இலங்கையின் வடக்கு-கிழக்கில் மனிதப் புதைகுழிகள்: உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலைத் தொடர்ந்து மறுத்தல்
உலகிலேயே தீர்க்கப்படாத வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ள நாடுகளில் ஒன்றாக இலங்கை தொடர்ந்தும் விளங்கி வருகிறது. தமிழினவழிப்பின் பல தசாப்த காலப் பகுதியில், 60,000 முதல் 100,000 வரையிலான மக்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. உள்நாட்டுப் போர்க் காலப் பகுதியில் தீர்க்கப்படாத இந்த வழக்குகளில் பெரும்பாலானவை தீவின் வடக்கு-கிழக்கைச் சேர்ந்த தமிழ் சிவிலியன்கள் தொடர்பானவையாகும்.
செம்மணி, மண்டைதீவு, மன்னார், கொக்குத்தொடுவாய் மற்றும் இதர இடங்களில் வடக்கு-கிழக்கு எங்கும் ஏராளமான மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டமையானது, சுயாதீன தடயவியல் விசாரணை மற்றும் நீதித் துறைப் பொறுப்புக் கூறலைக் கோரும் அழுத்தமான பொருள்சார் சான்றுகளை வழங்கியுள்ளது. மனித எலும்புக் கூடுகள், தனிப்பட்ட உடமைகள் மற்றும் பிற தடயவியல் சான்றுகள் கண்டெடுக்கப்பட்ட போதிலும், பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவோ, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தவோ அல்லது கட்டளைப் பொறுப்பை (Command responsibility) தீர்மானிக்கவோ ஒரு வெளிப்படையான மற்றும் நம்பகமான செயல்முறையை உருவாக்க இலங்கை அரசாங்கம் தவறி விட்டது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு, தங்கள் அன்புக்குரியவர்களின் நிலை மற்றும் அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளும் அடிப்படை உரிமை தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது.
வெளிப்படையான டி.என்.ஏ (DNA) அடையாளங் காணல் செயல்முறைகள் இல்லாமை, சர்வதேச தடயவியல் நிபுணத்துவப் பங்களிப்பை அனுமதிக்கத் தவறியமை மற்றும் சர்வதேச சுயாதீன விசாரணைகளுக்குத் தொடர்ந்து காட்டப்படும் எதிர்ப்பு ஆகியன, மோதலின் போது நடந்த மிகக் கொடூரமான குற்றங்கள் தொடர்பான சான்றுகள் அழிக்கப்படும், மறைக்கப்படும் அல்லது ஆராயப்படாமல் போகும் அபாயத்தில் உள்ளன என்ற கவலைகளை தீவிரப்படுத்தியுள்ளன.
பின்னணி
பல தசாப்தங்களாக, வடக்கு-கிழக்கில் உள்ள தமிழ் குடும்பங்கள் இராணுவ நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்ட, கடத்தப்பட்ட, அரச அதிகாரிகளிடம் சரணடைந்த அல்லது காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவினர்கள் பற்றிய பதில்களைத் தேடி வருகின்றனர்.
இலங்கையில் தீர்க்கப்படாத மிக தீவிரமான மனித உரிமைப் பிரச்சினைகளில் ஒன்றாக வலிந்து காணாமல் ஆக்கப்படும் விவகாரம் நீடிக்கிறது. நாடு முழுவதும், குறிப்பாக தமிழர்களின் தாயகமான வடக்கு-கிழக்கில் ஏராளமான மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த இடங்கள் வலிந்து காணாமல் ஆக்கப்படுதல், நீதிமன்றத்திற்கு புறம்பான மரண தண்டனைகள், போர்க் குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனவழிப்பு செயல்களுடன் தொடர்புடைய குற்ற செயல்களும், சர்வதேச தரத்திற்கு ஏற்ப இந்த இடங்களை விசாரிப்பதில் தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ள தோல்வியானது, பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் கிடைப்பதனை மறுத்துள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழியும் ஏனைய இடங்களும்
யாழ்ப்பாணத்தில் உள்ள செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம், இப் பகுதியில் நூற்றுக்கணக்கான உடல்கள் புதைக்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவ சிப்பாய் ஒருவர் அளித்த சாட்சியத்தைத் தொடர்ந்து, 1999 இல் முதன்முதலில் சர்வதேச கவனத்தைப் பெற்றது. எவ்வாறாயினும், அந்த நேரத்தில் 15 எலும்புக் கூடுகளை தோண்டி எடுத்த பின்னர், மனித எச்சங்களை வெளிக் கொணரும் பணியை இலங்கை அரசு கைவிட்டது.
