அக்காரவடிசல் 3.
”உலகளந்த உத்தமா! ”
ஆண்டாள் ரொம்ப ரொம்ப கெட்டிக்காரி. சூட்டிகையான பெண் குழந்தை. மார்கழி முழுதும் பாவை நோன்பிருந்து கண்ணனை அடைய தோழிகளை கூட்டிக்கொண்டு ஒவ்வொரு நாள் விடியற்காலையில் யமுனையில் ஸ்னானம் செய்ய கிளம்புபவள். மூன்றாம் நாள் இன்று காலை அரை இருட்டில் தோழிகளை தேடுகிறாள்.
”என்னடி நான் வந்து எழுப்பும் வரையில் இங்கே யாரையுமே காணோம்? வாங்க எல்லோரும். ஆற்றில் அமிழ்ந்து குளிப்போம். ஆய்ப்பாடியிலே அத்தனை பேர் இருக்கீங்க. ஒருத்தரும் இங்கே காணோமே சீக்கிரம் எழுந்திருங்க. எழுப்ப ஒரு குரல் கொடுத்தவுடனே வந்துட்டீங்களே. வாங்க வாங்க யமுனைக்கு போவோம். நாமெல்லாம் யாரை பார்க்க கிளம்புறோம். யாரோட தயவு வேணும் தெரியாதா?. அதோ இருக்கே ஒரு அழகான கண்ணைப்பறிக்கும் பெரிய மாளிகை. அதில் யார் இருக்கா? . நம் உயிருக் குயி ரான கிருஷ்ணன் – நந்தகோப மகாராஜாவுடைய அருமை புத்திரன். நீல மேக வண்ணன்.
எல்லோரும் சேர்ந்து பாட தாளம் வேண்டுமே. அவன் தருவான்.
” யார்டி ஆண்டாள் தருவா?
”பேதைப்பெண்ணே. தெரிந்து கொண்டு தானே கேட்கிறாய். அந்த நாராயணன் அம்சமான கிருஷ்ணன் தான். ராஜா வீட்டு சிங்கம் . சூரியன் போல பிரகாசிக்கும் தேஜஸ் அவனை விட்டா வேறே யாருக்குடி இருக்கு. அவனைத்தான் கேட்போம்.அவன் தான் தருவான். நமது பாவை நோன்பு இந்த மாதம் முழுதும் விடாம விரதம் இருக்கப்போகிறோம். அப்புறம் பாருங்கோ கைமேலே பலன்.
“என்னடி ஆண்டாளு, இந்த மார்கழி குளிரில் அதி காலையில் வந்து எங்களை எழுப்பி ‘வா குளிப்போம், பாடுவோம்’ என்கிறாய். விஷயம் சொல்லேன்? என்றனர் அந்த ஆயர்பாடி சிறுமியர் அவளிடம். .
சிறுமிகள் ஆண்டாளுடன் யமுனையை நோக்கி நடக்கிறார்கள். நாம் அதற்குள் மனத்தின் சிறகுகளால் பறந்து வில்லிப்புத்தூர் செல்வோம்.
ஏகாந்தமான அந்த வனப் பிரதேசத்தில் குளு குளு வென்று காற்று வீசிக்கொண்டிருந்தது. காற்றில் நந்தவன நறுமலர்களின் மணம் கம்மென்று கலந்து நுகர்வதற்கு இன்பத்தை அளித்தது.
வில்லிப்புத்தூர் முழுவதுமாக உறங்கிக்கொண்டிருக்க அந்த சிறிய ஆஸ்ரமம் மட்டும் தீபத்தின் ஒளியை சிறிதாக வெளியே கசிய விட்டுக் கொண்டிருந்தது. உள்ளே ஆள் நடமாட்டம். காற்று என்னவோ அன்று கொஞ்சம் பலமாகத்தான் வீசியது. மரங்கள் செடி கொடிகள் சல சல என்ற சப்தத்தில் ஒலித்துகொண்டு தலையாட்டின.
”ராத்ரி முழுக்க தூக்கம் வரவில்லையம்மா” – விஷ்ணு சித்தர்.
