725 views
Skip to first unread message

sivan jaykay

unread,
Jan 28, 2018, 8:52:06 PM1/28/18
to amrith...@googlegroups.com, V Ganapathy
எங்கள் முன்னோர் கதை:

பரசுராம அப்பா அக்ரஹார  குடும்பம் ஒன்று  


எதுவுமே  சாஸ்வதமில்லாதது என்பது தான்  உலகம். மாற்றம் ஒவ்வொரு கணமும் தொடர்ந்து  இருக்கிறது.  இந்த மாற்றம் ஒன்று தான் உலகம் தோன்றியதிலிருந்து இன்று, இக்கணம்  வரையிலும் கூட,  ''மாறாமல் '' நடைபெறுவது.  அதன் விளைவாக  பழசு புதிதாகி அதுவும். பழசாகிவிடுகிறது.  அப்படி காணாமல் போவதால் தான்  நமக்கு பழசு மேல் பாசம் ஏற்பட்டு ஒரு பெருமூச்சு வெளியே வருகிறது.

அக்ரஹாரங்கள் எத்தனையோ இப்படி  மாறிவிட்டன. மறைந்துவிட்டன.  ஒருகாலத்தில்  அமைதியாக, பிராமண சமூகத்தால் நிறைந்து சுறுசுறுப்பாக  இயங்கியவை  இப்போது இல்லை.  மண் வீதிகள்,  எதிரும்  புதிருமாக  வடக்கு தெற்காக  பார்த்த ஒட்டு வீடுகள், வாசல் திண்ணைகள், ஒன்றை ஒன்று  ஒட்டிய வரிசை வரிசையாக  வீடுகள், பின்னால்  ஓடை,  ஆறு, உள்ள புழக்கடை. நீண்ட  அடுக்கு அடுக்கான அறைகள். முதல் கட்டு, ரெண்டாம் கட்டு, மூன்றாம் கட்டு, உக்ராணம், காமிரா அறை, ரேழி,  நடை, என்று பெயர்களில்  நீண்டு கொண்டே போகும்.  நடுவே பெரிய  சூரிய ஒளி படும்  முற்றம். வலிமையான வழ வழ வென்ற  தூண்கள்.  முற்றத்தின் ஒரு பக்கம் பெரிய  ஊஞ்சல். வீசி ஆடுவதற்கு நிறைய  இடம். மேலே மர உத்தரங்கள்  சுவர்களில் விளக்கு வைக்கும் மாடப்பிறைகள்.  மேலே  பேன் (fan ) கிடையாது. காரைச் சுண்ணாம்பு அடித்த சுவர்கள்.  நிலை வாசல்படி  வைத்த கனமான கதவுகள். கதவுகளில் கடவுள் பிம்பங்கள், அருமையான தேக்கு மர  கதவுகள். வேலைப்பாடுகள் நிறைந்தது.. மாடி இல்லாத ஒட்டு வீடுகள், முன்னே  கூரை சார்பு  கொண்ட சில வீடுகள்.

எல்லோரும் அமர்ந்து சந்தோஷமாக விழாக்கள் நடத்த, கல்யாண கூடங்கள் என்று பெரிதாக  இருந்தன.  இப்போது கல்யாண கூடங்கள்  வாடகைக்கு பெரிதாக கட்டப்பட்டவை . அப்போது தெருவையே வளைத்துப் போட்டு  பந்தல் அமைத்து கல்யாணங்கள் நடந்தது.

 இப்போது எங்கே அதெல்லாம்? அக்ரஹார வாசல்கள்  சாணி மெழுகி, பெருக்கி, மழமழ வென்று  பரிசுத்தமாக இருக்கும். வேப்பிலை வாசனை கம்மென்று மணக்கும்.  மரத்தடியில்  கன்றும் பசுவும் நிற்கும்.  வில் வண்டிகள் சில  மரத்தடியில் தரையில் சாய்ந்து  நிற்கும்.  வண்டிக்குள்ளே வைக்கோல் மேல் ஜமுக்காளம் தான்  குஷன். ஆடி அசைந்து தூக்கிக் கொண்டு போகும்போது ஜிலுஜிலுவென்ற காற்றில் தூக்கம் வரும்.  காலைத்தொங்க போட்டுக்கொண்டு ஓரமாக உட்காருபவன் விழாமல் ஒரு கம்பி குறுக்கே. அதை பிடித்துக்கொண்டு பிரயாணம்.  இந்த  சுகமான அனுபவம் எத்தனை பேருக்கு உண்டு?.

ராஜாக்கள் கொடுத்த மான்யங்களில் உருவான  அக்ரஹாரங்கள்  ஒரு தெருவில்லாமல் ஊராகவே இருந்தது. அவை தான் சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்பட்டன. கணபதி அக்ரஹாரம், டபீர் அக்ரஹாரம்  என்று  ஊர்கள்.   பரசுராம அப்பா அக்ரஹாரம்  அப்படித்தான் தஞ்சாவூரில் எங்கள் கொள்ளு, எள்ளு தாத்தாக்கள்  காலத்தில் இருந்தது.
 
 தஞ்சாவூரில் கரந்தை என்று  தற்போது வழங்கும்  கருந்திட்டைக்குடி,  (கருத்தட்டாங்குடி என்று  வழக்கமாகச்  சொல்லும்  பெயர் )  யில் அப்போதெல்லாம்  கம்மாளர்கள்  எனும் நகை செய்யும் பொற் கொல்லர்கள், குடும்பத்தொழிலாளர்கள்,  அநேகர்  அங்கு  வசித்தனர்  என்பதால்  ''தட்டான் குடி''  பேர்  வழக்கத்தில்  வந்தது.

 சிவாஜி  ராஜா அரண்மனையில்  வேலை  பெற்ற  பஞ்சு  அய்யர்  கருத்தட்டான்குடியில்   பரசுராம  அப்பா  அக்ரஹாரத்தில்  தனது  உறவினரோடு  வசித்தார்.  அங்கு  பல காலம்  பரம்பரையாக  சங்கீத  வித்வான்  கனம் கணபதி சாஸ்திரிகள்,  அவர் குமாரன்  தோடி  சீதா ராமய்யர் ஆகியோர்  வசித்தனர்.  பஞ்சு  அய்யர்  தம்பி நாகு  பாரதி, திருவையாற்றிலே கல்யாணம் செய்துகொண்டு கண்டியூரில்  அப்பா  ராமஸ்வாமி பாரதி  ஆரம்பித்த  சத்துமா  கைங்கர்யம் தொடர்ந்து நடத்தி வந்தார்.

நாகு  பாரதியின்  சத்துமா  கைங்கர்யம்,   காரைக்குடியிலிருந்து  வந்திருந்த நாகுவின்  நண்பர், பெரிய  சுப்பையர், (நகரத்தார்களுக்கு  ப்ரோஹிதர்) காரைக்குடியை சேர்ந்த  ஒரு  கன   தனவான்,  சூரா. மா. தவக்கை. ராமன்  செட்டியாருடன் வந்திருந்தார்.  (நகரத்தார்கள் பெயர்கள் இப்படித்தான்  நிறைய  முன் எழுத்துக்களோடு  சேர்ந்து  அவர்கள் வம்ச, குடும்ப அடையாளம் காட்டும்.  இன்றும் செட்டிநாடு, காரைக்குடி, தேவகோட்டையில்  பல பெயர்களை இப்படி படித்து ரசித்திருக்கிறேன்)

இந்த  இருவருக்குமே  நாகு பாரதியின்  சத்துமா  கைங்கர்யம்  மகிழ்ச்சியைத்  தந்தது.

 
 இதே போல்  ராமேஸ்வரத்துக்கு அடுத்த  சேதுக்கரையில்  மணலில்  ஒரு  சத்திரம்  கட்டி, அங்கே  அற்புதமாக  நெல்லைப்  பொரித்து, இடித்து, மாவாக்கி நித்யம்  தயிரில் கலக்கி,  சேதுவில்  ஸ்நானம்  பண்ணித்  திரும்பும் பக்தர்களுக்கு  பிராமணர்களை வைத்துக்கொண்டு விநியோகம்  செய்தனர்.  செட்டியார்  ஏராளமான  முதல் போட்டு  இதை நிறுவி  பல  வருஷங்கள்  இந்த  தொண்டு  நடந்து வந்தது.  

 ராமஸ்வாமி  பாரதி  குடும்பம்  பெருகியது. பிள்ளைகள்  பெண்கள் அவர்கள்  சந்ததிகள்   எல்லாம்  தத்தம்  குடும்பத்தில் எங்கெங்கோ  பிரிந்து  சென்று  வாழ்ந்தனர்.  காலம்  சென்று கொண்டே  இருக்கிறதே.  81 வயதில் புத்திர பௌத்ராதிகள்  சதாபிஷேகம் செய்து  வைத்தார்கள்.   நோய்  நொடியின்றி  தனது  83வது வயதில் திட  சரீரியாய் (சித்திரை மாதம்  சப்தஸ் தானம் மகோற்சவம்  கண்டு களித்துவிட்டு  வைகாசியில்   ஸ்ரீ  ராமனிடம்  கலந்தார்.
 
அவர்  சகோதரர்  நாகு  பாரதிகளும்  விடாது சத்துமா கைங்கர்யம் நடத்தி வந்து  தனது 75 வது வயதில்  மறைந்தார்.  அவர்  மகன் பரசுராம பாரதி.

சுமார்  முன்னூறு  வருஷங்களுக்கு முன்பு  தஞ்சாவூர் மராட்டிய சிவாஜி சரபோஜி  வம்சத்தால்  ஆளப்பட்டு  வந்தது அல்லவா?

அப்போதைய  சரபோஜி ராஜா  மிகுந்த பக்திமான்.  கல்விமான். ஜனங்களிடம் விஸ்வாசம் கொண்டவர். சங்கீதத்தில் கொள்ளைப்  பிரியம்.  நிறைய  வித்வான்கள் அவர்மேல்  கீர்த்தனங்களை இயற்றி  பாடி பரிசு பெற்றிருக்கிறார்கள். நிறைய  சாஸ்திரங்கள்,  சம்ப்ரதாயங்கள்,  பல மொழிகளில் உள்ள  இலக்கியங்கள்,  தத்துவங்கள் , சித்தாந்தங்கள்,  சித்திரங்கள், சகலமும்  சேகரித்து  வாழ்நாளில் பெரும்பகுதியை இதில்  செலுத்தி  அரும்பாடு பட்டு,  ஒரு கட்டிடத்தில்  பாதுகாத்து  அதற்கு  சரஸ்வதி மஹால்  என்ற  பெயரும் கொடுத்தார். அவருக்கு  ஒரு  ஜெர்மன்  பாதிரியார்  நட்புடன்  இருந்ததால்,  சில அரும் புத்தகங்கள்  இங்கிருந்து  ஜெர்மனி  சென்றதாகவும்  சொல்லப்படுகிறது.   ராஜா  காசி  ராமேஸ்வர  யாத்திரை எல்லாம்  சென்றவர்.  சாலை  சத்திரங்கள்  அமைத்தவர். அனேக  கிராமங்களை  மான்யமாகவும் தானமாகவும் கொடுத்தவர்.  நாகூர்  தர்காவுக்கு  500 வேலி  நிலம்  சர்வ மான்யமாக  கொடுத்தவர். வட  தேசத்திலிருந்தெல்லாம்,  குஜராத், பூனா, சிந்தி,கடப்பை, யிலிருந்தெல்லாம் பசுக்கள்  தருவித்து,  தட்டிமால்  (பசுக்கோட்டம்) அமைத்தவர். கோபூஜை,  கோதர்சனம்  செய்யாமல்  ஒரு நாளும்  உண்டதில்லை.   அவர்  குமரர்  சிவாஜி.

 அவர்  அரண்மனையில்  தான்   குதிரை  வைத்தியநாதய்யர்  பணி  புரிந்து வந்தார். ...
இன்னும் மேலே சொல்கிறேன்...

sivan jaykay

unread,
Jan 28, 2018, 8:52:06 PM1/28/18
to amrith...@googlegroups.com, V Ganapathy

                                                              மதுராந்தகத்தில் மதுரமான  சுக்கு மல்லி காப்பி.


மதுராந்தகம் என்றவுடனே மறக்கமுடியாத  துடிதுடிப்பான, சிரித்த முகம்.  அந்த சிறு உடலில் தான் எத்தனை சுருருப்பு.  வயதை மிஞ்சின உற்சாகம் எப்போதும் எனக்கு ஒரு  படிப்பினை.  இன்னொரு கி.வா.ஜ. என எல்லோரும் புகழும் அவர் தான் கைங்கர்ய சீமான், திருமால் கவிச் செல்வர்  உ.வே. ஸ்ரீ  ரகுவீர பட்டாச்சார்யார்.

சினிமாப்பாட்டும்  சீரிய  திவ்ய ப்ரபந்தமும் , திகட்டாத சமஸ்க்ரித ஸ்லோகமும் ஒன்றாய்  இணைக்கும் கைவந்த கலை அவருக்கே உரித்தானது. அவர்  கடுக்களூர் திருமால் அடியார் அருள் மன்ற சார்பில்  47வருஷ  வைபவத்தை ஸ்ரீ ராமானுஜரின்  ஆயிரமாவது ஆண்டுவிழாவாக  கொண்டாடி  பொருத்தமான  இடமாக  1883ல் கட்டிய  ஹிந்து கார்னேஷன் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில்  26.1.18 அன்று சிறப்பாக  ஏற்பாடு செயதிருந்தார். 

அடியேனை சிறு குழந்தைகள்  திருப்பாவை ஓதல் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்க அழைத்தது எனது பாக்யம் என்று கருதினேன். என் எதிரே    நூற்றுக்கு குறையாத  எல்லாமே ஆண்டாள் வயது   கிராமத்து  சிறுமிகள் சிறுவர்கள்.    கணீரென்று திருப்பாவை முப்பதும் தப்பாமல்  பாதி ஒரு பிரிவு, மீதி  இன்னொரு  பிரிவாக  ஓதினது ஆச்சர்யமாக இருந்தது.  எல்லாம் பட்டாச்சாரியார் ட்ரெயினிங்.

பழம்பெரும் வெள்ளைக்கார கால  பள்ளிக்கூட கட்டிடம். பெரிய பெரிய  நிழல் தரும் மரங்கள் அடியில் தரையில் ஜமுக்காளம் விரித்து குழந்தைகள். எதிரே  சிறு   மேடையில் அவர்களை  ரசித்தவாறு நான்.  குழந்தைகளுக்கும் வந்திருந்த பெரியவர்களுக்கும்  நிறைய  ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் சேவா சங்க  புத்தகங்கள் வழங்கினேன்.  மனது நிறைவோடு  பட்டாச்சாரியார் வீட்டில் பசிக்கு  4 இட்டலி சாப்பிட்டு விட்டு சென்னை திரும்பினோம். பட்டாச்சாரியார்  சுறுசுறுப்பின்  ரகசியம் அவர் மனைவியார் மூலம் தெரிந்துகொண்டேன்.  சுக்கு மல்லி காப்பி  பலவருஷங்களாக அந்த குடும்பம் சாப்பிட்டு வருவதால் காப்பி  டீ  வாசனையில் அங்கே கிடையாது. எனக்கு அந்த  சு.ம. காப்பி ரொம்ப பிடித்தது.  A  short video clipping sent by someone is attached https://youtu.be/gl-VDDRJVKg







sivan jaykay

unread,
Jan 29, 2018, 7:43:53 PM1/29/18
to amrith...@googlegroups.com, V Ganapathy
                                     சூரியா, இதோ என்  நமஸ்காரம்  -  1      J.K. SIVAN 

ராமன்  மனிதனாக  அவதரித்தான். பராக்கிரமம் மிகுந்த  அரக்கன்   ராவணனை வதம் செய்ய  முனைந்தான்.  அந்த நேரத்தில் அகஸ்திய மகரிஷி ராமனை சந்திக்கிறார். ராமனுக்கு  சூரியனின் அனுக்ரஹம் கிடைக்க  மந்திரம் உபதேசிக்கிறார்.  விஞ்ஞான காலத்தில் நாம் வாழ்கிறோம். சூரிய ஒளியின் மஹத்வம்  நமக்கு தெரியும். அதுவே  ஜீவாதார  சக்தி என்று புரியும்.  அதை உணர்வதற்காகவாவது இதை படிப்போம்.  அகஸ்தியர் கூறும் மந்திரத்தின்  பொருள் அறிவோம்.  ராமன்  அதால்  பயன் பெற்றதைப் போல் நாமும் தினமும் இதை  உச்சரித்து பயனடைய  ஒரு  காசும் செலவில்லை.  

இந்த  மந்திரம் பற்றிய  சில விவரங்கள்:   அகஸ்தியர் இதற்கு ரிஷி. ஸ்வரம்: அனுஷ்டுப் (சந்தஸ் ) தெய்வம்: சூரியநாராயணன் ஆதித்யனின் ஹ்ருதயத்தில் இருப்பவன். அவனே ராமன் அவனே  நாராயணன் அவனே எல்லாம். பரம்பொருள்.

atha dyanam:
jayathu jayathu soorya saptha lokaika deepam
kirana samitha papam klesa dukhasya nasam
aruna nigama gamyam chadhi adithya moorthim
sakala bhuvana vandhyam, bhaskaram tham namami

ஜயது ஜயது ஸூர்யம் சப்த லோகைக தீபம் |
கிரண ஷமிதா பாபக்லேஷ துக்கசஸ்ய நாஸ
ம் ||
அருண கிரண கம்யம் ஆதிம் ஆதித்ய மூர்த்திம் |
சகல புவன வந்த்யம் பாஸ்கரம் தம் நமாமி ||

 ஸ்ரீ ஸூர்ய பகவானே, உனக்கு நமஸ்காரம். ஏழு உலகங்களுக்கும் (பூலோகம், புவர் லோகம், ஸ்வர் லோகம், மஹர லோகம், ஜனர் லோகம், தபோ லோகம், ஸத்ய லோகம்) நீ ஒளியேற்றும் விளக்காக இருக்கிறாய். உன்னிடமிருந்து பரவும் ஒளிக்கதிர்கள் துக்கங்களையும் கவலைகளையும் போக்கும். உனது கிரணங்கள் எம்மை ஆட்கொள்கின்றன. நீயே முதல்வன். முதன்மையானவன். ஸகல உலகங்களும் உனை வணங்கும். ஒளி வீசுபவனே உனக்கு நமஸ்காரம்.

''சூரிய பகவானே.  உனக்கு ஜெயம்,  ஜெயம்,  ஜெயம்.  இந்த  ஏழுலகின் ஒளி  விளக்கு. தீபம்  நீயே. உன்னுடைய  கதிர்கள் படும் இடம் எல்லாம்  சகல பாபங்களும்  தொலையும். வலி தீரும். துயரம் துன்பம் எல்லாமே  காணாமல் போகும், வேதங்கள் உன்னை அடைய வழிகாட்டும். இந்த பிரபஞ்சத்திற்கு நீ ஒருவனே  தேவன் சூரியநாராயணன். சர்வலோகமும் உன்னை வழிபடுகிறதே  ஆதித்ய.  சூர்ய நாராயணா. என்னுடைய  நமஸ்காரங்களையும்  அவற்றோடு  சேர்த்து  உன்னை  சாஷ்டாங்கமாக  வணங்குகிறேன். சூரிய நமஸ்காரம்.  எனது நாள் உன்னருளால் இன்று நன்றாக  துவங்கட்டும்.  

ततो युद्धपरिश्रान्तं समरे चिन्तया स्थितम्। 
रावणं चाग्रतो दृष्ट्वा युद्धाय समुपस्थितम्॥

Tato yuddhapariśrāntaṃ samare chintayā sthitam
 rāvaṇaṃ jāgrato dṛṣṭvā yuddhāya samupasthitam

ததோ யுத்த பரிஷ்ராந்தம் ஸமரே சிந்த்தயா ஸ்திதம் |
ராவணம் ச்சாக்ரதோ த்ருஷ்ட்வா யுத்தாய ஸமுபஸ்த்திதம் || 1 ||

२. दैवतैश्च समागम्य द्रष्टुमभ्यागतो रणम्। 
उपागम्याब्रवीद्राममगस्त्यो भगवान् ऋषिः॥  

2. Daivataiśca samāgamya draṣṭumabhyāgato raṇam
upāgamyābravīdrāmamagastyo bhagavān ṛṣiḥ

தெய்வ தைஷ்ச ஸமாகம்ய த்ருஷ்டுமப்யாக தோரணம் |
உபாகம்யா ப்ரவீத் ராமம் அகஸ்த்யோ பகவான் ருஷி: || 2 ||

ராவணசுர யுத்தம் முடிவுறும் தருவாயில், ராமனுக்கு சோர்வு ஏற்பட்டது. அந்த சமயத்தில், ராவணாசுரன் வல்லமை படைத்தவனாக தென்பட்டான்.  இந்த மகத்தான  யுத்தத்துக்கு.   ராம ராவண  யுத்தத்திற்கு எல்லா தேவதைகளும்  சாட்சியாக வந்திருக்கிறார்கள்.  ராமனின் பராக்கிரமம் காண வந்துள்ளார்கள். இதோ அகஸ்தியரும்  வந்திருக்கிறாரே. 
 போர்க்களத்தின் வாயிலிலே, அகஸ்த்ய முனிவர், ராமபிரானை சந்தித்தார். அவரது சோர்ந்த நிலையைக் கண்டு பின்வருமாறு கூறினார்.  ஒவ்வொன்றாக எல்லாவற்றையும் இழந்து கொண்டே வந்த  ராவணன்  கவலையோடு களைப்போடு  நிற்கிறான் . ராமனின் எதிரே  வாழ்வா சாவா  போராட்டத்தில்  தயாராக உள்ளான்

राम राम महाबाहो शृणु गुह्यं सनातनम् ।
येन सर्वानरीन् वत्स समरे विजयिष्यसि ॥ 3 ॥
  
R
ama rama maha baho srunu guhyam sanathanam
yena sarvaanareen vatsa samare vijayishyasi

''அப்பா  என் மகனே  ராமா,  கண்ணே,   இதைக் கேளடா. எது பரம ரஹஸ்யமோ, சாஸ்வதமோ, அதைச்  சொல்கிறேன், உச்சரிப்பாயாக.  உனக்கு  இதனால் வெற்றி நிச்சயம்''  என்கிறார்  அகஸ்தியர்  வாத்சல்யத்தோடு.  ராமனிடம்  யாருக்கு தான்  வாத்சல்யம் இல்லை.  

आदित्य हृदयं पुण्यं सर्वशत्रु विनाशनम् ।
जयावहं जपेन्नित्यम् अक्षय्यं परमं शिवम् ॥ 4 ॥
 

adithya hrudayam punyam sarva sathru vinasanam
jayavaham japen nithyam akshayyam paramam shubham

இந்த  ஸ்லோகம் எல்லோரும் அறிந்தது.  பரம  சந்தோஷத்தை அளிக்கும் மந்திரம்.  இதற்கு  தான்  ஆதித்ய ஹ்ருதயத்தில் முக்ய ஸ்தானம்.  இந்த  ஆதித்யனின் ஹ்ருதயத்தில் உள்ள சூர்யநாராயணனை எவர்  மனம் கனிந்து வேண்டினாலும் அவர்களைப் போல் வெற்றிசாலி வேறெவரும் இல்லை.  சாஸ்வதமான காரண்டீயான  உண்மை இது.

सर्वमङ्गल माङ्गल्यं सर्व पाप प्रणाशनम् ।
चिन्ताशोक प्रशमनम् आयुर्वर्धन मुत्तमम् ॥ 5 ॥

sarva mangala mangalyam sarva papa pranasanam
chinthasoka prasamanam ayur vardhanamuthamam

இந்த  ஆதித்ய  ஹ்ருதயம் என்கிற ஸ்லோகமானது   எல்லாவிதமான  'கொடிய  பாபங்களையும்  அழித்திடும். துக்கம், துயரம், துன்பம் எல்லாவற்றிற்கும்  கைகண்ட நிவாரணி. நமது மருந்துகள்  உப விளைவுகள்(SIDE  EFFECTS )  ஏற்படுத்தும். தலைவலிக்கு மருந்து சாப்பிட்டால்  வயிற்று வலியை கிளப்பும்.  முதுகு வலிக்கு மருந்து விழுங்கினால்  உடலெல்லாம் சொறி போல் அரிக்கும். புண்ணாகும்.  சிலருக்கு மார்பில் வலி  ஆரம்பிக்கும். விஷம் அதெல்லாம்.  இந்த மருந்து அப்படியல்ல. நூறு ஆண்டுகளையும் தருவது.   ஒரு போனஸ்.

रश्मिमन्तं समुद्यन्तं देवासुर नमस्कृतम् ।
पूजयस्व विवस्वन्तं भास्करं भुवनेश्वरम् ॥ 6 ॥
 

rasmi mantham samudhyantham devasura namaskrutham
poojayaswa vivaswantham bhaskaram bhuvaneshwaram

' இதோ பார்  ராமா, சூரியனை பிரார்த்தனை செய்துகொள். அவன் தான் உலகமெல்லாம்  பரவி நிற்கும் சூரிய காந்தி, ஒளிக்கதிரின், சொந்தக்காரன். கீழேயிருந்து, கடலோ மலையோ, நிலமோ  மேலே  மெதுவாக  தினமும்  எழுகிறான். அவனை  தேவர்கள் அசுரர்கள் எவருமே  அன்றாடம் வணங்குகிறார்கள். பிரபஞ்சமே  தொழும் தேவன் அந்த சூர்யநாராயணன். ஆதித்யன்.

सर्वदेवात्मको ह्येष तेजस्वी रश्मिभावनः ।
एष देवासुर गणान् लोकान् पाति गभस्तिभिः ॥ 7 ॥

sarva devathmako hyesha tejaswai rasmi bhavana
esha devasura ganan lokan pathi gabasthibhi

இந்த சூரியனை ஏதோ  ஒருவன் என்று நினைத்து விடாதே.  அவனுள் தான்  முப்பது முக்கோடி தேவர்களும் ஐக்கியம். ஒளிக்கு ஒளி  கொடுப்பவன். இந்த  பிரபஞ்சத்தை தனது ஒளிக்கதிர்களால்  வியாபித்து  ஆள்பவன்.  தேவர்கள் அசுரர்கள் அனைவருக்கும்  உலகிற்கும் அவனே  ஜீவாதாரமானவன்.  

एष ब्रह्मा च विष्णुश्च शिवः स्कन्दः प्रजापतिः ।
महेन्द्रो धनदः कालो यमः सोमो ह्यपां पतिः ॥ 8 ॥
 

esha brahma cha vishnuscha shiva skanda prajapathi
mahendro dhandha kalo yama somo hyapam pathi

ஆதித்ய நாராயணன்  யார்?  அவனே  பிரம்மா. அவனே  விஷ்ணு.  அவனே  சிவன்.  அவனே  ஸ்கந்தன். அவன் தான் உலக மனித உயிர்களுக்கு  மூல காரணன்.  தேவராஜன். அவனையே  குபேரன்  என்கிறோம். சகல சம்பத்துக்கும் அதிபதி.   அவன்  காலன்.  யமன்.  வாழ்விக்கறவன் போலவே  சம்ஹரிக்கிறவனும் கூட.  குளிர்ந்த நிலவு, சந்திரனும் அவனே.  தாரையாக பொழியும்  மழைக்கதிபதி வருணனும் அவனே.

पितरो वसवः साध्या ह्यश्विनौ मरुतो मनुः ।
वायुर्वह्निः प्रजाप्राणः ऋतुकर्ता प्रभाकरः ॥ 9 ॥
 

pitharo vasava sadhya hyaswinou marutho manu
vayur vahni praja prana ruthu hartha prabhakara

ஆதித்யன் தான்  பித்ரு தேவன். அஷ்ட வசுக்களும் அவன் பிம்பங்களே. சாத்யாவும் அவனே. அஸ்வினி தேவதைகளும் அவன் ஸ்வரூபமே. வாயுவானவனும்  அவனே. ஆதித்யன்  அக்னி தேவனும் கூட.  சகல ஜீவராசிகளின் உயிர் அவன். ஆத்மாவும் அவன் தானே.  காலங்களை உருவாக்குகிறவன் அவன் தான்.  பிரகாசிப்பவன் அவனே.  அவனைப்  பற்றி போற்றி பாடுவது தான்  ஆதித்ய ஹ்ருதயம்.  மேற்கொண்டு  போற்றுவோம்......

.. (தொடரும். மீதி நாளைக்கு  )




sivan jaykay

unread,
Jan 30, 2018, 7:38:34 PM1/30/18
to amrith...@googlegroups.com, V Ganapathy
                                                                   பழைய  டயரியில்  ஒரு  ரத்தக்கறை 


நாலாவது குண்டு யார் சுட்டது என்று  எழுபது வருஷங்களுக்கு அப்புறம் தேடுகிறார்கள்.  இந்த நாள்(ஜனவரி 30) வந்தால் அவரை  நினைக்காம  இருக்க முடியலியே. காரணம்.   யாரும்  மறக்கக்கூடாத விஷயம்.  மறக்கமுடியாத மனிதர்.  
                                                                       
அப்போது எனக்கு  9 வயசு.   நன்றாக நினைவிருக்கிறது.  ஆல் இந்தியா ரேடியோவில்  வயலின்  வீணை  எல்லாம்  ''டொய்ங்'' ''டொய்ங் ''.  நாளெல்லாம் அழுதது. பாட்டு எல்லாம்  பாடுமே  ஏன்  அழுகிறது?   என்று  கேட்டேன்.  யாரும்  என்னை  மதித்து பதில் சொல்லலை.  அதற்கு மேல் புரியவில்லை.  தெருவெல்லாம்  கூடிக்  கூடி   மொட்டு  மொட்டாக கும்பல்.  என்ன பேசினார்கள்  என்று  தெரியாத  வயது. கோடம்பாக்கத்தில்  இருந்தேன். அன்று என்ன நடந்தது என்று சொல்கிறேன்.

+++

 ஜனவரி 30, 1948   வெளிக்கிழமை. 
காலை  3.30 மணி --       வழக்கமாக  அவருக்கு  பொழுது விடியும் நேரம். பிரிவினையால்  நாடு துண்டாடப்பட்டு லட்சோப லக்ஷம் மக்கள்  வீடு , வாசல், சுற்றம், உறவு, சுகம்  அனைத்து   இழந்து  பரதேசிகளாக ஒரே   இரவில் அனாதிகளாக,  மதவெறி, இனவெறி,கொலை வெறி அவர்களைச்  சூறையாட,  ரத்தம்  அநேக  இடங்களில்  ஆறாக ஓடியது.  டில்லி பேருக்குத் தான் தலைநகர்.  அதற்கு தலை சுற்றியது.  அல்புகர்க் தெருவில்  பிர்லா மாளிகையின்  முதல் மாடியில் நிசப்தம்.  

நாடு சுதந்திரமடைந்து விட்டதாம்!  கல்கத்தாவின்  அமளியை  ஒருவாறாக  சமாதானப் படுத்திவிட்டு--  முழுமையும் அல்ல--, கொஞ்சம்.    செப்டம்பர் மாதம் 10 தேதி  வாக்கில்,  அவர்  டில்லி  வந்து விட்டார்.  இங்கு அவர் வரவால் நிச்சயம் கட்டாயம் கொஞ்சம்  ரத்த  சேதம்  குறையும்.  ஆத்திரம்  அடங்கும், அமைதி ஏற்பட்டு, காற்றில்  கொஞ்சம்  அனல் குறைந்து  வீசும்.   இந்த நான்கு  மாதத்திலேயே   பொதுவாக இருந்த  மக்கள் கோபம்  கொஞ்சம்  அடங்கியது.  வெறி சற்று பின் வாங்கியது.  எல்லாம் அந்த மனிதரின்  அலாதி  திறமை.  78 வயதில்  அன்பு தான்  அவருக்கு பலமாக கை கொடுத்தது.  

''அமைதி  நீங்கள் காக்கவில்லை என்றால்  என் பிராணனை  விடுகிறேன். உங்கள்  பொறுமைக்காக, விட்டுக் கொடுக்கும் குணத்துக்காக  நான்  பட்டினி  உபவாசம்  கிடக்கிறேன்.''  

உபவாசம்  பயனளித்தது.  ஆச்சு.   12  நாள்  ஆகிவிட்டது அவர் உண்ணாவிரதம் முடிந்து. ''ஒற்றுமை , ஒற்றுமை,   அனைவரும்  ஒற்றுமையாக  இருங்கள்.  கஷ்டங்களை  எதிர்கொள்வோம்.  காலம்  மாறும்.  நிச்சயம் எதிர்காலம்  இந்த  சுதந்திர நாட்டில்  நமக்கு இன்பத்தைத் தரும்''  என்ன தான்  அவர்  கத்தினாலும்,  சில  காதுகளில்  ஏறவில்லையே. என்ன செய்ய?   அவர்கள்  இழந்த, பணம், சொத்து, குடும்ப  நாசம், பொறுமையாகவா  அவர்  பேச்சைக் கேட்க வைக்கும்?  ஒரு சிலர் அவரையே  கொல்ல முயற்சி செய்தனர்.  இவரால்  தானே  இவ்வளவும்.  எதிரிக்கும்  அன்பு காட்டும், தவறு செய்பவனையும் சகோதரனாக அணைக்கும்  இவர்  தேவையில்லை''  என்றனர் சிலர்.   தினமும் சாயந்திரம்  அந்த மாளிகையின்  வெட்ட வெளியில்  ஒரு  பிரார்த்தனைக் கூட்டத்தில்  அவர்  உபதேசம் செய்வார்.  அமைதி காக்க  வேண்டுவார்.  இந்து  முஸ்லிம் இருவரும்  இரு கண்கள்,  ஒரே  உயிர் என்றெல்லாம்  எடுத்து சொல்வார்.  மக்களை  ஒரே  நாளில் அமைதியுறச் செய்ய இயலுமா?  காலம்  அல்லவோ  உதவும்!

அன்று  காலை  வழக்கம்  போல்  மரப் பலகை படுக்கையிலிருந்து எழுந்தார். மற்றோரை  எழுப்பினார். யார் அவர்கள்?   உதவியாளர்  பிரிஜ் கிருஷ்ண சண்டிவாலா, பேத்திகளான  மனு, அபா.  எப்போதும்உடனிருக்கும்  வைத்தியர் டாக்டர்  சுஷீலா நய்யார் அன்று புதிதாக  உருவான  பாகிஸ்தானில்   வேலையாகச்  சென்றுவிட்டார் .  

முதியவர்  வேப்பங்குச்சியால்  பல் விளக்கினார்.  அது தான்  டூத் பிரஷ் அவருக்கு எப்போதும்.  எத்தனையோ கோடி இந்தியர்களுக்கும் இன்றும் அது தானே.  

காலை  மணி  3.45.        --        முதல் மாடி  வெராந்தாவில்  குளிர் உடலைத் துளைக்க, வழக்கமான  பிரார்த்தனை.  எப்போதும்  டாக்டர்  சுஷிலா  தான்  கீதை ஸ்லோகங்கள்  வாசிப்பார்.  அவரில்லாததால்  மனு.  அபா  இன்னும்  தூக்கத்திலேயே . கிழவரால்  இதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.  எங்கே  அவள்,  என்னை விட்டுப்  பிரிய எண்ணமோ?  எனக்கு விருப்பமில்லாத செயல்கள் எங்கும்  நிறைய இப்போதெல்லாம் நடக்கிறதே.  ''ஹே   ராமா,   என்னை  சீக்கிரமே  கொண்டு போய் விடு. வெகு காலம்  இதையெல்லாம் இருந்து பார்க்க  வைக்காதே. என் கட்டுக்கு மீறி  போகிறதே.''  

''தாத்தா,  இன்று  என்ன  பிரார்த்தனை  படிக்கட்டும்?  --  மனு .

''உனக்கு தெரியுமே, அந்த  குஜராத்தி  பிரார்த்தனைப் பாட்டையே  படி.பாடு''  

அந்த  பாட்டு  சொன்ன  பொருள்  கிட்டத் தட்ட '' ஒ மனிதா,  களைத்தோ,  இளைத்தோ  போனாலும், தொய்யாதெ,  விடாதே, தனி மனிதனானாலும்  எதிர்கொள்.  மனதில்  பலம் கொள். கைக்கு அது தானாகவே கிடைக்கட்டும்.  தொடர்ந்து முயன்று கொண்டே  இரு!" ( இது  என்ன பாட்டு  என்று  தேடி  பிறகு சொல்கிறேன்- சிவன்)

பிரார்த்தனை  முடிந்தது.  அபா  எழுந்து பிரார்த்தனையில் கலந்து கொண்டாச்சு.  இருவர்  தோளிலும்   கைத்தாங்கலாக  நடந்து தனது   அறைக்கு திரும்பினார்  பெரியவர். மனு அவரது குளிரில் உறைந்திருந்தகால்கள் மேல்  கம்பளி  சுற்றினாள் . வெளியே கும்மிருட்டு.  இன்னும்  சூரிய உதயமில்லை.   காரிருளும்  பனியும், உறைய வைக்கும்  டில்லிக்கே உரித்தான  பனிப்படலம். கிழவர்  தன்   அன்றாட வேலையைத் துவங்கிவிட்டார்.  

காங்கிரஸ் எப்படி இயங்க வேண்டும் (??) என்று  முதல் நாள்  இரவில்  தான்  எழுதிய சட்ட  திட்டம்  அவரது  பார்வையில் மெருகு பெற்றுக்கொண்டிருந்தது. காங்கிரசின்  செயல்பாடு எப்படி  இருக்கவேண்டும் என்றுஅவர்  எழுதியது  தான்  அவர்  விட்டுச் சென்ற  அவரது  உயில்  எனலாம்.  

காலை  4.45 மணி.   --    ஒரு  குவளை எலுமிச்சம்பழ  சாறு, தேனுடன் வெந்நீரில்  கலந்து  பருகினார்.

காலை   5.45 மணி.  --    ஒரு  சிறு  டம்பளர்  ஆரஞ்சு பழ  சாறு.   இதெல்லாம்  அவருக்கு  ஏன்   தேவை என்றால்  தொடர்ந்து  உண்ணாவிரதம்  இருந்து  அவர்  உடல்  கலகலத்து விட்டது.  சக்தி  இல்லை.  விரைவில் உணர்வு இழக்க  தொடங்கியது. மயக்கம்  லேசாக வருகிறதே.  தலை  கிறு கிறு கிறது.   தூக்கமாகிவிட்டது.  அரை மணி நேரம்  நடை  பழகினார்.  காலுக்கு சக்தி வேண்டுமே.  பொழுது ஒரு நிமிஷம் கூட  வீணாக்காமல்  உழைக்கவேண்டும்? யாருக்கு,  தனக்கு  பணம்  சேர்க்கவா?  (அது மற்றவர்களை சேர்ந்தது)  

''எங்கே அந்த  கடிதங்கள்?  சீக்கிரம் கொண்டுவா? நேற்று அந்த  கிஷோரிலால் மஷ்ருவாலாவுக்கு பதில்  எழுதி  சீக்கிரமே  நான்  குஜராத் வருவேன்  அதற்குள்  குஜராத்தில்  சேவா கிராமத்தில்  செய்யவேண்டியதை விளக்கினேனே? ''

அந்த கடிதம்  எங்கோ  ஞாபக மறதியாக  மனு வைத்து விட்டாள் . விடுவாரா  கிழவர்.  தேடிக்கண்டுபிடித்து உடனே தபாலில் அனுப்பு''

தாத்தா,  நாம்ப எல்லோரும்  பிப்ரவரி  2 வாக்கில்  சேவா கிராமம்  போகிறோம்  இல்லையா?''

''மனு,  நாளைக்கு  என்ன நடக்கும்  என்று  யாருக்கம்மா தெரியும்?'' எல்லாமே   கொஞ்சம்  தெளிவானால்  இன்று  சாயந்திரம்  பிரார்த்தனைக் கூட்டத்தில்  நாம் இங்கிருந்து செல்வதைப் பற்றி  அறிவிக்கிறேனே.  ரேடியோவில் ராத்திரியே தெரியப் படுத்தலாம்.''"

உண்ணா விரதங்கள் அவரை  வாட்டி எடுத்தன.  சில காலமாகவே  இருமல்.  அதைச் சமனப்படுத்த பனை வெல்லம், இருமல் மாத்திரை, லவங்கப்பொடி  எல்லாம் எடுத்துக் கொண்டார்.    அடடே!  என்ன இது?   லவங்கப் பொடி தீர்ந்து விட்டதே.  தினமும் காலையில்  சற்று நேரம் அறைக்குள்ளேயே  நடப்பதில் அவருக்கு  உதவி செய்யாமல்,  உடனே லவங்கத்தைப்  பொடி  பண்ண மனு தயாரானாள். பொடி  பண்ணிவிட்டு நொடியில்  வருகிறேன்  என்று  குரல் கொடுத்தாள் .   ''ராத்திரி உங்களுக்கு தேவைப்படுமே.''

''ராத்திரி  பத்தி  இப்போ என்ன கவலை? இருப்பேனோ மாட்டேனோ? அப்போ  பார்த்துக்கலாமே!''

அவருக்கு  மேற்கத்திய  மருந்துகள்  பிடிக்காது.  கிட்டேயே  வரக்கூடாது. பென்சிலின் இருமல்  மாத்திரை  கொடுக்கும்போது கூட  அவளிடம் சொல்வார்.    ''பைத்தியமே, என்  ராமன் பெயரைக் காட்டிலுமா  இது சக்தி  வாய்ந்தது.''

காலை  7 மணி   -  ராஜன் பாபு  வருவார்.  அவருடன்  நேருவும் சேர்ந்துகொண்டு   இருவரும்  அமேரிக்கா பயணம் விரைவில். உண்ணாவிரத  பாதிப்பு இன்னும் சரியாக  பழையபடி நடக்க முடியவில்லை.
ஒரு  பெஞ்சில்  படுத்திருந்தார்,  பிரிஜ்  கிருஷ்ணா  அரை மணி நேரம்  நன்றாக  அவர்  கால்களைப்  பிடித்து  எண்ணெய் தேய்த்து  உருவி விட்டார்.  தெம்பாக இருந்தது.  மாடியிலேயே  உதவியாளர்  பியாரேலால்அறையும்.  அவரைக்கூப்பிட்டு  தான் எழுதித் திருத்திய காங்கிரஸ் செயல்பாட்டு திட்டம் குறிப்பை நீட்டி

''இதைப்  படித்துப்  பார்த்து நான் ஏதாவது விட்டிருந்தால் பூர்த்தி செய்து,  அடுத்த காங்கிரஸ் காரிய கமிட்டியில் பேசி முடிவெடுக்கச் சொல்லுங்கள்''

 டில்லி  குளிரிலிருந்து  விடுபட ரெண்டு மின்  ஹீட்டர்கள் ''உர்'' என்று உறுமிக் கொண்டு மேலே இயங்கின.  நேரத்தை வீணடிக்காமல்  கிழவர்  அன்றைய  செய்தித் தாள்களைமேய்ந்து கொண்டிருந்தார்.

'' என்ன  பியாரேலால்,  நான்  எழுதியதைப்  படித்து முடித்தாயா?  இனி  தமிழ்நாட்டில்  அரிசிப்பஞ்சம்  இருப்பதை  எப்படி  தீர்க்கலாம்  என்று  ஒரு யோசனை சொல்லியிருக்கிறேன்  இதையும்  சேர்த்துக்கொள் ''.   எண்ணெய்  உடம்பை  மனு  குளிப்பாட்டி விட்டாள்.  அவளையும்  விடவில்லை.  '' கைகளுக்கு  சக்தி அளிக்க  நான் உனக்குச் சொல்லிக்கொடுத்த பயிற்சியை  விடாமல் செய்து வருகிறாயா?

 ''இல்லையே தாத்தா எனக்கு  அது  பிடிக்கலை''  மெல்லிதாக  கோபித்துக்கொண்டாலும்  அவளுக்கு  தாத்தாவின் அக்கறை புரிந்தது. வழக்கமாக பார்க்கும்  எடை  இயந்திரம்  109  1/2 பவுண்டு காட்டியது.  5 அடி 5 அங்குலம்.உண்ணாவிரதத்துக்கு அப்புறம்  ரெண்டரை  பவுண்டு  கூடியிருக்கிறதே.  குளித்தவுடன்  புத்துணர்ச்சி.  ஒருவர் வந்து  ஏதோ  ஒரு செய்தி சொல்கிறார்.  ஒரு  பெண்மணி  சேவா கிராம் போய்ச் சேரவில்லை.
 ஏன்?
 வார்தாவிலிருந்து  வண்டி எதுவும்  கிடைக்கவில்லையாம்.
''வண்டி  இல்லையென்றால்  நடந்து செல்லவேண்டியது தானே.  சில மைல்கள் நடக்க முடியாதா?''

 பலே கிழவர்  எத்தனை  மைல்கள்  மின்னல் வேகத்தில்  நடப்பவர். நடந்தவர். அப்புறம்  சிறிது நேரம்  வங்காளமொழி  எழுத்துப் பயிற்சி.

 ''இந்தியாவின்  அத்தனை   மொழியும் எனக்குத் தெரிந்திருக்க வேண்டும்.  நான்  ஒரு இந்தியன்'' என்ற  கட்டுப்பாடு  அவருக்கு. வங்காளியில்  என்ன  எழுதினார்:

'' பைரவன்  வீடு  நைஹாதியில் இருந்தது.  ஷைலா  அவன்  முதல் பெண். இன்றைக்கு  ஷைலாவுக்கும்  கைலாஷுக்கும் கல்யாணம்''
காலை 9.30 மணி.  --      சாப்பாடு.  வேகவைத்த  காய்கறி.   12  அவுன்ஸ் ஆட்டுப்பால். 4  தக்காளி. 4  ஆரஞ்சு, கேரட்டு+ எலுமிச்சை, இஞ்சிச்சாறு.  நேரம்  வீணாகலாமா?  இதைச் சாப்பிட்டுக் கொண்டே  காங்கிரஸ்  சட்டதிட்ட ஒழுக்க  நெறி முறைகள் பற்றி  பியாரே லாலுடன்  விவாதம்.  நேற்று   ஹிந்து மகா சபா  தலைவர்  சயாம பிரசாத் முகர்ஜியுடன் பேச்சு வார்த்தை.     ''அவரிடம்  சொல்லுங்கள்,   அந்த சபையில் ஒரு சிலர்  தீவிரவாதிகளாக  கொலை, வன்முறை  என்று பேசுவது ஈடுபடுவது தவறானது.  நாட்டுக்கு  நல்லதல்ல. முகர்ஜி  தலையிட்டு  இவற்றை நிறுத்தலாமே ''  

''தலைவரே இவ்வாறு  வன்முறையை  வளர்க்கும் விதத்தில்  பேசுகிறாரே  என்ன  செய்ய?''

கிழவரின் புருவங்கள் நெருங்கின. அடுத்து நவகாளி கலவரம் பற்றி நிலவரம், விவாதம்.

''நான்  பாகிஸ்தான்  போகப்போகிறேன்.  என்னால்  வன்முறையை  நிறுத்த என்ன வெல்லாம்  செய்யமுடியுமோ அதைச் செய்கிறேன்'. நீங்கள் உடனே  நவகாளி  திரும்புங்கள்.  சிறிது நாளில்  நானும்  வந்துசேர்ந்து கொள்கிறேன்.''

அப்போது  அங்கே  தென்னாப்ரிக்காவில்  கூடவே  உழைத்த   ருஸ்தும் சொராப்ஜி குடும்பத்தோடு  வந்தார். சிறிது நேரம்  தான்  அவரோடு.

காலை 10.30 மணி   ----  சிறிய  தூக்கம்.  உள்ளங்கால் மரத்து விட்டது. நெய் தடவி அமுக்கிப்  பிடித்து விட்டார்கள்.

12மணி  நடுப்பகல்.    ---       ஒரு  டம்பளர்  வெந்நீர்  தேனுடன் கலந்து.  தானாகவே பாத் ரூம்  சென்றார். அது தான்  முதல் முறையாக  ஒருவரையும்  பிடித்துக்  கொள்ளாமல்  நடந்தது.  பலநாட்களாக  ''உண்மையிலேயே''  அவர்  செய்த உண்ணாவிரதம்  அவர் உடல் நிலையை  ரொம்பவே  பாதித்து விட்டதே.

