-----------------------
”குட்ட நாட்டிற்குக் கிழக்கில் நிற்கும் மலைகளில் பேரி யாற்றங்கரையில் நேரிமலை நிற்கிறது. அந்த மலையடிப் பகுதியில் சேரமன்னர் போதந்து வேனிற் காலத்தில் தங்கி மலைவளம் கண்டு இன்புறுவது வழக்கம். இப்போது அங்குள்ள நேரியமங்கலம் என்னும் மூதூரே பண்டு சேரமன்னர் வந்து தங்கிய இடமாகலாம் என அறிஞர் கருதுகின்றனர்; கற்குகைகளும் பாழ்பட்ட பழங்கட்டிடங்கள் சிலவும் அவ்விடத்தில் இருந்து பழம்பெருமையைப் புலப்படுத்தி நிற்கின்றன. வேந்தர்கள் அங்கு வந்து தங்கும் போது பாணரும் கூத்தருமாகிய இரவலர் பலரும் வேந்தன் திருமுன் போந்து, பாட்டும் கூத்தும் நல்கி இன்புறுத்துவர். நார்முடிச் சேரல், தன் மனைவியும் அரசியற் சுற்றமும் உடன்வர, நேரிமலைக்குப் போந்து தங்கினான். அக் காலையில் காப்பியாற்றுக் காப்பியனாரும் வந்திருந்தார். வேந்தன் இன்பமாக இருக்கும் செவ்வி நோக்கி இனியதொரு பாட்டைப் பாடினார். விறலி யொருத்தியை நார்முடிச் சேரல்பால் ஆற்றுப்படுக்கும் குறிப்பில் அப் பாட்டு இருந்தது. ” - ஔவை துரைசாமிப்பிள்ளை, சேரமன்னர் வரலாறு, 177.
பதிற்றுப்பத்து: நேரி - நேரி மலை. பாடுசால் நெடுவரை நேரி எனவும், கல்லுயர் நேரி எனவும் கூட்டுக. (ஔவை)
நீரிமிழ் சிலம்பின் நேரியோன் (பதிற். 40)
பாடுசால் நெடுவரைக் கல்லுயர் நேரிப் பொருநன் (பதிற். 67)
https://en.wikipedia.org/wiki/Neriamangalamhttps://www.youtube.com/watch?v=BMVa3CRpXos நேரிவாயில்
”ஒருகால் செங்குட்டுவன் மலைவளம் காண விரும்பித் தன் மனைவி இளங்கோ வேண்மாள் உடன்வரப் பேரியாற்றங்கரைக்குச் சென்றான். அங்கே, அதற்கு இலவந்திகை வெள்ளிமாடம் என்றோர் அரண்மனை இருந்தது அப்போது அவனுடன் அரசியற் சுற்றத்தாரும் தண்டமிழாசானாகிய சாத்தனாரும் வந்திருந்தனர். அவ்விடம், நேரிமலையின் அடியில் பேரியாற்றங்கரையில், இப்போது உள்ள நேரிமங்கலம் என்னும் இடமாகும். இன்றும் அங்கே இடிந்து பாழ்பட்டுப்போன அரண்மனைக் கட்டிடங்கள் உள்ளன எனத் திருவாங்கூர் நாட்டியல் நூல்[14] கூறுகிறது. இடைக்காலத்தில் வாழ்ந்த அரச குடும்பத்தின் ஒரு கிளை அங்கே இருந்தது என அங்கு வாழ்பவர் கூறுகின்றனர். ”
14. Travancore State Manual Voi. iv. p. 223.
பல்யானைச் செல்கெழு குட்டுவன், ஔவை சு. து., செந்தமிழ், 1956
“தென்னம் பொருப்பின் முடியில் தோன்றியோடும் பேரியாற்றின் கரையில் நேரி மலை, அயிரை மலை என இருமலைகள் உள்ளன. நேரிமங்கலத்துக்கு எதிரே நிற்பது நேரி மலை. நேரிமங்கலம் முன்னாளில் சேர மன்னர் வந்து தங்கிய சிறப்புடையது; அவ் வூர்க்கண் பழங்காலக் குறிப்புகள் பல இன்றும் காணப்படுகின்றன. அம்மலைக்குத் தென்கிழக்கில் நிற்கும் மலை அயிரை எனப்படுகிறது; அதன்கண் தோன்றி மேற்கே ஓடும் காட்டாற்றுக்கு அயிரையாறு என்பது இன்றும் வழங்கும் பெயர். அம்மலைக்கண் பண்டைத் தமிழ் வேந்தரான சேர மன்னர் கொற்றவையை நிறுவி வழிபாடு செய்வது மரபு. யானைகளின் மருப்புக்களால் அமைக்கப்பட்ட கட்டிலின் மேல் கொற்றவையை எழுந்தருள்வித்துக் குருதிப்பலி தந்து அவ்வழிபாடு செய்யப்படும். அதனால் அப்பகுதி இந்நாளில் தேவிகுளம் என்ற பெயர்தாங்கி நிற்கிறது. பண்டையோர் முறைப்படி செல்யானைக் குட்டுவன் வஞ்சிநகர்க்கண் இருந்து அயிரைமலைக்குத் தன் அரசியற் சுற்றத்தோடு சென்று கொற்றவையை அவ்ழிபட்டான். அந்நாளில் கீழ்க்கடல் சோழ பாண்டியர்க்கும் மேலைக்கடல் சேரக்கும் உரியவாயிருந்தன. இருகடல் நீரையும் ஒருநாளில் கொணர்ந்து நீராடி வழிபாடு செய்வது முறையென்று அறிந்தோர் கூறினர். அக் காலத்தே இன்றுபோல் வாய்த்த போக்குவரவு வசதி இல்லை; ஆயினும் கீழ்கடற்கும் மேலைக்கடற்கும் வலிய களிற்று யானைகளை அஞ்சலுக்கேற்ப நிரல்பட நிறுத்தி ஒருபகலில் இருகடல் நீரும் கொணருமாறு குட்டுவன் ஏற்பாடு செய்தான். இவ்வாறு செய்ததனால் இவன் இருகடல் நீரும் ஒருபகல் ஆடினோன் என்ற சிறப்புக்கு உரியன் ஆனான். இதனைப் பதிகம்,
”கருங்களிற் றியானைப் புணர்நிரை நீட்டி
இருகடல் நீரும் ஒருபகல் ஆடி
அயிரை பரைஇய”
ஆற்றல் சான்றவன் என்று கூறுவதாயிற்று,”
இப்பொருளை முன்னரே கூறியுள்ளேன். இப்போது ஔவை உரை படித்தாலும் பொருந்துகிறது. சங்க காலத்து அயிரைமலை எதுவென்று பிற்காலச் சமணர்கள் கல்வெட்டுகளில் அறிவிப்பதால் தெரியலாகிறது. அயிரைமலை என்பது இப்போது அயிரை கோவில், சமணர் குகைகள், கல்வெட்டுகள் உள்ள குன்றுக்கு அருகே இப்போது ஆனைமலை என வழங்கும் மிக உயர்ந்த மலை என்பது தெளிவாகிறது. அதன் அருகே நேரிமலை, நேரிமங்கலம்.
நா. கணேசன்