அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்-
நம் அப்பாவையும் அம்மாவையும் ஸ்வாமியாக நினைக்க வேண்டும். இதையே மாற்றி ஸ்வாமியையும் அப்பா அம்மா என்ற உருவங்களில் நினைக்க வேண்டும்.
‘கொன்றை வேந்தன்’ என்ற நீதி நூலில் ஒளவைப் பாட்டி முதலில் ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ என்கிறாள். இது தாய் தந்தையரைத் தெய்வமாக நினைப்பது. இதை அடுத்தே ‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்கிறாள். ‘ஆலயம் தொழுவது’ என்றால் ஆலயத்திலுள்ள தெய்வத்தைத் தொழுவதேயாகும். அப்படித் தொழும்போது அத்தெய்வத்தையே தாய் தந்தையர் என அன்புடன் எண்ண வேண்டும்.
ஸ்வாமி எல்லா இடங்களிலும் இருக்கிறார் என்றால் அவருக்கு நம்மைப்போல் உருவம் இருக்க முடியாது. ஆனால் உருவம் இல்லாத ஒருவரை எப்படி நினைப்பது? அதனால் அவரை அப்பா அம்மா என்ற இரு உருவங்களில் நினைக்க வேண்டும். நமக்குத் தெரிந்தவர்களில் நம்மிடம் ரொம்ப அன்பாக இருப்பது தாய், தந்தையர்தானே? அன்பாக இருப்பவர்களை நினைத்துக் கொண்டால்தான் நமக்கும் சந்தோஷமாக இருக்கிறது. அதனால் ஸ்வாமியை அம்மாவாக, அப்பாவாக, இரண்டும் சேர்ந்த அம்மையப்பனாக நினைத்துப் பக்தி செலுத்த வேண்டும்.
பார்வதி என்ற அம்மாவாகவும், பரமசிவன் என்ற அப்பாவாகவும் அவர் ஆகியிருக்கிறார்; லக்ஷ்மி என்ற அம்மாவாகவும் மஹாவிஷ்ணு என்ற அப்பாவாகவும் ஆகியிருக்கிறார்; சீதை என்ற அம்மாவாகவும் ராமர் என்ற அப்பாவாகவும் ஆகியிருக்கிறார்.
இந்த உருவங்களை நினைத்துக் கொண்டாலே அன்பாக இருக்கிறது. சந்தோஷமாக இருக்கிறது.
மனமும் அறிவும் தெளிய
மனத்தில் அன்பும் சந்தோஷமும் இருக்கிறபோது தான் புத்தி தெளிவாக இருக்கிறது. புத்தி தெளிவாக இருக்கிற போது படித்தால் பாடம் நன்றாக ஏறுகிறது. கோபம், ஆத்திரம், அழுகை, பொறாமை எல்லாம் உண்டாகிறபோது புத்தி குழம்பிப் போகிறது. அப்போது படிப்பும் ஏறமாட்டேன் என்கிறது.
தினமும் கொஞ்ச நாழி ஸ்வாமியைப் பார்வதி – பரமசிவனாகவோ, மகாலக்ஷ்மி – மஹாவிஷ்ணுவாகவோ நினைத்துக் கொண்டு விட்டீர்களானால் மனம் நல்லதாக ஆகும்; புத்தியும் தெளிவாக ஆகும். அதனால் படிப்பும் நன்றாக வரும். நன்றாகப் பாஸ் பண்ணிவிடலாம்.
ரொம்பப் புத்திசாலியாக இருந்து நிறைய மார்க் வாங்கிப் பாஸ் பண்ணினால்கூட, நல்லவன் என்ற பெயரெடுக்காவிட்டால் பிரயோஜனம் இல்லை. நல்ல பெயர் இல்லாவிட்டால் பிற்காலத்தில் வாழ்க்கையில் முன்னேறவே முடியாது. நல்லவனாக இருந்துவிட்டால் அது நமக்கும் சந்தோஷம்; மற்றவர்களுக்கும் சந்தோஷம்; பெரியவனான பின் வாழ்க்கையில் முன்னுக்கு வருவதற்கும் அதுதான் உதவும்.
நம்மை நல்லவர்களாக, புத்திசாலிகளாக, இரண்டாகவும் செய்வது ஸ்வாமியிடம் நாம் வைக்கிற பக்திதான்.
WITH PRANAMS
N.RAMESH NATARAJAN(SRI KARYAM,COIMBATORE--98422 92536