 ''பாபுஜி  ஆச்சர்யமாக  இருக்கிறதே,  மீண்டும்  தானாகவே  நடக்க ஆரம்பித்து விட்டீர்களே''   கிழவர் சிரித்துக்கொண்டு ''பிரமாதம்  இல்லை?  ''தனியே  நட,   தனியாகவே நட''  இது  தாகூரின்  கடைசி வார்த்தை அல்லவா? '' என்றார்.

மதியம்  12.45  மணி.    --          ஒரு  உள்ளூர்  டாக்டரிடம்,  இலவச  மருத்துவ மனை.  அனாதை இல்லம்  கட்டச் சொல்லி ஒரு  ஆலோசனை.

மதியம் 1மணி             --  சில  முஸ்லிம் தலைவர்களுடன்  பேச்சு. பிரிவினையால்  ஏற்பட்ட நஷ்டங்கள், அலங்கோலங்கள், இழப்புக்கள், மதக் கலவரம், வெறியாட்டம் குறைக்க என்னவெல்லாம்  வழி  என்று  ஆலோசனை.

'' நான்  வார்தாவுக்கு  அடுத்த  மாதம் (பிப்ரவரி)  2ந்தேதி சேவா கிராமின் வளர்ச்சி  வேலை முறைகள்  கவனித்து விட்டு  14ம்தேதி  திரும்ப டில்லி  வருகிறேன். கடவுள்  சித்தம்  அப்படியிருந்தால்,  ஏனென்றால் நாளைக்கு மறுநாள்  என்னால்  டில்லியை  விட்டு  புறப்பட  முடியுமா என்பது  கூட  தெரியவில்லையே.  அது அவன் உத்தரவல்லவா. சாயந்திரம்   ப்ரார்த்தனைக் கூட்டத்தில் என்  பிரயாணம்  குறித்து சொல்கிறேன்''

 ''மறைந்த என்  காரிய தரிசி  மகாதேவ  தேசாய் பற்றி  ஒரு  புத்தகம்  வெளியிட  வேண்டுமே. என்ன  அற்புதமான  மனிதர்  அவர்.  இதை  வெளியிட  பணம்  வேண்டுமே ? மஹா தேவ  தேசாய் எழுதி வைத்தவைகள்  வேண்டும் .அவற்றில் இருந்து  குறிப்பெடுத்து தான்  ஒரு  புத்தகம்  தயார் செய்யவேண்டும். நரஹரி பாரிக் இதற்க்கு  சரியான  ஆள்.  ஆனால் அவருக்கு  உடல் நலம்  சரியில்லை. எனவே, அடுத்து  இந்த  வேலையை  சந்திரா ஷங்கர்  ஷுக்லாவிடம்  கொடுக்கலாம் '' என்று  சொன்னார்  கிழவர்.

அதற்குள்  சுதிர் கோஷ்  என்ற  நிருபர், ஆங்கிலே  செய்திகளில்  பிரதமர்  நேருவுக்கும்   உதவி பிரதம படேலுக்கும் இடையே விரிசல், லடாய் என்று விமர்சனங்கள்  வருவதை கிழவரிடம் சொன்னார்.

''அப்படியா.  இன்றே  படேலைக்கூப்பிட்டு விசாரிக்கிறேன். ஜவகரும் ஆஜாத்தும்  இன்றிரவு  7 மணிக்கு  வருவார்களே. அவர்களிடமும்  பேசுகிறேன்''

மத்தியானம்  கொஞ்சம் ரெஸ்ட்.  அடி வயிற்றில்  களி  மண்ணைப்  பிசைந்து பத்து கெட்டியாக  போட்டுக்கொண்டு  வெயில் பட  படுக்கை. முகத்தில்  வெயில் படாமல்  நவகாளியிலிருந்து கொண்டுவந்த  தாழங்குடை.  மனுவும்  அபாவும்  மீண்டும்  கொஞ்ச நேரம்  கால்  பிடித்து விட்டார்கள்.

ஒரு நிருபர்  வந்து கேட்டார்.  பாபுஜி   நீங்கள்  குஜராத்  சேவாக்ராம்  1ம் தேதி  பிப்ரவரி செல்கிறீர்களா?

''யார் சொன்னது அப்படி?''
''சில பத்திரிகைகளில்  அப்படி  ஒரு  செய்தி ''
''ஆமாம்.  ஆனால்  எந்த காந்தி  போகிறார்  என்று  எனக்கு  தெரியவில்லையே''  (அப்போதே   காந்தி என்ற பேரில்  சிலர்
 முளைத்து விட்டார்கள்)

 பகல் 1.30  மணி.                     ----          பிரிஜ் கிருஷ்ணா  ஒரு  செய்தி படித்துக் காட்டினார்.  அகாலி தாள்  தலைவர்  மாஸ்டர் தாராசிங்  ''ஹே  காந்தியே,  நீ  நாட்டுக்கு  செய்ததெல்லாம்  ரொம்ப ஜாஸ்தி,  உடனே இமயமலைக்குப்போய்  தவம்  செய்'' என்றும்  பிரிவினைக் கலவரங்களுக்கு   காந்தியே காரணம்''    என்று கோபமாகப் பேசியிருக்கிறார். நேற்று  ஒரு பாகிஸ்தான்  அகதி பண்ணிய  ரகளையும்  கிழவரை   வருத்தப்படவைத்தது.  இதெல்லாம்  கேட்டு பெருமூச்சு  ஒன்று  வெளிப்பட்டது.  கொஞ்சம்  கேரட் எலுமிச்சை  ஜூஸ் பருகினார்.  

சில  குருடர்கள், போக்கிடம்  அற்ற  அகதிகள் என்று  சிலர்  அவரைப் பார்க்க வந்தனர். அவர்களை  ரட்சிக்க பிரிஜ்  கிருஷ்ணாவிடம்  சில  ஆணைகள் இட்டார். அலஹாபாத்  கலவரங்கள் பற்றி  கேட்ட செய்தியால் கண்களில்  ஜலம்.

பகல்  2.15 மணி.  --  மக்கள் சந்திப்பு.  இந்தியாவின்  பல  பாகங்களிலிருந்தும் பலர்.  ரெண்டு  பஞ்சாபியர் அவர்கள்  மாகாணத்திலிருந்த  ஹரிஜன் மக்கள்  நலம்  பற்றி பேசினர். சில  சிந்திகள். இலங்கையிலிருந்து சிலர். அவர்கள்  நாட்டு விடுதலை பெப்ரவரி 14க்கு  வாழ்த்து செய்தி வாங்க .கூட வந்த ஒரு  குட்டி  சிங்களப்பெண், கிழவரின் கையெழுத்தை தனது  புத்தகத்தில் பெற்றுக்கொண்டாள் . அதிர்ஷ்டக்காரி அவள்.!!

பகல்  3  மணி   --    ஒரு  பேராசிரியர் வந்தார்.  ''  பாபுஜி,  நீங்கள்  செய்வதைத்தான்  பல்லாயிரம் வருஷங்களுக்கு  முன்  புத்த பிரான்  சொல்லியும் செய்தும் வந்தார்.  

பகல்  3.15 மணி    ---       ஒரு  பிரெஞ்சு புகைப்படக்காரர்  வந்து  ஒரு  ஆல்பம்  தந்ததில் முழுக்க தானே   அவர் எடுத்த  புகைப்படங்கள்.  பரிசாக  அளித்தார்.  பஞ்சாபிலிருந்து  ஒரு  குழு வந்தது. அவர்களது பெப்ரவரி  15ம் தேதி  டில்லியில் நடக்கப்போகிற மாநாட்டிற்கு  தலைவர்  ஒருவரை  பரிந்துரை செய்ய வேண்டியது. கிழவர்  ராஜன் பாபு பெயரை அங்கீகரித்தார்.  தானே  வாழ்த்து செய்தி அனுப்ப  ஒப்புக்கொண்டார்.  

பகல் 4  மணி  -  படேல் தனது பெண்  மணிபென்னுடன் வந்தார்.  கிழவர் எழுந்து  தானே பாத்ரூம்  சென்றார்.

 '' பிரிஜ் கிருஷ்ணா.  நாளைக்கு  நாம்  குஜராத்  வார்தா செல்ல  ரயில் டிக்கெட்  வாங்கிவிடப்பா''.  படேல்  ப்ரிஜ்க்ரிஷ்ணாவுடன்  சிறிது  சம்பாஷணை  செய்தார். கிழவர்  பாத்ரூமிலிருந்து  மெதுவாக  வந்தார்.  ரெண்டு பேரும்  அவர் காலில்  விழுந்து  வணங்கினர்.  கிழவர் படேலுடன் பேசினார்.  மந்திரி  சபையிலிருந்து  நேரு  படேல்  இருவருமே  விலக வேண்டும்  என்று கிழவர்  முதலில்  அபிப்ராயப்பட்டார்.  ஆனால்  கவர்னர்  ஜெனரல்  மவுண்ட் பேட்டன் அந்த  ரெண்டுபேரும் அத்யாவசியம் என்று  சொல்லிவிட்டதால்  சரி  என்று ஒப்புதல்.

 ''படேல்ஜி ,  இன்று  சாயந்திரம்  பிரார்த்தனைக் கூட்டத்தில்  இது பற்றி  அறிவிக்கிறேன்.  இரவு  நேரு வரும்போது  அவரிடமும் இது பற்றி  பேசுகிறேன். தேவைப்பட்டால்  உங்கள்  இருவரிடையே  சமரசம்  திருப்திகரமாக  இல்லையென்றால்  நாளை நான்  வார்தா செல்வதையும்  தள்ளி வைக்கிறேன்''

பேசும்போது  கத்தியவாரிலிருந்து  சில  தலைவர்கள் சந்திக்க விரும்புகிறார்கள்  என்று  மனு தெரிவிக்க  

''அவர்களிடம் சொல்,  கட்டாயம் சந்திக்கிறேன்,  ஆனால்  இன்றைய ப்ரார்த்தனைக் கூட்டம்  முடிந்த பிறகு அதுவும்  நான்  இருந்தால்''.  

மனு  சொன்னபிறகு  அவர்களும்  பிரார்த்தனைக் கூட்டத்தில்  கலந்து கொண்டு  அவருக்காக  காத்திருக்க, அவர் படேலுடன் பேசிக்கொண்டே  அபா  சாயந்திர  உணவு தந்தாள்.  என்ன தட புடல்  சாப்பாடு அது  தெரியுமா.  கேளுங்கள் ?  ஆட்டுப்பால், வேகவைத்த  காய்கரிச்சாறு, வழக்கமான ஆரஞ்சு, கேரட், எலுமிச்சை சாறு.

''எங்கே நான்   நூற்கும் சர்க்கா அதைக்  கொண்டுவா''  ஆர்வமுடன் கொஞ்ச நிமிஷம்  நூல்  நூற்றார்.

 +++

அன்று  காலை  37வயதான ஒருவன்  டில்லி  ரயில் நிலையத்திலேயே 6ம்  நம்பர்  அறையில்  வந்து தங்கினான்.   கூட ரெண்டு பேர் அவனைத்தேடி வந்தவர்களின் பெயர் நாராயண  ஆப்தே,  விஷ்ணு கார்காரெ.  நண்பர்கள். கூட்டாளிகள் மொத்தம்  எட்டு பேர். இவர்கள்  மூன்று  பேருக்கு தான்  இன்றைக்கு  டில்லியில் வேலை..  அன்று எப்படியாவது கிழவரை அருகில்  சென்று  சந்திக்க முயற்சி. பிரார்த்தனைக்  கூட பந்தல் மேடைக்கருகே  வெளியே வடப்புரத்தில்  ஓரத்தில்  நின்றால் அருகே  அவரைக் காணலாம் என்று முடிவு.  அங்கிருந்து  35 அடி  தூரம்  தான் இருக்கும்.  அவருக்கு  வெகு அருகில்  செல்ல முடியாது. மற்ற  இருவரும் துணைக்கு.

+++

பிற்பகல்  4.30 மணி. --   தான்  புதிதாக  வாங்கிய  காகி கோட்டை போட்டுக்கொண்டான் அவன்.  நேராக ஒரு  டோங்கா  பிடித்து  பிர்லா மாளிகை  வந்தான்  நண்பர்களோடு.    20ம் தேதி ஜனவரி  அன்று  யாரோ சிலவிஷமிகள்  கிழவரைக் கொல்ல  சதி முயற்சி நடந்து  தோற்றபின்  நேருவும்  படேலும்  எப்போதும்  30 போலிஸ்  காரர்கள் சூழ தான்  கிழவரை வெளியே எங்கும் உலவ  அனுமதித்தார்கள்.  ஆகவே எவருமே கிட்டே  செல்ல முடியாது.   எண்ணற்ற   போலிஸ் வேறு சாதாரண  உடையில்  எங்கும்  சுற்றியவாறு கண்காணிப்பு.  மக்களை துன்புறுத்த வேண்டாம். பரிசோதனைக்கு  உட்படுத்த வேண்டாம்  என்று கிழவர்கேட்டுக்  கொண்டாலும்  பாதுகாப்புக்காக  நேருவும்  படேலும்  செய்ய வேண்டியதைச்  செய்திருந்தனர்.

+++

3 நண்பர்களும்  தனித் தனியாக  பிர்லா மாளிகை  மைதானத்தில்  நுழைந்த நேரத்தில்  தான்  கிழவரும்  படேலும்  உள்ளே  பேசிக் கொண்டிருந்தனர்.  

 +++

 மாலை 5  மணி  ---   கார்கால  சூரியன் ஒளி  குன்றியிருந்தான். - அது  பிரார்த்தனை  நேரம்.   கிழவருக்கு குறித்த நேரத்தில்  எதையும்  செய்யவேண்டும். கால தாமதம் அவருக்கு அறவே  பிடிக்காது.  இடுப்பிலே கச்சத்தில்   தொங்கும்  இங்கர்சால் சங்கிலி கடிகாரம்  அன்று  காணோம்.  கொஞ்ச  நாளாக அருகில் உள்ளோர் தான்  மணி சொல்லுவார்கள். மனுவும்  அபாவும் நேரமாகிவிட்டது  உணர்ந்தனர்.  ஆனால்  கிழவர் படேலோடு   மும்முரமாக  பேசிக்கொன்டிருக்கிறாரே.

மாலை  5.10 மணி   --   இனி தாமதிக்கக் கூடாது  என்று  அபா  கடிகாரத்தை   கிழவருக்குக் காட்டினாள்.  பாவம் அவர்  கவனிக்கவில்லை. படேலின் பெண் மணிபென்  தைரியமாக  குறுக்கிட்டாள் .

''ஒ,வெகுநேரமாகிவிட்டது.  இங்கிருந்து  நான் கிளம்பிப் போகவேண்டும்'' என்றார் கிழவர். பேச்சு  முடிந்தது.

கிழவர்  எழுந்தார்.  காலில்  பாதுகை அணிந்தார். பக்க வாட்டு  கதவைத் திறந்து  அந்தி நேரத்தில் வெளி நடந்தார். மேலே ஒரு கம்பளி  குளிருக்காக. ரெண்டு  பேத்திகள் தோளில்  கைத்தாங்கலாக, வலது கைக்கு  மனுவின் தோள், இடதுகைக்கு  அபாவின் தோள்.   மனுவின் ஒரு கையில் அவர் உபயோகிக்கும்  எச்சில் துப்பும்  பாத்திரம். மூக்குக் கண்ணாடி கூடு, ஜபமாலை, அத்துடன் அவளுடைய நோட்டுப் புத்தகம்.  பின்னால் பிரிஜ் கிருஷ்ணா. அவர் அருகில்  பிர்லா  குடும்பத்தினர்  சிலர், மற்றவர்கள், கத்தியவாரிலிருந்து வந்த  குழு.  கூட்டத்தில்  எல்லோருக்கும்  ஆச்சர்யம்.  எப்படி  கிழவர்  நேரம்  தவறினார் என்று. அவரைக் கண்டதும்  ஓவென்று ஆரவாரம்.

நேரம் கடந்ததால்  வழக்கமாக  வரும் வழியை விட்டு,  குறுக்கு வழியாக  புல்  தரை கடந்து மேடைப் படி நோக்கி  நடந்தார்.

''அபா , இன்று  எனக்கு நீ கொடுத்த  கேரட்  வேகவில்லை. ஆடு மாடு உணவு எனக்கு,''  \
''இல்லை  தாத்தா  இதை கஸ்துரிபா  பாட்டி  குதிரை உணவு  என்பாளே  ஞாபகமிருக்கிறதா?'' இருவரும் சிரித்தார்கள். ''மற்றவர்கள்  ஏற்காததை  நான்  ஏற்று உண்பது  சிறப்பல்லவா'' என்றார்.  ரெண்டுபேத்திகளும்  தாத்தா  கடிகாரம் உப்யோகிக்காததை கேலி செய்தார்கள்.

''அது உங்கள்  தப்பு. நீங்கள் எனக்கு  மணி சொல்வதால் எனக்கு  எதற்கு  கடிகாரம்?'.  நான்  பத்து  நிமிஷம் லேட்டானதற்கு  நீங்கள்  தான்  காரணமே!  

பிரார்த்தனைக்கு நேரம் தவறினது  பிசகு. குறித்த நேரத்தில்  செய்யவேண்டிய வேலைக்கு  குறுக்கே கடவுளே வந்தாலும் காக்க வைக்க வேண்டும். நோயாளிக்கு  மருந்து குறித்த நேரத்தில்கொடுக்க வில்லையானால்  அவன் மரணமடைவான்.''
++++
200  கஜ நேரத்தில்  170  கஜ தூரம்  வந்தாயிற்று.  6 வளைந்த  படிகள்  தான்  இருக்கிறது. அதைக் கடந்தால் பிரார்த்தனைத்திடல். பிரார்த்தனைத் திடல் அடைந்தால் பேசக்கூடாது. போலிஸ்காரன்  குர்பச்சன் சிங் கும்பலை  விலக்கினான். நூற்றுக்  கணக்கானோர்  சூழ, அதில்  இருபது முப்பது பேர்  போலிஸ் ஆட்கள்.   மேடையின் மேல்படி முன் நின்று  இரு கரம் கூப்பி  கூட்டத்தை  வணங்கினார் கிழவர். அனைவரும் மரியாதையாக வழி விட்டனர். கடைசி படி  ஏறிவிட்டார்.

+++

தான் நிற்கும் இடத்திற்கு  நேராக  அவர்  வருவது தெரிந்தது அவனுக்கு.  எண்ணத்தை  மாற்றிக்கொண்டான்.  முன்னே   இருந்தவர்களை முழங்கையால்  இடித்து த்தள்ளி முன்னேறினான். மற்ற இருவர்கள்  தயாராக வழி விட  இரு கரம்  கூப்பி கிழவரை வணங்கினான். இரு கூப்பிய கரங்களுக்கும்  இடையே  கைக்கடக்கமான அந்த  கருப்பு  இத்தாலி நாட்டு  பெரெட்டா கைத்துப்பாக்கி!  (அட. இதுவும்  இத்தாலியா,  எங்கேயோ  கேட்ட  பெயராக  இருக்கிறதே!!) ''  

''நமஸ்தே காந்திஜி''  என்ற அவன் குரலைத்தொடர்ந்து,  மனு  பதிலுக்கு வணங்கினாள்.  காந்திஜியும்  பதிலுக்கு வணங்கினார். அவன்  குனிந்தான்.  மனுவுக்கு அவன் அவரது கால்களை  வணங்கி  முத்தமிடுவான் என்று  நினைத்து அவருக்கு  இந்த மரியாதை எல்லாம்  பிடிக்காது , நகரு''  என்று  கையால் ஜாடை காட்டியும்  நகராததால்

 ''அண்ணா,  பாபு,   ஏற்கனவே  பிரார்த்தனைக்கு  லேட்.   ஏன்  அவரை தடை செய்கிறீர்கள்?'' என்றாள்''   போலீஸ் யாரும் பக்கத்தில்  அப்போது  இல்லை.  

+++

 நாதுராம் விநாயக கோட்சே தன் இடக்கையால்  மனுவைப் பிடித்து  தள்ளினான். அவன்  வலக்கரத்தில்  துப்பாக்கி. அவள்  கையில்  வைத்திருந்த  பொருள்கள்  யாவும்  கீழே  சிதறின. சில வினாடிகள்  மனுஅவனை எதிர்த்தாள்.  அவருக்குத் தேவையான  ஜபமாலையைக் கீழேயிருந்து எடுக்க குனிந்தாள். ஒரு வினாடிக்குள்  அந்த  அமைதிச் சூழலில் காது செவிடு பட வெடி சத்தம். கோட்சே செலுத்திய  துப்பாக்கி ரவைகள்  காந்திஜியின்  அடிவயிற்றைத்  துளைத்தன. மூன்று குண்டுகள் அடிவயிற்றையும் இதயப்பகுதியையும் துளைத்தன. மூன்றாவது குண்டு துளைத்தபோது கூட  காந்தி நின்றுகொண்டே இருந்தார். இருகைகளும்   கூப்பியபடி இருந்தன.

 '' ஹே ராம், ஹே  ராம்'' என்ற ஓர்  சொல் தான்  வெளிப்பட்டது. மூச்சு திணறியது. பிறகு, பிறகு,  மெதுவாக  அந்த மகா  புருஷர் தரையில்  சாய்ந்தார்.  கைகள் இன்னும்  கூப்பியே இருந்தன.  அஹிம்சா மூர்த்தி  பின்  எப்படி காட்சி யளிப்பார்?? கண்  பிதுங்கி,நாக்கு முன்னே தள்ளி, கை கால்  உதைத்துக் கொண்டா நம் போல் இருப்பார்?   புகை மண்டலம் சூழ்ந்தது. எங்கும் ஒரே  குழப்ப நிலை,அமளி, பயம்,கலவரம்  பரவியது.    இரு   பேத்திகளின் மடியிலேயே தலை சாய்த்து  அந்த மகான்  கீழே விழுந்தார்.  முகம்  வெளுத்து விட்டது.  அவர் மேலே போர்த்தியிருந்த  வெள்ளை நிற  ஆஸ்திரேலிய கம்பளி செக்கச்ன் செவேலென்று  ரத்த நிறம் பெற்றது.

மாலை  5.17 மணி  -  மோகன் தான்  கரம் சந்த் என்ற பெயர் வைக்கப்பட்டாலும் இனி அவர்  ''மகாத்மா காந்தி''. அவர்  இனி  இல்லை.  

பின்னர்  மனு சொன்னாள் :    ''அவருக்கு  ஏற்கனவே  இன்று தான்  கடைசி நாள்  என்று  விடிகாலை  இன்று  அவர்  என்னிடம்  என்ன சொன்னார்  தெரியுமா?

''என்னை  யாராவது  சுட்டால் கூட ஒரு  முணு  முணுப்பும் இன்றி இறைவன்  நாமத்தோடு என் மறைவு இருக்கும். நீ   பின்னால் உலகுக்குச் சொல்  இங்கு உண்மையாக  ஒரு  சத்தியம்  கடைப்பிடித்த  மகாத்மா  இருந்தார்  என்று''

காந்தி என்ற  கிழவர், போர்பந்தரிலிருந்து  துவங்கி, உலகமெங்கும் நமது தேசத்துக்கு  நற்பெயர்  தந்து, புகழ் பெற்று, அந்நியனிடமிருந்து  நாட்டை மீட்டு,  சுதந்திர நாடாக்கி இன்று  நம்  இஷ்டம் போல்  களியாட்டம் ஆட வழி வகுத்தார். அவர் நடந்த பாதை,  அசத்தியத்திலிருந்து  சத்தியத்துக்கு.  இருளிலிருந்து  ஒளி மயத்துக்கு, அழிவிலிருந்து  அழியாத அமரத்வத்துக்கு. அவர் சொன்னவை  நாலு திசையிலும் உண்மை, தர்மம்,சத்யம் எது  என்று எதிரொலித்து,  நீதியை நிலைநாட்டி  அனைவரையும்  அவரைத் தெய்வமாக யுக புருஷனாக, அவதாரமாக, மகாத்மாவாக  நோக்கச்செய்தது.

அவர்  இன்றிருந்தால் ஒருவேளை  ''என்னை  இவர்களிடமிருந்து காப்பாற்றி ய  உனக்கு  நன்றி  கோட்சே'' என்று  சொல்லியிருப்பாரோ?''  

sivan jaykay

unread,
Feb 1, 2018, 7:25:28 PM2/1/18
to amrith...@googlegroups.com

ஐந்தாம் வேதம்    j.k. sivan       

மஹாபாரதம்   அதன் பேருக்கேற்றவாறு  ரொம்ப ரொம்ப  நீளமானது.  அதுவும்  வேத வியாசர் எப்போதுமே  எதையுமே  சுருக்கமாக சொல்லும்  ரிஷி இல்லையே.  நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே  சில  வாத்தியார்கள் போல் பல இடங்களில் ஒரே சம்பவத்தை திருப்பி திருப்பி சொல்பவர்.  அவரது மஹாபாரதம் 18 பருவங்களை கொண்டது.  லக்ஷக்கணக்கான சமஸ்க்ரித ஸ்லோகங்கள்.  அதையெல்லாம் ஒருவாறு தெரிந்து கொண்டு நான் மஹா பாரதத்தை சிறு கதைகளாக்கினேன். அதற்கு  ரெண்டு வருஷம் எட்டு மாதங்கள்  பதினோரு நாள் பிடித்தது. எப்படி,? குறைந்தது ஒரு நாளைக்கு  10-12 மணி நேரம் அதற்கென்று உட்கார்ந்து வேலை பார்த்தால்.!  ஒருவாறு அதை பூர்த்தி செயது  ''ஐந்தாம் வேதம்'' என்று பெயரிட்டு புத்தகம் ரெண்டு பாகங்களாக வெளி வந்தது. வண்ணபடங்களோடு  உயர் ரக  காகிதத்தில். விலை போடவில்லை. அச்சுக்கூலி மட்டும் தந்தால் போதுமென்று  ஆயிரம் பக்கங்கள் கொண்ட புத்தகம்  ஆயிரம் ரூபாய் நன்கொடை கொடுப்பவர்களுக்கு விநியோகமாகிறது. இன்னும் சில பிரதிகள் கைவசம் உள்ளன. யாருக்கு வேண்டுமோ என்னை அணுகலாம்.  ஜே.கே. சிவன் 9840279080.

இனி பாரதத்துக்குள் செல்வோம்: தினமும் ஒரு பகுதி.   

                                                                                                 பாரதப்  பிரயாணம்:   1

2015  ஏப்ரல் மாதம்  19ம்  நாள்  என்ன நடந்தது?

ராமாயணம் சொற்பொழிவு  நடந்தது.  பிறகு,  '' 
ரமே ராமே  மனோரமே'' என்ற அடியேன் எழுதிய  வேத வியாசரின்  ''அத்யாத்ம  ராமாயண''  கதைப்  புத்தகம்  வெளியே வந்தது,  அப்புறம்,  ராமரைப் பற்றியும்  ராமாயணத்தின்  மகிமையும் பெருமையும்  எடுத்துக் கூறப்பட்டன.    அந்த புத்தகத்தை வெளியிடும்போது  எழுதுபவன், சொல்பவனை விட  கேட்பவன் எவ்விதத்தில்  சுலபமாகப்  பயன் அடைகிறான்  என்று வெகு அழகாக தென் திருப்பேரை  உ.வே. அரவிந்தலோசனன் சுவாமிகள்  எடுத்துக் காட்டினார்.  அதோடு  விட்டாரா? 

 ராமாயணம்  எழுதிய திரு  ஜே. கே. சிவன்  பாரதமும்  எழுதவேண்டும்  என்று ஒரு கட்டளை பிறந்தது.  நான்  நடப்பவன். என்னை  ஓடச் சொன்னால்?  முடியும்  ஓடு. என்று  உள்ளே  ஒரு  அந்தராத்மா  உணர்த்தியது.  வெளியே  சில  குரல்கள் அதன் எதிரொலியாக  மூன்று  கிருஷ்ணபக்தர்கள் வாயிலாகக்  கேட்டது.  அரிமா சங்கத்தினர் திரு  சத்யகணேஷ்  நான்  ரூபாய்  பத்தாயிரம்  இதற்கென  அளிக்கிறேன் என முன்மொழிந்தார்.  தொடர்ந்து   அரிமாவுக்கு  ரோட்டரி  எந்த விதத்தில் குறைந்தது.  எனவே ,  நானும்  ரூபாய்  10000 அளிக்கிறேன் என்று   பேராசிரியர்  கே. சுந்தரராஜன் முழங்கினார்.  திரு எஸ் எஸ்  நாராயணன் என்ற  அன்பர் என் குடும்பத்தாரும்  அதே  பத்தாயிரம்  ரூபாய் தருவோம் என்றார்..  வெளியீட்டுக்கு உதவ  அவர்கள்  தயாராக இருக்கும்போது,  ஒரு சிறந்த  ஆன்மீக வைணவ திலகம்  ஆணையிட, திண்ணை ராமாயண  சிற்பி  நானே  அந்த மகாபாரத புத்தக வெளியீட்டு விழாவிலும்   சொற்பொழிவு  நடத்துகிறேன் என்று  அறிவித்தார்.  இதெல்லாம்  தயாராகிவிட்டது.  இனி   எதற்கு காத்திருக்க வேண்டும்?  நான் குழந்தைகளுக்கு  பாரதத்தை  எழுத இன்னும்  என்ன  தயக்கம். ஆஹா , இன்றே  எழுது என்று  எனக்குள்  ஒரு  தீர்மானம் உருவாகியது.   இனி  இரவுகள் பகலாகும்  அவ்வளவு தானே.  

என் உள்ளத்தே  உறையும்  அந்த  பாரதன்  என்னை  இயக்க நான்  இயங்குவேன். அவன் சம்பந்தப்பட்ட கதை  இது. அவன் நடத்துகிறான் இதுவரை  நடந்தது இனியும் அவனருளால் தொடரட்டும். நடந்தவன்  இனி ஓடுவேன்.

 சிலர்  புத்தகங்களையோ  பத்திரிகைகளையோ கையில் எடுத்தால்  கடைசி பக்கத்தில் இருந்து படிப்பவர்கள்.  சிலர்  நடுவே ஏதோ  ஒரு  பக்கத்தில்  ஆர்வம் காட்டி துவங்குவார்கள்.  சிலர்  முறையாக  அட்டவணையிலிருந்து ஆரம்பிப்பவர்கள்.  எனவே  எவர்  எந்த  பக்கத்திலிருந்து ஆரம்பித்தாலும்  அவர்கள்  ஆர்வம்  குன்றாத வகையில்  ஒவ்வொரு  நிகழ்வையும்  ஒன்றுக்கொன்று  தொடர்பற்றதாகவும் அதே சமயம் கதம்ப மாலையில் பல மலர்களின்  இடையே ஊடுருவி இணைக்கும் நாராக ''மணி கண சூத்ரமாக'' பாரதத்தின்  சுவையை  துளியும் குன்றாதவாறும்  இந்த  ''பல் சுவை  பாரதம்'' துவங்குகிறது.

 +++

''ஓம்''  என்ற  பிரணவ   சப்தத்தோடு அனைத்து மஹநீயர்களுக்கும்  சாஷ்டாங்க  நமஸ்காரத்துடன்   மகாபாரதத்தைத் தொடுகிறேன்.  

 நான்  வியாசனல்ல.   எனது  ஊர்   வில்லிப்புத்தூரும் அல்ல. ஒரு சாதாரணன். குழந்தைகளுக்கு  புரியும்படியாக  கதை சொல்ல  விழைபவன். அதற்காகத்  தெரிந்தவரை முடிந்தவரை முயற்சிப்பவன். யார்  எழுதிய  பாரதத்தையும்  முழுமையாக எழுதும்  உத்தேசமும்  இல்லை. சிறந்த விஷயங்களை   எங்கிருந்தாலும் சேர்த்து  தொடுத்து கதைகளாக  வடித்து  சுவையாக அளிக்க  மட்டுமே இதில் என்  முயற்சி  காணப்படும்.  பெரியோர்  அறவோரின் வழி காட்டவே எண்ணம்.   ஒவ்வொருவரும் வாழ்வில் ஒரு தரமாவது  விரும்பி ரசித்து ருசித்து மகிழவேண்டியவை தான்  ராமாயணமும்  மகாபாரதமும்.   இனிப்பு நிறைய வாங்குமுன்   சிறிது  ''சுவைக்க''  (சாம்பிள்) தருவார்களே (எங்கள் காலத்தில் தருவார்கள்,  இப்போது ??) .  அதுவே  இது.

++
ஹிரண்யகர்பன் எனப்படும்  பிரம்மா நிறைய  ரிஷிகள்  சூழ  ஆசனத்தில்  அமர்ந்திருந்தார்.  அவர்  எதிரே  த்வைபாயனர் எனப்படும்  வியாசர் நிற்கிறார்.  அனைவருக்கும்  தெரியும்.  வியாசர்  சகலத்தையும்  கரைத்து குடித்தவர். அதை  உலகிற்கு எடுத்து சொல்ல, எழுத்தில் நிலை நாட்ட  வேண்டும். இது பற்றி தான்  பேச்சு  நடந்தது  அங்கு.   (தொடரும்)

sivan jaykay

unread,
Feb 1, 2018, 7:25:29 PM2/1/18
to amrith...@googlegroups.com
                                                            தமஸோமாம் ஜோதிர் கமய ...J.K. SIVAN 

காயாரோஹண சிவாச்சாரியார்  77  வயதை தாண்டினாலும் தினமும்  அர்த்தநாரீஸ்வரனுக்கு  பூஜை மூன்று காலமும் பண்ணாமல் வீடு திரும்பியதில்லை.   அர்தநாரிஸ்வரர்  அந்த ஊர்  சின்ன ஒரு மலை மீது  பல நூற்றாண்டுகளாக அருள்பாலிப்பவர்.  சிவாச்சாரியார்  ஐந்தாவது தலைமுறையாக  அர்ச்சகர் அந்த ஆலயத்தில்.  

பவழக்குன்று என்ற அந்த மலைக்கு பின்னால் ஒரு பெரிய  ஏரி .  அதில் சில படகோட்டிகள்  அக்கரைக்கு சென்று பொருள்கள் வாங்கி வியாபாரம் செய்பவர்கள்.

அன்று  கடுங்குளிர், எங்கும் பனிமூட்டம். கண்ணே தெரியவில்லை.  சாயந்திரம் ஆகிவிட்டது. மழையும் பிடித்துக் கொண்டது. மூன்றாம் கால  அர்ச்சனை நைவேத்தியத்துடன் காயாரோஹணம் கிளம்பியபோது அவர் வீட்டில் எதிர்ப்பு.

இந்த கொட்ற மழையிலும் இருட்டிலும் நீங்க இப்போ போகணுமா மலை மேலே ஏறி?  சொல்லுங்கோ?  யார்  வந்து அங்கே காத்தியிண்டு இருக்கப்போறா?  நல்ல நாளிலேயே  மூணு பேர் வந்தா  அதிசயம்.  இப்போ எதுக்கு போறேள். மனசாலே பகவானை வேண்டிண்டு இங்கேயே  அவருக்கு நைவேத்தியம் பண்ணுங்கோ.  ஒத்துப்பார்.  உங்களைப்பத்தி அர்தநாரீஸ்வரனுக்கு தெரியாதா?''

பதில் சொல்லாமல் வாசலையே பார்த்துக்கொண்டிருந்தார்  அர்ச்சகர். என்ன தோன்றிற்றோ. தலையில் துண்டை போட்டு மூடிக்கொண்டு   கையில் ஒரு பளிச் என்ற  வெளிச்சம் தரும்  விளக்கை எடுத்துக்கொண்டு இருட்டில் கிளம்பிவிட்டார்.

மெதுவாக  மலையேறும்போது ஒரு எண்ணம்.  

''யார் அங்கே இருக்கப்போறா. நானும் சிவனும் தான். யாருக்கு  என்ன பிரயோசனம் நான் போறதிலே.''
இருட்டில் ஏரி நீர் சப்தம் அது ரொம்பி ஓடுவதை அறிவித்தது. கண்ணுக்கு ஒன்றுமே தெரியவில்லை. காற்று பலமாக வீச  தொடங்கியது.அவர் உடம்பு குளிரில் நடுங்கியது.

க்ரீச் என்று மரக்கதவு  சாவியை வாங்கிக்கொண்டு சபதித்தது. உள்ளே  வெளிச்சம் காட்டிக்கொண்டு போய்  சந்நிதியின் கதவையும் திறந்தார்.  எங்கும் அமைதி. எண்ணையில் திரியை தூண்டி விட்டு  பெரிதாக ஆக்கி விளக்கேற்றினார்.  கையில் கொண்டுவந்திருந்த  வெளிச்ச விளக்கை வெளியே பிறையில் வைத்தார். அது எரிந்து கொண்டு மலையை ஒட்டிய  ஏரியைப் பார்த்தது.

நிதானமாக  ஸ்லோகங்கள் சொல்லி, கொண்டுவந்திருந்த மலர்களை தூவி பரமேஸ்வரனை தியானித்து ஸ்லோகங்கள் சொன்னார். வீட்டில் மடியாக பண்ணிய  நைவேத்தியத்தை  அர்ப்பணித்தார். கடமை முடித்ததில் ஆத்ம திருப்தி. 

''அர்த்தநாரி  என்னால் முடிந்தவரை உனக்கு சேவை செயகிறேனடா? எனக்கப்புறம்  ஒரு சரியான ஆளை தேடிக்கொண்டிருக்கிறேன். அது நிறைவேற நீ தான் அருளவேண்டும்'' வணங்கி பிரசாதம் எடுத்துக்கொண்டு  கதவை சாத்தி பூட்டினார். வெளி மரக்கதவு சாத்துமுன்பு  வெளிச்ச விளக்கை எடுத்துக்கொண்டு  பூட்டி விட்டு  மலை இறங்கினார்.

இதனால் யாருக்கு பலனோ இல்லையோ எனக்கு பலன் உண்டு என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டு மலைப்படிகளில் இறங்கினார்.

மறுநாள் காலை பளிச்சென்று சூரியன் உதித்தான். மழை இல்லை. யாரோ ஓடிவந்தார்கள். 
மரக்கடை   அந்தோணி. 
''சாமி. என் உயிரை காப்பாத்தினீங்க''
''என்னப்பா சொல்றே?''
''நேத்து ராத்திரி குப்பன் படகுலே பெயிண்ட் சாமான் எல்லாம் வாங்கி வந்தேன். இருட்டிலே மாட்டிக்கொண்டோம். குப்பன் வராம அவன் பிள்ளை சங்கரன் தான் படகோட்டி வந்தான். வழி தெரியலே. சில இடங்களில் பாறைகள் .  குப்பன் இருந்தால் ஒருவழியாக அனுபவத்தில் கரை சேர்ப்பான். இந்த பையன் துடித்துக் கொண்டிருந்தான்.  அப்போது தான் ;மலைமேல்  நீங்கள் வெளிச்சம் காட்டினீங்க.   ''அதோ நம்ம கோவில் தெரியுது மலைமேல், அந்த பக்கம் போனா பாறைங்க இல்லை. ''   தப்பாக எங்கோ சென்றுகொண்டிருந்த படகை திருப்பி தைரியமாக மெதுவாக  படகை  வெளிச்சத்தை நோக்கி செலுத்தி கரை வந்து சேர்ந்தோம்.   
உங்களாலே  எங்களுக்கு உயிர் தப்பிச்சுது.

இருட்டிலிருந்து நம்மை மீட்பவன் அல்லவா அர்த்தநாரி.  அறிந்து தானே என்னை மலைக்கு வரவழைத்தான்...... காயாரோஹணம் கைகூப்பி  அவனை வணங்கினார்.


sivan jaykay

unread,
Feb 2, 2018, 7:24:14 PM2/2/18
to amrith...@googlegroups.com


சூர்யா  உனக்கு நமஸ்காரங்கள்   4 
ஆதித்ய ஹ்ருதயம்  அடுத்த பதிவில் நிறைவு பெறுகிறது. 

तमोघ्नाय हिमघ्नाय शत्रुघ्नायामितात्मने। 
कृतघ्नघ्नाय देवाय ज्योतिषां पतये नमः॥ 20

Tamoghnāya himaghnāya śatrughnāyāmitātmane
kṛtaghnaghnāya devāya jyotiṣāṃ pataye namaḥ

தமோக்னாய  ஹிமக்னாய சத்ருக்னாயா மிதாத்மனே 
க்ருதக்னக்னாய  தேவாய ஜ்யோதிசாம் பதயே நம:

தமோகுணம் என்னும் அஞ்ஞான  இருளைப்  போக்குபவனே, சூர்யதேவா, பனியையும்  குளிரையும் அதேபோல்  விலக்குபவனே, கெட்டவர்களுக்கும் தீயோருக்கும்  நெருப்பானவனே, சூரியமண்டலத்தில் மற்ற கிரஹங்களின் பிரதம தலைவனே, உலகெங்கும் உன் ஒளியால் ஜீவசக்தி அளிப்பவன், உனக்கு நமஸ்காரம்.

 तप्तचामीकराभाय वह्नये विश्वकर्मणे। 
नमस्तमोऽभिनिघ्नाय रुचये लोकसाक्षिणे॥  

Taptacāmīkarābhāya vahnaye viśvakarmaṇe

namastamo'bhinighnāya rucaye lokasākṣiṇe  21
  
தப்த சாமீகராபாய வஹ்னயே விஶ்வகர்மணே |
நமஸ்தமோ‌உபி னிக்னாய ருசயே லோகஸாக்ஷிணே || 21 ||

தங்கத்தை உருக்கி ஓட விட்டால் போல தக தக வென்று ஒளிரும் ஆதித்யா, வித்யாசம் பார்க்காமல் சகலத்தையும் ஒரே சமமாக பாவித்து ஜிவாலையோடு எரிக்கும்  சூர்யா, அஞ்ஞான இருள் நீக்கியே,  பிரபஞ்ச ஸ்ரிஷ்டிகாரண விஸ்வகர்மா, சகல காரியங்களுக்கும் காரணமானவனே, சர்வ ஜீவன்களுக்கும் உயிர்ச்சக்தி அளிப்பவன், 
நீ  விஸ்வ காரணன், அஞ்ஞானத்தை நீக்கும் ஒளிச்சுடர். அக்னிஸ்வரூபம், லோக காரணன், சர்வ வியாபி, செந்நிற ஒளிப்பிழம்பு,  ஸ்வர்ணமயன் , சர்வ சாக்ஷி. உனக்கு  கோடானு கோடி நமஸ்காரங்கள் ஆதித்ய நாராயணா.

 नाशयत्येष वै भूतं तदेव सृजति प्रभुः। 
पायत्येष तपत्येष वर्षत्येष गभस्तिभिः॥  

naasa yatyesha vai bhootham tadeva srujathi prabha
payathyesha thapathyesha varshatyesha gabhasthibhi

நாஶயத்யேஷ வை பூதம் ததேவ ஸ்றுஜதி ப்ரபுஃ |
பாயத்யேஷ தபத்யேஷ வர்ஷத்யேஷ கபஸ்திபிஃ || 22 ||

வாழ்க்கை என்பது வளர்ச்சி. அதற்கு  அதி முக்கியம் உன் ஒளிக் கதிர்கள் தானே  சூர்ய நாராயணா, இருள் நீக்கி உன் ஒளிக்கதிர்கள் உயிரூட்டுகிறதே. என் மன மாசுகளையும் சுட்டெரித்து உள்ளொளி  பெற  அருள்வாய், உன் ஒளி க்கதிர்கள் வெம்மையை அளித்தாலும்  மழைக்கே  ஆதாரம் அவை தான் என அறிவோமே  உனக்கு  ஆயிரமாயிரம் நமஸ்காரங்கள் ஆதித்யா. 

एष सुप्तेषु जागर्ति भूतेषु परिनिष्ठितः। 
एष एवाग्निहोत्रं च फलं चैवाग्निहोत्रिणाम्॥ 

 Eṣa supteṣu jāgarti bhūteṣu pariniṣṭhitaḥ
eṣa evāgnihotraṃ ca phalaṃ caivāgnihotriṇām

ஏஷ ஸுப்தேஷு ஜாகர்தி பூதேஷு பரினிஷ்டிதஃ |
ஏஷ ஏவாக்னிஹோத்ரம் ச பலம் சைவாக்னி ஹோத்ரிணாம் || 23 ||


ஆதித்யா, உறக்கத்திலிருந்து மீட்பவன்  நீ. உறக்கமில்லாதவன். எங்காவது எப்போதும்  ஒளி அளித்து காப்பவன். புத்துணர்ச்சியும், களைப்பையும்  போக்குபவன். யக்ன மூர்த்தி, அக்னி ஹோம அக்னிஹோத்ர காரணன். உனக்கு  நமஸ்காரங்கள் 


 वेदाश्च क्रतवश्चैव क्रतूनां फलमेव च।  
यानि कृत्यानि लोकेषु सर्व एष रविः प्रभुः॥ 

Vedāśca kratavaścaiva kratūnāṃ phalameva ca
yāni kṛtyāni lokeṣu sarva eṣa raviḥ prabhuḥ

வேதாஶ்ச க்ரதவஶ்சைவ க்ரதூனாம் பலமேவ ச |
யானி க்றுத்யானி லோகேஷு ஸர்வ ஏஷ ரவிஃ ப்ரபுஃ || 24 ||

நீயின்றி  எது யாகம், எது வேதம், எது கர்மம், எது தர்மம், எது காரணம், எது காரியம்?.  சர்வமும்  நீயே  ஆதித்யா, ஹ்ருதயத்தில் வீற்றிருக்கும் சூர்ய நாராயணா.உனக்கு நமஸ்காரங்கள். 





Sivan Krishnan

unread,
Feb 2, 2018, 7:24:42 PM2/2/18
to amrith...@googlegroups.com
ஐந்தாம் வேதம் : J.K. SIVAN

2 குருவும் சிஷ்யர்களும்.

மஹா பாரதக்கதைகளை நான் சொல்லும்போது அதில் ஆராய்ச்சி செய்யவேண்டாம். கதைகளாகவே படிக்கவும். இவை ஐந்தாயிரம் வருஷங்களுக்கு முன் எழுதப்பட்ட சமாச்சாரங்கள். அந்த கால வாழ்க்கை, நடைமுறை, இவை தான் பிரதிபலிக்கும். அவற்றை நமது தற்போதைய வாழ்க்கை முறையோடு ஒப்பிடுவது பொருத்தமில்லாத செயல். பழைய விஷயங்களை தெரிந்துகொள்கிறோம், அதில் ஏதேனும் நமக்கு உபயோகப்படும் என்று தோன்றினால் அவற்றை பின்பற்றலாம். மற்றபடி அவற்றை அந்த கால முறையை பற்றி எண்ணி ரசிக்கவும். - ஜே. கே. சிவன்

++

''நீ அந்த கணேசனையே எண்ணிப்பாரேன், அவரே இதற்கு வழிகாட்ட முடியும் '' என்ற பிரம்மாவின் முடிவு ஏற்கப்பட்டது. வியாசர் விநாயகனை துதித்தார். அடுத்த கணமே விநாயகர் அங்கே தோன்றினார்.

விநாயகர் வியாசரை சந்தித்தார்.

''கணேசா, கணநாதா, என் மனத்தில் ஓடும் எண்ணங்களை ஸ்லோகமாகச் சொல்லத்துடிக்கிறேன். நீ அதை எழுத்தில் வடித்தால் சகலருக்கும் பயனுண்டே. செய்வாயா? ''

கணேசன் சசிரித்தான்.

''ஏன் சிரிக்கிறாய் விக்னேஸ்வரா?'' என்று வியாசர் கேட்க,

'தாத்தா, நான் எழுதும் வேகத்திற்கு உங்களால் ஸ்லோகங்களை விடாமல் நிறுத்தாமல் சொல்ல முடியுமோ?'' என்று யோசித்தேன். சிரிப்பு வந்தது.

''அப்படியா, நீ சிறுவனாச்சே, வேகமாகச் சொன்னால் எழுதத் தடுமாறுவாயோ ஒருவேளை மெதுவாகச் சொல்லவேண்டுமோ என்று ஒரு தயக்கம் அல்லவா என்னுள் இருந்தது. பரவாயில்லையே. நான் சொல்லிக்கொண்டே வருகிறேன், உனக்குப் புரிபடாவிட்டால் அந்த இடத்தில் நிறுத்தினால் மட்டும் போதும், நடுவில் எந்த தடையும் குறுக்கிடாது'' என்றார் வியாசர்.

