''இது நடந்தது குமர கோஷ்ட தீர்த்தத்தில்,.நான் நித்யகர்மானுஷ்டானங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன். அப்போது கலவையிலிருந்து மடத்தைச் சேர்ந்த ஒரு குதிரை வண்டி காஞ்சிபுரத்துக்கு வந்தது. அந்த வண்டியில் 66வது பீடாதிபதி சமாதி அடைந்த 10வது நாள் காரியங்கள் மற்றும் மேற்கொண்டு நடக்க வேண்டிய மஹா பூஜைக்கு தேவையான சாமான் துணிமணி எல்லாம் வாங்க மட நிர்வாகிகள் சிலர் வந்திருந்தார்கள். அவர்களில் ஒருவர் மடத்தில் வம்சாவழியாக மேஸ்திரியாக இருப்பவர். எனக்கு அவரை நன்றாக தெரியும். பார்த்திருக்கிறேன்.
''என்னோட வரியா கலவைக்கு? '' என்று மேஸ்திரி கேட்டதும் நான் சரி என்று ஒப்புக் கொண்டு அவரோடு வண்டியில் புறப்பட்டேன். இன்னொரு வண்டியில் என் தாயும் மற்றவர் களும் பின்னால் வந்தார்கள்.
''தம்பி, இப்போ நீ என்னோட வரியே. அப்புறம் கலவையிலிருந்து நீ திரும்பி வரமுடியாதபடி போயி மடத்திலேயே தங்கிடும்படி ஆயிடி ச்சின்னா என்ன செய்வே? பரவாயில்லையா?'' என்று மேஸ்திரி வழியில் கேட்டார்.
''எனக்கு என் ஒன்றுவிட்ட அண்ணா தான் அங்கே மடாதிபதியாச்சே. அவன் நான் அங்கேயே இருக்கணும் னு ஆசைப்பட்டா நாம இருந்திடு வோம். படிக்க இங்கேயே மடத்தில் வசதி பண்ணி கொடுப்பான்னு தோணித்து.
அதனாலே ஒரு விதத்தில் சந்தோஷமாத்தான் இருந்தது. ''
குதிரை வண்டி ஓடியது. மேஸ்திரி கெட்டிக்காரர். குதிரை வண்டி தான் வேகமாக ஓடியதே தவிர அவர் மெதுவாக விஷயத்தை அவிழ்த்து விட்டார்.
''நம்ம பெரிய சாமிக்கு (67வது பீடாதிபதி) அம்மை வாத்திருந்து ஜுரம் அதிகமாகி ஜன்னி (DELIRIUM ) கண்டுடுச்சி. அவர் போயிடுவார் போலிருக்கு. அதனாலே தான் தம்பி உன்னை அழைச்சுக்கிட்டு கலவைக்கு போறேன்'' .
''எனக்கு தூக்கி வாரி போட்டது. அப்படியே குதிரை வண்டியில் முழங்கால்களை மடக்கி நமஸ்கரித் தவாறு சாய்ந்து விட்டேன். ''ராம ராம ராமா '' என்று விடாது ஜெபித்தேன். அது ஒரு பிரார்த்தனை தான் எனக்கு தெரிந்தது. அம்மாவும் மற்றவர்களும் அப்புறமாக கலவை வந்தார்கள். அம்மா அவள் அக்காவுக்கு ஆறுதல் சொல்ல வந்தவளுக்கு அவள் அக்காவே தங்கைக்கு அவள் மகன் சன்யாசியானதற்கு ஆறுதல் சொல்லும்படியாக நிலைமை மாறிவிட்டது''.......
தந்தி அனுப்பிய சிறிது நாட்களில் 66வது பீடாதிபதி பிரபவ வருஷம் மஹா க்ரிஷ்ணாஷ் டமி அன்று சித்தி அடைந்துவிட்டார். 35 வருஷங் கள் மட்டுமே வாழ்ந்தவர். அவர் சித்தி அடையும் முன்பு தனது சிஷ்யன் 18 வயது லட்சுமி நாதன் எனும் ரிக்வேதம் கற்றுத் தெரிந்த மாணவனை அவசரமாக அடுத்த 67வது பீடாதிபதியாக பட்டம் கட்டி விட்டார்கள். ஆச்சார்ய பரம்பரை யில் பீடாதிபதியாக பட்டமேற்பவர்கள் ரிக்வேதிகளாக இருக்க வேண்டும். சன்யாசம் மேற்கொண்ட ப்ரம்மச்சாரிகளாக இருக்க வேண்டும். ஆகவே காஞ்சி காமகோடி மட 67வது பீடாதிபதியாக லட்சுமிநாதன் ஜகத் குருவானார் . ஏழு நாட்கள் மட்டுமே அவர் பீடாதிபதியாக இருந்து வைசூரி நோயிலிருந்து மீளாமல் சமாதி அடைந்தார்.
