
கோமாதா,
பூமாதா, ஜனக மாதா மாதிரியே ஸ்ரீமாதா என்று ஒரு மாதா. மற்ற மூன்று மாதாக்களுக்கும்,
அவர்கள் மாத்திரமல்லாமல் லோகத்திலுள்ள ஸகல மாதாக்களுக்கும்,
மாதா-பிதா-பத்னி-குழந்தை முதலிய ஸகல உயிரினங்களுக்கும், உயிரில்லாத அசேதனங்கள்
அத்தனைக்குங் கூட மூலகாரணமாயிருக்கிற தாயான பராசக்தியே ஸ்ரீமாதா. அவளிடமிருந்து
சுரக்கிற அருட்பாலால்தான் நம்முடைய ஜனகமாதாவுக்கும், கோமாதாவுக்கும் பால் சுரப்பது;
அந்த அருட்பாலால்தான் பூமாதா தான்ய வளமும் நீர்வளமும் சுரப்பதும்.
அந்த
ஸ்ரீமாதாவுக்கே கோமாதா என்பதையும் ஒரு பெயராக லலிதா ஸஹஸ்ரநாமத்தில்
சொல்லியிருக்கிறது. ஸஹஸ்ரநாமத்தில் முதல் நாமாவே ‘ஸ்ரீமாதா’ என்பது. உள்ளே அந்த
நாமாவளியில் ‘குருமூர்த்தி:, குணநிதி:, கோமாதா’ என்று வருகிறது. ஞானப் பாலூட்டும்
‘குரு மூர்த்தி’யாகவும் ஸகல கல்யாண குணமாக இருந்து கொண்டு அருட்பாலூட்டும்
‘குணநிதி’யாகவும் அம்பாளுக்குப் பெயர்கள் சொன்ன கையோடு ‘கோமாதா’ என்று
சொல்லியிருப்பது விசேஷம். ஸ்ரீமாதாவான அம்பாள் வாஸ்தவமாகவே தேரழுந்தூரில் கோமாதாவாக
வந்ததாக அந்த ஊர் ஸ்தல புராணத்தில் இருக்கிறது. அப்போது ரொம்பவும் பொருத்தமாக,
கோபாலக்ருஷண மூர்த்தியாகப் பிற்காலத்தில் வந்த அவளுடைய ஸஹோதரரான மஹாவிஷ்ணுவே பசு
ரூபத்திலிருந்த அவளை ஸம்ரக்ஷித்தாரென்றும், அப்புறம் கோபாலரான அவர் பசுபதியான
பரமேச்வரனுக்கு அவளைத் திருமணஞ்சேரியில் கன்யாதானம் செய்து கொடுத்தாரென்றும்
ஐந்தாறு ஸ்தல புராணங்களை ஒன்றாக இணைத்துக் கதை இருக்கிறது.*
அம்பாளும் ஈச்வரனும் கைலாஸத்தில் சொக்கட்டான் ஆடினார்களாம். “நான்தான் ஜெயித்தேன்”, “நான்தான் ஜெயித்தேன்” என்று இரண்டு பேரும் அபிப்பிராய பேதமாகச் சொன்னார்களாம். பல தினுஸாக லோகத்துக்கு தர்மங்களை எடுத்துக் காட்டுவதற்காக ஸ்வாமியும் அம்பாளும் இப்படியெல்லாம் கூத்தடிப்பார்கள். அப்படித்தான் இப்போது அவர்களுக்குள்ளே கலகம் வந்து விட்டது. காசு வைத்து இந்த மாதிரிப் பந்தயம் ஆடினால் எவரும் ஒழுங்கு தப்பிப் போகும்படிதான் ஆகும் என்று காட்டுகிற மாதிரி, சொக்கட்டான் ஆட்டத்தின் முடிவில் கலகம் வந்ததாக ஆட்டம் போட்டார்கள்.
