Groups
Groups

13 views
Skip to first unread message

Sivan Krishnan

unread,
May 11, 2026, 6:34:37 AM (4 days ago) May 11
to amrith...@googlegroups.com

பரசுராம க்ஷேத்ர  யாத்திரை.                     நங்கநல்லூர்  J K  SIVAN 
17/426-22/4/26

மம்மியூர்  மஹேஸ்வரன்  

21.4.2026  குருவாயூர்  தரிசனத்திற்கு பிறகு அங்கிருந்து ஒரு பாலக்காடு பக்தர்  எங்களோடு காரில்  மம்மியூர் வந்தார்.  குருவாயூர்  செல்பவர்கள் பக்கத்தில்  மம்மியூர் மஹாதேவனை தரிசிக்காமல்  இருக்க மாட்டார்கள்.  ஒண்ணரை  கி.மீ. க்கு குறைவான  தூரத்தில் மம்மியூர் சிவாலயம்  உள்ளது. நடந்தாலே  பதினைந்து நிமிஷம்.  இந்த ஆலயத்தில் நிறைய  வர்ண ஓவியங்கள் உள்ளன.  கேரள  108 சிவாலயங்களில் ஒன்று. 

பார்வதி பரமேஸ்வரன்  இருவருமே  குருவும்  ருத்ர தீர்த்த  நதிக்கரையில்  தவம் செயது கொண்டிருந்தபோது அங்கே  வாயுவும் குருவும் வந்துவிட்டார்கள். அவர்கள்  அங்கே தங்களிடமிருந்த கிருஷ்ண விகிரஹத்தை பிரதிஷ்டை பண்ணப்போகிறார்கள் என்று அறிந்த  பார்வதி பரமேஸ்வரர்  இங்கே   ருத்ரதீர்த்தா புண்ய நதிக்கரையில்  கிருஷ்ண விக்ரஹத்தை  ஸ்தாபியுங்கள் என்று ஆசிர்வதித்து விட்டு மம்மியூருக்கு வந்து விட்டார்கள். ருத்ர தீர்த்தா நதிக்கரையில்  வாயுவும் குருவும் பிரதிஷ்டை பண்ணிய கிருஷ்ணன் தான் நாம் தரிசிக்கும் குருவாயூர்  க்ஷேத்ரம்.

மேற்கே  அரபிக்கடலை  ஒட்டியே  குருவாயூர் மம்மியூர் எல்லா க்ஷேத்ரங்களும் உள்ளன.   சவக்காட் கடற்கரை ரொம்ப பிரபலமான பொழுது போக்கு  ஸ்தலம். 

ஒரு  சுவாரஸ்யமான புராண விவரம்;   
துவாபர யுக முடிவில் துவாரகை நீரில் மூழ்கியது  அப்போது  அப்போது கிருஷ்ணர் குழந்தை வடிவில் ஆலிலையில் மிதந்தார்அவர் வழிபட்ட மூர்த்தியை (விஷ்ணு) பின்னர் குரு (பிருஹஸ்பதி) + வாயு விடம் சேர்ந்தது. 
அவர்கள் அதை எடுத்துக்கொண்டு கேரளாவில்  ருத்ர  தீர்த்தம் எனும் சிவன் தவமிருந்த இடத்துக்கு வந்தார்கள். 
“இந்த இடம் புனிதம்  உங்களிடம் இருக்கும் கிருஷ்ணனை இங்கேயே ஸ்தாபியுங்கள் என சிவன் சொல்லியபடியே நமக்கு குருவாயூர் கிடைத்தது. கிருஷ்ணனும் கிடைத்தான்.  கிருஷ்ணனுக்கு அந்த ஸ்தலத்தை அளித்துவிட்டு  பார்வதி பரமேஸ்வரர் அருகே இருந்த மம்மியூர் சென்றுவிட்டார்கள். 
இப்படிப்பட்ட மஹிமை கொண்ட '' மஹிமாயூர்''  மம்மியூர் ஆகிவிட்டது. 

மணி பன்னிரண்டு ஆகிவிட்டது.  மம்மியூர் தரிசனம் முடிந்து  வடக்குநாத சுவாமி கோவில் தரிசனம் செய்ய திரிஸ்ஸுர் புறப்பட்டேன். 



Sivan Krishnan

unread,
May 11, 2026, 6:34:38 AM (4 days ago) May 11
to amrith...@googlegroups.com

ஸ்ரிங்கேரி   ரஹஸ்யம் - நங்கநல்லூர்_J_K_SIVAN

ரஹஸ்யம் என்றாலே  யாருக்கும்  எதுவும் தெரியாமல்  நடக்கும்,  செய்யும் ஒரு காரியும்.   எந்த விஷயத்தையும் முதலிலேயே  எல்லோரும்  அறியும்படியாக செய்துவிட்டு,   சொல்லிவிட்டு  அது நடந்தால் அது ரஹஸ்யமாகாது.  திட்டமிட்டு செய்வது ஆச்சர்யம் தராது. தானாக நடக்கும் விஷயங்கள்  தான் அற்புதங்கள், அதிசயங்கள்,  பிரமிக்க வைப்பவை.

ஆதிசங்கரர் போன்ற  பூஜ்ய ப்ரம்ம ஞானிகள் வாழ்க்கையில்  ஒவ்வொரு வினாடியும் ஏதோ ஒரு அதிசயம் தான், அற்புதம் தான்.

நாம் மன நிறைவோடு சென்று ஸ்ரீ சாரதாம்பிகையை  வணங்கும்  சிருங்கேரி க்ஷேத்ரம் பற்றிய ஒரு விஷயம்  தான் இது. ஆதிசங்கரரின் வாழ்க்கையோடு  இணைந்த  அதிசய சம்பவம்.

32 வருஷங்கள்  உலக வாழ்க்கையை   அனுபவித்த ஆதி சங்கரருக்கு அப்போதே தெரிந்து விட்டது. திரிகால ஞானி என்பதால் தனது மறைவு நெருங்குவது தெரிந்து விட்டது.    மனதுக்குள் ஒரு தீர்மானம் பண்ணி விட்டார். 

''ஆம்.   அவசியம்   நான் நான்கு மடங்களை  இந்த  பாரத மண்ணின்  நாலா பக்கங்களிலும்  தோற்றுவிக்க பாடு பட வேண்டும். எந்த  நாலு க்ஷேத்ரங்கள்  என்று அவர் மனதிலே தீர்மானம் ஆகிவிட்டது. 

நம்மவர்களுக்கு மறதி ஜாஸ்தி. ஆகவே யாராவது எப்போதும்  அரைத்  தூக்கத்திலிருந்து அவர்களை எழுப்பி விட்டுக்   கொண்டே இருக்கவேண்டும்.  ஆதி சங்கரர் அந்த வகை மனிதரல்ல. நடமாடும் தெய்வம்.

ஆதி சங்கரரின் சரித்ரத்தை   வேகமாக சில வரிகளில் இப்படி சொல்ல முடியும்.  'சங்கரன் என்ற உருவில் வடக்குநாத ஈஸ்வரர்,  ஆரியம்பா சிவகுரு தம்பதியரின் த்ரிசூர் வடக்கு நாத மண்டல விரதத்திற்கு பரிசாக தானே புத்ரனாக அவதரித்தது தெரிந்த கதை. காலடி என்கிற கிராமத்தில் அவர் பிறந்தார். 7-8வயதிலேயே சந்நியாசம் பெற்று இந்திய க்ஷேத்ரங்கள் பூரா கால் நடையாகவே சென்று ஷண்மத ஸ்தாபிதம் செய்தும், 4 சங்கர மடங்களை/பீடங்களை நிறுவியதும் தெரிந்தது. சங்கரர் தனது திக் விஜயத்தில் சென்ற இடமெல்லாம் வேத சாஸ்திர விற்பன்னர்களோடு வாதாடி வென்று அத்வைத ஸ்தாபனம் செய்தவர்.  800ம் வருஷம் சங்கரர் சாரதா பீடத்தை சிருங்கேரியில் ஸ்தாபித்தார். துவாரகா பீடத்தை குஜராத்திலும், கோவர்தன பீடத்தை ஒரிஸ்ஸாவிலும், ஜ்யோதிர்மடத்தை வடக்கே பதரி , உத்தரகாண்டிலும் உருவாக்கினார். சரியான பொறுப்புள் ளவர்களாக அந்தந்த மடத்தை நிர்வாகிக்க தேர்ந்தெடுத்தார். தன்னுடைய சிஷ்யர்கள் ஹஸ்தாமலகரை ''நீ துவாரகா மடத்தை பார்த்துக்கொள்'' என்று நியமித்தவர் தோடகாச்சார்யார் தான் பதரி ஜோதிர்மடத்துக்கு பொறுப்பு என விட்டார். பத்மபாதர் பூரி, ஒரிஸ்ஸாவுக்கு சென்றபோது சுரேஸ்வரரை (மண்டன மிஸ்ரர் என்றும் பெயர்) ஸ்ரிங்கேரிக்கு அனுப்பினார். பொது ஜனங்களுக்கு குருவாக பணியாற்ற அவர்களுக்கு ஜகத் குரு என்று பாரம்பரியமாக பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.''

இனி சிருங்கேரிக்கு  வருவோம்.  இன்றும்  நாம்  காணும் சாரதா பீடம்  மடம் அமைந்துள்ள இடம்,  மிக அழகான இயற்கை வளம் நிரம்பியது.   மேற்கு தொடர்ச்சி மலைகளின் சூழலில். சிக்மகளூர் ஜில்லாவில் துங்கா நதிக்கரையில் கண்கொள்ளா அபூர்வமாக  இயற்கை  பூத்து  பூரித்து குலுங்கி வளமையை மாயா ஜாலமாக அள்ளிதருவது சிருங்கேரி.  

அங்கே ரெண்டு பெரிய கோயில்கள். வித்யா சங்கரலிங்க சிவாலயம். மற்றொன்று சாரதா அம்பாள் சரஸ்வதி ஆலயம். 
சிவன் கோவில் 1338ல் விஜயநகர நாயக்க ராஜா கட்டியது.  ஹொய்சள, துளுவ மக்கள் கலைத்திறன் வேலைப்பாடுகள் நிறைந்தது. உடுப்பியிலிருந்து 85 கி.மீ. மங்களூரிலிருந்து 100 கி.மீ. வடகிழக்கே மலைப் பாதையில்  காண்பது.. 

ராமாயணத்தில் வருவாரே  மழை வரச் செய்யும் ரிஷ்யஸ்ரிங்க ரிஷி என்ற  விபாண்டக  மகரிஷி புத்ரன், அவர்  சம்பந்தப் பட்டது இந்த மலைச்சிகரம்.    தசரதர் குழந்தை வரம் வேண்டி புத்ர காமேஷ்டி யாகம் செய்த போது , இந்த யாகத்தை நடத்தி கொடுத்தவர் ரிஷ்யசிருங்க முனிவர். இவரைக்   களைக் கோட்டு மாமுனி என்று தமிழ் சரித்ரங்கள் சொல்கிறது. ரிஷ்ய சிருங்கர் வாழ்ந்த இப்பகுதி அவர் பெயரால் ஸ்ருங்க கிரி எனப் பட்டு பின்னர் "சிருங்கேரி' ஆனது.
இந்த இடத்தை ஏன், எதற்கு, எப்படி ஆதி சங்கரர் தேர்ந்தெடுத்தார்?

 இது புரிய உடனே ஒரு கதை சொல்லவேண்டுமே . மாஹிஷ்மதி நகரில் விஸ்வரூபர் என்ற  பண்டிதருடன்  ஆதிசங்கரர் அத்வைத  விவாதம் செய்தார். இந்த விவாதத்துக்கு  விஸ்வரூபரின் பத்னியும்,  ஸரஸ்வதி
 தேவி அவதாரமுமான உபய பாரதி  தான் நடுவர்.  இந்த விவாத நிபந்தனை என்ன  தெரியுமா?

விவாதத்தில் சங்கரர் தோற்றால் துறவறம் விடுத்து இல்லறம் மேற்கொள்ள வேண்டும். விஸ்வரூபர் தோற்றால்  கிரஹஸ்தாஸ்ரமத்தை விட்டு சன்யாசம் மேற்கொள்ள வேண்டும்.

இருவருக்கும்  புதிதாகப் பறித்த  மலர் மாலை அணிவித்து, யாருடைய மாலை முதலில் வாடுகிறதோ அவரே தோற்றவர் என அறிவிக்கப்பட்டது. 17 நாள்  இரவு பகலாக   சங்கரருக்கும்  விஸ்வரூபருக்கும்  விவாதம் கடுமையான போட்டியாக   தொடர்ந்து  17ம்  நாள் மாலை  விஸ்வரூபரின் கழுத்தில் அணிந்திருந்த  மாலை வாடியது. தோல்வியை ஒப்புக்கொண்ட விஸ்வரூபர் துறவறத்திற்கு தயாரானார்.  அப்போது  நடுவராக இருந்த உபய பாரதி, "சங்கரரே!  விஸ்வரூபரின்  மாலை வாடியதால் மட்டும் தாங்கள் வெற்றி பெற்றதாக கருத முடியாது.  துறவறம் பற்றி பேசுகிற உங்களுக்கு என்னிடம் இல்லறம் பற்றி  விவாதம் செய்ய முடியுமா.  அதிலும் நீங்கள் வெற்றி பெற்றால் தான்  முழு வெற்றியாகும்,''என்றார்.

ஆதி சங்கரரோ பிரம்மச்சாரி.  ஏழு  எட்டு வயதிலேயே  சந்நியாசி. ஆகவே  ''அம்மா எனக்கு  ஒரு மாத காலம்  அவகாசம் கொடுங்கள். அதன் பிறகு  உங்களோடு  இல்லறம் பற்றிய விவாதம் வைத்துக் கொள்வோம்.''  என்றார்.  உபயபாரதி அதை ஏற்றுக்கொண்டாள் .

இல்லறம் பற்றி  ஆதி சங்கரர் யோசித்துக் கொண்டு செல்கையில், அமருகன் என்ற அந்த தேச மன்னன் இறந்ததை அறிந்த சங்கரர், தன்  யோக சக்தியால்,   கூடு விட்டு கூடு பாயும் , பரகாய பிரவேச சக்தி மூலம்   அமருகமன்னனின் உடலில் புகுந்து இல்லறம் பற்றி அறிந்தார். சங்கரரின் உடலை அவரது சீடர் பத்மபாதர் பாதுகாத்து வந்தார்.   குறித்த காலத்துக்குள்  மீண்டும் சங்கரர் தன் உடலில் புகுந்து உபயபாரதியிடம் வாதம் செய்து அவளை வென்றார்.  விஸ்வரூபர் துறவறம் ஏற்றார். சங்கரர் அவருக்கு "சுரேசுவரர்' என்ற நாமம் கொடுத்து தன் சீடராக ஏற்றுக்கொண்டார்.

ஸரஸ்வதி அம்சமான உபயபாரதியிடம்   ஆதி சங்கர பகவத் பாதாள்  "அம்மா  நான் ஒரு சந்நியாசி, ஒரு இரவு தங்கிய இடத்தில் மறுநாள் தங்காதவன். ஆகவே  நான் செல்லும் இடமெல்லாம் நீங்களும்  என்னோடு தொடர்ந்து வரவேண்டும்,' என்று வேண்டி கொண்டார். 

''ஆஹா, அதற்கென்ன, சங்கரரே , நான் விடாமல் உம்மை பின் தொடர்வேன்.  ஆனால் ஒரு நிபந்தனை''
''தாயே , உங்கள் நிபந்தனை என்ன?''
 'சங்கரரே!  நான் நீங்கள் எங்கு சென்றாலும் விடாமல் உம்மை தொடர்ந்து வருவேன். ஆனால், நீங்கள் என்னைத்  திரும்பி பார்க்காமல்  மேலே சென்று கொண்டே இருக்க வேண்டும்.  திரும்பிப் பார்த்தால் நான் அந்த இடத்திலேயே நின்று விடுவேன். அதன் பின் தொடர்ந்து வர மாட்டேன். இதற்கு சம்மதமா?'
''ஆஹா  அப்படியே ஆகட்டும்''

சங்கரர் தன் சீடர்களுடன் செல்ல, பின்னால் உபயபாரதி கால் சலங்கை ஒலிக்க வந்து கொண்டிருந்தாள். அவ்வப்போது சலங்கை ஒலி கேட்பதன் மூலம். உபாயபாரதி தொடர்வதை சங்கரர் உணர்ந்தார். பல நாள் நடந்தவர்கள் ஒரு நாள் இப்போதுள்ள சிருங்கேரி க்ஷேத்ரத்தை அடைந்தனர். அங்கு பாம்பும் தவளையும், பசுவும் புலியும் இணைந்து விளையாடுவதைக் கண்ட சங்கரர், ''அடாடா, எவ்வளவு சிறந்த  சாத்வீகமான ஸ்தலம் இது...இதல்லவா  யோகிகள் தங்கி  த்யானம் செய்ய தகுந்த இடம் என  தீர்மானித்தார். அப்போது, உபயபாரதியின்  கால் சிலம்பொலி  கேட்கவில்லை.  ஏன் என்று அறிந்து கொள்ள  சங்கரர்  திரும்பிப் பார்த்தார்.  துங்கா நதி மணலில் கால் புதைய நடந்ததால் தண்டை கொலுசு சப்தம் கேட்கவில்லையே  தவிர பாரதி பின் தொடர்ந்து வந்து கொண்டு தான் இருந்தாள்.

பின்னாலேயே  தொடர்ந்து வந்துகொண்டிருந்த  உபாயபாரதி, நிபந்தனைப்படி அங்கேயே நின்று விட்டாள்.  .அங்குள்ள பாறை மீது ஸ்ரீசக்கரம் வடித்து அவளுக்கு "சாரதா' என்ற திருநாமம் சூட்டி பிரதிஷ்டை செய்தார்  ஆதிசங்கரர்.  அப்போது, உபயபாரதி அவருக்கு  ஸரஸ்வதி தேவியாகக் காட்சி தந்து  'சங்கரா! இன்று முதல் இந்த பீடம் சாரதா பீடம் எனப்படும். இந்த பீடத்தில்  மஹா சன்னிதானமாக அமர்பவர்களிடத்தில் நான் குடி கொண்டு ஆசி வழங்குவேன்,''என அருள்பாலித்தாள். 

சுரேசுவரர் சாரதா பீடத்தின் முதல் சந்நிதானமானார். . சிருங்கேரி ஆச்சார்யர்களுக்கு அதுமுதல்  ''பாரதி''  என்ற பட்டப்பெயர் அதனால் தொடர்கிறது.

சிருங்கேரி மடம் ஸம்ஸ்க்ரித மொழி வளர  சேவை புரிகிறது.  அத்வைத கோட்பாடு வேத சாஸ்த்ர சம்பிரதாயத்தை கற்பிக்க, வளர்க்க, பரப்ப இந்த மடம் நூலகமாகவும் செயல்படுகிறது. எண்ணற்ற ஓலைச்சுவடிகள் இன்னும் அங்கே இருக்கிறது. நான்கு வாசல் கொண்ட மடம் .

சரித்திர புத்தகத்தில் பள்ளியில் படித்தது ஞாபகம் இருக்குமே. விஜயநகர சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்தது ஹரிஹரன் புக்கன் என்ற இரு வேடுவர்கள். அவர்களுக்கு வழிகாட்டி ராஜாக்களாக்கியது சிருங்கேரி சந்நியாசி மாத்வ வித்யாரண்யர், தக்ஷிணத்தில் முஸ்லீம்களின் ஆக்கிரமிப்பில் இருந்து விஜயநகரம் மீட்கப்பட்டது. ஹம்பி தலைநகரானது. வித்யாரண்யர் பின்னர் சிருங்கேரி மடத்தின் ஜகத்குருவாக இருந்தவர். ஹரிஹர புக்கர்கள் சர்வமான்யமாக சிருங்கேரி மடத்துக்கு கொடுத்த இடம் இது. அப்போது இருந்த ஜகதகுரு பாரதி தீர்த்தர் (1346).

எவ்வளவு மகோன்னதமான சாம்ராஜ்யம் என்றாலும் ஒருநாள் மறையும், இன்னொன்று தோன்றும். அப்படித்தான் விஜய நகர சாம்ராஜ்யத்திற்கு பின் இஸ்லாமியர் தலை எடுத்து நாச வேலைகள் ஆரம்ப மானது. மேற்கு கடற்கரையில் பல நாடுகள், நகரங்கள் சிருங்கேரி மடம் உட்பட பல பகவான் சங்கல்பத்தால்  நாயக்க வம்சம் பாதுகாப்பில் வந்தது. 250 வருஷங்கள் சிருங்கேரி மடம் நாயக்க மன்னர்களால் ஜாக்ரதையாக பராமரிக்கப்பட்டது. அப்புறம் தான் திப்பு சுல்தான் தலை எடுத்தான். மைசூர் சுல்தான் ஆனான்.

