைப் பொடி செய்த பெரிய தீரனே… (விளி — addressing).

அத்துயர் அது கொ(ண்)டு சுப்பிரமணி படும் அப்புனம்
அதனிடை இபமாகி  

இதுவும் நமக்குத் தெரிந்த கதைதான். தம்பி சுப்பிரமணியருக்குத் துயரமாம். என்ன துயரம்? வள்ளியின் மேல் ஏற்பட்ட காதல் துயரம். அந்தத் துயரத்தைப் போக்குவதற்காக, விநாயகர் யானை வடிவெடுத்து வள்ளியைத் துறத்த, அவள் ஓடோடி வந்து, வேடனும் விருத்தனுமாக நின்ற வேலனைத் தழுவ, அங்கே காதல் பிறந்ததாம். புனம் என்றால் காடு, வயற்காடு, தினைப்புனம் என்றெல்லாம் சொல்லாம். இபம் என்றால் யானை. அந்தக் காட்டிலிருந்த தினைப்புனத்தில் யானையாகி…

அக்குற மகளுடன் அச்சிறு முருகனை அக்கணம் மணம்
அருள் பெருமாளே

அக் அப்படிங்கற சுட்டை எவ்வளவு முறை சுழற்றுகிறார் என்று பாருங்கள். அந்தக் குறமகளாகிய வள்ளியோடு, அந்தச் சிறுவனான முருகனை அந்தக் கணத்திலேயே திருமணமும் முடித்துவைத்த பெருமாளே. இந்தப் பாட்டில் பெருமாள் என்றால் விநாயகர்.

அப்பறம் ஒன்றைக் கவனியுங்கள். இந்தப் பாட்டுல ஒற்று (மெய்யெழுத்து) ஒழித்து, எழுத்தை எண்ண வேண்டும் என்று சொன்னோம். ஒவ்வோர் அடியிலேயும், இந்த ஒற்றெழுத்துகளின் இடத்தை எண்ணிப் பாருங்கள். இப்போது மெய்யெழுத்தையும் சேர்த்துக் கூட்டினால், ஒவ்வொரு 2, 10, 19 எண்ணுள்ள எழுத்துகளும் மெய்யெழுத்தே. அதுவும், வல்லின மெய்யெழுத்தே. இது, வண்ணவிருத்தத்தின் அடிப்படை அம்சங்களில் ஒன்று.

{முத்தமிழ் அடைவு என்றால் பிரணவப் பொருளானவன் என்றும் சொல்லலாம் அல்லவா. திருமந்திரத்திலும் (முத்தமிழ் என்பது பிரணவம் என்ற (முத்தியை ஞானத்தை முத்தமிழ் ஓசையை
எத்தனை காலமும் ஏத்துவர் ஈசனை..) பொருளிலேயே சுட்டப்படுகிறது.}

courtesy     Dinamani


Rajans
--

Sundara Rajan

unread,
Sep 24, 2015, 4:15:14 AM9/24/15
to bangalor...@googlegroups.com, thiruppugazh anbargal


coutesy Dinamani


By - ஹரி கிருஷ்ணன்

First Published : 21 September 2015 12:00 AM IST

ஏதோ ஒரு தாளக்கட்டை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்படும் விருத்தப் பாவுக்கு, ஆசிரிய விருத்தம், சந்த விருத்தம், வண்ண விருத்தம் என்று மூன்று பெரும் பிரிவுகள் உண்டு. பெரும் பிரிவு என்று சொன்னாலே, ஒவ்வொன்றுக்கும் உள்ளே, வாய்க்கால்கள்போல பற்பல சிறுசிறு பிரிவுகள் உண்டு என்பதைச் சொல்லத் தேவையில்லை.

மற்ற எந்தப் பாவினத்தையும்விட, மிக விரிவானதாகிய விருத்தப்பாவுக்கென்று யாப்பியல் முறைகளை வரையறுத்து எந்த நூலும் செய்யப்படவில்லை. அதாவது, 1885-ல் ‘விருத்தப்பாவியல்’ என்ற பெயரில் வீரபத்திர முதலியார், ஒவ்வொரு வகை விருத்தப்பாவுக்கும் அந்தந்த பாவுக்கான யாப்பிலேயே சூத்திரங்களை அமைத்து அருமையான ஒரு நூலை வெளியிடும் வரையில். இந்த நூல், 1938-ல் இரண்டாம் பதிப்பாக வெளியானது. அதற்குப் பிறகு பதிப்பே காணாமல் போய்விட்டது. இப்போது, எண்ணிம வடிவில் (Digital form) இந்த நூலை இ-புத்தகமாகக் கொண்டுவந்திருக்கிறார்கள்.

நான்கு சீர்கள் வரையில் செய்யப்படுவது கலிவிருத்தமென்றும், இதற்குள்ளும் பல பிரிவுகள் உள்ளன என்றும் பார்த்தோம். ஐந்து சீர்கள் இருந்தால் அது ஐஞ்சீர் விருத்தம். ஆறும் அதற்கு மேலும் இருந்தால், அதைக் ‘கழிநெடிலடி’ என்பார்கள். ‘கழிநெடில் அடி’ என்றால், கணக்கைத் தாண்டி நீண்டிருக்கும் அடி என்று பொருள். இப்படி அறுசீர் விருத்தத்தை, அறுசீர்க் கழிநெடிலடி விருத்தம் என்றும் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் என்றும் சொல்வார்கள். இப்படியே எழுசீர், எண்சீர், பன்னிரு சீர், பதினான்கு சீர் எல்லாவற்றுக்கும் கழிநெடிலடி என்று ஒட்டவைத்துக்கொள்ளலாம். 

இந்த வகைப்பாடுகளில், மிகவும் எளியது என்று கருதப்படும் அறுசீர்க் கழிநெடிலடிக்கு, வீரபத்திர முதலியார் ஏழு வகைகளை இனங்கண்டு பிரித்து சூத்திரம் இயற்றியிருக்கிறார். விருத்தத்தின் இயல்பு கணக்கிலடங்காதது. வீரபத்திரர் சூத்திரம் செய்துள்ள வகைகளுக்குள் அடங்காத விருத்த வகைகளும் இருக்கலாம். இருக்கும். ஒவ்வொரு சூத்திரத்தையும் அந்தந்தப் பாவகைக்கான சந்தத்திலேயே செய்திருக்கிறார் என்றோம். மாதிரிக்கு, அறுசீர் விருத்தத்தில் முதல் வகைக்கான சூத்திரத்தைப் பார்ப்போம் - 


இருமா காய்ச்சீ ரரையடிக்கா

யிவையே மற்றை யரையடிக்கும்

வருமா றுணர்க வாரணியுங்

கொங்கை பொலியு மடக்கொடியே!

இது, இந்தப் பிரிவில் அடங்கும் அறுசீர்க் கழிநெடிலடியின் சந்தத்திலேயே இயற்றப்பட்டிருக்கிறது.

பற்றற் றோர்சேர் பழம்பதியைப்

பாசூர் நிலாய பவளத்தைச்

சிற்றம் பலத்தெந் திகழ்கனியைத்

தீண்டற் கரிய திருவுருவை

வெற்றி யூரில் விரிசுடரை

விமலர் கோனைத் திரைசூழ்ந்த

ஒற்றி யூரெம் முத்தமனை

உள்ளத் துள்ளே வைத்தேனே.

என்ற அப்பர் சுவாமிகளின் பாபநாசப் பதிகத்தையும், திருவாசகத்தில் வரும் குழைத்த பத்தும், இந்தச் சந்த அமைப்பைக் கொண்டவை.

உதாரணத்துக்காக ஒன்று சொன்னேன். வீரபத்திர முதலியாருடைய தொகுப்பில் அடங்குபவையும், அடங்காது, ஓசை நயத்தால் பொருந்துபவையும் விருத்தங்களே. அவ்வளவு ஏன் -

அதோஅந்த பறவைபோல வாழவேண்டும்

இதோஇந்த அலைகள்போல ஆடவேண்டும்

என்ற திரைப்படப் பாடலும் அறுசீர்க் கழிநெடிலடியே. எதுகை அமைப்பில் சற்று ஏறுமாறாக இருந்தாலும், இவற்றையும் விருத்தப் பாக்களாகக் கொள்ளமுடியும்.

இதைப் போலவே எழுசீர், எண்சீர் என்று ஒவ்வொரு வகையும் அவற்றின் உட்பிரிவும் விரியும்.

இதுவரையில், நாம் எளிய வகை எனப்படும் விருத்தங்களையும், ஆசிரிய விருத்தங்களையும், சந்த விருத்தங்களையும் மேற்போக்காகப் பார்த்திருக்கிறோம்.

