
*திருச்சிற்றம்பலம் *
ஒன்பது வாய் தோல் பைக்கு - சித்தர் பாடல்...!
ஒன்பது வாய் தோல் பைக்கு ஒரு நாளைப் போலவே
அன்பு வைத்து நெஞ்சே அலைந்தாயே - வன் கழுக்கள்
தத்தி தத்தி சட்டை தட்டி கட்டி பிட்டுக்
கத்திக் குத்தி தின்னக் கண்டு
ஒன்பது வாய் = ஒன்பது வாசல் கொண்ட
தோல் பைக்கு = தோலால் போர்த்தப்பட்ட இந்த உடலின் மேல்
ஒரு நாளைப் போலவே = ஒரு நாளைப் போலவே எல்லா நாளும்
அன்பு வைத்து = அன்பு வைத்து
நெஞ்சே அலைந்தாயே = அலைந்தாயே என் மனமே
வன் கழுக்கள் = வன்மையான கழுகுகள்
தத்தி தத்தி = தத்தி தத்தி கிட்ட வந்து
சட்டை தட்டி = சட்டை போன்ற தங்களின் இறகுகளை தட்டி சப்தம் செய்து
கட்டி பிட்டுக் = ஒன்றோடு ஒன்று கட்டி பிடித்து சண்டையிட்டு
கத்திக் = கத்தி, சப்தம் இட்டுக்கொண்டு
குத்தி = இறந்த உடலை தன் கூறிய அலகால் குத்தி கிழித்து

தின்னக் கண்டு = தின்ன கண்டும்
ஒன்பது வாசல் கொண்ட தோலால் போர்த்தப்பட்ட இந்த உடலின் மேல் ஒரு நாளைப் போலவே எல்லா நாளும் அன்பு வைத்து அலைந்தாயே என் மனமே! வன்மையான கழுகுகள் தத்தி தத்தி கிட்ட வந்து சட்டை போன்ற தங்களின் இறகுகளை தட்டி சப்தம் செய்து ஒன்றோடு ஒன்று கட்டி பிடித்து சண்டையிட்டு கத்தி, சப்தம் இட்டுக்கொண்டு இறந்த உடலை தன் கூறிய அலகால் குத்தி கிழித்து தின்ன கண்டும்
இவ்வாறு அழுகி நாற்றமெடுக்கும் இந்த உடலுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து பாவங்களை செய்கிறாயே என்று கண்டிக்கிறார்.
'வீடு வரை உறவு... வீதி வரை மனைவி.....
காடு வரை பிள்ளை.... கடைசி வரை யாரோ....
என்று கண்ணதாசனும் பாடி விட்டுச் சென்றுள்ளார்.
கடைசி வரை வருவது நாம் உலகில் செய்த நன்மைகளும் தீமைகளும் என்ற உண்மையை சொல்லி கவிஞர் போய் சேர்ந்து விட்டார்.
*திருச்சிற்றம்பலம்*