கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்
கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையுங் குன்றாத இஆளமையும்
கழுபிணி யிலாத உடலும்
சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
துன்பமில் லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப்பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே!
ஆதிகட வூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி!
அருள்வாமி! அபிராமியே!
கலையாத கல்வியும் - முழுமையான அறிவு தரக்கூடிய கல்வியும்
குறையாத வயதும் - நீண்ட ஆயுளும்
கபடு வாராத நட்பும் - ஏமாற்றம் அளிக்காத நட்பும்
கன்றாத வளமையும் - அழியாத செல்வங்களும்
குன்றாத இஆளமையும் - மங்காத இளமையும்
கழுபிணியிஆலாத உடலும் - சூலப்பிணி போன்ற நோய்கள் வராத உடலும்
சலியாத மனமும் - சீ என்று ஒதுக்ககூடிய எண்ணங்கள் இல்லாத மனமும்
அன்பு அகலாத மனைவியும் - தன்னை மிகவும் நேசிக்கும் துணையாளும்
தவறாத சந்தானமும் - சொன்னசொல் தவறாத குழந்தைகளும்
தாழாத கீர்த்தியும் - குறையாத புகழும்
மாறாத வார்த்தையும் - சொன்ன சொல் தவறாமையும்
தடைகள் வாராத கொடையும் - தானம் செய்வதற்கு வேண்டிய செல்வம் தடையில்லாமல் கிடைக்கவும் அல்லது தானம் செய்ய வேண்டிய தருணங்களில் தடைகள் வராமலும்
தொலையாத நிதியமும் - செல்வங்கள் திருடு போகாமலும்
கோணாத கோலும் - தர்ம நீதி தவறாத அரசாட்சியும்
ஒரு துன்பம் இல்லாத - மனவருத்தம் இல்லாத
வாழ்வும் - வாழ்க்கையும்
துய்ய நின்பாதத்தில் - தூய்மையான நின் திருத்தாள்களில்
அன்பும் உதவி - அன்புடன் உதவி புரிந்து
பெரிய தொண்டரொடு - மகிமைமிக்க நின் அடியார்கள் கூட்டத்துடன்
கூட்டு கண்டாய் - (என்னை) சேர்த்து விட்டாய்
அலைஆழி அறிதுயிலும் - அலைகடலில் பள்ளிக்கொண்டிருக்கும்
மாயனது தங்கையே - திருமாலுக்கு சகோதரியே
ஆதி கடவூரின் வாழ்வே - ஆதி கடவூர் என்ற திருத்தலதில் எழுந்தருளிய
அமுதீசர் ஒரு பாகம் அகலாத - அம்ருதகடேஸ்வரரின் ஒரு பக்கத்தில் என்றும் நிலைத்திருக்கும்
சுகபாணி - நன்மைதரும் கரத்தினளே
அருள்வாமி - அருள்பாலித்து (சிவனின்)இடது பாகத்தில் அமர்ந்திருப்பவளே
அபிராமியே - அழகுடையவளே
படித்து இன்புற
இந்தப் பதிகத்தில் ஒரு மனிதனுக்கு வேண்டியது அனைத்தையும் வரமாக அன்னையிடம் கேட்கின்றார். தனிப்பட்ட முறையில் மட்டுமில்லாது அவன் எதிர்பார்க்கும் நன்மைகளை குடும்பத்திலிருந்தும், சமுதாயத்திலிருந்தும், அவனை ஆளும் அரசனிடமிருந்தும் எதிர் பார்க்கின்றார். கல்வி, நோயற்ற வாழ்வு முதலியன அவனை தனிப் பட்ட முறையில் ஏற்றமுறச் செய்பவை. தவறாத சந்தானம், அன்பகலாத மனைவி, குடும்பத்திலிருந்து எதிர்பார்ப்பது. கபடு வாராத நட்பு, தடைகள் வராத கொடை முதலியன அவன் சமூகத்திலிருந்து கேட்பது. தொலையாத நிதி, கோணாத கோல் அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்ப்பது. பாடுபட்டு சேர்த்த நிதி கொடைக்கு உதவவேண்டுமென்றால் தடைகள் வராமலும், தொலையாமலும், திருடர் பயம் இல்லாமலும் இருக்க வேண்டும். அதற்கு அரசனின் செங்கோலாட்சி நன்கு நடைபெற வேண்டும். இவையெல்லாம் ஒட்டுமொத்தமாக் கிடைப்பதற்கு, தான் மட்டுமின்றி சமூகத்தில் உள்ள அனைவரும் தொண்டர்களாக, அடியார்களாக, நல்லவர்களாக இருக்க வேண்டும், அதன்படி அவர்களுடன் ஒன்று சேர்ந்து வாழ அருளியதற்கு அம்பிகையை போற்றுகிறார்.
