ஒரு மனிதன் வீர மிக்க சேனையின் தளபதியாக சீரும் சிறப்பும் கொண்டு பெருமையோடு வாழ்ந்தாலும் அதை விட அவனை என்றும் அமரனாக்கியது அவன் வீரம் இல்லை. அவனது சிவபக்தி. தன்னை ஒரு சிறு தொண்டன் என்று அழைத்துக் கொண்டவர். சிவாலயங்களில் ஒரு தெய்வமாக வணங்கப்படு அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒரு சிறந்த சிவனடியாராக என்றும் நிற்கும் ஒரு மனிதர் சிறுத்தொண்ட நாயனார்.
இவர் மாமாத்திரர் என்பவர்கள் வழிவழியாக போர்க்கலையில் சிறந்து மன்னிடம் படைத் தளபதியாக பணியாற்றி வந்தவர்கள். திருச்செங்காட்டங்குடி என்ற ஊர் தற்போது நாகபட்டினம் மாவட்டத்தில் நாகபட்டினம் வட்டத்தில் அமைந்துள்ளது. திருசெங்காட்டாங்குடியில் அப்பா அம்மா வைத்த பெயர் பரஞ்சோதி. வேதமும் வில்வித்தை களும் கற்றபின் மகேந்திர பல்லவனின் சபையில் அமைச்சராய்,தளபதியாக விளங்கினார். வடக்கே சாளுக்கியர்களை அடக்கி வென்று அவர்கள் தலைநகர் வாதாபியை அழித்து அங்கிருந்து அருமையான பிள்ளையாரை நமக்கு கொண்டு வந்து தந்தவர். இந்த வாதாபி கணபதியை தான் எல்லா சங்கீதக்காரர்களும் முதலில் வாழ்த்தி பாடிவிட்டு கச்சேரியை தொடர்வார்கள். சிறந்த சிவபக்தர். அவர் மனைவி கணவன் சொல் தவறாத பெண் வெண்காட்டுநங்கை. சிறுத்தொண்டர் ஒவ்வொரு நாளும் யாராவது ஒரு சிவனடியாரை தேடிப்பிடித்து அவரை தம் வீட்டுக்கு அழைத்து உபசரித்து அமுதூட்டி அவரை வணங்கி ஆசிபெறுவது வழக்கம். அப்புறம் தான் அவரும் அவர் மனைவியும் உண்பார்கள்.
ஒருநாள் யாருமே கிடைக்கவில்லை. பட்டினி யோடு தேடியபோது கணபதீஸ்வரத்தில் ஒரு சாமியார் இருக்கிறார் என்று கேள்விப்பட்டு அவரை அணுகினார். அவர் ஒரு பைரவ சிவனடியார். காளாமுகர். கபாலம் தரிப்பவர். கண் மூடி தியானம் செய்துகொண்டிருந்த அவரை வணங்கிநார் சிறுத்தொண்டர்.
''சிவனடியாரே, இன்று அடியேன் இல்லத்தில் தாங்கள் காலடி வைத்து எங்களை கௌரவித்து, பாவம் நீக்கி எங்களிடம் பிக்ஷை பெற்று அருளவேண்டும்''
''நீர் யார்? உமது பெயர் என்ன? எங்கிருக்கிறீர்?""
''சுவாமி என்னை சிறுத்தொண்டன் என்பார்கள். எனக்கு சிவனடியார்களை வணங்கி உபசரித்து அமுதூட்டும் பணியில் விருப்பம்''
''நீர் தான் சிறுத்தொண்டரா? உம்மைப் பற்றி கேள்விப்பட்டதுண்டு. சந்தோஷம்'' ஆனால் எனக்கு பிக்ஷை இடுவதில் ஒரு நிபந்தனை இருக்கிறதே, அதை உம்மால் நிறைவேற்ற முடியுமா?
'' ஆஹா, கட்டளையிடுங்கள் குருநாதா''
சிவபெருமான் தனது பக்தர்களை அவ்வப்போது சோதனை செய்வார். அப்படி தான் ஒருநாள் சிவபெருமான் சிறுத்தொண்டரின் அன்பை உலகறியச் செய்ய விரும்பிப் காளாமுக பைரவ வேடம் பூண்டு அவர் வீட்டுக்கு வந்தார். காளாமுகர்கள் சிவனை பைரவராக வணங்கும் பக்தர்கள். நரபலி கொடுப்பவர்கள்.
அந்த காளாமுக பைரவர் நாயனாரை நோக்கி, ''சிறுத்தொண்டரே ,எனக்கு பலநாள் கழித்து இன்று பிக்ஷை எடுக்க உத்தேசம். பல விரதங்கள் அனுஷ்டித்து, கடும் தவங்கள் மேற்கொண்ட எனக்கு நீர் உபச்சாரம் செய்து வரவேற்றீர்கள். எனக்கு பிக்ஷை இட உம்மால் முடியாதோ என்று தோன்றுகிறது?
''முடியும் சுவாமி. சொல்லுங்கள். அவ்வாறே செய்கிறேன்''
''ஐந்து வயதுக்கு குறையாமல், ஒரு தாய்க்கு ஒரு மகனாக அங்கம் பழுதில்லா மைந்தன் ஒருவனை அவன் தாய் பிடித்துக்கொள்ள, தந்தை கத்தியால் அறுத்துக் கறி சமைத்து உணவாக பரிமாறவேண்டும் எனக்கு. உம்மால் முடியுமா? எம்மை திருப்தி படுத்தி பைரவர் ஆசி பெறுவீர்களா?