மேலும் தொடர்வோம்.

Sundara Rajan

unread,
Sep 25, 2015, 4:36:55 AM9/25/15
to bangalor...@googlegroups.com

Sundara Rajan

unread,
Sep 27, 2015, 6:37:25 AM9/27/15
to bangalor...@googlegroups.com, thiruppugazh anbargal

By -ஹரி கிருஷ்ணன்

http://www.dinamani.com/religion/dhinamthorum-thiruppugazh/

ஆசைதரும் கோடி அதிசயங்கள் கண்டதிலே ஓசைதரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ

என்றான் பாரதி, குயில் பாட்டில். குயில் பாட்டு வெண்டளையில் அமைந்திருந்தாலும், இதில் ஒருவகையான ஓசை ஒழுங்கு அமைந்திருக்கிறது. 

ஒவ்வொரு வகைப் பாடலுக்கும் ஒவ்வொரு வகை ஓசை என்று வகுத்தார்கள். வெண்பாவில் பயில்வது செப்பலோசையும், ஆசிரியப் பாவில் அகவலோசையும், கலிப்பாவில் துள்ளலோசையும், வஞ்சிப்பாவில் தூங்கலோசையும் என்றெல்லாம் வழக்கங்கள் உண்டு. மறுபடியும், இவை ஒவ்வொன்றுக்குள்ளும் உட்பிரிவுகள் உண்டு. கொஞ்சம் பயமுறுத்துவதுபோல இருந்தாலும், உண்மையில் ஓசையை மட்டும் கவனித்து இயங்கினால் போதும். இவற்றில் ஏதாவது ஒரு சட்டகத்துக்குள் தானாகப் பொருந்தும் என்பதுதான் சூட்சுமம். இந்த வித்தை கைவந்துவிட்டால், எதை வேண்டுமானாலும் ஊதித் தள்ளிவிடலாம். 

ஆனால், ஓசையின் ஒழுங்குக்குள் உட்காருவது என்பது சற்றே கவனித்து சரிசெய்துகொள்ள வேண்டிய வித்தை. இந்த வித்தை கைவரப் பெறுவதற்காகத்தான் இத்தனை கணக்குகள், இத்தனை வகைப்பாடுகள், இத்தனை mappings. 

தாளலயத்தை ஒழுங்காகக் கையாளத் தெரிந்துவிட்டால், நேரசையில் தொடங்கினால் அடிக்கு (ஒற்றொழித்து) பதினாறு எழுத்து, நிரையசையில் தொடங்கினால் அடிக்குப் பதினேழு எழுத்து என்று பயமுறுத்தும் கட்டளைக் கலித்துறையைக்கூட எழுத்தெண்ணாமல் பாட முடியும். அனுபவத்தில் சொல்கிறேன். வெறும் உபசார வழக்கில்லை. 

மற்ற எந்த மொழிகளைக் காட்டிலும், தமிழில் எழுத்தெண்ணிக்கை தவறாமல் பாடுவது சுலபமான ஒன்று. தான தனந்தன தான தனத்தன தானன என்ற தாளக்கட்டுக்குள் எழுதினால், அடிக்கு எவ்வளவு எழுத்து வரும்? அந்தத் தாள அமைப்பிலேயே எண்ணிப் பாருங்கள். பதினைந்து எழுத்துகள். அவ்வளவேதான்! இந்தத் தாளம் பிசிறாமல் எழுதிப் பாருங்கள். அடிக்குப் பதினைந்து பதினைந்து எழுத்துகள் வரும். உத்தரவாதம். 

நம்முடைய மொழி அமைப்பு அப்படி. எல்லா சொற்களையும் (அல்லது சீர்களையும்) இரண்டே வகை அசைகளாகப் பிரித்துவிடலாம். இந்த அசை என்பது ஆங்கிலத்தில் syllable என்கிறார்களே, அதற்கு இணையானது. நேர் என்பது ஒன்று. நிரை என்பது மற்றொன்று. நேர் என்றால், தனிக்குறில் (ஒற்றுடன்/ஒற்றில்லாமல்), தனி நெடில் (ஒற்றுடன்/ஒற்றில்லாமல்); நிரையென்றால் குறில்-குறில், குறில்-நெடில் (ஒற்றுடன்/ஒற்றில்லாமல்). அப்படியானால், நேரசையில் ஒரே ஒரு எழுத்துதான் கணக்குக்கு வரும். நிரை என்றால் இரண்டே எழுத்துகள்தாம் கணக்கில் வரும். அப்ப, நாம மேல அமைச்சிருக்கோமே தாளக்கட்டு (சினிமா பாணியில் சொல்வதானால், தத்தகாரம், சந்தம் சொல்றது — எல்லாம் ஒண்ணுதான்), அதுக்கு நேர்நிரை போட்டா, நேர்நேர் நிரைநிரை நேர்நேர் நிரைநிரை நேர்நிரை. இப்ப இதுலயும் எழுத்தெண்ணிப் பாருங்கள். பதினஞ்சுதான் வரும். இந்த நேர் நிரையின் வேறுவேறு permutation combinationதான் தத்தகாரம், சந்தம், தாளக்கட்டு எட்செட்ரா. தமிழில் அமைவதுபோல் எழுத்தமைப்பு — ஸ்பெல்லிங் — மற்ற மொழிகளில் அமைவதில்லை என்பதால், தமிழில் ஓசையைப் பின்பற்றுவது எளிதாகிறது. 

ஆசிரிய விருத்தம், சந்த விருத்தம் என்பதில் ஓசை ஒத்து வரும். இதைத் தாளத்தால் அளவொத்து வருவது என்பார்கள். அறுசீர் விருத்தத்தில், ஒரு வகைக்கு வீரபத்திர முதலியார் கொடுத்திருந்த சூத்திரத்தைப் பார்த்தோம்.

இருமா காய்ச்சீ ரரையடிக்கா

            யிவையே மற்றை யரையடிக்கும்

வருமா றுணர்க வாரணியுங்

                கொங்கை பொலியு மடக்கொடியே!

இதைச் சுருக்கமாக, மா மா காய், மா மா காய் என்பார்கள். எந்த மாமாவுடனும் காய்விட வேண்டாம்! தேமா தேமா கூவிளங்காய், தேமா புளிமா கருவிளங்காய் என்று இஷ்டப்படி மாற்றிப் போட்டுக்கொள்ளலாம். தத்தகாரத்தில் சொன்னால்,

 தானா தனனா தானனனா, தன்னா னானா தானேனா என்று விதவிதமாக மாற்றிப் போட்டுக்கொள்ளலாம். எப்படிப் போட்டாலும், மா மா காய். சின்ன எச்சரிக்கை. இதை இன்னமும் முழுமையாக விளக்கவில்லை. 

திருப்புகழின் சிக்கலான அமைப்புக்குள் இப்போதுதான் காலடி எடுத்து வைத்திருக்கிறோம். குருநாதருடைய வரலாற்றை, ஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகள் புராணம் என்ற பெயரில் குகஸ்ரீ திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் இயற்றியிருக்கிறார்.விருத்த தொடர்நிலைச் செய்யுளால் அமைந்திருக்கும் இந்தப் புராணத்தை, அவருடைய 18-19 வயதில் செய்திருக்கிறார். குகஸ்ரீ வாரியார் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. எல்லா சரவண பவன் உணவு விடுதிகளிலும் கிடைக்கும். புத்தகக் கடைகளிலும் கட்டாயம் கிடைக்கும்!

இந்தப் புராணப்படி, அருணகிரிநாதருக்கு முறையான கல்வி இருந்திருக்குமா என்பது ஐயமே.  இவர்தான் தமிழையும் வடமொழியையும் அநாயாசமாகக் கலந்து, இத்தனை சிக்கலான அமைப்புகளில் பல பாடல்களை இயற்றியிருக்கிறார். இதை இறையருள் என்னாமல் வேறு எப்படிச் சொல்வது.

இப்போது நாம் சொல்லியிருப்பதில் தொடர்நிலைச் செய்யுள் என்பதைச் சற்று விளக்க வேண்டும். இது விருத்தத்திலும் அமையும்; வெண்பாவிலும் அமையும். என்ன என்பதை அடுத்ததாகப் பார்ப்போம்.

இப்போது இன்றைய பாடல்.  இதுவும் விநாயகர் துதிதான்.
 

