(நாலடி நல்கும் நன்னெறி 27: அறநெறி அறியுங்கள்! – தொடர்ச்சி)
நாலடி நல்கும் நன்னெறி
28. பெரியோரைப் பிணித்துக் கொள்க!
அடைந்தார்ப் பிரிவு மரும்பிணியுங் கேடு
முடங்குடம்பு கொண்டார்க் குறலாற் – றொடங்கிப்
பிறப்பின்னா தென்றுணரும் பேரறிவி னாரை
யுறப்புணர்க வம்மாவென் னெஞ்சு.
– நாலடியார், நல்லினஞ் சேர்தல், பாடல் 173
[அடைந்தார்ப் பிரிவும் அரும்பிணியும் கேடும்
உடங்கு உடம்பு கொண்டார்க்கு உறலால் – தொடங்கிப்
பிறப்பு இன்னாது என்று உணரும் பேரறிவினாரை
உறப் புணர்க அம்மாஎன் நெஞ்சு.]
கருத்துரை:
அன்பானவர்களைப் பிரிதலும் தீர்க்க இயலா நோயும் கேடுகளும் உடம்பிற்கு வருவதால் பிறப்பு, துன்பம் தரக்கூடியது என்பதை உணரும் பெரியோரைப் பற்றிக் கொள்க.
பதவுரை:
அடைந்தார் = அடைந்தவரை; அஃதாவது அன்பால் தன்னுடன் இணைந்திருப்பவர்கள்; பிரிவும்=அஃதாவது இயற்கையாகவும் செயற்கையாகவும் தம்மைச் சார்ந்தவர்களான பெற்றோர், வாழ்க்கைத் துணைவர்கள், உடன்பிறப்புகள், பேரன்மார், பேத்திமார், தாத்தாமார், பாட்டிமார் முதலான குடும்பத்தினர், நண்பர்கள், காதலர்கள், உறவினர்கள் முதலியோரைப் பிரிந்து நிற்றலும்; அரும்=அரிய(மருந்தால் தீர்க்க முடியாத); பிணியும்=கொடுமையான நோயும்; கேடும்=அழிவு, இழப்பு, வறுமை, தொல்லை, தீமை, பிற வகைத் துன்பங்கள் ஆகிய கேடுகளும்; உடங்கு= உடன்; உடம்பு= உடம்பை; கொண்டார்க்கு= உடையவர்களுக்கு; உறலால்= வருவதால்; தொடங்கி = தொடக்கம் முதல்; பிறப்பு=பிறப்பு என்பது; இன்னாது= துன்பம் தருவது; என்று= என்று; உணரும்=உணரக்கூடிய; பேரறிவினாரை=பேரறிவுசால் பெரியோர்களை; உறப்பு உணர்க=நெருக்கமாய் உணர்க; அம்மாஎன் நெஞ்சு=(அம்மா என்பது அசைச்சொல்.) என் நெஞ்சே!
“விறப்பு முறப்பும் வெறிப்புஞ் செறிவே” என்கிறார் தொல்காப்பியர்(தொல்காப்பியம், சொல்லதிகாரம், 347); செறிவு என்பது இங்கே நெருக்கத்தைக் குறிக்கிறது. உற = சிக்கென, புணர்க=பிணிப்பதாக என உறப்புணர்க என்பதற்கு விளக்கமளிப்போரும் உள்ளனர்.
நெருக்கமாய் உணர்ந்தால்தானே பற்றிக் கொள்ள இயலும். எனவே, எல்லாம் சரிதான்.
பிறவியைத் துன்பம் நிறைந்ததாக இறையன்பர்கள் கூறுகின்றனர். பிறவியைப் பெருங்கடலை நீந்துவது போன்ற துன்பமானது என்றே அவர்கள் கூறுகின்றனர். எனவேதான் திருவள்ளுவரும் ‘பிறவிப் பெருங்கடல்’ என்கின்றார்.
இன்னல் தரும் பிறவித் துன்பத்திலிருந்து விடுபட ஆன்றோரைத் துணையாகக் கொள்ளச் சொல்கிறது இப்பாடல்.
– இலக்குவனார் திருவள்ளுவன்
ஃஃஃ அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 01 May 2026 No Comment
(வெருளி நோய்கள் 1341 -1345 : தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 1346 -1350
தென் கரோலினா(Southcarolina) மாநிலம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தென் கரோலினா வெருளி.
தென்கரோலினா அரசு, அதன் மக்கள், விளைபொருட்கள், பழக்கவழக்கம் போன்றவற்றால் பகுத்தறிவிற்குப் பொருந்தாத கவலை கொண்டு பேரச்சம் கொள்வர்.
00
தென் தகோட்டா மாநிலம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தென் தகோட்டா வெருளி.
தென் தகோட்டா அரசு, அதன் மக்கள், விளைபொருட்கள், பழக்கவழக்கம் போன்றவற்றால் பகுத்தறிவிற்குப் பொருந்தாத கவலை கொண்டு பேரச்சம் கொள்வர்.
00
தெற்குப் பகுதி குறித்த வரம்பற்ற பேரச்சம் தென் வெருளி.
தென்திசை எமனுக்குரியது.எனவே, தெற்கு பார்த்த வாசல் உள்ள வீட்டில் குடியிருக்கவோ வாங்கவோ மாட்டார்கள். இவ்வாறு கணியத்தின்படியான நம்பிக்கைகள் அடிப்படையில் தென்திசைகுறித்து பெரிதும் அஞ்சுவோர் நம் நாட்டில் உள்ளனர்.
00
‘அண்டார்டிகா’ குறித்த காரணமற்ற பேரச்சம் தென்துருவ வெருளி.
தென்துருவம்(South Pole) 98விழுக்காடு பனிப்பாறைகளால் நிறைந்த பகுதி. மிகுதியும் குளிர்ப்பகுதி என்பதால் துணிந்து ஆராய்ச்சிக்குச் செல்பவர்களுக்கு அச்சம் வருவது இயல்புதான். ஆனால், அங்கே செல்லாமலே அதைப்பற்றிக் கேள்விப்படும் பொழுதும் அதன் படங்களைப்பார்க்கும் பொழுதும் காரணமற்ற அச்சம் சொள்வோர் உள்ளனர்.
அண்டார்டிக்கா என்பது கிரேக்கக் கூட்டுச் சொல். இதன் பொருள்”ஆர்க்டிக்கிற்கு எதிரிடையான”, “வடக்கிற்கு எதிரிடையாக” என்பது ஆகும்.[
00
தென்பயணம் குறித்த வரம்பற்ற பேரச்சம் தென்பயண வெருளி.
Notio என்னும் கிரேக்கச் சொல்லிற்குத் தெற்கு எனப் பொருள்.
காண்க: தென் வெருளி(Notophobia)
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 3/5
00