அண்ணன் உருத்திரகுமாரின் நேர்மை, தமிழருக்கான விடுதலைக்கான அவரது அர்ப்பணிப்பில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஆனாலும் தற்போது இங்கே சூடாக இருக்கும் 'பொதுவேட்பாளர்' விடயத்தில் அவரது கருத்து ஏற்புடையதாக இல்லை. உலகிற்கு எமது கோரிக்கைகளை எடுத்துக் கூறுவதற்கு இது ஏற்ற வாய்ப்பல்ல. ஏற்கனவே பல தடவைகள் நாம் கூறிவிட்டோம். தீரம் மிக்க போராட்டம் மூலம் விடுதலைப்புலிகள் கூறியதை விட இனிமேல் எவராலும் பலமாகக் கூறமுடியாது. எனவே, பொதுவேட்பாளர்தான் இதைக் கூறவேண்டியதில்லை. தற்போதுள்ள நிலையில் மிகக் குறைந்த வாக்குகளையே அவர் பெறுவார் என்பதுதான் எதார்த்தம். பிள்ளையான், டக்ளஸ், வியாழேந்திரன், அங்கஸன், சந்திரகுமார், பகிஸ்கரிப்பு மற்றும் இந்தக் கோரிக்கைக்கான எதிர்ப்பு என்று வாக்குகள் பிரியும்போது மிகச் சொற்பமான வாக்குகளையே பொதுவேட்பாளர் பெறுவார். அப்போது எமது கோரிக்கைகளை தமிழர்களே நிராகரித்துவிட்டார்கள் என்ற கோசம் சிங்களத்தரப்பால் வைக்கப்படுவதைத் தடுக்க இயலாது போய்விடும். அடுத்து இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பெறக்கூடியதைப் பெற்றுக்கொண்டு நாம் இலட்சியப்பயணத்தைத் தொடரவேண்டும். அப்படித்தான் பல விடயங்களை நாம் மைத்திரி காலத்தில் பெற்றோம். ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலவிடுவிப்பு, பெரும்பாலான அரசியற்கைதிகள் விடுவிப்பு, மாவீரர் நாள் நினைவேந்தலுக்கான அனுமதி, காணாமலாக்கப்பட்டோரின் போராட்டங்களுக்கான அனுமதி, பல இராணுவச் சாவடிகள் மூடல், சோதனைச் சாவடிகள் மூடல், பல வீதிகள் திறப்பு, சம்பூர் விடுவிப்பு, சமூகச் செயற்பாட்டு நிகழ்வுகள் அனைத்திலும் இராணுவப் பிரசன்னம் தடுக்கப்பட்டமை போன்றன நடைபெற்றன. அதற்கு முந்திய ராஜபக்ச காலத்தில் நாம் எத்துணை அடக்குமுறைக்கு உள்ளாகியிருந்தோம் என்பதை மறக்க முடியுமா? தந்தை செல்வா காலத்திலும் இவ்வாறு பல விடயங்கள் பேரம்பேசல்மூலம் நிறைவெய்தின. வடகிழக்கு நீதிமன்ற மொழி, நிருவாகமொழி, தாய்மொழிக் கல்வி போன்றவையெல்லாம்கூட நடைபெற்றன. எனவே இப்போதுள்ள நிலையில் நாம் இதைச் செய்வோம். ஆனாலும் அடிப்படை இலட்சியத்திற்காக தொடர்ந்து போராடுவோம். எனவே அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆசனங்களைப் பெறுவதற்காக ஒற்றுமைக் கோசம் போட்டுக்கொண்டு பொதுவேட்பாளர் என வரும் போலிகளின் நோக்கத்தைப் புரிந்து சரியான முடிவைத் நாடுகடந்த அரசு எடுக்கவேண்டும் என அன்புடன் கேட்கிறேன்.