ஸ்ரிங்கேரி ரஹஸ்யம் - நங்கநல்லூர்_J_K_SIVAN
ரஹஸ்யம் என்றாலே யாருக்கும் எதுவும் தெரியாமல் நடக்கும், செய்யும் ஒரு காரியும். எந்த விஷயத்தையும் முதலிலேயே எல்லோரும் அறியும்படியாக செய்துவிட்டு, சொல்லிவிட்டு அது நடந்தால் அது ரஹஸ்யமாகாது. திட்டமிட்டு செய்வது ஆச்சர்யம் தராது. தானாக நடக்கும் விஷயங்கள் தான் அற்புதங்கள், அதிசயங்கள், பிரமிக்க வைப்பவை.
ஆதிசங்கரர் போன்ற பூஜ்ய ப்ரம்ம ஞானிகள் வாழ்க்கையில் ஒவ்வொரு வினாடியும் ஏதோ ஒரு அதிசயம் தான், அற்புதம் தான்.
நாம் மன நிறைவோடு சென்று ஸ்ரீ சாரதாம்பிகையை வணங்கும் சிருங்கேரி க்ஷேத்ரம் பற்றிய ஒரு விஷயம் தான் இது. ஆதிசங்கரரின் வாழ்க்கையோடு இணைந்த அதிசய சம்பவம்.
32 வருஷங்கள் உலக வாழ்க்கையை அனுபவித்த ஆதி சங்கரருக்கு அப்போதே தெரிந்து விட்டது. திரிகால ஞானி என்பதால் தனது மறைவு நெருங்குவது தெரிந்து விட்டது. மனதுக்குள் ஒரு தீர்மானம் பண்ணி விட்டார்.
''ஆம். அவசியம் நான் நான்கு மடங்களை இந்த பாரத மண்ணின் நாலா பக்கங்களிலும் தோற்றுவிக்க பாடு பட வேண்டும். எந்த நாலு க்ஷேத்ரங்கள் என்று அவர் மனதிலே தீர்மானம் ஆகிவிட்டது.
நம்மவர்களுக்கு மறதி ஜாஸ்தி. ஆகவே யாராவது எப்போதும் அரைத் தூக்கத்திலிருந்து அவர்களை எழுப்பி விட்டுக் கொண்டே இருக்கவேண்டும். ஆதி சங்கரர் அந்த வகை மனிதரல்ல. நடமாடும் தெய்வம்.
ஆதி சங்கரரின் சரித்ரத்தை வேகமாக சில வரிகளில் இப்படி சொல்ல முடியும். 'சங்கரன் என்ற உருவில் வடக்குநாத ஈஸ்வரர், ஆரியம்பா சிவகுரு தம்பதியரின் த்ரிசூர் வடக்கு நாத மண்டல விரதத்திற்கு பரிசாக தானே புத்ரனாக அவதரித்தது தெரிந்த கதை. காலடி என்கிற கிராமத்தில் அவர் பிறந்தார். 7-8வயதிலேயே சந்நியாசம் பெற்று இந்திய க்ஷேத்ரங்கள் பூரா கால் நடையாகவே சென்று ஷண்மத ஸ்தாபிதம் செய்தும், 4 சங்கர மடங்களை/பீடங்களை நிறுவியதும் தெரிந்தது. சங்கரர் தனது திக் விஜயத்தில் சென்ற இடமெல்லாம் வேத சாஸ்திர விற்பன்னர்களோடு வாதாடி வென்று அத்வைத ஸ்தாபனம் செய்தவர். 800ம் வருஷம் சங்கரர் சாரதா பீடத்தை சிருங்கேரியில் ஸ்தாபித்தார். துவாரகா பீடத்தை குஜராத்திலும், கோவர்தன பீடத்தை ஒரிஸ்ஸாவிலும், ஜ்யோதிர்மடத்தை வடக்கே பதரி , உத்தரகாண்டிலும் உருவாக்கினார். சரியான பொறுப்புள் ளவர்களாக அந்தந்த மடத்தை நிர்வாகிக்க தேர்ந்தெடுத்தார். தன்னுடைய சிஷ்யர்கள் ஹஸ்தாமலகரை ''நீ துவாரகா மடத்தை பார்த்துக்கொள்'' என்று நியமித்தவர் தோடகாச்சார்யார் தான் பதரி ஜோதிர்மடத்துக்கு பொறுப்பு என விட்டார். பத்மபாதர் பூரி, ஒரிஸ்ஸாவுக்கு சென்றபோது சுரேஸ்வரரை (மண்டன மிஸ்ரர் என்றும் பெயர்) ஸ்ரிங்கேரிக்கு அனுப்பினார். பொது ஜனங்களுக்கு குருவாக பணியாற்ற அவர்களுக்கு ஜகத் குரு என்று பாரம்பரியமாக பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.''
