கூர தரிசனம்
காலை 6.15மணிக்கு புறப்பட்ட நாங்கள் 17 பேரும் இரவு 8.30 அல்லது அதிக பக்ஷம் 9 மணிக்குள் வீடு திரும்ப செயதிருந்த ஏற்பாடு ஏறக்குறைய எங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ற படியே நிறைவேறியதற்கு முக்ய காரணம் தெய்வ சங்கல்பம், தவிர எல்லோருடைய ஒத்துழைப்பு.
இரவு 6மணிக்கு நங்கநல்லூர் நோக்கி திரும்பும் வழியில் கூரம் செல்லலாம் என்ற எண்ணம் மனதில் தோன்றியது. இன்னும் ஒரு 45 நிமிஷம் அல்லது ஒரு மணி நேரம் இருக்கும் போல் இருக்கிறதே எங்காவது வழியில் ஒரு கோவிலுக்கு செல்வோமா என்ற எண்ணம் வலுத்தது.
காஞ்சிபுரத்தை எங்கள் வாகனம் நெருங்கியபோது கூறத்துக்கு போங்கள் ஐயா என்று ஓட்டுநர் சுப்பிரமணியத்தை கேட்டுக்கொண்டோம்.
கூரத்தையோ, கூரத்தாழ்வானைப்பற்றியோ தெரியாத அன்பர்கள் இப்போது தெரிந்து கொண்டு உடனே அந்த அருமைநாய க்ஷேத்ரத்துக்கு செல்லலாம். தரிசிக்கலாம்.
காஞ்சிபுரத்திலிருந்து 8-10 கி.மீ. தூரம். சென்னையிலிருந்து கிட்டத்தட்ட 75 கிமீ தூரத்தில் – ஆதிகேசவ பெருமாள் கோவில் கொண்டுள்ளார். தாயார் மரகதவல்லி. ஸ்ரீ ராமானுஜரின் பிரேத சிஷ்யர் கூரத்தாழ்வான் பிறந்த ஸ்தலம். பல்லவ கால கோயில். கூரம் அமைதியான சின்ன கிராமம். இன்னும் அதிகம் மாறவில்லை.
ஸ்ரீவத்ஸாங்க மிஸ்ரர் 11ம் நூற்றாண்டு வைணவர். பின்னர் கூரத்தாழ்வானானவர். எதையும் ஒரு முறை காதால் கேட்டாலே மனதில் இருத்திக்கொள்ளும் ஏக சந்த க்ரஹி. பெரிய செல்வந்தர்.
ராமானுஜர் ஆதிசேஷன் அவதாரம், லக்ஷ்மணனாக ஸ்ரீ ராமனுக்கு இரவும் பகலும் 14 வருஷம் கண் இமை மூடாமல் சேவை செய்தவர். அந்த நன்றிக்கடன் தீர்க்க, ஸ்ரீமன் நாராயணன், கலியுகத்தில், பிரதி உபகாரமாக, கூரத்தாழ்வானாக அவதரித்து ராமானுஜருக்கு சேவை செய்தார் என்று சொல்வதுண்டு. ராமானுஜருக்காக தனது கண்களையே பறிகொடுத்தவர்.
பல்லவ ராஜா பரமேசுவரவர்மன் கூரம் என்ற ஊருக்குப் பரமேசுவர மங்கலம் என பெயர் சூட்டினாலும் கூரம் என்ற பெயரே எல்லோரும் அறிந்தது.
கூரத்தாழ்வான் அவர் மனைவி ஆண்டாளம்மா இருவருமே தான தர்மத்தில் ஒருவரை யொருவர் மிஞ்சினர் . காஞ்சி வரதராஜனிடம் அளவற்ற பக்தி. காஞ்சிபுரத்திற்கு அடிக்கடி சென்ற போதெல்லாம் விசிஷ்டாத்வைத பிரசாரம் பண்ணிக்கொண்டிருந்த ராமா
னுஜரிடம் பக்தி உண்டாகியது. ராமானுஜரிடம் வேத சாஸ்த்ரங்கள், மீமாம்ச சூத்ரங்கள் எல்லாம் தெரிந்துகொண்டார். இருவரும் இணை பிரியா நேசம், நட்பு , பாசம் கொண்டவர்கள்.