வண்ணக் குழிப்பு

தந்ததனத் தானதனத்             தனதான

     தந்ததனத் தானதனத்        தனதான

 

உம்பர்தருத் தேநுமணிக்          கசிவாகி

     ஒண்கடலிற் றேனமுதத்      துணர்வூறி

 

இன்பரசத் தேபருகிப்              பலகாலும்

     என்றனுயிர்க் காதரவுற்      றருள்வாயே

 

தம்பிதனக் காகவனத்            தணைவோனே

     தந்தைவலத் தாலருள்கைக்  கனியோனே

 

அன்பர்தமக் கானநிலைப்         பொருளோனே

     ஐந்துகரத் தானைமுகப்      பெருமாளே


திருப்புகழில் மிக எளிதான சந்த அமைப்பும், பொருளமைப்பும் கொண்ட பாடல். பொருளை நாளைக்குக் காண்போம்.


Rajans

Sundara Rajan

unread,
Sep 28, 2015, 10:42:37 AM9/28/15
to bangalor...@googlegroups.com, thiruppugazh anbargal, T.S. Narayanan
By -ஹரி கிருஷ்ணன்

எழுத்து, உரைநடையென்றால் எல்லையின்றி விரியலாம். ஆனால் பாட்டு, கவிதை என்றால், அதற்கொரு எல்லை தேவைப்படுகிறது. சொல்லவரும் செய்தி, அதைச் சொல்ல நினைக்கின்ற விதம் இவையிரண்டும் சேர்ந்து எல்லையைத் தீர்மானிக்கின்றன.

பழைய மரபில், சுருக்கமாகப் பாடுவதற்கு வெண்பாவும், ஓரளவுக்கு விரிவாகவோ அல்லது விரிந்த விரிவாகவோ பாட ஆசிரியப்பாவும் கைகொடுத்தன. அவ்வப்போது மற்ற வடிவங்களும் தலைகாட்டின. விருத்தம் என்ற வடிவம் எப்போது தோன்றியது என்பது கேள்விக்குறிதான். பக்தி இலக்கிய காலத்தில், ஆழ்வார்களும் நாயன்மார்களும் இந்த வடிவத்தைக் கையாண்டிருக்கிறார்கள்.

வெண்பா என்றால், இரண்டே அடிகளுக்கு குறள், மூன்று என்றால் சிந்தியல், நான்கு என்றால் நேரிசை, இன்னிசை, ஐந்து முதல் பன்னிரண்டுவரை பஃறொடை அதற்கு மேல் எவ்வளவு போனாலும் கலிவெண்பா. இதில், இன்னிசைக் கலியும் உண்டு, நேரிசைக் கலியும் உண்டு. ஆசிரியப்பா என்றால், குறைந்தது மூன்றடிகள். எவ்வளவு நீளமாய் வேண்டுமானாலும் இருக்கலாம். இந்த வசதியால்தான், பழைய இலக்கியங்களில் நீளமானவையெல்லாம் ஆசிரியப் பாவில் அமைந்திருக்கின்றன. கதை சொல்ல வந்த சிலம்பு, மணிமேகலை எல்லாம், பெரும்பாலும் இந்த வடிவத்திலேயே நடக்கின்றன. 

வெண்பா விரியவும் விரியும்; சுருங்கவும் சுருங்கும். ஆசிரியமும் அப்படியே. விருத்தத்துக்கோ ஒரே ஒரு அளவுதான் உண்டு. நான்கடிகள். நான்கேயடிகள். குறையாது, கூடவும் செய்யாது. இந்த வடிவம், சின்னச் சின்ன செய்திகளைச் சொல்ல மட்டுமே பயன்பட்டது. ஒரு பத்துப் பாடல்களாக ஒரே தொனியில், பொருளில் சொன்னால் பதிகம். இப்படித்தான் இருந்தது. அடுத்த அடுத்த நான்கடிப் பாக்களில் ஒரு கதையைச் சொல்லிக்கொண்டே போகலாம் என்ற பொறி முதலில் யாருக்குத் தட்டியதோ தெரியவில்லை.

இப்படித்தான் தொடர்நிலைச் செய்யுள் என்ற பகாசுர வடிவம் தோன்றியது. நான்கடி வெண்பாவில் நளவெண்பா தோன்றியது; நான்கடி விருத்தத்தில் ராமாயணம், சீவகசிந்தாமணி, பெரிய புராணம் எல்லாம் தோன்றின. ராமாயணமா சிந்தாமணியா எது முந்தி என்று பெரிய விவாதங்களெல்லாம் உண்டு. நமக்கு அது தேவையில்லை. யார் செய்திருந்தாலும், நம் முன்னோர்கள் யாரோதான் செய்திருக்கிறார்கள். எப்படியும் இருக்கட்டும். நான்கடி நான்கடியாக மெல்ல மெல்ல விரிந்து, மூவாயிரம் நாலாயிரம் பாடல்களில். மற்றவர்கள் செய்ததை, பத்தாயிரத்து சொச்சம் பாடல்களாக விரித்து இராமயணத்தைப் படைத்தது, கம்பனுடைய அசுர சாதனை. 

இந்த நான்கடி விருத்தத்திலேயே, கம்பன் பாடியிருப்பது பெரும்பாலும் நான்கு, ஐந்து ஆறு சீர்கள்தான் அதிகம். எண்சீர் விருத்தம் ஏதோ ஒன்றிரண்டு இடத்தில் தட்டுப்படுகிறது. ஒரே இடம்தான் என்று நினைவு. ஆனால், அந்த நான்கடிகளை அப்படியே வைத்துக்கொண்டு, அதன் சீர்களின் அளவை நீட்டி நீட்டிப் பெருக்கியது, அருணகிரியாரின் கைவண்ணம். இவருடைய பிரமிக்கவைக்கும் வேலைகளையெல்லாம் திருப்புகழ் நெடுகிலும், திருவகுப்பிலும் காணலாம். திருவகுப்பு என்பது, திருப்புகழ் மதாணியில் ஒரு பகுதி. மதாணியை பற்றிச் சொல்கிறேன் என்றது நினைவிருக்கிறது. சொல்கிறேன். அதற்கு முன்னால், பொருள் சொல்ல வேண்டிய நேற்றைய பாடலைப் பார்ப்போம்.
மிக எளிய பாடல்.  எளிய பாடல்தானா என்று யோசிக்கவைக்கும் பாடல்.  பொருளைப் பார்ப்போம்.

உம்பர்தரு - உம்பர் என்றால் தேவலோகம். தரு என்பது பெயர்ச்சொல். மரம். தேவலோகத்து மரமான கற்பக விருட்சம்.

தேநுமணி - தேனு. தேநு.  காமதேனுவும் சிந்தாமணியும். கற்பக விருட்சமும், காமதேனுவும் சிந்தாமணியும் வேண்டியவர்களுக்கு வேண்டியதைக் கொடுப்பதுபோல, எனக்குள் ஈகை உணர்வு

கசிவாகி - கசிய வேண்டும்.

ஒண்கடலிற் தேனமுதத்து உணர்வு - ஒளியை உடையதாகிய பாற்கடலிலே அமுதம் உண்டானது போல என்னுள்றே உணர்வு ஊற, ஊற்றெடுக்க வேண்டும்.

ஒன்றைக் கவனியுங்கள். கற்பக விருட்சம், காமதேனு, சிந்தாமணி எல்லாம் கேட்டார்க்கு கேட்டதைக் கொடுப்பவை என்றாலும், அவற்றுக்கும் ஒன்று தேவைப்படுகிறது. ‘எனக்கு வேண்டும்’ என்று கேட்பதற்கு ஒருத்தர் வேணுமில்லியா? இவற்றுக்கெல்லாம் கொடுக்கும் காருண்யம் எப்படிக் கசிந்து பெருகுகிறதோ, அப்படி என்னிடம் வருபவர்களுக்கு என் மனம் கசியவும் எனக்கு உன் அருள் வேண்டும்.

அடுத்தது, பாற்கடலில் அமுதம் வந்ததைப்போல, உணர்வு ஊற வேண்டுமாம். அமுதம் தானாக வரவில்லை. அதற்காக தேவர்கள் ஒருபக்கம், அசுரர்கள் ஒருபக்கம் நின்றுகொண்டு, வாசுகிப் பாம்பையும் மந்தர மலையையும் கொண்டு கடல்வண்ணன் பண்டொருநாள் கடல் வயிறு கலக்கினயே என்பதைப்போல, கலக்கிக் கடைந்தால் அமுது ஊறும்.

