
கெட்ட குணங்கள்
தாக்காமலிருக்க-
அவ்வப்போது பொறாமை, கோபம் எல்லாம் வரத்தான் செய்யும். சண்டைக்குப் போவோமா, சுவரில் திட்டி எழுதுவோமா என்று தோன்றும். ஆனால் இதுகளில் புத்தி போனால் படிப்புக் கெட்டுப் போகும். நல்ல பெயரும் எடுக்க முடியாது. இதற்காகத்தான் தினமும் எழுந்தவுடனும், இரவு தூங்கும் முன்பும் ஸ்வாமியைப் பிரார்த்தனை செய்யவேண்டும்.
நம்மை உருட்டித் தள்ளுகிற மாதிரி பெரிய காற்று அடித்தால் தூணைப் போய் பிடித்துக் கொள்கிறோமல்லவா? அதே மாதிரி கோபம், பொறாமை முதலிய கெட்ட குணங்கள் நம்மைத் தாக்குகிற போது அம்மையப்பனாக இருக்கிற ஸ்வாமியை பிடித்துக் கொள்ள வேண்டும். நாம் விழாமல் அவர் காப்பார்.
வேளைதோறும் ஐந்து நிமிஷம் வேண்டுதல்
அதனால் இன்றிலிருந்து தினமும் இரண்டு வேளை ஐந்து ஐந்து நிமிஷம் ஸ்வாமியை அம்மையப்பனாக நினைத்துப் பிரார்த்தனை பண்ணுங்கள். “நான் கெட்ட வழி போகக்கூடாது. எனக்கு நல்ல புத்தி தா” என்று அன்போடு சந்தோஷமாகப் பிரார்த்தனை பண்ணுங்கள். இதனால் நல்ல மனம், உறுதியான புத்தி, படிப்பிலே பாஸ், பிறகு உயர்ந்த உத்தியோகம், பிறர் எல்லாருக்கும் உபகாரமான நல்ல வாழ்க்கை எல்லாம் உங்களுக்கு ஏற்படட்டும்.
அரோஹரா
ஆரம்பத்தில் பார்வதி என்று ஒரு தாயாரைச் சொன்னேன். அவளுக்குப் பதி, கணவர் பரமசிவன், ‘பார்வதீபதி’ என்கிற அவரே உலகுக்கெல்லாம் தகப்பனார். பெரிய தெய்வமானதால் அவருக்கு ‘மஹாதேவன்’ என்றும் பெயர். உங்களைப் போல் ஒரு குழந்தை அவரை ‘ஹரஹர’ என்ற பெயரைச் சொல்லி ஓயாமல் வழிபட்டு வந்தது. அந்தக் குழந்தைக்கு ஞான சம்பந்தர் என்று பெயர். இந்தக் குழந்தை ஊர் ஊராக ஹரஹர என்று சொல்லிக்கொண்டு போவதைப் பார்த்து எல்லா ஜனங்களும் ‘அரோஹரா’ என்று கோஷம் போட்டார்கள். அந்தக் காலத்தில் உலகத்தில் இருந்த கெட்டதெல்லாம் அந்தக் கோஷத்தில் ஓடிப் போய்விட்டது. வையம் அதாவது, உலகம் துயர் தீர்ந்தது. அதாவது, கஷ்டமே இல்லாமல் ஆயிற்று. “என்றைக்கும் இதேமாதிரி ஹர ஹர சப்தம் எழும்பிக் கொண்டே இருக்கட்டும்; அதனால் உலகத்தின் கஷ்டங்கள் எல்லாம் போகட்டும்” என்று சம்பந்தக் குழந்தை தேவாரம் பாடிற்று.
அரன் நாமமே சூழ்க
வையகமும் துயர் தீர்கவே
அரன் என்றால் ஹரன். ஹரன் என்றால் சிவன்.
இப்போது நான் “நம: பார்வதீ பதயே!” என்று சொல்வேன். உடனே நீங்கள் அம்மையான பார்வதியையும் அவள் பதியான நம் அப்பா பரமசிவனையும் நினைத்துக் கொண்டு அன்றைக்கு அந்தக் குழந்தை சொன்ன மாதிரியே பக்தியோடு “ஹர ஹர மஹாதேவா” என்று சொல்ல வேண்டும்.
நம: பார்வதீ பதயே!
ஹர ஹர மஹாதேவா!
WITH PRANAMS
N.RAMESH NATARAJAN(SRI KARYAM,COIMBATORE--98422 92536