நாள்தோறும் கூரேசர் ஆண்டாள் ஜோடியின் தான தர்மங்கள் இரவு வரையும் தொடரும். ஒருநாள் இரவு அன்னதானம் முடிந்து அவர்களின் மாளிகை கதவு தாழ் போடப்பட்டது. கோட்டை கதவு போல அது சாத்தப்பட்ட சப்தம் நிசப்தமான இரவில் காஞ்சியிலும் கேட்டது. வரதராஜ பெருமாளை பெருந்தேவி தாயார்கேட்டாள்
"நாதா! இது என்ன சப்தம்?. எங்கிருந்து ?
"தெரியவில்லையே. கேட்டு சொல்கிறேன்”” என்று சகலமும் தெரிந்த வரதராஜ பெருமாள் ஆலயத்தின் பிரதான பட்டாசாரியாரான திருக்கச்சி நம்பிகளை அழைத்து கேட்டார்.
"சுவாமி, நானும் கேட்டேன். அது கூரம் கிராமத்தில் அன்றாட அன்னதானம் முடிந்து இரவில் கூரேசர் வீட்டு வாசல் கதவு மூடப்பட்டு தாழ்ப்பாள் போடும் சப்தம்"
கபட நாடக சூத்ரதாரி ஆயிற்றே பெருமாள்!!. தெரியாதது போல் "அடே அப்படியா, கூரேசனும் ஆண்டாளும் அவ்வளவு தர்மிஷ்டர்களா. அவர்களை நான் பார்க்க வேண்டும் இங்கே அழைத்து வா " திருக்கச்சி நம்பி அம்பு போல் விரைந்து கூரேசரிடம் பெருமா
ளின் விருப்பத்தை தெரிவிக்க கூரேசர் திகைத்தார்.
"என்ன அக்ரமம் செய்துவிட்டேன். பாவி, நான்? அன்னதானம் செய்வதை ஊருக்கெல்லாம் பிரபல்யம் செய்வதுபோல் கதவு தாழ்ப்பாள் சத்தம் போட்டு தம்பட்டம் அடித்து விட்டேனே. பெருமாளுக்கும் தாயாருக்கும் இந்த சத்தத்தால் அமைதி இழக்க செய்து மகா பாவத்தை தேடிக் கொண்டு விட்டேனே?!”. ஆடிப் போய் விட்டார் கூரேசர். இனி நான் செய்ய வேண்டியது ஒன்று தான். சொத்து சுதந்திரம் பூரா அப்படியே எல்லாவற்றையும் துறந்து ஸ்ரீரங்கத்துக்கு ஓடி குரு நாதர் ராமானுஜரை சரண் அடைந்தார், ஸ்ரீ ராமானுஜ
ரின் நிழலானார்!! ஸ்ரீ ராமானுஜர் "ஸ்ரீ ராமானுஜ தர்சனம்" எழுத 4 முக்ய சீடர்கள் (கூரேசர், தாசரதி, தேவராட், எம்பார்) உதவினர். இரவும் பகலும் வேத சாஸ்த்ரங்கள், சூத்ரங்கள் திருவாய் மொழி போன்று எல்லாவற்றையும் அலசினர். விசிஷ்டாத்வைத சித்தாந்தம் படிப்படியாக உரு பெற்றது. ஸ்ரீ ராமானுஜர் வியாசரின் பிரம்ம சூத்ரத்துக்கு பாஷ்யம் எழுதியவர்.
இரவு 8.40க்கு நங்கநல்லூர் அடைந்து துர்கா பவனில் சுடச்சுட இட்டலிகள் பொட்டலத்துடன் வீடு திரும்பினோம். கட்டவாக்கம் நரசிம்ம தரிசனத்தில் துவங்கி கூரேசர் ஆதிகேசவன் தரிசனத்தோடு கூரத்தில் முடிந்த இனிய யாத்திரை. அடுத்த பயணம் ஈச்வராநுக்ரஹம் .