''ஓம்'' என்ற ஆரம்ப பிரணவ சப்தத்துடன் கணேசர் எழுத ஆரம்பித்தார். எதில் எப்படி எழுத ஆரம்பித்தார்?
ஓலைச்சுவடியில் தனது ஒரு தந்தத்தை உடைத்து எழுத்தாணியாக்கி!

அதனால் தான் விநாயகருக்கு ஒற்றைக்கொம்பன், ஏக தந்தன், என்று ஒரு பெயர். வியாசரின் வேதம் ஸ்லோக மாரி யாக பிரவாகித்தது. லக்ஷத்துக்கும் மேற்பட்ட ஸ்லோகங்கள் மஹா பாரதமாக உருவாயின. ரெண்டு பேர் இதை முழுமையாக கேட்டு அனுபவித்து எடுத்து சொன்னவர்கள். ஒருவர் சுகர் பரிக்ஷித்துக்கு சொன்னவர். மற்றவர் சஞ்சயன் கண் தெரியாத திரிதராஷ்டிரனுக்கு எடுத்து சொன்னவர்.

மகாபாரதத்தின் யுத்த முடிவில் 18 அக்ஷௌணி சேனைகளும் மடிந்தன. கௌரவர் பக்கம் மூன்றே பேர் தான் மிச்சம்.

அதுசரி அக்ஷௌணி என்றால் அதில் எத்தனை பேர் அடக்கம் தெரியுமா? ஒரு தேர், ஒரு யானை, ஐந்து காலாட்கள். மூன்று குதிரைகள் இது தான் ஒரு பட்டி. மூன்று பட்டி சேர்ந்தது ஒரு சேனாமுகம். மூன்று சேனாமுகம் கொண்டது ஒரு குல்மா. மூன்று குல்மாக்கள் சேர்ந்தது தான் ஒரு கணம். மூன்று கணம் கொண்டது ஒரு வாஹினி. மூன்று வாஹினி கொண்டது ஒரு ப்ரிதானம். மூன்று ப்ரிதானம் ஒரு சாமு. மூன்று சாமு ஒரு அணிகினி. ஏறக்குறைய பத்து அணிகினி சேர்த்தால் அது தான் ஒரு அக்ஷௌணி. உங்களில் யாராவது சும்மாயிருந்தால் அவர்களை விட்டு எண்ணச் சொல்லுங்களேன் ''எத்தனை உயிர்கள் கொண்டது ஒரு அக்ஷௌணி என்று. அதுபோல் 18 அக்ஷௌணி கொண்டது கௌரவ சைன்யம். பாண்டவர்கள் அத்தனையும் அழித்தார்கள் பதினெட்டு நாளில்.

மகாபாரதத்தில் எண்ணற்ற உப கதைகள் ஒன்றை ஒன்று ஒட்டிக்கொண்டு சங்கிலித்தொடர். அவற்றை ரசித்து படித்து மகிழ ஒருவனுக்கு வாழ்நாளே போதாத அளவுக்கு அவ்வளவு அருமையான சம்பவங்கள் அதில் உண்டு. அங்கொன்று இங்கொன்று என அவற்றில் சிலவற்றை உங்களுக்கு அளிக்க எனக்கு உத்தேசம்.

பாண்டவர் வம்சத்தில் பரிக்ஷித்துக்கு ஒரு மகன். ஜனமேஜயன், அவனுக்கு ஸ்ருதசேனன், உக்ரசேனன், பீமசேனன் (இவன் வேறு பீமன்) என்று சகோதரர்கள். பாரதப்போர் நடந்த குருக்ஷேத்ரத்தில் ஒரு நாக யாகம் பண்ண கிளம்பினான். சரமா என்கிற ஒரு தேவலோக நாய் உண்டு. அதன் குட்டி அவர்கள் யாகம் பண்ணும் இடத்துக்கு வந்தது. அதை அடித்து விரட்டினார்கள். அது அழுதுகொண்டு போய் அம்மாவிடம் சொல்ல, நீ என்னடா குழந்தாய் செய்தாய்? என்று சரமா கேட்க. நான் ஒன்றுமே பண்ணவில்லையே அம்மா , என்று அந்த நாய்க் குட்டி சொல்ல, சரமா கோபத்துடன் ஜனமேஜயனிடம் வந்து அவனை சபித்தது

''ஒன்றுமே தவறு புரியாத என் பிள்ளையை நீங்கள் அடித்ததால் எதிர் பாராத ஒரு துன்பத்தில் நீங்கள் அவதிப்படுவீர்கள்'' என்ற இந்த சாபத்திலிருந்து விடுபட ஜனமேஜயன் வருத்தத்துடன் தான் மேற்கொண்ட அந்த நாக யாகத்தை முடித்துக்கொண்டு ஹஸ்தினாபுரம் திரும்பினான். யாராவது ஒரு ரிஷியிடம் சரமா கொடுத்த சாபத்துக்கு விமோசனம் தேடினான்.

ஒரு சமயம் காட்டில் வேட்டையாடப்போன ஜனமேஜயன் அங்கு ரிஷி ஸ்ருதச்ரவரின் புத்திரன் சோமஸ்ரவரைப் பார்த்ததும் தீர்மானித்தான். அவரே தனக்கு சாபவிமோசனம் செய்விப்பவர் என்று. சோமஸ்ரவரின் தாய் ஒரு நாகம். பிராமணர்கள் அவரிடம் வந்து எதைக் கேட்டாலும் செய்வார். இது அவர் குணம். ஜாக்ரதை. என்றார் அப்பா ரிஷி. சரி என்று சொல்லி விட்டு அவரோடு ஹஸ்தினாபுரம் திரும்பினான் ஜனமேஜயன். (தொடரும்)


sivan jaykay

unread,
Feb 4, 2018, 6:56:15 PM2/4/18
to amritha varshini
  
                                                                    பிரிந்தவர்  சந்தித்தால்.........

கிருஷ்ண ஜன்ம காண்டத்தில் கடைசி அத்தியாயத்தில் ராதா தனிமையில் பிருந்தாவனத்தில் கண்ணனை நேரில் காணாது எவ்வாறு ஏங்கினாள் என்று தெரிகிறது. சித்தாஸ்ரமத்தில் பிரபாச க்ஷேத்ரத்தில் இணைகிறார்கள். கிருஷ்ணனின் 125 வயதில்,  முதல் 11 வருஷங்கள் நந்தகோபனோடு கோகுலத்திலும்,  14 வருஷங்கள் பிருந்தாவனத்தில் ராதையோடும்,  மீதி நூறு வருஷங்கள் மதுராவிலும் துவாரகையிலுமாக கழிந்தது  என்று சொல்லப்படுகிறது. ஒவ்வொரு புராணம் ஒவ்வொரு காலத்தை குறிப்படியும்போது எது சரி என்று புரியாத நிலை ஏற்படுகிறது. பகவான்  கிருஷ்ணனைப்  பற்றி எது சொன்னாலும் அது சரியே என்று மனம் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கிறது. 

இங்கு ஒரு குட்டிக்கதை அவசியமாகிறது.  

ஒரு  சூரிய கிரஹணத்தின் போது குருக்ஷேத்தரத்தில் ஒரு  பெரிய  கும்பல் கூடியது. அங்குள்ள ச்யாமந்தபஞ்சகம் என்கிற குளத்தில் க்ரஹணம் முடிந்தவுடனே ஸ்நானம் செய்தால் பாபங்கள் விலகி ஆத்மா மோக்ஷம் அடையும் என்று  நம்பிக்கையில் தான்  அனைவரும் அங்கு கூடுவார்கள். பரசுராமர் அநேக க்ஷத்ரியர்களை வதம் செய்து அந்த  பாப  பரிகாரத்துக்காக இங்கு வந்து ஸ்நானம் செய்தார். எனவே  அநேக  ராஜ  குடும்பங்கள்  அங்கு வந்தது.  பாப விமோசனத்துக்காகவும் பரிஹாரத்துக்காகவும் தான். 

துவாரகையிலிருந்து கிருஷ்ணன்  பலராமன்  முதலானோர் பல யாதவ அரச குடும்பங்களோடு குருக்ஷேத்ரம் வந்தனர். ஹஸ்தினா புரத்திலிருந்து திரிதராஷ்டிரன் முழு குடும்பத்தோடு  வந்திருந்தான். பாண்டவர்களும்  இருந்தனர். இங்கேயே பின்னர்  பாண்டவர்களும்  கௌரவர்களும் மோதுவோம்  என்று அப்போது யாரும்  எதிர்பார்க்கவில்லையே! சாதாரண மக்களும் திரண்டு வந்தனர்.  அவர்களில் பிருந்தாவன கோப கோபியர்களும் உண்டே. 

கிருஷ்ணனின்  தாய்   தந்தையர் வசுதேவரும் தேவகியும்  நந்தகோபன்  யசோதாவைச்  சந்திக்க  ஆவலாக  காத்திருந்தனர்.  சந்தித்தபோது  கிருஷ்ணனின்  இரு பெற்றோர்களுக்கும் உணர்ச்சி வசப்பட்டு  வார்த்தை எழவில்லை.  பலராமனும்  கிருஷ்ணனும்  பழைய  பால்ய நண்பர்களை அங்கே குருக்ஷேத்ரத்தில்  சந்தித்தனர்.  

கிருஷ்ணனின்  கண்கள் ராதையைத் தேடின. கண்டுவிட்டன.
கண்கள் மட்டுமே பேசின.  
கோடானுகோடி  வார்த்தைகள்  எண்ணங்களாக  மின்னல்வேகத்தில்  பரிமாறிக்கொண்டன. 
அவற்றின்  பிரதிபலிப்பாக இருவரது  கண்களும்  குளமாயின.  
கிருஷ்ணனது  அரச வாழ்க்கையில்  ராதா   குறுக்கிடவே இல்லை.  
ராதாவை எந்த தர்ம  சங்கடத்திலும்  கிருஷ்ணனும்  ஆழ்த்தவில்லை.
கற்சிலையாக  எத்தனை  யுகங்கள்  அவர்கள்  இருவரும்  அங்கே  ஒருவரை ஒருவர்  விழிகளால் விழுங்கிக்கொண்டு நின்றனர் ? எல்லா எண்ணங்களையும்  சர்வமுமாக  பரிமாரிக்கொண்டபின் தான்.  கண்கள்  நீரின்றி  வறண்ட பாலைவனமான போது  தான்.  ராதா  கிருஷ்ணனின்  மகிழ்ச்சியை  அவன்  பட்ட மகிஷிகளோடு  இருந்தபோது  சிரிப்பில்  கண்டாள்.  அவன்  தன் மீதுள்ள அன்பின்  நினைவால் வாடியதை  அவன்  கண்களில் கண்டாள். 
அவள் முடிவு  சரியானதே. அவரவர்  பாதையில் அவரவர் செல்லவேண்டும்  என்ற  தீர்மானம் பொருத்தமானதே.

கிருஷ்ணன் நந்தகோபன்  யசோதாவின் தாள்  தொட்டு  வணங்கிவிட்டு மதுராவுக்கு  பயணமானான்.  தேர்  ஓட்டம்  போலவே அவன்  மனத்திலும் பிருந்தாவன வாழ்க்கை  நிகழ்வுகள்  வேகமாக  பிருந்தாவனத்தை விட்டு அவன் சென்ற அன்று சுழன்றது

''கிருஷ்ணா   நீ  என்னை  மறந்துவிடுவாயா?  சொல் ''

''என்னால்  முடியாது  ராதா, சூரியனும் சந்திரனும்  கிரணங்களின்றி  ஒளியின்றி உண்டா?.  நீ  என் தெய்வமல்லவா. என் மூச்சல்லவா''

''நீ  என்னை  கல்யாணம் பண்ணிக்கொண்டால்  என்னை  பிரியமாட்டாய் அல்லவா?''

''நமக்கு  தான்  காந்தர்வ  விவாகம்  ஆகிவிட்டதே''

''அரசர்களுக்கு  தானே  அது முடியும். நீ  ராஜாவா?  இந்த ஊர்  கோபன்  தானே?''

''இல்லை  நான்   ராஜா தான்.''

கிருஷ்ணன்  தனது  பிறப்பின் ரகசியத்தை  உணர்த்த  ராதா மூச்சுவிடாமல்  கேட்டாள். அதிசயித்தாள்.

நான்  கம்சனைக் கொன்று  ராஜாவாகி  உன்னை   என்  ராணியாக்குவேன்''

''இல்லை.  கிருஷ்ணா  அது நடக்கவே  நடக்காது. நடக்கவும் கூடாது.  நான்  அற்ப இடைக்குல  பெண். நீ  அரசன். உனக்கு  ஏற்றவள் அல்ல.  ஏராளமாக அரசியர்  உனக்கு மனைவியாக  வந்து சேருவார்கள்.  நான்  இங்கிருப்பது  தான்  முறை. மேலும்  நான்   ராஜா  கிருஷ்ணனை  விரும்பவில்லை.  எனக்கு தெரிந்த  என்  மனம் கவர்ந்த  கோபர்களில் ஒருவனான  கிருஷ்ணனை  மட்டுமே   விரும்புபவள்.  அவன் என்னில்  நிரம்பியிருக்கிறான். இனி  நாம்  மனத்தளவிலேயே  சந்திப்போம்.  இணைவோம்.
நான்  இங்கேயே  இருந்து   நந்தகோபன் யசோதை  ஆகிய உன்  தாய்  தந்தையர்க்கு  பணிவிடை  புரிவேன். உன்னைப் பிரிந்த  அவர்களுக்கு  நானாவது கொஞ்சம்  சந்தோஷம்  தர  முயற்சிப்பேன். உன் நினைவு வந்தால்  நாம் அடிக்கடி சந்திக்கும் மதுவனம் செல்வேன். நீ  இருப்பதாக நினைத்து  பாடுவேன், ஆடுவேன்,  கன்றுகளோடு விளையாடுவேன்.  உன் குழல் கானத்தை  காற்றின் ஓசையில்  மரங்களின்  இலைகள் அசைவில்  உணர்வேன். நீ  தூக்கி நிறுத்திய  கோவர்தன கிரியை சுற்றி சுற்றி வருவேன். யமுனையில்  உன்  நினைவோடு  நீந்துவேன். அதுவே  போதும்  எனக்கு. '' என்றாள் ராதை 

''கிருஷ்ணா,   ஒரே ஒரு வார்த்தை.  பிருந்தாவனத்துக்கு  நீ  ராதையின்  கிருஷ்ணனாக இருப்பதைவிட  உலகத்துக்கே  நீ  யோகியாக  ஆச்சார்யனாக,  லோக  தர்ம பரிபாலன   கிருஷ்ணனாக  இருப்பதையே நானும்  வேண்டுகிறேன். நீ யாவர்க்கும் சொந்தம்  ஆனவன். எனக்கு மட்டுமானவன் அல்ல. உன்னை தியாகம் செய்வதில் பெருமை அடைவேன் ''

''என்  ராதா  பிரிய சகி..''

''கிருஷ்ணா  நீ  போகுமுன் ஒரு முறை  உன் குழலை என்னிடம் கொடு  நானும்  ஊதிவிட்டு தருகிறேன்.  இந்த  குழல்  உனக்கு என்  நினைவை  என்றும் அளிக்கட்டும்''

கிருஷ்ணனுக்கு  பிருந்தாவனத்தில்  அவனைச் சந்தித்த கர்க  மஹரிஷி  சொன்ன வார்த்தைகள் சட்டென்று நினைவுக்கு வந்தது:

 ''கிருஷ்ணா,  நீ  சாதாரண கோபனா,  இந்த  ராதையை  மனது இங்கேயே  வாழ?  யோசி.  உன் பிறப்பின் ரகசியம்  மறந்து விட்டதா?. வசுதேவர் தேவகியின்  எட்டாவது பிள்ளை -- உன் மாமன் கம்சனின் முடிவு உன் கையால்  நிகழ்ந்து யாதவகுலம்  மீண்டும்  உன் தலைமையில்  பொலிவு பெறவும்,  கொடுங்கோல்  ஆட்சி அழியவும்  லோக  பரிபாலன சேவைக்கும்  நீ தேவை. அதற்கு  தகுதியாகும் வரையில்  தான்  நீ  இங்கு  கோகுலத்தில் பிருந்தாவனத்தில் ரகசியமாக நந்தகோபன்  யசோதை  குமாரனாக வளர்ந்தவன். உன்னை வேத சாஸ்திரங்கள்  தர்மங்கள் முழுமையாக கற்க,  வழி நடத்த ஆச்சார்யனாக சாந்தீபனி  முனிவர்  தயாராக  உள்ளார்.நீ அவரிடம் செல்லும் நேரம் வந்துவிட்டதே ''  

கிருஷ்ணன்  புன்னகைத்தான். 

''நந்தகோபன்  யசோதையும்  என்  அன்பு  பெற்றோர்களே. எவருக்கும்  என்  பிறப்பு  ரகசியம்  இங்கு  தெரியவேண்டாம். அவர்களில்  ஒருவனாக  நான்  இருப்பதையே அவர்கள் உணர்ந்து மகிழ்ந்தவர்கள். அவர்கள் உண்மையை  உணரும் வரையில் அவர்களின் எண்ணப்படியே இங்கு நான்  என்றும் வாழ்வேன்.  நானும்  இந்த  நேரத்துக்காகவே  தான்  இத்தனை  காலம் காத்திருந்தவன்.  ராதையைப்  பொருத்தவரை,  ஒன்று சொல்வேன் .   ஒரு வேளை  நான்  கொடிய  விஷங்கொண்ட  காளியனை வதம் செய்ய முற்பட்டபோது மறைந்திருந்தால்  என்  வளர்ப்பு  பெற்றோர்  வருத்தம்  அடைந்திருப்பார்கள். மீளாத  சோகத்தில்  ஆழ்ந்திருப்பார்கள். ஆனால்  ராதா  அக்கணமே தன் உயிரை விட்டிருப்பாள். என் வாழ்க்கையும்  ஜீவனும்  ராதா என்பதை அவளும்  அறிவாள்.'' என்றான் கிருஷ்ணன்.  

கர்க மஹரிஷியும்  அவர்கள் இருவருமே   இணைபிரியாத ஒரே  ஜீவன்  என்று  உணர்ந்து  வாழ்த்தியவர்.

கண்ணன்  விலகுகிறான்  என்ற  செய்தி  காட்டுத்தீயாக  பரவியது.  பேரிடியாக  ஒவ்வொரு வரையும்  பாதித்தது.
பெற்றோர்கள் செல்லக்குழந்தையை இழந்தனர்.  கன்னியர்க்கோ   கற்பனைக்கோட்டைகள்  சிதறின. கனவுகள் கலைந்தன.  கோபர்கள் உற்ற  நண்பனை  இழந்த சோகத்தில்  மயங்கி விழுந்தனர்.  நந்தகோபனும் யசோதையும்   கண்ணீரில் மூழ்கினர்.
ராதையின்  விழிகள்  விரக்தியை  பிரதிபலித்தன. சிலையானாள் . உயிரில்லாத  சிற்பமானாள் . அவள்  காதில்  கண்ணனின் வேய்ங்குழல் நாதம்  ரீங்கரமிட்டது.  வேக வேகமாக   மதுவனத்துக்கு ஓடினாள் .  திரும்பி பார்த்தாள்.   கண்ணனை ஏற்றிக்கொண்டு  சென்ற தேர்  பிருந்தாவனத்திலிருந்து தூரமாக சென்று  புள்ளியாகி  அதுவும்  மறைந்தது.  

 ராதை -கிருஷ்ணன்  பிரேமை பொதிந்த  உறவை முழுதுமாக  யாரால் சொல்லமுடியும்,  எழுதமுடியும்?.  நான்  ஜெயதேவரோ  கண்ணற்ற சூர் தாசரோ  அல்லவே.   ராதையையும்  கண்ணனையும்  நினைவு கூறுவதற்கு     சாட்சியாக  யமுனை  ஓடிக்கொண்டேயிருக்கும்.   பிருந்தாவனம் பூரா   தென்றல் வீசி மனதை கண்ணன் பால் வைக்கும்.  காற்றில்  மென்மையாக  இன்னும் குழலோசை   மனதில் ஆத்ம ராகமாக  ஒலிக்கும்.  அதை எப்போதும் மதுரா, பிருந்தாவனத்தில் கேட்பவரால் கேட்க முடியும்.
 
ஆமாம் இதெல்லாம்  உண்மை  தான்,   எங்கள்   முன்னோர்கள்  நிறையவே  பார்த்திருக்கிறார்கள், கேட்டிருக்கிறார்கள்   என்று  மரங்கள் செடிகள்   எல்லாம் தலையசைக்கும்.   ''ராதா   ஓ   ராதா.....''  என்றுவிண்ணை நோக்கி   உயரே உரக்க சொல்வோமானால்  எங்கும்   ''ஹே  கிருஷ்ணா, மாதவா''  என்று   அது  நம்  மனதில் எதிரொலிக்கும்.  

sivan jaykay

unread,
Feb 5, 2018, 8:00:06 PM2/5/18
to amritha varshini
  ஐந்தாம் வேதம் : 3  ஜே.கே. சிவன் 

                                                          குருவின் சோதனைகள் 

கதையைத் தொடரும் முன்பு  மீண்டும் நண்பர்களே  ஒரு சின்ன அப்பீல்.  தயவு செய்து மஹா பாரதம் போன்ற பழைய ஐயாயிரம்  வருஷ கதைகளை படிக்கும்போது காரண காரியம் தேடாதீர்கள்.  இக்கால நிலையோடு சாப்பிடாமல் அதில் இழையோடும் குருபக்தி, உண்மை, நம்பிக்கை, தெய்வ பலம் இதை மட்டும் ரசியுங்கள். 
                                                                      
மகா பாரதத்தில்  தௌம்யர் என்று  ஒரு ரிஷி  வருவார்.   அவருக்கு  உபமன்யு, ஆருணி, வேதா என்று  மூன்று சிஷ்யர்கள். அவரது ஆஸ்ரமம் அருகே  ஒரு   சிறு காட்டாறு   வெள்ளத்தில் மடை திறந்து விட்டது.  ''அதை  அடைத்து விட்டுவா, ஊருக்குள் வெள்ளம் வந்து விடும்'' என்று  ஆருணியை  அனுப்பினார்  ரிஷி.  ஆருணி எவ்வளவோ  முயன்றும் மடை வாயை  மூட முடியவில்லை. கடைசியில்  தானே  குறுக்கே படுத்து  நீர் வருவதை தடுத்தான்.  

''எங்கே, ஆருணி போனான் ?  நேரமாகிறதே, போனவனைக்காணோமே''  என்று  மற்றவரிடம்  கேட்ட  ரிஷிக்கு அவர்கள்   ஆருணியின்  நிலைமை சொல்லப்பட்டது.

 ''அடாடா  ஆருணி  தானே படுத்து வெள்ளத்தை நிறுத்திக்கொண்டிருக்கிறான். வாருங்கள் அவனைப் போய்ப் பார்க்கலாம் மீட்கலாம்''  என்று  அனைவரும் சென்றனர்.   குரு வாய்ச்சொல்  மீறாமல் தன்னுயிரையும் லட்சியம் செய்யாமல்  மடை வாயில் தன்னையே   தடையாக நிறுத்திய  நீ இன்று முதல் வேதம்  போற்றும்  ''உத்தாலகர் என்று பேர் பெறுவாய் ''  என வாழ்த்தினார்  ரிஷி.  

அவருடைய மற்றொரு சிஷ்யன்  உபமன்யு. அவனுக்கு ஆஸ்ரம பசுக்களை  மேய்க்கும் வேலை.  சற்று குண்டாக  இருப்பான். 

 ''என்னடா  நீ  இவ்வளவு  புஷ்டியாக  இருக்கிறாயே  அப்படி என்ன சாப்பிடுகிறாய்? எங்கிருந்து ஆகாரம் கிடைக்கிறது?.

''குருநாதா,  நான்  அன்றாடம் கிடைக்கும்  பிக்ஷையில் தான்  வாழ்கிறேன்''

''தவறு.  உனக்கு கிடைக்கும்  பிக்ஷையை நீ குருவிடமே  அல்லவா  அளித்து விடவேண்டும். அது தானே முறை.'' என்றார்  தௌம்யர்.

வெகுநாள்  இவ்வாறு  தனக்கு கிடைக்கும்  பிக்ஷையை குருவிடம் கொடுப்பான்.  அவனுக்கு  ஒன்றும் தராமல் தானே  உண்பார். 

மீண்டும்  ஒருநாள்  கேட்டார்.

 ''என்ன  நீ  இன்னும்  பழையபடியே  புஷ்டி குறையாமல்  இருக்கிறாயே என்ன ரகசியம்?

''குருவே,  அடியேன்  தங்களுக்கு  பிக்ஷை அளித்துவிட்டு  மீண்டும் பிக்ஷைக்கு செல்வதில் என்ன கிடைக்கிறதோ அதில்  தான் வாழ்கிறேன்.''

''பெருந்தவறு. ஓர் முறை பிக்ஷைக்கு சென்றவன் மீண்டும் செல்வது தவறு. மற்றோருக்கு கிடைக்கும்  பிக்ஷையைத் தடுக்கிறாயே.'' 

அன்று முதல்  பசுக்களை மேய்த்துவிட்டு  ஆஸ்ரமம் திரும்புவான். பிக்ஷைக்கு தனியாகச்  செல்வதில்லை.  

''ஏதோ செய்கிறாய்  நீ. இன்னும்  இளைக்காமல்  அப்படியே  தான் இருக்கிறாய். சொல் எப்படி  உன் ஜீவனம்  நடக்கிறது'' என்றார் தௌம்யர். 

''குருவே  நான்  இந்த பசுக்கள்   தரும் பாலில்  வாழ்கிறேன்''

''என் அங்கீகாரம் இன்றி எப்படி நீ  பசுக்களின்  பாலைப் பருகலாம். இனி இவ்வாறு செய்யாதே.'''

''அப்படியே  குருவே''   பழையபடியே  அவன்  பருத்து  புஷ்டியாக இருப்பதை  சிலநாள் கழித்து  கவனித்த  குரு  

''எப்படி நீ  இப்போது வாழ்கிறாய் என்று சொல்லேன்''  என்று  குரு ஒரு நாள்  கேட்டதற்கு உபமன்யு சொன்னான்:

''பசுக்களிடம் பால்  பருகிய  கன்றுக்குட்டிகளின் வாயில்  வழியும்  நுரையில்  தான்  என் காலம்  ஓடுகிறது'' என்றான்.

''மகா பாபமாச்சே.  சிறு கன்றுகள்  உனக்காக  தமது  வாயில்  நுரையை விழுங்காமல்  செய்துவிட்டாயே.  இனி அவ்வாறு செய்யாதே'' என்றார் குரு.

காட்டில்  மரங்களின்  இலையில் காலம் தள்ளினான் உபமன்யு. சில  காட்டு இலைகளை உண்டதால் கண்  மங்கிற்று. ஊர்ந்து சென்று ஒரு  குழியில் விழுந்தான்.  வெளியே  வரமுடியாமல் அங்கேயே  சுருண்டு கிடந்தான். 

தௌம்யர்  சிஷ்யர்களை அழைத்து ''உபமன்யுவைக் காணோமே,  எங்கே  என்று தேடி  அழைத்து வாருங்கள்'' என கட்டளை இட்டார்.  அவன் கண் பார்வை இன்றி ஒரு   பெரிய குழியில்  கிடப்பதை அறிந்தார். அவனைத்தேடி சென்று  ஒரு பாழும் கிணற்றின் அடியில்  கிடந்த  அவனிடம்  ''உபமன்யு என்ன செய்தாய்  சொல்?''  

''குருவே  காட்டின் இலைகளில் வாழ்ந்த நான் ஏதோ ஒரு விஷ இலையை உண்டு  பார்வை இழந்ததால் கிணற்றில் விழுந்து விட்டேன்''

''உபமன்யு,  உன் குரு பக்தியை சோதித்தேன்.  உனக்காக  நான்  அஸ்வினி தேவதைகளை  வணங்குகிறேன். நீயும்  அவர்களை வேண்டிக்கொள் உனக்கு  பார்வை மீண்டும் கிடைக்கும்.''   குருவார்த்தை  என்றும் தட்டாத  உபமன்யு அஸ்வினி தேவதைகளை வேண்டினான். அவர்கள் அவன் குருபக்தியை மெச்சி அவனுக்கு  ஒரு  பிரசாதம் அளித்தார்கள்.

 ''இதை உண்டால் உன் பார்வை திரும்பும். ' 

'' நான் என் குருவிற்கு இதை அளிக்காமல் உண்ணமாட்டேன்''

''தவறில்லை,  நீ  இதை உண்ணலாம். உன் குருவும் உனக்காக  வேண்டினார். அவரிடமும்  இதே பிரசாதம் தந்தோம்  ஆனால் அவர்  தனது குருவிற்கு அதை அர்ப்பணிக்காமல்  தானே உண்டார்.  நீயும் அவ்வாறே செய்வதால் தவறில்லை''

''முடியாது மன்னிக்கவும்  அப்படி  எனக்கு  பார்வையே  வேண்டாம்.'  என்றான்  உபமன்யு.

அஸ்வினி தேவதைகள்  அவன் குருபக்தியை வெகுவாக பாராட்டி  அவனுக்கு  பார்வை அளித்தார்கள்.  சத்யம் பேசிய  அவனது  பற்கள் தங்கமாயின.  தௌம்யர் பற்கள்  இரும்பைப்போல்  கருத்தன.  பார்வை கிடைத்த  உபமன்யு குருவிடம் ஓடினான். விழுந்து வணங்கினான்.  

''எல்லா சோதனைகளிலும்  தேறிய  உபமன்யு,  நீ  சகல வேத சாஸ்திரங்களும் அறிந்த ஞானியாவாய் '' என  அருளினார்.

அடுத்ததாக  வேதா  என்ற  சிஷ்யனுக்கு  பரிக்ஷை  நடத்தினார் தௌம்யர்.  மாடு போல்  அன்ன ஆகாரமின்றி,  வாய் முணுமுணுத்தல் இன்றி  இன்முகத்தோடு குருவிற்கு  சகல சேவைகளும் செய்தான்  வேதா. 

இப்படியாக அவனது  குருகுல வாசம் முடிந்தது. கல்யாணம் செய்துகொண்டான். வாழ்க்கை ஓடியது.  அவனுக்கும் நிறைய சிஷ்யர்கள். ஆனால் அவர்களை துன்புறுத்தவில்லை. எதையும் எதிர்பார்க்கவில்லை.  தான் பட்டதெல்லாம் தன்னோடு   போகட்டும்  என்ற எண்ணத்தில்  அவர்களை  அன்போடு நடத்தினான்.'' 

தனது குருவின்  வீட்டிலேயே  தங்கி  அவருக்கு  சகல பணிவிடைகளும் செய்தான்  உதங்கா எனும்  சிஷ்யன்.   ஊர் திரும்பிய குருவுக்கு மட்டற்ற  மகிழ்ச்சி.  "உதங்கா  என்  மகனே,  நீ  செய்த  சேவைக்கு   நான்  செய்ய முடிந்ததெல்லாம் இனி  நீ  சிஷ்யனல்ல.  சகலமும் கற்றுவிட்ட  நீ  இனி  குரு ஸ்தானம் பெற்றுவிட்டதால்   என்னைப்போன்று  நீயும்  நல்ல  சில சிஷ்யர்களைப் பெற்று அவர்களுக்கு  நல்வழி காட்டு. உன் விருப்பங்கள்  எல்லாம்  நிறைவேறட்டும் '' 

குருவுக்கு  தக்ஷிணை?  குருவே  நீங்கள் எதைக் கேட்டாலும்  கொணர்ந்து தருவேன்  கட்டளையிடுங்கள்''  என்றான்  உதங்கா. 

சரி அப்பனே,  நீ  உள்ளே  போய்  குரு பத்னியிடம்  என்ன தேவை என்று கேட்டு  அதைப் பெற்று வா. அது போதும்'' என்கிறார் குரு.

''என் மகனே  உதங்கா, நீ  நேராக  பௌஷ்ய ராஜாவிடம்  செல். அவன் ராணி போட்டுக்கொண்டிருக்கும்  காதணிகளைப் பெற்றுக்கொண்டு வா''  இன்றிலிருந்து  நாலு நாளில்  இந்த ஆஸ்ரமத்தில்  சில  பிராமணர்களுக்கு  உபசாரம் நடக்கும்போது  நான் அந்த காதணிகளை  அணிந்து அவர்களை வரவேற்பேன். வெற்றியோடு வா. இன்றேல்  நடப்பது நடக்கட்டும்'' என விருப்பத்தை தெரிவித்தாள்  குருபத்னி. 

 வழியில் எத்தனையோ  சோதனைகளைச் சந்திந்து பௌஷ்ய ராஜாவின் அரண்மனை அடைந்தான்  உதங்கா.  ராஜாவின்  சிம்மாசனம் அருகே சென்று  வணங்கினான்.  ராஜா  இந்த பிரம்மச்சாரியை மெச்சி  ''என்ன பரிசு  வேணும்  உனக்கு''  என்று வினவ  ''மகாராஜா  எனது குரு மாதாவுக்கு  தங்கள்  ராணி அணிந்துகொண்டுள்ள  காதணிகள் வேண்டுமாம்.  தரவேண்டும்'' என்று  கேட்டான்.

மகாராஜா  சிரித்து  ''மகனே,  நீயே  மகாராணியைச்  சந்தித்துக் கேள்'' என்று  அனுப்ப,  ராணியைத் தேடினான்.  கண்ணில்  பட வில்லை.  ராணியைக் காணோம் என்று  ராஜாவிடம் வந்து முறையிட ''உன்னிடம்  பரிசுத்தம்  இருந்தால்  மட்டுமே  ராணி கண்ணில் தெரிவாள்''  என்று  ராஜா   சொல்ல,  உதங்கா அங்கேயே  தவமிருந்து குருவைத் தியானித்து  பிறகு மீண்டும்  அந்தப்புரம் சென்றபோது  ராணி  தெரிந்தாள் .

ராணி அவன்  குருபக்தியை மெச்சி  தனது காதணிகளை  கழட்டிக் கொடுத்த போது  ''அப்பனே   தக்ஷகன்   என்கிற  என்கிற  நாக ராஜன்  இந்த  காதணிகளை வெகு காலமாக  அடைய  காத்திருக்கிறான்  ஜாக்ரதையாக அவனிடமிருந்து தப்பி  உன் குருவிடம் போய்ச் சேர்''  என்றாள்  ராணி.

ராஜாவுக்கு   நன்றி  தெரிவித்து விட்டு. உதங்கா  புறப்பட்டான். போகும் வழியில்  காட்டில்  ஒரு  நீர் நிலையைக் கண்டதும்  தனது  கையிலிருந்த மூட்டையைக் கீழே வைத்துவிட்டு  ஆற்றில் இறங்கினான்.  ஸ்ரமபரிகாரம்  பண்ணினான்.  எங்கிருந்தோ  ஒருவன்  இதைக் கவனித்துவிட்டு  ராணி கொடுத்த  காதணிகள் இருந்த உதங்காவின் பையை  ஆற்றங்கரையிலிருந்து   திருடி எடுத்துக் கொண்டு சென்றுவிட்டான்.   வெளியே வந்து பையைக் காணாத  உதங்கா தனது குருவை  த்யானித்து  அந்த  சக்தியில் ஓடி அந்தத்  திருடனைப் பிடித்து விட்டான்.   பிடிபட்ட திருடன்  தனது சுய உருவான   தக்ஷகன்  எனும்  ராஜ  நாகமானான். அருகே  இருந்த  ஒரு  பொந்தில் நுழைந்து மறைந்து தான் வாசம் செய்யும்   நாகலோகம் சென்றுவிட்டான்.   அந்த  புற்றை தான் கையில் வைத்திருந்த  ஒரு  கோலினால்  அகலமும் ஆழமும் படுத்தினான்  உதங்கா.   குருவைத் தியானித்து   வேகமாக  பள்ளம் தோண்டின உதங்காவுக்கு  இந்திரன்  தனது  வஜ்ராயுதம் கொடுத்து உதவினான். ஆழமான  அந்த  பள்ளத்தில்  இறங்கி  உதங்கா  நாகலோகம்டைந்தான்.  அனேக  மாட மாளிகை கோபுரங்களை  கடந்து சென்ற  அவனை  நாகப்படை  சூழ்ந்து கொண்டது.  to continue......
MY MAHABHARATHAM BOOK IN TWO VOLUMES '' AINDHAM VEDHAM'' OF ABOUT 1000 PAGES IN ART PAPER WITH MULTI COLOR PICTURES ARE AVAILABLE FOR A MINIMUM DONATION OF RS. 1000. THIS IS NOT FOR SALE, BUT TO MEET THE PRINTING EXPS ONLY. INTERESTED MAY CONTACT ME. J.K.SIVAN 9840279080 OVER PHONE OR WHATSAPP MSG.



RAM MURALIDHARAN

unread,
Feb 11, 2018, 6:55:27 PM2/11/18
to akila srinivasan, Brig R S Murthy, chandu saab, ganesh biyer, gomathi ramachandran, happy, J.D.(COMNS), jayakodi muralidharan, K P Haran, kamakshi ramesh prasad, Lakshminarayanan Muralidharan, Lalitha Srinivas, Mali Nandakumar, Nandakumar Sivanandam, NANDAKUMAR VENKATRAMAN, pattabhiraman sulamangalam, poorna haarit, Priya Kishore, Ramanathan SK, Sabesan Gourisankaran, Shankar, T.G.Srinivasan, vaidyaraj, Venkat Vedavyasan, Vijay Gourisankaran, bharath ram, denve...@yahoo.com, man...@yahoo.com, padmaja_r...@rediffmail.com, potula...@rediffmail.com, Anupama Nuthalapati, Hareesh Kumar, Harish Mahadevan, Lokesh Kumar, Mythili Muralidharan, praveen kumar, Raja Vanniyan, sarada sundaresan, SRINIVASA RAGHUNATHAN, srinivasan seetharaman, Subramanyam Sridharan, suriya mahendiran, Vasudevan KS, Venugopal Venkateswaran, amrith...@googlegroups.com

2017ஆம் ஆண்டு நடப்பு அக்டோபர் மாதத்தில் அடுத்தடுத்து வெளியான மூன்று செய்திகள் தமிழ்நாட்டு மக்களை அதிர்ச்சிக்கும் கவலைக்கும் உள்ளாக்கியிருக்கின்றன.
"அக்டோபர் 3 ஆம் தேதி இராமேசுவரம் இராமநாதசுவாமி கோவிலில் அம்மனுக்கு அணிவிக்கப்படும் வைரத்தாலி, வைரப்பல்லாக்கு, வைர மூக்குத்தி, வைர கழுத்தணி, வைர நெத்திச்சுவடி, தங்கத் தாழம்பூ, மரகதத் திலகம், நீலக்கல் திலகம், வைர மார்புக்கவசம் உள்பட விலை மதிக்க முடியாத ஏராளமான வைரம், வைடூரிய நகைகளைக் காணவில்லை. மேலும், மூல ஸ்தானத்தில் இருந்த 22 கிலோ தங்கத்தாலான மணி, விலை மதிக்க முடியாத வலம்புரி சங்கு ஆகியவையும் காணவில்லை. 1972ஆம் ஆண்டு கோவில் சொத்துப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த நகைகள் 1995ஆம் ஆண்டுப் பட்டியலில் இடம் பெறவில்லை.'' என பக்தர் ஒருவர் அளித்த முறையீடு குறித்து விசாரித்த உயர்நீதிமன்றம் இது குறித்துப் பதில் அளிக்குமாறு அறநிலையத்துறைக்கு ஆணைப் பிறப்பித்துள்ளது.
இரண்டு நாட்கள் கழித்து அக்டோபர் 6ஆம் தேதியன்று புதுக்கோட்டை மாவட்டம், விராலி மலை அருகே அரசு பஸ்சுடன் நேருக்கு நேராக கார் ஒன்று மோதியது. இந்த காரிலிருந்த 4 பேர் பலத்த காயத்துடன் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். இந்தக் காரை காவல்துறையினர் சோதனையிட்டபோது 8 கிலோ எடையுள்ள மரகத லிங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த லிங்கம் எந்தக் கோயிலைச் சேர்ந்தது என்பதைக் குறித்து, காரில் வந்தவர்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றனர் என்ற அதிர்ச்சி தரும் செய்தி வெளியானது.

அதே நாளில் சிலை கடத்தல் வழக்கில் காவல் துறையில் துணைக் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்த காதர் பாட்சா என்பவர் பறிமுதல் செய்த சிலையை அரசிடம் ஒப்படைக்காமல் விற்பனை செய்ததாகக் கைது செய்யப் பட்ட செய்தி வெளியானது. ஆக மூன்று நாட்கள் இடைவெளியில் வெளியான இச்செய்திகள் தமிழ்நாட்டுக் கோவில்களில் உள்ள விலை மதிக்க முடியாத சிலைகள், வாகனங்கள், நகைகள், ஆபரணங்கள் ஆகியவை பத்திரமாக உள்ளதா- என்ற கேள்வியை மக்கள் மனதில் எழுப்பியுள்ளன.
தமிழ்நாட்டில் பெரிதும் சிறிதுமான 31,423 கோவில்களும் மற்றும் மடங்கள், மடங்களைச் சேர்ந்த கோவில்கள் மற்றும் அற நிலையங்கள் சுமார் 2000 உள்ளன. இந்த கோவில்களை மன்னர்களும், மன்னர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களும், சிற்றரசர்களும், பெரும் செல்வர்களும் கட்டியதோடு அக்கோவில்களுக்குரிய சிலைகள், நகைகள், ஆபரணங்கள் ஆகியவற்றை அளித்துள்ளார்கள். மேலும், இக்கோவில்களில் வழிபாடுகள் முறையாக நடைபெற நில மானியங்களையும் அளித்துள்ளார்கள்.

கோவிலில் வழிபாடு நடத்துபவர்களுக்கும், தேவாரங்கள், பாசுரங்கள் ஆகியவற்றைப் பாடுபவர்களுக்கும் நில மானியங்கள் அளிக்கப்பட்டுள்ளன. கோவில் வாகனங்கள், நகைகள், ஆபரணங்கள் ஆகியவற்றில் பழுது ஏற்பட்டால் அவற்றை பராமரிக்கும் சிற்பிகளுக்கும் நில மானியங்கள் அளிக்கப் பட்டுள்ளன. ஏறத்தாழ 5 இலட்சம் ஏக்கர் நிலங்கள் இவ்வாறு அளிக்கப் பட்டுள்ளன. பல ஆயிரம் கோடி ரூபாய் பெறுமான நகைகளும், ஆபரணங்களும் ஐம்பொன் சிலைகளும் மன்னர்களாலும் மற்றவர்களாலும் அளிக்கப்பட்டுள்ளன. மன்னர்கள் தாங்கள் கட்டிய கோயில்களை நிருவகிப்பதற்கு தக்கவர்களை நியமித்து வழிபாடு, திருவிழாக்கள் முதலியவை எவ்வித தங்கு தடையுமின்றி நடைபெறவும், கோயில் சொத்துக்களை பராமரிக்கவும், பாதுகாக்கவும் உரிய ஏற்பாடுகளையும் செய்திருந்தார்கள்.
மன்னர்கள் ஆட்சி மறைந்து, ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆட்சி ஏற்பட்டபோது மாவட்ட ஆட்சியாளர்களின் நேரடி பொறுப்பில் கோவில் நிருவாகம் 
கொண்டுவரப்பட்டது. இந்துக் கோயில்களை ஆங்கிலேயர்கள் நிருவகிக்கக்கூடாது என்ற கிளர்ச்சி எழுந்தது. இதன் விளைவாக 1863ஆம் ஆண்டில் ஆங்கிலேய அரசு ஒரு சட்டம் இயற்றி அறநிலையங்களின் சொத்துப் பராமரிப்பு பணியை அதிகார சார்பற்றவர்களைக் கொண்ட குழுக்களிடம் ஒப்படைத்தது. இச்சட்டத்தில் இருநத பல குறைகளை அகற்றும் முயற்சியில் பல சட்டங்கள் ஒன்றன்பின் ஒன்றாக இயற்றப்பட்டன. 1925ஆம் ஆண்டில் சென்னை மாநிலத்தில் ஜஸ்டிஸ் கட்சி ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது அறநிலையங்களைப் பாதுகாக்கும் சட்டம் கொண்டுவரப்பட்டது. 1925ஆம் ஆண்டு சட்டத்திற்குப் பின் 1954ஆம் ஆண்டு வரை 10 சீர்திருத்தச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன.
இவற்றைத் தொடர்ந்து பல சட்டங்கள் கொண்டுவரப்பட்டாலும் 1981ஆம் ஆண்டு திருத்தப்பட்ட சட்டத்தின்படிதான் தற்போது கோவில்கள்நி ருவகிக்கப்படுகின்றன. இவ்வளவு திருத்தங்கள் கொண்டுவரப்பட்ட போதிலும் ஆலய நிருவாகம் செம்மையாக இல்லை. அரசியல் அதிகாரம் குறுக்கிட்டு அனைத்தையும் சீரழித்துள்ளது.

ஆலயங்களுக்குச் சொந்தமான நிலங்களும் கட்டிடங்களும் இதர சொத்துக்களும், அரசியல் ரீதியாக வேண்டியவர்களுக்கு மிகக் குறைந்த குத்தகைக்கு அல்லது வாடகைக்கு விடப்படுகின்றன. கோவில் நிலங்களிலிருந்து கிடைக்கும் வருமானம் குறைந்துகொண்டே போகிறது. நிலங்கள் யார் யார் பெயருக்கோ மாற்றப்படுகின்றன. இராசராசசோழன் காலத்தில் அவன் கட்டிய தஞ்சை பெரிய கோவிலுக்கு 18 ஆயிரம் வேலி நிலத்தை இறையிலியாக அளித்தான் என அக்கோயிலின் கல்வெட்டு கூறுகிறது. ஆனால் இப்போது ஒரு வேலி நிலம் கூட அக்கோவிலுக்குச் சொந்தமாக இல்லை. கோவில் உண்டியல்கள் உடைக்கப்படுவதும், காசுகள் திருடப்படுவதும், விலை மதிப்பற்ற சிலைகளும், நகைகளும், ஆபரணங்களும் மிக எளிதாக கொள்ளையடிக்கப்படுவதும் தொடர்கின்றன.

1981 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து சட்டமன்றத்திலும் வெளியிலும் கீழ்க்கண்டவற்றை வலியுறுத்தினேன்.
"கோவில்களில் உள்ள நகைகள், ஆபரணங்கள் ஆகியவற்றின் தற்போதைய மதிப்பு என்ன- அவற்றின் பழமை மதிப்பு என்ன- என்பதைத் தக்க நிபுணர்களால் மதிப்பீடு செய்யப்பட்டு பதிவேடுகளில் பதியப்பட வேண்டும். அத்துடன் அவைகள் அனைத்தும் பல கோணங்களில் வண்ணப்படங்களாக எடுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட கோயில்களில் ஒரு பிரதியும், அறநிலைய ஆணையாளரிடம் ஒரு பிரதியும் அளிக்கப்பட வேண்டும். பல கோவில்களில் நகைகளும், சிலைகளும், ஆபரணங்களும் களவு போனபோது அவற்றின் மதிப்பீடுகள் சரியான முறையில் பதிவு செய்யப்படாத காரணத்தினால் திருடு போன பொருட்களை திரும்பப் பெறுவதில் பல இடையூறுகள் ஏற்பட்டன.