சிறுத்தொண்டர் சிறிதும் யோசிக்கவில்லை. மற்றவர்களிடமிருந்து பிள்ளை பெற்று கரி சமைக்க வழியில்லை. சிறுத்தொண்டர் மகன் ஐந்து பிராயம் கடநதவன். அங்கம் பழுதில்லாதவன்... ஆஹா இது எப்படிப்பட்ட பாக்யம்.? என்று தோன்றியதால் பதிலளித்தார் சிறுத்தொண்டர்.
''அப்படி என்னால் உணவு படைத்து அளிக்க முடியும் சுவாமி. என்னோடு என் இல்லத்துக்கு வாருங்கள்''
அப்புறம் என்ன? சிறுத்தொண்டர் சிறிதும் மனம் தளராமல் தன் ஒரே மகன் சீராளனை காளாமுகர் அவர் விருப்பப்படியே வெட்டி சமைத்து இலையில் பரிமாறினார். எல்லா உறுப்பும் சரியாகச் சமைக்கப்பட்டனவோ என்று கேட்க, சிறுத்தொண்டர் பையன் தலையைத் தவிர எல்லா உறுப்புகளும் சமைக்கப்பட்டன என்றார்.
''ஓஹோ, அதையும் சமைத்துக்கொண்டு வருக'' என்றார் காளாமுகர். அப்படி நேரலாம் என்று முன் கூட்டியே சிறுத்தொண்டர் வீட்டு தாதி சந்தனத்தாதி என்பவள் சமைத்து வைத்திருந்த தலைக்கறியையும் காளாமுகருக்கு படைக்கப்பட்டது.
''நான் சாப்பிடும்போது என் பக்கத்தில் நீங்களும் உட்கார்ந்து சாப்பிடுங்கள் '' என கட்டளையிட்டார் காளாமுகர். சரி என்று சிறுத்தொண்டர் கண்ணீரை அடக்கிக்கொண்டு வெளிக்காட்டாமல் அருகில் அமர்ந்தார். அப்புறம் காளாமுகர்
சிறுத்தொண்டரே, உம்முடைய வீட்டில் யார் யார் வசிக்கிறீர்கள் ?''
''நான் என் மனைவி, இன்று காலை வரை என் ஒரே மகன் சீராளன்''
ஓ அப்படியா, உங்கள் மகன் சீராளனையும் இங்கே என்னோடு சாப்பிட கூப்பிடுங்கள், ''
''பரமேஸ்வரா, இது என்ன சோதனை, வேறு யாரும் தனது அங்கம் குறைவில்லா ஒரே மகனை உணவாக சமைக்க அளிக்கமாட்டார்களே, சிவனடியாரை எப்படி சந்தோஷப்படுத்துவது என்று என் ஒரே மகனை வெட்டியே சமைத்தோம். இப்போது எப்படி அவனை எங்கிருந்து, எப்படி கூப்பிடுவது. எல்லாம் உன் செயல்'' என்று சரணடைந்து
''சீராளா வா இங்கே '' என்று உரக்க குரல் கொடுத்தார். “
''கூப்பிடுங்கள் அவனை, ஏன் அவன் காதில் கேட்கவில்லையா நீங்கள் அழைத்தது. நான் சாப்பிட காத்திருக்கிறேன். உரக்க அழையுங்கள் அழையுங்கள் அவனை உடனே..'' என்று கூச்சலிட்டார் காளாமுகர்.
அப்போது தான் அங்கே ஒரு அதிசயம் அடைந்தது.
''சீராளா, சீக்கிரம் வா''
சிவபெருமானின் அருளால் சீராளன் வேகமாக கொல்லைப்பக்கத்திலிருந்து உள்ளே ஓடிவந்து அப்பா சிறுத்தொண்டர் முன் நின்றான். ஆச்சர்யத்தில் தன்னை நம்பமுடியாமல் வெண்காட்டு நங்கை உயிர் பெற்ற மகனை வாரி அணைத்தாள். சிறுத்தொண்டர் அவனைக் கட்டி அனைத்து காளாமுகர் அருகே அழைத்து சென்று ஆசி பெற வைக்கலாம் என்று காளா முகர் உட்கார்ந்து இருந்த இடத்துக்கு சென்றபோது சாப்பிடும் மணைப் பலகை முன் வாழை இலையில் பரிமாறப்பட்ட உணவு மட்டுமே இருந்தது. காளாமுகரைக் காணோம். அங்கே அப்போது காணப்பட்டனர் ரிஷப வாகனத்தில் பரமேஸ்வரன் மட்டுமே. காட்சி கொடுத்துச் சிறுத்தொண்டரைத் தம் திருவடியில் சேர்த்துக் கொண்டார். இது தான் சிறுத்தொண்டர் புராணத்தின் சுருக்கம். இதை நான் யாழ்ப்பாண சிவ பக்தர் புலவர் நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் இயற்றிய பாடல் ஒன்றில் அறிந்தேன்.. அந்த பாடல் இது தான்:
பல்குமருத் துவரதிபர் செங்காட்டங் குடிவாழ்
படைத்தலைவ ரமுதளிக்கும் பரஞ்சோதி யார்மெய்ச்
செல்வமிகு சிறுத்தொண்டர் காழி நாடன்
றிருவருள் சேர்ந் தவர்வளருஞ் சீராளன் றன்னை
நல்குதிரு வெண்காட்டு நங்கைசமைத் திடப்பின்
னன்மதிச்சந் தனத்தாதி தலைக்கறியிட் டுதவப்
புல்கவரும் வயிரவர்தா மகிழ்ந்துமக வருளப்
போற்றியவர் சிவனருளே பொருந்தினாரே.