ஒளரங்க சீப்பிற்குப் பின்னர் மராத்தி ராஜாக்கள் ஆண்டபோது சிருங்கேரி மடம் வளர்ந்தது. அற்புத
மான சரித்திர சான்றுகள், தடயங்களை சிருங்கேரி மடம் பாதுகாத்து வருகிறது. ஆச்சர்யமாக ஹைதர் அலி கூட சிருங்கேரி மடாதிபதிக்கு, பல்லக்கு, பரிசுகள், ஐந்து குதிரைகள், ஒரு யானை, மற்றும் ஜகத்குரு யாத்திரைக்கு பணம் எல்லாம் பரிசளித்திருக்கிறான். ஹைதர் அலியின் மகன் திப்பு சுல்தான் ஆட்சியின் போது, சிருங்கேரி மடம் யாரோ சில கொள்ளையர்களால் சூறையாடப்பட்டு தங்கம் வெள்ளி, செம்பு விக்ரஹங்கள் கொள்ளையடிக்கப்பட்டு, பல பிராமணர்கள் கொல்லப்பட்டனர் என்ற சேதி அறிந்ததும் மடத்திற்கு திப்பு பண உதவி அளித்ததாக சரித்திர ஏடுகள் சொல்கிறது.

சிருங்கேரி செல்பவர்கள் அதன் இயற்கை கொப்புளிக்கும் வளமையை கவனிக்கத் தவறினால் அவசியம் அகர்வாலுக்குப் போய் கண்ணாடி மாட்டிக் கொள்ளவேண்டும்.

சாரதாம்பிகை, வித்யாசங்கரர் (சிவன்) கோயில்கள் ஏற்கனவே உள்ளன. இப்போது, ஆதிசங்கரருக்கு கோயில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பீடாதிபதி பாரதி தீர்த்த சுவாமிகள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார்.

சிருங்கேரி மங்களூரிலிருந்து 107 கி.மீ. தூரம். காலை 5 முதல் மாலை 4.30 வரை மலைப்பாதையில் பஸ்கள் ஓடும். நாங்கள் ஒரு தனியார் வண்டியில் கிடு கிடு பள்ளத்தை கீழே பார்த்து நடுங்கிக்கொண்டு மலைச்சரி வில் வளைந்த பாதைகளில் சிருங்கேரிக்கு  சென்றது இன்னும் மறக்கவில்லை. விடாத மழை வேறு.

Sivan Krishnan

unread,
May 11, 2026, 6:34:41 AM (4 days ago) May 11
to amrith...@googlegroups.com
கத்திரி வெய்யில் - நங்கநல்லூர் J K SIVAN

கோடை வெயில் என்றாலே கொளுத்தும்  சூடு. நேற்று   3.5.36  ஞாயிறு காலை, கோவிலுக்கு சென்று 12 மணி உச்சி வெயிலை  வெறும் காலோடு பிரகாரத்தில் நடந்தபோது  தீ மிதி பண்டிகை அனுபவம்  பெற்றேன். திடீரென்று நண்பர் வெங்கடரமணன்  தம்பதிகள் என்னையும் என் மனைவியையும் கோவிலுக்கு செல்லலாம் வாருங்கள்,  எங்கு செல்லாம் நீங்களே  சொல்லுங்கள் என்ற போது  கந்தசாமி தான் கண் முன் தோன்றினார். நேராக தங்கசாலை தெரு, ராசப்ப செட்டி தெருவுக்கு சென்று ஓரமாக காரை நிறுத்தினோம். ஆச்சர்யம் தெருவில் கூட்டமே இல்லை. கந்தசாமி தரிசனம் பெற்று நேராக   ஏகாம்பரேஸ்வரர் சந்நிதி சென்று அவரையும் தரிசித்துவிட்டு ஆர்மேனியன் தெரு வாசல் வழியாக  காளிகாம்பாள் ஆலயம்  நுழைந்து அற்புதமாக அவளை தரிசித்து விட்டு,  கச்சாலீஸ்வரர் ஆலயமும் சென்று ராவணனை முதலில் பார்த்துவிட்டு  பாலாலயம் என்பதால் உற்சவரை தரிசித்து விட்டு நேராக திருவொற்றியூர் சென்றோம். 12 மணிக்குள்
 திருவொற்றியூரான், வடிவுடை அம்மன், வட்டப்பாறை அம்மன், தியாகராஜா அனைவரையும் சந்தோஷமாக தரிசித்தோம்.  வடிவுடையம்மன் அழகை எழுத பக்கங்கள் போதாது. அவ்வளவு சௌலப்யம். அழகு, மூக்கில் அணிந்த வளையம் கீழே அழகிய உதடுகளில் புன் சிரிப்பு. பேருக்கேற்ற வடிவு கொண்டவள் அன்னை. இன்னும் நினைவிலேயே நிற்கிறாள். மூடும் சமயத்துக்குள் சில நிமிஷங்கள் அதிர்ஷ்டவசமாக  பட்டினத்தார் சமாதி கோவில் பார்க்க முடிந்தது. 

இன்று  4.5.26 முதல் “கத்திரி” வெயில் .   அக்னி நக்ஷத்ரம் ஆரம்பம்.  கத்திரி என்றால் கூரான துணி வெட்டும் கத்திரிக்கோல் ஞாபகம் வருகிறதல்லவா? அவ்வளவு கூறானது சூரிய வெப்பமும். நம் உடலை துண்டு துண்டாக்குவது.  கிட்டத்தட்ட  20 நாட்கள் இந்த சூரிய  அக்னியின் அதன் தாக்கம் இருக்கும். அதுவும் இந்த வருஷம் வெயில் ரொம்பவே கடுமை. தெருவில் மரங்களை வெட்டி விட்டார்கள். ஒரு வீடு இருந்த இடத்தில் 12-16குடும்பங்கள் வாழும் அடுக்கு மனை... தண்ணீர் பஞ்சம் வராமல் என்ன செய்யும்?  தொண்டை வறண்டு போகும். அடிக்கடி குளிர்ந்த நீர் பருகவேண்டும்.  வெள்ளரி விதை போட்ட மோர், 'சப்ஜா'' என்ற விதை போட்ட ஐஸ் தூள் போட்ட கலர் கண்ணாடி டம்பளறில் சிறுவயதில் பள்ளிக்கூட வாசலில் குடித்தது நினைத்தாலே மனம் ஜில்லிடுகிறது. நங்கநல்லூரில் நுங்கு விற்கிறார்கள். தர்பீஸ், தர்பூஸ் என்று பச்சையாக  பெரிய பழங்கள் வெட்டி கொடுக்கிறார்கள். 

சூரியன் அக்னி வெப்பத்தைப்போலவே  டிவி யிலும்  அதிர்ச்சியாக,  ஆச்சர்யமாக தேர்தல் முடிவுகள் காலையிலிருந்து கவனத்தை ஈர்க்கிறது. ஒரு புது ஆட்சி மலரப்போகிறது. சூரியன் இல்லை. ரெட்டை இலையும் இல்லை.  ரெண்டில் ஏதேனும் ஒன்று தான் வழக்கமாக ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மீண்டும் மீண்டும் வரும். இந்த அக்னி நக்ஷத்ரம் வேறு மாறுதல் தரப்போகிறது. இந்த  தேர்தல் முடிவு செய்தி அக்னி நக்ஷத்ரம் சூரியனையே சுட்டு பொசுக்கி விட்டதே...இதற்கு மேல் என்ன உஷ்ணம் இருக்கிறது?

இன்று முதல் வெயில் கொளுத்தோ கொளுத்து என்று கொல்லப் போவதால்  நிறைய  வாட்சாப், டிவி, யூட்யூபில் யிலில் சுருண்டு விழுந்து மாண்ட முதியோர்கள் பற்றிய செயதிகள் வந்து கொண்டே இருக்கும். எப்போதுமே கிருத்திகை நக்ஷத்திரம் அக்னியோடு சம்பந்தப்பட்டது. க்ரித்திகை நக்ஷத்திர ராஜா அக்னி. சூரியனும் அக்னியும் சேர்ந்தால் கேட்கவா வேண்டும். குளம் குட்டை எல்லாம் வற்றிவிடும். பாட்டிகள் மாமிகள் வெயிலை வீணாக்காமல் மொட்டை மாடியில் வடாம் , வத்தல் காய வைப்பார்கள். லௌகிக விசேஷங்கள், அது தான், கல்யாணம், புது வீடு புகும் விழா, மாதிரி எதுவும் அக்னி நக்ஷத்ர காலத்தில் நடைபெறுவதில்லை. வெளியில் போவதை குறைத்துக்கொண்டு திண்ணைகள், மரத்தடி நிழல், என்று விசிறிக்கொண்டு கிராமங் களில் உட்கார்வோம். உஷ்ணத்தை குறைக்க வருணனுக்கு ஜபம் பண்ணுவது வழக்கம். கோடையில் பெய்யும் மழைக்கு மதிப்பு மரியாதை அதிகம். சமையலில் புளி, காரம், குறைந்திருக்கும். கரண்ட் பில் ஜிகு ஜிகு என்று ஏறும். என்ன செய்வது?AC , குளிர் சாதன பெட்டி, FRIDGE , இல்லாத என் சிறுவயதில் பானைத்  தண்ணீர் மேல் ஈர துணி போர்த்தி வைத்திருப்பார்கள். லோட்டா லோட் டாவாக குடித்தாலும் தாகம் அடங்காது. பசுமோர், நன்னாரி சர்பத், குடிப்பவர்கள் வசதியுள்ளவர்கள். ஒவ்வொரு  வீட்டிலும் இடுப்பு வேஷ்டி, மேல் துண்டோடு தான் காட்சிஅளிப்பார்கள். வெயிலில் போக குடைக்கு கூட, கருப்பு துணி மேல் வெள்ளை உறை  இருக்கும். வெள்ளரிப்பிஞ்சு, தர்பூசணிக்கு டிமாண்ட் ஜாஸ்தி. வீடுகளில் ஜன்னல், கதவுக்கு வெட்டி வேர் தட்டி, மேல் ஜலம் ஊற்றி குளுகுளு என்று பண்ணி வைத்திருப்பார்கள். கண்டிப்பாக ரெண்டு வேளை குளியல் உண்டு. பழக்கமாக, வழக்கமாக வெந்நீர் குடிப்பவர்கள், சுட சுட காப்பி குடிப்பவர்கள் கத்திரி வெய்யில் பற்றி கவலை கொள்ளாதவர்கள்.

ரெண்டு பாடல்கள் கோடை சம்பந்தப்பட்டவை.
ஒன்று நாட்டுப்பாடல்.
கத்திரி வெய்யில் காலத்திலேகடையில் கூட மூச்சாட மாட்டேன்!   
சூரியன் கொதிக்கிறான், நிலமும் எரிக்குது,  நல்ல நீர், நிழல் – தான் உயிர்க்காயம்!"

இன்னொன்று அற்புதமான வள்ளலார் பாடல்.
''கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த
குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே
ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண்ணீரே
உகந்ததண்ணீரிடைமலர்ந்த சுகந்த மண மலரே
மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங் காற்றே
மென்காற்றில் விளைசுகமே சுகத்தில் உறும்பயனே 
ஆடையிலே யெனைமணந்த மணவாளா பொதுவில்
ஆடுகின்ற அரசே என் அலங்கல் அணிந்தருளே''.

நேற்று கந்தசாமி கோவிலில் வள்ளலாரை தரிசித்தேன். தினமும் எத்தனை காலம் ஏழு கிணற்றிலிருந்து நடந்து கந்த சாமி கோவில் வந்திருப்பார். உட்கார்ந்து பாடி  இருப்பார். 

மேலே சொன்ன வள்ளலார் பாடலுக்கு மெருகூட்டி குளுகுளு வென்று சுகமாக கேட்க வைத்தவர் எஸ். ஜி. கிட்டப்பா.. ஆஹா அந்த கந்தர்வ கான குரலை மறுபடி கேட்கவே முடியாது. அபூர்வ பிறவி அவர்.

Sivan Krishnan

unread,
May 11, 2026, 6:34:42 AM (4 days ago) May 11
to amrith...@googlegroups.com
பரசுராம க்ஷேத்ர  யாத்திரை -   நங்கநல்லூர் J K   SIVAN
17.4.26 - 22.4.26.

ஏட்டுமானூரப்பன்  தரிசனம்.  

19/4/26 அன்று விடிகாலை மூன்றரை மணிக்கு  நாங்கள் பெரும்பாவூரில்   தங்கியிருந்த S M  ஹோம்ஸ் விடுதியிலிருந்து காரில் கிளம்பியபோது ஐந்து கோவில்களை  பார்க்க  விரும்பினோம்.   கேரள ஆலயங்கள் விடிகாலை 4 மணிக்கே  திறந்து விடுகிறார்கள். தெருவில் கூட்டம் இல்லை  இடையூறுகள் எதுவுமில்லை. தெருக்களும் நன்றாக  விசாலமாக, போக்குவரத்து ஜனநடமாட்டம் எதுவும் இன்றி  இருந்ததால் இதுவரை  நான்கு  ஆலயங்கள் தரிசித்தாகிவிட்டது. நான்காவது ஆலய பகவான் கடுத்துருத்தி  மஹாதேவர்   எங்களை எட்டுமானூருக்கு அனுப்பும்போது  காலை மணி பத்து  ஆகிவிட்டது.  சென்னை வெய்யில்  கேரளாவில் தெரியவில்லை. 

கடுத்துருத்தியிலிருந்து  45 கி.மீ. தூரத்தில் எட்டுமானூர் மஹாதேவர் ஆலயம்.  கோட்டயத்திலிருந்து 11 கி.மீ. பன்னிரண்டு மணிக்கு  நடை சாத்துவதற்குள் சென்றுவிட வேண்டும் என்று அவசரம்.  இவ்வளவு தூரம் மலையாளம் தெரியாமல் சென்னையிலிருந்து  87 வயதில் ஆர்வமாக வந்தவனை  ''என்னைப் பார்க்காதே திரும்பி போ'' என்று கதவைத்  தாளிடுவானா என் சிவன்? என் பெயரும் அவன் பெயர் தானே. 

எட்டுமானூரப்பன்  மஹாதேவன் ஆலயமும்  பரசுராமர் ஸ்தாபித்த சிவாலயம் தான். அவர் சிஷ்யன் கர ப்ரகாசன் தவமிருந்து தொழுத ஆலயம்.  ஆயிரமாயிரம்  வருஷம் பழமையான கோவில். வழக்கம்போல இங்கேயும் நீண்ட  ஓடு/செப்பு கூம்பு விதானம் தான்.  நுழையும் வாசல் குறைந்த உயரம். கிழக்கே  நுழைவு வாயில். சுற்றிலும் மரங்கள். இங்கே  சிவனின் கழுத்தைச் சுற்றி வாசுகி நெக்லஸ் மாதிரி ஆபரணமாக இருந்ததாக  ஐதீகம். ஐந்து தலைகள் தான்  ஏட்டுமானூரப்பன்  தலைமேல் குடை,.

ராஜசேகர வர்மன் என்று ஒரு மலையாள ராஜா.  மஹாதேவ பக்தன் அவன்.  
''அடேய் சேரா, நான் இங்கே எட்டு விதமான உருவங்களில்  இந்த மானூரில் உள்ளேன்'' என்றுஒருநாள்  அவன்  கனவில் மஹாதேவன் சொன்னார்.  எட்டு மானூர்   என்றால்    ;எட்டு மனஸ், அஷ்ட க்ரஹம் ,  என்று எட்டு நம்பூத்ரி  குடும்பங்களை குறிப்பதாக ஒரு தகவல்.   சிவன் கையில் மானை ஏற்றுக்கொண்டதால் ஏற்று மானூர் என்ற பெயர் என்றும் சொல்கிறார்கள். 

கரமஹர்ஷி, கர பிரசாத முனி, கர ப்ரம்ம ரிஷி என்றெல்லாம் பெயர் கொண்ட ஸ்தாபித்த க்ஷேத்ரம் இது.  அவர் சாபத்தால் ராக்ஷசனானார்.

மகாதேவனை சரணடைந்து சாப விமோசனம் தேடினார். சிவனருளால் மீண்டும் முனிவரானார்.சிவன் அவரை இங்கே அனுப்பினார். முனிவர் ஆலயத்தை ஸ்தாபித்தார். 

பொன்னிற  த்வஜ ஸ்தம்பம், ரிஷப வாஹனம் எல்லாம் இங்கே கண்குளிர காட்சி தருகிறது. ஸ்ரீ மூலம் திருநாள் மஹாராஜா நிறுவிய புதிய த்வஜ ஸ்தம்பம் இது.  கோவிலில் நிறைய பழையகால  வண்ண ஓவியங்கள் உள்ளன. 

''ஏழர  பொன்னான'  என்பது  ஏழு  பெரிய  தங்கநிற  யானை, ஒரு குட்டி , விக்ரஹங்களை  குறிக்கும். பாதுகாப்பு பெட்டகத்திலிருந்து வருஷம் ஒருமுறை வெளியே வந்து காட்சி தரும்.  இந்த யானைகள்  திருவாங்கூர் ராஜ்ய ஸ்தாபகர்  அனுஷம் திருநாள் மார்த்தாண்ட வர்மா பரிசளித்தது.  முதலில் இவை வைக்கதிகப்பன் ஆலயத்துக்கு எதுத்து செல்லப்பட்டது. வழியில் வீரர்கள் ஓய்வெடுத்தது மறுநாள் கிளம்பும்போது பொன்னானைகளில் கொடிய  நாகங்கள் அவர்களை அண்டவிடவில்லை.  ஆஸ்தான ஜோசியர் பரிசீலித்து  இவை எட்டுமானூரப்பனுக்கு  விருப்பமானவை. அவனிடம்  இருக்கவேண்டியவை என்பதால் வைக்கம் எடுத்து செல்ல முடியாது என்று சொல்லிவிட்டார்.  பலா மரத்தில் செய்யப்பtட யானைகள், மேலே தங்க கவசம் பூண்டவை. 

நானூறு ஆண்டுகளுக்கும் மேலாக  தீபம் அணையாமல் இங்கே எரிகிறது என்பது ஒரு அதிசயம். மஹாதேவன் உக்ர  ஸ்வரூபம். 

இன்று  19/4/26  கோவில் தரிசனம் இவ்வளவு தான். ஆகவே SM  ஹோம்ஸ் விருத்திக்கு செல்ல  பெரும்பாவூர் பயணமானோம். மதியம்  2.00 மணிக்கு  பெரும்பாவூர் சென்றோம்.  

மறுநாள்  20.4.26  என் நண்பர்  ஸ்ரீ  சந்திரசேகரன் பேரனுக்கு உபநயனம். அதற்காகத்தான்  பெரும்பாவூர் வந்துள்ளேன் என்பதால் அன்று அவர் வீட்டில்  உபநயனத்துக்கு முதல் நாள் நாந்தி ஹோமம் நடைபெறும் சாயம், பெரியவர்கள் அக்ஷதை போட்டு ஆசீர்வாதம் செய்யும்  நேரத்தில் கோவில்கள் ப்ரசாதத்தோடு அவர் வீட்டுக்கு  சென்றேன்.'


Sivan Krishnan

unread,
May 11, 2026, 6:34:42 AM (4 days ago) May 11
to amrith...@googlegroups.com
பரசுராம க்ஷேத்ர  யாத்திரை -   நங்கநல்லூர்  J K SIVAN 
17/4/26-22/4/26

த்ரிஸூர்  வடக்குநாத சுவாமி 

21.4.26 அன்று  விடிகாலை 4மணிக்கு  துவங்கிய யாத்திரை  கொடுங்களூர் , த்ரிப்ரயார், குருவாயூர்,என்று முற்பகலில் முடிந்து  பிற்பகல்  4 மணிக்கு  த்ரிசூரில்  வடக்குநாதர் ஆலயத்துடன் ஆரம்பித்தது. 

வடக்குநாதன் கோவில் மிக புராதனமான  சிவாலயம். 108 கேரள சிவாலயங்களில் உன்னதமானது. தக்ஷிண கைலாசம் எனப்படுவது.  பரசுராமரால் நிர்மாணிக்கப்பட்ட  முக்கியமான க்ஷேத்ரம் . மஹா விஷ்ணுவின் அவதாரம்  பரசுராமர்.  அவர்   தன்னுடைய  கோடாலியை வருணன் சொன்னபடி,  கடல் மேல் வீசி அதை பின்னோக்கி செல்ல வைத்து  உருவாக்கிய க்ஷேத்ரம் கேரளம்.  அதனால் தான் பரசுராம க்ஷேத்ரம் எனப்  பெயர்..