‘ ஏன் பா?”
”இன்னிக்கு நீ என்ன பாசுரம் எழுதப்போறே, அதைக் கேட்கவேண்டும் என்கிற ஆவல், எப்போ பொழுது விடியும் என்று காத்துக் கொண்டிருந்தேன் தாயே. அந்த ஜெகன்னாதனைப் பத்தி இன்னிக்கு என்னம்மா எழுதப்போறே நீ என்கிற ஆவல் தான். எனக்கு ”
”அப்பா இன்னிக்கு எழுதவேண்டியதை நேற்று ராத்திரியே முடிவு பண்ணி எழுதி வைச்சுட்டேன். இதோ வாசல் தெளிச்சு வீடு அலம்பி கோலம் போட்டுட்டு வந்து அதைப் படிக்கிறேன்.”
விளக்கைத் தூண்டி விட்டு அவள் எழுதி வைத்திருந்த ஓலைச்சுவடியை எடுத்து கையில் வைத்துக்கொண்டு விஷ்ணு சித்தர் கோதைக்காக காத்திருந்தார். நாமும் காத்திருப்போம்
வேலை எல்லாம் முடித்து, கோதை வந்து விளக்கு அருகில் அமர்ந்தாள். கையில் ஓலைச்சுவடியை எடுத்தாள்.
”பாடும்மா, உன் குரல்லே கேட்கும்போது காதுக்கு கர்ணாம்ருதமா இருக்கு ”
அவள் தேனினும் இனிய குரலில் அன்றைக்கான முழுப் பாசுரமும் பாடினாள்
” ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றிநீர் ஆடினால்,
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து
ஓங்கு பெருஞ்செந்நெ லூடு கயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப,
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்.
விஷ்ணு சித்தர் கண்களில் ஆனந்த பாஷ்பம் நிறைந்து வழிய தழு தழுத்த குரலில்
”கோதை , என் கண்ணே, ஆஹா! என்ன அருமை, என்ன கற்பனையடி உனக்கு, அபூர்வம், அபூர்வம் ” என்னும்போது ஆண்டாளின் காதில்
அவை விழவில்லை. அவரையே நேரே பார்த்துக்கொண்டு சிலை போல் அமர்ந்திருந்தாலும் அவள் ஆயர்பாடியில் தான் இருந்தாள் .இதோ நாமும் மீண்டும் யமுனாநதிக்கரை பிரதேசத்துக்கு திரும்பிவிட்டோம். ஒரு பெண் ஆண்டாளைக் கேட்கிறாள்:” அப்படியென்ன அந்த நாராயணன் பெரியவன்? ஆண்டாள், எனக்கு சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு நீ போய்விட்டாயே நேற்று? என்றால் ஒரு ஆயர்பாடிச் சிறுமி ஆண்டாளிடம்..அவளைத் தொடர்ந்து இன்னொருத்தியும், ”ஆண்டாள், நீ சொல்வதெல்லாம் எங்களுக்கு புதிதாகவும், சந்தோஷமாகவும் ஆர்வமாகவும் உள்ளது. மழையில் நனைந்துகொண்டே நாம் ஆற்றுக்கு போவதற்குள் சொல்லேன். கேட்டுக்கொண்டே போவோம்”
ஆண்டாளின் வாயைப் பிடுங்கி அவள் தோழிகள் என்ன தெரிந்து கொண்டனர்?
“ஆமாம். அந்த நாராயணன் ரொம்ப பெரியவனாயிருந்ததால் தான் இந்தஉலகம், மேல் உலகம், ரெண்டை யுமே, ரெண்டு கால் அடி வைச்சு அளந்தவன், மூணாவது அடி மண்ணுக்கு கால் எங்கே வைக்கிறது என்று வேறு வழியில்லாமல் அந்த மஹாபலி ராஜாவின் தலையிலேயே காலை வைத்தான் என்று பாட்டி கதைசொல்வாளே. அதனாலே தான் அவ்வளவு ‘பெரிய’ அவன் , நம்மை அருளணும்னு நாம் இந்த நோன்பு விரதமெல்லாம் இருக்கப் போகிறோம். நம்ப விரதத்தாலே நிறைய மழை பெய்யும், பசுவெல்லாம், நிறைய
பால் வெள்ளமாகக் கொடுக்கும். விளைச்சல் அமோகமாக இருக்கும். நாடு செழிச்சா நமக்கு சுபிக்ஷம் தானே. சுபிக்ஷம் இருந்தா, திருடு, கொள்ளை, கொலை எதுவுமே இருக்காது. எல்லார் கிட்டயும் பணம் நிறைய இருந்தால் ஏன் இன்னொருத்தர் கிட்ட திருடணும், கொள்ளை அடிக்கணும்.?’