கோணாத கோலும் : ஒப்புக: “ ந்யாயேனமார்கேண மஹிம் மஹீசா”
தொண்டரொடு கூட்டு: அடியார் சிறப்பு. ஒப்புக: நீயுன் அடியரொடு கூடும் வகைமை அருள்புரிவாயே - திருப்புகழ்
அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே!
பதிகம் முழுதும் காத்தல் தொழில் வருவதால், அலையாழி அறிதுயிலும் மாலவனையும் குறிப்பிடுகிறார்
அமுதீசர் ஒரு பாகம் அகலாத: எந்த க்ஷணமும் தேவி ஈஸ்வரனை விட்டு பிரிந்திருப்பதில்லை. செளந்தர்ய லஹரிக்கு விளக்கம் எழுதிய லக்ஷ்மீதரர் எழுதுகிறார் “எவர்கள் மந்த்ரம், ஜபம் முதலியவைகளால் ஸரஸ்வதியை வசமாக்கிக் கொள்கிறார்களோ அவர்கள் ஸரஸ்வதீ வல்லபர்கள் எனக் கூறப்படுகின்றனர். எவர்கள் தனம், தான்யம், குதிரை, யானை முதலிய செல்வத்தை வசமாக்கிக் கொண்டவர்களோ இவர்கள் லக்ஷ்மீபதிகள் எனக் கூறப்படுகின்றனர். ஆனால் எவரையும் பார்வதீபதி எனக் கூறுவதில்லை. கல்வியையும், செல்வத்தையும் மனிதர் வசப்படுத்திக் கொள்ளலாம். ஆனல் மனதுக்கும், வாக்குக்கும் எட்டாத பரதேவதையை எவரும் வசப்படுத்திக் கொள்ள இயலாது. அவள் பரம்சிவன் ஒருவருக்கே வசப்பட்டவள்”
ஐஶ்வர்யம் இந்துமௌலே: ஐகாத்ம்ய ப்ரக்ருதி காஞ்சி மத்யகதம்/
ஐந்தவ கிஶோர ஶேகரம் ஐதம்பர்யம் சகாஸ்தி நிகமானாம்// (ஆர்யா சதகம்—மூக பஞ்ச சதீ)
பிறைச் சந்திரனைச் சூடியுள்ள சிவபெருமானுடன் இரண்டறக் கலந்துள்ள சக்தியானவள் ஈசனின் பேராளுமையை தன் சக்தியினால் வெளிப்படுத்திகிறாள். இருவரும் இணைபிரியாதவர்கள். வேதத்தின் உட்பொருள் இளம்பிறையை சூடிக் கொண்டவுடன் அவளும் பிறையை சூடினவள் ஆகிறாள்
சக்தியிலையெனில் சிவம் வெறும் ஜடப்பொருளாகி விடும் என்றாலும், சக்தி தன்னை வெளிப்படுத்த ஓர் ஆதாரம் தேவையாக இருக்கிறது அல்லவா? அந்த ஆதாரமே சிவம் எனும் பரம்பொருள் ஆகும்.
‘சிவன் உருவத்திற் சேர்ந்த பார்வதி’ – திருப்புகழ்
‘ஈசன்னர் இடஞ்சிறந்த சீதளார விந்த விஞ்சி’ – திருப்புகழ்
‘இறைவன் தனது பங்கில் உமை’ - திருப்புகழ்
“வாகர்த்தாவிவ ஸம்ப்ருக்தௌ வாகர்த்தப் ப்ரதிபத்தயே ஜகத: பிதரௌ வந்தே பார்வதி பரமேஶ்வரௌ.”----- ( மகாகவி காளிதாஸன்)
“சொல்லும் பொருளும் என நடமாடும் துணைவருடன்”------(அபிராமி அந்தாதி)
தொடரும்
to download visit:
https://thiruppugazhamirutham.shutterfly.com/abiramipadigam
from Shantha and Rajan