1980ஆம் ஆண்டு தமிழ்நாட்டுக் கோவில்களில் உள்ள ஐம்பொன் சிலைகளைப் பாதுகாப்புத் துறையின் துணையுடன் அடையாளப் பதிவு செய்யும்படி இந்திய அரசு ஆணையிட்டது. ஆனால், அவ்வாறு செய்ய தமிழக அரசு முன்வரவில்லை. இதன் விளைவாக ஆயிரக்கணக்கான சிலைகள் தமிழ்நாட்டுக் கோயில்களில் களவுபோயுள்ளன.
மேற்கு நாடுகளில் உள்ள அரசு அருங்காட்சி அலுவலகங்களிலும், தனியார் அருங்காட்சி அலுவலகங்களிலும் தமிழகத்தைச் சேர்ந்த கற்சிலைகளும், ஐம்பொன் சிலைகளும் கணக்கில்லாமல் காட்சி தருகின்றன. இவை எப்படி அங்கு சென்றன- கிராமப்புறங்களில் உள்ள பாதுகாப்பற்ற கோயில்களில் இவைகளைத் திருடுவது எளிதாகிறது. அறங்காவலர்கள், அதிகாரிகள் ஆகியோருக்குத் தெரியாமல் இந்த திருட்டு நடைபெற்றிருக்க முடியாது.
இந்து அறநிலையச் சட்டத்தின் 33ஆவது பிரிவு 3ன் படி கோவில்களுக்குச் சொந்தமான பணமோ, நகைகளோ, சிலைகளோ திருடப்பட்டிருந்தால் தொடர்பான 
அறங்காவலர்களிடமிருந்து அவற்றைத் தண்டும் அதிகாரம் ஆணையாளருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதுவரை எந்த அறங்காவலரின் மீதும் எவ்வித 
நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.
கோவில்கள் உள்பட இந்து அறநிலையங்கள் நிருவகிக்கப்படும் முறை குறித்து ஆராய்வதற்காக 1960ஆம் ஆண்டு இந்திய அரசு சி.பி. இராமசாமி ஐயர் தலைமையில் ஆணையம் ஒன்றை அமைத்தது. திருச்செந்தூர் கோயில் தணிக்கை அதிகாரி படுகொலை செய்யப்பட்ட போது தமிழக அரசினால் அமைக்கப்பட்ட நீதியரசர் பால் ஆணையம், கோவில் நகைகள் ஆபரணங்கள் சிலைகள் ஆகியவற்றின் பாதுகாப்பு குறித்து ஆராய அமைக்கப்பட்ட நீதியரசர் கிருஷ்ணசாமி ரெட்டியார் ஆணையம் ஆகிய ஆணையங்கள் கோயில் சொத்துக்களைப் பாதுகாப்பது குறித்து மிக விரிவாகவும் தெளிவாகவும் பல பரிந்துரைகளை அளித்துள்ளன. ஆனால் இவற்றில் எதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது வருந்தத்தக்கதாகும்.

களவுபோன கோயில் சிலைகளை மீட்கும் பணியில் திறமையுடன் செயல்பட்டு பல சிலைகளை மீட்ட காவல் துறையின் உயர் அதிகாரி பொன். மாணிக்கவேல் அவர்களைப் பாராட்டுவதற்குப் பதில் திடீரென மாற்றப்பட்டதும், பின்னர் உயர்நீதிமன்றம் தலையிட்டு சிலை மீட்புப் பணியை அவரிடமே ஒப்படைக்க வேண்டும் என ஆணைப் பிறப்பித்ததும் தமிழகக் கோவில்களின் நிருவாகத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டைத் தோலுரித்துக் காட்டியுள்ளன.
தமிழ்நாட்டுக் கோயில்கள் வழிபடும் தலங்கள் மட்டுமல்ல கோயில்களும், சிற்பங்களும், சிலைகளும், நகைகளும், ஆபரணங் களும், வாகனங்களும் தமிழ்ம க்களுக்கேயுரிய விலை மதிப்பற்ற கலைக் கருவூலங்களாகும். நம்முடைய முன்னோர்கள் அவற்றைப் பத்திரமாகப் பாதுகாத்து நம்மிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். நாம் அவற்றைப் பாதுகாத்து எதிர்காலத் தலைமுறையிடம் ஒப்படைக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் உள்ளது. இதை உணர்ந்து மக்கள் செயல்பட முன்வந்தால் ஒழிய கோவில் கொள்ளைகள் தொடர்வதை யாராலும் தடுக்க முடியாது.

----- பழ. நெடுமாறன் (தினமணி) 10-10-17



--
*Have a Great Day*

The biggest communication problem is do not listen to understand- we listen to reply

"The degree of freedom from unwanted thoughts and the degree of concentration on a single thought are the measures to gauge spiritual progress."

**

*Banju  R Muralidharan*
*403, Legend Apartments-Tunk Residency*
*Padmarao Nagar*
*Secunderabad-500025*
*91 40 2750 0381*Mob#+91 98 49 590381

sivan jaykay

unread,
Feb 13, 2018, 7:55:19 PM2/13/18
to amritha varshini

                ‘’ குளப்புள்ளி  கதாதாரி  வெண்ணை கிருஷ்ணன்’  J.K SIVAN 

ஹிமாலய மலைத்தொடர்களில்  எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறியது போல் ஒரு பெருமிதம் பிரசன்ன குமாருக்கு. 
 
''கிருஷ்ணா  நீ  வெளியே  படியில் கிடந்தது  போதுமப்பா, வா உள்ளே.  உன் கோவில் தயாராகி விட்டது''.  அன்று  
பிரதிஷ்டை பண்ணி  குளப்புள்ளி  ஸ்ரீ கிருஷ்ணன் குடி புகுந்தான்.  ஆலயத்தில் மட்டுமா குடி புகுந்தான். மாயாவி.  ஊர் முழுதும்,
ஏன், எங்கெங்கோ இருப்பவர் மனதை  எல்லாம் ஆக்கிரமித்து  அல்லவோ குடி பெயர்ந்தான்.  இனி இந்த கோவில் விடாமல்
பராமரிக்கப் பட வேண்டும். எங்கே சரியான ஆட்கள்?  2006ல் ஒரு அமைப்பு  பொருத்தமான  நண்பர்களோடு  உருவானது. 

இதெல்லாம் சொன்னேனே  அந்த கிருஷ்ணன் பற்றி சொல்லவில்லையே? யாராவது ஏன்  என்று கேட்டீர்களா?  அவன்
வித்யாசமானவன்.  வலது உள்ளங்கையில்  பெரிய வெண்ணை உருண்டை.  இடது கையில்  அதை யாரும்  தொட நெருங்க
முடியாமல்  ஒரு  பெரிய கதாயுதம். எந்த கோபியின் வீட்டு வெண்ணையோ? திருட்டுத்தனமாக வெண்ணையை வெற்றிகரமாக
எடுத்த சந்தோஷம் தான் முகத்தில் புன் சிரிப்போ?    நீ ஏன்  எத்தனையோ வித பக்ஷணங்கள்  இருக்கும்போது  இந்த
வெண்ணையை பிடித்தாய்?  எனக்கு தெரியும்  காரணம்?  நீ செய்யும் சேஷ்டிதங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு காரணம் உண்டே. 
இந்த வெண்ணை எப்படி கிடைக்கிறது?  சொல்லட்டுமா?

உனக்கு பிடித்த பசுக்கள் தரும் பாலைக்  காய்ச்சி, அது ஆறினவுடன் , சிறிது தயிரோ, மோரோ கலந்து, அசைவற்று,  பிறகு அது தெளிந்து , இறுகி கெட்டியாக தயாராகிறது. அதை அப்புறம் கடைந்து அதில் இருந்து மேலே எழும்பி  ஒட்டாமல் மிதப்பது  தானே வெண்ணை.  ஓஹோ  இதை ஒரு  காரணமாக உதாரணமாக காட்டுகிறாயோ?  

''ஓஹோ, புரிகிறது,  அப்பனே,  நீ எதை உணர்த்துகிறாய் என்று புரிகிறது.  கொந்தளிக்கும் மனதை, கொஞ்சம் கொஞ்சமாக

உணர்ச்சிகளிலிருந்து  ஆறவைத்து, அதில் தன்னலமற்ற எண்ணத்தை புகுத்தி, மனதை ஆடாமல் அசையாமல் ஒரு
நிலையில் நிறுத்தினால், அது உறுதிப் பட்டுவிட்டதே. பிறகு, அதனை மீண்டும் அலசி, கடைந்து, கொஞ்சம் நஞ்சம் இருக்கும்
 ஆசை, மோகம், க்ரோதம், லோபம், மாச்சரியம் என்ற தேவையற்றவைகளை நீக்கினால் பெறுவது தானே  நிர்மலமான
 வெண்ணை. அது தான் தூய்மையான மனம். இதை தான் நீ எங்களிடம் எதிர்பார்க்கிறாய். விரும்புகிறாய். உனக்கு பிடித்த
வெண்ணை....  இது தானே உன் வலது கையில் வெண்ணை உருண்டையின்  தாத்பரியம்.

இடது கை  கதாயுதம்?   நீ  தானே காக்கும் கடவுள்.  விஷ்ணு என்கிற நாராயணன் என்கிற கிருஷ்ணன் . மேலே சொன்னது
நல்லமனது கொண்ட சிஷ்டர்கள்  பற்றி. அந்த சாதுக்களை எப்படி ஸிஷ்ட  பரிபாலனம் பண்ணுவாய், பாதுகாப்பாய்?.  ஒரு காக்காயை விரட்டவே குச்சியோ, கொம்போ  தேவைப்படுகிறதே.  கொடிய ராக்ஷஸர்களை, துஷ்டர்களை எப்படி நிக்கிரஹம் பண்ணுவாய்? அதற்கு தான் இந்த கதாயுதமோ?  பிரசன்ன குமார் இந்த கிருஷ்ணன் எங்கே இருந்து  வந்தான்? எந்த
காலத்தை சேர்ந்தவன் என்று கண்டுபிடிக்க அலைந்தபோது அவர் திரட்டிய தகவலை சுருக்கமாக  தருகிறேன்:

ஒரு காலத்தில்  பாண்டிய ராஜாவின் ஆளுமையில்  கொங்கு தேசம் இருந்திருக்கிறது. அந்த நல்ல பாண்டிய ராஜாவின் பெயர் மாறவர்மன் சுந்தர பாண்டியன்.  இவன் 13வது நூற்றாண்டில் ஆண்ட  மதுரை அரசன். அவன் தான் இந்த கிருஷ்ணனை முதலில்
சிலையாக வடித்து கோவில் கட்டியவன் என்று தெரிகிறது.  அப்பறம் ஒரு ஐந்து ஆறு நூற்றாண்டுகள் எந்த பாதிப்பும் இன்றி
கோவில் பராமரிக்கப் பட்டு வழிபட்டிருக்கிறார்கள். 

18வது நூற்றாண்டில் வந்தானய்யா  திப்பு சுல்தான்!  முஸ்லிம்கள் ஹிந்து கோவில்களை அழித்தது போல் உலகில் வேறு எவரும்
அவ்வளவு கொடுமையாக நடந்ததில்லை என்று கற்பூரம் ஏற்றி சத்யம் செய்யலாம். நிறைய கோவில்கள்  காணாமல் போயின.

விக்ரஹங்கள் உடைந்தன. கோவில்கள் மசூதிகளாயின. பெண்கள் கடத்தப் பட்டு மதம் மாற்றப் பட்டனர். ஆண்கள், கொல்லப்பட்டனர்.  இது நான் சொல்லவில்லை.  நீங்கள் கண்களில் ரத்தம் சொட்ட  சரித்திர ஏடுகளை புரட்டி படித்து  தெரிந்து கொள்ளலாம். 

குளப்புள்ளி  கிருஷ்ணன் கோவில் பிடிபட்டது. இடிபட்டது. காலம் ஓடியது. மண் மேடாகியது. புதர் மண்டியது.  காடானது. குளப்புள்ளி கிருஷ்ணன் பிரசன்ன குமாருக்காக காத்திருந்தான்.  மீண்டும் புனருத்தாரணமான கிருஷ்ணன் நவநீத கிருஷ்ணன்
ஆனான். வெண்ணை கிருஷ்ணன். கேரளாவின் முக்கிய கோவில்களின் குளப்புள்ளி ஸ்தல ஸ்ரீ கிருஷ்ணன்  ஆலயமும்
ஒன்றானது. மற்றவர்கள், ஆமாம், கணபதி, ஐயப்பன், நாகர்  புதிய வடிவம் பெற்று அழகாக தனித்தனி சந்நிதிகளில்  பிரதிஷ்டை
பண்ணப் பட்டார்கள். புதிதாக ஒரு கருடன் இறக்கையை விரித்து எல்லோரும்  வாருங்கள் என்று கூப்பிடுகிறான். கோவிலின்
கிழக்கில்  அவனது தோற்றம் கண்ணைப் பறிக்கிறதே . வெண்ணை கிருஷ்ணன்  அழகாக காட்சியளிப்பது அவனது  நின்ற
திருக்கோலம். நவநீத கிருஷ்ணன் ஊரெங்கும் சென்று பக்தர்களை அவர்கள் வீட்டு வாசலிலேயே கண்டு  சௌக்யமாக இருங்கள். அதற்கு தானே நானே உங்களை பார்க்க வந்திருக்கிறேன்  என்று சொல்வதற்கு தன்னை சிறிய  ஒரு அடி  உயர குட்டி கிருஷ்ணனாக உற்சவனாக பண்ணிக் கொண்டிருக்கிறான். ஏன் தெரியுமா?  மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்று காட்ட!  

கேரள சம்பிரதாயப்படி கட்டப் பட்ட அழகிய கோவில். காற்றோட்டமான ஆரோக்ய, சீரமைக்கப்பட்ட  பிரகாரம். பண்டிகை
நாட்களில் சுவற்றில் பதிக்கப்பட்ட  எண்ணற்ற  விளக்குகளில்  எண்ணெய்  தீபங்கள் எரியும்போது அந்த இடத்தை விட்டு நீங்கவே மனம் வராது. காலும் நகராது.  சுவற்றில் நமது தமிழ் நாட்டு கோவில்களில் பார்ப்பது போல்   எண்ணெய்  தீற்றவோ, , பரிக்ஷை நம்பர்கள், அட்ரஸ், பெயர், டெலிபோன் நம்பர்   எல்லாம் எழுதவோ  ஏன் இந்த  மலையாளிகளுக்கு தெரியவில்லை. ஒருவேளை தோன்றவில்லையா?.

அடுத்த கட்டுரையோடு நிறைவு பெறும். 

Sivan Krishnan

unread,
Feb 16, 2018, 6:32:30 PM2/16/18
to amritha varshini

குந்தியின் பிரார்த்தனை. 3 J.K. SIVAN

கிருஷ்ணன் தான் பரமேஸ்வரன் எனும் பரமாத்மா. உள்ளும் புறமும் நிறைந்தவன். அவன்குந்தியின் எதிரே அவள் சகோதரன் மகனாக மானிட உருவில் நின்றாலும் அவள் உள்ளத்திலே பரமாத்மா ஸ்ரீ நாராயணனாக அவன் அம்சமான ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவாக ஒளி வீசியவன்.

குப்புஸ்வாமி நாடகத்தில் செட்டியாராக வேஷம் போட்டால் நாம் செட்டியாரை பார்க்கிறோமே தவிர நமது நண்பன் குப்புஸ்வாமி அங்கே தென்படவில்லை. பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் அப்படித்தான் எல்லோரிலும் இருந்தாலும் நாம் எல்லோரையும் பார்க்கிறோமே தவிர எல்லோரிலும் அவனைப் பார்க்க தவறுகிறோம்.

தவம் செய்து சக்தி பெற்றாலும் அசுரர்கள் அவன் மூலம் பெற்ற தங்களது அதிகாரம் சக்தி அவற்றை உயர்வாக மதித்து, அவனையே இகழ்ந்து, எதிரியாகத் தான் பார்த்தார்கள். அழிந்தார்கள்.

பகவானை புலன்களையும், ஐம்பூதங்களையும் கடந்து மட்டுமே உணரமுடியும். கண்ணால் கண்டால் தான் அவன் இருப்பதை உணர்வேன் என்ற எண்ணம் மறைய, நமது சரீரத்தில் அவன் அளித்த ஐம்புலன்களின் சக்தியை மீறிய உணர்வு என்ற அறிவு தேவை. அர்ச்சாரூபமாக ஆலயங்களில் அவன் தோன்றுவது அவன் அதையும் தாண்டிய அருவமான, அதீத, ஒரு மா பெரும் சக்தி என்பதை கொஞ்சம் கொஞ்சமாக நமக்கு உணர்த்துவதற்காகவே.

கட்டம் போட்ட நோட்டு புத்தகத்தில் ஒவ்வொரு எழுத்தாக எழுதி பழகியவன் தான் பின்னால் மாபெரும் கவிஞனாக, புலவனாக, அறிஞனாக, எழுத்தாளனாக பக்கம் பக்கமாக வெள்ளைத்தாளில் எந்த கோடுகளும் இன்றி எழுதுபவனாக மாறுவது போல். விழுந்து வணங்குவது, சரணடைவது என்பதே அவனே எல்லாம், அணுவுக்குள் அணுவாக, அண்டத்தில் பேரண்டமாக மிளிர்பவன் என்பதை உணர்வதற்காக. இதனால் நமது அகந்தை அழிந்தபின். அறிவினால் அறியமுடியாத கிருஷ்ணனை அன்பினால், கருணையால் அறியமுடியும். பக்தியால் தான் பரமனை பருக முடியும்.

வயதில் முதிர்ந்தவள், தனது அத்தை என்று அவளிடம் விடைபெற வரும் கிருஷ்ணன் அவள் காலடி மண் தொட்டு வணங்குகிறான் என்றால் அவளது பக்தியை தான் அங்கே நான் உணரவேண்டும். அவன் பக்தவத்சலன் . பக்தனுக்கு அடிமை. கத்தியவாரில் பிறந்தவர்கள் எல்லோரும் மஹாத்மா காந்தியாகி விடமுடியுமா. காந்தி என்ற பெயரை ரொட்டி விற்பவன் கூட வைத்துக்கொள்ளலாம். பூர்வ ஜென்ம பலன் பக்தி ஒருவனை மாற்றிவிடும்.

படிப்பு ஒருவனை பண்டிதனாக வேண்டுமானால் மாற்றும். பக்தனாக மாற்றாது .பரமனை உணர உதவாது. இதயமும் மனமும் பக்தியோடு ஒன்று சேரவேண்டும். பரமஹம்சர் படிக்காமல் தான் பார் புகழும் ப்ரம்மஞானியானார். அறிவுக்கனலான விவேகானந்தரால் குருவாக ஏற்றுக்கொள்ளப்பட்டார். அன்னையை அறிந்தார், பவதாரிணியை நேரில் கண்டார். அருள் பெற்றார். படிப்பு வேறு ப்ரம்ம ஞானம் வேறு.பிராமண குலத்தில் பிறப்பதால் மட்டும் உயர்வு அல்ல. அகந்தை இன்றி, தன்னை புல்லினும் தாழ்வாக கருதுபவன் எளிதில் உயர்வடையமுடியும். உள்ளே இருக்கும் ஆத்மாவின் தன்மைப்படியே தான் ஒவ்வொரு மனிதனும் இயங்குகிறான். கிருஷ்ணன் பரம ஆத்மா என்பதால் அவனது செயல்கள் நன்மை பயக்குபவை என்பதை குந்தி ஒரு பரம பக்தையாக அறிவாள் .

நீ போகாதே எங்களுடனேயே இரு என்று வேண்டுபவளின் பிரார்த்தனை தொடர்கிறது

नम: पङ्कजनाभाय नम: पङ्कजमालिने ।
नम: पङ्कजनेत्राय नमस्ते पङ्कजाङ्घ्रये ॥५॥

5.Nama Pankhaja nabhaya, nama Panjkaja maline,
Nama Pankaja nethraya, namathe pankajangraye.

இந்த ஸ்லோகத்தை நான் சிறுவயதில் என் தந்தை தினமும் காலையில் சொல்வது நினைவிலிருக்கிறது. அர்த்தம் தெரியாமலேயே ரசித்தேன்.

கிருஷ்ணா உன் வயிற்றில் தாமரை மலர் அதன் கொடி போன்ற உருவத்தை பார்த்திருக்கிறேன். நீ பத்மநாபன் மகா விஷ்ணு என்று அப்போது தெரியவில்லை. உன் கண்களும் இப்போது தான் மொட்டவிழ்ந்த தாமரை மலர்கள் என்று பலமுறை வியந்ததுண்டு. அதனால் தான் உன் பார்வை குளிர்ச்சியை தருகிறது. உன் திருவடிகளும் தாமரை மலர் போன்ற மென்மையானவை என்றும் அறிவேன். உன் கழுத்திலும் மணம்கமழ் தாமரை மலர்கள். எப்படிப்பார்த்தாலும் நீ தாமரையின் மொத்த உரு. உன்னை மனமார நமஸ்கரிக்கிறேன் கிருஷ்ணா.

यथा हृषीकेश खलेन देवकी कंसेने रुद्धातिचिरं शुचार्पिता ।
विमोचिताहं च सहात्मजा विभो त्वयैव नाथेन मुहुर्विपद्गणात् ॥६॥

6.Yadha hrishikesa, khalena Devaki kamsena rudhathichiram sucharpitha,
Viomochithaham cha sahathmaja Vibho thwayaiva nadhena muhurvipadganath.

''கிருஷ்ணா, ஹ்ரிஷிகேசா, எதைச்சொல்வேன் எதை விடுவேன். நீ செய்த உதவிகள் எக் காலத்திலும் மறக்கமுடியாதவை அல்லவா. நீ உன் தாய் தேவகியை, தந்தை வசுதேவரை மட்டுமா கம்சனின் சிறையிலிருந்து மீட்டவன்.? என்னையும் என் குழந்தைகளையும் அல்லவா இடைவிடாத, எண்ணற்ற துயர துன்ப கொடுமையின் சிறைகளிலிருந்து மீட்டவன். மஹாத்மா, பரமாத்மா, உன்னை தஞ்சம் அடைந்தல்லவோ நாங்கள் ஜீவிக்கிறோம்.

தொடரும்


Sivan Krishnan

unread,
Feb 16, 2018, 6:33:22 PM2/16/18
to amritha varshini
​​
​                                        அன்றும் ஒரு காதலர் தினம் தான். ​

 
​  ​

''பிப்ரவரி  14  வருஷாவருஷம்  காதலர் தினமோ
​ 
கத்திரிக்காய் தினமோ என ஏதோ ஒன்று சொல்கிறார்களே.   எங்களுக்கு
​அதெல்லாம் தெரியாது. ​
 காதல்
​ என்று வார்த்தை இருப்பதே தெரியாதவர்களாக வளர்ந்து விட்டோம்.அது தெரிவதற்குள்ளே
யே 
கல்யாணம் செய்து
​ 
வைத்து விட்டார்கள்''  என்றார் கோண்டு  என்ற கோதண்ட மாமா.   

நான் பதில் சொன்னால் காது கேட்காது. அதற்காக  நான் ஊருக்கெல்லாம் கேட்கும்படி வேலன்டின் தினம் பற்றி பிரசங்கம் பண்ணமுடியுமா?  ஒரு நமுட்டு சிரிப்பு சிரித்து பரிதாபமாக தலையாட்டினேன்.

''எனக்கும்
​இந்த  ஒரு ​
வேலெண்டின் தினத்தில் தான் கல்யாணம்.
​ 
14.2.1951
​.  
காமு அழகாக இருப்பாள் 15 வயசிலேயே.  ஒன்பது கஜத்தில்
​ மயக்கினாள். இடுப்பிலே  ஒட்டியாணம். ​
மூக்கிலே புல்லாக்கு.  காதிலே மாட்டல்  தலைநிறைய அழகு சாமான்கள் சுட்டி,  நெத்தி நிறைய குங்குமம்.  எங்கம்மா அவளை ராஜராஜேஸ்வரி  மீனாக்ஷி என்று கூப்பிடுவா.
​ ​
என்னை குதிரை மேலே ஏத்தி ஊர்வலம் பண்ணினா. காஸ் லைட் பாதிலே எரியல்லே. ரொம்ப கஷ்டப்பட்டு எங்கிருந்தோ  தீவர்த்திகள் கொண்டுவந்தா''. 
​​
​இப்போ ஒரு பேரன்  ஆஸ்திரேலியா. ரெண்டு பேத்தி லண்டன் அமெரிக்காவிலே.''​


அது சரி  வேலெண்டின் தினம் என்ன என்றே தெரியாமல் அன்று கல்யாணம் பண்ணிக்கொண்டீர்களா? என்று
​ நான் அவர் 
காதில் ரகசியமாக கேட்கவில்லை. உரக்க கத்தினேன்.

பல்லில்லாமல் சிரித்தார் கோண்டு  மாமா.

புனித வேலெண்டின் என்று
​ 
ஒரு சாமியார்.  அமேரிக்கா முதலாக பல தேசங்களில் அவரை இன்று
​ம் ​
நினைத்து கொண்டாடு
​ ​
கிறார்கள். முழுக்க முழுக்க இளசுகள். பூங்கொத்துகள், பரிசுகள், வாழ்த்து அட்டைகள்
​ பண்டம் மாற்றிக்கொள்கி றார்கள். 
 ரோமாபுரி ராணிகள் காலத்திலிருந்து  விக் டோரியா ராணி காலம் வரை யிலும்  கூட இந்த சமாச்சாரம் தொடர்ந்திருக்கிறது.  யார் இந்த  புனித வேலன்டின்?  அவருக்கு
​ம் ​
பெப்ரவரி 14க்கும் என்ன சம்பந்தம்?  ஆனால் உலகமுழுதும் அந்த நாள் ஆரம்பத்தில் ஒரு  புனித, மத சம்பந்த உலகளாவிய
​ ​
தொடர்பு கொள்ளும் நாளாக இருந்ததுடன் காதல் ஈர்ப்பு தினமாகவும் இருந்திருக்கிறது.  நல்லவேளை இது ஒரு விடுமுறை நாளாக்கப்படவில்லை.

இந்த புனித வேலெண்டின் என்ன செய்தாராம்?  ரோமாபுரி ராணுவ வீரர்கள் பலருக்கு  திருமணம் செய்துவைத்தவர்.  ராஜாவிற்கு இந்த  சாமியார்  தனது ராணுவ வீரர்களுக்கு அவ்வாறு திருமணம் செயதுவைத்தது பிடிக்கவில்லை. ராணுவ வீரர்கள் திருமண  பந்தத்தில் ஈடுபடக்கூடாது என்று அவனது கொள்கை.  சாமியாரைச் சிறையிலிட்டான் ரோமாபுரி ராஜா.கிறிஸ்தவர்களை பிடிக்காது அவனுக்கு. அவர்களுக்கெல்லாம் சாமியார் அறிவுரை வழங்கியது வேறு வேலெண்டின் மீது குற்றம். இதில்ஒரு அதிசய திருப்பம் என்ன தெரியுமா?  வேலெண்டினை  சிறையில் அடைத்த ரோமாபுரி
​ராஜாவின்
 
பெண்ணுக்கு பார்வை கிடையாது. வேலெண்டின் தான் அவளுக்கு பார்வையை மீட்டுக்கொடுத்தது.  வேலெண்டினை தண்டித்து கொல்லும் முன்பு சாமியார் அந்த பெண்ணுக்கு ''நான் விடைபெறுகிறேன் -- இப்படிக்கு உன் வேலெண்டின்'' என்று
​ஒரு  ''டச்சிங் ''​
கடிதமெழுதினார்.

முதலில் வேலென்டின் வகை காதல்
​ வெகு வேகமாக 
14ம் நூற்றாண்டில்
​ எங்கும்
பரவியது.  18ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் ஆண்களும் பெண்களும் சந்தித்து பூ, தின்பண்டம், வாழ்த்து மடல்கள் பரிமாறிக் கொண்டார்கள். இதை வேலண்டின் தினம் என்று கொண்டாடினார்கள்.  இதய உருவில் ஏராளமான  சித்திர மடல்கள். இறக்கை கொண்ட தேவ தூதன் காம பாணத்தை வில்லை வளைத்து அவர்கள் மீது எய்தமாதிரி பொம்மைகள்.
​ தனது வாயில் ஒரு 
செய்தி மடல்
​​
தாங்கிய புறாக்கள் படங்கள்
​ பலரை சென்று அடைந்தன. 
.  

வேலண்டின் தின
​   ​
''சாவி'' க
​ளை
காதல் சின்னமாக பரிசளிப்பது ஒரு வழக்கம்.  
​'' உன் ​
மனதை
​த் ​
திற. என்னை உள்ளே வைத்து பூட்டிக்கொள்
​'' சேதி  சாவி மூலம்  சென்றது. 
ஐரோப்பாவில்  இப்படி சாவிகள் பல இடங்களில் கை  மாறின.

 இப்போது வாட்ஸாப்,  முகநூல் வேலெண்டின் தினத்தை பெரிதும் பரப்பி எத்தனையோர் மகிழ்கிறார்கள்.
ரோமாபுரி ராஜா  2ம் கிளாடியஸ்  வேலன்டின் சாமியாரை தனது மதத்துக்கு மாறச்சொல்லி கட்டளையிடப் போய், அவர் அவனை கிருத்துவராக மதம் மாற போதித்து அவனால் உயிரிழந்தார் என்று ஒரு தகவல்.
ராஜாவின் மகள் கண் பார்வையை வேலண்டின் மூலம் திரும்பப் பெற்று கிறித்துவ மதம் மாறினாள் .அவளோடு நாற்பது ஐம்பது பேரும் சேர்ந்தார்கள் என்றும் தகவல்.

காதலில் கண்ணிழந்தவர்கள் வரிசையில் மேலே சொன்ன அரசகுமாரி சேரமாட்டாள். கண் பெற்றவள் அவள். முதல் வேலண்டின் கடிதாசு ''உன் வேலண்டின் '' என்று அவர் அவளுக்கு எழுதியது உலகமெல்லாம் இன்று பல வேலன்டின்களை உருவாக்கிவிட்டது.  அவர் காதல் சின்னமாகி விட்டார். அவர் கல்லறை அருகே ஒரு பாதம் மரத்தை நட்டாள்  அந்த அரசகுமாரி. பாதம் மரம் ஒரு வேலண்டின் அட்டைகளில் ஒரு அடையாளமாகிவிட்டது. வேலண்டின்  கையில் மோதிரத்தில் ஒரு இறக்கை தேவன் காம பாணம் எய்யும் வில்லோடு  உருவமாக இருக்கும். பலர் வேலன்டின் தினத்தில் இது போல் மோதிரம் பரிமாறிக் கொள்கிறார்கள்.

காதலாவது கத்திரிக்காயாவது
​ 
என்று சொல்பவர்களுக்கு வேலன்டின் புரியாது. கட்டுப்பாடு மனதுக்கு தானே தவிர  எங்கேயோ உருவான ஒரு வழக்கத்துக்கு அடிமையாவதற்கு இல்லை.  இரு உள்ளங்கள் ஒன்றை ஒன்று நேசிக்கும்போது அதன் ஆதார ஜீவ நாடி பரஸ்பர தூய அன்பு, பாசம், விட்டுக்கொடுக்கும் மனோபாவம் கொண்டதாக அமைவதற்கு எந்த வெளிநாட்டு சம்ப்ரதாயமும் வேண்டாம். அப்படித்தான் நமது முன்னோர்கள் வாழ்ந்தனர். நாமும் அவர்களை பின்பற்றி நிறைய  அவர்களது வாழ்க்கையின் பல நல்ல அம்சங்களை கடைபிடி
​​
​க்கவேண்டும். ​


எது எப்படியோ, திடீர் சாம்பார், திடீர் ரசம்
​  மாதிரி ​
திடீர் காதல் திருமணத்தில் கொண்டுவிட்டு விடும்போது
​ அது
 ''மணம் '' வீச மறந்து போய்  இப்போது நிறைய ''பணம் ''
​ பேசுகிறது.
 ''மன முறிவில் '' பல திருமணங்கள்  சீக்கிரமே முடிந்து வாழ்க்கையை நாசம் செய்வதை கண்கூடாக காண்கிறோம். நிதானம் தேவை. சரியான சம்பந்தம் அமைய நிறைய முன்னெச்சரிக்கை விதிகள் இருக்கின்றன. அவற்றை மீராமல்
​ ​
முடிவெடுக்க வேண்டும். இக்காலத்து பெண்கள் பிள்ளைகள் படித்தவர்களாகவோ, கை நிறைய காசு சம்பாதிக்கிறவர்களாகவோ மட்டும் இருந்தால் போதாது.  திருமணம்  ஆயிரம் காலப் பயிர், ஒரு வம்சம் உருவாகும் ஆதி காரணம் என்று புரிந்து ஜாக்கிரதையாக முடிவெடுத்து பெற்றோர்க்கும் மற்றோர்க்குமட்டுமல்லாமல், தமக்கும் வாழ்வில் பயன்தரும்படியாக செயது கொள்ளவேண்டும்.

sivan jaykay

unread,
Feb 16, 2018, 6:33:22 PM2/16/18
to amritha varshini

குந்தியின் பிரார்த்தனை. 2 J.K. SIVAN

என்னுயிரே கிருஷ்ணா, நீ செய்த விஷமங்கள் ஒன்றா இரண்டா? எந்த அளவுக்கு தாங்க முடியாதபடி இருந்திருந்தால், யசோதை உன்னை கோபத்தோடு, ஒரு கயிற்றால் கட்டி நகராது இருக்க செயதிருப்பாள்? நடிப்பின் சிகரமே, என் மனக்கண்ணால் அந்த காட்சியை காண்கிறேன். கண்களில் பயம், அதையும் முழுக அடிக்கும் அளவு கண்ணீர், தேம்பி தேம்பி அழுகிறாய். புறங்கையால் கண்ணை கசக்குகிறாய். கண்களில் யசோதை இட்ட மை கரைகிறது. கன்னத்தில் வழிகிறது. நீயா பயப்படுபவன்!

பிறப்பற்றவன் பிறந்தாய். ராஜ்யபாரம் சுமக்கவா? 'ராஜா' க்களின் பாரம் குறைக்கவா? எந்தகாலத்திலோ வசுதேவரும் தேவகியும் தவமிருந்து வேண்டியதின் பலனாய் நீ அவர்கள் மகனாக பிறந்தவன். ஒரு கல்லில் ரெட்டை மாங்காய். துஷ்ட நிக்ரஹம் சிஷ்ட பரிபாலனம். உன்னிடம் ப்ரம்ம வேண்டியதும் இந்த குறை தீர்க்கத்தானே.

உன்னை அனவரதமும் வேண்டி பிரார்த்தனை செய்பவர்களுக்கு உன் தாமரைத் திருவடிகள் பணிந்தவர்க்கு ஜனனமரண துன்பமே இல்லையே.

++

குந்தி வாசலுக்கு ஓடுகிறாள். தாருகன் தயாராக தேரில் குதிரைகளைப்பூட்டி கிருஷ்ணன் ஏறி அமர காத்திருக்கிறான். சுற்றிலும் மக்கள் வெள்ளம். நேராக குதிரைகள் துவாரகை நோக்கி பறக்கப்போகின்றன. கிருஷ்ணன் ஏன் இன்னும் ஹஸ்தினாபுரஅரண்மனையை விட்டு வெளியே வரவில்லை. விடை பெற இவ்வளவு நேரமா? என்று தாருகன் அதிசயித்தான். குதிரைகள் கனைத்தன.

''போகாதே கிருஷ்ணா, போகாதே, இங்கேயே ஹஸ்தினாபுரத்தில் எங்களோடு இரு'' என்று வேண்டுகிறாள் குந்தி.

கிருஷ்ணன் குந்தியின் மனை வாயிலில் தேரில் அமர்ந்து விட்டான். அவனது இரு கைகளையும் பிடித்துக்கொண்டு மண்டியிட்டு தரையில் அமர்ந்திருந்தாள் குந்தி. கண்களில் கங்கையும் காவிரியும் சேர்ந்து வெள்ளத்தை உருவாக்கின. நாக்கு தழுதழுக்க பிரார்த்திக்கிறாள்.

கிருஷ்ணன் பேசாமல் அவளையே பார்த்துக்கொண்டு நிற்கிறான். இதழில் புன்னகை.

''அத்தை, உன் மனம் புரிகிறது'' என்றான்.

नमस्ये पुरुषं त्वद्यमीश्वरं प्रकृते: परम् ।
अलक्ष्यं सर्वभूतानामन्तर्बहिरवास्थितम् ॥१॥

namasye puruùaü tvà.a.adyamã÷varaü prakçteþ param |
alakùyaü marvabhåtànàmantarbahiravasthitam || 1 ||

''ஹே பரிபூர்ண பரமாத்மா, தேவாதி தேவா, சர்வ பிரபஞ்ச காரணா, எங்கும் நிறை மனமோஹனா, உள்ளும் புறமும் வியாபித்தருளும் வாசுதேவா, உன்னை கையெடுத்து கும்பிடும் பாக்யம் பெற்றதற்காகவே உன்னை வணங்குகிறேன் கிருஷ்ணா'' என்று ஆரம்பிக்கிறாள் குந்தி தேவி.

मायाजवनिकाच्छन्नमज्ञाधोक्षमव्ययम् ।
न लक्ष्यसे मूढदृशा नटो नाटयधरो यथा ॥२॥

màyàjavanikàcchannamaj¤àdhokùajamavyayam |
na lakùyase måóhadç÷à naño nàñyadharo yathà || 2 ||

நானோ எழுத்து வாசனை அற்ற, அஞ்ஞானி, கல்விஅறிவற்றவள், மாயத்தோற்றம் கொண்டு மதி மயக்கும் கண்ணா, கபட நாடக சூத்ரதாரி, உன்னை அறிந்து கொள்ளும் திறன் இல்லாதவள் நான். எளிதில் மாயையின் வலையில் விழுந்து அவஸ்தை படுபவள்.

तथा परमहंसानां मुनीनाममलात्मनाम् ।
भक्तियोगविधानार्थं कथं पश्येम हि स्त्रिय: ॥३॥

tathà paramahaüsànàü munãnàmamalàtmanàm |
bhaktiyogavidhànàrthaü kathaü pa÷yema striyaþ || 3 ||

''என் அப்பனே, ஜெகன்னாதா, உன்னை சகலமும் உணர்ந்த ஞானிகளே கண்டறியமுடியாதபோது. மறையோதும் ஞானியர் கண்ணுக்கே மறைந்து இருப்பவனான நீ, என் போன்ற எளிய பேதை, அறிவற்ற ஜீவனுக்கு, புரிபடுவாயா ? உன்னை அறியும் சக்தி எனக்கு ஏது?. உன் மீது பக்தி ஒன்றையே எப்போதும் செலுத்தி உன் அருள் கிடைப்பதற்கே பெரும் பாக்கியம் செயதிருக்கவேண்டும் நான்.


கிருஷ்ணாய वासुदेवाय देवकीनन्दनाय च ।
नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नम: ॥४॥

kçùõàya vàsudevàya devakãnandanàya ca |
nandagopakumàràya govindàya namo namaþ || 4 ||

தேவகி மைந்தா வாசுதேவா, யசோத நந்தனா, நந்தகுமாரா, கோவிந்தா, உன்னை திரும்ப திரும்ப விழுந்து வணங்குவதே நான் செய்ய முடிந்தது கண்ணா. பசுக்களை ரக்ஷிப்பதால் தானே நீ கோ விந்தன் என்ற பெயர் கொண்டவன். அதற்கு தானே பிருந்தாவனத்தில் நந்தகோப குமாரனாக தோன்றியவன்.

maþ païkajanàbhàya namaþ païkajamàline |
namaþ païkajanetràya namaste païkajàïghraye || 5 ||

பத்மநாபா, எண்ணற்ற எனது நமஸ்காரங்கள், தாமரை வனமாலி வாசுதேவா பத்மலோசனா, தாமரைதிருவடிகளை தொழுகிறேன்.


sivan jaykay

unread,
Feb 16, 2018, 6:33:38 PM2/16/18
to amritha varshini
பஞ்ச முக லிங்கம் ஜே.கே. சிவன் 
லிங்காஷ்டகம் 1 

ஆதி அந்தமில்லாத முழு முதற் கடவுளே, மகாதேவா, அடி முடி காண முடியாத விஸ்வ பிரமமே உன்னை சுலோகங்களில் பாடித் தொழுதவர்கள் எண்ணற்றவர்கள்.. எண்ணிப்பார்க்கக் கூட முடியாத அளவுக்கு உன் பக்தர்கள் உலகெங்கும் உள்ளார்கள். ஒரு எட்டு ஸ்லோகம் இந்த மஹாசிவராத்திரி அன்று என்னை ஈர்த்தது. அதைப்பற்றி கொஞ்சம் சொல்ல ரொம்ப ஆவல். 

மஹாலிங்கமே , உன்னை எட்டு சுலோகங்களில் பாடியதற்கு பெயர் லிங்காஷ்டகம். எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும் கேட்கக் கேட்க அலுக்க வில்லை. பாடப் பாட நா மணக்கிறதே தவிர வெறுக்க வில்லையே. என்ன ரகசியம் இதில்? 

சிவனை விஷ்ணுவும் பிரம்மாவும் வணங்குகிறார்கள். விஷ்ணுவை சிவனும் பிரம்மாவும் கோடி கோடி தேவர்களும் வணங்குகிறார்கள். இவ்வாறு ஒருவரை ஒருவர் வணங்குவதால் யாரும் யாருக்கும் இளைத்தவர்களோ சளைத்தவர்களோ இல்லை என்றும் பொருள் கொண்டாலும், மகாதேவா , நீ ஒன்றே சாஸ்வதம், வேண்டுவோர் வேண்டிய வண்ணம் பலராக, பலவாக, நிறைவாகத் தோன்றுகிறாய் என்று புரிந்து நமஸ்காரம் பண்ணுகிறேனே .நீ துக்க நாசனம், என் பல பிறவிகளில் சேர்த்து வைத்துக்கொண்ட , சர்வ பாப நாசனம் பண்ணுபவனல்லவா?. ஆத்ம ஒளி தரும் ஜாஜ்வல்ய லிங்கமல்லவா. லிங்கமென்றாலே எனக்கு என்ன தோன்றுகிறது? . அருவத்தை ஏதோ உருவாக, ஸ்வரூபமாகக் காட்டுவது என்று தானே. ஆனால் பார்க்கும்போதே மனத்தை காந்தமாக ஈர்க்கிறதே. இனம் புரியாத பக்தி, பரவசம், உள்ளே உலவுகிறதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் வெளியே சொல்லத்தெரிய வில்லையே.பொங்கி வரும் நன்றிப பெருக்கால் நான் சொல்ல முடிந்தது ''சிவ சிவா'' ஒன்றே தான். இது தான் என் ஜபம். இதைச் சொன்னாலேயே கேட்டதெல்லாம் கொடுப்பவனல்லவா நீ. எத்தனை ராக்ஷசர்களும் கொடியவர்களும் கூட உன்னை வேண்டினதும் அருள் புரிந்தவனல்லவா. . 

எட்டு அஷ்டகத்தில் முதல் ஸ்லோகம் கீழே தருகிறேன். மற்றவற்றை ஒன்று ஒன்றாக பார்க்கலாம். 

ब्रह्ममुरारिसुरार्चितलिङ्गं निर्मलभासितशोभितलिङ्गम् । 
जन्मजदुःखविनाशकलिङ्गं तत् प्रणमामि सदाशिवलिङ्गम् ॥१॥ 

Brahma-Muraari-Sura-Aarcita-Linggam Nirmala-Bhaasita-Shobhita-Linggam | 
Janmaja-Duhkha-Vinaashaka-Linggam Tat Prannamaami Sadaashiva-Linggam ||1|| 

பிரம்ம முராரி சுரார்ச்சித லிங்கம் 
நிர்மல பாசித சோபித லிங்கம் 
ஜன்மஜ துக்க வினாசக லிங்கம் 
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் 

பிரம்மனும் விஷ்ணுவும் தேவர்களும் மனிதர்களும் வணங்குமே லிங்கமே 
எண்ணுவோர் எண்ணமாய் விகசிக்கும் நிம்ர்மலமான ச்வயம்ப்ரகாசமான லிங்கமே 
பிறப்பறுக்கும் பிஞ்ஞகா ஜரை மூப்பு துக்கம் இவற்றின் துன்பத்திலிருந்தெல்லாம் விடுவிக்கும் விஸ்வநாதா 
நினைத்தாலே இனிக்கும் நிர்மலா சதாசிவ லிங்கமே -- உனக்கு நமஸ்காரம்

sivan jaykay

unread,
Feb 16, 2018, 6:33:39 PM2/16/18
to amritha varshini
ஐந்தாம் வேதம் 

                          6  .    மஹரிஷி  ருருவும்   துந்துபா  சர்ப்பமும் 

 பூலோகத்தில் ரிஷி  வைசம்பாயனரால் பாண்டவ வம்சத்தின் வாரிசான ஜனமேஜயனுக்கு   பாரதம்  எடுத்துச் சொல்லப்படுகிறது. பாரதம் ஒரு  பக்தி பூர்வ புனித  நூல்.  அதில் ஒரு  வரி,  ஸ்லோகத்தில்  ஒரு அடி,  படித்தால் கூட  செய்த பாபங்கள் விலகும் என்கிறார்  உக்ரஸ்ரவர்.    விவரமாக  பாரதத்தை  வர்ணிக்கிறார். 

 ஒரு இடத்தில்  பிருகு மகரிஷியைப் பற்றி சொல்லும்போது  ''பிரம்மா,  பிருகு மகரிஷியை  வருணன் நிகழ்த்திய  யாக அக்னியிலிருந்து தோற்றுவித்தார்.  பிருகுவின் மகன்  ச்யவனன், அவனது மகன் பிரமாதி. அவனுக்கு ஒரு பிள்ளை ருரு.  ருருவின்  மகன் சுனகன் என்று  பிருகு வம்சாவளியை பற்றி சொல்கிறார். 

உக்ரஸ்ரவர்  நைமிசாரண்ய வனத்தில் எண்ணற்ற  ரிஷிகள் இடையே,  சௌநகரிடம்   நான்  சொன்னவர்கள்   உங்கள் பிருகு வம்ச முன்னோர்கள். அனைவருமே  வேதங்களைக் கரைத்துக் குடித்தவர்கள்.  பிருகுவின் மனைவி பௌலோமா. ஒரு சமயம்    ராக்ஷசன் ஒருவன்  அவளைக் கடத்திக்கொண்டு போனபோது  அவள் வயிற்றில் இருந்த சயவனர் வெளி வந்து அந்த  ராக்ஷசனை  அக்னிக்கு இரையாக்குகிறார்.  பிருகு நடந்ததை அறிகிறார்.  பௌலோமாவின்  கண்ணீர்  ஆறாகப்  பெருகி  அதுவே வதுஸாரா  என்கிற  நதியாகிறது.  அது தான் ச்யவனரின்  ஆஸ்ரமத்தை ஒட்டி  ஓடுகிறது. 

 உங்கள்   முன்னோர்  ருரு  பற்றியும்   ஒரு கதை சொல்கிறேன்.  விஸ்வாவசு என்ற ஒரு கந்தர்வ ராஜாவும்  மேனகையும் இணைந்ததில் ஒரு  பெண் குழந்தை பிறந்தது.   அதை  ஸ்தூலகேசர்  என்கிற  ரிஷியின் ஆஸ்ரமம் அருகில்  விட்டுவிடுகின்றனர்.  ரிஷி அந்த பெண்ணுக்கு  ப்ரமத்வரா என்ற பெயர் சூட்டி அவளை ஒரு  சிறந்த பெண்ணாக வளர்க்கிறார்.  ஒருநாள்  மகரிஷி  ருரு என்பவர்  அந்தப்பக்கமாக  வந்தவர்  அந்தப் பெண்ணை  ஆஸ்ரமத்தில் கண்டு  அவள் அழகில் மயங்கி  மையல் கொண்டு  அவளை  மனைவியாக்கிக் கொள்ள விருப்பம் தெரிவிக்கிறார்.   பெண்ணை வளர்த்த  ரிஷி ஸ்தூலகேசர்  இதற்கு அனுமதிக்கிறார்.    பாவம்  மற்ற  சிறுமியரோடு விளையாடும்போது ஒரு நாள் அந்த பெண்  பிரமத்வராவை  ஒரு பாம்பு கடித்துவிடுகிறது.    இறந்து போகிறாள்.    அந்த பெண்ணின் மேல்  காதல் கொண்டிருந்த  ரிஷி  ருரு  மனம் உடைந்து  எம   தர்மராஜனை நோக்கி தவமிருந்து  அந்த பெண் உயிரை மீட்கிறார்.  

 அந்த பெண்ணை உயிர்ப்பிக்கும் முன்பு  எமதர்மன்  ஒரு  நிபந்தனை இடுகிறான்.  

 ''ஒரு கண்டிஷன்.  அந்த பெண்ணுக்கு உம்முடையவயதில் பாதியைத்  தர ஒப்புக்கொண்டால்  பிழைப்பாள்.  உயிர் தரமுடியும்'' 

''ஆஹா  அப்படியே'' என்று  ஒப்புக்கொண்ட   ரிஷி ருருவுக்கு  பாம்புகள் மீது அன்றிலிருந்து ஆத்திரம்.  எந்த பாம்பையும் கண்ட வுடன்  கொன்றுவிடுவார்.  