இந்த  கோவிலில்.  இந்த ஜென்மத்தில்  நான்  மீண்டும் ஒருமுறை பல வருஷங்களுக்குப்பிறகு  வெறும்காலில் ப்ரதக்ஷிணம் வந்தது என்னுடைய  பேரதிர்ஷ்டம். மிக விசாலமான ஒன்பது ஏக்கர்  வளாகம். பூரம் பெரு விழாவுக்காக  மும்முரமாக தயாராகிக் கொண்டிருந்தது.பெரிய பந்தல்கள் போட்டுக்கொண்டிருந்தார்கள்.  மனிதர்களும் மெஷின்களுடன்  நிர்மாண வேலைகளில்  வேகமாக செயல்பட்டுக்கொண்டிருந்தார்கள்.   ஆங்காங்கே  முக்கிய சந்நிதிகள்:   பார்வதி, சங்கர நாராயணன், கணேசர், ஸ்ரீ ராமர், கோபாலக்ரிஷ்ணன், தர்ம சாஸ்தா. நாக காவு, நந்தி கேஸ்வரர், சிம்மோதாரர், ஆதி சங்கரர், சுப்பிரமணியர், துர்கா இன்னும் பல  சந்நிதிகள். 

 பாரம்பரிய முறைப்படி  கல், மரத்தினாலான   ஓடு, செப்புத்தகடுகளால் வேயப்பட்ட  விதானம் கொண்ட கூம்புவடிவ அடுக்கடுக்கு கோபுரங்கள். 

ஆர்யாம்பா, சிவகுரு தம்பதிகள் வெகுகாலம் புத்ரபாக்யம் இன்றி வருந்தி காலடியிலிருந்து இங்கு வந்து  ஒரு மண்டலம் விரதம் இருந்து வடக்கு நாதன் அசரீரியாக அவர்களுக்கு  வாக்களித்தது நினைவிருக்கிறதா? ''உங்கள் குறை தீர்க்க நானே உங்கள் மகனாக அவதரிப்பேன்.  ஒரு கேள்வி.  உங்களுக்கு  சாதாரணமான ஒரு நீண்டநாள் வாழும் மகன் தேவையா?  அசாதாரணமான  குறுகிய வாழ்நாள் கொண்ட அற்புத மகன் வேண்டுமா? ''

இப்படி வடக்குநாதன் கேட்டால்  ஆர்யாம்பாள் சிவகுரு  என்ன பதில் சொல்வார்கள்?  நம்மைப் போல் நீண்ட ஆயுள் கொண்ட சாதாரணனை மகன் தான் வேண்டும் என்று கேட்காமல்  அற்ப ஆயுளாக இருந்தாலும்  ஞானம் கொண்ட,  விவேகமான மகனே வேண்டும் ' என சொல்லிவிட்டார்கள்.   வடக்குநாத சிவசங்கரன் அருளால் பிறந்த மகன் சங்கரனென பெயர் சூட்டப்பட்டான். நமக்கு ஆதி சங்கரர்  காலடியில் கிடைத்தார்.

அப்படி தோன்றியவர் தான் ஆதி சங்கர பகவத் பாதாள் . ஆதிசங்கரர் இங்கே விதேக முக்தி அடைந்தார் என்றும் சொல்கிறார்கள்.  

வடக்கு நாதர்  சிவலிங்கம் நெய்யினால்    மூடப்பட்டுள்ளது என அறிந்தேன்.இத்தனை வருஷங்கள் ஆகியும் எந்த கொடும் வெயிலிலும் கூட அந்த சிவலிங்க  நெய்  உருகவில்லை  என்கிறார்கள்.  திருவாங்கூர் கொச்சி அரசர்கள் வணங்கிய தெய்வம். த்ரிஸூர் பூரம்  பூரங்களின் தாய் விழா. வெடிகள், கொம்பு போன்ற  பல வித  வாத்ய ஒலி , எண்ணற்ற செண்டை மேள  ஓசை வானைப்பிளக்கும்.  நிறைய  யானைகள் அலங்கரிக்கப்பட்டு  சீவேலி தாங்கி அற்புத கண்காட்சியாக இருக்கும்.  யானைகள் வெடிகளால், ஓசையால் பயப்படுவதில்லை. நிறைய  கேட்டு அனுபவம்.  

கோவில் சுவர்களில் அடுக்கடுக்காக  இருக்கும் விளக்குகள்  முழுதும் தீபம் ஏற்றப்பட்டு லக்ஷ தீப விழா வெகு விமரிசையாக நடக்கிறது.  எல்லா பக்தர்களும்  ஓம் நமசிவாய என்று பகவானை ஸ்தோத்ரம் பண்ணிக்கொண்டே  தரிசனம் பெறுகிறார்கள் ப்ரதக்ஷிணம் செய்கிறார்கள். அனாவசிய பேச்சு கிடையாது. குப்பை கூளம்  தரையில் போடுவதில்லை. கோவிலுக்குள் எதையும் உண்பதில்லை.  அநேகமாக எல்லோர் கையிலும் வாழை இலைத் துண்டில் புஷ்பம், சந்தன பிரசாதம் இருக்கிறது. பக்தியோடு அதைப் பெற்று அணிகிறார்கள். நம் தமிழ் நாட்டில் விபூதி குங்கும  பிரசாதங்கள் தூண் மேல் தரையில் கிடப்பது வருத்தமான நிகழ்ச்சி.  கோவிலின் உள்ளே சுவர்களில் அற்புதமான  இதிகாச, புராண காட்சிகளின் வண்ண ஓவியங்கள் கண்ணைக் கவர்கிறது.

கால் முட்டி வலியை லக்ஷியம் பண்ணாமல்  அமைதியான சூழ்நிலையில்,  மனதில் சிவனைத்  தேக்கிக் கொண்டு,  வெளி ப்ரஹாரம் முழுதும் கோவிலை சுற்றி ப்ரதக்ஷிணம் வந்தேன். பூரம் விழா நேரத்தில்  அங்கிருந்தால் கூட்டத்தில் சிக்கிக் கொண்டிருப்பேன்.

ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு  முன்  உருவான ஆலயம் வடக்குநாதர் கோவில்.  வடக்கு நாதர்  ஸ்வயம்பு.  பராய் பெட்டா பந்திருக்குளத்தில் இருந்து பெரும்தச்சன் காலத்தில் கட்டப்பட்டதாக  ஒரு வழக்கு.  பெரும்தச்சன் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகவும்  கூறப்படுகிறது; எனவே கூத்தம்பலம் 1,300 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம்  என மலையாள வரலாற்றாசிரியர் வி.வி.கே.வலம்  சொல்கிறார். 

ஆலய வளாகத்தில் எண்ணற்ற  ஸ்தல விருக்ஷங்கள் உள்ளன. அழகாக மேடைகள்  அமைக்கப்பட்டு  அதன் மேல் நிற்கின்றன.  ஆல மரம் ஸ்தல விருக்ஷம். அரசு, வேம்பு, வில்வம், தேக்கு, பலா,இலஞ்சி, மா,  மரங்களுக்கு பஞ்சமில்லை.
வாழ் நாளில் ஒரு தடவையாவது தரிசிக்க வேண்டிய  புனித க்ஷேத்ரம் த்ரிஸூர் வடக்குநாதன் கோவில். என்னுடன் வந்து எனக்கு தரிசனம் செய்வித்த  திருமதி ஷோபனா விஸ்வநாதன் தம்பதியருக்கு என்றும் கடமைப் பட்டிருக்கிறேன்.
அடுத்து சென்ற சில கோவில்கள் பற்றி அடுத்த பதிவில் சந்திப்போம். 


Sivan Krishnan

unread,
May 11, 2026, 6:34:42 AM (4 days ago) May 11
to amrith...@googlegroups.com

பரசுராம க்ஷேத்ர யாத்திரை -  நங்கநல்லூர்  J K  SIVAN
17.4. 26 - 22.4.2026

கொடுங்களூர் பகவதி 

20.4.26 அன்று  நண்பர் இல்லத்தில் அவர் பேரன் பூணல் கல்யாண வைபவத்தில் பங்கேற்று, அன்று மாலை உள்ளூர் கடைகளுக்கு சென்று  துணி மணிகள், வீட்டு  வேண்டிய  நேந்திரங்காய் பக்ஷண வகையறா வெல்
லாம் வாங்கிக்கொண்டு  எங்கள் விடுதிக்கு வந்து  பெட்டி  படுக்கைகளை மூட்டை கட்டினோம். மறுநாள் 21.4.26 விடிகாலை பெரும்பாவூரை விட்டு கிளம்பி யாத்ரா மார்கமாக சென்னை செல்லவேண்டும் என்று தீர்மானம். 23.4.26 சென்னையில் இருக்க வேண்டும். தேர்தல் வாக்களிக்க வேண்டும். அது நமது அத்யாய கடமை அல்லவா?

21.4.2026 அன்று விடியற்காலை 4 மணிக்கு விடுதியை காலி செய்து விட்டு கிளம்பினேன்.  குருவாயூருக்கு செல்லும் வழியில் பெரும்பாவூரிலிருந்து  43 கி.மீ. தூரத்தில் கொடுங்களூர்  பகவதி அம்மன் ஆலயம் உள்ளது.

கேரளாவில்  தாந்த்ரீக வழிபாடு அதிகம். அம்மன் பகவதி எனப்படுபவள். பத்ரகாளி ஸ்வரூபம்.  கொடுங்களூரில் பகவதி அம்மன் பிரதான தெய்வம். சிவனின் கோபத்தில் , நெற்றிக்கண்ணிலிருந்து 
உருவானவள். 'கொடும் காளி  ஊர்''  தான் கொடுங்களூர்  ஆயிற்று  என்பார்கள்.

புராணங்களின்படி, Lord Shiva அவரின் கோபத்திலிருந்து பத்ரகாளி உருவானார். இந்த பகவதி தாருகன் 
 எனும் அசுரனை அழிக்க  உருவானவள். ரொம்ப  புராதன சக்தி பீடம். 64 சக்தி பீடங்களில் ஒன்று.  அய்யாவை காட்டிலும் அம்மாவின் மேல் பக்தர்களுக்கு அதிக நம்பிக்கை. அவள் லோக மாதா அல்லவா?  தீய சக்தியை அழிப்பவள். பலவித வித்தியாச வழிபாட்டு முறைகள் பின்பற்றப்படுகிறது.'

கொடுங்களூரில் அம்மன்  குரும்ப பகவதி. திரிசூர்  ஜில்லாவை சேர்ந்தது.  ஸ்ரீ குரும்பூர் பகவதி அம்மை. மூலஸ்தானத்தில் வடக்கே பார்த்து நிற்கிறாள். அஷ்ட புஜங்கள் கொண்டவள். ஒன்று கரத்தில் வெட்டப்பட்ட  தாருகன் தலை. ஒரு கையில்  வெட்டிய  அரிவாள். மற்ற கரங்களில்  மணி, தண்டை மாலை எல்லாம் உண்டு.
கேரள க்ஷேஹராத்தை பரசுராமன் உருவாக்கிய போது  தாருகன் அவருக்கு இடையூறுகள் நிறைய கொடுத்தான்.  பரசுராமன் பரமேஸ்வரனை வேண்டினார். சிவன் சொற்படி பரசுராமர் இந்த  ஆலயத்தை நிறுவி அதில்  பகவதியை பிரதிஷ்டை செய்தார். பகவதி பராசக்தி அம்சம். பகவான் அவனை ஸம்ஹாரம் செய்தார்.  இந்த ஆலயம் கொச்சி தேவாஸ்வம் நிர்வாகத்தில் உள்ளது. கொடுங்களூர்  ஒரு காலத்தில் திருவாஞ்சிக்குள தலைநகரம்.

இன்னொரு விஷயமும் இந்த கோவிலைப் பற்றி கேள்விப்பட்டேன்.  நமக்கு கண்ணகி கோவலன் கதை தெரியுமே. சங்க காலத்து சிலப்பதிகாரம் ஐம்பெரும் காப்பியத்தில் ஒன்று. தலபோலி  என்று ஒரு பண்டிகை. அதில் இங்கே வருஷாவருஷம் கண்ணகி பற்றிய  சங்கம் விழா விளையாட்டுகள் நடக்கிறது.  

சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு இப்போதிருக்கும்  கோவிலுக்கு ரெண்டு கி.மீ. தள்ளி ஒரு இடத்தில் கோவில் கட்டினான். கோழிகள்  காவு கொடுக்கப்பட்டன. கள் ஏராளமாக விநியோகம். அவள் உக்கிரத்தை தணிக்க அவளை இந்த கோவிலில் சிவன் எதிரே பிரதிஷ்டை பண்ணினார்கள். சிவன் தெற்கே பார்த்து, பகவதி வடக்கே பார்த்து. பத்ரகாளி மேற்கே பார்த்து. 

கொடுங்களூர்  வரு முன்பு கண்ணகி ஆட்டுக்கால் எனும் இடத்தில் மக்களுக்கு தரிசனம் தந்ததால் ஆட்டுக்கால் பகவதி எனப்படுகிறாள்.ஆதி சங்கராச்சார்யா ஐந்து சக்ரங்களை பிரதிஷ்டை பண்ணி இருக்கிறார். மகர மாசம், ஜனவரி பிப்ரவரி , சங்கராந்தி,  சமயத்தில் தலபோலி  விழா  நாலு நாள்  நடக்கும். யானை  ஊர்வலம் , வாண வேடிக்கைகள், வெடிகள், மலையராயன் வகுப்பினர் இருமுடி கட்டிக்கொள்வார்கள். மஞ்சள் மிளகு தானம் நடக்கும் பூஜைகள் விமரிசையாக இருக்கும். குடும்பி வகுப்பினர் வாத்தியங்கள் கோலாகலமாக இருக்கும்.சுவாசினி பூஜை கோவிலில் நடைபெறும். மூன்றால் நாள் பதினெட்டரயளம்  கோவிலகம்  இடத்திலிருந்து  ஊர்வலம் துவங்கும். 

அம்பாள் மேல்  பக்தர்கள்  உச்சரிக்கும்  அருமையான  ஸ்லோகம்:

या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता । नमस्तस्यै नमस्तस्यै नमस्तस्यै नमो नमः ॥
yā dēvī sarvabhūtēṣu śakti rūpēṇa saṁsthitā  namastasyai namastasyai namastasyai namō namaḥ
''எல்லா உயிர்களிலும் சக்தியாக உள்ள தேவிக்கு மீண்டும் மீண்டும் நமஸ்காரம்''

सर्वमंगल मांगल्ये शिवे सर्वार्थ साधिके । शरण्ये त्र्यम्बके देवी नारायणि नमोऽस्तु ते ॥
sarva maṅgala māṅgalyē śivē sarvārtha sādhikē  śaraṇyē tryambakē dēvī nārāyaṇi namō'stu tē
அனைத்து மங்களங்களுக்கும் காரணமானவளே, எல்லாவற்றையும் அருள்புரிவவளே, உமக்கு வணக்கம்.



Sivan Krishnan

unread,
May 11, 2026, 6:34:42 AM (4 days ago) May 11
to amrith...@googlegroups.com
பரசுராம க்ஷேத்ர யாத்திரை.       நங்கநல்லூர்  J K  SIVAN 

17/4/26-22/4/26

எதிர்பாராத  அதிதி உபசாரம்    

இதுவரை ஐந்து நாட்களாக  நான்  கேரளாவின் சில பகுதிகளை சுற்றி வந்துள்ளேன். பெரும்பாவூரில் நண்பர் வீட்டு உபநயனம் கட்டாயமாக செல்ல வேண்டும்  என்று முடிவெடுத்து அதை ஒட்டி  அருகே முடிந்த கோவில்களை தரிசிப்போம் என்று தீர்மானித்து  இந்த  கேரள யாத்திரை புறப்பட்டேன். அது கிருஷ்ணன் அருளால் இவ்வளவு அற்புதமாக நிறைவேறும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.  யாத்திரையில் ஐந்தாவது நாள் குருவாயூரிலிருந்து  திரிசூர் வந்தபோது அங்கே உள்ள முக்கியமான திரிசூர் வடக்குநாதர் ஆலயம் பற்றி என்னுடைய மொபைலில் விவரம் தேடி ஆராய்ந்தேன். இந்த தேடலின் போது   திடீரென்று நான் நினைத்தே பார்க்காத ஒரு பெயர் கண்ணில் பட்டது.  திரிசூர் ஷோபனா விஸ்வநாதன்!!!!  இந்த பெயர் கொண்ட எழுத்தாள நண்பரை நான் ஒருமுறை  சென்னையில்  சந்தித்திருக்கிறேன். ஆம்  அவர் ஒரு சிறந்த எழுத்தாளர். இந்தியன் வங்கி அதிகாரியாக இருந்து ஒய்வு பெற்று  ஒரு வினாடி நேரம் கூட வீணாக்காமல் தனது நேரத்தை சமூக சேவை செய்ய அர்ப்பணிக்கும் அற்புத பெண்மணி இவர் .   திருமதி ஷோ. வி.  எழுதிய ஒரு நூலுக்கு நான் அணிந்துரை எழுதியது நினைவுக்கு வந்தது. அவரை தொடர்பு கொண்டு வடக்கு நாதர் கோவில் மற்றும் அருகே உள்ள கோவில்களை தரிசிக்க விவரம் சேகரிக்கலாம்  என்ற  எண்ணம் மனதில் தோன்றியது. 

தொடர்பு கொண்டேன்.  இன்று ஒரு நாள் தான் கேரள  க்ஷேத்ர யாத்திரை. நாளை காரில் சென்னை திரும்ப வேண்டும். இரவுக்குள்  வீடு சேர்ந்து அடுத்த  நாள் 23.4.26அன்று  தமிழக சட்ட மன்ற தேர்தல் வாக்களிக்க வேண்டும் என்று முடிவு.

ஷோபனாவின் குரல் கேட்டது. அன்போடு அழைத்தார். காலையிலேயே வந்து விடுங்கள்  எங்கள் இல்லத்திலேயே  காலை உணவு தயாராக  இருக்கும் என்றார். என்னால் உடனே செல்ல முடியாததற்கு காரணம் என்ன என்றால்  எங்கள்  கார்  டிரைவர் என்னை வேறு பாதையில்   கொடுங்களூர்  த்ரிப்ரயார் மார்கமாக குருவாயூர் அழைத்து சென்று விட்டது புரிந்தது. இந்த வழியாக போனால் நான் திரிசூர் அடைய முடியாது.  வடக்கு நாத மஹேஸ்வரனையும்  கோவில் நடை சாத்துவதற்கு முன் தரிசிக்க முடியாது. 

 ''ஷோபனா என்னை மன்னித்து விடுங்கள், உங்கள் இல்லத்துக்கு  இன்று  காலை வர இயலவில்லை. குருவாயூர் தரிசனம் முடிந்த பின் உச்சி வேளைக்கு பிறகு வருகிறேன் என்று கேட்டுக்கொண்டேன்.'

கொட்டப்புரம்  மம்மியூரில் இருந்து  கிட்டத்தட்ட  30 கி.மீ. தூரம்.  குருவாயூரிலேயே  காலை உணவை முடித்துக் கொண்டு விட்டோம். ஆகவே  என்னென்னவோ மலையாள ஊர்களின்  பெயர்களை வேகமாக காரில் பார்த்துக்கொண்டே  திரிசூரில்  பூங்குன்னம்  வழியாக கொட்டப்புரம் வந்து சேரும்போது பகல்  12மணிக்கு மேல் ஆகிவிட்டது. பாலக்காட்டை  சேர்ந்த ஒரு வயோதிக பக்தரை எங்களோடு  காரில் அழைத்து வந்தோம். அவரை பூங்குன்னம் ரயிலடியில் விட்டு விட்டு திருமதி ஷோ.வி.  இல்லம் தேடி வந்து சேர்ந்தோம்.  திருவாளர்  விஸ்வநாதன் எங்களை வரவேற்றார். 

எங்கள் ட்ரைவர் தங்க ஒரு இடம் ஏற்பாடு செய்து கொடுத்தார்.  ஷோபனாவின் ஆறாவது மாடி  அடுக்கு மனை  இல்லம்  இன்று காலை  தான் புதிதாக கட்டப்பட்டு நாங்கள் தான் முதலில் கிரஹப்ரவேசத்துக்கு வந்தது போல் புத்தம் புதிதாக, சுத்தமாக,  துப்புரவாக காணப்பட்டது.  எங்கும் புஸ்தகம் புஸ்தகம் புஸ்தகம். ஷோபனா  நிறைய  படிக்கிறார்.  சிந்திக்கிறார்.  எழுதுகிறார். பூஜை அறை  பிரமாதம். குருவாயூர் பிரசாதம் அளித்தேன். சமூக கூட சேவை ஒன்றில் பங்கேற்று  மத்தியானம் எங்களோடு உணவு அருந்த வீட்டுக்கு  வந்துவிட்டார்.  