மனமே பாற்கடலும் மலையும் பாம்பும். மனத்துக்குள்ளேயே தேவசக்திகளும் அசுர சக்திகளும். இவையெல்லாம் ஒன்று திரண்டு இந்த மனத்தைப் போட்டுக் கடைந்தால், அமுதம்தான் வரும் என்று என்ன உத்தரவாதம்? தேவசக்திகளும்தான் உள்ளே இருக்கின்றன; அசுரசக்திகளும் அதியசுரத்தனமாக செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. இந்த மனத்தை இப்படிப் போட்டுக் கடைந்தால் அமுதம்தான் உண்டாகும் என்று எப்படிச் சொல்வது? அங்கே ஆலகால விஷமல்லவா முந்திக்கொண்டு கிளம்பியது?

அப்படித்தானே இந்த மனத்தைப் போட்டுக் கடைந்தால் அமுதும் ஊறும், ஆலகால விஷமும் கிளம்பும்? ஒண்கடலில் தேன் அமுதத்து உணர்வு ஊறி. அந்த விஷம் கிளம்பும்போது, அதைக் குடிப்பதற்கு ஆளெல்லாம் ஏற்பாடு செய்தாயிற்று. கணபதியே, இந்த மனத்தில் ஊறும் உணர்வு அமுதமாக இருக்க நீ அருள்.  அப்படி உண்டாகிற இன்பரசமாகிற ஞானத்தை நான் பருக, நீ அருள வேண்டும். எப்படி?

பலகாலும் - நீண்டகாலத்துக்கு இந்தச் சுவை நீடிக்க வேண்டும்.

அடுத்த இரண்டடிகள் எளியவை. 

தம்பி தனக்காக வனத்து அணைவோனே - தம்பிக்காக வள்ளியின் முன்னால் தினைப்புனத்தில் வந்து தோன்றியவனே

தந்தை வலத்தால் அருள் கைக் கனியோனே - தந்தையை வலம்வந்த அருள்ஞானக் கனியைப் பெற்றவனே

அன்பர் தமக்கு ஆன நிலைப் பொருளோனே - அன்பர்களுக்கான நிலைத்த பொருளாக இருப்பவேனே

ஐந்து கரத்து ஆனைமுகப் பெருமாளே - நான்கு கரங்களுடன் துதிக்கையையும் சேர்த்து ஐந்து கரங்களும் யானை முகமுமாய் இருக்கும் பெருமாளான கணபதியே.

நாளைக்குக் காணப்போகும் கணபதிப் பாடல், நல்ல சந்த நயத்தோடு கூடியது. பார்ப்போம்.

Rajans







--

Sundara Rajan

unread,
Sep 29, 2015, 1:17:25 AM9/29/15
to bangalor...@googlegroups.com, thiruppugazh anbargal
By -ஹரி கிருஷ்ணன்
First Published : in dinamani on 25 September 2015 திருப்புகழில் ஒரு பகுதியான 
திருவகுப்பில், இருபத்தைந்து பாடல்கள் உண்டு.  இதில்,

 தனதனன தனதனன தனதனன தனதனன

    தனதனன தனதனன                      தனதான தானதன

என்ற தாள அமைப்பில், ஒரு அடிக்கு எட்டு மடக்கு; ஒரு மடக்குக்கு எட்டு சீர்கள்; ஓரடிக்கு அறுபத்து நான்கு சீர்கள்;  இப்படி நான்கடிகள். ஒவ்வொரு மடக்கிலும் முப்பத்தெட்டு எழுத்துகள்.  அப்படியானால், எட்டு மடக்குகளைக் கொண்ட ஓரடிக்கு 304 எழுத்துகள்.  மொத்த பாட்டுக்கும் (மெய்யெழுத்து சேர்க்காமல்) 1,216 உயிர், உயிர்மெய் எழுத்துகள். இத்தனை நீளமான பாடல் மொத்தமும் சேர்த்து ஒரே ஒரு வாக்கியம்தான்! ஒரே ஒரு வாக்கியத்தைதான் இத்தனை சந்தக் கட்டுகளோடும் பின்னல்களோடும் கவிதை கொண்டிருக்கிறது. சீர்பாத வகுப்பு. சீரடியே என்று முடிகிற கடைசிச் சீர்தான் எழுவாய். இதை ஒவ்வொரு அடியிலும் பயிலும் உம்மைகளோடு கொண்டு கூட்டிக்கொள்ள வேண்டும். எவ்வளவு சுலபமாக, எவ்வளவு அநாயாசமாக இந்த வேலை நடந்திருக்கிறது!

 
உததியிடை கடவுமர கதவருண குலதுரக
வுபலளித கனகரத        சதகோடி சூரியர்கள்
உதயமென அதிகவித கலபகக மயிலின்மிசை
யுகமுடிவின் இருளகல        ஒருசோதி வீசுவதும்
இந்தப் பகுதிக்கு ஒரு ஒலித்துணுக்கு கொடுத்திருக்கேன்.  கேட்டுப் பாருங்க.
( not included in this forward)


‘வீசுவதும்’ ம்-ல முடிஞ்சிருக்கே அதுதான் உம்மை. எண்ணும்மை. இதையெல்லாம் கொண்டுபோய், சீறடியே என்பதோடு தனித்தனியாகக் கூட்ட வேண்டும்.

திருப்புகழில் மண்டிக்கிடக்கும் ஆச்சரியங்களை உங்கள் முன்னால் மொத்தமாகவும் அமைப்புடன் கூடிய வகையிலும் எடுத்துவைக்க முடியாத இடநெருக்கடியால், இப்படி அவ்வப்போது ஒன்றொன்றாகச் சொல்லிக்கொண்டு வருகிறேன். திருவகுப்புகளைப் பார்க்கும்போது, இதைப்பற்றி இன்னமும் விரிவாகப் பார்க்கலாம். 

இன்றைய பாடலையும், அதன் ஒலிவடிவத்தையும் இன்று பார்ப்போம். பாடல் சற்று நீண்ட பாடலாதலால், பொருளை நாளைக்கு விரிவாகப் பார்ப்போம். இதுவும் விநாயகர் துதி.

 
தனன தனதன தத்தன தத்தன

     தனன தனதன தத்தன தத்தன

          தனன தனதன தத்தன தத்தன        தனதான

 
 நினது திருவடி சத்திம யிற்கொடி

     நினைவு கருதிடு புத்திகொ டுத்திட

          நிறைய அமுதுசெய் முப்பழ மப்பமு        நிகழ்பால்தேன் ..............
 

 ‘வனச பரிபுத அர்ச்சனை’  என்ற தலைப்பில் வெளி வந்திருக்கும் கட்டுரையை பார்க்கவும் http://thiruppugazhamirutham.shutterfly.com/.

Sundara Rajan

unread,
Oct 2, 2015, 1:52:51 AM10/2/15
to bangalor...@googlegroups.com, thiruppugazh anbargal, teeye...@gmail.com

"எப்படிப் போட்டாலும் மா மா காய். சின்ன எச்சரிக்கை. இதை இன்னமும் முழுமையாக விளக்கவில்லை".

இந்த மா மா காய் என்பது தாளக்கணக்குக்கு சரியாக வரும். எழுத்துக் கணக்குக்கு சரியாக வராது. அதனால்தான் தாளத்தால் அளவொத்து வருவது விருத்தம் என்றார்கள். 

சற்று விளக்குகிறேன். மா என்றால் அது தேமா-வாகவும் இருக்கலாம். புளிமா-வாகவும் இருக்கலாம். காய் என்றால், தேமாங்காய், புளிமாங்காய், கூவிளங்காய், கருவிளங்காய் (அதாவது தானானா, தனனானா, தானனனா, தனனனனா). ஒவ்வொன்றிலும் எழுத்து வித்தியாசம் வருவதைப் பார்க்கலாம். இப்படியெல்லாம் இருந்தாலும் தாளத்தால் அளவொத்து இருக்க முடியும். தானா நான்கு மாத்திரை, தனனா அதே நான்கு மாத்திரை. ஆகவே விருத்தம், தாளத்தால் ஒத்தாலும் எழுத்தின் அளவால் ஒத்து வராமல் இருக்கும். 

இதையெல்லாம் இப்போது ஏன் சொல்கிறேன் என்கிறீர்களா? திருப்புகழ் அமைந்திருக்கும் வண்ணவிருத்த அமைப்பில், அப்படி என்ன தனிப்பட்ட சிறப்பு என்பதைப் புரிந்துகொள்வதில் இது இரண்டாவது படி. ஏழாவது பகுதியில் ‘இப்போதுதான் அடியெடுத்து வைத்திருக்கிறோம்’ என்றோமே, அது முதற்படி. அடுத்த அடுத்த படிகளை ஒவ்வொன்றாகப் பார்த்துக்கொண்டே வருவோம். 