”ஆமாண்டி, ஆண்டாள் நீ சொல்றது வாஸ்தவம் தான். நாம் எல்லாம் அன்பா சந்தோஷமா இருப்போம். அதுதான் அந்த நாராயணன் விரும்பறது. மழையில் நனையும்போது கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும் நிறைய மழை இருந்தா தான் விளைச்சல் வரும். நாடு சுபிக்ஷமா இருக்கும் . பல நாள் சுகத்துக்கு சிலநாள் கஷ்டப்படறது நல்லது தானே”.
மழையில் நனைந்துகொண்டே ஆற்றிலும் மூழ்கி குளிர் நீரில் நீராடினர் அந்த பெண்கள். நாராயணனை வேண்டிக் கொண்டே பாடினர், வீதி வலம் முடிந்து தத்தம் வீடு சென்று விரதம் இருந்தனர். மறுநாள் காலைக்கும் ஆண்டாளுக்கும் காத்திருந்தனர்.
இப்போது நாம் மீண்டும் வில்லிப் புத்தூரில்:
குறைந்தது ஒரு பத்து தடவையாவது விஷ்ணு சித்தர் அந்த பாசுரத்தைப் பாடி அதன் உள்ளர்த்தத்தை அனுபவித்துக்கொண்டிருந்தார்.
”நாராயணா இந்த புவனம் நீ படைத்தது. பூமி விஷ்ணுவின் படைப்பு. அதில் நீ படைத்த எதுவுமே எவருமே நீ தானே? வைஷ்ணவர்கள் யார்? உன் அம்சம்.விஷ்ணுவின் அம்சம். இந்த உலகம் நமக்கு சந்தோஷத்தைத் தருவதற்கு என்பது தவிர அதில் எதுவும் நமதல்ல. பூங்காவில் உள்ள புஷ்பங்கள் நமக்கு தூரத்திலிருந்து பார்த்து சந்தோஷம் தருவதற்கே தவிர பறித்து நமக்கென்று வைத்துக் கொள்வதற்கில்லை. சகல ஐஸ்வர்யங் களும் வேண்டவே வேண்டாம். அவை உனது. எங்களுக்கு வேண்டியது நீயும் உனது பாத கமல தரிசனமும் தான். ‘
ஆண்டாள் அந்த அறியா சிறுமிகள் வாயிலாக மூவுலகும் அளந்த அந்த திரிவிக்ரமன் மகாத்மியத்தை சுலபமாக உணர்த்தி எல்லாம் அவனே, அவனதே என்பதை உணர்த்தி விட்டாள் .”உத்தமன் பேர் பாடி என்று எவ்வளவு பொருத்தமாக அந்த திவ்ய அஷ்டாக்ஷர மந்த்ரோபதேசம் செய்கிறாள்.” அவன் பேர் சொன்னாலே போதுமே. ”ஆபத் பாந்தவா, கோவிந்தா என்ற திரௌபதிக்கு அந்த கிருஷ்ணன் எப்படி உடனே வந்து உதவினான்”
பொழுது புலர்ந்து விட்டது. மழையும் சற்று நின்றது. எண்ணத் தொடர் சற்று அறுந்து பார்வை நந்தவனத்தில் பூத்துக் குலுங்கிய மலர்களின் மேல் செல்ல, பெரியாழ்வார், ‘ நாராயணா என்னே உன் கருணை ” என்று பூக்குடலையுடன் நந்தவனத்தில் நுழைந்தார்.