ஷோபனா விஸ்வநாதன் தம்பதியர் இருவருமே அன்புள்ளம் கொண்டவர்கள். நண்பர்களை நேசிப்பதில் போஷிப்பதில் அவர்களுக்கு ஈடு இணை காணமுடியாது. அவர் இனிய குணம் போலவே விஸ்வநாதனுக்கு இனிய காந்த சக்தி தோய்ந்த  மென்மையான  தேன்  குரல்  SPB , PBS  KJY   ஆகியோரை நினைவூட்டுகிறது.  மலையாளம் சரளமாக வருவதால் அதிகம் KJY யை அவர் குரலில் அடையாள காணமுடிகிறது.  இப்படி ஒரு குரல்  அமைந்துள்ளது குருவாயூரப்பனின்  வரப் பிரசாதம்.  மனிதர் என்னமாக பாடுகிறார்!. மலையாளம், தமிழ் என்று பல பாடல்கள் பின்னணி இசையோடு அவர் பாடுவதை எல்லாம் ஆடியோ, வீடியோ பதிவு  செய்து வைத்ததை நேரம் போவது தெரியாமல் கேட்டு அனுபவித்தேன். 

பெரும்பாவூரில் என் யாத்திரைக்கு இடையே ரெண்டு மணி நேர  கர்நாடக சங்கீதம் கிடைத்தது போல  கோட்டபுரத்தில் எனக்கு மெல்லிசை விருந்தும்  அமைந்தது  ஆச்சர்யம்.   எனக்கு நிறைய  பாட்டு கேட்கவும் பாடவும் பிடிக்கும். பாடுவதால் பிறருக்கு துன்பமூட்டுவேன். கேட்பதால் யாருக்கும் தொந்தரவு இல்லை அல்லவா?

முன்யோசனையோடு காலையிலேயே  எங்களுக்கும் சேர்த்து அவியல், சாம்பார் ரசம்  வடாம், ஊறுகாய் தயிர் எல்லாம்  ஷோபனா சுவையாக தயார் செய்து வைத்திருந்தார். 

திரு விஸ்வநாதன் ஒரு பெரிய தார்மீக உள்ளம் கொண்ட  குடும்பத்தை சேர்ந்தவர். அவர் பிறந்த ஊர் அருகேயே  உள்ளது. அங்கே அவர்  சகோதரர் ஒரு  உயர் நிலை பள்ளிக்கூடம் கட்டி நிர்வாகம் பண்ணிக் கொண்டிருந்த அவர்  சகோதரர் குடும்பம் அவர் மறைவுக்கு பின்  அதை அரசாங்கமே  எடுத்துக்கொண்டு  நிர்வகிக்க அளித்து விட்டவர்கள்  என்றாலும்  விஸ்வநாதன் தானே சகோதரர்களோடு படித்த அந்த பள்ளியை அடிக்கடி சென்று கவனித்து வருகிறார். தொழிலதிபராக இருந்தவர்.  இசையில் உள்ள ஆர்வம் குறையாமல் தினமும்  நண்பர்களோடு சேர்ந்து  மாலை வேளைகளில் இசை பயிற்சிகளில், நிகழ்ச்சிகளில்  ஈடுபட்டு வருகிறார். 

விஸ்வநாதனிடமுள்ள இன்னொரு  சிறப்பு, எல்லாவற்றுக்கும் மேலாக  கைதேர்ந்த காபி ஸ்பெஷலிஸ்ட். COFFEE SPECIALIST . ஆஹா  மூன்று முறை  அவர் போட்டுக் கொடுத்த  நேர்த்தியான  காப்பியைப்  பருகி மகிழ்ந்த  காப்பி குடிகாரன் நான்.   

விஸ்வநாதனிடம் நான் கண்டா  இன்னொரு அபூர்வ திறமை புகைப்படம், வீடியோ எடுப்பது.  குடும்ப நிகழ்ச்சிகள் அனைத்தையும் அற்புத குறும்படங்களாக்கி அதற்கு  செவிக்கினிய  பின்னணி இசையை மென்மையாக தானே பாடி அளித்துள்ளார். ஒரு சில குடும்ப நிகழ்ச்சிகளை படமாக பார்க்கும்போது நானும் அன்று அந்த விழாக்களில்  அவர்களோடு இருந்த எண்ணம் மனதில் தோன்றியது. 

மத்தியானம் சிறிது ஓய்வுக்கு பிறகு  சாயந்திரம்   திரிசூர் பூங்குன்னம் பகுதி கோயில்கள் தரிசனத்துக்கு விஸ்வநாதன் தம்பதியரோடு  சென்றதை அடுத்த பதிவில் துவங்குகிறேன்.

Sivan Krishnan

unread,
May 11, 2026, 6:34:42 AM (4 days ago) May 11
to amrith...@googlegroups.com

பரசுராம க்ஷேத்ர  யாத்திரை   - நங்கநல்லூர்  J K SIVAN
17.4.26  -22.4.26
 
ஒரு இனிய சங்கீத  மாலைப்பொழுது 

19 .4. 26  காலையிலிருந்து உச்சி வேளை  ஆலய தரிசனம் முடிந்து  பிற்பகல் 2 மணிக்கு மேல்  நண்பர் வீட்டில் பெரும்பாவூரில் விருந்து சாப்பாடு. பாலக்காடு சமையல் எளிதில் கிடைக்க கூடியதா? கேரளாவில் வெளியே  பல இடங்களில்  பூரண சைவ உணவகங்கள் நாம் எதிர் பார்க்கும் அளவுக்கு மனதுக்கு த்ருரிப்தியாக
  கிடைக்குமா என்பது சந்தேகம் என்பது என் அபிப்ராயம்.   ஏதோ  இதுவரை எனக்கு சென்ற இடமெல்லாம் வீட்டு சாப்பாடு கிடைத்தது என் சத் கர்மபலன். அவ்வளவு தான்.

நான் சங்கீத ப்ரியன். ரசிகன்.  பாட  ஆசை. ஆனால் பாடகன் அல்ல.  என் நண்பர்களில் பலர் பாடுபவர்களாக அமைந்துள்ளது இதனால் தான்.  ஸ்ரீ SR  சந்திரசேகரன் (ex  BSNL ) அப்படி ஒரு கலைஞர். இதமாக, பழகும் மென்மையான பேச்சாளர். பாசமிக்கவர். அடிக்கடி அவர் பாடல்களை எனக்கு  பாடி அனுப்புவார். ரசிப்பேன். நான் பாடுவது  அவரோ மற்றவர்களோ கேட்கும்படியாக இருக்குமா என்பது எனக்கே சந்தேகம் தான் என்ராலும்  அவர் இதுவரை என் பாட்டை  குறை சொன்னது கிடையாது. குறை சொல்லவே  தெரியாது அவருக்கு.

ஸ்ரீ சந்த்ரசேகரன்  பேரன் உபநயனத்துக்கு முதல் நாள் 19/4/26 மாலை அவர் வீட்டில் ஒரு அற்புதமான சங்கீத கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  சங்கீத குடும்பம் அல்லவா?  சந்திரசேகரின் மருமகன் ஸ்ரீ   C.Y. சுப்ரமணியன்  ஒரு சார்ட்டர்ட் அக்கௌன்டன்ட் என்றாலும் ஞானஸ்தர். சங்கீத வித்வான். கஞ்சிரா வாசிப் பவர் (குரு; ஸ்ரீ. Y.N .சாந்தாராம்) அவர் இளைய சகோதரன் ஸ்ரீ  C .Y.கங்காதரன் சிறந்த சங்கீத வித்வான். இயற்கையிலேயே நல்ல குரல்வளத்தை  இறைவன் பரிசாக பெற்றவர்.

என்றுமில்லாத அதிசயமாக  அந்த இல்லத்தில் அன்று மாலை இசை  மழை  பொழியப்போகிறது என்று அறிந்து தானோ என்னவோ  கச்சேரி ஆரம்பிக்கும் முன்பே  அழையா  விருந்தாளியாக  ஸ்ரீமான்  வருணன் வந்து ஒரு  தனி ஆவர்த்தனம் சில  நிமிஷங்கள் நடத்தினார். அதனால்  வெளியே அமைத்திருந்த  மேடையை வீட்டுக்குள்ளேயே அமைத்து வருணனை வரவேற்று மாலை கச்சேரி வர்ணத்தோடு  ஆரம்பமானது. 

சங்கீத வித்வான் ஸ்ரீ C Y கங்காதரன்,
பல வித்வான்களிடம் சங்கீதம் பயின்றவர்.  ( குருமார்கள்;  வித்வான்  ஸ்ரீ சைலேஷ் ராமமூர்த்தி, ஸ்ரீ நெடும்குண்ணம் வாசுதேவன் ஸ்ரீ K.V. க்ரிஷ்ணப்ரசாத் , மற்றும் மாவேலிக்காரா  ஸ்ரீ P. சுப்ரமணியம்.)  

மிருதங்கம்   எட்டுமானூர்  ஸ்ரீ பாலாஜி சுப்ரமணியன்.
 இளைஞர். கலை ஆர்வம் மிக்கவர். ஆறுவயது சிறுவனாக இருந்தபோதிலிருந்து  மிருதங்கத்தின் மேல் ஆர்வம். பயிற்சி.  ( குரு;  ஸ்ரீ M S . திலீப்குமார், ஸ்ரீ  ஸ்ரீகாந்த் கே. புலிக்கன், ஸ்ரீ N C. பரத்வாஜ்)

வயலின்;   மங்கணம்  (கோட்டயம்),  ஸ்ரீ ஆகாஷ் கிருஷ்ணன். இளைஞர். வளரும் கலைஞர்.  இவரும் ஆறுவயது முதல் வாசிப்பவர். (குரு;  கலாக்ஷேத்ரம் ஸ்ரீ மாத்யூ, மற்றும்  ஸ்ரீ  கும்மணம் உபேந்திரநாத்,  கலைமாமணி  பத்மஸ்ரீ  குமாரி  A  கன்யாகுமாரி)

கச்சேரிக்கு  மைக் சவுண்டு ஒலிபெருக்கி, சிஸ்டம் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தது. ஒரு நல்ல chamber  music அந்த சாயந்திர வேளையில்  அனுபவித்ததில்  பிரயாண களைப்பு முற்றிலும் அகன்று விட்டது. கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரத்துக்கு மேல் அமைதியாக கந்தர்வ கானம். சிறந்த பக்க  வாத்தியத்தோடு இணைந்திருந்தது. 

கச்சேரிக்கு  எடுத்துக் கொண்ட உருப்படிகள் அற்புதமானவை; ஜனரஞ்சகமான கிருதிகள்.;
முதலில்  சாவேரி வர்ணம். 

"சரசுதாநின்னே''   சாவேரி (15வது மேள  ஜன்ய ராகம்)  கொத்தவாசல் வெங்கட்ராமய்யர் க்ரிதி.  ஆரோஹண அவரோஹண ஸ்வர ப்ரஸ்தாரம், கல்பனா ஸ்வரம்,   ராக ஆலாபனம், எல்லாமே  பஹு  சுகம். சங்கீத தேவதைகளின் நர்த்தனம் குரலில்  காட்டப்பட்டது. 

அடுத்தது    'கஜவதன மாம்பாஹி, ' ஹம்சத்வனி ராகத்தில்  மாமேதை  ஸ்ரீ M .D  ராமநாதன் சாஹித்யம்.

அடுத்து  'ஸ்ரீ பார்கவி , சங்கீத த்ரிமூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர் க்ரிதி. மங்கள கைசிகி ராகத்தில்  காலப்ரமாணத்தோடு நிரவல் அற்புதமாக இருந்தது.  வயலின் வித்துவான் இசையோடு இழைந்து கைதட்டல் பெற்றார்.

நாலாவதாக '' ப்ரோசெவரெவரெ ''  என்ற  ஸ்ரீ தியாகராஜ சுவாமி க்ரிதி. ஸ்ரீரஞ்சனி ராகத்தை  பிழிந்து ரசமாக கொடுத்து அற்புதமான  ஆலாபனம். கங்காதரன் முன் ஜென்மத்தில்  தேனாபிஷேகம் எல்லா சிவாலயத்திலும் செய்தவர் என்று  புரிந்தது. ஸ்வரப்ரஸ்தாரம் அருமையாக பிசிறில்லாமல் காற்றில் கலந்து செவியில் கரைந்தது.   கமகம்   கலக்கியது.  இதற்கு தயிர் சாதத்துக்கு  வடு மாங்காய்  போல  சொகு சுகா  மிருதங்க தாளம்..சபாஷ் பாலாஜி சுப்ரமண்யா.

ஐந்தாவதாக  சாமா சாஸ்த்ரிகள் வந்து விட்டார். அவரது பிரசித்தமான  ''ராவே  ஹிமகிரி(ஸ்வர ஜாதி) தோடி எனக்கு பிடித்த ராகம். எந்த அவசரமுமின்றி,  குழந்தைகள் பெரியவர்கள் குறுக்கும் நெடுக்கும் அலைந்தாலும் கவனம்  கலையாதபடி கண்ணை மூடியவாறு  தோடியின் வியூகத்தில் வெற்றிகரமாக நுழைந்து  கரக்கம்பம், சிரக்கம்பத்தோடு  கங்காதரன் வெளிப்பட்டது மறக்க முடியாத ஒரு ரசார்ணவ அனுபவம்.

கச்சேரி  சூடு பிடிக்கும் நேரம் தியாகராஜ ஸ்வாமிகளின்  ''சோபில்லு  சப்தஸ்வர''.... க்ரிதி. எல்லோருக்கும் பிடித்த ஜகன்மோகினி ராகம். ரூபக தாளத்தில்  சவுக்க காலத்தில் ஆனந்தமாக கேட்டேன். அர்ஜுனனின் ப்ரம்மாஸ்திரமாக அனைவரையும் கட்டிப்  போட்டது. 

ஸ்வாமிகளை தொடர்ந்து தீக்ஷிதர் மீண்டும் ' .சபையை  அலங்கரித்தார். 
 ''பாரதி மதிசன'   ஸமஸ்க்ரித  சாஹித்யம்.  தேவமனோஹரி ராகம்.  கொஞ்சம்  விஸ்தாரமாகவே  கங்காதரன் இதில் சஞ்சாரம் செய்து  செவிக்கின்பம்  சேர்த்தார். குழந்தைகளும்  தலையாட்டி ரசிக்கும் ராகம்  தேவமனோஹரி. நிறைய  சினிமா பாடல்கள் அதனால் தான் இந்த ராகத்தில் பிரபலம்.

அப்புறம் கொஞ்சம்  வித்யாசமாக ஒரு  போனஸாக, கரஹரப்ரியா தொடர்ந்தது. இது டாக்டர்  கைப்பிள்ளி  கேசவன் நம்பூதிரியின்  சொந்த சாஹித்யம் , ''அப்பன் அவதரித்த  கதாம்ருதம்''  இந்த  பாடலை நம்பூதிரி தனது சிஷ்யர்களுடன்  சேர்ந்து பாடுவதை முன்பே  யு ட்யூபில் நான் கேட்டு ரசித்ததால்  மீண்டும் கங்காதரன் குரலில் கேட்கும்போது  ஆனந்த பரவசமாக இருந்தது.   ம்ரிதங்கம் இந்த  ஸ்லோகத்துக்கு '
'பக்கா'  வாத்திய மாக அமைந்து. தேங்க்ஸ் பாலாஜி.

தொடர்ந்து   'எவருமதுகுதுரா' - தியாகராஜ ஸ்வாமிகளின்  கல்யாணி  ராக க்ரிதி .  ''ஆஹா ஸ்ரீமன்  கங்காத
ரா,  உங்கள் இசையால்  எனக்கு  முற்காலத்து  கல்யாணி  ராக சக்ரவத்தி  ஸ்ரீ G N  B யையே என் கண் முன் கொண்டு வந்து நிறுத்திவிட்டீர்களே! அற்புதமான  ஆலாபனை.   ஸ்வர சுத்த   ப்ரஸ்தாரம். ஒரு குட்டி  ராக  '' சர்க்கஸ் 'but  quite  successful. congrats .

''கேலதி மம ஹ்ரிதயே  ராமா.'' அவதூதர் ப்ரம்ம ஞானி  சதாசிவ ப்ரம்மேந்த்ரரின்  இந்த கீர்த்தனையை பலர் பல ராகங்களில் பாடினாலும்  அடாணாவில் பாடுவது தான் சம்ப்ரதாயம்.  ராமாயணத்தில் ராமனின் லீலைகளை  விவரிக்கும் அற்புத க்ரிதி,  சீதா கல்யாணம், சமுத்திர பந்தனம்,  ராவண ஸம்ஹாரம் எல்லாம்  பக்தி பூர்வமாக கேட்கும்போது  தெய்வீக உணர்வை  
தந்தது.

திடீரென்று ஆச்சர்யமான மனிதர் ஒருவர் இந்த கச்சேரியில் பிரசன்னமாகி விட்டார். நான் அவரை  எதிர்
பார்க்கவே இல்லை. ஒருவேளை சந்திரசேகரன் அவரையும் அழைத்திருப்பாரோ?  ஆம்.  கான  கலாதர ஸ்ரீ மதுரை மணி அய்யர் அல்லவா  அவர்.  அவருடைய  படத்தை அற்புதமாக வரைந்து வீட்டில் வைத்திருந்த திலிருந்தே தெரிந்து விட்டது.  அவரும் ''சொந்தக்காரர்'' என்று.   அதனால் தான் ''ஸரஸ ஸாமதானா '' காபி  நாராயணி ராகத்தில்  கங்காதரன் குரலில் கலந்து மணி ஐயர்  மீண்டும் ஒலித்தார். அடாடா  ஸ்வரப்ரஸ்தாரம் அபூர்வம்.  துரித கதியில் சங்கதிகள். விருந்து. அப்பா!! எத்தனை நாள் ஆச்சு இந்த குரல் கேட்டு...

நேரம் போனதே தெரியவில்லை. கச்சேரி முடியும் நேரம் வந்துவிட்டது. வெளியே  மேசைகள் நகரும் சப்தம். எல்லோருக்கும்  இரவு உணவுக்கு இலைகள், டம்பளர் வைத்து ஓசை எழுப்ப  உள்ளே இங்கே கச்சேரியில்  என் உள்ளங்கவர்ந்த பழைய காலஞ்  சென்ற வித்வானின்  ஸ்பெஷல்  '' எந்நேரமும் உந்தன் சந்நிதியில்''..... பாடலை  ஆரம்பித்தார் கங்காதரன். ஆஹா, அமெரிக்கராக  இருந்தாலும் ஜான் ஹிக்கின்ஸ் இந்த பாடலைப்   பாடும் போது  அதில் எத்தனை  ராக சஞ்சாரம், மனோதர்ம  சங்கதிகள்,  பிடிகள், ஒரு தனி குழைவு, தேவகாந்தாரி யின் பிரத்யேக 
காந்த சக்தி நம் இதயத்தை அப்படியே விழுங்கி கவர்ந்துவிடும். கோபாலக்ருஷ்ண பாரதிகள் தந்த  நந்தனார் கீத்தனை பாடல்களில்  ஒரு முத்து இது .

துக்கடாவாக கச்சேரியின் இறுதியில் ஒரு ''லோக்கல்''   க்ரிதி.   லோக்கலா?ஆம்.  கேரளாவில் பெரும்பா வூரில் கங்காதரன் என்ற கேரள  பாகவதர்  கச்சேரி பண்ணும்போது அந்த ஊர்  ராஜா ஸ்வாதி திருநாளின்  கீர்த்தனை ஒன்றையாவது பாடவேண்டாமா? 

''போகீந்த்ர சாயினம் ''...என்ற குந்தலவராளி ராக  குட்டி பாடல்  கனகச்சிதமாக அமைந்து பாலாஜியின்  ஒரு குட்டி தனி ஆவர்த்தனமும்  பூர்த்தியாகிவிட்டது. 

மங்களம் பாட  வழக்கமான  மத்யமாவதியை விட்டு விட்டு  அற்புதமாக சௌராஷ்ட்ரம் ராகத்தைத் தேர்ந்தெடுத்தது சிறந்த உத்தி. 

நன்றாக களை  கட்டிய கச்சேரி இனிது நிறைவேறி எல்லோரும் வெளியே சாப்பிட சென்றோம்.
செவிக்குணவு க்கு பிறகு வயிற்றுக்குணவு காத்திருந்தது. இது போன்ற ஒரு  நல்ல  சம்பிரதாய கர்நாடக சங்கீத  இசை கச்சேரியை  மீண்டும் என்று கேட்பேனோ?!



Sivan Krishnan

unread,
May 11, 2026, 6:34:42 AM (4 days ago) May 11
to amrith...@googlegroups.com
பரசுராம க்ஷேத்ர  யாத்ரா -   நங்கநல்லூர்  J K SIVAN
17.4.26 -22.4.26

கடுத்துருத்தி  மஹாதேவர்  ஆலயம்.  