இப்போது, நேற்றைய பாடலான நினது திருவடிக்குப் பொருள் பார்ப்போம்.

து விநாயகர் வணக்கம் என்றோம். ஆனால், விநாயகரை எதற்கு வணங்குகிறார் என்றால், ‘நான் முருகனை எப்போதும் நினைத்து வணங்க எனக்கு புத்தி கொடுத்திடு’ என்று துதிக்கிறார். 

தெய்வங்களுக்குள் வேறுபாடு பார்க்காதவர் குருநாதர். அவருக்கு முருகனைப்போலவே கணபதி, சிவன், திருமால், ராமன், கண்ணன், என்று பலவேறு வடிவங்களையும் போற்றிப் பாடுவதில் தயக்கமே இருக்காது. அதுவும் பராசக்தியைப் பாடுவதென்றால், ஒரு முழுமையான சாக்தரைப்போல் பாடுவார். திருவகுப்பில் இரண்டாம் பாடலான தேவேந்திர சங்க வகுப்பில், படிக்குப் பாதி பராசக்திதான். இப்போது பாடலுக்கு வருவோம்.

நினது திருவடி சத்தி மயில் கொடி நினைவு கருதிடு புத்தி கொடுத்திட - பாடல் விநாயகரைப் பற்றியதென்றால், ‘நினது’ என்பது யாரைக் குறிக்கிறது? ‘நினது திருவடி’ என்றால், அது விநாயகரைக் குறிக்கும் வாய்ப்பே அதிகம். ஆனால், இங்கே நினது திருவடி, சத்தி, மயில், கொடி என்று சொல்வதால், இந்தத் திருவடி முருகனுடையது. சத்தி எனப்படுவது வேலைக் குறிக்கும். வள்ளி என்ற இச்சா சக்தியையும், தேவைசேனையாகிய கிரியாசக்தியையும், வேலாகிய ஞானசக்தியையும் ஒன்றாகச் சேர்த்த முச்சக்தியையும் குறிக்கலாம் என்று தணிகைமணி வ.சு.செங்கல்வராய பிள்ளை உரைசெய்கிறார். சத்தி என்பது வேல், வேல் என்பது ஞானம் என்று திருமுருக கிருபானந்த வாரியார் தன் உரையில் குறிப்பிடுகிறார். அதாவது, முருகா, உன்னுடைய திருவடியையும் வேலையும் மயிலையும் கொடி(யில் உள்ள சேவலையும்) என் கருத்தில் எப்போதும் இருத்தும் புத்தி கொடுத்திட…

கவனிக்கவும். புத்தி கொடுத்திடு என்று சொல்லவில்லை. கொடுத்திட. இங்கே முருகனுக்குக் கொஞ்சம் ஓய்வு கொடுங்க. இப்ப விநாயகர் உள்ளே வருகிறார்.

நிறைய அமுது செய் முப்பழம் அப்பமு(ம்) நிகழ் பால் தேன் - நிறைய அமுது (பல்வகையான சோறு), முக்கனிகள், அப்பம், பொருந்திய பால், தேன்,

 அதுக்கப்புறம்?

நெடிய வளை முறி இக்கொடு லட்டுகம் நிற வில் அரிசி பருப்பு அவல் எள் பொரி - முறுக்கைப் போன்ற பண்டங்களுடைய பெயருக்கு இலக்கிய ஆட்சி வேண்டுமென்று தேடுபவர்கள், அருணகிரிநாதரிடம் தேடலாம். நெடிய, வளை, அதாவது நீண்டதாகவும் வளைந்திருப்பதுமான முறி. முறித்துத் தின்னக்கூடியதான முறுக்கு; இக்கு. இக்ஷு என்பதன் தமிழ் வடிவம். கரும்பு, லட்டு, நிறவில் - நிறமும் ஒளியும் உடைய அரிசி, பருப்பு, அவல், எள், பொரி…

அதுக்கப்புறம்?

நிகர் இல் இனி கதலி கனி வர்க்கமும் இளநீரும் - நிகரே இல்லாத சுவையை உடைய கதலி வர்க்கமும் — வாழைப்பழம் — மலைவாழை, மொந்தன், பூவன் என்று வகைவகையான வாழை, கூடவே எல்லாம் முடிந்த பிறகு குடிக்க இளநீர். இப்ப, பட்டியலுக்குக் கொஞ்சம் ஓய்வு கொடுப்போம். கணநாதர் நேரில் வந்துவிட்டார்.

மனது மகிழ்வொடு தொட்ட கரத்து - மனமகிழ்ச்சியோடு தொட்டு ஆசி வழங்கும் கையன். அந்தக் கை எப்படிப்பட்ட கை?

ஒரு மகர சலநிதி வைத்த துதி கர - மீன்கள் நிறைந்ததாகிய, சலநிதி - கடலில் வைத்த துதிக்கையாகிய கரம்.

அது என்ன, கடலுக்குள் துதிக்கையை வைத்தது? இந்தக் கடலை சகலரும் படாதபாடு படுத்தியிருக்கிறார்கள். முருகன் கடலை வற்றடித்திருக்கிறான். ராமர், சேதுபந்தனத்துக்காக கடல் சீறியிருக்கிறார். விநாயகர் தன் பங்குக்குச் செய்ததாகப் புராணங்கள் கூறுவது இது. தேவரும் அசுரரும் பாற்கடலைக் கடைந்தபோது, கடைவதற்குப் பயன்படுத்திய மந்தரமலை கடலில் அமுங்க, அதைத் திருமால் கூர்மமாக வந்து தாங்க, இறுதியில் எல்லாம் முடிந்த பிறகு, கூர்மம் கடலை ஓயாமல் கலக்கிக்கொண்டே இருக்க, விநாயகர் கடல் நீரில் துதிக்கையை வைத்து உறிஞ்சினாராம். கடல் நீர் வற்றி, கூர்மம் துதிக்கைக்குள் உறிஞ்சப்பட்டுவிட்டதாம்!

 ‘திரைபொரு வேலைநீர் ஒன்று பூட்கை நெடுங்கரத்துட்புக, நின்றுரிஞ்ச, அந்நீரொடும் ஆமை… கொடுங்கரம் புக்கதால்’ என்று கூர்மாவதாரச் சருக்கத்திலிருந்து, செங்கல்வராய பிள்ளை மேற்கோள் காட்டுகிறார்.

ஆக, மனது மகிழ்வொடு தொட்டகை, கடலை உறிஞ்சிய கை, துதிக்கை.

இந்தத் துதிக்கையானது -

வளரு(ம்) கரி முக ஒற்றை மருப்பனை வலமாக - வளர்ந்திருக்கும் யானை முகத்தவன், ஒற்றைக் கொம்பை உடையவன், அவனை வலம் வந்து,    

மருவு மலர் புனை தொத்திர சொல் கொடு - விநாயகருக்கு உரிய மலர் (மருவு மலர்) கொண்டு அர்ச்சித்தும், தொத்திர என்று குறுகியிருக்கிறதே, அது தோத்திர. தோத்திரங்களைச் சொல்லிக்கொண்டும்,

வளர் கை குழை பிடி தொப்பண(ம்) குட்டொடு - கைகளைத் தூக்கிக் காதுகளை (குழைபிடி) பற்றிக்கொண்டு, தொப்பணம், தோப்புக்கரணம் தோர்பிகரணம் என்றெல்லாம் சொல்வோமே, அதைப் போட்டு, குட்டிக்கொண்டு,

வனச பரி புர பொன் பத அர்ச்சனை மறவேனே - வனச (வனஜ) என்பது தாமரை.  ‘வனசமாமனாராட, நெடிய மாமியாராட என்றெல்லாம்     அடிக்கடி பார்க்கப்போகிறோம். பரிபுரம் என்றால் காற்சிலம்பு. காற்சிலம்பு அணிந்த விநாயகனின் தாமரைப் பாதத்தில் அர்ச்சனை செய்வதை மறக்கமாட்டேன்.

எதற்கு? ‘நினது திருவடி, சத்தி மயில், கொடி, நினைவு கருதிடு புத்தி கொடுத்திட’! 

முருகா உன்னை மறவாமல் இருப்பதற்காக, விநாயகருக்கு இத்தனையையும் படைத்து, அர்ச்சித்து வழிபடுவேன்.  