பெப்ரவரி 2025 இல் செம்மணியில் கட்டுமானப் பணிகளுக்கான அகழ்வாராய்ச்சியின் போது தற்செயலாக மனித எலும்புக்கூடுகள் வெளிப்பட்டதைத் தொடர்ந்து பல மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்தத் தொடர் அகழ்வாய்வில் இன்று வரை குறைந்தது 421 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 407 தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான உடல்கள் ஆடைகள் ஏதுமின்றி முழுமையாக நிர்வாணப்படுத்தப்பட்ட நிலையில் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், விசாரணைகள் முறையான பொறுப்புக்கூறலை வழங்கத் தவறி விட்டன. இந்த எலும்புக் கூடுகளில் குழந்தைகள் மற்றும் கைக் குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களின் எச்சங்களும் அடங்கும். அகழ்வாராய்ச்சி செயல்முறையின் அறிக்கைகளின்படி, பூர்வாங்க தடயவியல் மதிப்பீடுகள் பத்தில் ஒன்று குழந்தைக்குரியதாக இருக்கலாம் என்று தெரிவிக்கின்றன. பள்ளிப் பைகள், பொம்மைகள், பால் ஊட்டும் போத்தல்கள், ஆடைகள் மற்றும் நகைகள் உள்ளிட்ட தனிப்பட்ட உடமைகளும் மீட்கப்பட்டுள்ளன.
இந்தக் கண்டுபிடிப்புகள், புதைக்கப்பட்ட சூழ்நிலைகள் குறித்து விரிவான தடயவியல் விசாரணைகள் மற்றும் பொறுப்புக்கூறலுக்கான கோரிக்கைகளை மீண்டும் வலுப்படுத்தியுள்ளன.
அட்டவணை: இலங்கையின் (வடக்கு மற்றும் கிழக்கு) மனிதப் புதைகுழிகள்
செம்மணி என்பது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட வழக்கு அல்ல. வடக்கு-கிழக்கு மற்றும் இலங்கையின் பிற பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட பிற மனிதப் புதைகுழிகளில் பின்வருவன அடங்கும்:
மன்னார் சத்தோசா வளாகம்
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி
மண்டைதீவு
சாட்சிகளின் வாக்குமூலங்கள், உள்ளூர் திறமை, மேம்பாட்டு திட்டம் மற்றும் முந்தைய விசாரணைகள் மூலம் அடையாளம் காணப்பட்ட கூடுதல் புதைகுழிகள்.
இந்தக் கண்டுபிடிப்புகள் இருந்த போதிலும், பெரும்பாலான விசாரணைகள் முடங்கியுள்ளன, தாமதப்படுத்தப்பட்டுள்ளன அல்லது அர்த்தமுள்ள முடிவுகளைத் தரத் தவறிவிட்டன.
பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதில் தோல்வி
பல மனிதப் புதைகுழி தளங்களில் இருந்து எலும்புக்கூடுகள் மற்றும் உயிரியல் மாதிரிகள் சேகரிக்கப்பட்ட போதிலும், பின்வருவனவற்றில் வெளிப்படைத் தன்மை இல்லை:
டி.என்.ஏ (DNA) சோதனை நடைமுறைகள்
அடையாளங் காணலுக்குப் பயன்படுத்தப்படும் டி.என்.ஏ தரவுத் தளங்கள் (DNA Databank)
உயிரியல் உறவினர்களுடன் ஒப்பிடும் செயல்முறைகள்
தடயவியல் கண்டுபிடிப்புகளின் வெளியீடு
பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணல்
சான்றுகளின் பாதுகாப்பு மற்றும் சங்கிலித் தொடர் பாதுகாப்பு (Chain of custody)
பிரித்தானிய தமிழர் பேரவையும் (BTF) காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களும் டி.என்.ஏ பரிசோதனை மற்றும் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பது தொடர்பான தகவல்களைப் பலமுறை கோரியுள்ளனர். எவ்வாறாயினும், முடிவுகளின் விரிவான பொது வெளிப்படுத்தலோ அல்லது வடக்கு-கிழக்கு முழுவதும் உள்ள இரத்த உறவினர்களுடன் உடல் பாகங்களை ஒப்பிடுவதற்கான முறையான திட்டத்திற்கான ஆதாரங்களோ இல்லை.