19/4/26  அன்று பிரயாணத்தில் நான்காவது சிவ க்ஷேத்ரமாக  கடுத்துருத்தி மஹாதேவர் ஆலயம் சென்றேன்.  கோட்டயம்  ஜில்லாவில்  ஒரு சிறு கிராமம்  கடுத்துருத்தி. இதற்கு  தாளியில் சிவாலாயம்   என்றும் பெயர்.  ஒரு சிறு குன்றின் மேல் அமைந்திருக்கிறது. வைக்கம் க்ஷேத்ரத்துக்கும்  ஏட்டுமானூர்  க்ஷேத்ரத்துக்கும் இடையே உள்ளது.  வேம்பநாடு  ஏரியின்  கிழக்கு கரையில் உள்ளது.  வைக்கத்திலிருந்து 20 கி.மீ. தூரம். கார்  வேகமாக ஓடியது. தெருவில் நம்மூர்   போல மாடு, நாய்,  இரு  சக்ர வாகனங்கள்,  குறுக்கே நடப்பவர்கள், டீ கடை மீட்டிங்குகள்,  எதுவும் காணோம்.  தரையில் எங்குமே  ஒரு குப்பை கூட  இல்லை.  ஆங்காங்கே  பினராயி விஜயன்  தான் பல விதமான  கோணங்களில், ஆனால் அதே  கள்ளச்சிரிப்புடன்,  என்னை விடாமல்  மூக்கு கண்ணாடி வழியாக  பார்த்துக் கொண்டே தொடர்ந்தார். நம்மூர்  தலைவர்கள்  கைகூப்பி பாக்கெட்டில் யார் படத்துடனோ,  பல்லைக்காட்டி வணங்கும் படங்களைப்   பார்க்கவில்லையே  என்ற குறையை தீர்த்தார்.    அவர் ஊரில் அவரை நான் பார்க்காமல் இருக்க முடியுமா?. முடிந்த போதெல்லாம் இயற்கை காட்சிகளை ரசித்துக் கொண்டே மனதை மஹாதேவன் பால் வைத்து காரில்  பறந்தேன்.   

இந்த கடுத்துருத்தி ஆலயத்துக்கும் கூட  ராமாயண கால கரன் என்ற ராக்ஷஸனுக்கு சம்மந்தம் இருக்கிறது. கரன்  சிதம்பரத்தில்  நடராஜனை வழிபட்டு தவம் புரிந்தவன்.  சிவன் அருளிய மூன்று சிவலிங்கங்களை , இரு கரங்களிலும் ஒவ்வொன்றையும் மூன்றாவதை  வாயில் வைத்து பல்லால் கடித்துக் கொண்டே நடந்தான் என்பதால்  ஒன்றை வைக்கத்தில், மற்றொன்றை ஏட்டுமாநூறிலும்   மூன்றாவது லிங்கத்தை பல்லால் இறுகக்  கடித்துக் கொண்டு வந்து இந்த க்ஷேத்ரத்தில் வைத்ததால் '' கடித்துஇருத்திக்கொண்டு அவன் கொண்டு சேர்த்த சிவலிங்கம் இந்த க்ஷேத்ரத்தில் ஆலய  மூலவர்.  ஒரு ஆச்சர்யமான விஷயம்.  இந்த  ஆலயத்தில் நந்தி இல்லை.

மூன்று சிவாலயங்கள் ஒன்றோடொன்று  ராக்ஷஸன் கரனால்  தொடர்பு கொண்டு சிறப்புற்ற சிவலிங்கங் களை கொண்டவை என்பதால் ஒரே நாளில் மூன்று ஆலயங்களையும் தரிசித்து மகாதேவனை வணங்க வேண்டியது ஐதீகம். எனக்கு அந்த பாக்யம் கிட்டியது.  19.4.26 அன்று அதிகாலையிலிருந்து  ஐந்து சிவாலயங்களை தரிசித்த புண்ணியவான் நான். 

இந்த ஆலயத்தில்  சுவற்றில்  புராண  சம்பவங்கள்  வண்ணங்களில் சித்திரமாக காண்பது மகிழ்ச்சி தந்தது. 
ஒரு சுவற்றில் கார்த்தவீர்யார்ஜூனியம் புராண கதை படங்கள் பார்த்தேன். ஒருநாள் அந்த கதையை எழுதுகிறேன்.  

முன்னூறு வருஷங்களுக்கு முன்பு இந்த ஆலயத்தில்  தீ விபத்து நேர்ந்ததாம்.  திகைத்துப் போன  அர்ச்சகர் மகாதேவனை இருக்கமாக  கட்டிக்கொண்டு  தான்  தீயில் மாண்டு சிவனை தீப்புண்ணிலிருந்து காப்பாற்றினார் என்பதால் அவருக்கு சிலை எழுப்பி  வடக்கு மூலையில் விக்ரஹமாக நிற்கிறார். 

வடக்கும்கூர்  என்கிற  ராஜ  வம்சா வழியினர்  இந்த  ஆலய போஷகர்கள்.  வைக்கம், கடுத்துருத்தி, ஏட்டு மானூர்  மூன்று சிவாலயங்களுக்கும் தினமும் சென்று வழிபடுபவர்கள்.  ஒரு  காலத்தில்  இந்த வம்ச ராஜாவுக்கு வயோதிகம்  காரணமாக மற்ற இரு கோவில்களுக்கும் செல்ல முடியவில்லை என்பதால் கடுத்தார்த்தியிலேயே  ஏற்றுமானூர், வைக்கம் மஹாதேவர்கள் விகிரஹம் பிரதிஷ்டை பண்ணி வழிபட்டார்.
அதனால் மற்ற இரு க்ஷேத்ரங்கள் செல்ல முடியாதவர்கள் இங்கேயே மூன்று மஹாதேவர்களையும் தரிசித்து தொழலாம். 

வடக்கும்கூர்  மஹாராஜாக்கள் 28 நாள் விழா நடத்தி வந்தது நின்றுவிட்டது. மஹாராணி சேது லட்சுமி பாய் காலத்தில் மீண்டும் அது தொடர்ந்தது.  வடக்கும்கூர்  வம்சாவழியினர் திருவாங்கூர்  ராஜ வம்சத்தோடு இணைந்தது. வழிபாடு கிட்டத்தட்ட  நூறு ஆண்டுகள்  சரிவர நடத்த முடியவில்லை. மங்களத்தூர்  பணிக்கர் குடும்பம், தாழத்து கைமால்,  குடும்பங்கள் பொறுப்பேற்று  அர்ச்சகர்கள் பூஜைகளை  நடத்தி வந்தார்கள். இன்றும் இந்த ஆலயம் திருவாங்கூர்  தேவாசுவம் பராமரிப்பில்  சிறப்பாக  உள்ளது. 

பெரிய  ஆலய வளாகம். 3 அங்குல  உயர  கிழக்கு பார்த்த சிவலிங்கம்.  ஏட்டுமானோர்  மஹாதேவன் விகிரஹம் தெற்கு வாசல் பக்கமும், வைக்கத்தப்பன் வடக்கு வாசல் பக்கமும்  அருள் பாலிக்கிறார்கள்.  இந்த ஆலயமும் வழக்கப்படி  விடிகாலை  4 மணிக்கு திறந்திருக்கும். நிர்மால்ய தரிசனம்  4-4.30 விடிகாலை காணலாம். எல்லா கோவில்களும்  11.30 மணிக்கு காலையில் நடை சாற்றப்பட்டு  மீண்டும் மாலை 5மணிக்கு திறப் பார்கள். ம். . தீபாராதனை 6.30 மணிக்கு.  கோவிலில் எழுதியுள்ளதை யெல்லாம்  மலையாளத்தில் இருப்பதால் ஒன்றுமே படிக்கமுடியாத நிரக்ஷர குக்ஷியாக  பேந்த பேந்த பார்த்துக்கொண்டே  எல்லா கோவில்களுக்கும் சென்றேன்.

Sivan Krishnan

unread,
May 11, 2026, 6:34:46 AM (4 days ago) May 11
to amrith...@googlegroups.com
கண்ணன் குழலமுதம் --  நங்கநல்லூர்  J K SIVAN 

நீண்ட  இடைவெளிக்குப் பிறகு இன்று  புல்லாங்குழல் மேதை  T R  மஹாலிங்கம் கச்சேரி ஒன்றை கேட்டேன். என்ன சங்கீத ஞானம். என்ன லாகவும். மனதில் உள்ளதை அந்த மூங்கில் குழாய் ஒலியாக  காற்றில் ஒலிபெருக்கி மூலம் பல்லாயிரம் ரசிகர்கள் கேட்டு மகிழ வைத்த நிகழ்ச்சி.  நேரில் கேட்டிருக்கிறேன். TRM  புல்லாங்குழலே  நம்மை இப்படி கட்டிப்போடும்போது பிருந்தாவனத்தில்  கிருஷ்ணனின் வேணுகானம் ப்ரம்மாஸ்திரமாக அனைவரையும் அசைவின்றி வைத்ததில் என்ன ஆச்சர்யம். கண்மூடி  பின்னோக்கி  உங்களையும் தூக்கிக் கொண்டு பிருந்தாவனம் பறந்து செல்கிறேன்.
நாம்  இப்போது  பிருந்தாவனத்தில்  இருக்கிறோம்.

கோடை வெயிலில் எங்காவது குளிர்ச்சியாக  இருக்கும் இடம் தேடும்போது  உடலுக்கு மட்டும்  குளிர்ச்சி போதாதே.  உள்ளத்துக்கும்  குளிர்ச்சி தரும்  இடம்  எது என்று  சில  இடங்களைத்  தேடும்போது ஆயர்பாடி ''இதோ  நான் இருக்கிறேனே  உனக்குத் தெரியவில்லையா?''  என்று  கேட்டது. எனவே நான் உங்களையும் அங்கே அழைத்துச் செல்கிறேன்.  நம்முடைய அதிர்ஷ்டம்  நாம்  இப்போது கிருஷ்ணன்  இருந்த காலத்திலேயே  ஆயர்பாடியில்  இருக்கிறோமே!!  
 
நாம் காண்பது  அன்றாடம் இங்கே   நடப்பது.    ஆயர்பாடி  சிறுவர்கள்  சேர்ந்தே  போவர் வருவர் எங்குமே. எப்போதும் உற்சாகமாக இருக்கும்  அவர்களைப்  பார்த்துஆயர்பாடி  மக்கள்  அனைவரும்  பெருமிதம்  அடைவார்கள்.   இத்தனை  மகிழ்ச்சி  ஆரவாரம்  எல்லாம்.அவர்களுக்கு  எங்கிருந்து  வருகிறது  என்பதன் ரகசியம்  அனைவரும்  அறிந்ததே.  கிருஷ்ணன்  என்கிற  சிறுவன்  தான்  அவர்களை  இவ்வாறெல்லாம்   ஆட்டி  படைக்கிறவன்.  அந்த  சிறுவனே  அவர்களுக் கு  தலைவன்.  பசுக்களும்  கன்றுகளும்  கூட   மறக்காமல்  அன்றாடம் ஒருமுறை  கூட்டத்தில்  மற்ற சிறுவர்களிடையே  கண்ணன்  இருக்கிறானா  என்று  முதலில் பார்த்துக் கொண்டு  தான்  சந்தோஷமாக இரை தேட  செல்லும்.   கன்றுகள்  தாவித்   தாவி   குதித்து  ஓட  தாய்ப்  பசுக்கள்  பெருமிதமாக மிதந்து செல்லும். கண்ணன்  ஏதாவதொரு பசுவின் அருகில் தான்  நிற்பான்   கூடவே அதன்  கழுத்தைக்  கட்டிக்கொண்டு  நடப்பான் அவன்  இடையில்  இருக்கும்  சிறு  மூங்கில் குழல்  பகல் பூரா சில சமயம் அந்த  காட்டு பிரதேசத்தில்  அவனது வேணு கானத்தைப் பரப்பும்.  சில  சமயங்களில்  சிறுவர்கள் யமுனை நதியில்  குதித்து  நீச்சல் அடிப்பார்கள். விளையாடுவார்கள் .  
சில சமயங்கள் கூடிப் பேசி பாடி ஆடுவார்கள்.  கண்ணன் வேணுகான நேரங்களில்  பசுக்கள்   எல்லாம் வயிறு   நிரம்ப உண்டு ஒன்றாக  கூடி  அவனருகே   மர  நிழல்களில்   கூட்டமாக அமர்ந்து   அசை போட்டுக்கொண்டு  கண்மூடி தலை 
யாட்டி கண்ணனின்  குழலிசையை  கேட்கும்.
ஒரு  கன்று  குட்டி  தாயைக்  கேட்டது
 "அம்மா  உனக்கு  என்னை பிடிக்குமா  கண்ணனின்  குழல் இசை பிடிக்குமா?
" ஏன்  இரண்டுமே பிடிக்கும்.!  
" ரெண்டுலே  எது  ரொம்ப  பிடிக்கும்?
"உன்னைப்   பார்த்துக்கொண்டே இருக்க  ரொம்ப  பிடிக்கும். கண்ணன்  குழலிசையைக் கேட்டுக்கொண்டே  இருக்க ரொம்ப பிடிக்கும் "   என்று  பசு  சொன்னது.

ஒரு  கன்றுக்குட்டி  மற்றொரு  ஆயர்பாடி  சிறுவன்   ஊதிய குழலை  கேட்டது. 
 "ஏன்  உன்னிடம்  கண்ணன்  ஊதும்  குழலின்  ஓசை  வரவில்லை? 
அந்த  குழல்  சொன்னது:  
"நானும்  கண்ணன்  கையில்  இருக்கும்  மூங்கில்  குழலும்  ஒரே  மரத்தில்  இருந்து வந்தவர்கள் தான். என்னை இந்த  சிறுவன்  கண்ணன் ஊதுகிறதைப்போல   உபயோகிக்கவில்லையே. அதற்கு  நான்  என்ன செய்ய முடியும்?''

இதைக்  கேட்ட  அந்த  சிறுவன்  தனது   குழலை  கண்ணனிடம்  கொடுத்து  '' கிருஷ்ணா,  என்னுடைய   புல்லாங்குழலில் நீ   வாசி நான்  உனதில்  வாசிக்கிறேன்'' என்றான்    அவன்    கண்ணனுடைய புல்லாங்குழலை  வாங்கி  ஊதினான்.  ஓசையில்   எந்த  மாற்றமும்  இல்லை.  .அப்போது  கண்ணனின்  குழல் சொல்லியது:  
 
" ஏ, சிறுவா, நான்  மாற்றமில்லாத  மூங்கில்  மரத்துண்டு  தான். நீ ஊதினால்  நான்  அதுவாகவே  இருக்கிறேன். கண்ணன்  என் மீது அவன்  காற்றைச்   செலுத்தும்போது  எனக்கு  ஜீவன்  கிடைத்து  அவன்  அருளால்  அவனின்  ஒரு  பகுதியாகவே  மாறிவிடுகிறேன்.ஆகவே  தான்  கண்ணன்  ஊதும்  போது நான்  அவன்  ஜீவ நாதமாகி  காற்றில்  கலக்கிறேன்".

ஆயர்பாடி  பூலோக  சுவர்க்க பூமியாக  திகழ்ந்ததில்  என்ன  ஆச்சரியம்?
நாமும்  சென்னை  வெயிலுக்கே  திரும்புவோம். நமக்கு வேறு வழி என்ன இருக்கிறது?மனதால் அவனை நினைப்போம் அது முடியுமே. அது குளிர்ச்சி மனதுக்குத்தந்தால் உடலும் கோடையில்  குளிர்ச்சி பெறாதா?

Sivan Krishnan

unread,
May 11, 2026, 6:34:46 AM (4 days ago) May 11
to amrith...@googlegroups.com
VEDHIC  RISHIS -  NANGANALLUR  J.K. SIVAN

2. MAHARISHI ANGIRAS. 

When we  bow and inroduce ourselves before elders for their blessings, we utter pravaram, our  genealogy, bywayof  Abivhadhanam.  In this manthra, the first name we utter is Angiras.  This sage is known as one, who worshipped  homa, yaga Agni, as a manifestation of the Paramathma.   He is a very famous and most respected  rishi mentioned in many vedhic  traditional  slokas. He is of course one of the  seven great sages, SAPTHA RISHIS, mentioned in vedha manthras and puranas.

He is referred  to in the Rigvedha as  Prajapati, creator, and the mind-born son of lord Brahma.  At the same time there is a school of thought that Angiras  apeared from the ritual fire of Varuna.  Whatever it is, Sage  Angiras has been the most respected teacher of divine knowledge of  fire  rituals and cosmic wisdom. 
He is the father of Sage Brahaspathi, the acharya of Devas, and  descendants viz.,  Utathya  and Samvartana.

The descendants of Rishi Angiras are known as Aigirasa have composed many of the hymns chanted in the Rigvedha.
These manthras are related to agni worship.  In Vedhic age, Agni was worshipped for  long life, protection and prosperity.

The Sage Angiras and his descendants Angirasa rishis concentrated in discovering the hidden, unseen, divine light. The Angirasa sages are credited with discovering hidden divine light, such as sun and and restoring cosmic order with its high power.

Angiras is deeply connected to  Agni, as the knower of all fire  rituals and propagator of the enormous benefits derived  as a result.  In fact Rishi Angiras is recognised as the first to perform Yagna and Agni homam properly and the first to bring fire to humanity which is symbolic of knowledge of Divine power, because  fire, agni,  represents unquestioned knowledge , transformation divine communication with heavenly bodies and beings. Vedhas as we know have immense philosophical significance, and so Rishi Angiras repreents  spiritual illumination, mediation, tapas, (austerity and penance),  besides divine knowledge of Fire power and its transmission.  He acted as the bridge between human and divine worlds through his agni rituals yagnas and homas signifying his wisdom of divine manthras.

Atharva Veda is called  Atharvangirasa, which means,  the teachings of Atharvan are  combined with that of  Angiras,  meant for  protection of the body  and the mystical knowledge.  

During the Vedhic period, Angiras was one of the popular rishis who was teacher and guru directing the kings, like Vasishta and Viswamithra and  imparted the knowledge of  Brahmavidhya.

Puranas say that Angiras is counted among the Saptha rishis in certain Manvantharas. What we call in English as Ursa Major constellation is known as Saptha Rishi mandala in sanskrit. Each of the seven, saptha rishi is symbolic of some cosmic principle guiding humanity as stated in Puranas.
The teachings of Rishi  Angiras as already stated above, relate to importance of yagna, rituals and sacrifices by igniting fire, agni, leading to brahma gnana,  the inner awakening and  the ultimate knowledge and following a strict life of faith, shradhdha.

 Angiras had many wives named   Shraddha, Svadha, Sati, and others—whose names symbolize virtues of ritual and devotion, such as,  life practice of vedhic age, Vasuddhaa (personified absolute purity), Shraddhaa (personified faith and conviction), Svadhaa (personified self realisation and self restraint) and Sati (personified chastity and immaculacy).

Rishi Angiras and  his descendants, the Angirases, formed a priestly lineage associated with ritual law and ancestral rites.

Mundaka Upanishad tells us that  Rishi Angiras instructed the householder Shaunaka on two forms of knowledge: the lower, dealing with ritual and worldly learning, and the higher, which leads to realization of the imperishable Self. This teaching situates him as a transmitter of Brahmavidya—the knowledge of ultimate reality.

The lineage and ideas of Angiras, influenced later Hindu ritual, astronomy, and law, with works like the Angirasa Smriti attributed to him. He remains a central figure linking divine revelation and human devotion in the Vedic tradition.

Brishaspati,the moral preceptor of the Gods, was one of the sons of sage Angiras. 
The Pitrus, (the Spirits of dead ancestors) are also believed to be his sons. His daughters are named in the Puranas and ancient scriptures as 
Raka, Sinivaalli, Kuhu which are actually phases of the moon rather than any physical womenfolk. 

 Angira is credited with authoring the book of Law, called Angiras Smriti, and a book on Astronomy. The Angiras Smriti is a short book having 151 verses and deals mainly with repentance of sins. 

Sage Angira was the younger brother of sage Atharva who was the eldest son of Brahma. Brahma had taught the great metaphysical knowledge called Brahm Vidya, the knowledge that enlightens the creature about the supreme Brahm who is the ultimate Absolute Truth, the Reality and pure conscious cosmic Soul of creation, first to Atharva, and then Atharva had taught it to his brother Angira—refer Mundak Upanishad of Atharva Veda, Mundak (Canto) 1, section 1, verse no. 2. These two brothers are credited with starting the practice of worship of the Fire God in the form of the sacred fire of the fire sacrifice as well as other forms of the fire as worshipped by different sections of the society. 