இப்ப விநாயகர் இருக்க, முருகன் பாடலில் முன்னே வந்து நிற்கிறான்.  அவன் போர் செய்த களத்தில்,

தெனன தெனதென தெத்தென என பல சிறிய அறு பதம் மொய்த்து உதிரப் புனல் - அறுபதம் என்றால் ஈ. அது மொய்க்கின்ற ஒலிதான், அந்த தெனன தெனதென. அந்த ஓசையோடு இது எவ்வளவு ஒத்துப்போகிறது பாருங்க. ஈ மொய்க்கும் உதிரப்புனல், ரத்த வெள்ளமும்,

திரளும் உறு சதை பித்த(ம்) நிணக் குடல் செறி மூளை - போர்க்களத்தில் சிதறிவிழுந்து திரண்டு கிடப்பதான சதைக்குவியலும், பித்தப்பைகளும் கொழுப்பும் (நிணம்), சிதறியும் அருகருகேயும் கிடக்கும் அநேகருடைய மூளையும்,

செரும உதர நிரப்பு(ம்) செருக் குடல் - பிளந்த (செரும) வயிற்றிலிருந்து வெளிப்பட்டுத் தொங்கிக்கொண்டுள்ள ஈரல், குடல், இவையெல்லாம்…    

நிரைய அரவ நிறைத்த களத்து இடை - (நிறைய இல்லை, நிரைய), நிரைய என்றால் வரிசை வரிசையாக. நிறைந்த ஓசை, கூக்குரல் (அரவம்) நிறைந்த போர்க்களத்தில்

திமித திமிதிமி மத்தள(ம்) இடக்கைகள் செகசே சே எனவெ - மத்தளங்கள் திமித திமிதிமி எனவும், இடக்கைகள் (இடது கையால் பற்றி வாசிப்பதும், உடுக்கு போன்ற வடிவுள்ளதுமான வாத்தியம்) செகசேசே என்று ஒலிக்க


துகு துகு துத்தென ஒத்துகள் துடிகள் இடி மிக ஒத்து முழக்கிட -    துகுதுகுதுகுதுகு என்று ஊதுகுழல்களும் உடுக்கைப் பறைகளும் இடியை மிகவும் ஒத்து முழங்க, 

டிமுட டிமு டிமு டிட்டிம் எனத் தவில் எழும் ஓசை - தவிலோசையைச் சொல்கிறார். சொல்லும்போதே தவில் ஒலிக்கிறது அல்லவா?

இப்படிப்பட்ட போர்க்களத்திலே,

இகலி அலகைகள் கைப்பறை கொட்டிட - ஒன்றையொன்று பகைக்கும் பேய்கள், கைகளால் தாளமிட்டு பறையொலியாக முழக்கவும்,

இரண பயிரவி சுற்று நடித்திட    - ரண பைரவி எனப்படும் போர்க்கள தேவதைகள் சுற்றி வந்து கூத்தாட,

எதிரு நிசிசரரைப் பெலி இட்டு அருள் பெருமாளே - எதிர்ப்பவர்களான நிசிசரர்களை (இரவில் உலவுபவர்களான அரக்கர்களை) கொன்று பலியிட்டு அருள்பவனாகிய முருகப் பெருமாளே,

உன் திருவடியை மறவாமல் இருக்கும் புத்தியைக் கொடுக்கும்படி கணபதிக்குப் படையலிட்டு, அர்ச்சனை செய்து, தோப்புக்கரணம் போட்டு, குட்டிக்கொண்டு கணபதியின் பாதமலரில் அர்ச்சனை செய்வதை மறவேன்.

நாளைய பாடல், முத்தைத் தரு…






Rajans

Sundara Rajan

unread,
Oct 3, 2015, 1:52:21 AM10/3/15
to thiruppugazh anbargal, bangalor...@googlegroups.com, teeye...@gmail.com
ஸ்ரீ ஹரி அவர்கள் தினமணியில் எழுதியவை


இப்போதுதான் திருப்புகழின் முதல் பாடலுக்குள் நுழைகிறோம். திருப்புகழின் யாப்பைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பதைச் சற்றுத் தள்ளி வைப்போம். இந்தப் பாடலைப் பற்றிப் பேசவேண்டியது இருக்கிறது; பேச, வேண்டியது இருக்கிறது!

‘முத்தைத்தரு பத்தித்திருநகை’ பாடலைப் பற்றிய பரவலான நம்பிக்கை வேறு. அதன் புராணப் பின்னணி வேறு. குருநாதர், திருவண்ணாமலை கோபுரத்திலிருந்து குதித்துத் தற்கொலைக்கு முயன்றபோது, முருகன் தடுத்தாட்கொண்ட அந்தச் சமயத்தில் எழுந்ததில்லை இந்தப் பாடல். வாரியார் சுவாமிகள் மிக விவரமாகச் சொல்கிறார். அதன்பிறகு பல சம்பவங்கள். அவற்றுக்குப் பின்னர்தான் இந்தப் பாடல் எழுந்தது. வாரியார் சுவாமிகள் இயற்றியுள்ள ஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகள் புராணம் சொல்வது இது -

ஆரம்பநாளில், அருணகிரிநாதர் சில உலகாயதவாதிகளுடைய போதனைக்கு வசப்பட்டிருந்தார். உலகாயதவாதம் என்றால் என்ன என்பதை வாரியார் சுவாமிகள் சொல்கிறார் -

முத்தியிலை; நீதிநெறி முறைமையிலை; விரதமிலை;
பத்தியிலை; வினைசெயும் பயனுமிலை; சீவனிலை;
சித்தியிலை; அயர்வுமிலை; தெய்வமிலை; அருளுமிலை;
சத்தியமும் இலைநிரையத் தாழ்வுமிலை; அவையன்றி…

இது கலிவிருத்தம். இப்படிப் பல பாடல்களால் விளக்குகிறார். பொருளைச் சுருக்கமாகச் சொல்கிறேன். மோட்சம் என்றொன்று இல்லை; நீதிநெறி ஏதுமில்லை; பக்தியில்லை; செய்யும் நற்செய்கை தீச்செய்கைகளுக்கான பலனென்று எதுவுமில்லை; ஜீவன் என்றொன்று இல்லவே இல்லை; சித்தி, சோர்வு, நரகம் (நிரையம் = நரகம்) என்று இவையெதுவுமே இல்லை. இதுமட்டுமில்லாமல்,

பாவ-புண்ணியம், பிறப்பு-இறப்பு சுழற்சி, வேதங்கள், மறுமைப் பயன், சிவம், தவம் எதுவுமே இல்லை. நம் அறிவால் ஆவது என்றும் ஒன்றுமில்லை. கவலையற்று, காதல் எண்ணத்தை மனத்தில் வளர்த்து, நன்றாக உண்டு,

ஐம்புலன்கள் இழுக்கும் வழிக்கெல்லாம் சென்று, நல்ல ஆடை அணிகலன்களை அணிந்துகொள்ள வேண்டும். பெண்களுடன் கூடி மகிழ வேண்டும். இதுவே சுகம். இதைத்தவிர சுகமென்று எதுவுமில்லை.

இந்தச் சமயத்தில்தான், அருணகிரி என்ற உடனே என்னென்னவோ நினைவுக்கு வருகிறதே, அப்படிக் கிடந்தார். ‘அதுக்கப்புறமும் அப்படித்தானே! அவருடைய பாடல் முழுவதுமே பரத்தையரைத் திட்டுவதுபோல விவரமாக வர்ணிப்பவைதானே’ என்று கேட்கத் தோன்றும். ஒரு சின்ன கணக்கைச் சொல்கிறேன்.

திருப்புகழ் மதாணி என்பது ஒன்பது பிரிவுகளைக் கொண்டது. மதாணி என்றால் மார்பிலே விளங்கும் பதக்கம் என்று பொருள். இந்தப் பதக்கத்தில் விளங்கும் நவரத்தினக் கற்களால் ஆனது திருப்புகழ் மதாணி. அருணகிரி நாதர்,

மாதரா ரூபன் நிராகுல சிந்தையன்
ஆதிகூ தாள மதாணிய லங்க்ருதன்
என்று பூதவேதாள வகுப்பிலும்,
உறைபெற வகுத்தருணை நகரின்ஒரு பத்தனிடும்
ஒளிவளர் திருப்புகழ்ம தாணிக்ரு பாகரனும்

என்று வேடிச்சி காவலன் வகுப்பிலும் பாடுகிறார். அவருடைய வாக்கிலிருந்து பிறந்ததுதான் திருப்புகழ் மதாணி என்ற சொற்றொடர். அந்த ஒன்பது மணிகள் -

1. திருப்புகழ் 1330*
2. கந்தரலங்காரம் 107
3. கந்தர் அந்தாதி 100
4. கந்தரனுபூதி 51
5. திருவகுப்பு 25
6. வேல் விருத்தம் 11
7. மயில் விருத்தம் 11
8. சேவல் விருத்தம் 11
9. திருஎழுகூற்றிருக்கை 1

* பழைய கணக்கு. வாரியார் பதிப்பின்படி 1327, சேலம் சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை பதிப்பின்படி 1330, இவற்றுக்குப் பிறகு நான்கு பாடல்கள் கிடைத்து, மொத்தம் 1334 பாடல்கள், http://kaumaram.com/ வலைத்தளத்தில் உள்ளன.

