TODAY'S POST- VISHWAVASU-UTHRAYANAM-SISIRA-MEENA-SHUKLA-TIRUTHIYAI-STHIRA-ASWATHY

6 views
Skip to first unread message

sreemutt...@gmail.com

unread,
Mar 21, 2026, 2:47:19 AM (3 days ago) Mar 21
to
45484588_635573706840860_1361837866459594752_n

அழுக்கு நீக்கிகள்-

தெய்வத்தின் குரல்- ஏழாம் பகுதி

பொய், பயம், பொறாமை, நிந்தனை ஆகிய அழுக்குகளைப் போக்குகிற சோப்பு, சீயக்காய், அரப்பு, வாசனைப் பொடி மாதிரி சத்தியம், தைரியம், விட்டுக் கொடுக்கிற சுபாவம், இன்சொல் ஆகியன இருக்கின்றன.

அழுக்கு நீக்கிக்கான நீர் பிரார்த்தனையே

சோப்பு முதலானவை அழுக்கைப் போக்குகிற பண்டங்களானாலும் அவற்றை அப்படியே நம் மீது வைத்துக் கொண்டிருக்க முடிவதில்லை. இவ்விதம் செய்தால் இந்த வஸ்துக்களே அழுக்கு மாதிரிதான் நம் மீது படிகின்றன. ஆகவே, அழுக்குப் போக்கும் வஸ்துக்களும் நமக்குப் பயனாக வேண்டுமானால் ஜலம்தான் அத்தியாவசியமாக இருக்கிறது. சீயக்காய், சோப்பு முதலியவைகளை ஜலத்துடன் சேர்த்தே தேய்த்துக் கொள்கிறோம். அதற்கப்புறமும் இவையே உடம்பைப் பிடித்துக் கொண்டு அழுக்காகி விடாமல், நிறைய நீரைக் கொட்டிக் கொண்டு குளிக்கிறோம்.

இப்படியே நம் மன அழுக்கைப் போக்குகிற நல்ல குணங்கள் பல இருந்தாலும்கூட, வேறொரு ஜலம் இல்லாவிட்டால் இந்த நல்ல குணங்கள் மாத்திரம் நமக்கு மனத்தூய்மையைக் கொடுக்க மாட்டா. அந்த ஜலம்தான் தெய்வ பக்தி. எல்லா அழுக்குகளும் நீங்குவதர்குக் கங்கா ஸ்நானமாக இருப்பது ஸ்வாமியிடம் செய்கிற பிரார்த்தனை தான்.

சின்ன வயசிலிருந்தே தினமும் ஐந்து நிமிஷங்களாவது தனிமையில் உட்கார்ந்து ஸ்வாமியையே நினைக்க வேண்டும். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது. எனவே, இப்போதே இந்த நல்ல பழக்கத்தை ஆரம்பித்து விட வேண்டும்.

முதலில் நமக்கு நேராக எல்லா நன்மைகளும் செய்து வருகிற தாய் தந்தையரையும், ஆசிரியரையும் மனத்தில் நினைத்து வணங்க வேண்டும். பிறகு உலகம் முழுவதற்கும், ஈ, எறும்பிலிருந்து நம் அப்பா, தாத்தா உள்பட எல்லாருக்கும், தாயும் தந்தையுமாக இருக்கிற ஸ்வாமியை நினைக்க வேண்டும். ஒரு நாள் குளித்தால் போதாதது போலவே, தினம் தினமும் மன அழுக்குப் புதிதாகச் சேருமாதலால், அன்றன்றும் பிரார்த்தனை செய்து மனத்தைக் கழுவ வேண்டும்.

இறைவனின் அன்பும் தர்ம ஒழுங்குப்பாடும்

சூரிய மண்டலம் எத்தனை பெரிது! அதைவிடப் பெரிய நட்சத்திர மண்டலங்கள் எத்தனையோ இருக்கின்றனவாம். இத்தனையையும் செய்த ஸ்வாமி எவ்வளவு பெரியவராக இருக்க வேண்டும்? அத்தனை பெரியவர் குழந்தைகளான நம் பிரார்த்தனையையும் கேட்கிறார்! புழு பூச்சியிலிருந்து எல்லாவற்றுக்கும் இந்த உலகத்தில் அததற்குத் தேவைப்படுகிற ஆகாரத்தை அவர்தான் வைத்திருக்கிறார். அப்படியானால் அவர் இருதயத்தில் எத்தனை அன்பு இருக்கவேண்டும்?

அன்பு இருப்பது மட்டுமல்ல. நாம் ஒழுங்கில்லாமல், தப்பும் தவறுமாகக் காரியம் செய்வது போலவா அவர் செய்கிறார்? அவரை ’ஏன்?’ என்று கேட்டுக் கண்டிப்பதற்கு அவருக்கு மேல் எவரும் இல்லாவிட்டாலும் அவர் எத்தனை ஒழுங்கோடு தினமும் இந்தப் பூமியை ஒரு முறை சுழலவிட்டுப் பகலையும் இரவையும் படைக்கிறார்? இதே போல் இந்தப் பூமி சரியாக ஒரு வருஷத்தில் சூரியனைச் சுற்றி வரச் செய்து பலவிதமான பருவங்களை உண்டாக்குகிறார்! ஒவ்வொன்றும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஒழுங்கு செய்திருக்கிறார். நாமும் அவரைப் போல மனசில் அன்பாக இருக்க வேண்டும்; காரியத்தில் ஒழுங்காக இருக்க வேண்டும். இந்த ஒழுங்குக்குத் தான் தர்மம, அறம் என்று பெயர்.

அன்பும் அறமும் உருவான ஸ்வாமியை வேண்டினால் நமக்கும் இவை உண்டாகும். அவருடைய அருளை நினைத்து நன்றி செலுத்துவதே மன அழுக்கையெல்லாம் போக்குகிற பெரிய ஸ்நானம்.

WITH PRANAMS 

N.RAMESH NATARAJAN(SRI KARYAM,COIMBATORE--98422 92536

TIRUPUR RAMANATHAN-63816 83335
1

45484588_635573706840860_1361837866459594752_n[1].jpg
1[1].jpg
Reply all
Reply to author
Forward
0 new messages