The hymns dedicated to the Sun God, Surya,  as contained in the Surya Upanishad of the Atharva Veda, which is the seventh Upanishad of this Veda, is attributed jointly to sages Angira and Atharva. Refer verse no. 1 of Surya Upanishad.

Sivan Krishnan

unread,
May 11, 2026, 6:34:46 AM (4 days ago) May 11
to amrith...@googlegroups.com
பரசுராம க்ஷேத்ர  யாத்திரை  - நங்கநல்லூர்  J K SIVAN
17/4/2026-22/4/2026

திருவம்பாடி ஸ்ரீ கிருஷ்ணர்

21.4, 2026    திரிசூர்  கேரளாவில் ஒரு முக்கிய நகரம். போக்குவரத்து  நெரிசல்  இன்றியமையாதது.  சுறுசுறுப்பான, வளர்ந்து கொண்டே போகும் நகரம்.   இங்கே அமைதி மயமான  வடக்குநாதர்  ஆலய தரிசனம் பெற்றபின்  அங்கிருந்து சுமார்  ஒரு கி.மீ. தூரத்தில் உள்ள திருவம்பாடி  ஸ்ரீ கிருஷ்ணர் கோவிளுக்கு  விஸ்வநாதன் தம்பதியர் அழைத்து சென்றார்கள்.

மிகவும் புகழ்  பெற்ற புராதன  கேரள  ஆலயங்களில் இதுவும் ஒன்று. இங்குள்ள  உன்னிகிருஷ்ணனை பார்த்துக்கொண்டே இருக்கலாம். வெளியே செல்ல மனம் வராது.   இங்கே  பத்ரகாளி, கணபதி, சாஸ்தா தரிசனமும் பெற முடியும்.  வழக்கம்  போல் இதுவும் ஒரு ஓடு/செப்புத்தகடு விமான கூம்பு வடிவ விதானம் கொண்ட ஆலயம் தான்.  இங்கே என்ன விசேஷம் என்றால் கிருஷ்ணனுக்கும்  பத்ரகாளிக்கும் சம அளவில் வழிபாடு .பக்தர்கள் தொழுகை.

இந்த ஆலயம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஏடகளத்தூர்  என்ற ஊரில் தான் இருந்ததாம். 16ம் நூற்றாண்டு காலத்தில் நிகழ்ந்த சில சமூக கலவரங்கள் இந்த ஆலயத்தையும் விட்டு வைக்கவில்லை. . பக்தர்கள் ஜாக்கிரதையாக இங்கிருக்கும் கிருஷ்ண விக்ரஹத்தை  வேறு இடத்துக்கு பாதுகாப்பாக  எடுத்துச் சென்று விட்டார்கள்.  

கிருஷ்ணன் 'கச்சபிள்ளி  மனா'  எனப்படும்   நம்பூதிரி  பிராமண இல்லத்தில் கிருஷ்ணன் சில காலம் வாசம் செய்தார்.  அந்த இல்லத்தில் வாழ்ந்த  நம்பூதிரி  தம்பதிகளுக்கு  புத்ர பாக்யம் இல்லை.  இப்படி ஒரு அழகான கிருஷ்ணன் தங்கள் வீட்டுக்கு வந்தால் எத்தனை சந்தோஷம் அடைந்திருப்பார்கள்?
 ''கிருஷ்ணா, நீ தாண்டா எங்க வீட்டு பிள்ளை!'' 
என்று அவனை இரவும் பகலுமாக கொஞ்சி சீராட்டி பாராட்டி வழிபட்டார்கள்.  பெரிய ராஜ தந்திரி, மஹாராஜா, விஸ்வரூப கிருஷ்ணனைக் காட்டிலும் குட்டிப் பயலாக உண்ணி கிருஷ்ணனாகவே அவன் அவர்களிடம் இருந்தால் தானே அவன் மீது பாசத்தை அவர்களால் கொட்டி வளர்க்க முடியும்?  அந்த இல்லம் ஒரு கோயிலாக மாறிவிட்டது.

அந்த இல்லத்தில் இருந்தவர்கள்  பரம்பரையாக  கொடுங்களூர்  பகவதி உபாசகர்கள். அந்த வீட்டில் ஒரு முதியவரால் கொடுங்களூர்  சென்று பகவதியை தரிசிக்க முடியாமல் மனம் வாடி  ''அம்மா என்னால் முடியவில்லையே.  நான் எப்படி உன்னை வந்து தரிசிப்பேன்? என்று 
வருந்தியபோது அம்பாள் தானாகவே அவர் இல்லம் தேடி வந்து இருக்கிறாள். வந்தவள் அந்த வீட்டிலேயே  வாசம் செய்தாள். அவள் எப்படி வந்தாள்  தெரியுமா?  

கருப்பு நிறத்தில்,  தீப்பொறி பறக்கும் சிவந்த கண்கள். பயம் தோன்றும்படியான  தோற்றம். பிச்சைக்காரி போல ஒரு நாள் ராத்திரி வாசலில் வந்து  ''அம்மா'' என்று கூப்பிடுகிறாள். இருட்டோடு விடாது பெய்யும்  மழை. வெளிச்சம் இல்லை.  வீட்டுக்குள் இருந்த அந்த வயோதிக நம்பூதிரி கழி ஒன்றை ஊன்றிக்கொண்டு மெதுவாக வாசல் பக்கம் வந்து கதவை திறந்தார். இவள் நிற்கிறாள். அவர் சந்தேகமோ பயமோ கொள்ளவில்லை. யோசிக்கவே இல்லை.  ஆஹா , இந்த அகால நேரத்தில் வாசலில்  ஒரு பெண் பசியோடு நிற்கிறாளே  என்று  மட்டுமே மனதில் பட்டது. 

''வாம்மா வீட்டுக்குள்ளே''.  அன்போடு  வரவேற்றார். இது தான் அந்த  சக்தி உபாசகனின்  'அதிதி தேவோ பவ” (விருந்தினர் தெய்வம்) என்ற உபசாரம்.  
அந்த பெண் வீட்டுக்குள் வந்ததும் சுற்றி முற்றி பார்த்தாள் . எங்கும் ஏழ்மையின் சின்னம். அவள் வந்த மறு  வினாடி வீட்டில் தீபம் பிரகாசித்து ஒளி கூட்டியது. ஒரு அசாதாரணமான மௌனம், அமைதி நிலவியது. 
 மழையில்  தொப்பலாக  நனைந்து வந்தவளுக்கு உலர்ந்த வஸ்திரம், சூடான உணவு, தீர்த்தம் எல்லாம் கொடுத்து அன்போடு உபசரித்தார் நம்பூதிரி. 
''தாத்தா  நான் இங்கேயே  உங்களோடு  தங்கலாமா?''
அம்மா, இது உன் வீடு. என்னிடம் எதற்கு அனுமதி கேட்கிறாய்?''

சில நாட்கள் கழித்து தான் வந்தவள் சாதாரண பெண் அல்ல. தான் வழிபடும் கொடுங்களூர் பகவதி என்று  நம்பூதிரி புரிந்து கொண்டார். அவள் பாதத்தில் விழுந்து வணங்கினார். 
''அம்மா இந்த பாவியை, ஏழையை தேடி நீ வந்தது என் பூர்வ ஜென்ம புண்யம் '' என்றார்.
இங்கே நானாக வரவில்லை, உன் பக்தி என்னை இங்கு கட்டி இழுத்து வரச் செய்தது.  நான் இங்கு தங்கி உன்னை காப்பாற்றுவேன்”
ஆகவே தான் அந்த வீடு அப்போது முதல் ஒரு புண்ய ஸ்தலமாகி,  இப்போது திருவம்பாடி ஸ்ரீ கிருஷ்ணன் கோவில்.. 
 உண்ணி  கிருஷ்ணன் வந்த பிறகு  அம்பாள் பகவதியும் கிருஷ்ணனோடு சரிசமமாக  பூஜிக்கப்பட்டாள் .

திருவம்பாடி ஆலயம் சரித்திரம் இது. ஆகவே இது விஷ்ணு அம்பாள் சக்தி ரெண்டுமே  சேர்ந்த புண்ய ஸ்தலம். திருவம்பாடி வீட்டில் கிருஷ்ணன் வந்தபோது குழந்தையாக இல்லை. வந்த கணமே பாலக்ரிஷ்ணனாக உருவெடுத்தார் என்று கேள்விப்பட்டேன்.

இங்கே உள்ள  கிருஷ்ணன் ஒரு கையில் புல்லாங்குழல் , இன்னொரு கையை நீட்டி அதில் வெண்ணை வாங்கும்படியாக
அமைந்துள்ளது. மிகவும் தெய்வீக சக்தி வாய்ந்த கிருஷ்ணன் கோவில். உயிரோடு கிருஷ்ணன் இங்கே  உள்ளான் என்று பக்தர்கள் நம்பிக்கை.

இங்கே  இன்னொரு அதிசயமான வழிபாடும் உள்ளது. குடம் என்றால் தண்ணீர் சேமிக்கும் பாத்திரம் இல்லை. குடை என்று அதற்கு இங்கே பெயர். 

திருச்சூர் பூரம் மிகப்  பிரபலமான விழா. திரிசூரில் கோலாகலமாக கொண்டாடப்படும் விழா. திருவம்படி கிருஷ்ணன் கோவிலிலும் அருகே உள்ள பரமேக்காவு பகவதி கோவிலிலும்  கொண்டாடப்படுகிறது.
குடம் விழா யானை மேல் வைக்கப்படும் நெடும்பட்டம், குடை மூலம் தேவியின் ஆவாஹனமாக கருதப்படுகிறது. 

நிறைய யானைகள் இந்த விழாவில் பங்கு கொள்ளும். யானை தெய்வ வாகனம். திருவம்படி யானைக்கு சிவ சுந்தர் என்று பெயர்.இப்போது இல்லை என தெரிகிறது. 

குடை  அதன் மேல் தெய்வ சந்நிதி.சக்தியின் அம்சம்.  குடை மாறும் நிகழ்ச்சி குடமாட்டம் எனப்படுகிறது. இது வேடிக்கை இல்லை. பக்தி பூர்வ சடங்கு.    ஒரே நேரத்தில் பல குடங்கள் , அது தான்  வண்ண வண்ண குடைகள்  உயர்த்தி உயர்த்தி அசைக்கப்பட்டு மாற்றப்படுகிறது. கண் கொள்ளா காட்சி. அனுபவம். வேகம் ரெண்டுமே பிரமிக்க வைக்கும். ஏனென்றால் ஒவ்வொரு குடையும் தனித்துவம் வாய்ந்தது. தனி வடிவம் நிறம், அலங்காரம் கொண்டது.  திருவம்பாடி யானைகள் பரமேக்காவு யானைகள் மேல் போட்டா போட்டியாக குடைகள் மாறுவது வேறு எங்கும் காணமுடியதே .  போட்டி இல்லை. பரமேஸ்வரி வெவ்வேறு ஸ்வரூபங்களில்  குடையாக ஆவாஹனம்  ஆகி  சாந்நித்யம் அளிக்கிறாள் என்ற வெளிப்பாடு.     மூர்த்தி இல்லாமல், சின்னங்களில் சக்தி வரும்”  பகவதி அம்பாள் ராஜ மாதா அல்லவா? பழைய காலத்தில் பெரிய ராஜாக்கள் யானை மேல் பவனி வருவார்கள், அவர்கள் யானை மேல் அம்பாரி, பெரிய குடை இருக்குமே. அது ஒரு ராஜ மரியாதை. அம்பாளுக்கு அப்படியொரு பக்தி தோய்ந்த மரியாதை இந்த யானை, குடை.
கேரளாவில் மட்டும் ஏன் அநேக கோவில்கள்  பக்தி பூர்வமான சம்பவங்கள் அதிசயங்கள் நிறைய ?
வேறெதுவும் காரணம் இல்லை. நமக்கு தெரிந்த ஒரே வரி விடை;   
''குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே''

Sivan Krishnan

unread,
May 11, 2026, 6:34:46 AM (4 days ago) May 11
to amrith...@googlegroups.com

பணம் தரும் பரிசு--     நங்கநல்லூர்  J K   SIVAN

குடும்பங்கள் ஒன்றாக  பெரிதாக  கூட்டுக் குடும்பமாக  இருந்த காலம். பெரியோர்களுக்கு மதிப்பும் மரியாதையும் இருந்தது.
தாத்தா  பாட்டி  ராஜா ராணியாக அந்த சாம்ராஜ்யத்தை ஆண்டவர்கள்.  அவர்கள் சொல் எடுபட்டது.  பாரம்பர்யம் தொடர்ந்தது. ஆண்களுக்கு வயலில் கோவிலில், அரண்மனையில் பிரபுக்கள் வீட்டில் வேலை, கலைஞர்களாக இருந்தார்கள். பெண்கள் சமையல்காரிகள், சம்பளமில்லாத வேலைக்காரிகள், பள்ளி செல்லாத அடிமைகளாக வாழ்ந்த காலம். 

காலம் மாறிவிட்டது.  ஜாதி வித்யாசங்கள் அதிகமாகிவிட்டது.  ப்ராமண  குடும்பங்கள் சிதறி விட்டன.  குழந்தைகள் வளர்ந்து படிப்பதே,  வெளிநாட்டில் சென்று வேலை பார்க்க. அங்கேயே சாஸ்வதமாக தங்கிவிட...இங்கே ப்ராமண சமுதாயம் எப்படி  பலப்படும்?  தனித்தனியாக வளர்ந்து, படித்து, சிந்தித்து அதன்  பயனாக  பரஸ்பர  ஒற்றுமை என்பதே இல்லாமல் போய்விட்டது.
வெளி நாடு சென்று இப்படிப்பட்ட  ஹிந்து குடும்பங்கள் கலாச்சாரம் இழந்தது.  மதம் மாறியது. பக்தி பாரம்பரிய நம்பிக்கை கள் அழிந்தது.  பணம், அது தரும் சுகம் ஒன்றே பிரதானமாக போய்விட்டது. தாய்நாட்டில் வாழும்  குடும்பங்கள் உறவுகள் மறுக்கப்பட்டன. மறக்கப்பட்டன.   வாட்சாப், வீடியோ, யூட்யூப்  கொஞ்சத்துக்கு  கொஞ்சம் உறவுகளை இணைக்கிறது என நம்பலாம். பெரிசுகள்  வாரிசுகளை காண வெளி நாடு செல்வதானால் ஒன்று அவர்கள் உடல்நலம் ஒரு குறையுமின்றி இருக்கவேண்டும். அங்கே சகல வேலைகளையும்  நான்கு சுவர்களுக்குள்  செய்து முடித்துவிட்டு காத்திருக்கவேண்டும். சுதந்திரமாக எதுவுமே செய்ய முடியாத நிலை. 

அதே போல் கொஞ்சம் கொஞ்சம்  பக்தி உணர்வு, ஆன்மீக சிந்தனைகள், சாஸ்த்ர சம்பிரதாயமும் கூட அங்கே தலை எடுக்க காரணம், அநேக ஹிந்துக்கள் அங்கே  சென்று குடியேறிவிட்டதால். அதுவும் இனி  தாயநாட்டில் சென்று வசிப்பதோ, கோயில் குளம் செல்வதோ முடியப்போவதில்லை என்பதாலோ. 

நம்முடைய நல்லகாலம்  சுவாமி விவேகானந்தர் புயல் போல் சுற்றி  1893ல் உலக ஆன்மீக  மாநாட்டில் ஹிந்து சனாதன தர்மத்தை பறைசாற்றி மேற்கத்திய நாட்டு மக்கள்  அதில் ஆர்வம் காட்டினர். சுவாமி ராம தீர்த்தர்  1902ல்  சென்றார்.  ரெண்டு வருஷங்கள் வேதாந்தத்தை விளக்கி சென்ற இடமெல்லாம் சொன்னார்.
1920ல்  பரமஹம்ச யோகானந்தர்  மேல்நாட்டில் சுற்றுப்பியாணம் செய்து ஆன்மீகத்தை பரப்பினார்.
சுவாமி பிரபுபாதா அமேரிக்கா சென்று காட்டுத்தீயாக  ISKCON   இஸ்கான்  கிருஷ்ண பக்தி எண்ணற்ற வெளிநாட்டினரை  ஹிந்து சமயத்தை ஆர்வத்துடன் நாட செய்தது. இன்னும்  சக்தியோடு பலத்தோடு உலகெங்கும் செயல்பட்டு வருகிறது.

அச்சு இயந்திரம் பழக்கத்தில் வந்து இந்து சமய  நூல்கள்  பல்வேறு இந்திய மொழிகளிலும்  ஆங்கிலத்திலும் இன்னபிற மேலை நாட்டு மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு  ஹிந்து கலாச்சாரம் மேலை நாடுகளில் அறியப்பட்டது.  ஹிந்துக்களைப்போலவே  மற்ற மதத்தினரும்  மேலை நாட்டில் தத்தம்    நம்பிக்கைகளை, பக்தியை ஊன்றினார்கள்.   டேப்  வீடியோக்கள்  பழசை நினைவூட்ட  புதுப்பிக்க பெரிதும்  உதவியதில் விஞ்ஞானமே உனக்கு கொஞ்சம் நன்றி.

மேலைநாடுகளில் குடியேறியவர்களில் பாதிக்கு மேல் இந்தியர்கள் அதுவும் ஹிந்துக்கள் என்று சொல்லும்படியாக பெருகிவிட்டார்கள்  என்பதால் இங்கே நாம் இழக்கும்  ஆன்மிகம் அங்கே வளர்கிறது.  இங்கே கோவில்கள் சீரழியும் நேரம் அங்கே  அற்புதமான  கலைச்சிற்பங்களோடு  புனர்ஜன்மம் பெற்று  பெருவாரியாக மதிக்கப்பட்டு  ஆன்மீகத்தை  நிலைநாட்டி மனதுக்கு நிம்மதி தருகிறது.

1957ல்   கலிபோர்னியாவில் சிவ முருகன் ஆலயம்,  1972ல் நியூயார்க்கில் மஹா வல்லப கணபதி  தேவஸ்தானம்,  டெக்ஸாஸ்  மாகாணத்தில் ஆஸ்டின்  நகரத்தில்,  ராதா மாதவ சுவாமி ஆலயம்.

1981ல்  மாலிபுவில் வெங்கடரமண சுவாமி ஆலயம்.   சிகரம் வைத்தது போல்  பிட்ஸ்பர்க் நகரத்தில் வெங்கடேஸ்வரன் ஆலயம். ஸ்வாமிநாராயணன் ஆலயங்கள்,  2011ல்  வட கரோலினாவில் சோமேஸ்வரர் ஆலயம்.  அமெரிக்கர்கள்   
வேதங்கள், ஸ்லோகங்கள், ஸ்தோத்திரங்கள் சொல்வதில் என்ன ஆச்சர்யம்.
நாம் இங்கே எல்லாவற்றதையும் மறப்பதிலும் என்ன ஆச்சர்யம்?

அங்குள்ள  ஹிந்துக்கள்  கல்யாணம், உபநயனம், சீமந்தம், வளைகாப்பு, மார்கழி எல்லாம் கொண்டாடுகிறார்கள்.  இங்கே பூணலை, தாலியை  ஆணியில் மாட்டிவிட்டோ , லாக்கரில் வைத்துவிட்டோ,  என்றோ ஒருநாள் ஆபரணமாக அணிகிறார்கள். சந்தியா வந்தனம் காயத்ரி ஜபம் காகிதத்தோடு நின்றுவிட்டது.

சுற்று சூழ்நிலை தான் ஒருவன் குணத்தை மாற்றுகிறது.  இனியாவது பெற்றோர்கள் இதில் கவனம் செலுத்தாவிட்டால் நாம் அழிவதோடல்லாமல் நமக்கு முன்பே நமது கலாச்சாரம் பண்பாடு மறையும் குற்றங்கள் பெருகும்.  இதைத்தான் பழையன கழிதல் புதியன புகுதல் என்று புரிந்து கொள்கிறோமோ?.... old  order  changeth  yielding  place to new .... இது தானா?

 

Sivan Krishnan

unread,
May 11, 2026, 6:34:48 AM (4 days ago) May 11
to amrith...@googlegroups.com

என் முன்னோரில் ஒருவர்  -   நங்கநல்லூர்  J K  SIVAN 

''கனம்''  கணபதி சாஸ்திரிகள் 

ன்  அம்மா வழி  முன்னோர்கள்,  தஞ்சாவூர், புதுக்கோட்டை பகுதியில் வாழ்ந்தவர்கள்.  பலர் சங்கீத  வித்வான்களாகவும்  சிறந்த  ராம  பக்தர்களாகவும் இருந்தார்கள்.  அக்காலத்தில் பண்டிதர்களை, கலைஞர்களை ஆதரித்தவர்கள் ராஜாக்கள், பிரபுக்கள், சமஸ்தானங்கள். அவர்கள் ஆதரவில் சிறப்பு பெற ஒவ்வொருவரும் தனித்தன்மை கொண்டவர்களாக, விசேஷ திறமை பெற்றவர்களாக இருந்தாக வேண்டும். அப்போது தான் அவர்களை ஆதரிப்பவர்கள் மகிழ்வார்கள்.

