பக்தி

806 views
Skip to first unread message

sivan jaykay

unread,
Feb 14, 2021, 7:30:37 PM2/14/21
to amrith...@googlegroups.com
''பக்தி  என்றால்  என்ன?   J K   SIVAN 


பக்தி என்பது  பொய்யற்ற, தூய்மையான நம்பிக்கையின்  வெளிப்பாடு.   பகவான் என்ற ஒரு சர்வ சக்தியிடம் சரணடைவது தான்  பக்தி.  பரமாத்மாவிடம் ஜீவாத்மா சேர்வது.  எல்லாம் அவனே,   எதுவும் அதுவே  என்பது  அத்வைதம்.  ஆசார்யன் வழிகாட்டல் இல்லாமல் அவனை அடையமுடியாது.  அவனை சரணடைய  வேண்டுமே நாம் அவனாக முடியாது என்பது விசிஷ்டாத்துவைதம்.  பரமாத்மா ஜீவாத்மா ரெண்டும் 
வெவ்வேறுதாம்.  ஜீவாத்மா பரமாத்மாவை தொடர்ந்து வழிபட்டுக்கொண்டே  தனது கடமைகளை ஆற்றவேண்டும். அவனே  வழிகாட்டுவான்  என்பது த்வைதம்.  

தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான, இறைவனை  நாடி வேண்டுவது 
 காம்ய பக்தி.

பற்றில்லாமல் கூடிய பக்தி   சுயநலமின்றி   பிறர்,  உலக நன்மைக்காக, இறைவன் மீது செய்யும் பக்திக்கு நிஷ்காம்ய பக்தியாகும்.

பெயர்,  உருவம்  கொண்ட  ஒரு  விக்ரஹத்தை  மனதில் நிலைநிறுத்தி செய்யும்  பக்தியை சகுண பிரம்ம உபாசனை என்போம். 

பெயர், உருவம் இல்லாத பிரம்மத்தை மனதில் நிலை நிறுத்தி செய்யும் பக்தியை  நிர்குண உபாசனை

யாராவது  ஒரு  குரு  மூலமோ,  அல்லது வேத,  வேதாந்த   ஸாஸ்த்ர அறிவைக் கொண்டு  பிரம்மத்தை அடையும் ஞானம்  வினியோகி பக்தி.  இதையே   பரபக்தி எனப்படும். அதாவது  வெளியே  உள்ள  ஏதோ ஒன்றின் துணையோடு கொண்ட  பக்தி. 

மனதை வேறு எதிலும் நாட்டம் இல்லாமல்  ஜீவனில் ஆத்மா பிரகாசித்துக் கொண்டிருக்கும் பிரம்மத்தில் மனம் லயித்து  அனுபவிக்கும்  பேரானந்தம் அற்புதமானது.  இது ஆத்ம ஞான பக்தி.

ஐம்புலன்கள் தரும் சுகத்தில் ஈடுபடுபவன் இதை  அடைய முடியாது. எந்த விருப்பமும் இல்லாதவன், பஞ்ச இந்திரியங்களை  கட்டுப்பாட்டில் வைத்தவன்,  சாந்தமும், சமபுத்தியும் வாய்க்கப் பெற்றவன்; பிரம்மத்தி லேயே மனதை நிலைநிறுத்தி நிறைவோடு இருப்பவன் எவனோ, அவனே  யோகி. பகவானைத் தவிர வேறு எதனிலும்  நாட்டமில்லாதவன்.  இது தான் பக்தி யோக சாரம்.

நம்பிக்கையுடன் கூடிய பக்தி தான்  பகவானைக் காட்டும்.  பகவான் எல்லோரிடமும் பிரியமானவன்.  எல்லோரையும்  பக்தி இருந்தால் புனிதமாக்குகிறவன்.

பகவானிடத்தில் நிறைவான பக்தியுடையவன்  பேசமாட்டான். பேசினால் பேச்சு புரிபடாது.  மனம் கசிந்து உருகி அழுவான், சிரிப்பான்,  உரக்க  சிரிப்பான்,  பாடுவான். ஆடுவான்...  ராமகிருஷ்ண பரமஹம்சர், சைதன்யர், சேஷாத்திரி ஸ்வாமிகள்  ஞாபகத்துக்கு வருகிறார்களா இல்லையா?

குழந்தைகளிடம்  ''சாமி  கண்ணை குத்திவிடும்''   என்று  பொய்  சொல்லி பயமுறுத்தக் கூடாது. பகவான் அன்பே உருவானவன்.  பய பக்தி  என்றால்  பரிசுத்த மனதோடு,  சிரத்தையாக  அவனை நினைத்து தியானித்தல், வேண்டுதல், வணங்குதல். 

மறுபடியும் சுருக்கமாக சொல்கிறேன்: 
பரபக்தி :      பெயரும் உருவமும் இல்லாத கடவுள் மீது சிந்தனை செலுத்துவது.