 இப்படி இருக்கையில்  ஒரு நாள்  ஒரு  காட்டில்  துந்துபா   எனும்  வகை  பாம்பின் குடும்பத்தை ரிஷி ருரு  காண்கிறார். கொல்ல  முயலும்போது  துந்துபா கேட்கிறது 

 ''மகரிஷி, சற்று பொறுங்கள்.  நான்  என்ன  தீங்கு செய்தேன் உமக்கு?  யாரோ  கடித்தால்  அதற்கு  எங்களுக்கு  மரண தண்டனையா.  நாங்கள்  கடிக்கும் பாம்புகள் வகை  அல்ல. விஷமற்றவர்கள் '' என்கிறது. 

''என் மனைவியை ஒரு பாம்பு கடித்துவிட்டது. அவளுக்கு  என் உயிரில் பாதியைக் கொடுத்து நான் மீட்டவன். ஆகவே எனக்கு  பாம்புகள் மொத்தத்தில் எதிரி. அவைகளைக் கொல்லாமல்  விட மாட்டேன்.''

'''ரொம்ப சரி  ருரு.   ஆனால்  குற்றம்  செய்தவர்களை அல்லவோ  தண்டிக்கவேண்டும்?.  நானும் உங்கள் மாதிரி ஒரு ரிஷி யாக இருந்தவன். என் பெயர் சஹஸ்ரபாதன். எனக்கு ஒரு நண்பன்  ககாமா  என்று.   அவன்  ஒரு அக்னிஹோத்ரி.  ஒருநாள் அவன்  யாகம்  செய்யும்போது  ஒரு நீண்ட  தர்பைப்  புல்லை  எடுத்து   ''பாம்பு  பாம்பு''   என்று  அவன் மீது போட்டேன்.  யாகம் கலைந்து  மயக்கமானான். அவனுக்கு சிச்ருஷை செய்து மன்னிப்பு கேட்டேன்.  நான் அவன் மீது போட்டது வெறும்  புல் தான்  பாம்பல்ல. கடிக்காது.  விளையாட்டில்  அவ்வாறு  செய்து விட்டேன்  என்றதற்கு  ''நீ  கடிக்காத  ஒரு வகை  பாம்பாவாய் '' என்று சாபமிட்டான்.  

 ''நண்பா நான்  செய்தது தவறு தான்.  தயவு செய்து   என்னை  மன்னித்து  எனக்கு  சாப விமோசனம் கொடு''  என்றதற்கு  அவன்   ''ஒரு காலத்தில் ரிஷி ருரு  என்று  ஒருவர்   உன்னை சந்திப்பார். அப்போது  உனக்கு  இந்த  பழைய நினைவு வந்து மீண்டும்  ரிஷியாவாய்'' என்று வரமளித்தான்.  

 எப்போது அந்த ரிஷி  ருரு வருவாரோ,  எப்போது நான்  மீள்வேனோ.''   இது  என் கதை என்றது துந்துபா. 

 ''நான் தான் அந்த  ரிஷி  ருரு''  என்றதும்  துந்துபா சந்தோஷத்தில்  துள்ளிக் குத்தித்தது. ருருவைச் சந்தித்ததால்  துந்துபா  மீண்டும் சஹாஸ்ரபாத  ரிஷியானது.  

ரிஷி ருரு  அப்போது அதனிடம்  ''ஜனமேஜய மகாராஜா  ஒரு  சர்ப்ப  ஒழிப்பு யக்னம் பண்ணுவார். அதில் நீயும்  கலந்து கொள்.''என்கிறார்.

 யார்  ஜனமேஜயன்?  எதற்காக   ஜனமேஜயன்  பாம்புகளை  ஒழிக்க  யாகம் பண்ண வேண்டும்?  யார்  அஸ்திகர் என்பவர், எதற்காக  அந்த  ரிஷி  பாம்புகளை  தீயிலிருந்து மீட்க வேண்டும்? என்று  சில ரிஷிகள் கேட்க   உக்ரஸ்ரவர்  மேலே  தொடர்கிறார்.

sivan jaykay

unread,
Feb 25, 2018, 7:04:43 PM2/25/18
to amritha varshini
மணி வாசகரைப் பற்றி சில வாசகங்கள்  4

                                      அரிமர்த்தன  பாண்டியனின் அதிசய குதிரைகள்

நாம்  வாழ்க்கையில் நிறைய கஷ்டம் அனுபவிக்கிறோம் என்று அழுகிறோமே.. மகா பெரிய பக்தர்கள், கடவுளையே நேரில் காண்பவர்கள், கண்டவர்கள்,  பட்ட, அனுபவித்த துன்பங்களுக்கு முன்னால் நமது கஷ்டங்கள் தூசிக்கு சமானம்.

அரசன்  கட்டளைப்படி மணிவாசகரை சிறையில் அடைத்து துன்புறுத்தி பணம் என்னாயிற்று என்று துறுவினார்கள். தன்னலம்  கருதாத  ஞானிகளுக்கே  அந்தக்காலத்தில் இந்த கதி.  இப்போதோ   பல ஆயிரம் கோடி ..மோசடி   பட்டப்பகலில் .. ஈடுபட்டாலும், அவர்களுக்கு  எங்கோ சுகமாக ஆனந்த வாழ்க்கை. அதற்கு உறுதுணையாகல் சட்டம், உச்ச  மேலிடத்து  அதிகார உதவி .... உதவ பலர்...கருப்பு  கோட்டுகள்  காசுக்கு அவர்களை  ஹரிச்சந்திரனாக்கிவிடுகிறதே. ! சே. உலகம் எப்படி மாறிவிட்டது!   சித்தத்தை சிவன் பால் வைத்து மணிவாசகர் அமைதியாக வாய் திறவாமல் துன்பங்களை  ஏற்றார். அவர் மேல் விழுந்த அடிகளை பெருந்துறை ஆத்மநாதன் வாங்கிக்கொண்டதால் மணிவாசகருக்கு எந்த  வலியும் தெரியவில்லை. ஆகவே ராஜாவின் ஆட்கள் சித்திரவதையை அதிகமாக்கினார்கள். பாவம் ஆத்மநாதன் தான் அவ்வளவையும் வாங்கிக்கொண்டான்.

ஆவணி மூலம் வந்தது.  சூரியன் உச்சிக்கு வந்தபோதும் வாசலில் குதிரை சப்தம் எங்கும் கேட்கவில்லை. சுற்றுவட்டாரத்தில் கூட 'எங்குமே குதிரைகள் தென்படவில்லை' என்ற செய்தி  பாண்டியனை ருத்ரனாக்கியது.

'வாதவூரரே ,  இன்றைக்கு சூரிய அஸ்தமனத்துக்கு முன்பு  குதிரைகள் வராவிட்டால்  உமக்கு முடிவு நேரிடும் '--- ராஜா ஆணையிட்டான்.  எரிக்கும் வெய்யிலில் நிறுத்தினான். மாணிக்கவாசகர் அசையவில்லை. இரும்புக் கிடுக்கியால் (iron clamps) இறுக்கினர். மாணிக்கவாசகர் ''ஹர ஹர மகாதேவா. பெருந்துறை ஈஸா''.   சிவனை மனதால் தஞ்சம் அடைந்தார்.

ஆத்மநாதன் சும்மாவா இருப்பான்.  ''சிவகணங்களா, நீங்கள் தான்  குதிரை வீரர்கள், இதோ இந்தப்பக்கத்தில் உள்ள  காடுகளிலுள்ள  நரிகளை  உயர்ந்த ரக குதிரைகளாக  ஏற்கனவே மாற்றியாகி விட்டது.  அவற்றை மதுரைக்கு  இழுத்துச் செல்லுங்கள்.  சற்று நேரம் கழித்து  நானே குதிரைப் படையின்  காவலனாக, தலைவனாக வந்து பாண்டியனை சந்திக்கிறேன்.''  குதிரை மேல் வந்த சிவனுக்கு  '' பரி மேல் அழகர் ''என்று ஒரு பெயர் இந்த கதையைப் பின்னணியாக கொண்டது.

சூரியன்  மெதுவாக மேலை வானத்திற்கு நகர்ந்த சமயம்  குதிரைகள் கனைக்கும் பெருத்த சப்தம்,  கண்ணுக்கெட்டிய  தூரம் வேகமாக குதிரைகள் புழுதியை வாரி வீசி ஓடிவந்தன. பாண்டியனுக்கு செய்தி போனது.  ஒரே ஆச்சர்யம்.  ''அடாடா நிரபராதியான முதல்  அமைச்சரைத் தண்டித்தேனே'' என வருந்தினான்.

குதிரை அணி மதுரை அரண்மனையை நெருங்கியது.   அணித்தலைவன்  ''பாண்டிய மன்னா, நீ விரும்பிய குதிரைகளை பார்வையிடு.   குதிரைகளை முன்னும் பின்னும் நடத்தி, அவற்றின் உடல் உறுப்புச் சிறப்பைக் கூறி, 'இவை உன்னுடையவை கொடுத்த பணத்திற்கு அதிகமாகவே''  என்று கூறி ஒப்படைத்தான்.    பெரு மதிப்பு பெற்ற பீதாம்பரம் ஒன்றை பாண்டியன் அவனுக்குப் பரிசாக அளித்தான்.    அந்த இளம் வீரனோ சிரித்துக்கொண்டே  பாண்டியன்  அளித்த விலையுயர்ந்த பீதாம்பரத்தை கையிலிருந்த குச்சியால் வாங்கி எடுத்து முதல் குதிரையின் மேல் போட்டுவிட்டு விடைபெற்றான். ராஜா குதிரைகளை மற்ற குதிரைகளோடு சேர்த்து  கொட்டகையில்  அடைத்தான்.

ராஜாவுக்கு பயங்கரமான ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.  அன்றிரவே புதிதாக வந்த அத்தனை குதிரைகளும்  ஏன் எப்படி காட்டு நரிகளாக மாறியது?  அந்தக் கொட்டடியில் இருந்த மற்ற குதிரைகளையும் கடித்துவிட்டு காட்டை நோக்கி ஓடி விட்டனவே. இது என்ன மந்திர மாயம். எல்லாம் வாதவூரன் திட்டமிட்டு செய்தது.  அரிமர்த்தன பாண்டியன் மீண்டும் மிகவும் கோபம் கொள்ளமாட்டானா ? கொடுத்த பொற்காசுகளை திரும்ப ராஜாங்கத்துக்கு கட்டும் வரையில் வாதவூராரை வைகையாற்று சுடுமணலில் நிற்க வையுங்கள்.''

வாதவூராருக்கு நடந்தது எதுவும் தெரியாது.  விஷயம் அறிந்தபோது  ''எல்லாம் பெருந்துறை ஈசன் செயலே. அவனன்றி ஓரணுவும் அசையாதே'' என்றிருந்தார். 


பாண்டியன் கட்டளைப்படி மணிவாசகரைக் கட்டி, வைகை சுடுமணலில் நிறுத்தினார்கள் . மறுப்பு எதுவுமின்றி அவர் அங்கே நின்று பெருந்துறை பெம்மானே  அருளாளா  என்று மன நிறைவோடு பாடினார்.   சுடுமணல் நிரம்பியிருந்த வைகையில் எங்கிருந்து காலம தப்பி கடுங்கோடையில்  இவ்வளவு பெருவெள்ளம் திடீரென்று கடல் போல நிரம்பியது.. வெள்ளம்....  வெள்ளம்...கணத்திற்கு கணம் .. வெள்ளம்  அதிகரிக்கிறதே ......

sivan jaykay

unread,
Feb 25, 2018, 7:08:13 PM2/25/18
to amritha varshini

மணி வாசகரைப் பற்றி சில வாசகங்கள்  3

பாண்டிய ராஜாவால்  தான் அதிகம் நம்பிய வாதவூரர் இப்படி செய்வாரென்று நம்பமுடியவில்லை. கோபமும் வந்தது. ஏமாற்றமும் அதில் கலந்திருந்தது. குதிரை வாங்க பொற்காசுகள் கொடுத்தால் எங்கோ கோவில் காட்டுகிறாரா?  இது ராஜதுரோகம். தண்டனை வழங்கவேண்டும்.

அங்கே திருப்பெருந்துறையில் எந்த சிந்தனையும் மனதில் இன்றி மாணிக்கவாசகர் ஆத்மநாதனோடு லயித்து ஆனந்தத்தில் இருந்தார்.  பொற்காசு கொண்டுவந்தது, குதிரை வாங்க கிளம்பியது, முப்பது நாளில் குதிரை வரும் என்று சொல்லியது  எதுவுமே ஞாபகத்தில் இல்லை. 

ராஜா ஓலை அனுப்பினான்.  ஒரு கொடிய நாகத்திடம் இருக்கும் பயம்  ராஜாவிடமும் இருக்கவேண்டும். உடனே திரும்பி வந்து ராஜாவை சந்திக்க கட்டளை. 

ஓலை கொண்டுவந்து தந்தவன் அவரது எளிமை, பக்தி, புனிதத்தன்மையை கண்டு வியந்தான். ஐயோ இவருக்கா ராஜா தண்டனை கொடுக்கப்போகிறார்.

மாணிக்கவாசகர் ஓலையை படித்தார். ஆத்மநாதா, இந்தா எனக்கு ராஜாவிடம் கிடைத்த பரிசு. என்னை உன்னிடம் ஒப்புவிதித்து விட்டேன். நீ என்னை எப்படி வேண்டுமானாலும் ஆட்டி வை. நான் உன் அடிமை. குதிரைக்கும் வழி சொல்லு?

அன்று கனவில் முதிய பிராமணர் மீண்டும் வந்தார். ''அன்பா, அஞ்சாதே. நானே உனக்காக  சிறந்த குதிரைகளை மதுரைக்கு ஒட்டிச் சென்று ராஜாவிடம் ஒப்படைக்கிறேன்.  நீ தைரியமாக அரசனைக் காண  செல்லலாம். ஆவணி மூலம் அன்று  குதிரைகள் வந்து சேரும் என்று சொல். இந்தா''. 

தூக்கத்திலிருந்து விழித்த மணி வாசகர் தனது கையில் ஒரு பளபளக்கும்  விலை உயர்ந்த வைரக்கல். ஆம் அதைத்தான் அந்த முதிய பிராமணர் (ஆத்மநாதர்) தூக்கத்தில் இந்தா என்று கையில் அளித்தது.  எனவே  கனவு இல்லை இது. நிஜமே தான்.
 
பொழுது விடிந்தது.   அரை மனசோடு ''ஆத்மநாதா, உன் கட்டளைப்படி  இதோ மதுரைக்கு திரும்புகிறேன். நான் எவ்வளவு சீக்கிரம் உன்னிடம் வரமுடியும் என்பதை நீயே  தீர்மானி''  பழையபடி மந்திரி உடையோடு பெருந்துறையை விட்டு வாதவூரராக கிளம்பிவிட்டார் மணிவாசகர். 

ராஜாவை வணங்கி அவன் கையில் பரிசாக ஆத்மநாதர் அளித்த வைரக்கல்லை கொடுத்தார். 
அரசே உங்கள் கட்டளைப்படி தேவையான குதிரைகளை வாங்கியாகிவிட்டது.  ஒரு நல்ல நாள் பார்த்து. ஆவணிமாதம் மூலம் நக்ஷத்ரம் நாள் உசிதமானது. அன்றே குதிரைகள் இங்கே வந்து சேரும். 

''வாதஊரரே , என்னை மன்னியுங்கள். ஏதோ கோபத்தில் ஓலை அனுப்பிவிட்டேன்.'' என்றான் பாண்டியன்.
நிறைய குதிரைகள் தங்க பெரிய குதிரை லாயம் தாராளமாக கட்டி குதிரைகள்  வரக்  காத்திருந்தார்கள்.

மணிவாசகர் மன நிலை மாறுபட்டுள்ளதை கண்ட  உறவினர் குடும்பத்தார், எங்களை விட்டு சென்றுவிடாதீர்கள் என்று கெஞ்சினார்.  அவர் மனம் திருப்பெருந்துறையில் இருக்க உடல் மட்டும் மதுரையில்.

''என் சொந்த பந்தங்களே, என்று என் மனத்தை சிவன் ஆட்கொண்டுவிட்டானோ  அக்கணம் முதல் நான் அவன் அடிமை. எனக்கென்ற தனிப்பட்ட எந்த செயலும் சொல்லும் இல்லை. இமைப் பொழுதும் என் னெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க என்று போற்றி அவனுக்கே நான்  ஆளாவேன். என் ஒரே சொந்தம் பந்தம் பெருந்துறை ஈசன்.  சகல பாபங்களையும் நீக்கி சதானந்தம் அருள்பவன்.  ல் துன்பங்களில் வலியது பிறப்பும் இறப்பும்.  இறைவனோடு ஒன்றாகாத எதுவுமே துன்பமும் துயரமும் தான். உலகத்தை பற்றிய எண்ணமே எனக்கில்லை. மகிழ்வோடு உள்ளேன்.  என் உள்ளங்கையே  நான் உண்பதற்காக உயிர்வாழ உதவும் ஒரே பாத்திரம்.  எங்கோ எப்போதோ யாரோ அளிக்கும் ஒரு கை  அன்னம் என் பசிப்பிணி தீர்க்கட்டும்.  வானமே கூரை, பூமியே பாய் என்று இருக்க எனக்கு வீடோ வாசலோ அரண்மனையோ எதற்கு?  நான் பூசும் விபூதியே என் ஆபரணம்.   நான் அணியும் ருத்ரக்ஷமே எனக்கு ரக்ஷை.  நான் அவனை சார்ந்தவன். எவரிடமும் பயமற்றவன்.''

மேற்படி எண்ணங்களோடு ஆவணி மூலத்துக்கு அவரும் காத்திருந்தார். குதிரைகள் வந்து சேருமா?

இதற்கிடையே  ராஜாவின் ஒற்றர்கள் திருப்பெருந்துறை சென்று விசாரித்து  வாதவூரர் அத்தனை பொற்காசுகளை சிவன் கோவில் கட்டுவதில் செலவழித்து தெரிந்தது.  

''ஓஹோ  வாதவூரர்  பொய் சொல்லி நடிக்கிறாரோ?  என்ன ஆணவம், தைர்யம் அவருக்கு என்னிடமே இப்படி நடந்து கொள்ள?''  அரசன் பொறுமினான் 

''திருப்பெருந்துறை சென்று அங்கும் அருகே ஊர்களிலும் வாதவூரர் குதிரை வாங்கினாரா என்று கண்டுபிடியுங்கள். ''

''அரசே எங்கு விசாரித்தபோதும்  குதிரை எதுவும் வாங்கப்படவில்லை என்றே திட்டவட்டமாக தெரிகிறது.''

இன்னும் ரெண்டே நாளில் ஆவணி மூலம்...
அவனை சிறையில் இட்டு சிற்றவதை செயது பொற்காசுகளை மீட்க வழி தேடுங்கள்''  கட்டளை பிறந்தது.
குதிரை வர நாமும் காத்திருப்போம்.

Sivan Krishnan

unread,
Feb 25, 2018, 7:08:14 PM2/25/18
to amritha varshini
A LOVING INVITATION HONOURED - J.K. SIVAN

Now I realise I have many more brothers and sisters to move with and enjoy the loving care and affection. In fact I knew no one there, when I entered the SGS wedding hall at Habibulla Road, T.Nagar, on the morning of 19th February. I was invited well in advance by one of our FB members, who arrived Chennai for their family wedding, from Auckland, Newzealand and another from USA. Many invite me for their functions and to a great extent I oblige attending them subject to availability of time and prior commitments. You will hardly believe that I attended 3 functions on that day and still fit to sit and write as I avoided eating in two of them.

I accepted the loving invitation to meet our Member and attended the Muhurtham with gift books for the newly married couple and the member family.

The auspicious function went on well with a full crowd of smiling faces richly clothed and I was spotted by the member whom I saw for the first time. I waited till the mangal sutra was tied around the neck of the young bride.

I noticed something strange. The family belonged to Ashtasahasram, my clan, about whom I have been writing frequently in the articles in this FB group. They are Samavedhis and their group is known as KAMAKOTI group, to which Seshadri Swamigal also belonged. There was a priest from TTD Thirumala with Sri Venkatesa's garlands for the couple and presented these to them reciting Venkatesa Gadhyam. His resonant voice and the beautiful lyrics of the Gadhyam are worth listening. I am attaching for the benefit of those who have not heard Venkatesa Gadhyam, recited by a great Vaishnava, late P.V. Ananthasayanam Ayyangar, who once took me near the Lord, made me stand before him just a few feet away in early 1960s at 3.30 am and began reciting Sri Venkatesa Suprabadham. please click the link given to listen to late P.V. Ananthasayanam Ayyangar. https://youtu.be/LTwzHj4y7GA

I was surprised to observe that when the prohit on the dais announced the TTD Prasadh delivery and requested all to stand in obeisance except a few of the audience, others were engaged in cross talks and were least attentive to the proceedings on the dais to attend which they have come from different places.

Another observation surprised me further. The catering contractor nowadays is issuing a card with his name and contact address along with the menu printed thereon !! There were 20+ items mentioned in the card and placed on the banana leaf and most wasted a lot of food items which could have been distributed to the hungry lot outside.

The FB members yesterday visited me at Nanganallur and took a few of my books for circulation among their friends in the faraway Newzealand.


sivan jaykay

unread,
Mar 2, 2018, 8:12:49 PM3/2/18
to amritha varshini

                             ரங்வாலி  ஹோலி  .....

இந்தியாவில் அதிகமாகவும், இந்தியர்கள் வாழும் வெளிநாடுகளில், பிரதேசங்களில் பரவலாகவும் ஒவ்வொரு வருஷமும்  ஹோலி பண்டிகை வண்ணமயமாக, ஒருவர் மீது மற்றவர் வண்ணக்கலவைகளை வாரித் தெளித்து மகிழ்ந்து கொண்டாடும் நாள்.

கெட்டதை நல்லது, தீமையை  நன்மை வென்ற நாள். அன்பின் வெளிப்பாடு. வசந்தத்தின் வரவை அறிவுறுத்தும் நாள் என்றெல்லாம் இதற்கு காரணம்  சூட்டுவது வழக்கம். மொத்தத்தில் சந்தோஷம் எப்படி வந்தால் என்ன?
ஹோலி கொண்டாடுவதில் வயது ஒரு பொருட்டல்ல.  ரங்வாலி ஹோலி  என்று கிழம் கட்டைகள் கூட ஒருவர் மேல் ஒருவர்  சாயம் பூசும், பீச்சும். வடக்கே ஜாஸ்தி.  கிருஷ்ணன் பிறந்து விளையாடிய ஊரில் கேட்கவே வேண்டாம். 

ஒரு காட்சி மனதில் உருவாகிறது

கோபிகளோடு  கிருஷ்ணன்   யமுனா நதி தீரத்தில்  ராஸ லீலையில்  அனைவரையும்    மகிழ்விக்கிறான். அப்போது   ராதை எங்கிருந்தோ  ஓடிவந்து அவனை   இறுக அணைத்துக்கொள்கிறாள்.   மூச்சு முட்டுகிறது.   அந்த  சந்தோஷத்தோடு உரத்த  குரலில் கண்ணன் மீது  கொண்ட   அன்பை பாசத்தை   பெருமையோடு பாடுகிறாள்.   மற்ற கோபியர்களும்  போட்டி போட்டுக்கொண்டு  வந்து கண்ணன்  மீது  முட்டி  மோதி  அவனை  தனதாக்க  முயல்கிறார்கள்.  கண்களில்  ஆர்வம்,  மனதில் இன்பம். பக்தியும்   பாசமும்  கலந்த சொல்ல  இயலாத  சுகம்.

  ஒருத்தி  எப்படியோஅவனது  முகத்தை  இறுக்கி பிடித்துகொண்டு   காதில்  ஏதோ  ரகசியம் சொல்வதுபோல்  அவன்   கன்னத்தில் நிறைய முத்தமிட்டுவிட்டாள் .  அவளது  நீண்ட  நாளைய ஆவல்  நிறைவேறியது.

ஒருவள்   கிருஷ்ணனின்  பீதாம்பரத்தை இழுத்து  அவனை தன்னோடு  சேர்த்துக்கொண்டு   கரும்புதோட்டத்தில்  தொபுகடீர்  என்று அவனோடு  சேர்ந்து வீழ்ந்தாள்.

ராதையும்  கிருஷ்ணனும்  நிஜமும் நிழலுமாகவே  தோன்றினாலும்,   நிலவும் குளுமையும்  போல்  இணை பிரியாமலே  நமக்கு காண்கிறார்கள்.  ராதையை  நினைக்காமல்  கண்ணனை  எண்ண  முடியவில்லை.  ராதா இருந்தாளா, என்பதே கேள்வி இல்லை. கிருஷ்ணன்  இருந்தான்  என்றால்  ராதை இருந்தாள்  என்பதே  விடை.

பிருந்தாவனத்தில் உடலும்  உயிரும் கண்ணனே. அவர்கள்  வாழ்க்கையே  அவனைச் சுற்றியே  அமைந்திருந்தது. கோபியர் அவனோடு  சேர்ந்து  விளையாடினர்.  அவன்  குழல் நாதத்தில்  மயங்கினர். அன்பை எவ்வளவு அவன்மீது கொட்டினார்களோ  பலமடங்கு அவனிடமிருந்து அதை பெற்ற பாக்யசாலிகள்.  கோபியரில்  தலை சிறந்தவளாக திகழ்ந்தவள்  ராதா.  அவளது குரல் கண்ணன் குழலைப்  போன்று இனிமையானது  என்று  கூட  சொல்லும் அளவுக்கு  காந்த சக்தி கொண்டது.  கண்ணன் குழல் ஒலி   உலகையே  தன்னுள்  அடக்கும் சக்தி வாய்ந்தது. அதில் மயங்கிய  அனைத்து கோபியரும்  கண்ணனை தங்கள் இதயத்தில்  பிணைத்துக்  கொண்டதோடு அல்லாமல்  அவனைத்  தங்களுக்கே  என்று  ஒவ்வொருவரும் சொந்தம் கொண்டாடினர். அவனையே  மணாளனாக  கருதினார்கள்.  அதில் முதலாவது  ராதா. கிருஷ்ணன்  தனது பிரேமையை அவளுக்கே  அளித்தான்.  அவனிலும் 10 வருஷங்கள் அவள் மூத்தவள்  என்பது   அங்கு  வித்யாசமாக படவே இல்லை. பிரேமைக்கு வயசோ, வித்தியாசமோ, மதமோ, மொழியோ எந்த பேதமும் கிடையாதே.  இருமனம்  ஒன்றாய் கலந்தபின்னாலே  எது வரும் குறுக்கே?

மனித காதலோடு  தெய்வீக  பிரேமையை   ஒப்பிட்டு எடை போடவே கூடாது.  தவறான  சிந்தனைக்கு அது அடி கோலும். புத்தியை பேதலிக்க வைத்துவிடும். அது  மனித  காதல் அல்ல  அதையும்  தாண்டி  புனிதமானது.   ராதாவின்  தூய காதல்  கண்ணனைக் கட்டிப்போட்டிருந்தது.  எல்லா  கோப கோபியரும்  கண்ணனை விரும்பினாலும்  அவனது  அன்பில்  பங்கேற்றவர்களாக  இருந்தும் ராதை  எப்போதுமே  தனி இடம்  பெற்றிருந்தாள் .  கண்ணனின்  எண்ண  பிரதிபலிப்பு  அவள். இளம்  வயதில்  கிருஷ்ணன்  பிருந்தாவனத்தில் ராதையோடு  சேர்ந்து  விளையாடினான்.  அவள்  அவனைவிட பத்து  வயது பெரியவள் ஆனாலும்  அவனோடு  ஜோடியாக  விளையாடினாள்.

ஒருநாள்  கிருஷ்ணன்  தேம்பி தேம்பி அழுதான். வெகுநேரம்  யாரும் சமாதானம் செய்தும் அழுகை நிற்கவில்லை.

''எண்டா கிருஷ்ணா அழறே, உனக்கு  என்ன  ஆச்சு? என்று  பதறினாள்  யசோதை.  சாப்பிட  மறுத்தான்.  எவ்வளவோ சொல்லியும்  முடியாது என்று  தலை அசைத்தான். கெஞ்சிக் கூத்தாடி  ஏன்  அவன்  அழுகிறான் என்று மெதுவாக  கண்டுபிடித்தாள்  யசோதை.

''ராதா மட்டும்  அழகாக  சிவப்பா இருக்கிறாளே ?'' விம்மலுக்கு இடையே  ஒவ்வொரு வார்த்தையாக  காரணத்தை வெளியிட்டான் அந்த மாய கிருஷ்ணன்.

''அப்படி ஒண்ணும்  இல்லைடா என் செல்லமே.   நீ  தான் ரொம்ப ரொம்ப ரொம்ப  அழகு''   என்றாள்  யசோதை  அவனைக் கட்டிக்கொண்டு.
 
''நான்  அழகு  என்று  யார்  உன் கிட்டே  சொன்னது?  ராதாவை  விடவா?.  அவள்  தான்  சிகப்பாக  இருக்கிறாள். நான்  கறுப்பாக தானே  இருக்கேன்?''

''சிவப்பா   இருந்தா  தான் அழகு என்பதே  தப்பு.  கருப்பா  மினுமினுன்னு  இருக்கிற கண்ணைப் பறிக்கிற  கிருஷ்ணா  உன்னைவிட  யாருமே  அழகு உலகத்திலேயே  யாரும்  கிடையாதுடா. கருப்பு இல்லாம வெளுப்பு  இல்லை.   இரவு இல்லாம  பகல் இல்லை. இருண்ட  பிரபஞ்சம் இல்லாமல் சூரியனோ நக்ஷத்திரங்களோ  இல்லை. ''  ஒரு   பிரசங்கமே செய்துவிட்டாள் யசோதை.

ஒ  அப்படியா. அப்போ கருப்பு தான்  அழகு  என்கிறாயா அம்மா ?''

''ஆமாம் ஆமாம்  ''

''சரி உன்னையும் அந்த  ராதாவையும்   கருப்பா  பண்ணிவிடுகிறேன்;;  என்று  கண்ணன் யசோதை, ராதையின்  முகம் கை எல்லாம் கருப்பு நீல  வண்ணம்  பூசினான்.  மற்ற  கோபியர்க்கும்  கூட பூசினான். தை  வடக்கே  கிராமிய  ஓவியமாக   பல இடங்களில் இதை வீட்டுச் சுவற்றில்  படமாக வரைந்திருக்கிறார்கள். '
 
கண்ணன்  இவ்வாறு  ராதைக்கும் மற்றோருக்கும்   வண்ணங்கள் பூசியதை  இன்றும்   கொண்டாடுகிறார்கள்.  ஹோலி  பண்டிகை  இது தானோ? அன்று  தெரிந்தவர்  தெரியாதவர்  எல்லோர்  மீதும்  வண்ணங்கள்  கலந்த  பொடிகள்,  கலவைகளை  பூசுவார்கள்,  நீரில் கலந்து பீச்சுவார்கள்.  இன்றும்   கண்ணன் ராதா  சம்பந்தப்பட்ட  பர்சானா,  பிருந்தாவன், கோகுலம்,    மதுரா என்று  அநேக  இடங்களில் இந்த  வண்ணக்கலவை  பூசும்  வைபவம்   கோலாகலமாக நடைபெறுகிறது.  அனைவருமே  மகிழ்வர்.  கண்ணன் சம்பந்தப்பட்ட  எல்லாமே  மகிழ்ச்சி தானே

என் எதிர் வீட்டில் ஒரு பீஹார் குடும்பம். நிறைய  ஆணும் பெண்ணுமாக சிரிப்பும் கும்மாளமும். எல்லோரு கையிலும்  வண்ணப்பொடிகள். பேங்க்கு போகலாம் என்ற எண்ணம். என்றுமில்லாமல் இன்று ஏன் எனக்கு புத்தி ;இப்படிப்போயிற்று. வெள்ளைச் சட்டை . வெள்ளை வேஷ்டி..  வாசலில் என்னைப் பார்த்ததும் சில இளசுகள் ஏதோ அவர்கள் மொழியில் பேசி சிரிக்கும்போது எனக்கு பட்சி சொல்லியது.  உடனே  எனக்கு எதிர்புறமாக இருந்த சந்தில்  தீயணைக்கும் இன்ஜின் மாதிரி என் ஸ்கூட்டரை விட்டுக்கொண்டு வேகமாக சென்று வண்ணப்பூச்சில்  ஹோலி யிலிருந்து தப்பினேன். திரும்பி வரும்போதும்  பால்  திருட வரும் பூனை மாதிரி நாலு பக்கமும்  பார்த்துக்கொண்டு சப்தமில்லாமல்  வீட்டுக்குள் நுழைந்தேன்.
HOLI.jpe

sivan jaykay

unread,
Mar 2, 2018, 8:12:53 PM3/2/18
to amritha varshini
மணி வாசகரைப் பற்றி சில வாசகங்கள் 6 - J.K. SIVAN

சிதம்பரத்தில் ஒரு விவாதம்

என் தந்தையே ஈசனே, என் மேல் இவ்வளவு நேசமா. அதற்கு நான் செய்த கைம்மாறு உனக்கு என்னால் முடிந்தவரை நான் அளித்த துயரமா. இந்த பாபத்தை எங்கே சென்று தொலைப்பேன் என் தெய்வமே? மனமுறுகிய மணிவாசகர் சிதம்பரம் நோக்கி நடந்தார். வழியெல்லாம் பல ஊர்கள். எங்கெல்லாம் சிவன் ஆலயம் உண்டோ அங்கெல்லாம் சென்று கண்ணார பெருமானை நேரில் காண துடித்தார். காணாமல் அங்கிருந்து நகரவில்லை. சிவன் மனமுவந்து காட்சி அளித்தார். மணிவாசகர் மனமகிழ்ந்து தரிசித்தார். பதிகங்கள் பாடினார்.

உத்தரகோசமங்கையில் மணிவாசகர் பரமேஸ்வரனை காணாமல் நெகிழ்ந்து கண்ணீர் உகுத்தார். ஒருவாறு சிதம்பரம் அடைந்தார். ஆஹா இங்கே தானே எண்ணற்ற சிவனடியார் நடந்து வந்து சபேசனைக் கண்ட இடம் என தரையில் அவ்வடியார்கள் திருவடி பட்ட மண்ணில் உருண்டார். முத்தமிட்டார். ஆலயத்தை ஒட்டிய நந்தவனத்தில் அமர்ந்தார். இங்கே தான் நமக்கு அவர் அளித்த மா பெரும் பரிசான திருவாசகம் உருவாகியது.

தில்லை வாழ் மக்கள் திருவாசகத்தை மணிவாசர் இயற்றி பாடியதைக்கேட்டு ஆனந்தித்தனர்.

பொன்னம்பலவா பல்லாண்டு வாழ்க என்று ஒரு ஈழத்து துறவி அடிக்கடி சொல்வார். அவர் சொல்வது ஈழ அரசனுக்கு புரியவில்லை. அவன் புத்த மதத்தினன் .துறவியை வரவழைத்தான். அரசன் முன்னே அமர்ந்த துறவி வழக்கம்போல் பொன்னம்பலவா பல்லாண்டு வாழ்க என்கிறார்.

''இதற்கென்ன அத்தம் என்று சொல்லுங்கள்?'' என வினவினான் அரசன்.

''அரசே, சோழநாட்டில் மிக புனிதமான இடம் பொற்சபை. அந்த ஊர் சிதம்பரம். அருவமான சிவன் நடராஜனாக, சபாபதியாக காலைத்தூக்கி நின்றாடுகிறான். உலகம் அவனது ஆனந்த நடனத்தில் உய்கிறது. உயிர்கள் வாழ்கிறது. மாயையிலிருந்து ஜீவனை ரக்ஷிப்பதே அந்த நடராஜனின் நடனம் தான். அங்கே சிவஞான கங்கை என்று புனித தீர்த்தம் உண்டு. அதில் நீராடியதால் தான் மனுவின் மகன் ஹிரண்யவர்மன் தனது சரும தொழு நோய் நீங்கப் பெற்றான். இந்த புனித தடாகத்தில் நீராடி நடேசனை வழிபட்டோர் சகல பாபங்களும் நீங்கப் பெறுவார்கள். பிறவிப்பிணியிலிருந்து விடுபடுவார்கள்.'' என்கிறார் துறவி.

அருகிலே அரசனின் குரு, ஒரு புத்த பிக்ஷு இதைக் கேட்டுக்கொண்டிருந்தவர் இடைமறித்து ''அரசே, இது பேத்தல். நமது புத்தரை அன்றி வேறு ஒரு பகவான் இருக்கமுடியுமா. இவர் ஏதோ கனவு கண்டு பேசுகிறார். நானே நேராக சிதம்பரம் செல்கிறேன். அங்கிருக்கும் சிவனடியார்களை, சைவ பண்டிதர்களை வாதத்தில் வென்று அவர்கள் எல்லோரையுமே பௌத்தர்களாக மாற்றிவிடுகிறேன். சிதம்பர ஆலயத்தை பௌத்த விஹாரமாக மாற்றிவிடுகிறேன்'' என்கிறார் வீராவேசமாக.

நேராக புத்த பிக்ஷு தில்லை செல்கிறார். ஈழநாட்டு அரசனும் உடன் செல்கிறான். அவனுக்கு ஒரு ஊமைப் பெண். அவளும் கூடவே போகிறாள். புத்த பிக்ஷு சைவர்களோடு வாதிட வருகிறார் என்னும் செயதி சோழ ராஜாவுக்கு சென்று அவன் சிதம்பரத்தில் சைவ பௌத்த மத விவாதம் நடைபெற ஏற்பாடு செயகிறான்.

முக்கியமான இந்த மத விவாதத்திற்கு நாள் குறித்தாகிவிட்டது. அதற்கு முந்தைய நாள் சைவ தீக்ஷிதர்களும் பண்டிதர்களும் கல்விமான்களும் நடராஜா எங்களுக்கு இந்த விவாதத்தில் பூரண வெற்றி கிட்டி புத்த சமயம் இங்கே பரவாமல் தடுக்க நீ அருளவேண்டும் என்று வேண்டுகிறார்கள்.

அவர்கள் தலைவன் கனவில் அன்று தில்லை சபேசன் தோன்றி ''கையில் வெண்ணை இருக்க நெய்க்கு என்ன பஞ்சம் . வாதவூரர் இருக்கிறாரே. அவரையல்லவா நீங்கள் அழைத்து பௌத்தர்களோடு விவாதம் செய்விக்க வேண்டும். ''என்கிறான் உடனே சிதம்பர தீட்சிதர்கள் பண்டிதர்கள் வாதவூரரை நேரில் கண்டு விஷயம் சொல்ல ''ஆஹா என் பரமேஸ்வரன் அவ்வாறு ஆணையிட்டால் அதை நான் சிரமேற்கொண்டு ஏற்று உடனே சிதம்பரம் வருகிறேனே ''என்று வந்துவிட்டார்.
மறுநாள் சூரியன் உதயமானான். விடியற்காலையிலேயே மணிவாசகர் நடராஜனை தரிசித்தார். விவாத மேடைக்கு வந்தார்.

தொடரும்


sivan jaykay

unread,
Mar 2, 2018, 8:14:18 PM3/2/18
to amritha varshini

மணி வாசகரைப் பற்றி சில வாசகங்கள்  5  J.K. SIVAN 
                         

             பிட்டளித்த வந்தியும்  பெருவெள்ளமும்


மாணிக்க வாசகரை சுடுமணலில் நிறுத்தி வைத்து காவல் காத்த அரசனின் சேவகர்கள் ஒரே ஓட்டமாக ஓடிவிட்டார்கள் ஆளுயரத்திற்கு ஓ வென்று பேரிரைச்சலுடன் தூரத்தில் வைகையில்  வெள்ளம் வந்துகொண்டிருந்ததே.  வாதவூரரும்  ''பெருந்துறை ஈஸா இதுவும் உன் விளையாட்டா?'' என அதிசயித்து மதுரை சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் அவனைத் தேடிச் சென்றார். மக்கள் பீதி அடைந்தார்கள். எங்கும் கலவரம். அவசரமாக  மூட்டை முடிச்சோடு மக்கள் வெளியேறினார்கள்.

பாண்டியன் பதற்றம் அடைந்தான். எதற்கு எப்படி அகாலத்தில் மழை காலம் இல்லாதபோது, திடீரென்று வைகையில் வெள்ளம்? இதுவும் வாதவூரரின் மாயாஜாலமா மந்திரமா?  எது வானாலும் நிமிஷத்துக்கு நிமிஷம் அதிகமாகும்  வெள்ளம் சேதம் விளைவிக்காமல் அதை எப்படி கரை புரளாமல் தடுப்பது.   அனைவருக்கும் அவசர கட்டளை. ஆற்று வெள்ளம்  கரைபுரளாமல் உடனே வீட்டுக்கு ஒருஆள் வந்து கரையை மண் கொட்டி  பலப்படுத்தவேண்டும்.

அதேபோல் அனைவரும் வந்துவிட்டார்கள்.  வைகையில் நீர் வெள்ளம்.  கரைகளில் ஜன வெள்ளம். வைகைக்கரை உடையாமல் மண் கொட்டி பலப்படுத்துகிறார்கள். அரசன் சுற்றி சுற்றி வந்து மேற்பார்வை பார்க்கிறான்.

வந்தி எனும் ஒரு பிட்டு சுட்டு விற்கும் குழவி யாருமற்ற அனாதை.  மதுரை சொக்கனிடம் பக்தி. தினமும் முதல் பிட்டு சுட்டு அதை அவனுக்கு மனதார நைவேத்தியம் செய்பவள். அன்றும் அதுபோல் முதல் பிட்டு சூடாக எடுத்துக்கொண்டு ''சொக்கா, இது என்ன கூத்து. வைகை பெருக்கெடுத்துவிட்டதாம். ராஜா வீட்டுக்கு ஒரு ஆள் கண்டிப்பாக வரவேண்டும் என்கிறான். தள்ளாத கிழவி நான் சென்று உதவ வேண்டுமே. என் பிழைப்பில் விழுந்த மண்ணை தான் வைகையில் கொண்டு கொட்ட வேண்டும்.  பிள்ளையா குட்டியா யார் இருக்கா எனக்கு? ''

என்ன செய்வது என்று கலங்கி வழக்கமாக பிட்டு சுடும் மரத்தடிக்கு வந்து அமர்ந்தாள். எதிரே  அடுப்பில்  பிட்டு  சூடாக ஆவியில் வேகும்போது   மனம் ஆள் தேடியது.

''ஆத்தா'' --    எதிரே ஒரு இளைஞன் கூப்பிட்டவாறு நின்றான்.
''யாருப்பா நீ  ?

''ஊரிலே  எல்லோரும் வைகைக்கரையிலே இருக்காங்க. நீ மட்டும் இங்கே இருக்கிறே?'''

'' நானே அடுப்பை அணைச்சுட்டு வைகைக்கரை  போவணும் . ராஜா வூட்டுக்கு  ஒரு ஆள் வரணும்னு கட்டளை தண்டோரா போட்டுட்டாங்களே. ''

''எதுக்கு நீ போறே, உனக்கு பதிலா உன் வீட்டு ஆளா  நான் போறேன்''  என்ன கொடுப்பே?''

 ''என்கிட்டே காசு பணம் இல்லியேடா பையா. உனக்கு நான் என்னத்தை கொடுக்கிறது?''
''சரி ஒண்ணு செய்.  நீ சுட்ட பிட்டு கொஞ்சம் பொட்டலம் கட்டிக்  கொடு. அது போதும். நான் உனக்கோசரம் போய் மண்ணு கொட்டறேன்''.

சுற்றி சுற்றி வந்து மேற்பார்வை பார்த்த  பாண்டியன் ஒரு இளைஞன்  வேலை செய்யாமல் அமர்ந்துகொண்டு  பிட்டு தின்பாதை பார்த்தான்.  அரசனைப் பார்த்த அவன் ஏதோ கொஞ்சம் மண்ணை கொண்டு கொட்ட கிளம்புவதை  கவனித்ததும் கடும் கோபம் கொண்டான். அவன் நின்ற இடம் ஆறு எந்த நேரமும் கரையை உடைந்துவிடும் போல் இருக்கவே 

 ''என்னடா நீ வேலை செய்யாமல் நிற்கிறாய் என்று கையில் வைத்திருந்த பிரம்பினால் ''பளீர்'' என்று அந்த இளைஞன் முதுகில் சாத்தினான்.

 ''ஆ ''.    அந்த இளைஞன் தனது பங்குக்கு  போட்ட கூடை மண்ணால் வைகை பெருக்கு  முற்றிலும் நின்றது. 

 அதே நேரம் அனைவரும் முதுகில் பாண்டியனின் பிரம்படி கொடுத்த ''சுளீர்''வலியில்  துடித்தனர். சகல ஜீவராசிகளும் வலியில் கத்தும் சப்தம் ஏகோபித்து கேட்டது. பாண்டியனும் கூட கத்தினான்.  சொக்கனின் முன்னே நின்று பிரார்த்தித்த மாணிக்கவாசகர் முதுகிலும் அடி.!  ''சர்வேசா சம்போ மஹாதேவா'' என்று உரக்க கூவினார்.

சிவபக்தனான  பாண்டியனுக்கு முதுகில் அடிபோலவே  மனத்திலும் ''சொரேர்''  என்று உண்மை புரிந்தது.  வாதவூரர்க்கு தான் இட்ட தண்டனையே வைகை வெள்ளத்துக்கு காரணம். அந்த மாயக்கார இளைஞனும் ஒருவேளை மதுரை சுந்தரேஸ்வரரோ?

அவன் காதில் ஒரு  குரல் தெளிவாக அசரீரியாய் கேட்டது.

'பாண்டியா, நீ கொடுத்த பொற்காசுகள்  பெருந்துறையில்  எமது பக்தர்கள் வழிபடும் ஆலயத்திற்காக செலவழிந்து உனக்கு ஒரு பெரும்பெயர் புகழ்  ஈட்டித்தந்த வாதவூரரை  போற்றுவதற்கு பதிலாக குற்றம் சாட்டி வதைத்தாய். உனக்கு புரியவைக்கவே  தான் குதிரைகள் நரிகளாயின. வைகை வெள்ளமும் அப்படியே.  நீ இன்னுமா அறியவில்லை என் பக்தன் வாதவூரனை? உன் ஆணையை மதித்து  என் பக்தை வந்திக்காக  நானே மண் சுமக்க வந்தேன்.


பாண்டியன் வந்தியின் குடிசைக்கு ஓடினான். ஒரு விண்ணுலக விமானம் அவளை கைலாயம் அழைத்து சென்றதை அறிந்தான். மணிவாசகரைத்  தேடி  சொக்கனின் ஆலயத்துக்கு ஓடினான். கண்களில் நீர். கூப்பிய கரங்கள்.. சொக்கா  சொக்கா  சொக்கா என்று இடைவிடாத அலறல் பாண்டியனின்  வாயிலிருந்து விடாமல் ஒலித்தது.

வாதவூரர் காலில் விழுந்து ''என்னை மன்னியுங்கள் ப்ரபோ. மீண்டும் அரசவையில் பொறுப்பேற்று என்னை வழி நடத்துங்கள்'' என்று கெஞ்சினான்''

''அரசே எல்லாம் சிவமயம். அவன் ஆணை என்னை அழைக்கிறது நான் பெருந்துறை செல்கிறேன். 

பெருந்துறையில்  மீண்டும்  முன்பு அவர் சந்தித்த அதே  ''ஆத்மநாத முதியவர்''  வாதவூரரை  புன்னைகையோடு வரவேற்றார்.


தொடரும்


sivan jaykay

unread,
Mar 2, 2018, 8:16:24 PM3/2/18
to amritha varshini
ராஜா பர்த்ருஹரியின்  நீதி சதகம்:

                சுபாஷிதம்  13   J.K. SIVAN

सिंहश्शिशुरपि निपतति मदमलिनकपोलभित्तिषु गजेषु ।
प्रकृतिरियं सत्त्ववतां न खलु वयस्तेजसो हेतुः॥

Simhashshishurapi nipatati madamalinakapolabhittishu gajeshu
Prakritiriyam sattwavataam na khalu vayastejaso hetuh 1.36

பெரிய சிங்கம் தான்  யானையை எதிர்த்து வென்று கொன்று பசியாறும் என்பதில்லை.  சிங்கக்குட்டியும் அவ்வாறு தான். வீரமும் கம்பீரமும் கொண்டவன் பயமற்றவன். வயதிற்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை.