''/67வது பீடாதிபதியாக நியமிக்கப்பட்ட லட்சுமி நாதன் தன்னுடைய முடிவு நெருங்கியதை அறிந்து மனதில் ஒரு சங்கல்பம் செய்தார். அடுத்த ஏழு நாட்களில் சித்தி அடையும் முன்பு தனது 66வது பீட குருவை மனதில் நிறுத்தி ஒரு சங்கல்பம் எடுத்தான்.? அது என்ன?
தனக்குப் பிறகு தனது தாயின் சகோதரி மகன் ஸ்வாமிநாதன் அடுத்த 68 வது காஞ்சி காம கோடி பீடாதிபதியாக பட்டம் பெறவேண்டும் என்பது தான் சங்கல்பம். நிச்சயம் 66வது பீடாதிபதியின் மனதில் இருந்த விருப்பமும் அது தான் என்பதில் சந்தேகம் இல்லை.
சன்யாசியாவது ரொம்ப கடினமான ஒரு கட்டுப் பாடுகள் கொண்ட வாழ்க்கை நெறிமுறை. உணவில் அநேக கட்டுப் பாடு, காலை முதல் இரவு வரை கடினமான பூஜை, த்யானம், ஸ்னானம், விரத முறைகள், விதிகள். இதை திடீரென்று ஒரு 13 வயது சிறுவனுக்கு திணித்தால் எப்படி அவன் மனோநிலை இருக்கும். எப்படி அவற்றை ஏற்று முழுமையாக நிறை வேற்றமுடியும்? அதற்கு எவ்வளவு மனோதிடம் வேண்டும்? இவ்வளவு கடின வாழ்க்கை முறையை தங்களது 13 வயது மகன் ஸ்வாமிநாதன் மேற்கொள்ள வேண்டுமே என்ற கவலை மஹா லட்சுமி அம்மாளுக்கும் சுப்ரமணிய சாஸ்திரிகளுக்கும் கவலை தந்தது.
ஸ்வாமிநாதனை விட்டு பிரிய மனம் இடம் கொடுக்கவில்லை. சன்யாசம் மேற்கொண்டால் உறவு பந்தம் எல்லாம் விடுபட்டு விடும். இனி அவன் அவர்கள் மகனாக வீட்டுக்குள் நுழைய முடியாது. எதிர்பார்க்காத சூழ்நிலை அல்லவா இது.
''இனி என்குழந்தை சன்யாசியா??'' இந்த எண்ணத்தை ஏற்றுக்கொள்ள திட மனது தாயிடம் இல்லை. அவர்கள் சம்மதம் வேண்டுமே.
காஞ்சி மட அதிகாரிகள், பண்டிதர்கள் எல்லோரும் ஸ்வாமிநாதன் சாஸ்திரிகளை, மஹாலக்ஷ்மி அம்மாளை சூழ்ந்துகொண்டு எப்படியாவது ரெண்டாவது மகன் ஸ்வாமிநாதனை மடத்துக்கு 68வது பீடாதிபதியாக அளிக்க வேண்டியபோது முடிவெடுக்க முடியவில்லை. தவித்தார்கள்..
''உங்களுக்கு மற்ற மூன்று பிள்ளைகள் இருக்கிறார்களே, இந்த மகத்தான வாய்ப்புக்கு ஒரு மகனை அளிப்பதில் என்ன தயக்கம் ? இது 66வது பீடாதிகளின் விருப்பமும் அல்லவா? 67வது பீடாதிபதிலின் விருப்பமும் அல்லவா? இது லோக க்ஷேமத்துக் காகத்தானே, என்று அறிவுறுத்தி ஒப்புதல் அளிக்க தைர்யம் ஊட்டினார்கள். இதனால் எத்தனை ஆயிரம் பக்தர்கள், ஆஸ்ரம வாசிகள் உலகமெங்கும் மகிழ்வார்கள் என்றும் உணர்த்தினார்கள். இருந்தும் மஹா லக்ஷ்மி அம்மாள் சாஸ்திரிகள் இருவராலும் உடனே ஒப்புதல் அளிக்க இயலவில்லை. அப்போது தான் ஒரு ஆச்சர்யம் நடந்தது.
