
ஒன்று
கவனிக்க வேண்டும். ‘சந்தனாபிஷேகம்’ ‘க்ஷீராபிஷேகம்’ என்கிற மாதிரியே பல பேர்
‘பாலாபிஷேகம்’ என்கிறார்கள். அது தப்பு. ‘பாலபிஷேகம்’ என்று ‘ல’வைக் குறிலாகவே
சொல்ல வேண்டும். ‘சந்தன’ ‘க்ஷீர’ என்ற வார்த்தைகள் ‘அ’காரத்தில் முடிவதால்,
அவற்றோடு ‘அபிஷேகம்’ என்று ‘அ’காரத்தில் ஆரம்பிக்கும் வார்த்தையைச் சேர்க்கும்போது
இரண்டு குறில் ‘அ’காரங்கள் சேர்ந்து ஒரு நெடில் ‘ஆ’காரமாகி, ‘சந்தனாபிஷேகம்’,
‘க்ஷீராபிஷேகம்’ என்ற கூட்டு வார்த்தைகள் உண்டாகின்றன. ‘பால்’ என்கிற வார்த்தை
‘அ’காரத்தில் முடியாமல் ‘ல்’ என்ற ஒற்றெழுத்துடன் முடிகிறது. அதோடு ‘அபிஷேகம்’
சேரும்போது, ல்+அ என்பது (குறிலான) ‘ல’ ஆகத்தான் வருமாதலால் ‘பாலபிஷேகம்’ என்று
தான் ஆகும். தேன் + அபிஷேகமும் இப்படியேதான் – ‘தேனபிஷேகம்’ ஆகுமே தவிர
‘தேனாபிஷேகம்’ இல்லை.
இதே மாதிரிதான் ‘ஷடாக்ஷரம்’ என்பதும் தப்பு. ஷடக்ஷரம் தான்
சரி. பஞ்ச + அக்ஷரம் – பஞ்சாக்ஷரம்; அஷ்ட + அக்ஷரம் – அஷ்டாக்ஷரம் என்கிற மாதிரி
இல்லாமல் ஷட்+அக்ஷரம் என்றே இருப்பதால் ஷடக்ஷரம் என்றே ஆகும்…….
கோவின் மலமும்
பவித்ரமானதாக இருக்கிற மாதிரியே அதன் குளம்படிப் புழுதியும் பவித்ரமானதாகும்.
ஸாதாரணமாகக் கால் புழுதி என்றால் அது துச்சமானது. அதையே தெய்வத்திடம், தெய்வ
ஸமதையான மஹான்களிடம் பாததூளி என்று போற்றி ஏற்றுக் கொள்கிறோம். கோதூளியும்
அப்படியே. ஸாயங்காலத்தில் கோக்கள் மந்தையாக மேய்ந்து முடிந்து கொட்டிலுக்குத்
திரும்பிக் கொண்டிருக்கும்போது அவற்றின் குளம்படியிலிருந்து பெரிசாகப் புழுதிப்
படலம் கிளம்பும். அந்தப் புழுதி உடம்பு முழுவதும் படும்படி நின்றால் அதை புண்ய
தீர்த்த ஸ்நானத்துக்கு மேலாகச் சொல்லியிருக்கிறது. புழுதி போவதற்கு ஸ்நானம்
செய்வதுதான் வழக்கம் என்றாலும் இங்கேயோ புழுதியே புண்யஸ்நானமாக இருக்கிறது!
பாலக்ருஷ்ணனே அப்படிப் புழுதியில் திளைத்தாடினான் – ’கோதூளி தூஸரித’னாக இருந்தான்
என்று வர்ணித்திருக்கிறது. எப்பொழுதும் அப்படிப் புழுதி படிந்திருப்பதே அவனுக்கு
ஒரு ஸௌபாக்ய சோபையை உண்டாக்கிற்று. ‘சச்வத் கோகுர நிர்தூதோத்தத-தூளீ-தூஸர
ஸௌபாக்யம்’ – என்று ஆசார்யாளே பாடியிருக்கிறார்.* அப்படிப் பசு மந்தை புழுதி
எழுப்பிக் கொண்டு கொட்டில் திரும்புகிற ஸாயங்காலத்தையே ‘கோதூளி லக்னம்’ என்று
விசேஷித்துச் சொல்லியிருக்கிறது.