நம்பகமான மற்றும் வெளிப்படையான அடையாளங் காணல் செயல்முறை இல்லாமல், குடும்பங்கள் தொடர்ந்து நிச்சயமற்ற நிலையில் தவிக்கின்றன மற்றும் அவர்களுக்கான நீதி மறுக்கப்படுகிறது.
ஒரு சுயாதீன சர்வதேச டி.என்.ஏ (DNA) தரவு வங்கியின் தேவை
இலங்கையில் மனிதப் புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதில் உள்ள ஒரு முக்கிய தடை, நம்பகமான மற்றும் சர்வதேச மேற்பார்வையின் கீழ் இயங்கும் டி.என்.ஏ அடையாளங் காணல் பொறிமுறை இல்லாமை ஆகும்.
சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தடயவியல் நிறுவனங்களின் மேற்பார்வையின் கீழ் ஐக்கிய இராச்சியத்தில் அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடு ஒன்றில் ஒரு சுயாதீனமான டி.என்.ஏ தரவு வங்கி (DNA Databank) நிறுவப்பட வேண்டும்.
தசாப்த காலத் தோல்வியுற்ற விசாரணைகள் மற்றும் தண்டனையில் இருந்து விலக்கு அளிக்கும் (Impunity) உள்நாட்டு நடைமுறைகள் காரணமாக, உள்நாட்டு செயல்முறைகளில் சிறிதும் நம்பிக்கையற்ற பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இத்தகைய பொறிமுறையானது நம்பிக்கையை அளிக்கும்.
இந்த டி.என்.ஏ தரவு வங்கி பின்வருவனவற்றைச் செய்ய வேண்டும்:
இலங்கையிலும் உலகளாவிய தமிழ் புலம்பெயர் சமூகத்திலும் வாழும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உயிரியல் உறவினர்களிடமிருந்து (Biological relatives) தன்னார்வ டி.என்.ஏ குறிப்பு மாதிரிகளைச் சேகரித்தல்.
சான்றுகளைச் சேகரித்தல், சேமித்தல் மற்றும் பாதுகாப்பிற்கான சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட தரங்களைப் பேணுதல்.
இலங்கையில் உள்ள அனைத்து மனிதப் புதைகுழி தளங்களிலிருந்தும் மீட்கப்பட்ட மனித உடற்பாகங்களுடன் டி.என்.ஏ ஒப்பீட்டை எளிதாக்குதல்.
சர்வதேச தடயவியல் நிபுணர்கள் மற்றும் குடும்பப் பிரதிநிதிகள் இந்தச் செயல்முறையைக் கண்காணிக்க அனுமதித்தல்.
சேகரிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை, அடையாளம் காணப்பட்ட பொருத்தங்கள் மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய காலமுறை அறிக்கைகளை வெளியிடுதல்.
அடையாளம் காணப்பட்ட உடற்பாகங்கள் கண்ணியத்துடனும் முறையான ஆவணங்களுடனும் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுவதை உறுதி செய்தல்.
ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐரோப்பாவில் கணிசமான தமிழ் புலம்பெயர் மக்கள் வாழ்ந்து வருவதைக் கருத்தில் கொண்டு, இத்தகைய தரவு வங்கியானது பரந்த பங்களிப்பைச் சாத்தியமாக்கும் மற்றும் இலங்கையில் வசிக்காத உறவினர்களைக் கொண்ட பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதற்கான வாய்ப்பை கணிசமாக மேம்படுத்தும்.