जातिर्यातु रसातलं गुणगणास्तस्याप्यधो गच्छतां
शीलं शैलतटात्पतत्वभिजनो संदह्यतां वह्निना ।
शौर्ये वैरिणि वज्रमाशुनिपतत्वर्थोऽस्तु नः केवलं
येनैकेन विना गुणास्तृणलवप्रायास्समस्ता इमे ॥

Jaatiryaatu rasaatalam gunaganastasyaapyadho gachchhataam
Sheelam shailatataatpatatwabhijanaah sandahyataam vahninaa
Shourye vairini vajramaashu nipatatwarthostu na kevalam
Yenaikena vinaa gunaastrinalavapraayaah samastaah ime 1.38

ஐயா புண்யவான்களே. ஜாதியை, மதத்தை வைத்தே  பிழைத்து வயிறு வளர்ப்பவர்கள்.  அதெல்லாம் ஒழியட்டும். பாதாளத்தில் அழுந்தட்டும் என்று சொல்பவர்கள் சொல்லட்டுமே.  அதே போல்  நல்ல, உயர்ந்தகுணங்கள், தன்மைகள் ஆகியவையும் அதோடு சேர்ந்து இன்னும் ஆழத்தில் மறையட்டும்.  நற்குணமா  அது எதற்கு. அதுவும் தொலையட்டும் சார்.
 சொந்தம் பந்தம் நட்பு எல்லாவற்றையும் குண்டுக்கட்டாக கட்டி தீயில் இடவேண்டாமா? மலையிலிருந்து உருட்டி தள்ளவேண்டாமா? எதிரிகளிடம் வீரமா?  அது எதற்கு. பல்லை இளித்து  கூழைக் கும்பிடு போதுமே.  சுயநலம், அதற்கு பணம் பணம் பணம் அது ஒன்றே போதுமே. பணம் இல்லாவிட்டால் மற்ற நல்ல குணங்கள் விஷயங்கள் எல்லாமே  புல்லுக் கட்டு.  புல்  மூட்டை.
ரொம்ப வெறுத்துப் போய்  ராஜா பர்த்ரு ஹரி இதைச் சொல்கிறான் இல்லையா?

यस्यास्ति वित्तं स नरः कुलीनः
स पण्डितः स श्रुतवान् गुणज्ञः।
स एव वक्ता स च दर्शनीयः
सर्वेगुणाः काञ्चनमाश्रयन्ति॥

Yasyaasti vittam sa narah kuleenah sa panditah sa shrutavaan gunajnah
Sa eva vaktaa sa cha darshaneeyah, sarve gunaah kaanchanamaashrayanti 1.40

பணம் ஒருவனிடம் சேர்ந்து விட்டால், ஆஹா   இவனல்லவோ இந்திரன், சந்திரன் என்கிறார்களே. நல்ல ராஜ குடும்பம் அவன் என்பார்கள். ஆஹா எவ்வளவு கற்றவர், நல்ல குணங்கள் உள்ளவர் என்று புகழ்வார்கள். எது பேசினாலும் கை தட்டல் தான்.ஆணழகன். கம்பீர சிகாமணி.  நான் அடுக்கடுக்காக சொன்ன  குணாதிசயங்கள் அவனிடம் இல்லையென்றாலும் பணம் அதெல்லாம் அவனுக்கு கொண்டுவந்து சேர்க்குமே .

रे रे चातक सावधानमनसा मित्र क्षणं श्रूयताम्
अम्भोदा बहवो वसन्ति गगने सर्वे‌உपि नैतादृशाः ।
केचिद्वृष्टिभिरार्द्रयन्ति वसुधां गर्जन्ति केचिद्वृथा
यं यं पश्यसि तस्य तस्य पुरतो मा ब्रूहि दीनं वचः ॥ 1.51 ॥

re re cātaka sāvadhānamanasā mitra kṣaṇaṃ śrūyatām
ambhodā bahavo vasanti gagane sarve‌உpi naitādṛśāḥ |
kecidvṛṣṭibhirārdrayanti vasudhāṃ garjanti kecidvṛthā
yaṃ yaṃ paśyasi tasya tasya purato mā brūhi dīnaṃ vacaḥ || 1.51 ||

என்னருமை  சாதக பக்ஷியே, நான் சொல்வதை உன்னிப்பாக கேள். மேலே பார். எவ்வளவு மேகக்கூட்டங்கள். ஒன்று போல் ஒன்றா இருக்கிறது. உருவம், வண்ணம், அளவு  வெவ்வேறாக காணவில்லையா?  சிலது நிறைய ஜலத்தை பூமிமேல் பொழிகிறது.  சிலது  வெத்து  மிரட்டல் போல  இடியை மட்டும்    டும்டும் என்று இடித்து விட்டு செல்கிறது  மழை துளியும் இல்லை.   எதற்கு சொல்கிறேன் என்றால். வெறும் பேச்சை வைத்து ஒருவனை பிரபு தயாளன்  என்று தீர்மானித்து அவனிடம் யாசகம் கோரக்கூடாது. பார்த்தவன் எல்லாம் வள்ளல், தயாள தான சீலன் இல்லையே.
தொடரும்

sivan jaykay

unread,
Mar 2, 2018, 8:16:59 PM3/2/18
to amritha varshini

                                            ஒரு விண்ணுலக  விஷயம்                                                

இந்திரனுக்கு  வியர்த்து கொட்டியது. என்ன இங்கே இன்று இவ்வளவு கூட்டம்.  விண்ணுலகவாசலில் ஏன் இத்தனை பேர்?
என்ன விசேஷம் நாரதா  நீ பார்த்து வழக்கம் போல் சமாச்சாரங்கள் தெரிந்து கொண்டு வந்து சொல்.
'' கொஞ்சநாளாகவே  நமது இந்த விண்ணுலகில் நிறைய பேர் ஏதேதோ பேசிக்கொண்டிருப்பது காதில் விழுகிறது இந்திரா''
''என்ன அப்படிப்பட்ட பேச்சு நாரதா?''
''இந்தியர்களில் முக்கியமானவர்கள் தான் ரொம்பவும் அதிர்ந்து போய் இருக்கிறார்கள்  என்று தெரிகிறது''
''எனக்கு தெரியாமல் அப்படி என்ன அசம்பாவிதம் இங்கே நடந்தது?''
''இங்கே எதுவுமில்லை இந்திரா. அங்கே தான்''
''அங்கே என்றால் எங்கே?
''பாரத தேசத்தில் தான் புதிது புதிதாக  நிகழ்வுகள் ஒன்றன் பின் ஒன்றாக ஏதேதோ நடக்கிறது என்று அறிகிறேன் இந்திரா''
''அதற்கும் நமக்கும் என்ன சம்பந்தம் நாரதா?'' நாம் இங்கு எதற்கு சஞ்சலப்படவேண்டும்?''
''இங்கிருக்கும் சில ஜீவாத்மாக்கள் அங்கிருந்து வந்தவை அல்லவா, அவர்கள் தான்  பொறுமை இழந்து காணப்படுகிறார்கள்''
''புரியும்படியாக சொல்லேன் நாரதா?''
''இதோ அங்கங்கே  நடப்பதை எல்லாம்  உங்களுக்கு காட்டுகிறேன்  நீயே  அவர்கள் பேசுவதைக் கேள் இந்திரா.''
++
நாட்டு நடப்பு பற்றிய பேச்சு அங்கே காந்தி, நேரு, விவேகானந்தர், பாரதியார், அப்துல் கலாம், காமராஜர், சிவாஜி கணேசன்,எம்ஜியார், ஜெயலலிதா   போன்றோர்  கலந்து பேசியவைகளில் கொஞ்சம் கேட்ட இந்திரனின் பார்வை  இன்னொரு இடத்தில் ஒரு  ஆஸ்ரமம் போன்ற இடத்தில் நடப்பதில்  உன்னிப்பாக  ஆழ்ந்தது.  அங்கே....
 
++

பரமாச்சாரியார்  ஒரு  அரசமரத்தடியில் தியானத்தில் ஆழ்ந்திருக்கிறார். அருகே சில பக்தர்கள் அங்கேயும் விடாமல் அவரைச்சூழ்ந்து கொண்டிருக்கிறார்கள்''
இன்று அவர்கள் பலர் கண்ணிலே கண்ணீர். துக்கம் தொண்டை அடைக்கிறது. கண் திறந்த மஹா பெரியவா என்ன என்று தலையசைத்து ஜாடையாக கேட்கிறார்கள்.
''பாரததேசம் துக்கத்தில் ஆழ்ந்திருக்கிறது  பெரியவா''
''..........''
''புதுப்பெரியவா உங்களை தேடிண்டு வந்துட்டா இங்கே ''
''.................''
''நீங்களும் இல்லே, புதுபெரியவாளும் இல்லேன்னு  தாயை இழந்த கன்றுகள் மாதிரி பக்தர்கள் அங்கே துடிக்கிறார்கள்.  ஒரே ஒரு சமாதானம் பால பெரியவா இருக்கிறது தான். இனிமே அவருக்கும் பொறுப்பு  ஜாஸ்தி ஆயிட்டதே''
''........................''
புதுப்பெரியவா கடைசிலே இங்கே வருவதற்கு முன்பு மனசு ரொம்ப உடைஞ்சு போய்ட்டா''
''............................''
''அபவாதம், அக்கிரமம், அநியாயம், அதர்மம், இன்னும் என்னென்ன உண்டோ அதெல்லாம் கூட  அனுபவிச்சாச்சு''
''ஜகத் குரு ன்னு ஒரு லட்சிய பொறுப்பை வகிச்சா அதோட எல்லாமும் தான் வரும்.   மனசை தளரவிடாமல் பகவான் மேலே பக்தியோடு ஆச்சார்யாள்  காட்டிய வழியிலே நடக்கறது ஒண்ணுதான்  மனசிலே இருக்கணும். போற்றுவதும் தூற்றுவதும் ரெண்டுமே சமமாக எடுத்துக்கணும்.

''பெரியவா.....இதோ வந்துட்டா''
''ஜெயேந்திரர்  குருவின் பாதாரவிந்தங்களில் வந்தனம் செய்தார்.  நீண்ட இடைவெளிக்குப்பிறகு  நேரில் சந்தித்த இருவரும் முக மலர்ச்சியோடு மௌனமாக உறவாடினார்கள்.
என் கடமையை பூலோகத்தில்  நீங்கள் காட்டிய பாதையில் சென்று நிறைவேற்றிவிட்டுத்தான் வந்திருக்கிறேன் குருநாதா''
என் கடைசி நேரம் கூட குருவந்தனம், குரு த்யானம், குருவை சேர்தல் என்று தான் இருந்தது.'
எது நடக்க பகவான் சித்தமோ அது நிறைவையே தரும்.  நிறைவேறியே தீரும். இதில் எந்த மாறுதலும் இல்லை.
நீ  நான் கண்டெடுத்தவன், தேர்ந்தெடுத்தவன், எனக்குப் பிறகு பீடத்தை அலங்கரித்தவன்.  என் வழியில் சென்றாய். லோக க்ஷேமத்திற்கு  ஹிந்து சனாதன முன்னேற்றத்துக்கு பாடுபட்டாய் சில வழிகளை பின் பற்றினாய். எதுவும் எல்லாருக்கும் பிடிக்கும் என்று எதிர்பார்ப்பே நமக்கு கிடையாது. நம் கடமையை செய்ய தான் நமக்கு அதிகாரம்  என்று சொல்லி முடித்த மஹா பெரியவா மீண்டும் த்யானத்தில் ஆழ்ந்துவிட்டார்.

++
இந்திரன் நமக்கு  இன்னொரு குருவும் இங்கே கிடைத்தது நமது அதிர்ஷ்டம் என்று சந்தோஷித்தான்.  பூமியில் பார்த்த நாரதர்
இந்திரா பாரத தேசத்தில் பக்தர்கள் இன்னும் சோகத்தில் இருந்து மீளவில்லை.  பால பெரியவா என்ற விஜயேந்திரர்  இனி பெரியவா என்ற பதவியில் வழிநடத்த  காத்திருப்பது தெரிகிறது என்று இந்திரனுக்கு எடுத்துரைத்தார்.


.
'Here he is''  shouted with joy and delight Thirupugazh Mani in Heaven.  Mahaperiyavaa was in dhyanam when it was announced. He opened his eyes and smiled with joy and recognition of the person he found, trained and selected as his successor.

''Welcome Jayendra''.   The Pudhu Periyava is no more with this name. He has become Pazhaiya Periyava.  He fell at the feet of the Maha Periyavaa with utter devotion, regard and reverence.
There was some sadness in the face of the new entrant.
Why is this asked the Mahaperiyavaa.

There are some in our punyaboomi hurting good people with mudslinging, dirty words and utter disregard and disrespect. Pudhu periyava has been no exception to many such insults, imprisonment and what not'' said another close devotee of Mahaperiyavaa.

''What if, why it should be recognised. We have no time to think of those as Lord Parameswara is guiding us to speak we do, and do what He prompts to be done.

Why so much of rush here today  asked Sivaji Ganesan to some of his old associates around him.  Our Sridevi has arrived here said someone.
Oh  Mayilu, Mayilu.... is she not..... Sivaji laughed heartily in his own style.

Nehru was standing  in a corner just keeping away from Gandhi who was discussing with Sardar Patel,  There was worry and anxiety on his face.

''No Babu, he is not one of the Gandhi's. Dont worry.  He is named same as the popular one now from our State, but it is an utter disgrace for our land.

Why there is no control on anything now Sardar..  Did we not plan everything with the right people and established a good code of conduct and proper rules for impartial application for the welfare of all.

Of course Bapuji. But who follows it.. The tendency is to seek personal favour and gain everywhere in the great land of ours. I had a chance meeting with Vivekananda this morning. He too was upset.

Why.  He said it was a grave error on his part to introduce the ochre dress code for Sanyasis and popularise it by wearing it himself always.
Many use the garb and the orange uniform for personal gains with a good lot of bad practices and indiscipline. He is always uptodate as usual with anything


 
 

sivan jaykay

unread,
Mar 2, 2018, 8:16:59 PM3/2/18
to amritha varshini
ஐந்தாம் வேதம் J.K. SIVAN
12 கருடனும் அம்ரித கலசமும்


நைமிசாரண்யத்தில் வனத்தில் எல்லா ரிஷிகளும் ஆர்வமாக உக்ரஸ்ரவர் சொல்லும் விஷயங்களை கேட்டுக்கொண்டிருந்தார்கள் அல்லவா. அப்போது ரிஷி சௌனகர் குறுக்கிட்டு ''சௌடி மகரிஷி, எனக்கு ரொம்ப ஆர்வமாக இருக்கிறதே சில கேள்விகள் கேட்கட்டுமா'' என்றார் . சரி என்று உக்ரஸ்ரவர் ஒப்புக்கொண்டதும்

'' எதற்கு காச்யபர் ஒரு பெரிய பறவையான கருடனை மகனாகப் பெற்றார்?
எப்படி கருடனுக்கு அவ்வளவு வலிமை கிடைத்தது?
இந்திரனால் கருடனை தடுக்க முடிந்ததா?
அமிர்தத்தை கருடன் கொண்டு போனானா?''........

கேள்வி மேல் கேள்வியாக துளைத்தார் சௌனகர்.

''சௌனகா, நீ கேட்டதற்கெல்லாம் புராணத்தில் பதில் இருக்கிறது என்று ஆரம்பித்தார் சௌடி என்று அழைக்கப்பட்ட உக்ரஸ் ரவர்.

சௌடி மூலம் நமக்கும் விடை கிடைக்கட்டுமே.

"காச்யபர் தவமிருந்து புத்திர பாக்கியம் பெற்றவர். கந்தர்வர்கள், தேவர்கள், வலகில்ய ரிஷிகள், இந்திரன் போன்றோர் மிக்க மதிப்புடன் அவரை அணுகுபவர்கள். ஒரு தடவை இந்திரன் மலையளவு கொண்ட ஒரு பொருளை சுலபமாகத் தூக்கிண்டு நடந்தான். வழியில் அநேக ரிஷிகள் ஒரு கட்டை விரல் அளவு குள்ளர்கள் ஒரு சிறு பலாச இலையை தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு நடந்ததைப் பார்த்தான். அவர்கள் வழியில் ஒரு பசுவின் குளம்பு பதித்த ஆழத்தில் தேங்கியிருந்த நீரில் மூழ்கியவாறு தவித்துக்கொண்டு அந்த பலாச இலையை சுமந்ததைப் பார்த்து ஏளனமாக சிரித்து அவர்களைத் தாண்டிச் சென்றான்.

''சௌனகா, ரிஷிகளுக்கு கோபம் வருமா வராதா சொல்? என்று கதையை நிறுத்தினார் சௌடி .

''ஆமாம், மகரிஷி, இந்திரன் செய்தது தப்புதானே. மேலே என்ன நடந்தது என்று சொல்லுங்கள்'' என்றார் சௌனகர்.

''விரைவில் வேறொரு இந்திரன் வந்து உன்னை பதவி விலக்குவான்'' என்றல் அந்த குள்ள ரிஷிகளின் சாபம் இந்திரனைத் திணற அடித்தது. காச்யபரிடம் ஓடினான். அவரிடம் முறையிட்டு பாதுகாப்பு வேண்டினான். காச்யபர் ''வலகில்ய முனிவர்களே, இந்த இந்திரன் பிரம்மாவினால் பதவியில் இருப்பவன். அவரது வார்த்தையை மீறக்கூடாது அல்லவா என்றார்?

காஸ்யப முனிவரே, நீங்கள் புத்ரனை வேண்டி தவமிருப்பதால் உங்கள் புத்திரன் சரியான தேவர் தலைவனாக அமைந்தால் நல்லது தானே. எது சரி முறை என்று தங்களுக்குத் தெரியாதா?'' என்றார்கள் அந்த முனிவர்கள்.

காஸ்யபரின் மனைவி வினதை சத் புத்ரர்கள் பெற வேண்டி விரதமிருந்தாள் . எனவே காச்யபர் அவளுக்கு வரமளித்தார். நான் செய்யும் யாக தவ பயனாக உனக்கு இரு புத்ரர்கள் பிறந்து மூன்று உலகம் புகழும் பெருமையோடு போற்றப்படுவார்கள்'' என்றார்.

எனவே ''இந்திரா, என் மகன்கள் அருணனும் கருடனும் உனக்கு சகோதரர்களாக உதவுவார்கள்'' என ஆறுதல் அளித்தார் காஸ்யபர்.

இந்திரனும் தேவர்களும் அமிர்தத்தைக் காக்க கருடனோடு பெரும் யுத்தம் ஒன்று நடத்த வேண்டி இருந்தது . அனைவரையும் வென்று கருடன் அமிர்தத்தை நெருங்கினான். அதைச் சுற்றிலிலும் அக்னி சூரியனைக்காட்டிலும் பல மடங்கு வெப்பத்துடன் காத்தது. கருடன் பல சமுத்ரங்களைக் குடித்து அந்த நீரைகொண்டு தீயை அணைத்தான். அமிர்த கலசத்தைச் சுற்றி ஒரு கூர்மையான சக்ரம் சுழன்று அருகில் நெருங்க முடியாமல் ஒளி வீசியது. மிகச் சிறிய உருவெடுத்து அந்த சக்ரத்தின் இடைவெளியில் புகுந்தான் கருடன். இரண்டு பெரிய சர்ப்பங்கள் அமிர்தத்தைக் காப்பதற்கு அங்கு கொடிய விஷத்தைக் கக்கியவாறு தயாராக காத்திருந்தன. கண நேரத்தில் கருடன் அவைகளைக் கொன்றான்.

இவ்வாறு கருடன் அமிர்தத்தைக் கைப்பற்றினான். அந்த சக்ரத்தைத் தூளாக்கினான். பறந்தான். வழியில் விஷ்ணுவைப் பார்த்தான். வணங்கினான். அவனது வீரத்தை மெச்சி

'கருடா இனி நீ என் வாகனம்'' என்றார் நாராயணன். மிக்க பெருமையோடு அவ்வாறே அன்று முதல் அவரது வாகனம் ஆனான் கருடன்.

கருடனின் பலத்தையும் வீரத்தையும் மெச்சின இந்திரன் ''சகோதரா, இந்த அம்ருதத்தை யாரிடமும் தராதே. அவர்கள் தேவர்களது எதிரிகளாகி துன்புறுத்துவர். ''

''இந்திரா புரிகிறது. நான் இந்த அம்ருதத்தை எடுத்துச்செல்வது என் தாயை அடிமைத்தளையிலிருந்து மீட்பதற்கு மட்டுமே'' என்றான் கருடன். நான் எனது காரியம் முடிந்தவுடன் தரையில் இந்த அம்ருத கலசத்தை வைத்தவுடன் நீ எடுத்துச் செல்'' என்றான் கருடன். இந்திரன் மகிழ்ந்தான். கருடன் அம்ரித கலசத்தோடு தாய் விநதையிடம் திரும்பினான்.
தொடரும்


Sivan Krishnan

unread,
Mar 4, 2018, 7:46:14 PM3/4/18
to amritha varshini
சோகம் தந்த ராகம் - ஞானப் பான - J.K. SIVAN

ரொம்ப நாளாகிவிட்டது. பூந்தானத்தின் ஞானப்பான மலையாள குருவாயூரப்பன் மீதான பக்திரசம் ததும்பும் வேதாந்த பாடல்களை பற்றி எழுதி. இன்று கொஞ்சம் நேரம் கிடைத்தது.

பிறந்தது முதல் மூச்சு விடுகிறோமோ இல்லையோ கர்மம் துவங்கிவிடுகிறது. அந்தந்த பிறவிக்குண்டானது மட்டும் அல்ல. பழைய மூட்டைகளையும் சேர்த்துக்கொண்டு தான். ஜீவன் ஒரு உடலை விட்டு பிரிந்தவுடன் அடுத்ததற்கு இத்தகைய கர்மங்களின் பலனுக்கேற்றபடி தான் உடலைப் பெறும். இதில் வேடிக்கை என்னவென்றால் அந்தந்த ஜீவனின் பிறவிக்கேற்றபடி அமையும் உடலும் அந்த கர்மபலனை அனுபவித்தாகவேண்டும். ஸத் கர்மாக்கள் நல்ல உடலை, எண்ணத்தை பெறச் செய்யும். மற்றதைப் பற்றி பேசவே வேண்டாம். புது கர்மாக்கள், நல்லதும் பொல்லாததும் உடல் மூலமும் சேர ஆரம்பிக்கும்.

நமது பூமிக்கு கர்மபூமி என்று பெயர். கர்ம பலன்களை நல்லதாக ஆக்க பெரிதும் உதவுகிறது. யார் அதைப் பற்றி நினைத்து உணர்ந்து பலன் பெறுகிறார்கள். நல்ல சந்தர்ப்பங்களை உருவாக்கி தருகிறதே. பூமி தாய் ஆயிற்றே. கருணை இருக்காதா நம் மேல். நம் எல்லோர் தேவைகளையும் பூர்த்தி செய்கிறது. ஆனால் ஏனோ நாம் புலன்களின் அடிமையாகி அழியும் பொருள்களை நாடி ஓடுகிறோம்.

விஸ்வநாதன் என்றாலே, இந்த பிரபஞ்சத்தில் அனைத்து உயிர்களுக்கும் கருணை புரிபவன். தயாளன். நன்மை தருபவன் என்று தானே அர்த்தம். இந்த பூமியில் தான் பரமாத்மாவே பல அவதாரங்கள் எடுத்தவர். இதுவே மேலும் கீழுமாக ஈரேழு புவனங்களிலும் சிறந்தது. பூமியை பூமா தேவி என்றுதானே வணங்குகிறோம். வேதங்களே அவளை போற்றுகிறதே. அவள் குழந்தைகள் அல்லவா நாம்.

இந்த பூமி ''ஜம்புத்வீபம்'' சமுத்திரத்தின் மத்தியில் லக்ஷம் யோஜனை விஸ்தாரமானது. இந்த பூமி ஒரு தாமரை மலர் போல், நடுவே மொட்டு தான் மகாமேரு. சூரியன் பதமாக உஷ்ணத்தை அதன்மீது பாதி தந்து பகலாகவும் மீதி பாதியை விளக்கை அணைத்துவிட்டு தூங்கவைப்பது போல் இரவாகவும் காத்தருள்கிறான். நாள் தவறாமல் சுற்றி சுற்றி வந்து அருள்கிறான். பூமிக்கு ஜீவசக்தியை தருபவன் சூரியன் அல்லவா.

இந்த பூமியில் மட்டுமே நாம் ஸத் கர்மங்களை செய்து பாபங்களை தொலைத்து மோக்ஷம் பெற வழியுண்டு. ஆகவே இது யோக பூமி.

மேற்கண்ட கருத்துகளை அழகாக சொல்கிறார் நம்பூதிரி பூந்தானம் அவரது ஞானப்பான எனும் மலையாள கீதை போன்ற நூலில். சிலவற்றை இன்று அறிவோம்.

കര്‍മ്മങ്ങള്‍ക്ക് വിളഭൂമിയകിയ
ജന്മദേശമീഭൂമിയറിഞ്ഞാലും
കര്‍മ്മനാശം വരുത്തേണമെങ്കിലും
ചെമ്മേ മറ്റെങ്ങും സാധിയാ നിര്‍ണ്ണയം

Karmangalkku vilabhoomiyaakiya,
Janama desamee bhoomi yennarinjalum,
Karma nasam varuthenam engilum,
Chemme mattengum sadhiya nirnayam.

ஐயா இந்த பூமியில் தான் உங்கள் கர்மங்களின் வித்துகள் விதைக்கப்படுகிறது. தினை விதைத்தவன், வினை விதைத்தவன் அதற்கேற்ப தான் பலனை அறுவடை செய்யவேண்டும். இல்லையா? ஞாபகம் வைத்துக்கொள். இந்த பூமி ஒன்றே தான் உனக்கு அளிக்கப்பட அற்புதமான வாய்ப்பு. நல்ல கர்மாக்களை இங்கே தான் செய்ய இயலும். புண்ய பூமி இது. பழ வினைகளையும் அழிக்க முடியும் இங்கே. வேறே எங்கே சென்றாலும் அவை உன்னோடு தொடரத்தான் செய்யுமே தவிர பூமித்தாய் போல் உதவாதே .

ഭക്തന്മാര്‍ക്കും മുമുക്ഷുജനങ്ങള്‍ക്കും
സക്തരായ വിഷയിജനങ്ങള്‍ക്കും
ഇച്ഛിച്ചീടുന്നതൊക്കെക്കൊടുത്തീടും
വിശ്വമാതാവു ഭൂമി ശിവ ശിവ!

Bakthanmarkkum mumukshu janangalkkum,
Saktharaya vishayee janangalkkum,
Ichicheedunnathokke kodutheedum,
Viswa mathavu bhoomi siva! Siva!

ஓ பக்தர்களே. மோக்ஷம் தேடும் நல்லோரே, பொருள் விரும்பிகளே ,நீங்கள் தேடுவது எதுவாகிலும் அதை தந்தருள்கிறாளே இந்த பூமி மாதா. இந்த பூமியையே அளித்த காரணனே சிவ சிவா உன்னை புகழ போற்ற நன்றியோடு வார்த்தைகளை தேடுகிறேன். அகப்படவில்லையே.

தொடரும்

sivan jaykay

unread,
Mar 4, 2018, 7:46:15 PM3/4/18
to amritha varshini

சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் -- J.K. SIVAN

என் சிறுவயதில் நான் பார்த்து பிரமித்த ஒருவர் ஸ்ரீ சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர். அவரது குரல் கம்மலாக தான் இருந்தது என்றாலும், அவர் ஒவ்வொருவார்த்தையாக விட்டு விட்டு உ ச்சரித்து, கதை சொல்லும் தோரணை என்னை மயக்கிற்று. ராமாயண மஹாபாரத இதிகாசங்களை புரிந்து கொள்ளும் வயதில்லை அப்போது எனக்கு.

அப்பா அண்ணாக்களோடு நடந்து போவேன். கோடம்பாக்கம் சூளைமேடு, ஆற்காட் ரோட்டிலிருந்து ரயில்வே லைனை கடந்து, தெற்கே பசுல்லா ரோடு கடந்து லைன் ஓரமாக சென்றால் கிரிஃபித் ரோடு வரும். அதில் சாரதா வித்யாலயா பெண்கள் உயர்நிலைப் பள்ளி மைதானம் வரும். அங்கு இல்லாவிட்டால் உஸ்மான் ரோட்டில் இப்போது தி.நகர் பேருந்து நிலையம் அருகே, சற்று முன்னாடி, சிவ விஷ்ணு ஆலயத்திலோ அவரது உபன்யாசம் நடந்து பலமுறை, பல சாயந்திரங்களில் கேட்டிருக்கிறேன். இரவு ஒன்பதுக்கு முடியும். பசியோடு நடந்து சூளைமேடு திரும்புவேன்.

ராஜாஜி வந்து உட்கார்ந்திருக்கிறார். வி.வி. கிரி, ராவல் கிருஷ்ணய்யர், ஜி.என்.பி., ஆனந்தவிகடன் தேவன், கல்கி சதாசிவம், எம்.எஸ். எஸ். அம்மா தம்பதியர் எல்லோரையும் அங்கே பார்த்த ஞாபகம் வருகிறது.

எல்லோரும் தரையில் தான் உட்காருவோம். ஜமுக்காளம் முழுதும் பரவி இருக்காது. துளி கூட அந்த கோவில் மண்டபத்தில் இடம் கிடைக்காது.அவ்வளவு கும்பல். கட்டை குட்டையாக தீக்ஷிதர், பட்டை பட்டையாக விபூதி, உருத்ராக்ஷமாலைகளோடு, குடுமியோடு இருப்பார். சமஸ்க்ரித ஸ்லோகங்கள் வெள்ளமாக அவர் வாயிலிருந்து புறப்பட்டு எல்லோரையும் ஆனந்த பக்தி சாகரத்தில் மூழ்கடிக்கும். அர்த்தங்களை ஜம்மென்று சொல்வார். காட்சிகளை கண்முன்னே கொண்டு நிறுத்துவார். நேரம்போவதே தெரியாது.

இனி அவரைப் பற்றி சில விவரங்கள்.

1903ல் தஞ்சாவூரில் சேங்காலிபுரம் கிராமத்தில் பிறந்தவர். ஸ்ரௌதி.உபன்யாச சக்ரவர்த்தி. அப்பா சுப்ரமணிய தீக்ஷிதரிடம் வேதம் கற்றவர். அக்ஷராப்யாசம் பருத்தியூர் கிருஷ்ணமூர்த்தி சாஸ்த்ரியிடம். மாமனார் கடலங்குடி நடேச சாஸ்திரிகள். வேதங்கள் சாஸ்திரங்கள் தெரிந்துகொண்டது விஷ்ணுபுரம் சுவாமிநாத சாஸ்திரிகள். இவர்தான் பரமாச்சார்யாளுக்கும் குருவாக போதித்தவர்.

தீக்ஷிதரிடம் நான் மயங்கினது நாராயணீயம் உபன்யாசத்தில் தான். கிருஷ்ணனை இளம் வயதில் என் நெஞ்சில் புகுத்திய ஒரு முக்கிய மனிதர் தீக்ஷிதர். இன்றும் கூட தீக்ஷிதரின் நாராயணீய, குருவாயூரப்ப ஸ்லோகங்கள் உலகத்தில் பலராலும் விரும்பிக் கேட்கப்படுகிறதே. அவருக்கென்றே ஒரு தனி குரல், ராகம். காந்தமென கவரும் பக்தி ரசம்.

அனந்தராம தீக்ஷிதர் நிறைய ஸ்லோகங்கள் இயற்றியிருக்கிறார். ''குருவாதபுருஷ பஞ்சரத்னம்.''

பூங்குன்னம் என்ற கிராமத்தில் ஒரு மலையாள பையன். அவனுக்கு விடாமல் தலைவலி. எந்த மருந்தாலும் குணமாகவில்லை. அவன் தாத்தா அவனை குருவாயூருக்கு அழைத்து சென்றார். மூன்று நாள் அங்கே வாசம். பிரார்த்தனை. மேலே சொன்ன ஸ்லோகத்தை விடாமல் பாராயணம் செய்தபின் தலைவலி எங்கே போயிற்று??

அனந்தராம தீக்ஷிதர் உபன்யாசங்கள், ஸ்லோகங்கள், புத்தகங்களாகவும், CD யாகவும் மலிந்து கிடைக்கிறது. அவரது ஜெயமங்கள ஸ்தோத்ரம் என்ற பூஜா விதான புஸ்தகம், இல்லாத பூஜை அறையோ, வீடோ கிடையாது.

தீக்ஷிதரின் மகிஷாசுர மர்த்தினி ஸ்லோகத்தை ''அயிகிரி NANDHINI என்று உரக்க சொல்லிக்கொண்டே தெருவில் ஓடியிருக்கிறேன்.

பிரம்மஸ்ரீ அனந்தராம தீக்ஷிதர் 66வயதில் சன்யாசம் பெற்று சித்தியடைந்தார். அவரது அதிஷ்டானம் சின்ன திருப்பதியில் சேலம் பட்டணத்தில் இருக்கிறது. யூட்யூபில் அவர் குரல் எப்போதும் கேட்கலாம். அதைமாதிரி குரல் முன்பும் கேட்டதில்லை, இனியும் கேட்கப்போவதில்லை.

அவரது நாராயணீயம் கதையை கொஞ்சம் இத்துடன் இணைத்துள்ள யூ ட்யூபில் கேளுங்கள்.  https://youtu.be/6dt1XrwAo8k


sivan jaykay

unread,
Mar 4, 2018, 7:46:34 PM3/4/18
to amritha varshini
குந்தியின் பிரார்த்தனை

குந்தி கண்ணனை மனத்திலே  இறுக்கி பிடித்து வைத்துக்கொண்டவள். இருந்தாலும் கிருஷ்ணன் ''அத்தை, அப்போ, நான் போய் வரட்டுமா?''  என்ற அவன் கேள்வி அவளைத் துளைத்தது. இவனையா, பிரிவதா, அது முடிவதா? நினைத்துக்கூட பார்க்க முடியவில்லையே என ஏங்கி   ''நீ இங்கேயே இரு.... என  ''விடை''  கொடுக்கிறாள்.  பழசை எல்லாம் நினைக்கிறாள், கெஞ்சுகிறாள்..வேண்டுகிறாள்....

शृण्वन्ति गायन्ति गृणन्त्यभीक्ष्णश: स्मरन्ति नन्दन्ति तवेहितं जना: ।
त एव पश्यन्त्यचिरेण तावकं भवप्रवाहोपरमं पदाम्बुजम् ॥२१॥

śṛṇvanti gāyanti gṛṇanty abhīkṣṇaśaḥ
smaranti nandanti tavehitaṁ janāḥ
ta eva paśyanty acireṇa tāvakaṁ
bhava-pravāhoparamaṁ padāmbujam

ஓ,   கண்ணா,  இதை கட்டாயம் நான் உரக்க  சொல்வேன்.   யார் யாரெல்லாம்  உன்னை ஸ்மரிக்கிறார்களோ, பாடுகிறார்களோ, புகழ்கிறார்களோ,  கேட்கிறார்களோ, உச்சரிக்கிறார்களோ,  விடாமல் நினைக்கிறார்களோ, நீ அவர்களை ரக்ஷிப்பவன். மறுபிறவி அற்று மோக்ஷமாகிய உனது தாமரைத் திருவடிகளை அடையச் செய்பவன். இது எனக்கே தெரியும்போது கற்றுணணர்நத ஞானிகள், பண்டிதர்கள், பக்திமான்களுக்கு தெரியாதா?

अपरे वसुदेवस्य देवक्यां याचितो sभ्यगात् ।
अजस्त्वमस्य क्षेमाय वधाय च सुरद्विषाम् ॥१८॥

apare vasudevasya
devakyāṁ yācito ’bhyagāt
ajas tvam asya kṣemāya
vadhāya ca sura-dviṣām


''ஆமப்பா , கிருஷ்ணா, நீ  பிறப்பு இறப்பு அற்றவன் தான். என்றாலும்  வசுதேவன் தேவகி வேண்டியதால் அவர்களுக்கு மகனாக பிறந்தவன். தேவர்களை காக்க ராக்ஷஸர்களை அழிக்க இப்படி ஒரு வேஷம் உனக்கு என்று அறிந்து கொண்டேன். அது எப்படி உன்னால் மட்டும் பக்தர்கள் எல்லோரையும் திருப்தி பண்ண முடிகிறது?

भारावतारणायान्ये भुवो नाव इवोदधौ ।
सीदन्त्या भूरिभारेण जातो ह्यात्मभुवार्थित: ॥१९॥

Bharava thaaranayanye bhuvo naava ivodhadhou,
Seedhanthyaa bhoori bharena jatho hyatha bhuvathithaa.17

''இப்போது மட்டும் அல்ல, எப்போதுமே எனக்கு  தெரியும் .  இந்த பூமியில்  பாரம் பெருகிவிட்டது. பூமாதேவி அலறினாள். என்னால் அநீதி அக்கிரமம் அதர்மம்  அளவு கடந்துள்ளதை  சுமக்க முடியவில்லை.  என்னால்  பொறுக்கமுடியவில்லையே,  பெருமானே, வாருங்கள் என் துயர் தீருங்கள் என்றாள். படைக்கும் கடவுள் ப்ரம்மா, உன் மகன், ''அவசியம் நீங்கள் தலையிட்டு பூமாதேவியின் துன்பம் தவிர்க்க வேண்டும்''  என்றான்.  நடுக்கடலில் செல்லும் படகு அனைவரது சுமையும் தூக்கி ஆழமான கடலைக் கடக்க உதவுவது போல்  பூமாதேவி நம்மை சுமக்கிறாள்.  ஒரு நேரத்தில் படகின் சுமை , பாரம், அதிகமானால் முழுகும் அபாயம் உண்டே!   வா கிருஷ்ணா வா என் சுமையைக் குறை. நானே காணாமல் போய்விடுவேன் போல் இருக்கிறதே என்று வேண்ட, நீ  உடனே பூமிக்கு சென்று  அவதரித்து  அக்ரமக்காரர்களை அழித்து, அதர்மத்தை  ஒடுக்கினாய் கிருஷ்ணா. பூமி பாரத்தை குறைத்த நீ காருண்யமூர்த்தி அல்லவா?

भवे sस्मिन्क्लिश्यमानानामविद्याकामकर्मभि: ।
श्रवणस्मणार्हाणि करिष्यन्नति केचने ॥२०॥

bhave ’smin kliśyamānānām
avidyā-kāma-karmabhiḥ
śravaṇa-smaraṇārhāṇi
kariṣyann iti kecana


கண்ணா,  நான்  கல்வியறிவு அற்றவள். பேதை.  ஆனால் ஞானிகள் ரிஷிகள், பெரியோர்கள் சொல்வதைக்  கேட்டிருக்கிறேன்.  இந்த பூமியில் அஞ்ஞானத்தை போக்கவும், பக்தியை பெருக்கவும்  சுருதி, ஸ்ம்ருதி நிதித்யாஸம் சரணாகதியை  மக்கள் உணர, சம்சார துன்பங்களிலிருந்து விடுபட  குருவாக நீ  அவதரித்தாய் என்று சொல்வதை அறிவேன்.

न वदे कश्चद्भगवंश्चिकीर्षितं तवेहमानस्य नृणां विडम्बनम् ।
न यस्य कश्चिद्दयितो sस्ति कहिर्चिद् द्वष्यश्च यस्मिन्विषमा मतिर्नृणाम् ॥१२॥

Na vadhe kaschidbhagawasi keershitham thweha manasya nrunaam vidambanam,
Na yasya kaschid dayitho asthi karhichid dweshyascha yasmin vishamaamathirnrunaam.

''கிருஷ்ணா, நீ செய்யும்  ஒவ்வொரு காரியத்துக்கும், சொல்லும் வார்த்தைக்கும் எத்தனையோ அர்த்தங்கள், காரணங்கள் இருக்கிறதே. நீ எவருக்கும் உடந்தை அல்ல, விரோதியும் இல்லை. சர்வ ஜீவன்களிடமும் அன்பு கொண்ட ரக்ஷகன் நீ. எனக்கு நன்றாக உன்னை தெரியும். பார்ப்பவர்களுக்கு நீ தவறு செய்பவனாகவோ, தவறுக்கு உடந்தையாக இருப்பது போலோ, வேண்டியவர் வேண்டாதவர் என்ற பக்ஷபாதம் உள்ளவன் போலோ தெரிவாய். அவர்கள் உன்னை அறியாதவர். அஞ்ஞானிகள்.  நீ எதுவும் எவரிடமும் தேவையற்றவன். பரம்பொருள். என் மனம் நீ அறிவாய், உன்மனம் நான் அறிவேன்.
KUNTHI CONTINUES....

Sivan Krishnan

unread,
Mar 6, 2018, 8:13:14 PM3/6/18
to amritha varshini
பேசும் தெய்வம் - J.K. SIVAN

தீர்க்க தரிசனம்

பிப்ரவரி மாதமே இன்னும் முடியவில்லை. அதற்குள் இவ்வளவு கொளுத்தும் வெயிலா? ஒரு ஈர துண்டை மேலே போட்டுக்கொண்டு அறையில் உட்கார்ந்திருந்தேன். மேலே மின் விசிறி நெருப்பை வீசிக்கொண்டு இருந்தது. ஈர துண்டு அதை எதிர்த்து என்னை கொஞ்சம் குளிர்வித்துக்கொண்டு இருந்தது.

டொக் டொக் என்று கதவைத் தட்டினது யார்? எழுந்து கதவைத் திறந்தபோது வாசலில் மார்க்கண்டேயன் என் தூரத்து உறவினர். திருச்சிக்காரர்.

எங்கே இந்த வெய்யிலில் வந்தீர்கள்?

''என் நண்பன் வீட்டில் ஒரு ஆண்டுநிறைவு, என்னால் தட்ட முடியவில்லை. அங்கே சென்று குழந்தையை வாழ்த்தி விட்டு இங்கே வந்து உங்களையும் பார்த்து பேச விரும்பினேன். முக்யமாக...

என்ன?

பெரியவா கர்நாடகாவில் எங்கோ ஒரு டாக்டரை ஞாபகம் வைச்சுண்டு பார்த்தாராமே. அப்படி ஒரு அதிசயம் நடந்ததாமே. அது என்ன தெரியுமா?

நானும் எங்கோ படித்தது ஞாபகம் இருக்கிறது. சொல்கிறேன் கேளுங்கள்:
நேபாள மன்னரது வேண்டுகோளை ஏற்று பெரியவா மடத்து சிப்பந்திகளோடு பிரயாணம் தொடங்கினார். போற வழியில் எல்லா இடத்தி லேயும் ஜன வெள்ளம் அலைமோதியது. அவர்களை ஆசீர்வதித்தபடியே தனது யாத்திரை தொடர்ந்தார் பெரியவா.

அவர் தான் வேக வேகமாக நடப்பாரே . அவர் வேகத்துக்கு மற்ற மடத்து ஆசாமிகளால் ஈடு கொடுக்க
முடியவில்லை. எல்லோர் காலும் சிவப்பாக, கல் குத்தி, காயம் பட்டு, அடிபட்டு, ரத்தம் கசிந்து சிந்தி நடக்கவே கஷ்டமாக போய்விட்டது.

கர்நாடக எல்லை வந்தாயிற்று. அங்கே ஒரு கிராமத்துக்குள் பிரவேசித்தார் ஸ்வாமிகள். செய்தி பரவி கிராமமே திரண்டது. சகல மரியாதைகளுடன் வரவேற்று ஆரவாரமாக ஊர்வலம். பெரியவா மற்றவர்களால் நடக்கமுடியவில்லை, பாதங்கள் சிவந்து ரத்தக்கசிவு. பெரியவாவின் கூர்மையான பார்வை இதை கவனித்துவிட்டது. ஆனால் ஒன்றும் பேசவில்லை. சற்று நேரம் யோசனையில் ஆழ்ந்தார்.

அந்த ஊர்பக்கத்திலிருந்து ஒரு டாக்டர், நஞ்சப்பான்னு காஞ்சிபுரம் வருவாரே.. அந்த ஊர் பேர் சொல்லி அது எங்கே இருக்கிறது'' என்கிறார்.

''இங்கே தான் பக்கத்திலேயே இருக்கிறது என்று அறிந்ததும் ''உங்களில் யார் யாருக்கு நடக்க முடியுமோ அவா ரெண்டு மூணு பேர் மட்டும் அந்த ஊருக்குப் போங்கோ. டாக்டர் நஞ்சப்பாவை பார்த்து, ‘பெரியவா உங்களைப் பார்க்கணும்னு சொன்னார்னு அவரை இங்கே அழைச்சுண்டு வாங்கோ!’’என்றது பேசும் தெய்வம்.
அவர்கள் சென்றார்கள்.

அதன் பிறகு பெரியவா பக்கத்தில் இருந்த அம்மன் கோயில் மண்டபத்தில் தங்கி விட்டார். மீதி பேரை அந்த கிராம வைதீக பிராமணர்கள் தங்கள் இல்லங்களுக்கு அழைத்துச் சென்றனர்.

ரெண்டு மடத்து சிஷ்யகோடிகள் தேடி கண்டுபிடித்து டாக்டர் நஞ்சப்பாவைப்பார்த்து விஷயம் சொல்லியபோது டாக்டருக்கு ஆச்சரியம்!

'' அடாடா, பெரியவாவின் ஞாபகசக்தி எப்படிப்பட்டது. காஞ்சி மடம் சென்று பெரியவாளை நான் தரிசித்தது ஒரே ஒரு முறைதான். அதுவும் சுமார் பத்தாண்டுகளுக்கு முன்னதாக, எனினும் பெரியவா என்னை மறக்காமல் இருக்கிறாரே’ '' கொஞ்சமும் கால தாமதம் மதிக்காமல் டாக்டர்கள் அந்த மடத்து சீடர்களுடன் காரில் ஏறிப் புறப்பட்டார்.

கிராமத்தில், அம்மன் கோயில் முன்பாக காரைநின்றது. டாக்டர் நஞ்சப்பா பரமாச்சார்யரின் பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார்.

அவரிடம் தொழில், குடும்ப நலன்களைப் பற்றி விசாரித்த பெரியவா, தம்முடன் வந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். டாக்டர் மடத்துப் பணியாட்களின் பாதங்களைப் பரிசோதித்து, காயங்களுக்கு உரிய மருந்திட்டு, தேவைக்கேற்ப கட்டும் போட்டு விட்டார்.

‘டாக்டர் ஐயா, நீங்க ஒரு உபகாரம் பண்ணணும்’’ என்றனர் மடத்தின் பணியாட்கள்.

‘‘என்ன செய்யணும், சொல்லுங்க ளேன்.’’

‘‘ஒண்ணுமில்லே… கால்கள் குணமாக ரெண்டு நாளாகலாம். அதுவரை இங்கேயே தங்கலாம் னு நீங்கதான் பெரியவாகிட்டே சொல்லணும்.’’

அவர்களின் நிலைமை டாக்டருக்கு புரிந்தது. ‘சரி’ என்று சொல்லி, பெரியவாளிடம் சென்றவர் தரையில் அமர்ந்தார். பிறகு, ஏதோ சொல்ல முற்பட்டவரைக் கையமர்த்திய பெரியவா,

‘‘என்ன… ரெண்டு நாட்கள் இந்தக் கிராமத்துலேயே தங்கிட்டுப் போங்கோனு என்கிட்டே உங்களைச் சொல்லச் சொன்னாளா?’’ என்றார் பெரியவா.

டாக்டருக்கு வியப்பு. ‘பெரியவா தங்கியிருப்பது கோயில் மண்டபத்தில். அப்படியிருக்க அடுத்த வீதியில் தங்கி இருக்கும் பணியாளர்கள் சொன்னதை அட்சரம் பிசகாமல் நம்மிடம் சொல்கிறாரே!’ என்று அதிசயப்பட்டார் டாக்டர் நஞ்சப்பா.

‘‘கவலைப்படாதீங்கோ… ரெண்டு நாள் என்ன… அவாளோட கால்கள் குணமாகற வரைக்கும் இங்கே தங்கி, அப்புறம்தான் பொறப்படுவேன்’’ என்று அந்த நடமாடும் தெய்வம் புன்னகைக்க… கண்ணீர் மல்க கைகூப்பி நமஸ்கரித்தார் டாக்டர் நஞ்சப்பா.