கோமாதா, பூமாதா என்று இரண்டு சொன்னதில் பூமாதா
தன் புழுதியையே கோமாதாவின் குளம்படியிலிருந்து பெற்று தனக்கும் அபிஷேகம் செய்து
கொள்கிறாள்.
*கோவிந்தாஷ்டகம், 5
N.RAMESH NATARAJAN(SRI KARYAM,COIMBATORE--98422 92536


அபிஷேகம் பக்தி வழிபாட்டில் வருவது. அதற்கு முக்யமாக ஆகமங்களும்
புராணங்களும் ப்ரமாணம். அவற்றை விடவும் நம்முடைய மதத்துக்கு மூல ப்ரமாணமாயிருப்பது
வேதமே. அதன் அடிப்படையில்லாமல் ஆகம, புராணங்களுக்கு ப்ராமாண்யம் (ப்ரமாணமாகும்
தன்மை) இல்லை.
வேதம் ஏதோ நம்முடைய தேசத்துக்கு மட்டுமேயானது என்று நினைத்தால்
அதைவிடப் பெரிய தப்பில்லை. நம்முடைய தேசத்தில் மட்டும்தான் வேதத்துக்கு ப்ரயோகம்,
கர்ம பூமியான இந்த பரத கண்டத்தில் மட்டும்தான் வேத கர்மாக்கள் செய்தால் பலன் உண்டு
என்றாலும் அந்தப் பலன் இந்த தேசத்துக்கானது மட்டுமில்லை. ஸகல லோகத்துக்கும் பலனை
உத்தேசித்துத்தான் இங்கே நம் தேசத்தில் வைதிக கர்மா செய்வது. ஹ்ருதயத்திலிருந்து
ரத்தம் சரீரம் பூராவுக்கும் பாய்கிற மாதிரி இங்கே செய்யும் வைதிக அநுஷ்டானங்கள்
லோகம் முழுதற்கும் க்ஷேமங்களைப் பாய்ச்சிவிடும். அதாவது வேதம் இருந்தால்தான் லோகமே
நன்றாக இருக்கும்; லோக க்ஷேமமே இங்கே நம்முடைய தேசத்தில் செய்கிற வைதிகமான யஜ்ஞ
கர்மானுஷ்டானாதிகளில்தான் இருக்கிறது. அதைப் பற்றிக் கொஞ்சங்கூட ஸந்தேஹப்பட
வேண்டாம். அப்படி லோகத்தையே வாழ்விப்பது யஜ்ஞம்; வேள்வி என்பது. அதற்கு இரண்டு
அவசியமானவை. ஒன்று யஜ்ஞம் பண்ணுகிற கர்த்தாவான ‘யஜமானன்’. இன்னொன்று யஜ்ஞத்தில்
உபயோகமாகிற அதி முக்யமான த்ரவ்யங்களைத் தருகிற கோதான்.
யஜ்ஞத்தில் முக்யமாக
ஆஹுதி கொடுக்கப்படும் த்ரவ்யம் பசுவிடமிருந்து பெறுகிற நெய்யே. ஆஜ்யம் என்று
அதைச் சொல்வது. ‘ஹவிஸ்’ – தமிழில் அதுவே ‘அவி’ என்று வரும்; அந்த ஹவிஸ் – என்பதே
யஜ்ஞத்தில் ஆஹுதி கொடுக்கப்படும் பலவிதமான த்ரவியங்களுக்கும் பொதுப் பெயராயினும்,
குறிப்பாக ஹவிஸ் என்றால் பசும் நெய்தான். மற்ற ஆஹுதி த்ரவியங்களையும் நெய்யால் தடவி
சுத்தம் செய்துதான் ஹோமம் செய்ய வேண்டும்.
அக்னிஹோத்ரம் முதலான பல யஜ்ஞங்களில்
கோக்ஷீரம் ஹோமம் செய்யப்படுகிறது. ததி என்கிற தயிரும் ஹோம த்ரவ்யமாக
ப்ரயோஜனமாகிறது. ஸத்துமா என்கிற ஸக்துவும் தயிரும் கலந்து ததி ஸக்து ஹோமம் என்று
செய்வார்கள்.
நெய், பால், தயிர் அக்னியில் ஹோமமாகின்றனவென்றால், அந்த அக்னியை
வளர்த்துக் கொடுப்பதே எது? கோமயத்தைப் போட்டுத் தட்டிய வரட்டிதானே?
ஆகையினால் கோ
இல்லாவிட்டால் யஜ்ஞம், வேள்வி என்பதே இல்லை.