SURDAS

3 views
Skip to first unread message

sivan jaykay

unread,
Aug 28, 2025, 8:27:16 PM (8 days ago) Aug 28
to amrith...@googlegroups.com
 ஸூர் ஸாகரம்   -   நங்கநல்லூர்  J K  SIVAN

எனக்கு  கிருஷ்ணனையும்,  அவனைப் பாடுபவர்கள், பேசியவர்கள், எழுதியவர்கள், படிப்பவர்கள், கேட்பவர்கள், நினைக்கிறவர்கள் அனைவரையுமே  பிடிக்கும்.  நானும் அவர்களில் ஒருவனாக என்றும் இருப்பவன்.  கிருஷ்ணன் எதில் இல்லை,  எவரில் இல்லை?  ஆகவே  மறைமுகமாக, எதிலும் எவற்றிலும் மறைந்திருக்கும், மறைகள் போற்றும் அவனைப் பற்றி ஏதாவது ஒன்று எழுதிக் கொண்டு தானே வருகிறேன். நான் ஜனரஞ்சக எழுத்தாளனோ,நிறைய படித்தவனோ, பாடுபவனோ,  பேசுபவனோ  சிறந்தவனோ ,புகழ்பெற்றவனோ எவனுமில்லை. சாதாரண  கிருஷ்ணபக்த சிவன்.

கிருஷ்ணனைப்  பற்றி அற்புதமாக சிந்திக்கும் ஸூர்தாஸை நான் பிடித்துக் கொள்கிறேன். அவர் போல் கண்ணில்லா லேயே கண்ணனை மனக் கண்ணால் பார்க்க, நினைக்க, பாட, வேறு யாரால்  முடியும்.?

கண்ணில் பார்வை இருந்தாலும்  அவனுக்கென்று எந்த திசையிலும்  ஆதரவாக  எவரும்  இல்லை என்றால் ஒருவன் திக்கற்ற அனாதை. இப்படிப்பட்டவனுக்கு  கண்களில் பார்வையும் இல்லை என்றால் இன்னும் எவ்வளவு  மோசமான நிலை.  ஏழை  ஸூர்தாஸ்  நிலை.   கவலையே  வேண்டாம்.  நமக்கெல்லாம் தெரிந்த ஒரு பழமொழி நினைவுக்கு வருகிறதே. ஆறுதல் தருகிறது. ''திக்கற்றவனுக்கு தெய்வமே துணை''   ஸூர்தாஸ் விஷயத்தில் அவர் இருக்கும்  திக்கு நோக்கி ஓடிவந்தான்  கண்ணன்.  என்ன காரணம்?  ஸூர்தாஸ்  கண்ணனின் மேல்  வைத்திருந்த அளவற்ற  பக்தி,பாசம், நேசம்.  

ஒருமுறை ஸ்ரீ வைஷ்ணவர், கிருஷ்ண பக்தர் ஸ்ரீ வல்லபாச்சார்யர் வ்ரஜ் கிராமம் வந்தபோது  ஸூர்தாஸ் கௌகட் என்ற ஊரில் இருப்பதை அறிகிறார்.   ஸூர்தாஸ் அருகே இருந்த  சில பக்தர்கள்,  சிஷ்யர்கள் அவரிடம் ஓடிப்போய்  சொல்கி
றார்கள்;,    
''குருநாதா, கிருஷ்ண பக்தர் ஸ்ரீ வல்லபாச்சார்யர் இங்கே வந்திருக்கிறார் '' என்கிறார்கள்.
 ''அப்படியா, எவ்வளவு பெரிய மஹான் அவர், என்னை அவரிடம்  நீங்கள் அழைத்துச் செல்லுங்கள். அவர் பாதத்தில் விழுந்து நான்  வணங்க வேண்டும்'' என்கிறார்  ஸூர்தாஸ்.   ஆனால்  நடந்தது வேறு விஷயம். வல்லபாச்சார்யர் ஸூர்தாஸ் பற்றி கேள்விப்பட்டவர்.  இந்த ஊரில் அவர் இருக்கிறார் என்று அறிந்து அவரே ஸூர்தாஸ் இருக்குமிடம் வருகிறார். 