இப் பொறிமுறையானது எதிர்கால சர்வதேச பொறுப்புக்கூறல் செயல்முறைகளுடன் இணைக்கப்பட வேண்டும், மற்றும் பொஸ்னியா, கொசோவோ, அர்ஜென்டினா மற்றும் பிற போருக்குப் பிந்தைய சூழல்களில் நிறுவப்பட்ட தடயவியல் அடையாளங் காணல் திட்டங்களிலிருந்து பெறப்பட்ட பாடங்களை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.
செயற்கைக்கோள் மற்றும் தொலை உணர்வு பகுப்பாய்வு (Satellite and Remote Sensing Analysis)
நவீன தடயவியல் விசாரணைகள் மனிதப் புதைகுழிகள் மற்றும் கொடூரமான குற்றங்கள் தொடர்பான சான்றுகளை அடையாளம் காணவும், கண்காணிக்கவும் மற்றும் பாதுகாக்கவும் செயற்கைக் கோள் படங்கள், வான்வழி புகைப்படங்கள் மற்றும் புவிசார் நுண்ணறிவை (Geospatial intelligence) அதிகளவில் நம்பியுள்ளன.
ஒரு சுயாதீனமான சர்வதேச குழு, மோதல் காலம் மற்றும் போருக்குப் பிந்தைய உடனடி ஆண்டுகளில் அடையாளம் காணப்பட்ட மற்றும் சந்தேகிக்கப்படும் அனைத்து மனிதப் புதைகுழி இடங்களையும் உள்ளடக்கிய வரலாற்று செயற்கைக் கோள் படங்களின் விரிவான பகுப்பாய்வை நடத்த வேண்டும்.
இந்த பகுப்பாய்வு பின்வருவனவற்றைச் செய்ய வேண்டும்:
மோதல் காலம் மற்றும் போருக்குப் பிந்தைய உடனடி ஆண்டுகளின் செயற்கைக் கோள் படங்களை ஆய்வு செய்தல்.
அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகள், மண் சிதைவு (soil disturbance) மற்றும் ரகசியமாக புதைக்கப்பட்ட இடங்களுக்கான சான்றுகளை அடையாளம் காணல்.
இராணுவ முகாம்கள், தடுப்பு முகாம்கள் மற்றும் மோதல் வலயங்களைச் சுற்றியுள்ள நிலப்பரப்பு மற்றும் நிலப் பயன்பாட்டின் மாற்றங்களைத் தீர்மானித்தல்.
செயற்கைக்கோள் கண்டுபிடிப்புகளை சாட்சிகளின் வாக்குமூலங்கள், இராணுவ நகர்வுகள் மற்றும் காணாமல் போனோர் பதிவுகளுடன் தொடர்புபடுத்துதல்.
எதிர்கால நீதித்துறை நடவடிக்கைகளுக்காக புவிசார் சான்றுகளைப் பாதுகாத்தல்.
இன்னும் கண்டுபிடிக்கப்படாத கூடுதல் புதைகுழிகளை அடையாளம் காண உதவுதல்.
போர்க் குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனவழிப்பு சம்பந்தப்பட்ட சர்வதேச விசாரணைகளில் செயற்கைக் கோள் சான்றுகள் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன, மேலும் அவை இலங்கையின் மனிதப் புதைகுழிகள் மீதான எந்தவொரு நம்பகமான விசாரணையிலும் ஒரு அங்கமாக இருக்க வேண்டும்.
அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழிகளை உடனடியாக அகழ்வாராய்ச்சி செய்தல்
சாட்சிகளின் வாக்குமூலங்கள், உள்ளூர் அறிவு மற்றும் முந்தைய விசாரணைகள் மூலம் அடையாளம் காணப்பட்ட பல இடங்கள் இன்னும் அகழ்வாராய்ச்சி செய்யப்படாமலோ அல்லது போதுமான அளவு விசாரிக்கப்படாமலோ உள்ளன.