என் முன்னோர்கள் இப்படி  சாதாரணமா பாடகர்களான இல்லாமல்  இப்படி  சிறப்பாக தமது  அசகாயத்தனத்தை வெளிப்படுத்தி அதனால்   மவுசு  (DEMAND ) இருந்ததால்,  '' தனித்திறமையால்  ஆதரவு பெற்று பரிசுகள் பெற  முனைந்தனர். 

 ''கனம் '' பாடுவது  இப்படி ஒரு அசாத்யமான சாதகம், கழுத்தில்  கூரான  கத்தி கட்டிக்கொண்டு  பாடுவது.  கண்டம் சிறிது சரிந்தாலும்  குரல்வளை பெருத்தாலும்  பிடிப்பாக  கட்டிக்கொண்டிருந்த கூரான  கத்தி  தொண்டையை  பிளந்து விடும்.

 இன்னொரு  சாதகம் இன்னும்  கடினமானது.    தலையில்  எலுமிச்சையை வைத்துக்கொண்டு  அசையாமல்  பாடுவது.  பாடும்போது  தலையை அசைத்தும் கைகள், உடம்பை  மாவாட்டுவது  போல்  உருட்டியும்  பாடுபவர்கள்  இன்னும்  இருக்கிறார்கள்.  எனக்கு  தெரிந்து  சிறுவயதில்  MKT   பாடல்களை  பாடுவதை  படத்தில்  கண்டிருக்கிறேன்.  ஒரு சில   கச்சேரிகளை நேரிலும்  கேட்டிருக்கிறேன்.  துளி   கூட  முகம் சுளிக்காமல்  பாடுவார்.  ஏழிசை மன்னன்  என்று பேர்  பெற்றவர்.  கந்தர்வ கானம்  என போற்றப்பட்டவர்.   4 - 4 1/2 கட்டை சுருதியில் சர்வ சுதந்திரமாக  சஞ்சாரம் செய்து  பாடுபவர்..  இன்றும்  அவர்  பாட்டுகளை  விடாமல்  கேட்டு   தனி ஆனந்தம்  கொள்பவர்கள்  என்னைப்போல  ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். 

  தலையில் எலுமிச்சை  வகை  சங்கீதம்  குழந்தைகள்  இன்றும்  விளையாடும்  லைம்  அண்ட் ஸ்பூன் ஓட்ட பந்தயம்  போன்றது.  இது  ஓடி  ஜெயிப்பது.   அவர்கள்   சாதித்தது பாடி  ஜெயிப்பது.  

 இந்த  மாதிரி  வித்தைகளில் கற்று  தேர்ந்தவர் என் முன்னோர்களில் ஒருவர்   கனம்  கணபதி சாஸ்திரிகள். அவருக்கு சகோதரி புருஷனாக  வைத்தவர் திருக்குன்னம்  சங்கீத  வித்வான்  கனம்  கிருஷ்ணய்யர்.  உ.வே.சா. எனும் தமிழ்த்தாத்தாவின் உறவினரும் கூட. 

என் தாத்தா  வசிஷ்ட பாரதிகள்   மன்மத  வருஷம் வைகாசியில்  (1892) தனது   சகோதரன் சீதாராம  பாகவதருடன் கும்பகோணம் சென்றிருந்தார்.  அப்போது  பிரம்ம  ஸ்ரீ  உ.வே. சாமிநாதய்யர்  அவர்களை,  அவர்  வீட்டில்  போய்   பார்த்து  பேசிக்கொண்டிருந்தார்கள்.  அப்போது  உ.வே.சாவின்  அப்பா  உத்தமதானபுரம்   வேங்கடசுப்பய்யர் என் தாத்தாவை வரவேற்றார்.. உ.வே.சா. அப்போது வயதில் ரொம்ப சிறியவர். 

''வாங்கோ  சீதாராமய்யர்,  உங்க  வர்க்கம்  பெரிய  சங்கீத  பரம்பரை என்று  தெரியும்.  எங்கள்  உறவினர்  கனம்  கிருஷ்னய்யருக்கு   பந்துவும்  குருவுமாகியவர்   அல்லவோ கனம்  கணபதி சாஸ்த்ரிகள்.  அவர்  பிள்ளைதானே  ரெட்டை  பல்லவி  தோடி சீதாராமய்யர்?''  

சங்கீதத்தில்  பிரசித்தி பெற்ற  பட்ணம்  சுப்ரமணிய  அய்யர்  (சிறந்த  சாஹித்ய கர்த்தா) அவர்களுடைய  தகப்பனார் வைத்யநாத  அய்யர்  தஞ்சாவூர்  பெரிய கோவிலில்  பாடகர்.  கனம்  கணபதி சாஸ்திரிகளின்  சிஷ்யர்.  

 தஞ்சாவூர்  மகாராஜா, இவருடைய  பாட்டில் லயித்து சன்மானமாக பொன் மஞ்சநல்லூரில் ஒரு சொல்ப தீர்வைக்கு  நிலம் தானமாக  அளித்தார்.  சில வருஷங்களில்  பஞ்சத்தில்  நிலம்  விளைச்சல்  இல்லாதபோது குடித்தீர்வைக்கு நிர்பந்தம்  பண்ணின சமயத்தில் சாஸ்திரிகள் ஒரு  பதம்  பாடினார்.  இதை ரசித்து மகாராஜாவிடம் சிபார்சு செய்து நிதி  வாங்கி  கொடுத்தவர்  ராஜாவின்  மந்திரி  பாவா சாமி  பண்டிதர்.    பாவா சாமி பண்டிதர்  பெயரிலேயே  சாஸ்திரிகள்  இந்த பதம்  பாடினார்.  அது:  
  ராகம் :  சஹானா      தாளம்:  ஆதி  சாபு
  பல்லவி
பங்கெனக்கு  வேண்டாமையா -  பொம்மஞ்சூரு  
பங்கெனக்கு  வேண்டாமையா   (பங்)
அனுபல்லவி
பங்கெனக்கு  வேண்டாமையா
பாவாசாமி  பண்டித ராயா
எங்கள் குலம்  கடைத்தேற
கங்காஸ்நானம் போறோமையா   (பங் )

இந்த  பாட்டை பற்றி  என்  தாத்தா  அவர்  பாட்டி  சொல்ல கேட்டிருக்கிறார்   என்றால் எவ்வளவு பழங்கதை இது  என்று அறியலாம். தாராளமாக  200-250 வருஷங்கங்களுக்கு முன்பு இயற்றி பாடப்பட்ட ஒரு கீர்த்தனை. 
பாவாசாமி பண்டிதர் என்கிற  மந்திரி  இந்த  பாட்டைக்கேட்டுவிட்டு    ''இது  என்ன  ராகம்?''  என்றார்
கணபதி சாஸ்திரிகள்  ''உங்கள்  அப்பா  பெயர்''   என்றார்.
(மந்திரி  பாவா சாமியின்  அப்பா  சஹாராம்  நாயக் --  அதாவது  ராகம்  ''சஹானா'' )
சங்கீதம் தெரிந்தவர்கள் யாரேனும் இந்த பாடலை சஹானாவில் ஆலாபனத்தோடு பாடி அனுப்பினால் கேட்டு மகிழ்வேன்.
 என் வாட்ஸாப்ப் எண் . 9840279080

கணபதி சாஸ்த்ரி குடும்பம்  காசிக்கு  கங்கா ஸ்நானம் போகிறேன்  என்று  மேற்படி  பாடலில் சொன்னபடியே   சாஸ்திரிகள், அவர்  தாய் அம்மாளுவுடனும், மனைவி  லக்ஷ்மியோடும்   ஒரு நல்ல நாள்  பார்த்து  யாத்ராதானம்  செய்து விட்டு காசிக்கு புறப்பட்டார்கள்.  வழியில்  திருவையாறு,  ஸ்வாமி மலை, கும்பகோணம், மாயவரம், வைத்தீஸ்வரன் கோவில், சீர்காழி, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர் , திருவதிகை வீரட்டானம்,  திர்க்கழுக்குன்றம், காஞ்சி , தெரிசனம் பண்ணிவிட்டு, சென்னப்பட்டணம் வந்தார்கள்.    

சென்னப்பட்டினத்தில் நடந்த விவரம் அடுத்து  ஒரு பதிவில் வெளியிடுகிறேன்.

Sivan Krishnan

unread,
1:08 AM (16 hours ago) 1:08 AM
to amrith...@googlegroups.com
VEDHIC  RISHIS   -   NANGNALLUR  J.K. SIVAN 

AARUNI.(UDHDHALAKA MAHARISHI)

From today,  I intend to write about one Rishi, a day, under this topic and let me start this with  Maharishi  AARUNI.  Many would have been familiar with this name but may not have learnt more about him.

Aaruni, the sage, who authored an Upanishad,  was the son of  Rishi Arun Anupveshi. He belonged to the Panchala kingdom He was a well known teacher during the vedhic period.  He was the father of another great and well known  rishi  Swekathu, mentioned in Upanishads. Aaruni taught his son, and disciple, Swetakethu, the profound knowledge of vedas, its esoteric secrets, and he mastered them all.  Aaruni's guru was  sage Dhaumya. He was such a faithful and obedient  disciple that once when his teacher had asked him to stop the water that had breached the embankments of his field during a heavy downpour, Aaruni, without hesitation,  lay down on the ground himself to  physically  block the breach as all his other efforts to stop the leakage had failed.

Dhaumya  was  wondering  what happened to Aaruni as he did not show up and found him physically stopping the breach.  He blessed Aruni for his devotion to duty, sincerity and obedience,  and as a result  Aaruni  acquired all  knowledge without studying them formally,  or learning through a teacher.  Aaruni as a result was praised and honoured and was known as   Rishi UDHDHAYALAK, one who fastened or bound the embankment.

Aaruni during his time, participated and won in  many  metaphysical debateS held in the court of the wise and enlightened king Janaka,  of Videha in which sage Yagyavalkya had defeated all the assembled Brahmins. Aaruni had himself asked Yagnavalkya a question about who the Antaryaami (the one who resides in one’s inner self and knows everything, even one’s secret thoughts) was, and the latter replied this in a comprehensive manner. He was very humble and readily acknowledged his limited knowledge of the fathomless unknown. This is proved by the fact that he had no second thoughts in requesting king Pravaahan, the son of king Jaivali, to teach him the ‘Panch Agni Vidya’ or the metaphysical knowledge about the five holy Fires.  

The Brihajjabal Upanishad of the Atharva Veda tradition, in its Brahman 7, verse no. 3 asserts that he was one of the great souls who had acquired a spiritual stature equivalent to the Gods as a result of wearing the sacred ash of the fire sacrifice. 


Sivan Krishnan

unread,
1:08 AM (16 hours ago) 1:08 AM
to amrith...@googlegroups.com


VEDHIC  RISHIS -  NANGANALLUR  J.K. SIVAN

3. MAHARISHI ATHARVA

Sage Atharva is another well known ancient sage who first revealed the fourth Veda  called after his name, i.e. the ATHARVA VEDHA.  He was the son of Brahma, the creator, according to Vedic mythology. He first brought down fire from the heaven to earth, and hence was the first sage to have propagated the worship of the sacred fire.

 ‘athar’ is the absolute word for agni, the fire  element, and hence this sage was named ‘Atharva ’
 He made the supreme Fire God, who is synonymous with the dynamic powers of the Supreme Being called Brahman , make this earth as his habitat, thereby paving the way for the forthcoming generations to utilise the stupendous powers and potentials of  fire element in practical terms here on earth.

Since Atharva  brought the fire down on earth, he was also the first to initiate the process of agni worship.Agni became god of fire and
worshipped. Nithya agni homam became the practice for all rishis in vedhic age.
Rishi Atharva was considered as the Fire manifested, so pure and holy as he was.
When he brought the Fire God in the form of the sacred fire from the heaven, he  offered Soma (the extract of a herb called Som and used as a holy and sanctified liquid  offering. It was  meant to be offered to the Gods

In order to please Agni further,  while offering Soma to Him, the sage chanted the  hymns that he had learned from his father, the creator Brahma. This started the practice  of offering of Soma to the sacred fire during the ritual of the fire sacrifice along with the  chanting of hymns of the Atharva Veda.

According to the Puranas, his Atharva's  wife was Shanti, the daughter of Rishi Kardama  Prajapati.
Atharva  is regarded as a personification of the Fire God Agni, and is often invoked in   conjunction with another great sage named Angiras (who was another son of Brahma). In   this form he is called ‘Atharvangiras’ (Atharvan + Angiras) and is regarded as the father  of the Fire God .  I  have mentioned this when I wrote about Rishi Angiras.  These two rishis are responsible for the  honour and exalted position Agni and Surya  occcupies in the pantheon of Hindu Gods.

Mundakopanishad refers to Atharva Veda, in the following sloka;1.1.1:
ब्रह्मा देवानां प्रथमः सम्बभूव  विश्वस्य कर्ता भुवनस्य गोप्ता।  स ब्रह्मविद्यां सर्वविद्याप्रतिष्ठाम् अथर्वाय ज्येष्ठपुत्राय प्राह॥
brahmā devānāṁ prathamaḥ sambabhūva  viśvasya kartā bhuvanasya goptā | sa brahmavidyāṁ sarvavidyāpratiṣṭhām
atharvāya jyeṣṭhaputrāya prāha ||

It means that Brahmā, the creator and protector of the universe, first became a god  and taught Brahmavidyā—the knowledge of the Absolute Reality, which is the foundation of all knowledge.  Brahmha talk brahmavidhya to his eldest son, Atharva.  Brahma had six  mental-born sons.maanaseekaputhras first of whom was Atharva. Atharva shared this knowledge with his younger brother Angiras.  One of Atharva's disciples was Rishi Sandilya, Son of  Rishi Shandila, and this teaching is contained inthe upanishad named ‘Shandilya Upanishad’.This is the fourteenth Upanishad of the Atharva Veda  tradition and deals with Yoga and Brahm-realisation.

The Mantras of the Atharva Veda which were initially pronounced by sage Atharva came to be known after him as ‘Atharvaa’, and those by the two brothers jointly as ‘Atharvaangiras’.

In Mahabharata, Vana Parva (Chapter 222), the reference to Rishi Atharva appears in a verse that lists ancient seers associated with sacred knowledge. 
“अथर्वा चाङ्गिराश्चैव कश्यपोऽथ भृगुस्तथा ।  एते महर्षयः सर्वे वेदविद्भ्यः प्रकीर्तिताः ॥”
it means that “Atharva, Angirasa, Kashyapa, and also Bhrigu—all these great sages are celebrated as knowers of the Vedas.”

It is clear that  Rishi Atharva was one of the primordial seers connected with Vedic knowledge (especially the Atharva Veda tradition).

Some of the Upanishads taught by sage Atharva are:  Atharva  Veda’s Prashna Upanishad, Mundak Upanishad, Atharva Shikha Upanishad and
Shandilya Upanishad and Surya Upanishd.



Sivan Krishnan

unread,
1:08 AM (16 hours ago) 1:08 AM
to amrith...@googlegroups.com
வண்டானம்  எனும் தமிழறிஞர்.  -  நங்கநல்லூர்  J K  SIVAN 
  
எக்காலத்திலும் எல்லோரும் அறிந்த ஒரு உண்மை எது? பணமில்லாதவனை பிணமாக கருதுவது. ''இல்லானை '' (பணம் இல்லாத படித்த ஏழையை) அவன் மனைவி, இல்லாளும். வேண்டாள், ஈன்றெடுத்த தாய் வேண்டாள் , செல்லாது அவன் வாயில் சொல்.. ஆம்  அப்படி ஒரு ஏழைப்புலவன் ஒருவன் பற்றிய  விஷயம் இது. இது போன்று எத்தனையோ அறிஞர்களை,  வித்தகர்களைப் பற்றி நாம் அறிய வாய்ப்பில்லாமல் போய்விட்டது நமது துரதிர்ஷ்டம். தமிழ் தாத்தா சொன்ன விஷயம் இது. 
இருநூறு வருஷங்களுக்கு முன்பு, எத்தனையோ கல்விமான்கள், புலவர்கள், கவிஞர்கள்  நமது தமிழ் நாட்டில்  சமூகத்தில் மற்றவர்களின் மரியாதைஅங்கீகாரம் எதுவும்   இல்லாமல்  வாழ்ந்து மறைந்தவர்கள். வெகு சிலர் மட்டுமே பிரபுக்களாலும் குறுநில மன்னர்களாலும் சமஸ்தானங்களாலும் கௌரவிக்கப் பட்டவர்கள்.

திருநெல்வேலியிலே வண்டானம் என்கிற ஒரு ஊரிலே முத்துசாமி ஐயர் என்கிற ஒரு ஸ்மார்த்த பிராமணர், சிறந்த அறிஞர், கல்விமான். வடமர் வகுப்பை சேர்ந்தவர்,  குள்ளமாக சிகப்பான மேனி உடையவர்.  எப்போதும் குனிந்த தலை நிமிரா தவர்.  அகன்ற நெற்றி,  விசாலமான கண்களை உடையவர். முகத்தில் சந்தோஷம், துக்கம் எதுவுமே  காண முடியாது.விருப்பு வெறுப்பு தெரியாது. இளம்  புன்னகையுடன் இருப்பார். அதிகம் பேச மாட்டார்.  வித்வான்களிடம்  பாடங்கள் கேட்பதிலும் கேட்டவற்றைப் பற்றி சிந்திப்பதிலுமே காலத்தை தனிமையில் போக்குபவர். திருவாவடுதுறை ஆதீனத்தில்  தமிழ் பாடங்கள் கற்காத நேரத்திலே தோட்டத்தில், மரத்தடியில், குளக்கரையில், ஆற்று மணலில், தனியாக உட்கார்ந்து கொண்டு மண்ணிலே ஏதாவது எழுதிக் கொண்டிருப்பார். தனக்கு தானே கவிதைகள் பாடல்கள்  இயற்றிப்  பாடிக் கொண்டிருப்பார். இப்படி ஒரு சீடரை நமது தமிழ் தாத்தா சாமிநாதையர் ஞாபகம் வைத்துக் கொண்டு நமக்கு சொல்கிறார்.

திருவாவடு துறை மடத்துக்கு மேலே சொல்லிய  பிராமணர் பாடம்  கேட்க வந்தார் அப்போது அவருக்கு 20 -22 வயது இருக்கும். அப்போது திருவாவடுதுறை மடத்துக்கு  சுப்பிரமணிய தேசிகர் ஆதீன கர்த்தா. திருசிரபுரம் மஹா வித்துவான் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை ஆதீனத்திலே தமிழ் வித்வான். அவர் சிபாரிசினால் ஆதீனத்தில்  பல ஏழை   மாணவர்களுக்கு சாப்பாடு உடை, தங்க வசதிகள் எல்லாம் கிடைத்தது.  பிற்காலத்தில் திருப்பனந்தாள் காசி மடம் தலைமை வகித்த குமாரசாமி தம்பிரான் என்பவர் அப்போது மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் பாடம் கேட்டு வந்தார். அவர் பிறந்த ஊரும் வண்டானம் என்பதால் அவருக்கு முத்துசாமியை ஏற்கனவே  பழக்கம் இருந்ததால் அவரிடத்திலேயே முத்துசாமி ஐயர் பாடம் படிக்க வந்தார்.

இனி இந்த கட்டுரையில்  வண்டானம்  எனப்படுவது முத்துசாம ஐயரைத் தான்.   ஊரில் இருந்த பொழுது நிகண்டுவையும் சில பிரபந்தங்களையும் படித்தவர் ஆதலின் தமிழ் பயிற்சியிலே இவர் திறந்து விளங்கினார். இரவிலும் பகலும் எல்லோரும் சாப்பிட்டு படுக்கும் நேரத்திலே இவர் தனியாக சென்று யாரிடமும் சேராமல்  தனியாக இருப்பார் ரொம்ப அழுக்கான ஆடைகளை உடுத்திக் கொண்டிருப்பார் இப்படி பரம சாதுவாக நாகரிகம் இல்லாதவராக இருப்பதனால் மற்ற மாணவர்களுக்கு இவரிடத்திலே நல்ல மதிப்பு கிடையாது.  'வண்டானம் வந்தது வண்டானம்  போச்சு' என்று அஃறிணையாகவே முத்துசாமி ஐயரைப் பற்றி பேசுவார்கள்.  இப்படி ஒருவர் இருப்பது ஆதின தம்பிரான்  சுப்பிரமணிய தேசிகருக்கோ தமிழ் ஆசிரியர்  வித்வான்  மீனாட்சிசுந்தரம் பிள்ளைக்கோ தெரியாது.  