இனி சிருங்கேரிக்கு வருவோம். இன்றும் நாம் காணும் சாரதா பீடம் மடம் அமைந்துள்ள இடம், மிக அழகான இயற்கை வளம் நிரம்பியது. மேற்கு தொடர்ச்சி மலைகளின் சூழலில். சிக்மகளூர் ஜில்லாவில் துங்கா நதிக்கரையில் கண்கொள்ளா அபூர்வமாக இயற்கை பூத்து பூரித்து குலுங்கி வளமையை மாயா ஜாலமாக அள்ளிதருவது சிருங்கேரி.
அங்கே ரெண்டு பெரிய கோயில்கள். வித்யா சங்கரலிங்க சிவாலயம். மற்றொன்று சாரதா அம்பாள் சரஸ்வதி ஆலயம்.
சிவன் கோவில் 1338ல் விஜயநகர நாயக்க ராஜா கட்டியது. ஹொய்சள, துளுவ மக்கள் கலைத்திறன் வேலைப்பாடுகள் நிறைந்தது. உடுப்பியிலிருந்து 85 கி.மீ. மங்களூரிலிருந்து 100 கி.மீ. வடகிழக்கே மலைப் பாதையில் காண்பது..
ராமாயணத்தில் வருவாரே மழை வரச் செய்யும் ரிஷ்யஸ்ரிங்க ரிஷி என்ற விபாண்டக மகரிஷி புத்ரன், அவர் சம்பந்தப் பட்டது இந்த மலைச்சிகரம். தசரதர் குழந்தை வரம் வேண்டி புத்ர காமேஷ்டி யாகம் செய்த போது , இந்த யாகத்தை நடத்தி கொடுத்தவர் ரிஷ்யசிருங்க முனிவர். இவரைக் களைக் கோட்டு மாமுனி என்று தமிழ் சரித்ரங்கள் சொல்கிறது. ரிஷ்ய சிருங்கர் வாழ்ந்த இப்பகுதி அவர் பெயரால் ஸ்ருங்க கிரி எனப் பட்டு பின்னர் "சிருங்கேரி' ஆனது.
இந்த இடத்தை ஏன், எதற்கு, எப்படி ஆதி சங்கரர் தேர்ந்தெடுத்தார்?
இது புரிய உடனே ஒரு கதை சொல்லவேண்டுமே . மாஹிஷ்மதி நகரில் விஸ்வரூபர் என்ற பண்டிதருடன் ஆதிசங்கரர் அத்வைத விவாதம் செய்தார். இந்த விவாதத்துக்கு விஸ்வரூபரின் பத்னியும், ஸரஸ்வதி
தேவி அவதாரமுமான உபய பாரதி தான் நடுவர். இந்த விவாத நிபந்தனை என்ன தெரியுமா?
விவாதத்தில் சங்கரர் தோற்றால் துறவறம் விடுத்து இல்லறம் மேற்கொள்ள வேண்டும். விஸ்வரூபர் தோற்றால் கிரஹஸ்தாஸ்ரமத்தை விட்டு சன்யாசம் மேற்கொள்ள வேண்டும்.
இருவருக்கும் புதிதாகப் பறித்த மலர் மாலை அணிவித்து, யாருடைய மாலை முதலில் வாடுகிறதோ அவரே தோற்றவர் என அறிவிக்கப்பட்டது. 17 நாள் இரவு பகலாக சங்கரருக்கும் விஸ்வரூபருக்கும் விவாதம் கடுமையான போட்டியாக தொடர்ந்து 17ம் நாள் மாலை விஸ்வரூபரின் கழுத்தில் அணிந்திருந்த மாலை வாடியது. தோல்வியை ஒப்புக்கொண்ட விஸ்வரூபர் துறவறத்திற்கு தயாரானார். அப்போது நடுவராக இருந்த உபய பாரதி, "சங்கரரே! விஸ்வரூபரின் மாலை வாடியதால் மட்டும் தாங்கள் வெற்றி பெற்றதாக கருத முடியாது. துறவறம் பற்றி பேசுகிற உங்களுக்கு என்னிடம் இல்லறம் பற்றி விவாதம் செய்ய முடியுமா. அதிலும் நீங்கள் வெற்றி பெற்றால் தான் முழு வெற்றியாகும்,''என்றார்.
ஆதி சங்கரரோ பிரம்மச்சாரி. ஏழு எட்டு வயதிலேயே சந்நியாசி. ஆகவே ''அம்மா எனக்கு ஒரு மாத காலம் அவகாசம் கொடுங்கள். அதன் பிறகு உங்களோடு இல்லறம் பற்றிய விவாதம் வைத்துக் கொள்வோம்.'' என்றார். உபயபாரதி அதை ஏற்றுக்கொண்டாள் .