அடையாளம் காணப்பட்ட மற்றும் சந்தேகிக்கப்படும் அனைத்து மனிதப் புதைகுழி தளங்களையும் உடனடியாக தடயவியல் மதிப்பீடு மற்றும் அகழ்வாராய்ச்சி செய்ய சர்வதேச சமூகம் அழைப்பு விடுக்க வேண்டும், இதில் பின்வருவன அடங்கும்:
மண்டைதீவு
செம்மணி
கொக்குத்தொடுவாய்
மன்னார்
முல்லைத்தீவு
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள், சாட்சிகள் மற்றும் மனித உரிமை அமைப்புகளால் அடையாளம் காணப்பட்ட கூடுதல் இடங்கள்.
அனைத்து அகழ்வாராய்ச்சிகளும் சர்வதேச தடயவியல் தரநிர்ணயப்படி, சுயாதீன சர்வதேச அவதானிப்பின் கீழும் நடத்தப்பட வேண்டும்.
இத்தகைய அகழ்வாராய்ச்சிகளின் நோக்கங்கள் பின்வருமாறு இருக்க வேண்டும்:
மனித உடற்பாகங்களை மீட்டெடுத்தல் மற்றும் பாதுகாத்தல்.
தடயவியல் மற்றும் டி.என்.ஏ பகுப்பாய்வு மூலம் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணல்.
சாத்தியமான இடங்களில் மரணத்திற்கான காரணம் மற்றும் முறையைத் தீர்மானித்தல்.
எதிர்கால குற்றவியல் நடவடிக்கைகளுக்காக ஆதாரங்களைச் சேகரித்து பாதுகாத்தல்.
வலிந்து காணாமல் ஆக்கப்படுதல், நீதிமன்றத்திற்கு புறம்பான மரண தண்டனைகள் மற்றும் பிற சர்வதேச குற்றங்களின் வடிவங்களை ஆவணப்படுத்துதல்.
பொறுப்புக்கூறல் இல்லாமை
மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்படும் போது, பின்வருவனவற்றை அடையாளம் காணக் கூடிய குற்றவியல் விசாரணைகள் தொடங்கப்பட வேண்டும்:
நேரடியாக குற்றமிழைத்தவர்கள்.
குற்றங்களுக்கு உத்தரவிட்டவர்கள், வசதி செய்துகொடுத்தவர்கள் அல்லது மறைத்தவர்கள்.
இராணுவ மற்றும் அரசியல் கட்டளைத் தொடர்கள் (Chains of command).
நிறுவனப் பொறுப்பு (Institutional responsibility).
அரசுப் பொறுப்பு (State responsibility).
கட்டளைப் பொறுப்பு (Command responsibility).
அதற்குப் பதிலாக, இலங்கை நீண்ட காலமாக தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கும் ஒரு வழிமுறையையே வெளிப்படுத்தியுள்ளது.
இதுவரை:
இந்த மனிதப் புதைகுழிகளில் உள்ள மரணங்களுக்குப் பொறுப்பானவர்களை எந்தவொரு விரிவான நீதித்துறை செயல்முறையும் தீர்மானிக்கவில்லை.
பெரும்பாலான மனிதப் புதைகுழி விசாரணைகளில் இருந்து அர்த்தமுள்ள எந்தவொரு வழக்குகளும் தொடரப்படவில்லை.
சுயாதீன நீதித்துறை வழிமுறைகள் மூலம் எந்தவொரு கட்டளைப் பொறுப்பும் ஆராயப்படவில்லை.
குடும்பங்களுக்கு உண்மை, நீதி மற்றும் இழப்பீடுகள் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகின்றன.
மனிதப் புதைகுழிகள் என்பவை போர்க் குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனவழிப்பு செயல்கள் தொடர்பான சான்றுகளைக் கொண்டிருக்கக் கூடிய சாத்தியமான குற்றக் காட்சிகளாகும். எனவே, விசாரணைகள் எச்சங்களை மீட்பதற்கும் அப்பால் அனைத்து மட்டங்களிலும் பொறுப்புக்கூறலை நாட வேண்டும்.
சர்வதேச தடயவியல் மற்றும் விசாரணை உதவிகளை நிராகரித்தல்
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் சர்வதேச மனித உரிமை வல்லுநர்கள் பின்வருவனவற்றைத் தொடர்ந்து கோரி வருகின்றனர்:
சுயாதீன சர்வதேச தடயவியல் நிபுணர்கள்.
