
அன்றைய தினம்,'அல்ப துவாதசி'...துவாதசி திதி சிறிது நேரம்தான் இருந்தது. காலை ஒன்பதரை மணிக்குள், ஸ்நானம் - ஜபம் - பூஜை - பிக்ஷை எல்லாம் நடந்தாக வேண்டும். சிப்பந்திகள் சீக்கிரம் எழுந்தால்தான், நீராடி விட்டு, பூஜை - நைவேத்தியங்களுக்கு ஏற்பாடு செய்ய முடியும்.
பெரியவாள், மூன்று மணிக்கே எழுந்து விட்டார்கள். ஆனால், எல்லாப் பணியாளர்களும் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.
ஆழ்ந்த நித்திரையில் இருப்பவரை எழுப்பக்கூடாது என்பது சாஸ்திரம்.
சிப்பந்திகள்.இப்போது..எழுந்திருக்காவிட்டால், அப்புறம்,
அரக்கப் பறக்க வேலை செய்ய வேண்டியிருக்கும்,
ஆனால், பூஜை நடந்தாக வேண்டுமே !.
பெரியவாள்,..சப்தப்படுத்தாமல், பாராக்காரனை அழைத்தார்கள். பசுங்கன்றின் தும்பை அவிழ்த்து விடும்படி ஜாடை காட்டினார்கள்.
கன்றுக்குட்டி, துள்ளித், துள்ளிக் குதித்து ஓடத் தொடங்கியது. படுத்துக் கொண்டிருந்தவர்கள் படுக்கைகளை மிதித்துக் கொண்டு ஓடிற்று. வழியில் மேளம்.. வைக்கப்பட்டிருந்தது. கன்றுக்குட்டியின் கால்கள் மோதியதும், 'டம்,டம்' என்ற முழக்கம் எழுந்தது.
மேளச் சப்தம் கேட்டவுடன், பூஜைக் கட்டு..நைவேத்தியக் கட்டு சிப்பந்திகள் பரபரவென்று எழுந்தார்கள்.

அவ்வளவுதான் !. கால் மணி நேரத்தில், அவரவர் தத்தமது பணிகளைத் தொடங்கி விட்டார்கள்.
பெரியவாளின் யுக்தியை பாராக்காரனிடமிருந்து, தெரிந்து கொண்டார்கள், அணுக்கத் தொண்டர்கள்.
தூங்குபவர்களை எழுப்பக் கூடாது என்பது சாஸ்திரம். பெரியவாள் யாரையும் எழுப்பவில்லை !
உண்மைதானே !..