தன்னுடைய உடைமையையெல்லாம் பந்தயம் வைத்துத் தோற்றுப்போன ஸ்வாமிக்குக் கோபம் வந்து அம்பாளை, “நீ பூலோகத்தில் போய்ப் பசுவாகத் திரிந்து கொண்டிரு” என்று சாபம் கொடுத்து விட்டார். அவர் பசுபதி. வெறித்துத் திரிந்து கொண்டிருக்கிற இந்திரியங்களான பசுக்களை அடக்கி வைக்கிற பதி அவர். அஹங்காரம் பிடித்த ஜீவனுக்கு இந்த அநுக்ரஹத்தைப் பண்ணமாட்டார் என்று காட்டுவதற்காக ஸாக்ஷாத் பராசக்தியைப் போக்கிடமில்லாத பசுவாகத் திரிந்து கொண்டிருக்கும்படி ஆக்ஞை பண்ணி விட்டார்! மஹாசக்தியாக இருக்கப்பட்ட அம்பாளும், உடனே தன் தப்பை உணர்ந்து, அவருக்கு அடங்கிய பதிவிரதையாக – இந்தக் கற்பு நெறி உலகத்துக்குத் தெரிவதற்காக – ஒரு சாதாரணப் பசு மாடாக ஆகி பூலோகத்துக்கு வந்து திரிய ஆரம்பித்து விட்டாள்.
“கோமாதா, குஹஜன்மபூ:” – என்று அம்பாளுக்கு ஸஹஸ்ரநாமாவில் பேர் சொல்லியிருக்கிறது. இப்படி கோமாதாவாக பூலோகத்துக்கு வந்து விட்டாள்.
மஹாவிஷ்ணு அவளுடைய அண்ணா அல்லவா? அந்தப் பாசம் அவருக்கு! மாப்பிள்ளை (ஈச்வரன்) அவளை விரட்டி விட்டார் என்றதும், ‘அவர் பசுபதியாக இருந்து ரக்ஷிக்காவிட்டால் போகட்டும்; தங்கையை நாம் ரக்ஷித்துப் பாதுகாப்பில் வைத்துக் கொள்வோம்’ என்று நினைத்து மஹாவிஷ்ணு மாட்டிடையனாக ஆகித் தானும் அம்பாளோடு வந்துவிட்டார். இடையனாகி பூலோகத்தில் அலைய வேண்டும் என்று இவருக்கு ஒரு சாபமும் இல்லை. ஆனாலும் ஸஹோதர வாத்ஸல்ய தர்மத்தைக் காட்டுவதற்காகத் தங்கையோடு கூடத் தாமும் வந்து விட்டார். இந்த அநுபவத்திலே ஏற்பட்ட ருசியினால்தான் கிருஷ்ணாவதார காலத்திலேயும் மாடு மேய்த்து ஸந்தோஷப் பட்டார். கோபாலன் என்றே பேர் வாங்கினார். ‘கோபாலன்’ என்றாலும் ‘பசுபதி’ என்றாலும் ஒரே அர்த்தம்தான். இந்தப் பெயர்களை ஆலோசித்துப் பார்த்தாலே சைவ-வைஷ்ணவ பேதம் போய்விடும். அது இருக்கட்டும்.
அண்ணாவும் தங்கையும் இப்படிக் கோனாராகவும், கோவாகவும் வந்த ஊர்தான் திரு அழுந்தூர். “தேரழுந்தூர்” என்று சொல்வது அதுதான். கம்பருடைய ஊர் அதுவே. ‘கம்பர்மேடு’ என்று இப்போதும் அங்கே இருக்கிறது. அங்கே [திருமங்கை] ஆழ்வார் மங்களாசாஸனம் பண்ணின கோயில் இருக்கிறது. பெருமாள் கோபால மூர்த்தியாகவே கர்ப்பக்ருஹத்தில் பசுவோடு கூட இருக்கிறார். பசுவுக்கு ஸகாவாக வந்ததால் அவருக்கு ‘கோஸகன்’ என்று பேர். கோஸக க்ஷேத்ரம் என்றே தேரழுந்தூருக்குப் பேர் இருக்கிறது. ‘கோ-ஸகர்’ என்பதை ‘ஆமருவியப்பன்’ என்று தமிழில் சொல்கிறோம். ‘ஆ’ என்றால் பசு.
N.RAMESH NATARAJAN(SRI KARYAM,COIMBATORE--98422 92536