இல்லறம் பற்றி ஆதி சங்கரர் யோசித்துக் கொண்டு செல்கையில், அமருகன் என்ற அந்த தேச மன்னன் இறந்ததை அறிந்த சங்கரர், தன் யோக சக்தியால், கூடு விட்டு கூடு பாயும் , பரகாய பிரவேச சக்தி மூலம் அமருகமன்னனின் உடலில் புகுந்து இல்லறம் பற்றி அறிந்தார். சங்கரரின் உடலை அவரது சீடர் பத்மபாதர் பாதுகாத்து வந்தார். குறித்த காலத்துக்குள் மீண்டும் சங்கரர் தன் உடலில் புகுந்து உபயபாரதியிடம் வாதம் செய்து அவளை வென்றார். விஸ்வரூபர் துறவறம் ஏற்றார். சங்கரர் அவருக்கு "சுரேசுவரர்' என்ற நாமம் கொடுத்து தன் சீடராக ஏற்றுக்கொண்டார்.
ஸரஸ்வதி அம்சமான உபயபாரதியிடம் ஆதி சங்கர பகவத் பாதாள் "அம்மா நான் ஒரு சந்நியாசி, ஒரு இரவு தங்கிய இடத்தில் மறுநாள் தங்காதவன். ஆகவே நான் செல்லும் இடமெல்லாம் நீங்களும் என்னோடு தொடர்ந்து வரவேண்டும்,' என்று வேண்டி கொண்டார்.
''ஆஹா, அதற்கென்ன, சங்கரரே , நான் விடாமல் உம்மை பின் தொடர்வேன். ஆனால் ஒரு நிபந்தனை''
''தாயே , உங்கள் நிபந்தனை என்ன?''
'சங்கரரே! நான் நீங்கள் எங்கு சென்றாலும் விடாமல் உம்மை தொடர்ந்து வருவேன். ஆனால், நீங்கள் என்னைத் திரும்பி பார்க்காமல் மேலே சென்று கொண்டே இருக்க வேண்டும். திரும்பிப் பார்த்தால் நான் அந்த இடத்திலேயே நின்று விடுவேன். அதன் பின் தொடர்ந்து வர மாட்டேன். இதற்கு சம்மதமா?'
''ஆஹா அப்படியே ஆகட்டும்''
சங்கரர் தன் சீடர்களுடன் செல்ல, பின்னால் உபயபாரதி கால் சலங்கை ஒலிக்க வந்து கொண்டிருந்தாள். அவ்வப்போது சலங்கை ஒலி கேட்பதன் மூலம். உபாயபாரதி தொடர்வதை சங்கரர் உணர்ந்தார். பல நாள் நடந்தவர்கள் ஒரு நாள் இப்போதுள்ள சிருங்கேரி க்ஷேத்ரத்தை அடைந்தனர். அங்கு பாம்பும் தவளையும், பசுவும் புலியும் இணைந்து விளையாடுவதைக் கண்ட சங்கரர், ''அடாடா, எவ்வளவு சிறந்த சாத்வீகமான ஸ்தலம் இது...இதல்லவா யோகிகள் தங்கி த்யானம் செய்ய தகுந்த இடம் என தீர்மானித்தார். அப்போது, உபயபாரதியின் கால் சிலம்பொலி கேட்கவில்லை. ஏன் என்று அறிந்து கொள்ள சங்கரர் திரும்பிப் பார்த்தார். துங்கா நதி மணலில் கால் புதைய நடந்ததால் தண்டை கொலுசு சப்தம் கேட்கவில்லையே தவிர பாரதி பின் தொடர்ந்து வந்து கொண்டு தான் இருந்தாள்.
பின்னாலேயே தொடர்ந்து வந்துகொண்டிருந்த உபாயபாரதி, நிபந்தனைப்படி அங்கேயே நின்று விட்டாள். .அங்குள்ள பாறை மீது ஸ்ரீசக்கரம் வடித்து அவளுக்கு "சாரதா' என்ற திருநாமம் சூட்டி பிரதிஷ்டை செய்தார் ஆதிசங்கரர். அப்போது, உபயபாரதி அவருக்கு ஸரஸ்வதி தேவியாகக் காட்சி தந்து 'சங்கரா! இன்று முதல் இந்த பீடம் சாரதா பீடம் எனப்படும். இந்த பீடத்தில் மஹா சன்னிதானமாக அமர்பவர்களிடத்தில் நான் குடி கொண்டு ஆசி வழங்குவேன்,''என அருள்பாலித்தாள்.
சுரேசுவரர் சாரதா பீடத்தின் முதல் சந்நிதானமானார். . சிருங்கேரி ஆச்சார்யர்களுக்கு அதுமுதல் ''பாரதி'' என்ற பட்டப்பெயர் அதனால் தொடர்கிறது.