''ஸூர்தாஸ் , உங்கள் கிருஷ்ண பக்தி என்னை இங்கே இழுத்து வந்திருக்கிறது''
''வாருங்கள் என்னருகே உட்காருங்கள் என்று ஸூர்தாஸைப்  பிடித்து,  கையால் அணைத்து  தனதருகே,அமரச் செய்கிறார்  வல்லபாச்சார்யர்.  
 ''சுவாமி உங்கள் வாயால் நேராக ஒரு கிருஷ்ணன் பாடல் பாடி கேட்கும் பாக்யம் எனக்கு அருளவேண்டும் '' என்று வேண்டுகிறார்.
ஸூர்தாஸர்  கண்ணில்லாமலேயே கண்ணனை கண்ணார  அகத்தில் கண்டவர். கண்ணன் மேல்  ப்ரிஜ்பாஸி மொழியில் பாடிய ஸுர்ஸாகர் பாடல் தொகுப்பு  ஹிந்தியில் இருக்கிறது.  கிருஷ்ண சமுத்திரம் என அதற்கு பெயர். நமக்கு ப்ரிஜ் பாஸி   தெரியாவிட்டால்  என்ன?  ஆங்கிலத்தில் படித்து  புரிந்துகொண்டு  தமிழில்  முடிந்தவரை எளிமையாக தர முடிந்தால் நான் பாக்கியசாலி.  
தன்னை முழுதாக  இழந்து  கிருஷ்ணனோடு  மூச்சாக கலந்தவர் ஸூர்தாஸ். அதனால் தான் அவர்  சொற்களில் கிருஷ்ணன் மணக்கிறான்.  பாரதியாரை, கம்பரை, தமிழிலே தானே அனுபவிக்க முடியும்.  நமக்கு  பிரிஜ் பாஸி தெரியாததால்  ஸூர்தாஸை  நம்மில் நிறைய பேருக்கு அறிமுகமில்லை.   வடக்கே ஸூர்தாஸ்  என்றால் சூரியன், துளசிதாஸ்  என்றால்  சந்திரன்,  வடுகன் கேசவ தாஸ்  என்றால்  நக்ஷத்திரம்  என்று  பக்தர்கள்  சொல்வார்கள்.

உண்மையான  பக்தன் மனதில்  ஊற்றாக பக்தி பெருகும்போது அதை வெளிப்படுத்த  அவனுக்கு தனியாக  ஒரு  குளுகுளு  அறை , நிறைய  பேனா, பேப்பர் வேண்டியதில்லை.  வயிறு நிறைய  ஆகாரம்  'தாக  சாந்தி'..... எதுவும் வேண்டாம்.  நினைத்த இடத்தில் அமர்ந்து அவன் கண்ணை மூடி வாய் திறந்தால்  மடை திறந்த வெள்ளமாக  பாடல்களும் பாசுரங்களும், பதிகங்களும் வெளிவருவதை பற்றி நாம் அறிவோம். நமக்கு கிடைத்த பொக்கிஷங்கள் அவை.

ஸூர்தாஸ் இப்படித்தான்  ஒரு மரத்தடியில் அமர்ந்து மனதில் தோன்றிய கற்பனை வளத்தை உபயோகித்து இட்டுக் கட்டி   கிருஷ்ணன் வாழ்க்கை பற்றிய  சம்பவங்களை  பாடல்களாக  பாடியவர். ஒரே ஒரு   வித்யாசம்  அவர்  கண்ணை மூடிக்கொண்டு  பாடவில்லை, கண்  திறந்திருந்தாலும் பார்வை மனதிலே தான்.   அவர் 
 பாடல்களைக் கேட்டு வருவோர் போவோர் கொடுத்த ஆகாரம் தான் ஜீவனம். அருகே ஒரு பெரிய ஏரி. பிருந்தாவனம் மதுரா போவோர்  செல்லும் வழி. அங்கே வந்து மரத்தடியில் தங்கி ஓய்வெடுப்பார்கள். அவர்கள்  பேச்சுகள்  மூலம் காதில் விழுவது தான்  கிருஷ்ணனைப் பற்றிய  செயதிகள், சரித்திரம், உலக ஞானம்.

