வருவாய் அருள்வாய் குகனே!
அருணகிரிநாதர் அருளிய ‘கந்தர் அநுபூதி’ – ஐம்பதி ஒன்னாவது பாடல் – கடைசி பாடல்
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!!
விளக்கம் : உருவாக, உருவமில்லாததாக, உள்ளதாக, இல்லாததாக, நறுமணமாக, மலராக, மணியாக, உலகின் மூலப்பொருளாக, உயிருக்கு உயிராக, வீடுபேறை அடைகின்ற விழியாக விளங்கும், என் முருகா, வந்து அருள் புரிவாய்.
இந்த பாடலை பற்றி ஒரு ரசமான, ஹாசியமான சம்பவம்
ஒரு நல்ல அந்தணர் (சங்கீத வித்வான்), காஞ்சி பெரியவாளை – சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளை தரிசிக்க வந்து இருந்தார். வறுமை நிலையில் குடும்பம். அந்த நிலையை போக்க, செல்வத்தை பெருக்க, ஏதாவது மந்திரம், தந்திரம், பிரார்த்தனை உண்டா என்று பெரியவாளிடம் வினவினார்.
பெரியவா : நான் சொல்வான் ஏன், உனக்கே தான் தெரியுமே, நீ தான் சங்கீத வித்வான் ஆச்சே (என்ன ஒரு தன்னடக்கம்!)
அந்தணர் : இல்லையே. நான் ஏதோ பாட்டு தான் பாட்டுவேன். மந்திரம், தந்திரம் எல்லாம் தெரியாது !
பெரியவா : திருபுகழ்ல உனக்கு பரிச்சியம் உண்டில்ல, நோக்கு கந்தர் அநுபூதி தெரியுமோ ?
அந்தணர் : ஓ, மனப்பாடமா, நன்னா தெரியும்…..
பெரியவா : அநுபூதியிலே அருணகிரிநாதரே அத கேக்குராரே !
அந்தணருக்கோ ஒரே அதிர்ச்சியாக இருந்தது, கந்தர் அநுபூதியோ ஞான மயமான நூல், அதில் இகத்துக்கு (பணத்துக்கு) என்ன கேட்டு இருக்க போறார்…..
அந்தணர் : எனக்கு புரியலையே,பெரியவாள் புரியற மாதிரி சொன்னால் சுபம்.
பெரியவா : எங்க கடைசி பாட்ட பாடு…
(எங்கும் நிசப்தம். வெண்கல குரல். ஸ்வரம், லயம் சேர்த்து அந்தணர் மேலே உள்ள பாடலை பாடுகிறார்….. நல்ல சாரீரம். கண்ணை மூடி ஆழ்ந்து ரசித்தார் பெரியவாள்)
பெரியவா : எங்க கடைசி வரிய சொல்லு…
அந்தணர் : குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!
பெரியவா : பாத்தியா இதுல இருக்கு பாரு
அந்தணர் : …….!?!……. (அவருக்கு இன்னும் புரியல)
பெரியவா : மெல்ல கடைசி வரிய, ஒரு ஒரு வார்த்தையா திருப்பி சொல்லு.
அந்தணர் : குருவாய்….. வருவாய்….. அருள்வாய்….. குகனே!
பெரியவா : பாத்தியா ‘வருவாய் அருள்வாய் குகனே, வருவாய் அருள்வாய் குகனே’ அப்பிடீன்னு கேக்குறார்
அவருக்கு ஆச்சரியமாக இருந்தது, நமக்கும் தான் !!! பதத்தை பிரித்து படியுங்கள், ’குருவாய்…, வருவாய் அருள்வாய் குகனே!’ {குருவாய், நீ வந்து வருவாய் (பணம்) தருவாய் குகனே}
பெரியவா : அவர் எப்படி வேணாலும் சொல்லி இருக்கட்டும், ஆனா நாம இப்படி கேக்கலாம்ல… அதே குருவான சுவாமிநாதன், நமக்கு பரத்துடன், இகத்தையும் கொடுத்து விட்டு போறார். அதுனால, இதுக்கு மேல என்ன பெரிய மந்திரம் வேணும். இதையே திரும்ப திரும்ப சொல்லி வா.. உன்னுடைய கஷ்டம் எல்லாம் தீரும்
ANBUDAN
<>KSR<>