Sivan Krishnan

unread,
Mar 6, 2018, 8:13:14 PM3/6/18
to amritha varshini

                              THE AIR EATING SAINT     -  J.K. SIVAN 

It is a must to know about many great saints and Mahans who have appeared on this Punyaboomi, Bharat, and repeatedly we should remember them.  Especially for this reason only, I am writing again about Pavaahaari Bhabha. ( paav aahaari:  He who had only the air as his food) 

This is about Swami Vivekananda's meeting with him.

Pavhari Baba was, a poor Brahmin born in a village near Varanasi.  When he was a boy  he left home to  Ghazipur and learnt sanskrit grammar, logic philosophy etc from his uncle. He wandered leaving Ghazipur to various places, in search of realization of God. He practiced intense austerity and yogic practices and mastered the Advaita Philosophy. On his return to Ghazipur, he  dug an underground  hermitage by the riverside  and meditated.  He lived without food and  ate  at times, some neem leaves and a few chilies offered by some devotees. He earned thus  the name ''Paav aahaari bhaba''(air-eating father). He avoided meeting people. Never talked to anyone.

After hearing about this  saint, Swami Vivekananda moved to a place closer to the Baba’s hermitage and started severe ascetic practices. He also fell ill during this time and suffered physically. He had come to the Baba to learn and be initiated into Raja Yoga and felt that he was not making any significant progress. The Baba hardly spoke and even when he did, was very circumspect and indirect. This went on for many days and Swamiji was getting increasingly restless.

After trying manydays, Swami Vivekananda met this Bhaba  one morning and  was struck by the Baba’s personality. 

Swamiji says “Through supreme good fortune, I have obtained an interview with Babaji” on February 4, 1890,.
I see the whole matter is inverted in its bearings! While I myself have come, a beggar at his door, he turns round and wants to learn of me! This saint perhaps is not perfected – too much of rites, vows, observances and too much of self-concealment. The ocean in its fullness cannot be contained within its shores, I am sure. So it is not good, I have decided not to disturb this sadhu for nothing, and very soon I shall ask leave of him to go. I am no longer distracted and satisfied to give himself to single-minded meditation.''

I will tell you an interesting story about Pavahaari Bhaba:

One night a thief entered the underground hermitage of Pavhari Baba to steal some valuable belongings from the place. Baba was sleeping at that time and the thief started stealing and collecting goods in a bundle.

As the thief finished his act of stealing and was ready to leave the place with the stolen goods, Baba woke up. The thief got frightened, he threw down the bundle where he collected all stolen goods and started running. Pavhari Baba promptly picked up the bundle from the ground and started chasing the thief.

After a long chase, Pavhari Baba finally caught the thief. The thief thought that Pavhari Baba was going to beat him badly. But surprisingly, Pavhari Baba folded his hands before him and then told in a humble way—

''Sir, I noticed you worked hard to collect these goods from the hermitage, but somehow you could not bring this bundle with you. So, I have taken this for you. Please accept this. These are all your Narayana (God).''

Saying this Pavhari Baba handed over the bundle with stolen goods to the thief. The thief stared at Baba with disbelief and surprise. He was wonderstruck and started feeling ashamed for his act.

Swami Vivekananda, when he heard this story did not believe it.  He  was wandering in the Himalayas and one day he met a Sadhu. After some conversations with the Sadhu, Vivekananda wad quite surprised and astonished when the Sadhu told him—

''I was the thief who attempted to rob Pavhari Baba's place. When Pavhari Baba chased me and handed over all the goods he had and called me Narayana, I could not believe it, I started realising how mean I was and the crime I was committing. Then I renounced everything and came to this place of the Himalayas and started meditating"". 

Pavhari Baba  died in 1898 ending his mortal remains by self immolation in his underground cave. He decided there was no further need for this body and offered it to Agni.  People around smelt burning flesh and knew what had happened in the underground cave hermitage of the saint, from where smoke was coming out with the burning flesh smell.

sivan jaykay

unread,
Mar 9, 2018, 9:18:29 PM3/9/18
to amritha varshini
என் தாய் வழி முன்னோர்கள்   J.K. SIVAN 

                                                                   அண்ணாமலைக்கு  அரோஹரா

 தஞ்சாவூர்  கனம் கணபதி ஸாஸ்திரிகள் காலமானபிறகு அவர்  பிள்ளை  சிறுவன்  சீதாராமன்,   மூன்று  கணக்கு  வழக்கு தெரியாத  படிக்காத  ஒன்றும் தெரியாத  அப்பாவி விதவைகளால்  வளர்க்கப்பட்டு  அவரது சம்பாத்தியமான  நகை நட்டு எல்லாம் ஒன்று ஒன்றாக  விற்று வந்த பணத்தில்  கஷ்ட ஜீவன   காலம் தள்ளி வந்தார்கள்  அல்லவா?  மணலி சின்னையா  முதலியார்  கொடுத்த  முத்து ஹாரம்  சின்னாபின்னமாக  வெட்டப்பட்டு  அந்த  பெண்கள்  விற்க  தயார் செய்து கொண்டு வந்தார்களே  அப்புறம்  அதை  எப்படி  விற்று  பணமாக்கி  குடும்பம் நடத்த  கஷ்ட  ஜீவனம் செய்தார்கள்?

நண்பர்களே, இது நடந்தது  ஏறக்குறைய   முன்னூறு  வருஷங்களுக்கு  முன்பு  தமிழகத்தில் ஒரு சிறு கிராமத்தில் வெள்ளைக்காரன் ஆட்சி காலத்தில்  என்பது நினைவில் இருக்கட்டும்.

இவர்கள் வசித்த  அக்ரஹாரத்துக்கு  அருகிலேயே  காசுக்கடை  அண்ணாமலை  என்று பெயர் கொண்ட  ஒரு  தரகன்  வாழ்ந்திருந்தான்.  அந்த  சிறு ஊரில்  எல்லோருமே  ஒருவரை ஒருவர்  நன்றாக  அறிவார்கள். அதிக ஜனத்தொகை இல்லையே.   பழைய  நகைகள்  யாரிடமாவது  இருந்தால்   அதை  விற்பதற்கோ  வாங்குவதற்கோ காசுக்கடை  அண்ணாமலை தான் ஒரே வழி.  அவன் தான்  அந்த காலத்து நாதெள்ளா,  சுராஜ்மல், வீகம்ஸீ, உம்மிடி,  எல் கே எஸ்,   நீரவ் மோடி, மெஹுல் சொக்ஸி   எல்லாமே. அவன் நம்பிக்கை உள்ளவனாக,  பொய் சொல்லாதவனாக  அவர்களிடம்  ஒரு  இமேஜ்  கொடுத்து  நடந்துகொள் பவன்.

கணபதி சாஸ்திரி மனைவியும்  தாயாரும் ஆள்  அனுப்பி  அண்ணாமலையை  அழைத்து,  வெட்டி வைத்திருந்த  முத்து  ஹாரத்தில்  ஒரு  நாலு  கொத்து எடுத்து  அவனிடம் கொடுத்துதார்கள்.

''அண்ணாமலை, நீ ரொம்ப நல்லவன்.  உன்னை  தான்  நாங்க  எப்போவும்  மலை போல்  நம்பிண்டிருக்கோம் .   எப்படியாவது இதை வித்து கொஞ்சம்  கூடவே வரும்படியாக  காசு  கொண்டு வந்து கொடப்பா,  குடும்பம்  ஓடணுமே '' என்றார்கள்.

''அம்மா   நான்  உங்க  ஊட்டு பிள்ளே.  இங்க  உப்பு  தின்னவன்.என்னிக்கும்  விஸ்வாசம் குறையாதவனாச்சே. மனசுலே  கூட  உங்களுக்கு  வஞ்சகமோ  துரோகமோ  நினைக்காதவன்.  நீங்க  கடைக்கு  வந்தீஹ ன்னா அங்க எல்லாம்  களவாணி ப்பயலுவ   ஏச்சிப்புடுவானுக.  எப்போ  எங்கிட்ட  இதை  கொடுத்தீகளோ  நிம்மதியாக  கவலையே இல்லாம  இருங்க  எவ்வளுவு  சீக்ரம்  பணம்  பண்ணமுடியுமோ  பண்ணி  கொண்டு வாறேன் .  பேசாம  இருங்க. எப்போ தேவையானாலும்  என்னை  கூப்பிடுங்க, இந்த  நாய்  ஓடி வரும். ரெண்டு  காசு  கூடவே  கொண்டு வந்து  கொடுக்கும்.''

அண்ணாமலையின்  வார்த்தையில்  அவர்களுக்கு  பரம  நம்பிக்கை. 

அவன்  முத்துக்களை  வாங்கிக்கொண்டு  நாலு ரூபாய்க்கு  காலணா,  அரையணா, நாணயங்களாக   ஒரு  சொம்பு நிறைய கொண்டுவந்து  அவர்கள்  முன்னால்  துணியை  விரித்து  அதில்  கொட்டுவான்.  விலைவாசி, மதிப்பு, ;கணக்கு எதுவும் தெரியாத விதவைகள்  இவர்கள்  வெகு சந்தோஷத்தோடு அந்த  காசுகளை   ஒரு  பாத்திரத்தில்   அள்ளி முட்டு முடிச்சு  பானைக்குள்   துணி  சுத்தி  வைத்துக்கொண்டு  அதை  கொஞ்சம் கொஞ்சமாக  செலவழித்து  ஜீவனம்  பண்ணினார்கள்.  

கனம்  கணபதி சாஸ்திரி  சம்பாதித்த விலையுயர்ந்த  முத்து ஹாரம்  துண்டு  துண்டாக வெட்டப்பட்டு, நாலு  ரூபாய்  ஐந்து ரூபாய்க்கு   சில்லறைகளாக  அவர் குடும்பத்தை  இவ்வாறாக  வாழவைத்தது.  அண்ணாமலை  கூடாரத்தில்  புகுந்த  ஒட்டகமாக கொஞ்சம்  கொஞ்சமாக  அருமையான முழு  நல் முத்து மாலையை  துண்டு துண்டு ரூபமாக   இருபது  ரூபாய்க்கு  வாங்கிவிட்டான்.   இல்லை   விழுங்கிவிட்டான்.

முத்து  ஹாரம்   மறைந்தவுடன்   கல்  பதக்கத்துக்கு   தலை வலித்தது.

என்ன  ஆயிற்றென்று  பார்ப்போமா ?

sivan jaykay

unread,
Mar 11, 2018, 8:52:06 PM3/11/18
to amritha varshini
                                             ஸ்ரீ  ஹரி வம்ச புராணம்  -  ஜே.கே. சிவன்

                                                2. ஜனமேஜயன் - வைசம்பாயனர் சம்வாதம் 


மஹாபாரதத்தை அறிமுகப்படுத்துமுன் முதற்கட்டமாக  நைமிசாரண்யத்தில் ரிஷிகள் கூடி அங்கே வேதவியாசர் மஹாபாரதம் எழுதவேண்டும் என்பதை  எல்லோருமாக வேண்டிக்கொள்ள அவர் விநாயகரின் உதவியோடு ஓலைச்சுவட்டில் வடிக்கிறார் என்று வருவது தான் இங்கும். மகாபாரதத்தின் தொடர்ச்சி தான் ஹரி வம்சம். மாஹபரதத்தின் ஆதி பர்வம் இங்கும் அதனால் வரும்.  எனவே சுருக்கமாக அதைப்பற்றி ஒரு சில வார்த்தைகள். சுதர்  என்கிற உக்ரஸ்ரவர் சௌனகருக்கு மஹாபாரத நிகழ்வுகளை சொல்கிறார்.
 
AdyaM puruSham IshAnaM puru-hUtaM puru-ShTutam |
R^itam eka-akSharaM brahma vyakta-avyaktaM sanAtanam ||1-1-1

 asat ca sat-a-sat caiva yat vishvaM sat-asat-param |
parAvarANAM sraShTAraM purANaM param avyayam ||1-1-2

ma~NgalyaM ma~NgalaM viShNuM vareNyam anaghaM shucim |
namaskR^itya hR^iShIkeshaM cara-acara-guruM harim ||1-1-3

naimiShAraNye kulapatiH shaunakaH tu mahAmuniH |
sautiM papracCha dharmAtmA sarva-shAstra-vishAradaH ||1-1-4
saute sumahat AkhyAnaM bhavatA parikIrtitam |
bhAratAnAM ca sarveShAM pArthivAnAM tathaiva ca ||1-1-5\

devAnAM dAnavAnAM ca gandharva-uraga-rakShasAm |
daityAnAm atha siddhAnAM guhyakAnAM tathaiva ca ||1-1-6
\
ati-adbhutAni karmANi vikramA dharma-nishcayAH |
vicitrAH ca kathA yogA janma ca agryam anuttamam ||1-1-7

kathitaM bhavatA puNyaM purANaM shlakShNayA girA |
manaH-karNa-sukhaM saute prINAti amR^ita-sammitam ||1-1-8

tatra janma kurUNAM vai tvaya uktaM laumaharShaNe |
na tu vR^iShNi-andhakAnAM ca tat bhavAn vaktum arhati ||1-1-9

" சௌதி சிரேஷ்டரே,  மஹாபாரதத்தை உமது வாயினால் விஸ்தாரமாக கேட்க  என்ன பாக்யம் பண்ணி இருக்கவேண்டும். மஹாபாரத வம்சாவளியை கோர்வையாக அற்புதமாக நீங்கள் விவரிக்கும்போது ஒவ்வொருராஜாவையும் நேரில் கண்டு மகிழ்வதைப் போல் இருக்கிறது.  இவற்றில் அசுரர்கள், கந்தர்வர்கள் , நாகர்கள்,  ஏனைய  ராஜாக்கள், அவர்கள் வம்சம், ராக்ஷஸர்கள், தேவதைகள், சித்த புருஷர்கள் ரிஷிகள், முனிவர்கள்,  அனைவரும் வருகிறார்களே. எத்தனை வீராதி வீரர்கள், மகா புருஷர்கள் ஞானிகள் இருந்திருக்கிறார்கள். ஒவ்ஓருவர் கதையுமே  தனித்தன்மை வாய்ந்திருக்கிறது. ஆஹா, என்ன ஒரு மஹான்கள்  அந்த துரோணர், பீஷ்மர் போன்றோர்,  அம்ரிதத்தை பருக வைத்துவிட்டீர்களே . குரு வம்சத்தையும் சொன்னீர்களே, விருஷ்ணி குலத்தை பற்றியும் அந்த வம்ச மகா புருஷர்களை பற்றி கேட்க ஆவலாக உள்ளோம்.

 

ஆஹா  மனமும் நாவும் இனிக்கும்படியான விஷயத்தை அல்லவோ சொல்ல சொல்கிறீர்கள். இதோ சொல்கிறேன்:


janamejayena yat pR^iShTaH shiShyo vyAsasya dharmavit |
tat te ahaM sampravakShyAmi vR^iShNInAM vaMsham AditaH ||1-1-10
shrutva itihAsaM kArtsnyena bhAratAnAM sa bhArataH |
janamejayo mahA-prAj~no vaishampAyanAm abravIt ||1-1-11

"இந்த பாரத வம்சத்தில்  ஒரு ராஜா, ஜனமேஜயன் என்ற பெயர் கொண்டவன் இதே கேள்வியைத்  தான்  வியாச ரிஷியின் சிஷ்யர்  வைசம்பாயனரிடம் கேட்டான்.    அந்த சரித்திரத்திலிருந்து விருஷ்ணி குலம் பற்றி சொல்கிறேன்.

janamejaya uvAca- then janamejaya asked vyshampAyana:

mahAbhAratam AkhyAnaM bahu-arthaM shruti-vistaram |
kathitaM bhavatA pUrvaM vistareNa mayA shrutam ||1-1-12
tatra shUrAH samAkhyAtA bahavaH puruSharShabha |
nAmabhiH karmabhiH caiva vR^iShNy-andhaka-mahArathAH ||1-1-13
teShAM karma avadAtAni tvayA uktAni dvijottama |
tatra tatra samAsena vistareNaiva me prabho ||1-1-14
na ca me tR^iptiH asti iha kathyamAne purAtane |
ekaH caiva mato rAshiH vR^iShNayaH pANDavAH tathA ||1-1-15
bhavAn ca vaMsha-kushalaH teShAM pratyakSha-darshivAn |
kathayasva kulaM teShAM vistareNa tapodhana ||1-1-16
yasya yasya anvaye ye ye tAn tAn icChAmi veditum |
sa tvaM sarvam a-sheSheNa kathayasva mahAmune |
teShAM pUrva-visR^iShTiM ca vicintyemAM prajApateH ||1-1-17

வைசம்பாயனரை அப்போது ஜனமேஜயன் கேட்டான்:   முனிசிரேஷ்டரே,   மஹாபாரத காவியத்தை சொன்னீர்கள். அதில் தர்ம, அர்த்த, காம  மோக்ஷ விஷயங்கள் பற்றி சாஸ்திரங்கள், வேதங்கள் உபநிஷத்துக்கள் சொல்வது  நிறைய பொதிந்து இருக்கிறது.  மகாபாரதத்தின் நக்ஷத்ர மஹா வீரர்களை பற்றியும் விவரித்தீர்கள். 

ப்ராம்மணோத்தமரே, அங்கங்கே  விருஷ்ணி அந்தக  குல வீரர்களும் அதில் வந்தார்கள். அவர்கள் வம்சத்தை கோடி காட்டினீர்கள். இப்போது முழுசாக சொல்லவேண்டும்.  விருஷ்ணி குலத்தோரும்  பாண்டவ வம்சத்தாரும் ஒரே வகுப்பு போல தோன்றியது. உங்களுக்கு தான் அவர்களை நன்றாக தனிப்பட்ட முறையில் தெரியுமே. சொல்லுங்கள்.   கோர்வையாக சொல்லும்போது ஆதியில் பிரஜாபதி பிரம்மாவின் முதல் படைப்பிலிருந்து சொன்னாலும் சந்தோஷம் தான்'' என்கிறான் ஜனமேஜயன்''  என ஆரம்பித்தார் சௌதி.. 

sautir uvAca-sauti said

satkR^itya pari-pR^iShTaH tu sa mahAtmA mahA-tapAH |
vistareNa anu-pUrvyAM ca kathayAmAsa tAM kathAm ||1-1-18

ஜனமேஜயனுக்கு வைசம்பாயனர் ஆரம்பம்முதல் ரன்னிங்  கம்மென்டரி ஒன்றுவிடாமல் கோர்வையாக  தொடர்கிறது  அதை சௌதி அப்படியே பிரதியாக  ரீவைண்ட் பண்ணி சௌனகருக்கு சொல்கிறார். இனி சொல்லப்போவதெல்லாம் ஆகவே  ஜனமேஜயன் கேட்பதாக, வைசம்பாயனர் சொல்வதாகவே வரும்: 

shR^iNu rAjan kathAM divyAM puNyAM pApa-pramocanIm |
kathyamAnAM mayA citrAM bahu-arthAM shruti-sammitAm ||1-1-19
 yaHh ca imAM dhArayet vApi shR^iNuyAt vApi abhIkShNashaH |
sva-vaMsha-dhAraNaM kR^itvA svarga-loke mahIyate ||1-1-20

"ஜனமேஜயா, இந்த விருஷ்ணி குல பெருமையை சொல்கிறேனே, அது சாஸ்த்ரோக்தமான, வேத புராணங்களில் சொல்லப்பட்டவை. கேட்டாலே பாபம் தொலையும் . இதைமட்டும் எவனாவது மனப்பாடம் செய்தாலோ, அல்லது கவனமாக கேட்டாலோ, அவன் மட்டுமல்ல, அவனுடைய வம்சமும் கூட ஸ்வர்கத்தில் இடம் பிடிக்கும்.

வைசம்பாயனர் தொடர்வார் 

Sivan Krishnan

unread,
Mar 19, 2018, 7:57:07 PM3/19/18
to amritha varshini
  கூட்டத்தில் கேட்ட குரல்கள் -  J.K SIVAN


அதோ ஒரு ஆள் மரத்தடியில் பெரிய தாடியோடு உட்கார்ந்து இருக்கிறானே யார் தெரிகிறதா?
தாடியில் முகமே தெரியவில்லையே  எப்படி தெரிந்து  கொள்வது?
பேர் சொன்னால் புரியுமா?
அப்படி என்ன பிரபல பேர். குப்புசாமியா? கோபாலசாமியா?
இல்லை மிடாஸ்
குடிகாரனா?
இல்லை எதை தொட்டாலும் தங்கமாக்கியவன். அவன் சாப்பிடும் ரொட்டியை தொட்டான். பொன்னாகியது. பெண்ணை தொட்டான் பொன்னாச்சியானாள் .
பிடித்து உள்ளே போட்டுவிடுவார்களே
பரவாயிலேயே. கைகளை வெட்டிக்கொண்டான்.  இனிமேல் எதுவும் தங்கமாகாதே. யாராவது வருவோர் போவோர் வாயில் ஏதாவது போட்டால் அன்றைய பசிக்கு, இப்படியே காலம் ஓடுமே.


கையா?  யார் காலையோ வெட்டி  ரகசிய  அறை திறந்து காசு எடுத்துக்கொண்டு போனதாக அல்லவோ எவனெவனோ பஸ்ஸில் பேசிக்கொண்டு போனான்?

என்ன எழவோ? எனக்கு வேண்டாம் இந்த கதை.  

அங்கே என்ன கூட்டம்.  யாரோ ரெண்டு பேர்களை சுற்றி?

அய்யயோ  ஊரே உலகமே அவர்களை பற்றி தான் பேச்சு.  தூங்கு மூஞ்சி பேங்க் என்று ஒன்றாம். ஆறு ஏழு வருஷம் தூக்கத்திலேயே செயல்பட்டதால். அதன் அத்தனை பணத்தையும் ஏதோ ஒரு பெருச்சாளி சுரண்டி எடுத்துக்கொண்டு போய்விட்டதாம். இப்போது தானே எழுந்து என் பணத்தை காணோம். கூட இருந்த கோபால் தூக்கிக்கொடுத்து விட்டான் என்று கத்துகிறது.  கெட்டிக்கார ரெண்டு பெருச்சாளிகளும் சொந்தம். மாமன் மருமான் அதை எங்கெங்கெல்லாமோ கொண்டு வைத்திருக்கிறதை தேடி என்ன  பயன் என்று சிலர் அங்கலாய்க்கிறார்கள்.  எனக்கு என்னவோ அந்த ரெண்டு பெருச்சாளிகள் மேல் பரிதாபம்.

ஏன் ?

பணம் ஒருவனை மேலே ஏற்றி கீழே பாதாளத்தில் தள்ளி விடுமே. இப்போது அவனை சுற்றி வக்கீல்கள், கணக்காசாமிகள், பொய் சொல்லிக்கொடுப்பவர்கள்.  நண்பர்கள் கிடையாது. எவனும் இவனைத் தெரியுமே என்று காட்டிக்கொள்ளாத தனிமை. எங்கும் காரி உமிழும் கூட்டம். பணம் இதையெல்லாம் மீட்டுக்கொடுக்குமா.  சொந்தஊரில்  காலை வைக்க முடியாது. வைத்தாலும் நிம்மதி பல வருஷங்கள் கிடையாது.

இதெல்லாம் சும்மா.

எத்தனையோ ஜாம்பவான்கள் இதெல்லாம் ஜுஜுபி என்று சந்தோஷமாக கால் மேல் கால் போட்டுக்கொண்டு டிவி  பட்டிமன்றம் பார்த்துக்கொண்டு தானே இருக்கிறார்கள்.  எனக்கு தெரிந்த ஒரு கிழவர்  செய்யாத அக்கிரமம் இல்லை. அவரைப் போல் தியாகி,  பரிசுத்த கையழகர் கிடையாது என்று பேர் வாங்கி  நூறு நோக்கி போகிறார் என்று என் நண்பன்  சொல்வான்.   

யார் அது என்று கேட்டபோது  போ போ தெரியாதது மாதிரி நடிக்காதே என்று சொல்லிவிட்டு போய்விட்டான்.

sivan jaykay

unread,
Mar 19, 2018, 7:57:52 PM3/19/18
to amritha varshini
பெண்கள் 'முக மதியர்கள் '' J.K. SIVAN

அழகு என்றால் என்ன? யார் இதை இப்படித்தான் என்று நிர்ணயிக்க முடியும். டிக்ஷனரி யில் எழுதியிருந்தால் அது எழுதினவனின் மனதிலுள்ள விஷயம். அது மற்றவனோடு நிச்சயம் வேறுபடும் . இதை யாரும் எல்லையிட்டு கூற முடியாது. கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலர் என்று எல்லோருமேயா சொல்கிறார்கள், சொல்வார்கள். பெண்களை வர்ணிக்கும்ப போதும் அவளை படமாக ஒருவன் சித்திரிக்கும்போதும் இப்படித்தான் கோபுலு வரைந்த அழகுப்பெண் மணியம் மனதில் உருவான பெண்ணோடு வேறுபடுவதால். ஒரு கவிஞன் வர்ணிப்பவள் மற்றவன் வர்ணனையில் வேறுபடுவாள் . எல்லாப்பூக்களும் அழகானவை தான். நிறம் மணம் உருவம் அளவு எல்லாமே மாறுபடும். யார் எதை விரும்புகிறார்களோ அது அவர்கள் தேர்ந்தெடுக்கும் அழகு.

அழகை ரசிக்கவும் ஒரு அனுபவம் வேண்டும். சாமுத்ரிகா லக்ஷணம் என்று ஒரு சாஸ்திரமே இருக்கிறது. தஞ்சாவூர் சரஸ்வதி மஹாலில் ஒரு புஸ்தகத்தை பற்றி படித்தேன். அதில் மிருக, பக்ஷி முக சாயல்கள் மனிதர்களுக்கு இருப்பதை படத்தோடு போட்டிருந்தது. எப்படி அந்தந்த ஜீவன்களின் பிறவி குணங்கள் அதையொத்த மனிதர்களின் குணாதிசயங்களிலும் காண்கிறது என்று வெகு சுவாரசியமாக படித்தது நினைவு இருக்கிறது.

குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்பதை டார்வின் தத்வம் படிப்படியாக விளக்குவதை படித்தும் படத்தில் பார்த்தும் இருக்கலாம். டிஸ்கவரி சேன்னலில் ஒரு தொடராகவே பல வருஷங்களுக்கு முன் பார்த்திருக்கிறேன்.

(ஒரு மகன் அம்மாவிடம் -- ''அம்மா, நாம் எல்லோரும் கடவுளின் அம்சமாகவே பிறக்கிறோம் என்று நீ சொல்கிறாய். அப்பா கிட்டே இதை சொல்லும்போது அப்பா வந்து இல்லை இல்லை, நாம் எல்லோருமே குரங்கில் இருந்து தான் பிறந்தோம் என்கிறாரே எது சரி? ''

அம்மா: ''இரண்டுமே சரி கோபு . நான் சொல்வது என் வம்சம். அப்பா சொன்னது அவர் வம்சம்.'')

அழகை ரசிக்க உயர்ந்த மனோபாவம் வேண்டும். தெய்வாம்சத்தை தேடி அதைக் கண்டு ரசிப்பது மதிக்கப்படுகிறது. மிருக உணர்ச்சியோடு காண்பது வெறுக்கத் தக்கது.

பெண்கள் கடவுளின் சிறந்த படைப்பு. அழகை மூலப் பொருளாக கொண்டு படைக்கப்பட்டது எனலாம். மதம் மனிதனால் உண்டாக்கப்பட்டு பெண்கள் தமது உயர்ந்த ஸ்தானத்திலிருந்து கீழே வீழ்த்தப்பட்டார்கள். இன்றும் சில மதங்கள் இதை கடைப்பிடிக்கின்றதை காண்கிறோம். பெண்களின் முகத்தை முக மதி என்போம். பெண்கள் முகமதி இன்றும் பல இடங்களில் அப்பெயர் கொண்டவர்களால் சூரிய வெளிச்சத்தை பார்ப்பதில்லை.. நமது சனாதன தர்மத்தில் பெண்கள் சம உரிமை கொண்ட காலம் வேதகாலம். அதன் பின்னர் முகலாயர்களின் ஆட்சியில் பல நூறு வருடங்கள் எத்தனையோ மாறுபாடுகளை பெண்கள் சந்தித்து அவதிப்பட நேர்ந்தது வருந்தத் தக்கது.

பெண்கள் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என்ற நால்வகை குணத்தில் இயற்கையிலேயே அழகோடு பிரகாசித்தனர். மேற்சொன்ன பேரரசின் ஆட்சியில் வடக்கே பல மாநிலங்களில் பெண்கள் முக மலர்கள் திரையிடப்பட்டது. அவர்கள் சாத்திரம் பெண்களை முழுதும் மறைத்தே வைத்தது. குறைத்தே மதிப்பிட்டது. காதல் முகமறியாமல் வளருமா? பெண்கள் வெறும் பசிக்குணவா? இயற்கையின் அழகை கேவலம் துணி மறைக்க இயலுமா?

ஆரியர்கள் மென்மையான வழிமுறையினை பின் பற்றினர் என்று சொல்லும்போது அவர்கள் பெண்ணை உயர்த்தி சமுதாயத்தில் போற்றினர். சரித்திரம் சொல்கிறது. அவர்கள் திரைக்குப் பின்னால் இல்லை. .

பழகியவர்களிடம் நாணம் தோன்றுவதில்லை.

பாரதியார் துணிச்சல் காரர் அல்லவா. அவருக்கு இந்த அழகு பிம்பங்களை மூடி வைத்தால் பிடிக்குமா? எவன் என்னை தடுப்பான் பார்க்கிறேன். இந்த முகத்திரைகளை பிய்த்து எறிகிறேன் என்று கூட குமுறுகிறார். எதையும் வாயால் சொல்லி என்ன பயன். செயலில் காட்ட வேண்டாமா? அதற்கு ஒரு அழகான உதாரணமும் காட்டுகிறார்.

' ஒரு அழகான பழம் உன் கண்ணில் தென்பட்டு கையிலும் விழுகிறது.. என்ன செய்வாய். அப்படியே வைத்துக்கொண்டு அழகு பார்ப்பாயா. அதன் தோலை உரித்து எறிந்து உண்ண மாட்டாயோ? வெறுமே பார்த்துக்கொண்டும் காத்துக்கொண்டுமா இருப்பாய் ?

கண்ணனை காதலியாக பாவித்து, அவள் தலைநகரில் முகலாய வமிசத்தில் மாட்டிக்கொண்டு அழகிய முகத்தை மறைத்து திரைக்கு பின்னால் வாழ்வதை அவரால் பொறுக்க முடியவில்லை. அதை கவிதை வார்த்தையிலே எதிர்த்து வடித்து, எழுந்தது இந்த பாடல்:

கண்ணம்மா - என் காதலி - 3
(முகத்திரை களைத்தல்)

நாதநாமக்கிரியை - ஆதிதாளம்
சிருங்கார ரசம்

தில்லித் துருக்கர் செய்த வழக்கமடி! - பெண்கள்
திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல்;
வல்லி யிடையினையும் ஓங்கி முன்னிற்கும் - இந்த
மார்பையும் மூடுவது சாத்திரங் கண்டாய்;
வல்லி யிடையினையும் மார்பு ரண்டையும் - துணி
மறைத்தத னாலழகு மறைந்த தில்லை;
சொல்லித் தெரிவ தில்லை, மன்மதக்கலை - முகச்
சோதி மறைத்துமொரு காதலிங் குண்டோ ? ... 1

ஆரியர் முன்னெறிகள் மேன்மை யென் கிறாய் - பண்டை
ஆரியப் பெண்களுக்குத் திரைகள் உண்டோ ?
ஓரிரு முறைகண்டு பழகிய பின் - வெறும்
ஒப்புக்குக் காட்டுவதிந் நாண மென்னடீ?
யாரிருந் தென்னை யிங்கு தடுத்திடுவார் - வலு
வாக முகத்திரையை அகற்றி விட்டால்?
காரிய மில்லையடி வீண்ட சப்பிலே - கனி
கண்டவன் தோலுரிக்கக் காத்தி ருப்பனோ? ... 2

Jambunathan Iyer

unread,
Mar 19, 2018, 7:57:53 PM3/19/18
to RKM Home Mylapore, RKM OLD BOY J Sethuraman, RKM Old Boys - s. Gokar Nesan

I asked Lord Krishna  to do away with my vices Krishna said:
They are not there for me to take them away. They are there for you to resist them



 

I asked Lord Krishna to complete my body - Krishna said:
Your spirit is complete, your body is only temporary

 

I asked Lord Krishna to give me patience - Krishna said:
Patience is a byproduct of difficulties. It is not given but learned

 

I asked Lord Krishna to give me happiness

Krishna said: I give blessings. Happiness depends upon you

 

I asked Lord Krishna to free me of pain

 Krishna Said: Suffering makes you go far away from this world and brings you nearer to me

 

I asked Lord Krishna to make my spirit grow

Krishna Said : You have to grow by yourself! But I will prune you to make you bear fruit

 

I asked Lord Krishna for the things that would make me like life

Krishna Said: I will give you life, so you can enjoy all those things

 

I asked Lord Krishna to help me LOVE others, like He loves me

Krishna said: .... ohhh, you finally got the idea.......

 

If you love Krishna,  send this message to people who you love and back to the sender who loved you  & It will make you feel good.

 

This will be your day.  Don’t throw it away...

 

May Lord Krishna bless you

 

Remeber “To the world you may mean just a person, but to a person you may mean the world”

 


N Jambunathan (Ex: REVL & IMPAL)
Rengarajapuram-Kodambakkam-Chennai-Mob:9176159004

sivan jaykay

unread,
Mar 25, 2018, 8:33:28 PM3/25/18
to amritha varshini
பார் போற்றும் பரமஹம்ஸர் 


                                               ''  பொருள் கேட்கப்போய்....''

அது மாலை நேரம்.  ராமகிருஷ்ணர்  கங்கையின் அழகை ரசித்து சூரியனின் பொன் கிரணங்கள் கங்கையின் மேல் பிரதிபலிக்கும் ஆனந்த அனுபவத்தில்  அம்பாள் பவதாரிணி நீர் திவலைகளாக நிறைய தோன்றி நர்த்தனம் ஆடுவதில் திளைத்திருந்தார்.  பின்னால்  யாரோ வருவது போல் தோன்றியது.  கவனம் சிதைந்தது. அவர் எதிர்பார்த்துக்கொண்டிருந்த இன்னொரு  சூரியன் தான் வேறு  யார்.  ஞான சூரியன்.  நரேந்திரன்.

''வா  நரேந்திரா. நீ வருவாய் என்று எவ்வளவு நாள் காத்திருந்தேன். அதிருக்கட்டும் உன் மேல் எனக்கு இவ்வளவு அன்பு எதனால் என்று உனக்கு தெரியுமோ?

''எனக்கு எப்படி தெரியும் குரு மஹராஜ். நீங்கள் சொன்னால் தானே புரியும்.''

''நீ  நாராயணன். ஆமாம்.  நீ அந்த மஹாவிஷ்ணு  நாராயணனே தான். எப்படி தெரியுமாவா?  எனக்கு முதலில் தெரியாது. என் அம்மா தாய்  பவதாரிணி தான் எனக்கு சொன்னாள் . அதனால் தான் உன் மேல் எனக்கு இத்தனை ஆசையும் பாசமும் என்கிறாள். ஒரு நாள்  கூட  உன்னில் நான் நாராயணனை பார்க்க வில்லையென்றால், அவ்வளவு தான், நான் உன்னை திரும்பிக்கூட பார்க்கமாட்டேன். ஆமாம் . நீ  ஆயிரம் இதழ் தாமரை.  நிறைந்த நீர் குடம். வாயகன்ற  பாத்திரம்.   இது எல்லாம் கொள்ளும். எவ்வளவு வேண்டுமானாலும் கொள்ளும் '' என்று நரேந்திரன் தலையை கையால் தொட்டார். நீ பெரிய  ராஜ ஹம்சம்.''

ஒருநாள்  ராமகிருஷ்ணரின் படுக்கையில் ஒரு வெள்ளிக்காசு வைத்து நரேந்திரன் அவரை சோதித்தானே அது போல் ராமக்ரிஷ்ணரும் நரேந்திரனை சோதித்தார். 

ஒருநாள் நரேந்திரன் வரும்போது ராமகிருஷ்ணர் அவனை லக்ஷியம் பண்ணவில்லை, வா என்று கூட தலையை ஆட்டி வரவேற்கவில்லை.  வழக்கமாக  இன்முகத்தோடு வரவேற்பாரே .  இப்படியே  ஒரு மாதம் ஓடியது. 

பிறகு என்றோ ஒருநாள்,  ''நரேந்திரா ஒன்றை நீ கவனித்தாயா?

''இல்லையே சொல்லுங்கள் மஹராஜ்''

''நான் உன்னை வா என்று வரவேற்கவில்லை, ஒருவார்த்தை உன் கூட பேசவில்லை. முழுக்க உன்னை அலட்சியம் பண்ணினேன். அப்படியும் நீ எதற்கு விடாமல் இங்கே வருகிறாய்?''

''நான் தான் சொன்னேனே  மஹாராஜ் , உங்களை  எனக்கு பிடிக்கிறது. உங்களுக்கு என்னை பிடித்தால் என்ன பிடிக்காவிட்டால் என்ன.  நான் எதையும்  தேடவில்லையே.''   நரேந்திரனின் இந்த பதில் ராமகிருஷ்ணருக்கு பிடித்து ஹாஹா  என்று சிரித்தார். 

1884ல்  நரேந்திரன் பரிக்ஷைக்கு படித்துக் கொண்டிருந்தான்.   பி. ஏ.  படிப்பு. அவனது தந்தை  விஸ்வநாத் தத்தா திடீரென்று காலமாகி விட்டதில் குடும்பம் தத்தளித்தது.   கையில் காசில்லை. கடன்காரர்கள் நெருக்கி னார்கள்.  சொந்தங்கள் வேறு ஸ்வரூபத்தை காட்ட தொடங்கின.  விஸ்வநாத் தத்தாவின் அந்த  பழைய வீட்டில்  சிலருக்கு  பாத்யதை.  எனவே  நரேந்திரனையும் அவன் தாயையும் அப்புறப்படுத்த முனைந்தனர்.  பணக் கஷ்டம் தெரியாமல் வளர்ந்த நரேந்திரன் தலையில் பனங்காய்.  கல்லூரியில் பணம் கட்ட முடியாத ஏழை மாணவன்.   வேலை தேடினாலும் யாரும் கொடுக்கவில்லையே.  சே  கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா? இருந்தால் என்னை இப்படி விடுவாரா?  என்று கோபம்.  நரேந்திரனுக்கு கடவுள் மேல் நம்பிக்கை குறைந்த சமயம்.  இந்த நேரத்தில் மனதிற்கு  ஆறுதலாக  இருந்தது ராமகிருஷ்ணரை பார்ப்பது . நரேந்திரனின்  தக்ஷிணேஸ்வர  பிரயாணம் அதிகரித்தது. 

நரேந்திரனால்  பண நெருக்கடி  கடன் தொல்லை  வீட்டில் சமாளிக்க முடியவில்லை.  ஒருநாள்  ''குரு மஹாராஜ், எனக்காக  நீங்கள் உங்களது  தாயாரை, அம்பிகை காளியை, எனக்கு கொஞ்சம் காசு ஏதாவது பெற வழி கேட்கிறீர்களா?  அப்பா விட்டு விட்டுப்போன கடன் தொல்லை கஷ்டமாக இருக்கிறது'' 

ராமகிருஷ்ணர்  '' நரேந்திரா அப்படியானால் நீயே நேராக அவளைக் கேளேன்'' . மேலேமேலே குருநாதர் அவசரப்படுத்த அன்றிரவே  நேராக பவதாரிணி சந்நிதி சென்றான்.  

நிசப்தம். விளக்கு அசையாமல் எரிந்து கொண்டு அவள் திருமுகம் தெரிந்தது. சிறு புன்சிரிப்பு அவள்  முகத்தில் பிரகாசித்தது.   மனது உருகியது. விழுந்து சாஷ்டாங்கமாக வணங்கினான். ஆனால்  ''எனக்கு பணம் கொடு ''என்று கேட்க  வந்தவனுக்கு அது மறந்துவிட்டது.  அவளை  மனப்பூர்வமாக தரிசித்து வெளியே சென்றான்.  

என்ன நரேந்திரா அம்மாவிடம் கேட்டாயோ ?''
''ஒன்றுமே கேட்க தோன்றவில்லை ''
''இல்லை  நீ போய் அவளைக் கேள். 
இரண்டாம் முறை நரேந்திரன் பவதாரிணியிடம் சென்றான். அவள் முன்னே நின்றவன் சிலையானான், அவனை அறியாமலேயே  ''அம்மா தாயே, எனக்கு உன் அருளை த்தா,  அறிவைத் தா, பகுத்தறியும் சக்தியை தா, சர்வமும் துறக்கும் தியாகத்தை தா, உன்னை எப்போதும் கண்டு களிக்க   உன் தரிசனத்தைத்  தா ''

பொருளைக் கேட்க சென்றவன் அருளைக் கேட்டான். பெற்றான்.  நமக்கு விவேகானந்தர் கிடைத்தார். 


sivan jaykay

unread,
Mar 25, 2018, 8:33:45 PM3/25/18
to amritha varshini
பட்டினத்தார் -- J.K. SIVAN

''நறுக்கு ஓலை நச் என்று சொல்லிவிட்டதே!''

அவர் இருந்த ஊர் கடல் வாணிபம் செய்யும் காவிரிப்பூம்பட்டினம்.

அவர் திருவெண்காடு சிவன் அருளால் பிறந்தவர் என்பதால் பெற்றோர் அவருக்கும் சூட்டிய பெயர் ஸ்வேதாரண்யர் என்ற வடமொழி வார்த்தைக்கு ஈடான திருவெண்காடர் என்ற தமிழ்ப்பெயர். சைவர். அப்பா அம்மா சிவநேசர், ஞானக்கலை. அந்த ஊர் செட்டியார்கள் முக்கால்வாசி பேர்களின் பரம்பரைத் தொழில் கடல் வாணிப வியாபாரம். ஆகவே எங்கு திரும்பினாலும் வியாபாரிகள் .

அப்பா சிவநேசரும் திருவிடைமருதூரில் வியாபாரம் செய்தவர். ஐந்து வயதில் திருவெண்காடர் தனது தந்தையை இழந்தவர்.

நிறைய சிவனடியார்களுக்கு தான தர்மம் செய்யும் குடும்பம். சிவநேசன் செட்டியார் காலத்திற்கு பின் மகன் திருவெண்காடர் வியாபாரத்தில் நிறைய செல்வம் சேர்த்தவர். அந்த ஊரில் இன்னொரு வணிகர் பெரும்பணக்காரரான சிவசிதம்பரம் செட்டியார். அவர் மகள் சிவகலைக்கு யார் தகுதியான மாப்பிள்ளை என்று தேடிக்கொண்டிருந்தவர் கண்ணில் பட்டு விட்டார் திருவெண்காடர். எனவே அந்த கால வழக்கப்படி பதினாறு வயதிலேயே திருவெண்காடருக்கு சிவகலையோடு கல்யாணம்.என்ன செல்வமிருந்து என்ன பிரயோஜனம். பதினைந்து வருஷமாகியும் குழந்தை பாக்யம் இல்லை திருவெண்காடருக்கு.

அந்த ஊரில் சிவசர்மா என்று இன்னொருவர். அவரும் சிவ கைங்கர்யத்தில் ஈடுபாடு கொண்டு அன்னதானம் செய்பவர். வாரி வழங்குபவர். சொத்து கரைந்தாலும் குறைந்தாலும் அன்னதான கைங்கர்யம் நிற்கவில்லை. மனைவி நகைகள் உணவாயின. மனைவியின் தாலியும் அன்ன தானத்துக்கு உதவியது.

ஒரு நாள் சிவன் கனவில் தோன்றி ''சிவ சர்மா, நான் காட்டும் இடம் செல். அங்கே ஒரு குழந்தை நான் குறிப்பிடும் இடத்தில் இருக்கும். நீ அதை தூக்கிக்கொண்டு நேராக திருவெண்காடர் என்ற வணிகர் வீட்டுக்கு போய் குழந்தையை அவர்களிடம் கொடு. அன்னதானத்திற்கு பணம் கேட்டாயே, இந்த குண்டு குழந்தையின் எடைக்கு எடை பொற்காசுகள் கொடுப்பார் உன் அன்னதானம் தொடரட்டும்.'' என்கிறார் சிவன்

''சிவகலை, நமக்கு சிவனருளால் என்ன ஒரு அற்புதமான குழந்தை கிடைத்திருக்கிறது என்று பூரித்தார் திருவெண்காடர். அப்பாவின் வழியாகவே மருதவாணன் என்கிற அந்த மகனும் வியாபாரத்தில் தலை எடுத்தான். மரக்கலங்களில் காவிரிப்பூம் பட்டினத்திலிருந்து அநேக வியாபாரிகள் வெளிநாடுகள் சென்று வியாபாரம் செயது நிறைய பணம் சம்பாதித்துக் கொண்டு வருவார்கள். மருதவாணனும் அவ்வாறே செய்தான்.

திருவெண்காடர் ஒருமுறை மகனை நிறைய சரக்குகள் வாங்கி ஒரு கப்பலில் ஏற்றி அனுப்பினார். நிறைய பணம் சம்பாதித்துக்கொண்டு மருதவாணன் பல மாதங்கள் கழித்து கப்பலில் திரும்ப காத்திருந்தார்.
கப்பலில் திரும்பினான் மருதவாணன் . நிறைய மூட்டைகள் வந்து இறங்கின. திருவெண்காடர் அவைகளை பார்வையிட சென்றபோது ஆச்சர்யமாக இருந்தது அவருக்கு. அத்தனையும் உமி,தவிடு, சாம்பல், எரிமுட்டை எனும் விரட்டிகள். எப்படி இருக்கும் திருவெண்காடருக்கு.

''முட்டாள் இப்படியா ஒருவன் வியாபாரம் செய்வது. நல்ல பாடம் கற்பிக்கிறேன்.'' என கோபத்தோடு திருவெண்காடர் மார்தவணனை ஒரு அறையில் அடைத்து பூட்டிவிட்டார். கடற்கரையில் நின்றிருந்த கப்பல் அருகே அத்தனை உமி தவிடு சாம்பல் மூட்டைகளையும் தூக்கி எறிந்தார். என்ன ஆச்சரியம். வெளியே எடுத்த போது தான் தெரிந்தது. மேலே தவிடு, உமி ஆனால் உள்ளே அத்தனை மூட்டைகளிலும் சொக்கத் தங்க காசுகள். தவிடு அல்ல அதெல்லாம் தங்கப்பொடி, தங்க பஸ்பம், அந்த விரட்டிகளில் நவ ரத்ன வைர வைடூர்ய கோமேதக மாணிக்க கற்கள் பொதிந்திருந்தனவே.

தலை தெறிக்க தான் செய்த தவறுக்கு தண்டனை பெற, மன்னிப்பு கேட்க மகனைத் தேடி வீடு நோக்கி ஓடினார் திருவெண்காடர். பூட்டிய அறையில் மகன் மருதவாணன் இல்லையே.

''சிவகலை எங்கே மருதவாணன்? அலறினார் திருவெண்காடர்.
''அவன் எங்கேயோ சென்றுவிட்டானே.''
''ஆஹா எங்கே, எதற்கு ஏன்? என்ன சொன்னான்?''
''ஒன்றுமே சொல்லவில்லை. இதை மட்டும் என்னிடம் கொடுத்துவிட்டு நீங்கள் திரும்ப வரும்போது உங்களிடம் தரும்படி சொன்னான்''
சிவகலை ஒரு ஓலைப்பெட்டியை திருவெண்காடரிடம் நீட்டினாள். ஆவலாக அதை பிரித்து உள்ளே பார்த்தார் திருவெண்காடர். அதில் ஒரு பனை ஓலை நறுக்கு, அதோடு ஒரு காது இல்லாத ஊசி. எதற்கு இந்த காதற்ற ஊசி. ஓலையில் ஏதோ எழுதியிருக்கிறதே? அது என்ன?''
''காதறுந்த ஊசியும் வாராது காண் கடைவழிக்கே'' -- தம்பி நீ இந்த வாடகை இல்லாத பூமியில் நிறைய அகடவிகட சாமர்த்தியம் எல்லாம் பண்ணி சம்பாதித்து கோட்டை கட்டி சேர்த்த செல்வம் எல்லாம்.... பாவம் நீ திடீரென்று நோட்டீஸ் இல்லாமல் இதைவிட்டு கிளம்பும்போது கூட வரப்போவது இல்லை. அதெல்லாம் வேறு எவனுக்கோ. இதோ இந்த காது கூட இல்லாத ஊசியைக் கூட உன்னால் கூட கொண்டுபோக முடியாது. கவனம் இருக்கட்டும்.''

