சென்னை : ""இலங்கை தீவுகளில் சீனர்கள் துறைமுகம், விமானதளம் அமைத்து வருவது
இந்தியாவிற்கு பேராபத்தாக முடியும்,'' என ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ
பேசினார். கலாநிதி எழுதிய, "சீனப் பெருஞ்சுவர்' என்ற நூல் வெளியீட்டு விழா,
சேத்துப்பட்டிலுள்ள சின்மயா ஹெரிடேஸ் மையத்தில் நேற்று முன்தினம் நடந்தது.
சித்தஸ் குழுமத்தின் தலைவர் மாதவ் குல்கர்னி தலைமை வகித்தார். நூலாசிரியர்
கலாநிதி வரவேற்று பேசினார். ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ நூலை வெளியிட்டார்.
முதல் பிரதியை குமரன் சில்க் உரிமையாளர் பாபு பெற்றுக் கொண்டார். அவரை
தொடர்ந்து, ஐ.சி.டி.ஆர்., குழுமத்தின் தலைவர் டத்தோ ராமசாமி, பி.எம்.ஆர் குழும
கல்வி நிறுவனங்களின் தலைவர் முத்துவேல் ராஜ், ஜி.எம்.ஆர் குழுமத்தின் இயக்குனர்
வாஞ்சி, ராஜ் டி.வி., நிர்வாக இயக்குனர் ரவீந்திரன் ஆகியோரும் நூலின் பிரதியை
பெற்றுக் கொண்டனர். நூலை வெளியீட்டு வைகோ பேசியதாவது: ஐந்நூறு அடி அகல சாலை, 20
அடுக்கு மேம்பாலமென, உலக நாடுகள் வியந்து பார்க்கும் அளவிற்கு சீனா
தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கிறது. அணு ஆயுத வல்லரசாகவும் அந்நாடு
விளங்குகிறது. சீனாவில் சங்கை என்ற மாநிலத்தில் திருமணத்திற்கு பின், ஆண்கள்
சமையல் செய்ய வேண்டுமென்ற பழக்கம் உள்ளது. இலங்கை தீவுகளில் சீனர்கள்
துறைமுகம், விமானதளம் அமைத்து வருவது எதிர்காலத்தில் இந்தியாவிற்கு பேராபத்தாக
முடியும். நாட்டு மக்களுக்கு நலன் தரும் பல தகவல்களை தமது படைப்பில்
தெரிவித்துள்ள நூலாசிரியரை பாராட்டுகிறேன். இவ்வாறு வைகோ பேசினார். விழாவில்,
தமிழ் பல்கலை முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜன், உட்பட பல்வேறு முக்கிய
பிரமுகர்கள் பங்கேற்றனர்.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=48506