''என் அருமைத் தாய் தந்தையரே, நீங்கள் கொஞ்சமும் கவலை கொள்ளவேண்டாம். எனக்கு என் குருநாதர் முன்பே இது பற்றி சூசகமாக பெருமுக்கலில் உணர்த்தி இருக்கிறார். இந்த வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லை. நீங்கள் கொஞ்சமும் யோசிக்கவே வேண்டாம். உங்கள் ஒப்புதலை மனப்பூர்வமாக மட நிர்வாகிகளுக்கு கொடுங்கோ . எனக்கு இதில் பூர்ண திருப்தி. நான் ஆனந்தமாக இந்த சன்யாச வாழ்க்கை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன்'' என்று சொல்லி பெற்றோர் காலடியில் விழுந்து அவர்கள் ஆசியும் ஒப்புதலும் வேண்டினான் ஸ்வாமிநாதன்.
ஒருவாறு மனம் கல்லாக்கிக்கொண்டு பெற்றோர் சம்மதித்தனர். அதன் பிறகு ஆதி சங்கரரைப் போல மழித்த தலையோடு ருத்ராக்ஷ மாலை , கமண்டலத்தோடு, காவி வஸ்திரம் தண்டம் அணிந்த சங்கராச்சார்யராக அந்த பெற்றோர் சுவாமிநாதனை பார்க்கவே இல்லை. ஒருவேளை தங்கள் மகன் சன்யாசியான அதிர்ச்சியில் அவனை மீண்டும் பார்க்கவில்லையா, அல்லது லோக சம்ரக்ஷணத்துக்காக ஜகத் குருவான மகனை பழைய உறவு சம்பந்தப்பட்ட உணர்ச்சிகளோடு சென்று பார்க்கக் கூடாது என்ற சங்கல்பத்துக்கு, விதிக்குட்பட்டு பார்க்கவில்லையா என்பது தெரியாது. ஆனால் யார் தங்களது மகனைப் பற்றி விசாரித்த போதும் அவர்கள் மௌனம் அனுஷ்டித்தார்கள்.
பிரபவ வருஷம், மாசி மாசம் மூல நக்ஷத்தி ரத்தில் ரெண்டாவது புதன் கிழமை அன்று 13.2.19007 அன்று 68வது காஞ்சி காமகோடி பீடாதிபதியாக ஸ்வாமிநாதன் ஜகதகுரு பட்டம் ஏற்க வேகமாக ஏற்பாடுகள் நடந்தது. 13 வயது ஸ்வாமி நாதனுக்கு சன்யாச ஆஸ்ரமம் வழங்கப்பட்டது இனிமேல் ஸ்வாமிநாதன் என்ற சிறுவன் ஸ்ரீ சந்திரசேக ரேந்த்ர சரஸ்வதி ஸ்வாமிகள் என்று உலகம் அறிந்த நமது மஹா பெரியவா.
ஆயிரம் வருஷங்களுக்கு முன்பு காலடியில் தனது 7 வயது மகன் சங்கரனை காஷாய உடையில் தாய் ஆர்யாம்பா பார்த்தாள் . அன்று கலவையில் 13வயது மகனை தூர இருந்து காஷாய உடையில், பார்த்த தாய் மஹா லக்ஷ்மி பார்த்து உறைந்து நின்றாள். மகனை இழந்தவள் அவனை மக்களுக்கு ஜகத் குருவாக 68வது காஞ்சி காமகோடி பீடாதிபதியாக தந்து தானும் அவரை வணங்கினாள் . எப்படிப்பட்ட தாய் ஈச்சங்குடி மஹாலக்ஷ்மி அம்மாள்.
தான் பிறந்த ஈச்சங்குடியில் மஹாலக்ஷ்மி அம்மாள் வாழ்ந்த பழைய வீட்டை இபோதுள்ளவர்களிடமிருந்து வாங்கி, அதில் ஒரு பாடசாலை நிறுவி அதிலிருந்து வேத கோஷம் எங்கும் எதிரொலிக்கவேண்டும் என்று மஹா பெரியவாளுக்கு ஆசை. 100வயது ஆகியும் வெளிப்படுத்தப்படாமல் நிறைவேறாமலிருந்தது.
எப்படியோ அதை அவர் ஆயுள்காலத்திலேயே நிறைவேற்றும் பாக்யம் பெங்களூர் ஹரி எனும் அருமையான பக்தருக்கு கிடைத்தது.