பதினாலு வயதில் ஏதோ குறி சொல்ல வந்தது.  அவர் சொன்னது நடந்தது. ஊர் மக்கள் அவரை போற்றி பாதுகாத்தனர். கிருஷ்ணன் தன்னை நம்பினோரை ஏமாற்றுவானா? ஒரு வழி காட்டினான்  . ''இவன் ஒரு அதிசய பையன்'' என்று  அந்த ஊரே நம்பியது.

அந்த ஊர் பஞ்சாயத்து தலைவனின் பிள்ளை  ஒரு சிறு பையன் ஒருநாள் வழி தவறி எங்கோ போய் விட்டான். பஞ்சாயத்து தலைவன்  திண்டாடுகிறான். ஸூர்தாஸிடம் வருகிறான். என் பிள்ளை பற்றி எங்கே இருக்கிறான் என்று சொல்லுங்கள் சுவாமி என்கிறான்....  ஸூர்தாஸ் கிருஷ்ணனை வேண்டுகிறார். பிறகு 
மனதில் தோன்றிய  ஏதோ ஒரு இடத்தின் பெயர் சொல்லி அங்கே போய் பார் உனக்காக அழுகிறான் என்று சொல்லி, அவன் அங்கே சென்று பார்க்க  அந்த குழந்தைப்  பையன்  அழுது கொண்டு நின்றான். அப்புறம் என்ன?  கிருஷ்ணன் அருளால்    ஸூர்தாஸுக்கு ஒரு கூரை போட்ட ஆஸ்ரமம் கிடைத்தது. ஊர்க்காரர்கள் ஒரு ஒற்றை கம்பி  ''டொய்ங்   டொய்ங் ''  வாத்யம்   செய்து ஸுர் தாஸிடம்   கொடுத்தார்கள். அதை உபயோகித்துக் கொண்டே ஏதோ ஒரு சுருதியில் அதை சேர்த்து,   அதோடு கூடவே  பாடுவார் ஸூர் தாஸ். நிறைய சிஷ்ய பிள்ளைகள் சேர்ந்தார்கள். அவர்கள் தான் பின்னர் ஸூர்தாஸ்  பாடப்  பாட எழுதி வைத்தவர்கள்.  அதில் தான் நமக்கு  8000 மிஞ்சியது  என்று சொன்னேன்.  

 ''புரியாதவர்கள் சங்கத்  தலைவனாக'' நான்   எனக்குத் தெரிந்த மொழியில் எழுதுகிறேன்.ஸூர்தாஸ்  தினமும் வரட்டும்.

 

sivan jaykay

unread,
Aug 28, 2025, 8:27:36 PM (8 days ago) Aug 28
to amrith...@googlegroups.com
ஸுர்தாஸ் -  நங்கநல்லூர்  J K  SIVAN 

''விடியலில்  முதல்  முத்தம்''

கண் தெரியாவிட்டால் என்ன?  ஞானக்கண் உள்ளே  திறந்து, கிருஷ்ணன் பளிச்சென்று தெரியும்போது ஊனக்கண்ணால் உலகத்தில் என்ன பார்க்க வேண்டி இருக்கிறது?  இப்படி சொல்பவர்  தான்  ஸூர்தாஸ் . அவர் எழுத்தில் இது புரிகிறதே.  