அபரபக்தி :  ஏதோ ஒரு உருவம் மூலம்  இறைவனை  சிந்திப்பது.  

பயபக்தி:    வெளியே கோயிலில், விக்கிகத்தில், வேதநூல்களில், போட்டோவில் இருக்கிறார் என நினைத்து வழிபடுவதும், கோயில்களுக்குப் போவதும், புண்ணிய நதிகளில் நீராடுவதும் பய பக்தியாகும். உள்ளே  தேடாமல் வெளியே  தேடுவது.

அநந்ய பக்தி:    மனதில் நினைத்த இஷ்ட தெய்வத்தை    உடும்புப்  பிடியாகப் பிடித்துக் கொண்டு பக்தி செய்வது அநந்ய பக்தி. பிற தெய்வங்கள் மீது இவர்களுக்கு மனம் குவியாது.  நாம் குரங்குக்குட்டி  போல் அவனை கெட்டியாக பிடித்துக்கொண்டால்  அவன்  தாய்ப்பூனை குட்டியை வலிக்காமல் கடித்து தூக்கிக்கொண்டு பாதுகாப்பது போல்  ரக்ஷிப்பான். இது தான்   மர்க்கட மார்ஜால  பக்தி. 

ஏகாக்ர  பக்தி: இறைவனிடம் மோட்சம் உட்பட எதையும் கேட்கவோ. எதிர்பார்ப்போ இல்லாமல் மனம் ழுவதும் இறைமயமாக இருக்கப் பக்தி செய்வது ஏகாந்த/ஏகாக்ர பக்தி.   

ஒரு குட்டி கதை சொல்கிறேன்.

ஒரு ஊரில்   ஆற்றங்கரை   ஓரம் ஆலமரத்தடியில்   அமர்ந்து  செருப்பு  தைக்கும்  குப்பனும்  ஒரு பெரிய  பணக்கார  மிட்டாதார்  முனுசாமி பிள்ளையும்   வசித்தார்கள்.  குப்பன்  செருப்புக்கடை  என்பது ஒரு  கிழிசல் கோணி. அதில்  செருப்பு தைக்கும் இரும்பு உபகரணங்கள், ஒரு பழைய தோல் பையில்  அநேக கிழிந்த செருப்புகள், நூல் கண்டு, ஊசி, கத்தி, சுத்தி,  தோலை ஊறவைக்கும் அலுமினிய பாத்திரம், தண்ணீர் பானை, கத்தியை தீட்டி கூராக்கும் ஒரு தோல் வார்.  பிளாஸ்டிக் குவளை,கஸ்டமர் உட்கார  மரப்பலகை. அதோடு  மரத்தடியில் ஒரு  சிறிய  திருப்பதி வெங்கடாசலபதி படம். அதன் பக்கத்தில் ஒரு அகல் விளக்கு.  

தினமும் குப்பன்  அருகே இருந்த  செடியில் ஒரு மஞ்சள் காட்டுப்பூ பறித்து அந்த படம் மேல் செருகி வைத்து கும்பிட்டு  வேலை தொடங்குவான். நாள் முழுதும் அந்த படத்தை பார்த்துக்கொண்டே மனத்தில் மகிழ்ச்சி கொள்வான். எப்போதும் சிரித்துக்கொண்டிருக்கும்  கவலையில்லாத மனிதன்.  

மிட்டாதார் பிள்ளைக்கும் பக்தி உண்டு.   தினமும்  ஆற்றில்  விடி  காலையில் குளித்துவிட்டு, பல மணி நேரம் பூஜை  பாராயணம்  எல்லாம் செய்வார். ஏதேனும் ஒரு கவலை,  நிம்மதியின்மை  அவரை துளைத்துக் கொண்டிருக்கும். 

இவர்கள் ரெண்டு பேரைப் பற்றி  வைகுண்டத்தில் பேச்சு.  நாரதர்  விஷ்ணுவைப் பார்த்து ” நாராயணா, பார்த்தாயா, அந்த மிட்டாதாரை,  எவ்வளவு பக்திமான்,  மணிக்கணக்காக  பூஜை, பாராயணம் செய்கிறார். அவருக்கு மன நிம்மதையைக் கொடுக்கக்  கூடாதா?

'' சரி நாரதா,உன் விருப்பப்படியே செய்கிறேன்.  நீ  முதலில்  பூலோகம் போ,  பிள்ளைவாளிடம்  முதலில் சென்று  ‘நான்  நீங்கள்  வணங்கும்  நாராயணனிடமிருந்து வருகிறேன்’ என்று  சொல்.  நாரதர்  மிட்டாதார் பிள்ளையைப் போய் பார்த்தார் 

 ''பிள்ளைவாள்  நான்  நேராக நாராயணனிடமிருந்து உங்களிடம் வந்திருக்கிறேன்'' என்றார்.

