நாமதேவர் - நங்கநல்லூர் J K SIVAN
நாமதேவர் மனைவி ராஜாயி, ''எவ்வளவு நேரம் ஆகிவிட்டது சீக்கிரம் கை கால் முகம் கழுவிக்கொண்டு இன்று பகவான் படி அளந்ததால் நல்ல உணவை வயிறார சாப்பிட உட்காருங்கள் என்று நாம்தேவரையும் மாமியார் கோனையையும் அவசரப்படுத்தினாள். கோனை நாமதேவர் இருவருமே எப்படி இவ்வளவு ஐஸ்வர்யம் கோவிலுக்கு சென்று திரும்புவதற்குள் வந்தது என்று தெரியாமல் அதிர்ச்சியிலும் ஆச்சர்யத்தத்திலும் திளைத்தி ருந்ததால் பசி தெரியவில்லை.
''ராஜாயி இன்று எனக்கு ராஜோபசாரம் பண்ணுகிறாளே .எல்லாம் புதுப்பணம் பண்ணும் வேலை இன்று காலை என்னை லக்ஷியமே பண்ணவில்லையே'' . நாம தேவருக்கு சிரிப்பு வந்தது. அம்மா அப்பா இருவருமே கூட வாய் ஓயாமல் என்னை உதவாக்கரை என்று அல்லவோ இடித்துரைப்பார்கள். பணம் இருந்தால் தான் ஒருவனுக்கு மதிப்பு மரியாதை எல்லாம் என்பது எவ்வளவு நிதர்சனமாக தெரிகிறது.
ராஜாயி என்ன நடந்தது இங்கே என்று விவரமாக சொல். எப்படி இவ்வளவு பணம் உன்னிடம் வந்தது?
ராஜாயி வாயை திறக்கவில்லை. அவளுக்கு அவரைப்பற்றி நன்றாக தெரியுமே. யாரோ கொண்டு வந்து கொடுத்தது என்றால் அத்தனையும் உடனே எல்லோருக்கும் தானம் பண்ணிவிடுவாரே. வேலைக்காரி பெண் ஜானி நடந்ததை அப்படியே சொல்லி விட்டாள்.
வாசல் லே யாரோ ஒரு வியாபாரி குதிரை மேலே வந்தார். ஐயா உங்களை எங்கே பார்க்கறதுன்னு கேட்டப்போ அம்மா இது தான் நாமதேவர் வீடு , வாங்க வந்து உட்காருங்கன்னு மரியாதைக்கு சொன்னதும் பட்டுனு குதிரை மேலே இருந்து இறங்கி உள்ளே வந்து உட்கார்ந்துக்கினார். அவருக்கு சாப்பிட கூட குடுக்க ஒண்ணும் இல்லே. தண்ணியாவது நிறைய சொம்பு நிறைய கொடுத்தாங்க. அம்புட்டும் அவர் குடிச்சுட்டு ''இந்தாங்க இந்த தங்க காசு மூட்டையை நாம்தேவரு ஐயா வந்தா அவரு கிட்ட குடுங்கன்னுட்டு இங்கே வச்சிட்டு பூட்டாரு. போகும்போது இது தீருவதுக்குள்ளே இன்னொரு மூட்டை கொண்டாறேன் னு வேறே சொன்னாருங்க.
''யார் அவர் ?''
'' உங்க சீடருங்களாம். அவர் பேரு கேசவ் சேத்''ன்னு சொன்னாரு. கருப்பு கலருங்க. உங்க நண்பர்னு சொன்னார். கண்ணு தாமரைப்பூ மாதிரி இருந்ததுங்க. அப்புறம் தான் அம்மா கடைக்கு போய் சாப்பாட்டு சாமான், பொருளுங்க, எல்லோருக்கும் துணி மணி எல்லாம் வாங்கி வந்தாங்க.
நாமதேவருக்கு இது விட்டலன் வேலை தான் என்று நன்றாக தெரிந்து விட்டது. ''கிருஷ்ணா, விட்டலா' என்னப்பா எனக்காக நீ கேசவ சேத் வேஷம் போட்டாயோ?''என்று உரக்க கூவினார். விடுவிடுவென்று வாசலுக்கு ஓடினார். எல்லா பிராமணர்களையும் அழைத்து வந்தார். ஒரு பெரிய கூட்டமே வாசலில் நின்றது. உள்ளே ஓடிப்போய் அந்த சாக்கு மூட்டையை பிரித்து அதில் இருந்த அத்தனை தங்க காசுகளையும் கை நிறைய அவர்கள் எல்லோருக்கும் கொடுத்தார். இருந்த துணிமணிகளை எல்லாம் மூட்டை கட்டி அவர்களுக்கு கொடுத்து விட்டார்.
தனது வாழ் நாளின் கடைசி நேரம் வரை நாமதேவர் செல்வத்தை தேடவில்லை. ஆஸ்தி அந்தஸ்து, அதிகாரம், பதவி பணம் எதையும் லக்ஷியம் பண்ணாத பரி சுத்த விட்டல பக்தனாக, நண்பனாகவே இருந்தார் என்பது தான் நாமதேவர் சரித்திரம்.