எவரேனும் சிலேடையாக பேசினால் வண்டானத்துக்கு மகிழ்ச்சி உண்டாகும். முகத்திலே சந்தோஷத்தை காட்டுவார்.
ஒரு நாள் மாணாக்கர் ஒருவர்  முத்துசாமியைப்  பார்த்து வண்டு  என்ன  செய்கிறது? என  கேட்டபோது ஐயர்  புன்சிரிப்போடு ' சிவப்புத் தேள்'  என்று சிலேடையாக பேசினார். சிலேடைக்கு இரு பொருள்.    ''நீங்கள் சிவனாகிய தேவன்'' என்று ஒரு அர்த்தம். ''சிவப்பு நிறம் பொருந்திய தேள்'' என இன்னொரு அர்த்தம்.

இன்னொரு நாள் ஒருவர்  இவரை நோக்கி   ''வாரும்  இரும்  படியும்'' என்றபோது    ஓஹோ  '' நான் கொல்லனாக வந்து இரும்பை  அடிக்கவேண்டுமா?'' என்று கேட்டார் .

ஒருநாள்  மடத்தில் ஒரு மாணவர் துணி துவைத்துக் கொண்டிருக்கும்போது சிலேடையாக  வண்டானம்  ''நீர் என்ன வேஷ்டியை துவைக்கும் கல்லில் அடிக்காமல்   தண்ணீரில் கசக்கி  பிழிந்து துவைக்கின்றீரோ?'' என பொருள் படும்படி ''கலையைச்  சிலையில் கலையாமல். தோயத்தில் தோய்த்து  துவைக்கின்றீரோ?'' தோயம் என்றால் நீர்.  சிலை என்பது தோய்க்கிற கல்.  கலையாமல் என்றால்  துணியைப் பிரித்து அலசாமல்'' என்று  பொருள்.

ஒருநாள் ஒரு மாணவர்  வண்டானத்திடம் ''நீர் என்ன உண்டு வந்தீரோ?'' சாப்பிட்டாச்சா, என்று கேட்டபோது   இந்த சாப்பாட்டை '' உண்டு உவந்தீரோ?'' என்றா கேட்கிறீர்கள் என்று  பிரித்துக் கூறி மகிழ்வித்தார்.

ஒரு நாள் சாப்பாட்டு விடுதியில் சுவரிலே ஒரு பாடல் மாக்கல்லால் எழுதியிருந்தது.

"இந்தவறச் சாலைதனி லேயிரவும் பகலும்
வந்தவரி முதன்மதிதம் வரைவாங்கிக் கொண்டே
அந்தணரு க் கடி சிலிட யாதுமிலை யெனலாற்
சுந்தரசுப் பிரமணிய தேவனிடஞ் சொன்மீன்."

இதற்கு என்ன அர்த்தம்?இந்த தர்மசாலையிலே ராத்திரியிலும் பகலிலும் சமைத்து பிறருக்கு விடுவதற்காக மடத்திலிருந்து வரும் அரிசி முதல் மோர் வரையில் உள்ள பொருள்களை பெற்றுக்கொண்டு உண்ண வருகின்ற பிராமணர்களுக்கு உணவளிப்பதற்கு ஒன்றும் இல்லை என்று இங்கு உள்ளோர் சொல்வதால் இந்தச் செய்தியை அழகிய சுப்பிரமணிய தேசிகரிடம் சொல்லுங்கள்''

சுப்ரமணிய தேசிகர்  ஆகிய  ஆதின தலைவர் அவரிடம்  இந்த நிலைமையை யாரவது தெரியுங்கள் என்று வேண்டுகோள் விடுத்த கவிதை.
ஒரு மாணவர்  அதை ஞாபகப்படுத்திக் கொண்டு பிற்பகலிலே மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் இடம் பாடம் கேட்பதற் காக வந்திருந்த போது தன் நண்பர்களிடம் தனியாகச் சொல்லி பேசிக் கொண்டிருந்தார். அது பிள்ளை காதுக்கெட்டியது.   அந்த மாணவரைக்  கூப்பிட்டு மீண்டும் அந்த பாடலை சொல்லச் சொலி கேட்டு மகிழ்ந்து இதை யார்  எழுதியிருக்கக்கூடும்?என் அறிய அந்த விடுதியில் உண்பவர்கள் ஒவ்வொருவரையும் குறிப்பிட்டு வினவினார். அப்பொழுது குமாரசாமி தம்பிரான் ''என்னிடம் பாடம் கேட்டுக் கொண்டு வரும் வண்டானம்  இதை எழுதியிருக்கலாம் 'அது'  பெரும்பாலும் அகாலத்திலேயே தான் சென்று 'அது 'உண்ணும் .   தனக்கு ஆகாரம் சரியானபடி கிடைப்பதில்லை என்று சில சமயங்களில் என்னிடம் சொல்லி இருக்கிறது .  அது எழுதியிருக்கலாம், கூப்பிட்டு அதை விசாரிக்க வேண்டும்'' என்றார்

பிள்ளை அவர்கள்விரும்பியடியே செய்ய, உடனிருந்தவர்கள் பல இடங்களில் தேடி வண்டானம்  வடபால் உள்ள ஒரு தோட்டத்திலே ஒரு மரத்தடியிலே உட்கார்ந்து  ஏதோ யோஜனையில் ஆழ்ந்திருப்பதைப்  பார்த்தார்கள் அப்போது நண்பகல். ''வண்டானம், உமக்கு நல்ல காலம் பிறந்து விட்டது.  வாரும். பிள்ளை அவர்கள் உங்களை அழைக்கிறார்கள்'' என்று கூறி அவரை பிள்ளைகளிடத்திலே அழைத்துக் கொண்டு வந்தார்கள்

வண்டானம், யாதும் அறியாதவராக எதற்காக நம்மை அழைத்தார்களோ என்று அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்தார் . பிள்ளை அவர்கள் அவரை உட்கார சொல்லி ''இந்த பாடலைச்  செய்தது யார்?'' என்று அன்புடன் கேட்டபோது ''நான் செய்ய வில்லை?'
' என்று கூறிவிட்டார். அப்பால் ஒருவரை உண்ணும் கூடத்துக்கு அனுப்பி அப்பாடலை எழுதியது யார் என்று விசாரிக்கச் செய்ததில் அப்பாடலின் விஷயத்தை அறியாத சமையல்காரர் ஏதோ ஒரு நாள் வண்டானம் வந்த சிறிது நேரம் நின்றுவிட்டு  எழுதிக் கொண்டிருந்தது'' என்றார்.   விஷயம்   பிள்ளைக்கு சென்றவுடன்  அவர்கள் பின்னம் வற்புறுத்தி கேட்டபோது பதிலே சொல்லவில்லை வண்டானம் . அப்போது அங்கிருந்த குமாரசாமி தம்பிரான் வண்டானத்திடம்  ''நீ எல்லோரும் உண்ணும் சமயம் மடப்பள்ளிக்கு செல்லாமல் அகாலத்தில் போனால் உனக்கு  உண்பதற்கு எல்லாமும் எப்படி கிடைக்கும்.?  உன்னுடைய தவறு தான் அது?'' என்று கோபத்துடன் சொல்லுகையிலே பிள்ளை  அவர்கள் குறுக்கிட்டு  '' ஐயா நீர்  சும்மாயிரும்'' என்று கை அமர்த்தி விட்டு  ''இந்த அருமையான பாடலை செய்தவர் இவரே என்று தெரிகிறது இந்த செய்யுளின் நடையை பார்க்கும்போது இதற்கு முன் கூட இவர் பல பாடல்கள் செய்து பழகி இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது அதை பற்றி எல்லாம் விசாரிக்க வேண்டும்'' என்றார்கள்.

வண்டானமோ பயத்தில்   தான்  யாதொன்றும் செய்ததில்லை என மென்று விழுங்கினார். ''உமக்கு பாடுகிற பழக்கம் உண்டு ''  என்பதை இந்த பாடலே தெரிவிக்கிறது அப்படி ஏதாவது பாடல்கள் செய்திருந்தால் அதை   என்னிடம் சொல்லும் எனக்கு விருப்பம் உண்டு ''  என்று  பிள்ளையவர்கள் வண்டானத்தின் முதுகைத்  தட்டிக் கொடுத்து வற்புறுத்தி கேட்டார்கள்

அப்புறம் தான் முன்னமே செய்திருந்தவற்றுள்ளே சாதாரணமான சில பாடல்களை ஒன்று ஒன்றாக சொல்ல ஆரம்பித்தார் வண்டானம் . அதை கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு அளவு கடந்த ஆச்சரியம் ஏற்பட்டது.  அப்பால் சிறிது ஊக்கம் வந்துவிட்டதால்  வண்டானம்  முத்துசாமி ஐயர் தாம் இயற்றிய திருபு எமகம் சிலேடை முதலியன அமைந்த சில செய்யுள்களை சொல்லிக் காட்டினார். தமது ஊருக்கு அருகில் உள்ள பசுவந்தனை என்னும் ஸ்தலத்தை பற்றி தாம் இயற்றிய பசுவந்தை அந்தாதி என்பதில் உள்ள சில பாடல்கள்   எல்லாம் பற்றியும் வண்டானம்  சொன்னார்.   அதை ரொம்ப  ரசித்துக் கேட்ட  பிள்ளையவர்கள்,  சுவையாக இருக்கிறது என்று  ரொம்ப ஸ்லாகித்து பாராட்டினார்.

 பின்பு பிள்ளை அவர்கள் சுப்பிரமணிய தேசிகன் மீது ஏற்றி உள்ள துங்கஞ்சார் என்கிற கீர்த்தனத்தின் மெட்டிலே தம்மை ஆதரித்த பிச்சு வயர் என்பவர் மேல் இயற்றிய கீர்த்தனை மூன்றையும் சொன்னார் தமிழ் தாத்தா  இதை நினைவு கூறும்போது  .....வண்டான துறை பிச்சு ஐயர் தயாநிதியே.... என்ற அந்த பல்லவி மட்டும் இப்போது என் ஞாபகத்தில் இருக்கிறது..என்கிறார்.

வண்டானம் சொன்ன செய்யுள்களை எல்லாம் கேட்ட பிள்ளை அவர்கள் அவரைப் பார்த்து ''மிகவும் வறுமையோடு  வருத்தத்துடன்  இங்கே இப்படி ஒருவர் இருப்பது இதுவரையிலும் நமக்குத் தெரியாமல் போய்விட்டதே, எவ்வளவு அழுக்கான வஸ்திரத்தை இவர் கட்டிக்கொண்டு தமிழ் சுவையை அறிந்த இந்த ஊரிலே ஏனென்று கேட்பார் இல்லாமல் எல்லாரும் பரிகசிக்கும்படி இருப்பது என் மனதிற்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது.  உங்களுடைய அலட்சியத்துக்கு இடையிலே இவர் இவ்வளவு சுவையுள்ள செய்யுள்களை பாடினார் என்றால் நீங்கள் அன்புடன் அவரை ஆதரித்து வந்திருந்தால் இன்னும் எவ்வளவு பிரகாசித்து இருப்பார்?   இவர் சாதுவாக இருக்கிறார் என்று நீங்கள் புறக்கணித்தால் தமிழையே  புறக்க
 ணித்தவர்களாகிவிடுவீர்கள். இனியாவது  இவருடைய அருமையை நன்கு அறிந்த பாராட்ட வேண்டும்.  படித்தவர்களை படித்தவர்களே அறிந்து கொள்ளாவிட்டால் வேறு யார் அறியப் போகிறார்கள்? திருவாவடுதுறை  சன்னிதானத்திற்கும் தெரிவிக்க வேண்டும்'' என்று மனம் கனிந்து கூறினார்.

அருகில் இருந்த மாணவர்களுக்கெல்லாம் அப்போதுதான் வண்டானம் முத்துசாமி ஐயரின்  கல்வித்திறன் நன்றாக விளங்கிற்று. தாங்கள் அவர் பால் காட்டிய அவமதிப்பை நினைத்து ரொம்பவும் வருத்தப்பட்டார்கள்.  மடத்தில் ஆதீன தலைவர்களை இவ்வாறு வணங்குதல்  மரபு பில்லை, சன்னிதானம் உமது செய்யுள்களை கேட்டால் மிகவும் திருப்தி அடைவார்.  
பிள்ளையவர்கள்  வண்டானத்திடம்  நீர் ஒரு செய்யுள் எழுதி உமது வறுமையை விளக்கி  வஸ்திரம் ஏதாவது கொடுக்க வேண்டும் எனும் கருத்து வரும்படியாக  ஒரு வெண்பா உடனே புனையும், அதை அவரிடம் அனுப்புகிறேன்'' என்றார்.

 ஐந்தே நிமிஷத்தில் வண்டானம் முத்துசாமி ஐயர் ஒரு பாடலை இயற்றிவிட்டார்.

"மாசாரக் கவிநுவல்வோர் குறைகடமை யடியோடே
      மாற்ற வெண்ணித்
தூசார நிதியழண வடிகடா றெரிந்துபெறத்
      துணிந்து வந்தேன்
ஏசார வறுமையெனுங் கொடும்பிணியா னெடுந்துயருற்
      றிருக்கின் றேற்கின்
றுசார மளித்தருள்சுப்பிரமணிய தேசிகமெய்
      யறிஞ ரேறே'

 இதன் அர்த்தம் என்னவென்றால் '' சுப்பிரமணிய தேசிகரே உண்மை அறிவுடைய அருள் மேம்பட்டவரே மிக்க சுவை பொருந்திய செய்யுள்களை கூறுபவர்களுடைய குறைகளை முற்றிலும் ஒழிக்க நினைந்து உடை, ஹாரம், பொருள், உணவு என்பவற்றை அடிகள் வழங்குதல் அறிந்து யானும் ஒன்றைப்  பெற துணிந்து வந்தடைந்தேன் ஆதலின் வறுமை என்னும் கொடிய நோயால் மிக்க துன்பத்தை அடைந்திருக்கும் எனக்கும் இன்று ஆடை வழங்கி அருளல் வேண்டும் .

இதனைக் கேட்ட பிள்ளை அவர்கள் மிக மகிழ்ந்து சன்னிதானத்திடம் இவரை அழைத்துச் சென்று இந்த பாடலை சொல்லி காட்டிவிட்டு இங்கு நிகழ்ந்தவைகள் எல்லாம் தெரிவிக்க வேண்டும் என்று என்னிடம் சொன்னார்கள் அப்படியே நான் அவரைத் தேசிகர்  பால் அழைத்துச் சென்று நிகழ்ந்தவற்றை எல்லாம் கூறி அந்தச் செய்யுளை சொல்ல செய்தேன். இதை கேட்ட தேசிகர் அவர்கள் அந்தப் பாடலின் சுவையை அறிந்து இன்புற்றதோடு அன்றி  சரிகை கரை உள்ள ரெண்டு ஜோடி வஸ்திரங்களை அளித்து இதை உடுத்திக் கொண்டு பிள்ளையர்களிடம் சென்று காட்டுங்கள் என்று கட்டளையிட்டார் அப்படியே வண்டானமும்  புத்தாடை உடுத்திக்கொண்டு  பிள்ளை அவர்களிடம் வந்தார். பிள்ளையவர்களும்  மற்றவர்கள் எல்லோருமே  மகிழ்ந்தார்கள்/

அன்று முதல் மாணாக்கர்கள் எல்லோரும்  அவரிடம் பிரியதோடு நடக்க ஆரம்பித்தார்கள்.அவரும் எல்லோரிடமும் பேசி பழகி வந்தார்.  நூல்களில் உள்ள பாடல்களைப் பற்றி அவருடைய அபிப்பிராயத்தை கேட்டால் முதலாவது இது இரண்டாவது இது என்ன பாகம்?  என்ன  சுவையுடையது என்றெல்லாம் பிரித்து அர்த்தம் கூறுவார்செய்யுட்களின்  சுவையை அறிந்து தரம் கூறுவதில் அவர் வல்லவராக இருந்ததை நான் பலமுறை கேட்டு அறிந்திருக்கிறேன்

பிள்ளை அவர்கள் காலத்துக்கு பின்பும் கூட அவர்  ஆதினத்த்தில் சிலரிடம் அவர்  பாடம் கேட்டு பிறகு  திருவாவடுதுறை மடத்திலிருந்து  தனது ஊருக்குத் திரும்பிச்  சென்றார். பிரபுக்களையும் ஜமீன்தார்களையும் கண்டு அவர்கள் மீது பாடி அவர்களை உவப்பித்து பழைய நூல்களில் உள்ள சுவையை எடுத்துக்காட்டி காலம் கழித்து வந்தார்.இடையே சில சமயம் திருவாவடுதுறைக்கும் வந்து செல்வார்

தமிழ் தாத்தா கும்பகோணத்திற்கு   ஒரு முறை வேலையாக சென்ற பின்,  ஒரு சமயம் திருவாவடுதுறைக்கு வந்து தேசிகரை  சந்திக்க   ஆதீனத்தின்  உள்ளே செல்லும்  சமயம் வாசலில் வண்டானம் நிற்பதைப் பார்த்தார். 
''இன்னும் கல்யாணம் ஆகவில்லையா?''என்ற  தாத்தாவிடம்  ''கல்யாணம் இல்லை கலியாணம் ஆகவில்லை ''என்றார். இதல் அந்த விடையிலேயே மமாகவில்லை என்ற பொருளும் பணம் இல்லை என்ற பொருளும் சிலேடையாக அமைந்துள்ளது. 
 கல்யாணம் என்றால் விவாகம் என்றும்  பணம் என்றும் அர்த்தம்.

ஊற்றுமலை ஜமீன்தார்  ஹிருதயாலய மருதப்ப தேவரிடம் ஒரு சமயம் சென்று ஜமீன்தாரிடம் சில செய்யுட்களை பாடிக்காட்டிவிட்டு  '' எனக்கு  விவாகம் ஆகவேண்டியிருப்பதால் அதற்குரிய பொருளுதவி செய்யவேண்டும் என்று கேட்டார் 

ஜமீன்தார், "நீர் முகூர்த்தம் வைத்துக் கொண்டு வந்தால் நான் நூறு ரூபாய் தருவேன் என்றார். அதற்கு பின் சில காலம் கழித்து வண்டானம்  ஊர்  சென்று திரும்பி வந்து  ஜமீன்தாரிடம் பேசியதை சம்பாஷணையாக கொடுக்கிறேன். 

''வண்டானம் ;  பிரபு, நான் ஊர் சென்று வந்தது விட்டேன். எனக்கு கலியாணம் நிச்சயமாகிவிட்டது. 
ஜமீன்தார்;  நான்  எவ்வளவு தருவேனென்று முன்பு சொன்னேன்?

வ;  '' நானூறு ரூபாய் தருவே னென்றீர்கள்''.
:  -'' இராதே; அப்படிச் சொன்னதாக எனக்கு ஞாபகம் இல்லையே''.
வ:   ''முந்நூறு தருவேனென்றீர்கள்''.
 ''அப்படியும் சொல்லவில்லையே''.
வ - இல்லை; இருநூறு தருவேனென்றீர்கள்''.
   '' என்ன,புலவரே   பொய் சொல்லுகிறீரே!
வ;   '' பொய்  இல்லை ஐயா,  நூறு ரூபாய் தருவதாகச் சொன்னீர்கள்.
   '' பின் எதற்காக நானூறு, முந்நூறு, இருநூறென்று ஏமாற்றுகிறீர்?
வ;    '' நான் உள்ளதைத் தானே சொன்னேன். நீங்கள், "நான் நூறு தருவேன்" என்று சொல்லவில்லையா? ''அதை தான்  '' நான் நூறு''  என்று சொன்னீர்கள் என்றேன்.  முன்பு நான் வந்த போது  நூறு தருவதாகச் சொல்லவில்லையா?  அதை தான்  ''முன் நூறு""  என்றேன்.  இரு உனக்கு நூறு தருகிறேன் என்றீர்கள்  . காத்திரு  நூறு தருகிறேன் என சொன்னதை  ''இரு நூறு ''  என்கிறீர்கள் என்றேன். நூறு தருகிறேன் என்று  நீங்கள் சொன்னதும்   பொய்யில்லையே, நானும் பாடலாக அதை சொன்னதும் பொய்யில்லை. ''


வண்டானத்தின் சாதுரியமான  விடை யில் மகிழ்ந்த ஜமீன்தார் தாம் வாக்களித்த நூறு ரூபாயோடு மற்றொரு நூறு ரூபாயும் சேர்த்து இருநூறாக பரிசளித்தார். 

Sivan Krishnan

unread,
1:08 AM (16 hours ago) 1:08 AM
to amrith...@googlegroups.com

None selected 

Conversations

Last account activity: 3 minutes ago
Details

Compose:
New Message

MinimisePop-outClose
Reply all
Reply to author
Forward
0 new messages
Search
Clear search
Close search
Google apps
Main menu