அகழ்வாராய்ச்சிகளின் சர்வதேச கண்காணிப்பு.
சர்வதேச புலனாய்வாளர்களின் பங்களிப்பு.
சான்றுகளைப் பாதுகாப்பதில் ஐநா-வின் ஈடுபாடு.
அடையாளங் காணல் செயல்முறைகளின் சர்வதேச மேற்பார்வை.
இக் கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும், இலங்கை அரசாங்கம் முழுமையான சுயாதீனமான சர்வதேச விசாரணைப் பொறிமுறையை நிறுவுவதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தவில்லை. சான்றுகள் மற்றும் குற்றக் காட்சிகளை ஆராய்வதில் சர்வதேச தடயவியல் பங்களிப்பிற்கும் சுயாதீன சர்வதேச புலனாய்வாளர்களுக்கும் பயனுள்ள பாத்திரம் வழங்கப்படவில்லை.
இந்த வெளிப்படைத்தன்மையின்மை உள்நாட்டு செயல்முறைகள் மீதான நம்பிக்கையை கணிசமாக சீர்குலைத்துள்ளது.
குடும்பங்களின் உரிமைகள்
சர்வதேச சட்டத்தின் கீழ், காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு பின்வரும் உரிமைகள் உள்ளன:
தங்களது அன்புக்குரியவர்களின் நிலை குறித்த உண்மையை அறிந்து கொள்ளுதல்.
விசாரணைகள் குறித்த தகவல்களைப் பெறுதல்.
விசாரணைச் செயல்முறைகளில் பங்கேற்றல்.
நீதி மற்றும் பயனுள்ள தீர்வுகளைப் பெறுதல்.
இழப்பீடுகளைப் பெறுதல்.
உடற்பாகங்கள் மீட்டெடுத்தல் மற்றும் அடையாளம் காணுதல்.
பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவும், விசாரணை முடிவுகளை வெளிப்படுத்தவும் தொடர்ந்து தவறி வருகின்றமையானது இந்த உரிமைகளைத் தொடர்ந்து மறுப்பதாக அமைகிறது.
பரிந்துரைகள்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட சர்வதேச சமூகம் அவசரமாக பின்வருவனவற்றிற்கு அழைப்பு விடுக்க வேண்டும்:
இலங்கையில் மனிதப் புதைகுழிகள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து விசாரிப்பதற்கான ஒரு சுயாதீன சர்வதேச விசாரணைப் பொறிமுறை.
ஐக்கிய இராச்சியத்தில் அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடு ஒன்றில் சர்வதேச மேற்பார்வையிலான டி.என்.ஏ தரவு வங்கியை நிறுவுதல்.
இலங்கையிலும் உலகளாவிய தமிழ் புலம்பெயர் சமூகத்திலும் உள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடமிருந்து டி.என்.ஏ sanru மாதிரிகளைச் சேகரித்தல்.
அடையாளம் காணப்பட்ட அனைத்து மனிதப் புதைகுழி தளங்களுக்கும் சர்வதேச தடயவியல் நிபுணர்களை உடனடியாக அனுப்புதல்.
மோதல் காலம் மற்றும் மோதலுக்குப் பிந்தைய காலங்களில் அறியப்பட்ட மற்றும் சந்தேகிக்கப்படும் அனைத்து மனிதப் புதைகுழி இடங்களின் விரிவான செயற்கைக் கோள் படங்கள் மற்றும் புவிசார் பகுப்பாய்வு.
மண்டைதீவு மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள் மற்றும் தடயவியல் சான்றுகள் மூலம் அடையாளம் காணப்பட்ட பிற இடங்கள் உட்பட, அடையாளம் காணப்பட்ட தளங்களை உடனடியாக அகழ்வாராய்ச்சி செய்தல்.
சுயாதீன தடயவியல் பகுப்பாய்வு மற்றும் டி.என்.ஏ ஒப்பீட்டு முடிவுகளை வெளியிடுதல்.
அனைத்து தடயவியல் சான்றுகளையும் குற்றக் காட்சிகளையும் பாதுகாத்தல்.
விசாரணைச் செயல்முறைகள் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் முழுமையான பங்களிப்பு.
