சங்கல்பம் எப்படி செய்ய வேண்டும் ...... !!
மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷய த்வாரா ஶ்ரீ பரமேஷ்வர ப்ரீத்யர்த்தம்
அபவித்ர: பவித்ரோ வா ஸர்வாவஸ்தாம் கதோபிவா| ய: ஸ்மரேத் புண்டரீகாக்ஷம்ʼ ஸ: பாஹ்யாப்⁴யந்தர: ஶுசி: மானஸம் வாசிகம் பாபம் கர்மணா ஸமுபார்ஜிதம் ஸ்ரீ ராம ஸ்மரணே நைவ வ்யபோஹதி ந ஸம்சய: ஸ்ரீ ராம-ராம-ராம திதிர் விஷ்ணு ததா வார: நக்ஷத்ரம் விஷ்ணுரேவ ச யோகஶ்ச கரணஞ்சைவ ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத் ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த
ததேவ லக்னம் சுதினம் ததேவ தாராபலம் சந்த்ர பலம் ததேவ வித்யாபலம் தைவபலம் ததேவ கௌரீபதே (லக்ஷ்மீபதே) தேங்க்ரீ யுகம் ஸ்மரராமி
இப்படித்தான் பல காரியங்களுக்கும் சங்கல்பம் ஆரம்பிக்கிறது.
இதன் பொருளை பார்ப்பது நல்லது. ஏன் என்பது பின்னால் விளங்கும். இதன் பொருளை பார்க்கலாம்.
நான் செய்த எல்லா பாவங்களையும் அழிப்பதன் மூலம், பரமேஸ்வரனை திருப்தி படுத்துவதற்காக
புனிதமல்லாததோ புனிதமானதோ எந்த நிலையில் இருப்பவனானாலும்.
யார் அந்த கண்ணனை மனதால் நினைக்கிறார்களோ அவருடைய உள்ளும் புறமும் சுத்தமானதாகிறது. மனது சொல் இவற்றால் செய்த செயல்களால் கிடைத்த பாபம் ஸ்ரீ ராமனை நினைப்பதால் நீக்கப்படுகிறது. எந்த சந்தேகம் வேண்டாம்.
விஷ்ணுவே திதி, அதுவே வாரம், நக்ஷத்ரமும் விஷ்ணுவே. யோகம் கரணம் ஆகியவையும் விஷ்ணுவே. உலகமெல்லாமே எல்லாமே விஷ்ணு மயமாகும்.
கௌரீ பதியாகிய சிவனே (லக்ஷ்மியின் பதியான விஷ்ணுவே) உனது பாதங்களிரண்டையும் நினைக்கின்றேன். அதனால் இச்செயல் தொடங்கும் இந்த நேரத்திற்குரிய லக்னம் நல்ல லக்னமே, நாள் நல்ல நாளே. நட்சத்திரம், சந்திரன் ஆகியவற்றின் அடிப்படையிலும் அவை நல்லன செய்வனவே. கல்வியறிவினாலும் தெய்வத்தின் துணையினாலும் அவை சிறந்து விளங்குகின்றன.
எல்லா கூறுகளையும் கவனிக்கப்போனால் நல்ல நேரம் என்பது தேவர்களுக்கும் அகப்படாதாம். அப்படியானால் மனிதர்களான நமக்கு மட்டும் எப்படி அகப்படும்?
அதனால் சுலபமான வழி பகவானை நினைப்பதே. அது ராமனோ கௌரீபதியான சிவனோ லக்ஷ்மி பதியான விஷ்ணுவோ அது நம் குல ஆசாரப்படி இருக்கட்டும்.
அப்படி இறைவனை நினைக்க அந்த லக்னமே நல்ல லக்னம் ஆகிவிடுகிறது. அந்த நாளே நல்ல நாள் ஆகிவிடுகிறது. அமாவாசை அன்று சந்திரனுக்கு பலமில்லை. இருந்தாலும் இறைவனை நினைக்க அது பலம் பொருந்தியது ஆகிவிடுகிறது.
ஒரு சிலர் நல்ல நாள்தான் பார்த்தோம், நல்ல முகூர்த்தம்தான் பார்த்தோம். இருந்தாலும் எடுத்த காரியம் இப்படி ஆகிவிட்டது என்று புலம்புகிறார்கள். என்ன பிரச்சினை?
கர்மாவை செய்து வைப்பவர் சொல்லச்சொல்ல திருப்பிச்சொன்னார்களே தவிர இந்த சங்கல்ப நேரத்தில் பகவானை நினைத்தார்களா?
அதற்காக முகூர்த்தமே பார்க்க வேண்டாம் என்று நினைக்க வேண்டாம். முடிந்த வரை நல்ல முகூர்த்தமாக பார்த்துவிட்டு ஆதர்ச முகூர்த்தம் கிடைப்பது அரிது என்பதாலும், தெரிந்த தெரியாத தோஷங்கள் இருக்கலாம் என்பதாலும் - பகவானை நினைத்து சங்கல்பம் செய்ய வேண்டும்.
இனியேனும் சங்கல்ப நேரத்தில் பகவானை நினைத்துக் கொண்டு சங்கல்பம் செய்வோம் !!