'ஆஹா  இருள்  விலகிவிட்டது.   விடிந்து  விட்டது. வானத்தில்  வெளிச்சம் தெரிகிறது.  சூரியன்  எங்கோ  இருக்கிறான். கண்ணுக்குத் தெரியாமலேயே  ஒளி வீச ஆரம்பித்துவிட்டான். இன்னும் கொஞ்ச நேரத்தில் கிழக்கே  சிவப்பாக  தலை நீட்டுவான். பக்ஷிகள் கூட்டை விட்டு தலையைத் தூக்கிப்  பார்க்கின்றன.  வெளிச்சம் போதும்,  இரை எங்கே இருக்கிறது என்று தேட , கண் இனிமேல் தெரியும். பறந்து போய்  சாப்பிட  ஏதாவது கிடைக்கும். பசி வயிற்றை கிள்ளுகிறது.

கன்றுக்குட்டிகள் அம்மா  என்று குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டன.  அதே  ''அம்மா'' சப்தம்  பசுக்களிடமிருந்தும் வருகிறது.  ''எங்களை அவிழ்த்து விடுங்கள்  அல்லது எங்கள் கன்றுக் குட்டிகளை அவிழ்த்து விடுங்கள்  அவைகளுக்கு பால் தர வேண்டும் ''  என்று அர்த்தம் அதில் த்வநிக்கிறது.

 ''என் செல்லக்குட்டி,  கண்ணா, கருமை நிற வண்ணா, புளியங்கொட்டை மாதிரி என்ன பளபளப்புடா  உன் தேகத்தில்.
எழுந்துக்  கோடா,  காந்த சக்தி கொண்ட உன் விசாலமான  கண்களை விரித்து நீயே பார். எப்படி பொழுது புலர்ந்து விட்டது என்று தெரியும். நான் பொய் சொல்லவில்லை என்று உனக்கு தெரியும் '' என்று கொஞ்சினாள் யசோதை.  கட்டிலில் படுத்திருந்த  விஷமக்காரப் பயல்  சிரித்தான். தலையை ஆட்டினான்.

 'ஆமாண்டா  செல்லம், இருட்டு போய்விட்டது. பகலின் சாம்ராஜ்யம் தான்.   சோம்பல் இனிமேல்  ஓடிவிடும்.  ஜில்லென்று சுகமாக  காற்று வீசுகிறது பார். எப்படி  ஒரு புத்துணர்ச்சி எல்லா ஜீவன்களுக்கும் தருகிறது பார்.

'வாசலில்  உன் நண்பர்கள்  வந்து நீ  எழுந்துட்டியா?'' என்று கேட்கிறார்கள்.  எல்லாரும் உன் போலவே ஒரு பசு கன்றுக் குட்டியோடு வந்து நிற்கிறார்களே .  நான் சொல்வது பொய்  இல்லை. நீயே எழுந்து பார்  தெரியும்.'

'அது எப்படிடா  உன்னை மட்டும் எல்லோரும்   தாமரைப் பூக்களை தேன்  வண்டுகள் ரீங்காரமிட்டு சுற்றுவது போல் சூழ்ந்து கொள்கிறார்கள்?. என்ன மாய மந்திர சக்தி இருக்கிறது உன்னிடம்? என்று கண்ணனின் கன்னங்கள் இரண்டிலும் மாறி மாறி  முத்தமிடுகிறாள்  யசோதை.

ஸூர் தாஸரின்  ஒரு அருமையான பாடலின் அர்த்தம் இது.  ஆங்கிலத்தில் தான் கிடைத்தது எனக்கு.

Awake, O Krishna awake, the night has gone arise,
no longer laze, breathe the pure air of early morn;
the cowherd-lads come and gaze at you,and seeing you asleep,
depart as swarms of bumblebees fly from the lotus clusters.
O darling boy, dark as the tamala,
if you don't believe me,open your large eyes
and see for yourself.

 
Reply all
Reply to author
Forward
0 new messages