கட்டளைப் பொறுப்பு, நிறுவனப் பொறுப்பு மற்றும் அரசப் பொறுப்பு ஆகியவற்றை விசாரித்தல்.
எதிர்கால சர்வதேச பொறுப்புக்கூறல் வழிமுறைகளுக்காக ஆதாரங்களைப் பாதுகாத்தல்.
அகழ்வாராய்ச்சி முன்னேற்றம், தடயவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணல் குறித்து வழக்கமான பொது அறிக்கையிடல்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மீண்டும் இக் குற்றங்கள் நிகழாது என்பதற்கான உத்தரவாதங்கள் மற்றும் பயனுள்ள தீர்வுகள்.
முடிவுரை
இலங்கையின் வடக்கு-கிழக்கு எங்கும் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகள் வெறும் தொல்பொருள் கண்டுபிடிப்புகள் அல்ல; அவை உலகின் மிகப் பெரிய தீர்க்கப்படாத காணாமல் ஆக்கப்பட்டோர் நெருக்கடிகளில் ஒன்றுடன் தொடர்புடைய குற்றக் காட்சிகளாகும்.
வெளிப்படையான அடையாளங் காணல், பொறுப்புக்கூறல் அல்லது நீதி இன்றி எலும்புக்கூடுகளை மீட்பது மட்டும் பாதிக்கப்பட்டவர்களினதும் அவர்தம் குடும்பத்தினரினதும் உரிமைகளைப் பூர்த்தி செய்யாது. அர்த்தமுள்ள சர்வதேச தடயவியல் மற்றும் புலனாய்வு ஈடுபாட்டை அனுமதிக்கத் தொடர்ந்து மறுப்பது உள்நாட்டு செயல்முறைகள் மீதான நம்பிக்கையை மேலும் சிதைத்துள்ளது.
உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றிற்கு உடல்களைத் தோண்டியெடுப்பதற்கும் மேலான நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. அவற்றுக்கு சுயாதீன விசாரணைகள், சர்வதேச தடயவியல் நிபுணத்துவம், செயற்கைக் கோள் பட பகுப்பாய்வு, டி.என்.ஏ அடையாளங் காணல், சான்றுகளைப் பாதுகாத்தல், குற்றவாளிகளைத் தண்டித்தல் மற்றும் கட்டளைப் பொறுப்பை ஆராய்தல் ஆகியவை அவசியமாகும்.
ஐக்கிய இராச்சியத்தில் அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒரு சுயாதீனமான டி.என்.ஏ தரவு வங்கியை நிறுவுதல், வரலாற்று செயற்கைக்கோள் படங்களின் முறையான பகுப்பாய்வு மற்றும் மண்டைதீவு போன்ற அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழி தளங்களை உடனடியாக அகழ்வாராய்ச்சி செய்தல் ஆகியன உண்மையை வெளிக்கொணரவும், பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவும், ஆதாரங்களைப் பாதுகாக்கவும் மற்றும் நீதியை வழங்கவும் அவசியமான படிகளாகும்.
இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், இலங்கையின் மனிதப் புதைகுழி விசாரணைகள், காணாமல் ஆக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை நோக்கிய பாதையாக அமைவதற்குப் பதிலாக, தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கும் நீண்ட வரலாற்றின் மற்றொரு அத்தியாயமாக மாறும் அபாயத்தைக் கொண்டுள்ளன.
Best Wishes
S. Sangeeth
BTF Media Contact
Disclaimer
This email and any attachments with it are confidential and intended solely for
the use of the individual or entity to whom they are addressed. If you have
received this email in error please let us know at the earliest. Any
unauthorised use, disclosure, or copying is not permitted.
Every effort has been made to
ensure that this e-mail is virus free. However, the British Tamils Forum does
not accept any liability in respect to an undetected virus and recommends that
the recipient(s) use an up to date virus scanner.
Registered Office: British Tamils Forum, Unit 1, Fountayne
Business Centre, Broad lane, London, N15 4AG
Telephone: +44(0)20 8808 0465
Website: www.britishtamilsforum.org
E-mail: in...@britishtamilsforum.org
Twitter: https://twitter.com/tamilsforum