சிருங்கேரி மடம் ஸம்ஸ்க்ரித மொழி வளர சேவை புரிகிறது. அத்வைத கோட்பாடு வேத சாஸ்த்ர சம்பிரதாயத்தை கற்பிக்க, வளர்க்க, பரப்ப இந்த மடம் நூலகமாகவும் செயல்படுகிறது. எண்ணற்ற ஓலைச்சுவடிகள் இன்னும் அங்கே இருக்கிறது. நான்கு வாசல் கொண்ட மடம் .
சரித்திர புத்தகத்தில் பள்ளியில் படித்தது ஞாபகம் இருக்குமே. விஜயநகர சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்தது ஹரிஹரன் புக்கன் என்ற இரு வேடுவர்கள். அவர்களுக்கு வழிகாட்டி ராஜாக்களாக்கியது சிருங்கேரி சந்நியாசி மாத்வ வித்யாரண்யர், தக்ஷிணத்தில் முஸ்லீம்களின் ஆக்கிரமிப்பில் இருந்து விஜயநகரம் மீட்கப்பட்டது. ஹம்பி தலைநகரானது. வித்யாரண்யர் பின்னர் சிருங்கேரி மடத்தின் ஜகத்குருவாக இருந்தவர். ஹரிஹர புக்கர்கள் சர்வமான்யமாக சிருங்கேரி மடத்துக்கு கொடுத்த இடம் இது. அப்போது இருந்த ஜகதகுரு பாரதி தீர்த்தர் (1346).
எவ்வளவு மகோன்னதமான சாம்ராஜ்யம் என்றாலும் ஒருநாள் மறையும், இன்னொன்று தோன்றும். அப்படித்தான் விஜய நகர சாம்ராஜ்யத்திற்கு பின் இஸ்லாமியர் தலை எடுத்து நாச வேலைகள் ஆரம்ப மானது. மேற்கு கடற்கரையில் பல நாடுகள், நகரங்கள் சிருங்கேரி மடம் உட்பட பல பகவான் சங்கல்பத்தால் நாயக்க வம்சம் பாதுகாப்பில் வந்தது. 250 வருஷங்கள் சிருங்கேரி மடம் நாயக்க மன்னர்களால் ஜாக்ரதையாக பராமரிக்கப்பட்டது. அப்புறம் தான் திப்பு சுல்தான் தலை எடுத்தான். மைசூர் சுல்தான் ஆனான்.
ஒளரங்க சீப்பிற்குப் பின்னர் மராத்தி ராஜாக்கள் ஆண்டபோது சிருங்கேரி மடம் வளர்ந்தது. அற்புத
மான சரித்திர சான்றுகள், தடயங்களை சிருங்கேரி மடம் பாதுகாத்து வருகிறது. ஆச்சர்யமாக ஹைதர் அலி கூட சிருங்கேரி மடாதிபதிக்கு, பல்லக்கு, பரிசுகள், ஐந்து குதிரைகள், ஒரு யானை, மற்றும் ஜகத்குரு யாத்திரைக்கு பணம் எல்லாம் பரிசளித்திருக்கிறான். ஹைதர் அலியின் மகன் திப்பு சுல்தான் ஆட்சியின் போது, சிருங்கேரி மடம் யாரோ சில கொள்ளையர்களால் சூறையாடப்பட்டு தங்கம் வெள்ளி, செம்பு விக்ரஹங்கள் கொள்ளையடிக்கப்பட்டு, பல பிராமணர்கள் கொல்லப்பட்டனர் என்ற சேதி அறிந்ததும் மடத்திற்கு திப்பு பண உதவி அளித்ததாக சரித்திர ஏடுகள் சொல்கிறது.
சிருங்கேரி செல்பவர்கள் அதன் இயற்கை கொப்புளிக்கும் வளமையை கவனிக்கத் தவறினால் அவசியம் அகர்வாலுக்குப் போய் கண்ணாடி மாட்டிக் கொள்ளவேண்டும்.
சாரதாம்பிகை, வித்யாசங்கரர் (சிவன்) கோயில்கள் ஏற்கனவே உள்ளன. இப்போது, ஆதிசங்கரருக்கு கோயில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பீடாதிபதி பாரதி தீர்த்த சுவாமிகள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார்.
சிருங்கேரி மங்களூரிலிருந்து 107 கி.மீ. தூரம். காலை 5 முதல் மாலை 4.30 வரை மலைப்பாதையில் பஸ்கள் ஓடும். நாங்கள் ஒரு தனியார் வண்டியில் கிடு கிடு பள்ளத்தை கீழே பார்த்து நடுங்கிக்கொண்டு மலைச்சரி வில் வளைந்த பாதைகளில் சிருங்கேரிக்கு சென்றது இன்னும் மறக்கவில்லை. விடாத மழை வேறு.