இத்தனை பாடல்களில், அருணகிரியாருடைய பாடல்களின் தன்மையாகப் பரவலாக நம்பப்படும் வகையில் சுமார் 50-60 பாடல்கள் உள்ளன. 1,647 பாடல்களில் இது சுமார் ஐந்து விழுக்காடு. தொண்ணூற்றைந்து விழுக்காடு பற்றி பேசுவதே இல்லை. இந்த ஐந்து விழுக்காடுதான் அருணகிரிநாதருடைய பாடல்களின் இயல்பாகப் பேசப்படுகின்றது. பிழை அவருடையதில்லை. நம்முடையது.

அருணகிரிநாதருடைய வரலாற்றைத் தொடர்வோம். இப்போது இன்றைய பாடலும் ஒலிவடிவமும் -

தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன தனதான

முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும் .........





Rajans


Sakthi Dharan

unread,
Oct 3, 2015, 9:42:41 AM10/3/15
to bangalor...@googlegroups.com
Thirupugazh from a very different and a new angle.very interesting,
Thanks sir,
regards
sakthidharan


From: Sundara Rajan <sudar...@gmail.com>
To: thiruppugazh anbargal <arunag...@gmail.com>; "bangalor...@googlegroups.com" <bangalor...@googlegroups.com>; teeye...@gmail.com
Sent: Saturday, 3 October 2015 11:22 AM
Subject: தினந்தோறும் திருப்புகழ்

--
You received this message because you are subscribed to the Google Groups "Thiruppugazh Anbargal Bangalore" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to bangaloreanbar...@googlegroups.com.
To post to this group, send email to bangalor...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/bangaloreanbargal.
For more options, visit https://groups.google.com/d/optout.


Sundara Rajan

unread,
Oct 4, 2015, 1:37:36 AM10/4/15
to bangalor...@googlegroups.com
It is a pleasure. It is a pleasure only because of readers like you



On 3 October 2015 at 19:12, 'Sakthi Dharan' via Thiruppugazh Anbargal Bangalore <bangalor...@googlegroups.com> wrote:
Boxbe This message is eligible for Automatic Cleanup! (bangalor...@googlegroups.com) Add cleanup rule | More info

Thirupugazh from a very different and a new angle.very interesting,
Thanks sir,
regards
sakthidharan

From: Sundara Rajan <sudar...@gmail.com>
To: thiruppugazh anbargal <arunag...@gmail.com>; "bangalor...@googlegroups.com" <bangalor...@googlegroups.com>; teeye...@gmail.com
Sent: Saturday, 3 October 2015 11:22 AM
Subject: தினந்தோறும் திருப்புகழ்

--
You received this message because you are subscribed to the Google Groups "Thiruppugazh Anbargal Bangalore" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to bangaloreanbar...@googlegroups.com.
To post to this group, send email to bangalor...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/bangaloreanbargal.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "Thiruppugazh Anbargal Bangalore" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to bangaloreanbar...@googlegroups.com.
To post to this group, send email to bangalor...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/bangaloreanbargal.
For more options, visit https://groups.google.com/d/optout.




--

Sundara Rajan

unread,
Oct 5, 2015, 12:39:29 AM10/5/15
to bangalor...@googlegroups.com

விருத்தத்தில் அமைந்த மற்றவகைப் பாக்களுக்கும் திருப்புகழ்ப் பாக்களும் என்ன வேறுபாடு என்பதைப் பார்த்துக்கொண்டிருந்தோம். இதுவரையில் நாம் பார்த்திருக்கும் பாடல்களே நல்ல எடுத்துக்காட்டு. இவை அடிக்கு அடி எழுத்துக் கணக்கு தவறாமல் வருபவை என்பதை எல்லாப் பாடல்களும், குறிப்பாக ‘இரட்டைப் பிள்ளையார்’ எனப்படும் ‘கைத்தல நிறைகனி’ பாடலும் காட்டின. இந்த அடிகளில் பயிலும் vertical uniformity பற்றிப் பேசினோம். இந்த வர்டிகல் யூனிஃபார்மிடியை, ‘முத்தைத்தரு’ பாடல் மூலமாக மேலும் விளங்கிக்கொள்ளலாம். இப்போது இந்தப் பாடலை எண்களுடன் அமைந்த கட்டங்களுக்குள் வைக்கிறேன்.

உதாரணத்துக்கு, ஓரடியை கட்டங்களுக்குள் அமைத்திருக்கிறேன். இந்த ஆறு மடக்குகளும் சேர்ந்து ஓரடி. இதுபோல நான்கு அடிகள். எல்லாவகைப் பாக்களுக்கும் எழுத்தெண்ணுவதாக இருந்தால், ஒற்று (புள்ளி எழுத்து) நீக்கிக் கணக்கிட வேண்டும். ஆனால், வண்ணவிருத்தத்தில் தாளச்சுழற்சிகள் விழுவதே இந்த ஒற்றுகளில்தான். ஒவ்வோரடியிலும் 2, 4, 8, 10 எண்ணிட்ட கட்டங்களை மேலிருந்து கீழாகப் பாருங்கள். எல்லாம் ஒற்றெழுத்து என்பது மட்டுமல்லாமல், எல்லாமும் வல்லின ஒற்றுகள் என்பதைப் பார்க்கலாம். ஆறாவது அடியில் (வரியில்) எட்டாவது எழுத்து வல்லெழுத்தாக இல்லாவிட்டாலும் ற்-க்கு இணையான ஒலியைக் கொண்ட இடையின ர், அதைத் தொடர்ந்து ஒரு வல்லெழுத்து என்று அமைந்து, தாளத்தை ஈடு செய்வதைக் காணலாம். எனவோதும், அடிபேண இரண்டிலும் (ஒற்று நீக்கி) நான்கெழுத்துகள்; ஒவ்வொன்றிலும் மூன்றாவது எழுத்து நெடில்.

இப்படி வல்லொற்று, இடையின ஒற்று, மெல்லொற்று நெடுக்குவாட்டில் சம இடத்தில் அமையும். இதுபோலவே நெட்டெழுத்துகளும் சீரான இடக்கணக்கில் அமையும்.

     ஆறுமுக மாறுமுக மாறுமுக மாறுமுக

     மாறுமுக மாறுமுக ...... மென்றுபூதி

     யாகமணி மாதவர்கள் பாதமலர் சூடுமடி

     யார்கள்பத மேதுணைய ...... தென்றுநாளும்

என்ற பழநித் திருப்புகழை உதாரணமாக எடுத்துக்கொண்டால், 5, 9, 13, 17, 21 ஆகியவை நெட்டெழுத்துகளாக அமைந்திருப்பதைக் காணலாம்.

இது அசாத்தியமான வேலைப்பாடு. இதில் எங்காகிலும் எழுத்துக் கணக்கு மாறுவதுபோலத் தோன்றினால், தற்காலத்தில் பிரித்தெழுதிப் பதிப்பிப்பதுதான் இந்த மாற்றத்துக்கு காரணம் என்பதை உணரலாம்.

இப்படி யோசித்துப் பார்த்து, புரிந்துகொள்வதற்கே இவ்வளவு தூரம் விரித்துச் சொல்லவேண்டி இருந்தால், என்ன அநாயாசமாக தாளக்கட்டு தவறாமல், எழுத்தெண்ணிக்கை பிசகாமல் பாடல்கள் அமைந்திருக்கின்றன என்பதை ஒவ்வொரு பாட்டிலும் பார்க்கலாம்.

திருப்புகழ் 1334-லும் இது அப்படியே தவறாமல் இடம்பெறும்; கந்தரலங்காரமும் கந்தரந்தாதியும் கட்டளைக் கலித்துறை; கந்தரனுபூதி கலிவிருத்தம்; திருவகுப்புப் பாடல்கள் இருபத்தைந்தும் மேலே சொல்லப்பட்டுள்ள திருப்புகழ் விருத்தங்களைப்போல பலமடங்கு சித்திரவிசித்திர தாளக்கட்டில் குதிபோடுபவை; வேல், மயில், சேவல் விருத்தங்கள் அனைத்தும் வண்ணவிருத்தங்கள். திருப்புகழில் அபூர்வமாக ‘ஏறுமயி லேறிவிளை யாடுமுக மொன்று’ போன்ற எளிய அமைப்புகள் வருவதுண்டு.