அப்படியே சிலை போல் வெகுநேரம் அந்த ஓலை வாசகத்தை திரும்ப திரும்ப படித்தார். ஏதோ என்று மிகவும் பாரமாக கனமாக அவர் நெஞ்சில் அமர்ந்து வலித்தது. வாசகம் அவர் மனதில்பாய்ந்து உள்ளே ஓடி வேலை செய்தது. தலை சுற்றியதா? இந்த உலகம் சுற்றியதா? அதில் காண்பதெல்லாம் சும்மாவா? வீடு வாசல், மனைவி, சுற்றம், செல்வம், ......எல்லாமே வெறும் பயாஸ்கோப் தானா? நிழலைத்தேடி அலைந்தேனா..அடடா,
எவ்வளவு காலம் விரயமாகி விட்டது. விலையுயர்ந்த ஆடைகளை களைந்தார். ஒரு துணியைக்கிழித்து கோவணமாக அணிந்தார். என்னென்னவோ பாட்டுகள் இதயத்திலிருந்து பீறிட்டு வந்தன.

அதெப்படி அத்தனையும் அற்புத தத்துவப் பாடல்களாக அமைந்தன. திருவெண்காடர் திசையெதுவும் தேடாமல் மனம்போன போக்கில் கால் இழுத்துக் கொண்டு போன இடம் அலைந்தார். இவர் காவிரிப்பூம் பட்டினத்தை சேர்ந்தவர் என்று அறிந்து சுருக்கமாக பட்டினத்தார் என்று எல்லோரும் அழைத்தார்கள் நமக்கு நிலையாக ஒரு சித்தர் கிடைத்துவிட்டார்.

ஸ்ரீ காளஹஸ்தி சென்றார். சிவனை ஒரு கேள்வி கேட்டார் அற்புதமாக இருக்கிறது. நீங்களும் ரசியுங்கள்.

''பொன்னாற் பிரயோசனம்
பொன்படைத் தார்க்குண்டு பொன்படைத்தோன்
தன்னாற் பிரயோசனம் பொன்னுக்கங்
கேதுண்டு? அத்தன்மை போல்
உன்னாற் பிரயோசனம் வேணதெல்
லாம் உண்டு உனைப் பணியும்
என்னாற் பிரயோசனம் ஏதுண்டு?காளத்தீயீச்சுரனே!

'காளத்தீசா, இதோ பார் செட்டியார் நிறைய தங்கம் சேர்த்தார், அதால் நிச்சயம் நிறைய பயன் இந்த செட்டியாருக்கு உலகத்தில் இருக்கிறது. அதுசரி அதை வைத்திருந்தாரே செட்டியார், அவரால் ஒரு நயாபைசா பிரயோஜனம் அந்த தங்கத்திற்கு உண்டா? நான் உன்னெதிரே வந்து நிற்கிறேன். தரிசிக்கிறேன் உன்னால் போதும் போதும் என்ற அளவிற்கு எனக்கு புண்ணியம் பயனாக உண்டு. ஆனால் அதே நேரம் உன்னைப் பணிகிறேன், என்னால் உனக்கு ஏதாவது ஒரு சிறு உபயோகமாகவாது உனக்கு உண்டா சொல் சிவா''
எப்படி இருக்கிறது பட்டினத்தார் எளிய பாடல்? இன்னொன்று

''இருப்பதுபொய் போவதுமெய் என்றெண்ணி நெஞ்சே
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே – பருத்ததொந்தி
நம்மதென்று நாமிருப்ப நாய்நரிகள் பேய்கழுகு
தம்மதென்று தாமிருக்கும் தான்''

ஆரிய பவன் அல்வா சாப்பிட மூணு மணிக்கே கிளம்பி குடை பிடித்து நடந்து ரயில் ஏறி, படி இறங்கி நடந்து இந்த தொந்தியை வளர்த்தேன். தொந்தியை தடவிக்கொடுத்தேன் செல்லமாக. பகீரென ஒரு எண்ணம். இது எனதா?? இல்லை செட்டியார், எங்களது?? யார் சொல்வது இப்படி என்று பார்க்கிறேன். பேய்கள். கழுகுக, நாய், நரிகள்..நாக்கை தொங்கபோட்டுக்கொண்டு என் பெரிய தொப்பையை பார்க்கின்றனவே. ஒருநாள் என் செல்ல தொப்பையை என் உடலோடு ஒருநாள் தூக்கிக்கொண்டு ஒரு இடத்தில் போட்டுவிடுவார்களே . அப்போது பாய்ந்து வந்து இந்த பேய்கள், நாய்கள், நரிகள், கழுகுகள், அல்வாவோடு இந்த தொப்பையை கிழித்து.....ஐயையோ , போதும் நிறுத்து...வேண்டாம். நான் இந்த உலகில் இருப்பதே அநித்தியம். பொய் ,நிச்சயம் இதை அப்படியே விட்டுவிட்டு கட்டின துணியோடு போவது மட்டுமே நிச்சயம். நித்யம்...

பட்டினத்தாரை தொடர்வோம்.

sivan jaykay

unread,
Mar 27, 2018, 8:53:37 PM3/27/18
to amritha varshini
திருமூலர் திருமந்திரம் J.K. SIVAN

'சக்கனி'' ஒரு ராஜ மார்க்கம்.

திருமூலர் மனதில் எப்போதும் ஒரு இடத்தில் இருப்பதால் அடிக்கடி தலையை காட்டுகிறார். அற்புதமான சில திருமந்திரங்களை அனுபவிப்போமா?

ஒன்றுஅவன் தானே;இரண்டுஅவன் இன்னருள்;
நின்றனன் மூன்றினுள்;நான்கு உணர்ந் தான்; ஐந்து
வென்றனன்; ஆறு விரிந்தனன்;ஏழுஉம்பர்ச்
சென்றனன்;தான்இருந் தான் உணர்ந்து எட்டே.

கே. பி. சுந்தராம்பாளின் திருவிளையாடல் பாடலை நினைவிருக்கிறதா. ஒன்றானவன் ரெண்டானவன் மூன்றானவன் என்றெல்லாம் அடுக்கிக் கொண்டே போவார்கள் இன்னிசையோடு. திருமூலர் திருவிளையாடல் படம் பார்த்ததில்லை. இறைவன் ஒருவனே, சக்தி சிவன் என பிரிந்து ரெண்டாவது தான் பிரபஞ்ச இயக்கம். மூன்று என்பது இறைவன் பிரபஞ்சத்தில் உயிர்களைப் படைத்து அதை காத்து முடிவில் அழியவேண்டிய நேரத்தில் அழிப்பதை, மாறாத இந்த முத்தொழில் புரிவதை குறிக்கின்றார்.

நான்கு பற்றி என்ன சொன்னால் சரியாக இருக்கும் என்று யோசித்து அறம், பொருள், இன்பம், வீடு எனும், வடமொழியில் தர்ம, அர்த்த, காம, மோக்ஷ சமாச்சாரங்களை சொல்கிறார். ஆஹா இப்படி உலகில் உலகில் ஒன்றானவன், இரண்டாக மாறி, மூன்று தொழில்களில் உயிர்களை ஆடவிட்டு, நான்கு விஷயங்களை அவர்கள் தேடி அலைய வைத்ததும் ஐந்தாவதாக அவனை ஆட்டிப்படைக்கும் ஐம்புலன்களையும் நினைவு கூறுகிறார்.

அப்புறம் செயலுக்கு காரணமான, ஆதார மந்திரமாக, பதமாக, வன்னமாக, புவனமாக, தத்துவமாக, கலையாக என்று ஆறாக காட்டுகிறார். இறைவன் எடுக்கும் வடிவங்கள் இவை. எங்கெங்கெல்லாம் இறைவன் ஈடுபாடு என்பதை சப்த லோகங்களாக பிரமலோகம், விஷ்ணு லோகம், ருத்ர லோகம், மஹேஸ்வர லோகம், , சதாசிவ ஆனந்த லோகம், சக்தி லோகம் , சிவலோகம் என்று காட்டுகிறார். இதெல்லாம் கடந்து மேலே உள்ளவன் எவனோ அவனை , அந்த சிவனை நீ தொட்டு விடு, எட்டிவிடு என்று எட்டாக முடிக்கிறார். எட்டு நாராயணனின் அஷ்டாக்ஷர மந்த்ரமும் தானே. திருமூலர் அசாத்தியமானவர். அவர் திருமந்திரங்கள் படிப்பதற்கு எளிதாக நான்கு அடிகளில் சந்தங்களோடு அமைந்தாலும், அப்பப்பா , உள்ளே ஆழமான கருத்துகள் கொண்டவை. இல்லாவிட்டால் ''திரு மந்திரம்'' என பெயர் பெறுமா?


உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்
உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்று
உடம்பினை யானிருந்து ஓம்பு கின்றேனே…

சீ சீ இந்த உடம்பு எதற்கும் உதவாதது. இது வெறும் உபத்திரவம், என்ற எண்ணம் என் மனதில் ஒரு காலத்தில் இருந்தது. வாஸ்தவத்தில் அது ஒரு அதிசயம் என்று என் மண்டைக்குள் ஏறவில்லை. அற்புதமான உன்னத பொருள்களை உறுப்புகளாக அந்த பகவான் படைத்திருக்கிறான். நம் கண்ணில் கையில் பட்டால் கண்டிப்பாக கெடுப்பவர்கள் என்று நம் கைக்கு எட்டாமல் உள்ளே ஜாக்கிரதையாய் ஒழித்து வைத்திருக்கிறான். அதை யாராவது கவனித்துக் கொள்ளவேண்டும், வேறு யார், நானே அதை பார்த்துக்கொள்கிறேன் என்று நம் அனைவரின் உடலுக்குள்ளும் தானே குடி கொண்டான். அவன் இருக்கும் இடம் கோவில் இல்லையா. உடம்பு அப்படியென்றால் கோயில் தானே. இது புரிந்துவிட்டால், நாம் நமது உடம்பை எப்படி பாதுகாக்க வேண்டும். போற்றவேண்டும், அதன் மேன்மையை உணர்ந்து இறைவனை வாயார புகழவேண்டும். நம் உடலை நாமே கெடுத்துக் கொண்டு, அதை வெட்டி எறியும் டாக்டருக்கு காசு கொடுத்து டாக்டர் சுப்பாமணி ஒரு நடமாடும் தெய்வம் என்று புகழ் வேறே.
இறைவன் சிரிக்கிறான் என்றால் பின்னே சிரிக்கமாட்டானா இந்த வேடிக்கையை பார்த்து.


உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே…

உடம்பை நன்றாக புரிந்து கொண்டீர்களா. உடம்பு அழிந்தால் உள்ளே இருக்கும் ஆன்மா ஜீவன் மறைந்து விடும். கோவில் காலியானால் அங்கே தெய்வமேது? உடம்பை உணரும்போது தான் நான் அது இல்லை, அதற்கும் மேலான ஒருவன் கை வேலை என்பது புரியும், ஞானம் மனதில் குடிபுகுந்து இதயம் லேசாகும்.
இந்த கோவிலை நான் பரிசுத்தமாக வைத்துக்கொண்டால் அதன் உள்ளே இருக்கும் சிவனுக்கும் அளிக்கும் திரிகால பூஜை, நைவேத்தியம் எல்லாமே. அவன் அருள் உடல் ஆரோக்யம் மூலம் கிட்டும்.


நெறியைப் படைத்தான்;நெருஞ்சில் படைத்தான்!
நெறியில் வழுவின் நெருஞ்சில் முள்பாயும்!
நெறியில் வழுவாது இயங்கவல் லார்க்கு
நெறியில் நெருஞ்சில்முள் பாயகி லாவே!

பாதை என்றால் என்ன. வாழ்க்கையை வாழும் முறை. பாதையில் கைகாட்டி மரம், எவ்வளவு தூரம், எங்கே போகவேண்டும், எப்படி என்று திசை காட்டுவது போல், வாழ்க்கை முடியும் வரை வழிகாட்டும் நெறி முறைகள். கோட்பாடுகள். இதுதான் பாதை, இதுதான் பயணம் என்று சொல்லிக்கொடுப்பவை. குறுக்குப்பாதையில் போனால் தான் கருவேல முள், நெருஞ்சி முள் குத்தும். ''சக்கனி ராஜ மார்கமு'' இருக்கும்போது சந்து வழி எதற்கு.... நான் சொல்லவில்லை. திருமூலர் சொல்கிறார்.


sivan jaykay

unread,
Mar 27, 2018, 8:54:04 PM3/27/18
to amritha varshini
சுந்தரமூர்த்தி நாயனார்  

                                                       சிவனின் திருமண தூது 
 
சுந்தரர் தான் நிறையவே  நடந்து சிவன் கோயில்களை பார்த்தவர் என்று யாராவது கின்னஸ் புஸ்தகத்தில் போட்டிருக்கலாம்.  ஒவ்வொருத்தர்  நடையாக நடந்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிக்க அலைகிறார்களே 

எதிரே நீண்ட சாலை. இருமருங்கும் நிழல் தரு  மரங்கள்.எங்கும் பச்சை பசேல் என்று நெல்வயல்கள். காய்கறி தோட்டங்கள். வண்டுகள் ரீங்காரம், பறவைகள் இனிய கானம் குளிர்ந்த காற்று, மண் தரையில் நடந்து கொண்டிருந்த சுந்தரருக்கு ஆனந்தத்தை தந்தன. அவர் தான் ஏற்கனவே வாய் நிறைய  ஓம் நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திர பேரானந்தத்தில் திளைத்தவாறு நடக்கிறாரே. ஆனாலும் வயிறு ஞாபகப்படுத்தியது. பசியும் தாகமும் .  சிவனுக்கு தெரியாத சுந்தரர் நிலைமை.  தூர ஒரு மரநிழலில் ஒரு ஓலைக்குடிசை வாசலில் திண்ணையில்  சில மண் பாத்திரங்களில் நீர் மோர், குடிநீர் பணியாரங்களுடன் ஒரு பிராமணர் கண்ணில் பட்டார்.  சிறிய தண்ணீர்பந்தல்.

''அப்பாடா   ஓம் நமசிவாயம் '' என்று சுந்தரர் அந்த திண்ணையில் அமர்ந்தார்.  பிராமணர் உள்ளே சென்று விசிறி எடுத்து வந்து விசிறினார்.  

''சாப்பிடுங்கள் இங்கே'' , பிராமணர்  ஒரு தட்டு ஒரு பாத்திரம் நிறைய  அன்னம்,  சில பாத்திரங்களில் நிரம்ப உணவு பதார்த்தங்கள் எடுத்து வந்து பரிமாறினார்.   சுந்தரர் பிராமணரின் உபச்சாரத்தை மனமுவந்து ஏற்று உணவேற்றார். திண்ணையில் சற்று படுத்தார்.  ஏதோ ஒன்று சுந்தரர் கவனத்தை ஈர்த்தது.  பாத்திரத்தில் இருந்த உணவு எல்லாமே  சுந்தரர் முழுதும் சாப்பிட்டு முடித்தும் கூட அதே அளவு எப்படி  மீண்டும் நிறைந்தது?   விருட்டென எழுந்து உள்ளே பிராமணரை தேடினார்.  அந்த வீடு காலியாக எவருமின்றி இருந்தது. சுவற்றில் பார்வதி பரமேஸ்வரன் ரிஷபவாகனத்தோடு தரிசனம். அதிசயத்துடன் வெளியே வந்தால் திண்ணையில் தண்ணீர்பந்தல் காணோமே. 

''ஆஹா   பசுபதி அல்லவோ பசி தீர்த்திருக்கிறான். விசிறியிருக்கிறான்?''  நன்றியுணர்ச்சில் பதிகம் பிறந்தது. 

ஒரு தடவை  சுந்தரர்  திருக்கச்சூர்  என்ற ஸ்தலத்துக்கு சிஷ்யர்கள் புடை சூழ நடந்து சென்றார். சிவ தர்சனம் அபூர்வமாக இருந்து தன்னை இழந்தார். களைப்பாக  இருந்ததால் கோவில் வாசலிலே அமர்ந்தார்கள்.  சிவன் கோயில் சென்றால் சிறிது அமராமல் திரும்பக்கூடாது.  வழக்கம் போல் பசி. உச்சி வெய்யில் நேரம்.  இங்கேயும்  ஒரு பிராமணர் அந்த நேரம் வந்தார்!!! 

''என்ன சிவ பக்தர்களே , ஊருக்கு புதுசா? களைச்சு உட்கார்ந்துட்டீர்கள் . போஜனம் ஆயிட்டுதா? இல்லேன்னா எங்க கிரஹத்துக்கு வரணும்.ரொம்ப தூரம். அது. வேண்டாம். இங்கேயே  இருங்கோ . நான் ஏற்பாடு பண்ணி எடுத்துண்டு வரேன்  ''  சுந்தரரின் பதிலுக்கு காத்திராமல் அந்த பிராமணர் சென்றார். அந்த உஞ்ச      வ்ருத்தி  பிராமணர் பல வீடுகளில் சென்று உணவு சேகரித்து சுந்தரரையும் அவர் சிஷ்யர்களை பசியாற செய்தார்.  அவர்கள் பசியாறி முடியும் சமயம் பிராமணர் மறைந்துவிட்டார்.  இதைப்பற்றியும் சுந்தரர் அற்புதமாக ஒரு பாடல் இயற்றியுள்ளார். அதில் சிவனின் கருணை கொப்புளிக்காமல் என்ன செய்யும்?

சுந்தரர்தி விஜயம் செய்ய  நமது திருவொற்றியூர்  பாக்யம் செய்திருக்கிறதே.  சிலகாலம் இங்கே வசித்தார். பார்வதியின் தோழி ஒருவள்  கைலாசத்தில்  ஹாலால சுந்தரர் மீது மையல் கொண்டு அவரை மணக்க விரும்பி பரமேஸ்வரன் அவளை பூமியில் பிறக்க கட்டளையிட்டு அவள் இங்கே வந்து பிறந்தாள்.  அவள் பெயர் இப்போது சங்கிலி.   சுந்தரருடன் தொடர்பு சங்கிலி போல் இருந்ததால் இப்படி ஒரு பெயரா? ஞாயிறு என்று ஒரு ஊர்  இருக்கிறது.  நான் அங்கே சென்றிருக்கிறேன்.  ரெட் ஹில்ஸ் என்று சொல்கிறோமே  செங்குன்றம் அதற்கு போகும் வழியில் ஒரு சிறு கிராமம் அது.  அங்கே தான் ஞாயிறு கிழார் என்கிற வேளாளர் பெண் சங்கிலி. கோவூர் கிழார், சேக்கிழார், என்று கிழார் என்ற பெயர் வழக்கத்தில் இருந்த காலம்.தூய சிவபக்தரான  அவர் பெண் சங்கிலியும் சிவபக்தையாக இருந்ததில் ஆச்சர்யமில்லை.  கல்யாணம் என்றாலே பிடிக்காது. அவளை கல்யாணம் சம்பந்தம்  செய்ய வந்த சில வேளாளர்கள் குடும்பம் உடனே மரணமடைந்தது.  அதற்கப்புறம் கிழார் அவள் திருமணம் பேச்சே எடுப்பதில்லை. திருவொற்றியூரில் ஒரு இடம் பிடித்து அங்கே ஆஸ்ரமத்தில் தங்கினாள் . 

தினமும் நிறைய மலர்கள் தொடுத்து திருவொற்றியூர்  தியாகராஜனுக்கு மலர் மாலை சூட்டுவது  சங்கிலிக்கு  பிடித்த வேலை.  ஒருநாள் சிவனுக்கு மாலை சூட்ட ஆலயம் வந்தவள் அங்கே சுந்தரரை பார்க்கிறாள்.  சுந்தரரும்  அவளை கண்ணிமைக்காமல் சிலையாக நின்று பார்க்கிறார்..... எங்கேயோ பார்த்த முகம்.... இருவருக்கும்  மனதில் சுனாமி... கைலாச தொடர்பு மெதுவாக தலையெடுக்கிறது.

''தியாகராஜா  இவளே நான் விரும்பும் மனைவி. உன்னருளால் அது நிறைவேற வேண்டும்.''.  பரமேஸ்வரனுக்கு தரகர் வேலை நிச்சயமாகிவிட்டது. 
 
அன்றிரவு சங்கிலி கனவு கண்டாள் :  ''பெண்ணே, என்  சிறந்த பக்தன் சுந்தரன். உனக்கு ஏற்றவன். என் தோழன். உன்னை மணக்க அவனுக்கும் விருப்பம் என தெரிவித்தான். நீ அவனை மணக்க வேண்டும்.உன்னை விட்டு பிரியமாட்டேன் என்று அவனிடம் வாக்குறுதி பெற்றுக்கொள்  ''

''அவ்வாறே'' என சிவனின் கட்டளையை மீறாமல் சங்கிலி  ஏற்கிறாள்.

சிவன் சுந்தரரின் கனவிலும்'' சுந்தரா, இந்த சங்கிலியை நீ பிரியக்கூடாது.'' என்கிறார்.  
''பரமேஸ்வரா, நான் உன்னை எந்தெந்த ஊரிலோ எல்லாம் சென்று தரிசிக்கும் யாத்ரீகன். ஒரு இடத்தில் எப்படி இருப்பேன்.   நீ எனக்கு ஒரு வாக்கு தருகிறாயா? 
நீ லிங்கத்திலிருந்து விடுபட்டு 
என்னெதிரில் இருக்கும் ஒரு மரத்தில் உன் தரிசனத்தை தருவாயா. நான் இங்கேயே இருக்கிறேன்.''

''சரி'' என்கிறான் சர்வேஸ்வரன் 

தரகன் தியாகராஜன்  மீண்டும் சங்கிலியிடம் சென்று ''இதோ பார் சங்கிலி,  சுந்தரனிடம் சென்று உன்னை மணக்க ஏற்பாடு பண்ணி விட்டேன்.  அவன்  உனக்கு உன்னை விட்டு பிரியமாட்டேன் என்று சத்யம் செய்வான்.  நீ அப்போது  சிவலிங்கம் சாட்சியாக என்று சொல்லாதே. இதோ இந்த மரத்தில் சிவன் சாட்சி சொல்லட்டும் என்று அவன் எதிரில் நிற்கும் ஒரு மரத்தை காட்டி சத்தியம் செய்யச் சொல்''  என்று  அறிவுரை கூறுகிறார்.

அடுத்த நாள் வழக்கம்போல் சங்கிலி திருவொற்றியூஊர் தியாகராஜன் சந்நிதியில் நிற்கிறாள்.

தொடரும் 


Bagya Balasubramaniam

unread,
Mar 28, 2018, 9:02:48 PM3/28/18
to amrith...@googlegroups.com
Sathya Sai speaks vol 1
———————————
The greatest disease (or absence of ease) is the absence of peace. When the mind gets peace, the body also will have health. So, everyone who craves for good health must pay attention to the emotions, feelings, and motives that animate the individual. Just as you give clothes for a wash, you have to wash the mind free from
dirt again and again; otherwise, if dirt accumulates and you form a “habit”, it is difficult for the dhobi (person who washes the clothes) as well as harmful to the clothes. It should be a daily process; you should see that no dirt settles upon the mind. That is to say, you should move about in such company that dirt is avoided. Falsehood, injustice, indiscipline, cruelty, hate — these form the dirt.
Truth, righteousness, peace, love (sathya, dharma, santhi, prema) — these form the clean elements. If you inhale the pure air of these latter, your mind will be free from evil bacilli and you will be mentally sturdy and physically strong. As Vivekananda used to say, you should have nerves of steel and muscles of iron. That is to say, you should have hope and joy and elation as an unshakable resolution, not despair and dejection.
What is studied is not put into practice
Your heart should be like glass, with the spiritual light inside illuminating the world outside, with the world outside reacting on the inner urges and making them lean toward service, sympathy, and mutual help. Now, people read and study all kinds of unintelligible Vedantic texts and struggle with commentaries and notes and translations to grasp their sense. It is being poured down their throats, but the portion does not get down to soften the heart. It is not translated into practice. The truths of the Vedanta are put on for public exhibition, as in a drama, where appropriate dresses are worn on the stage but taken off when the actor moves off the stage. They do not adhere to them all the time to derive the Bliss of the Soul (Atmananda), which they can give.
It is chiefly a matter of careful, well-timed, regulated discipline; it cannot be got by spurts and skips; it has to be climbed step by step, each step being used as a foothold for the next. There is no systematic living according to any known principle, now; this is true of the student, the householder, the mistress, and the master of the house. Virtues have to be cultivated in the home; each member sharing in the joy with the rest, each one seeking for op- portunities for helping others. This attitude has to be stuck to, so that it may stay as character. How can a vessel kept with the mouth downward get lled with water? It has to open up and receive the good impulses. You have to learn each lesson by systematic study. Application and effort alone will give success.
Have faith in the Lord and His Grace
In all effort, if you trust in a Higher Power, which is ready to come to your help, work is made easy. This comes out of devotion and reliance on the Lord, the source of all Power. When you travel by train, you have only to purchase the ticket, enter the proper train, and take a seat, leaving the rest to the engine. Why should you carry the bed and trunk on your head? So too, put your trust in the Lord and carry on to the best of your ability. Have faith in the Lord and His Grace. Try to earn it by using the intelligence and the conscience with which He has endowed you. So I want to tell you that the best and the wisest thing is to see that you do not fall ill. The hospital should radiate preventive measures also and try to educate the villagers in methods of avoiding illness. Develop self-reliance; that is the best tonic. You have been born because you did not pass in certain subjects; there is some balance of experience that you must acquire to complete the course. If you get convinced that your true nature is the Atma, then you have finished the course and “passed”.
Cultivate prema toward all beings
For reaching that stage, you should start with the cultivation of the “feeling of kinship with all beings” — sarvasamanabhava, as it is called. It is very dif cult to get, but that is the only way to see the Atma that is in all. For example, a person with that sincerity of feeling (bhava) will not be happy at the killing of animals for food or even hunting them. Why should you seek the animal to its den, lie in wait for it, and lay traps for it, so that you may derive pleasure by killing it? Prema should be cultivated toward all beings so that you may see the Innermost Self in all beings. The Atma is Omnipresent. Do not think it is found only in persons belonging to certain castes or colours or creeds, or that it is of a big size in fat people or of a brilliant nature in rich people. It is consistently being, awareness, bliss absolute (sath, chith, ananda) in every being. Spiritual exercise has to go a long way to win this outlook.
But you can begin with little things. You can avoid causing annoyance to others, can’t you? Even if you are unable or unwilling to do service to others, at least, if you desist from causing harm, that is meritorious service indeed! For example, take the words you speak. I always say puri cation of words leads to cleansing of the mind. That is why I insist on quiet talk, sweet talk, and little talk; the pure and serene (sathwic) talk — no anger, no heat, no hate. Such talk will cause no quarrel, no blood pressure, and no factions. It will promote mutual respect and love.
Then again, do not cynically laugh at the good that others do or at the spiritual exercises of others. Inquire, but do not insult. Respect the sincerity of the other person; respect also elders and people with more experience than you. In company, behave in a well-mannered way, showering brotherhood and joy on all around you.
Moderation in food is always to be welcomed
Strive for the happiness of the community and of the human race. Pray that all people everywhere may have peace and plenty. Be eager to do good and be good.
This being a function connected with the Hospital, I must tell you about certain other things also. By regulat- ing your diet and avoiding certain bad habits, you can preserve health. Moderate food and food of the pure (sath- wic) type, will promote mental poise and also physical happiness. Moderation in food is always to be welcomed. Many people consume more than the necessary quantity of rich food, and such have to practise moderation. So too, if you do not smoke, you escape a number of illnesses that follow that passionate (rajasic) practice. Any in- toxicant or stimulant, because it disturbs nature’s even trend, is harmful. Moderation in food, moderation in talk and in desires and pursuits, contentment with what little can be got by honest labour, eagerness to serve others and to impart joy to all — these are the most powerful of all the tonics and health-preserves known to the science of health, the Sanathana Ayur-Veda, the Veda of the full life.
Pranams at the Lotus Feet of Bhagwan Sri Sathya Sai
Bhagyalakshmi Suresh
image1.jpeg

sivan jaykay

unread,
Mar 28, 2018, 9:03:17 PM3/28/18
to amritha varshini
இனி கீதாஞ்சலி J.K. SIVAN நமது ஞாபக சக்தி இருக்கிறதே அபாரம். இன்று காலை என்ன சாப்பிட்டோம் என்பது கூட நினைவில் இல்லை. என்றோ வாழ்ந்த மகான்களை எப்போது நினைக்கப்போகிறோம். தாடிக்காரர்களில் சிலர் மோசமாக இருப்பவர்களும் உண்டு அருமையானவர்களும் உண்டு. பறவைகளில் குருவி ராஜாளி கருடன் இல்லையா அது போல். நான் சொல்லும் தாடிக்காரர் வசதியானவர். எதையும் அறுக்க, வெட்ட, உடைக்க சொல்லாதவர். அமர காவியங்களை படைத்தவர். உலகம் புகழ்ந்த காவியக் கவியோகி ரவீந்த்ரநாத் தாகூர் (1861-1941). அப்போதே நோபல் பரிசு வாங்கியவர். 80 வயது வாழ்ந்த அவர் சாதித்தது எத்தனையோ யுகங்களுக்கு போதுமானது. குருதேவ் என்று எல்லோராலும் போற்றப்பட்டவர். சிறந்த தத்துவ ஞானி. நமது முண்டாசு கவிஞனுக்கும் காந்திஜிக்கும் ரொம்ப பிடித்தவர். அவர் எழுதிய கீதாஞ்சலி அற்புதமான ஒரு காவியம். சமீபத்தில் படித்தேன். ஆஹா அதை கொஞ்சம் அள்ளி வீசினால் என்ன என்று தோன்றியது. அவர் எழுதிய காபூல் காரன், ராய் சரண், சுபா, போஸ்ட்மாஸ்டர், போன்ற மனதைப் பிழியும் கதைகளை உங்களுக்கு ஏற்கனவே சுருக்கி தந்திருக்கிறேன். மீண்டும் அதை படிக்க ஆசியானால் இந்த என் முக நூல் குரூப்பில் இருப்பவர்கள் தேடி படிக்கலாம். அவசியமா ? பிஞ்சிலே பழுத்தவர் என்று தாகூரை சொல்லலாம். முதல் வங்காள மொழி கவிதைத் தொகுப்பு 17 ஆவது வயதில். கீதாஞ்சலி தாகூரின் அற்புதமான மனம் கவரும் எண்ணச் சிதறல். எல்லா மொழிகளும் எல்லோருக்கும் தெரியாது. வங்காளியில் படிக்க முடியாவிட்டாலும் மொழிபெயர்ப்பில் தெரிந்து கொண்டதை ரசிப்போம். தாகூர் குடும்பத்தில் பல கலைஞர்கள் கவிஞர்கள் போல் இருக்கிறது. கோகோந்த்ரநாத், அபனீந்திரநாத், தேவேந்திரநாத், த்விஜேந்திரநாத் தாகூர்கள்.பலே பலே. கீதாஞ்சலியை தாகூரே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருப்பதை தான் அலசுகிறோம். Gitanjali: 1 Thou hast made me endless, such is thy pleasure. This frail vessel thou emptiest again and again, and fillest it ever with fresh life. This little flute of a reed thou hast carried over hills and dales, and hast breathed through it melodies eternally new. At the immortal touch of thy hands my little heart loses its limits in joy and gives birth to utterance ineffable. Thy infinite gifts come to me only on these very small hands of mine. Ages pass, and still thou pourest, and still there is room to fill. தாகூருக்கு கிருஷ்ணன் ஞாபகம் வந்திருக்கிறதோ? எப்படி அவன் குழலிசை கீதத்தை நினைவிலிறுத்தி ஆரம்பிக்கிறார். கீதை தந்தவனுக்கு அஞ்சலி தான் கீதாஞ்சலியோ? யாராயிருந்தாலும் எந்த பாஷை பேசினாலும் கிருஷ்ணனை மறந்து இயற்கையையோ தெய்வத்தையோ நினைக்க வழி உண்டா? ''பகவானே, எனக்கு கடைசிகாலம் என்று ஒன்று இல்லை. நிரந்தரமாக்கி விட்டாய். அதில் உனக்கு எவ்வளவு சந்தோஷம். இந்த தேகம் எனும் மண் பாத்திரம் அடிக்கடி உடையும் காலியாகும் .ஆனால் நீ மறுபடியும் அதில் ஏதோ ஒரு உயிரை உள்ளே வைத்து நிரப்புபவன். மீண்டும் புது வாழ்க்கை. !! அடேயப்பா, கிருஷ்ணா, நீ எப்படியப்பா, இந்த சாதாரண நாணல் மூங்கில் குழாயில் ஒரு தெய்வீக சங்கீதத்தை கொடுத்து காடு மலை, நதி பள்ளத்தாக்கு என்று எங்கும் உன் மூச்சுக்காற்றை செலுத்தி உயிர்ப்பிக்கிறாய். ஒவ்வொரு ஒலியும் உயிரோட்டம் நிறைந்த ஒரு புது நாதம். ஜீவ கானம் . எல்லையற்ற நிரந்தர அமர இன்னிசை. உன் மூச்சுக்காற்று மட்டுமா. உன் தெய்வீக கரகக் கரங்கள் தாங்கி விரல்கள் அசைந்து அந்த சாஸ்வத சங்கீதம் என் மேல் காற்றில் படும்போது நான் எங்கே இருக்கிறேன் என்றே தெரியவில்லை! என் நெஞ்சத்திற்கு சொல்லும் சக்தி இல்லை. வார்த்தைகள் மொழிகள் மீறிய ஒரு எல்லையற்ற இன்பம். அதன் அர்த்தங்கள் எத்தனை வேதத்திலும் அடக்க முடியாதது. நீ பரோபகாரி, எவ்வளவு அதிசய தானம் இதை அளிக்கிறாய். யுகங்கள் தான் மாறி மாறி வருமே தவிர உன் கருணைப் பரிசு தொடர்ந்து தான் அளித்துக் கொண்டிருக்கிறாய். உதிக்கும்! இந்த பிரபஞ்சத்தில் எங்கே ஒரு மண் பாண்டமும் காலி இல்லையே, அடடா எல்லாமே உன் ஜீவ நாதத்தால் நிரம்பி பொங்கி வழிகிறதே!

sivan jaykay

unread,
Apr 1, 2018, 8:41:41 PM4/1/18
to amritha varshini
ஒரு  அத்யாவசிய பஞ்சாங்கம்....  J.K. SIVAN 

                                                            
பதிமூன்று வருஷங்களாக அன்பர் வேதிக் ரவி அவர்கள், ஸ்ரீ புவனேஸ்வரி வேதிக் சென்டர் (SRI  BHUVANESWARI  VEDIC  CENTRE) என்ற நிறுவனத்தின் மூலம் எத்தனையோ நல்ல காரியங்களை சப்தமில்லாமல் செய்து
வருகிறார். எல்லோருக்கும் தெரிந்த பெயர் வேதிக் ரவி. சுருக்கமான பெயர் போல் குறுகிய தேகம் உடைய உயர்ந்த மனிதர். 

அவர்களது பஞ்சாங்கம் நான் விரும்பி உபயோகிப்பது. சகல வித தாத்தா பாட்டி சொல்லித்தருகிற சம்பிரதாய சமாச்சாரங்களும்  அதில் உண்டு. நிறைய வீடுகளில் இப்போது தாத்தா பாட்டிகளோ பெரியவர்களோ இல்லாத போது  இந்த பஞ்சாங்கம் அந்த குறையை தீர்க்கிறது.

முதலில் பஞ்சாங்கத்தை பற்றி சில வார்த்தைகள் சொல்கிறேன்.

ஹிந்துக்களாகிய நமக்கு  பஞ்சாங்கம் ஒரு இன்றியமையாத கையேடு. வரப்பிரசாதம்.  நமது உலக வாழ்க்கை பிறப்பது முதல், இறப்பது வரை, அதற்குப் பின்னும் நாம் அனுசரிக்க வேண்டிய நியதிகளை,   நேம நியமங்
களை,  சொல்லித்தருவது பஞ்சாங்கம். நமது வாழ்க்கையே இந்த பஞ்ச பூத  இயற்கையால் அமைவது, அதனுடன் வளர்ந்து மாறுவது, அதனிலே ஐக்யமாவது.எனவே இயற்கையை அறிந்துகொள்ள பஞ்சாங்கம் அவசியம்.

பஞ்சாங்கம் ஒரு காலம்  நேரம்  காட்டும் அட்டவணை மட்டும் அல்ல. நமது செய்கைகளை, எண்ணங்களை நேர் படுத்த சீராக்க  உதவும் ஒரு அத்யாவசிய கருவி.  சம்பிரதாயங்கள்,  முக்கிய நாட்கள்,  கிரஹணம், அமாவாசை, பௌர்ணமி, திதி, நக்ஷத்திரங்கள்  மாதங்கள் தவிர  பண்டிகை, கர்மானுஷ்டான மந்த்ரங்கள், சுப முகூர்த்த நேரங்கள் அறிய  உதவும் ஒரு வசதியை   இப்பஞ்சாங்கங்கள் அளிக்கிறது.  எல்லாம் சொல்லித்தரும்  வீட்டில் டாக்டரை  தேடும்  தொந்தரவு பண்ணாத சாப்பிடாத பேசாத  அதிகாரம் பண்ணாத  பாட்டி தாத்தாக்கள் இந்த பஞ்சாங்கங்கள்.

அந்தக்காலத்தில் பஞ்சாங்கம் எல்லார் வீட்டிலும் இருக்காது. பெரியவர்கள் மனக்கணக்கில் இந்த நாள் இந்த தேதி, இந்த திதி, நக்ஷத்ரம் மாசம், என்று சொல்வதை வைத்து தான் அனுஷ்டானங்கள் நடந்தது.  பஞ்சாங்க பிராமணர்கள் என்று சிலர் வீடு வீடாக வந்து என்னென்ன தேதிகளில் எந்தெந்த  விசேஷம் என்று  குறித்துக் கொள்ள சொல்வார்கள். சுவற்றில் எழுதி வைத்துக் கொள்வோம்.டயரி என்றால் என்ன என்று தெரியாத காலம்..

 நமது தேசம் முழுதும் ஒவ்வொரு மூலை முடுக்கிலும்  இந்த பஞ்சாங்கம் பயன்படுகிறது. பஞ்சாங்கங்கள் பல சாஸ்த்ர விற்பன்னர்களால் கணிக்கப்பட்டு பல குடும்பங்கள் அவரவர் விரும்பும் பஞ்சாங்கங்களை உபயோகிக்கிறார்கள்.

பஞ்சாங்கம் கணிப்பது எளிதல்ல,  மிகவும் சூக்ஷ்மமாக  கவனமாக கணிக்கவேண்டியது. கிரஹங்களின் சுழற்சி, அவற்றின் சுற்று, பிரயாணம், அதற்கான காலம், சூரிய உதயம்,  அஸ்தமன நேரங்கள் எல்லாம் ஒரு வருஷத்துக்கு முன்கூட்டியே  சரியாக கணக்கில் கொண்டுவரும்  கணித நூல்.   பண்டைய ரிஷிகள் ஆராய்ந்து வகுத்த வழிமுறையில் தொடர்ந்து கண்காணித்து அறிவிக்கும் அற்புத படைப்பு.

விஸ்வ  விஜய பஞ்சாங்கம் என்பது நூறு வருஷங்களுக்கு கணிக்கப்படுவது. இதில் சூரிய சித்தாந்தம், கிரஹ லாகவ கணக்குகள் உண்டு. புரியாத நமக்கு தலை சுற்றும் கணக்குகள்.

சந்திரனின் அசைவு  நமது பஞ்சாங்கத்தில் முக்கியமான ஒரு அம்சம். எல்லா கிரஹங்களையும் விட சந்திரன் ஒருவனே வேகமாக சுழல்பவன்.  எனவே   பஞ்சாங்கத்தின் திதி, நக்ஷத்ரம், ராசி, யோகம், கரணம், ஆகியவை சந்திரனின் சுழற்சியை அடிப்படியாக கொண்டவை.

''பஞ்ச அங்கம்'' என்பதே  மேலே சொன்ன  ஐந்து முக்கிய  அம்சங்களை கொண்ட சேர்க்கை.  சூரிய சந்திர நிலைகளை நிலையான துவக்கப்புள்ளி (சித்திரை அல்லது அஸ்வினி நட்சத்திர) பின்னணியில் பகுத்து திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் என மிகமுக்கியமான ஐந்து விஷயங்களையும், இதர பஞ்சாதி(புத, சுக்கிர, மங்கள, குரு, சனி) கிரகங்கள் மற்றும் ராகு, கேது (சந்திர புவிவட்ட பாதையில் ஏற்படும் வெட்டுப்புள்ளி) ஆகிய தகவல்கள் வானசாஸ்திர அடிப்படையில் கணிப்பதாகும். ஜோசியர்களுக்கு இது மிகவும் உதவுகிறது.

நமது தேசத்தில்  பஞ்சாங்கம்  மூன்று முறைகளில் கணிக்கப்படுகிறது. சூரிய சித்தாந்தம், ஆரிய சித்தாந்தம், திருக்கணித சித்தாந்தம் என்பதாகும்.   முற்காலத்தில் ஏறக்குறைய   18க்கும் மேற்பட்ட சித்தாந்தங்கள் , அவற்றுக்கான  கணிதமுறைகள் இருந்துள்ளன. பெரும்பாலோர் பின்பற்றுவது திருக்  கணித பஞ்சாங்கம்.

இப்போது,  நவீன தொலைநோக்கி துணையுடன் கண்களால் பார்த்து மற்றும் தொலையுணர் விஞ்ஞான கருவிகள் கொண்டு சந்திர கிரகநிலையை மிக துல்லியமாக கணித்தும், அதன் அடிப்படையில் உயரிய சிக்கலான கணித சூத்திரங்கள்(Lunar theory - modern numerical theories) உருவாக்கியும், திருத்தங்கள் (Ephemeride Lunaire Parisienne) செய்தும் கிடைக்கும் தகவல்கள் அடிப்படையில் பெறப்படும் வானியல் துறையினரின் புள்ளிவிபரங்கள் கொண்டு திருக்கணித பஞ்சாங்கம் உருவாக்கப்படுகிறது

இஸ்ரோ , நாஸா அமைப்புகள் தங்களின் வான்வெளி திட்டங்களுக்கு பயன்படுத்தும் மிகதுல்லியமான வானியல் தகவல்களை வணிகஅடிப்படையில் வெளியிடுகிறது. இப்படி வெளியிடப்படும் துல்லியமான தகவல்கள் அடிப்படையில்தான் திருக்கணிதமுறை பஞ்சாங்கம் உருவாக்கப்படுகிறது. இப்படி உருவாகும் பஞ்சாங்கம் மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்தது.

இந்திய அரசின் வான்நிலையியல் துறையின்கீழ் இயங்கும் வானியல் கிரக நிலை கண்காணிப்பு பிரிவு கொல்கத்தா அருகில் உள்ளது இங்கிருந்து பெறப்படும் தகவல்கள் முறைப்படி அரசு அனுமதிப்பெற்று திருக்கணித பஞ்சாங்கம் கணிக்க பயன்படுத்தப்படுகிறது. இந்த துறையினரும் லஹரி அயனாம்ஸ நிலைக்கொண்டு ராஷ்டீரிய பஞ்சாங்கம் என்கிற மிகதுல்லியமான திருக்கணித பஞ்சாங்கத்தை வெளியிடுகின்றனர்.  மங்களாயன்,  சந்திராயன் விண்வெளிக்கலத்தை மிகதுல்லியமாக சந்திரனுக்கு அனுப்ப பயன்பட்ட புள்ளிவிபரங்களும் திருக்கணிதபஞ்சாங்கத்திற்கு வழங்கப்படும் புள்ளிவிபரங்களும் ஒன்றேயாகும்!  

திருக்கணித முறையில் அயனம் வேண்டுமானால் வேறுபடலாம் ஆனால் திதி, நக்ஷத்ரம், யோகம் எக்காரணம் கொண்டும் மாறாது.  இந்திய விண்வெளித்துறை மற்றும் நாஸாவின் அமாவாசை முடிவு நேரமும் திருக்கணித அமாவாசை முடிவு நேரமும் ஒன்றாக இருக்கும்.  இது கிரகணத்தின் பொழுது கண்ணுக்கு நன்றாக தெரியும் வானியல் நிகழ்வு.

அண்டை மாநிலங்களான ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகியவற்றில் நூறாண்டுகளாக திருக்கணிதமுறையே பின்பற்றப்படுகிறது. பிறந்த ஜாதகம் கணிப்பதிலும் இவர்கள் திருக்கணிதமுறைய மட்டுமே கடைபிடிக்கிறார்கள்.

திருக்கணித முறையில் சந்திரன் கிரகநிலை மட்டும் கணக்கிட 100க்கும் மேற்பட்ட சூத்திரங்கள், திருத்தங்கள் பயன்படுத்தப்படுகிறது. மேலும் 10 ஆண்டுக்கு ஒருமுறை வானியல் விஞ்ஞானிகள் கூடி கூடுதல் திருத்தங்களை விவாதித்து ஏற்றுக்கொள்கிறார்கள். (இது போன்ற எந்த வித ஏற்பாடும் வாக்கிய முறை பஞ்சாங்கத்தில் இல்லை 400 வருடங்களாக வாக்கியத்தில் திருத்தமே இல்லை !)

ஆராய்ச்சியாளர்களால்  அங்கீகரிக்கப்பட்டு கணிக்கப்பட்ட  லஹரி அயனாம்சத்தின்  அடிப்படையில் அமையும் திருக்கணித பஞ்சாங்கம் சரியானது எனலாம்.  லஹரி அயனாம்ஸம் சர்வதேச விஞ்ஞானிகளால் விவாதிக்கப்பட்டது, அறிவியல் சஞ்சிகைகளால்  ஆமோதிக்கப்பட்டது. சூரிய சித்தாந்த அயனாம்ஸ கொள்கை வேறு, நவீன சித்தாந்த அயனாம்ஸ கொள்கை வேறு  என்பதால் அறிவியல் முறைப்படி கூறப்படுவதை ஏற்றுக்கொள்வது நியாயமே.  மேலும் அயனம்  என்பது குறிப்பிட்ட அளவிற்கு பின்னர் குறையும் மற்றும் அயனம் ஏற்றம் மட்டுமே இருக்கும் என்ற சில வேறுபட்ட கருத்துக்கள் இருக்கத்தான் செய்கிறது. எனவே வானியல் அறிவியலாளர்களின் முடிவை  ஏற்போம்.  விவரமாக அதற்குள் நாம் போகவேண்டாம்.

இப்போதைய நிலையில் நமக்கு தேவையானது  அம்மாவாசை தர்ப்பண நாட்கள்,மந்திரங்கள், ஸ்ராத்த திதி, கிரஹண, மஹாளய தர்ப்பண கால நேரம், மந்த்ரங்கள், தவிர சுப முஹூர்த்தங்கள், கல்யாண காரியங்களுக்கு நல்ல நாட்கள், பண்டிகைகள், ஜாதகத்திற்கு  தேவையான விபரங்கள்,  யஜுர் உபா கர்மா, சாம, ரிக், யஜுர் வேத வேதங்களுக்கு ஏற்ப. போனஸாக இவர்கள் பஞ்சாங்கத்தில் சில பூஜா அஷ்டோத்ர, நாமாவளி ஸ்லோகங்களும் இருக்கிறதே.  போதாதற்கு  தேவைப்பட்டால் அபர  காரிய விபரங்களும் நிறைய இருக்கிறதே. உடனே குடும்ப வாத்யாரைத் தேடி ஓடவேண்டாமே.... நல்ல கார்யம் செயகிறார்கள். வாழ்க வளமுடன்  திரு வேதிக் ரவியும் அவர் நிறுவனமும், அந்த அமைப்பின்  நிர்வாகிகளும்.

விளம்பி வருஷ  தமிழ் புத்தாண்டு பஞ்சாங்கம் இத்துடன் இணைத்திருக்கிறேன். என் பிறந்த நாள் பரிசு !!




Vilambi Panchangam .PDIF.pdf
Reply all
Reply to author
Forward
0 new messages