எவ்வளவு பெரிய பாக்கியசாலி அவர். மஹா பெரியவாளை கடைசியாக பார்த்து பேசி, அவர் அருள் ஆசியை மனநிறைவோடு பெற்றவர் ஹரி ஸ்வாமிகள். ஏழு வருஷம் முன்பு நடந்த சம்பவ FLASHBACK இது;
1993 பெரியவா பக்தர் ஹரி காஞ்சி பெரியவாளை தரிசனம் பண்ண வந்தார்.
”ஈச்சங்குடி கச்சபுரீஸ்வரர் கோயிலுக்குப் புனருத்தாரணம் பண்ணணும்னு ஆசைப்படறியா ?சந்தோஷமா பண்ணு!” -- பெரியவா அனுக்கிரஹம் கிடைத்ததில் ஹரிக்கு பரம ஆனந்தம்.
''ஸ்ரீகச்சபுரீஸ்வரர் ஸ்ரீகாருண்யவல்லியின் கருணை பற்றி நிறைய சொன்ன பெரியவா ''நான் சின்ன வயசிலே அந்தக் கோயிலுக்குபோய் உட்கார்ந்துண்டு தான் வேதம் எல்லாம் கத்துண்டேன்.''
சற்று நேரம் மௌனம்.....
திடீரென்று ஹரியிடம் ''நீ ஒரு உபகாரம் பண்ண முடியுமோ?”
''பெரியவா ஆஞை '' என்கிறார் ஹரி.
''என் பூர்வாஸ்ரம அம்மா பிறந்த ஊர் ஈச்சங்குடி.அங்கே அவளுக்கு ஒரு பழைய வீடு இருக்கு. அந்த இடத்தை ஒரு வேத பாடசாலையாக அமைக்கணும். எல்லாருக்கும் உபயோகமா இருக்கும்”
”பெரியவா இது என் பாக்கியம்! என் பாக்கியம்!’ என்று சொல்லி, ஆனந்தத்தில் ஹரி அழுதுவிட்டார்.
‘எத்தனையோ கோயில்களைப் புனரமைத்தவர் மகாபெரியவா! பூமிக்குள் மறைந்து கிடந்த கோயில்களைக் கூட அடையாளம் காட்டி, அந்தக் கோயிலை வழிபாட்டு ஸ்தலமாக மாற்றி அருளிய மகான். தான் சம்பந்தப்பட்ட எண்ணம், தன்னுடைய தாயார் வாழ்ந்த வீடு என்பதால் 61 வருஷங்களாக தன் எண்ணத்தை விருப்பத்தை எவரிடமும் சொல்லாமல் இருந்திருக்கிறாரே!’
அந்த வீட்டை சொந்தக்காரரிடம் பேசி விலைக்கு வாங்கப்பட்டு பக்தர்களால் வேத பாடசாலையாக மாறியது.
சுமார் 61 வருஷ பெரியவாளின் ஆசை ஒரே வருஷத்தில் நிறைவேறியது. வேத பாடசாலை கட்டி முடித்து குரு பூஜை நடத்த பெரியவாளின் ஆசியைப் பெற வந்தார் ஹரி.
அன்று யாருக்குமே தரிசனம் தரவில்லை. ஆழ்ந்த தியானத்திலிருந்தார். பிரபலங்களின் வருகையும் பெரியவாளுக்குத் தெரிவிக்கப்பட்டது.
‘ஈச்சங்குடியிலேருந்து ஹரி வந்திருக்கார்’ என்றும் மஹா பெரியவாளிடம் சொல்லப் பட்டது. ஈச்சங்குடி .... ஹரி....சட்டென்று கண் திறந்த பெரியவா, மெள்ள நிமிர்ந்தார். அருகில் வரச்சொன்னார். பாதுகைகளை அணிந்துகொண்டார். ஹரியை ஆசீர்வதித்தார். வேத பாடசாலை துவக்க பத்திரிகையை வாங்கிப் படித்தவர், அதிலிருந்த அப்பா அம்மா படத்தை கண்களில் ஒற்றிக்கொண்டார். பிறகு தன்னுடைய பாதுகைகளை ஹரியிடம் தந்தார்.
”இந்தப் பாதுகைகளை எடுத்துண்டு போ! ஈச்சங்குடி வேத பாடசாலையில வை. நன்னா நடக்கும்!’ என சொல்லாமல் சொல்லி, ஆசி வழங்கினார்.
ஈச்சங்குடி வேத பாடசாலை பெரியவா அனுகிரஹத்தால் ஆசிர்வாதத்தால் இன்றைக்கும் இயங்கி வருகிறது.