''ஓஹோ  அப்படியா,  அவர் வரவில்லையா,  இப்போது  நாராயணன் என்ன  பண்ணிக்கொண்டு இருக்கிறார்?’ 

நாரதர்  நாராயணன்  சொல்லிக்கொடுத்தபடியே,   ‘நாராயணன் இப்போது  ஊசியின் காது வழியாக யானையை நுழைத்துக்கொண்டு இருக்கிறார்’  என்று  பதில் சொன்னார். 
இதை கேலியாக  எடுத்துக்கொண்டு  மிட்டாதார் பிள்ளை   ''ஹா ஹா  என்று சிரித்தார்.  நல்ல தமாஷ் . இதெல்லாம் நடக்கிற காரியமா''  என்று சொல்லிவிட்டு   உள்ளே போனார்.

நாரயணன் சொன்னபடி  நாரதர்  அடுத்து  குப்பனிடம் சென்றார்.  மேலே சொன்னதை சொன்னார்.  அவனும்  நாரயணன் என்ன பண்ணுகிறான் என்று கேட்டபோது  பிள்ளைவாளுக்கு சொன்னதையே  திரும்ப சொன்னார் நாரதர். 
குப்பன்  வாயைப் பிளந்து  நாரதர் சொன்னதையே  சீரியசாக கேட்டுக்கொண்டிருந்த போது   நாரதர் ''ஏனப்பா இது நம்பும்படியாக இல்லையா உனக்கு ?'' என்று கேட்டார். 

குப்பன்,  “ சாமி  இதில் என்ன வேடிக்கை இருக்கு.  ஒரு பெரிய ஆலமரத்தை சின்ன விதையில் அடக்கியவர், பிரபஞ்சத்தை தன் வாயில் காண்பித்தவர், அவருக்கு யானையை ஊசியில் நுழைப்பது என்ன பெரிய விஷயமா?” என்று பதில் சொன்னான் .

இந்த கதையின் தாத்பர்யம்  பக்தி என்பது  வெறும்  பூஜை, புனஸ்காரங்கள் பாராயணம்  மட்டுமில்லை.
அவன் மீது பரிபூர்ண நம்பிக்கையுடன், நீயே சரணம் என்று  அவன் திருவடி பற்றுவதே ”உண்மையான பக்தி” 
அதனால் தான்  குப்பனால் நிம்மதியாக இருக்க முடிந்தது. 

பாரதியின் கண்ணன்  பாடல்களில் கிருஷ்ணனை,  வேலைக்காரனாக,  எஜமானனாக, ஆசிரியனாக,  சீடனாக, தோழனாக, தோழியாக, காதலனாக, காதலியாக  மன்னனாக  எல்லாம்  வேண்டுவதை ரசிக்கலாம். 
அர்ஜுனன்  தோழன்  சுந்தரர்  தோழர்,   ராவணன், கும்பகர்ணன், ஹிரண்யன், ஹிரண்யாக்ஷன், சிசுபாலன், தந்த வக்ரன், எல்லோரும்  எதிரியாக  வந்து அருள் பெற்ற  நாராயணனின்  வாயில் காப்பார்கள் ஜெய விஜயர்கள். 

இறைவனோடு  ஒன்றியவர்கள்   ராதா, மீரா, ஆண்டாள், வள்ளலார், மாணிக்கவாசகர்  போன்றோர். 
நாம்  ஒரு அடி  பக்தியோடு அவனை நெருங்கினால்  அவன் பத்து அடி  நம்மை நோக்கி ஓடி வருபவன். 
தியாகராஜ ஸ்வாமிகள்,  புரந்தரதாசர், நாமதேவர் துக்காராம்  , ஆழ்வார்கள், நாயன்மார்கள் பத்ராசல  ராமதாஸ், அருணகிரி நாதர், வாலமீகி, துளசிதாசர், வியாசர் போன்றவர்கள்  பக்தி ரசம் கலந்த  பாடல்கள் மூலம்  இறைவனை அடைந்தவர்கள். 

ஆச்சர்யனிடம் பக்தி கொண்டு  ஆண்டவனைக் கூட  ரெண்டாம் பக்ஷமாக சரணடைந்த  மதுரகவி ஆழ்வார்,  வடுகநம்பி போன்றோர்  குரு பக்தியால் இறைவனை அடைந்தவர்கள்.

தாய் தந்தையை  தெய்வமாக  போற்றி வணங்கியவனுக்காக  தெய்வமே  வாசலில் செங்கல் மேல் நின்று இருக்கைகள் இடுப்பில் வைத்து காத்திருக்கும்  என்று பாண்டுரங்கனே  உணர்த்திய இடம் தானே பண்டரிபுரம்.

Reply all
Reply to author
Forward
0 new messages