இந்தச் சிக்கலான யாப்பு அமைப்பை ஓரளவுக்கு விரிவாக விளக்கியிருக்கிறோம் என்று நம்புகிறோம். தொடர்வோம்.

இன்றைய திருப்புகழ், திருப்பரங்குன்றத் திருப்புகழில் முதலாவது. இந்தப் பாடலில் வல்லெழுத்துகளின் இடத்தில் மெல்லெழுத்துகள் வந்து, ஏதோ மிருதங்கம் வாசிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துவதைக் காணலாம்.

 

தனதந்தன தந்தன தந்தன

தனதந்தன தந்தன தந்தன

தனதந்தன தந்தன தந்தன தனதான

 

கனகந்திரள் கின்றபெ ருங்கிரி

தனில்வந்துத கன்தகன் என்றிடு

கதிர்மிஞ்சிய செண்டைஎ றிந்திடு கதியோனே

 - ro be continued

By - ஹரி கிருஷ்ணன்  http://www.dinamani.com/religion/dhinamthorum-thiruppugazh/



Rajans

Sundara Rajan

unread,
Oct 7, 2015, 12:46:08 AM10/7/15
to bangalor...@googlegroups.com
That is this life if, full of care, 
We have no time to stand and stare.

என்று தொடங்கும் ஆங்கிலக் கவிதை உண்டு. வில்லியம் ஹென்றி டேவிஸ் எழுதிய Leisure என்ற கவிதை.

நில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில், கணப்போது நிற்க நேரம் கிடைத்தால், நம் எல்லோர் மனங்களிலும் கட்டாயம் நம்முடைய குழந்தைப் பருவக் காட்சிகளும், இளம் பருவமும், அடுத்தடுத்த வளர்ச்சி நிலைகளும் அந்தந்தப் பருவத்து சம்பவங்களும் நினைவில் மின்னி மறையும். பலருக்கு, ‘சரி, இவ்வளவு காலம் வாழ்ந்து என்னதான் செஞ்சோம். எல்லாத்தையும் விட்டுட்டு ஒரு நிமிஷம் அக்கடான்னு இருக்கமாட்டோமா’ என்று தோன்றும் வாய்ப்பு அதிகம். ‘இந்தப் பிறவிக்கான பயனை அடையமாட்டோமா’ என்ற தாகம் ஒரு சிலருக்காவது எழும். இந்த எண்ண ஓட்டத்தைத்தான், இன்றைய பாடலில் படம்பிடித்துக் காட்டுகிறார் குருநாதர். ஹென்றி டேவிஸ் ஏங்கிய Leisure போலத்தான். ஆனால் இதில் தென்படும் தாகமும் ஏக்கமும் வேறானவை.

தான் பிறந்து வளர்ந்ததை (அல்லது நாம் பிறந்து வளர்ந்ததை) வாழ்ந்த வாழ்வை, அதன்பிறகு திரிந்த விதத்தை எண்ணிப் பார்த்து, உன் அருள் என்றுதான் கிட்டுமோ என்று இரண்டடிகளில் பாடுகிறார்.

அடுத்துத் தொடரும் இரண்டடிகள் முருகனைப் பற்றி. இன்னும் சரியாகச் சொன்னால், அவன் மாமன் திருமாலைப் பற்றி. அதனினும் சரியாகச் சொன்னால், அவன் எடுத்த ராமாவதாரத்தைப் பற்றி. நாம் பிறந்தவிதத்தைப் பாடிய அதே வகையில், ராமாவதாரத்தின் காரணமாக உலகில் வந்து பல உருவங்களில் தோன்றிய தேவர்களைப் பட்டியலிட்டு, இப்படியொரு அவதாரத்தை, தேவர்களும் கூடவந்து பிறக்குமாறு செய்தருளி, அசுரர்களை அழித்த மாமனுக்கு மருகோனே என்று முடிக்கிறார். இப்போது பாடலைப் பாருங்கள்; 


தனனதந்த தத்தத்த தந்த
தனனதந்த தத்தத்த தந்த
தனனதந்த தத்தத்த தந்த தனதான

 

கருவடைந்து பத்துற்ற திங்கள்
வயிறிருந்து முற்றிப்ப யின்று
கடையில்வந்து தித்துக்கு ழந்தை வடிவாகிக்..........


இதில், ருத்ரற் சிறந்த அநுமனென்றும் என்று வருகிறது. அநுமன் வாயு குமாரனாயிற்றே, ருத்ரன் அநுமனாய்ப் பிறந்ததாக இந்தப் பாடல் சொல்கிறதே என்று கேட்கத் தோன்றுகிறதா?  காத்திருப்போம், அடுத்த மடலுக்கு. அதற்குமுன் ஹரி அவர்களுக்கு நன்றி தெரிவிப்போம்

Sundara Rajan

unread,
Oct 10, 2015, 6:21:06 AM10/10/15
to bangalor...@googlegroups.com
நம் வாழ்க்கையிலே, ஏதோ வெகுசிலரைத் தவிர்த்து, மற்றவருக்கு ஒரு பெரிய நோய் உண்டு. எதையும் தள்ளிப்போடுவது, ஒத்திப்போடுவது என்பதே அது. இப்படித் தள்ளிப்போடுவது அல்லது ஒத்திப்போடுவது என்பது எல்லாச் சமயங்களிலும் தவறு என்பதில்லை. ஒத்திப்போட வேண்டியவற்றை ஒத்திப்போடத்தான் வேண்டும். சிலவற்றை இன்றே, இப்போதே, இக்கணமே செய்தாக வேண்டும். வேறுசிலவற்றை அப்படிச் செய்தால், அது அவசரப்பட்டுக்கொண்டு, நிலைமையைப் புரிந்துகொள்ளாமல், உரிய சூழ்நிலை ஏற்படுவதற்கு முன்னாலேயே காரியத்தில் இறங்கி, ‘அவசரக் குடுக்கை’ என்று பெயர் வாங்கிக்கொண்டு காரியமும் கெட்டுப்போகிற நிலையும் ஏற்படுவதுண்டு. இதனால்தான் வள்ளுவர்,

தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை.

என்றார். தூங்குக என்றால் ஒத்திப்போடுதல். ஆங்கிலத்தில் defer, delay என்பார்கள். எதையெதை இப்போது செய்யத் தேவையில்லை, செய்யக்கூடாதே அதையதை ஒத்திப்போடு. எதையெல்லாம் உடனடியாகச் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் உடனடியாகச் செய். அதுமட்டுமல்ல,

செய்தக்க அல்ல செயக் கெடும் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்

செய்யக்கூடாததைச் செய்தாலும் தவறுதான், செய்ய வேண்டியதைச் செய்யாமல் விட்டுவிட்டாலும் தவறுதான், கேடுதான் என்றும் சொல்கிறார்.

அருணகிரிப் பெருமான், நாம் அன்றாடம் செய்ய வேண்டிய, எப்போதும் எல்லா சமயத்திலும் செய்ய வேண்டிய, ஆனால் செய்யத் தவறும் சிலவற்றைத் தன்னுடைய தவறுதல்களாகப் பட்டியலிட்டு நம் சார்பில் இறைவனிடம் ஒரு கோரிக்கையை வைக்கிறார். காலன் வரும்போது காட்சி பெற வேண்டும் என்பதே அது.

அந்தக் கடைசி நேரத்தில் இறைவனுடைய எண்ணம் மனத்திலே அழுந்த நிற்க வேண்டுமானால், அதற்காக இப்பொழுதிலிருந்தே ஒவ்வொரு கணமும் நினைத்து நினைத்துப் பழகினாலொழிய, யமபயம் வருத்தும் அந்த இடர்ப்பாடான தருணத்தில் இறைவனுடைய நினைப்பு வருவது என்பது சற்றும் முடியாத ஒன்றே. அதைத்தான் இந்தத் திருப்பரங்கிரித் திருப்புகழில் சொல்லி, இறைவனிடம் நமக்காகக் கையேந்துகிறார். எப்படி? இப்படி -

னத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன தனதான

உனைத்தி னந்தொழு திலனுன தியல்பினை
உரைத்தி லன்பல மலர்கொடுன் அடியிணை
உறப்ப ணிந்திலன் ஒருதவ மிலனுன தருள்மாறா...........

by ஹரி கிருஷ்ணன்


SSR
Reply all
Reply to author
Forward
0 new messages