ஓம்.
சதுர்முக லிங்கம்
சிவனுக்கு ஐந்து முகங்கள் என்று ஆகமங்கள் கூறுகின்றன. கிழக்கு திசையை நோக்கிய முகம் தத்புருஷம்; மேற்கு திசையை நோக்கிய முகம் சத்தியோஜாதம்; தெற்கு திசையை நொக்கிய முகம் அகோரம். வடக்கு திசையை நோக்கிய முகம் வாமதேவம்; மேல் நோக்கிய முகம் ஐந்தாவது முகம். அது ஈசானியம் என் அழைக்கப்படுகிறது. நான்கு முகங்களையே நான்கு திசைகளாகவும், நான்கு வேதங்களாகவும், நான்கு யுகங்களாகவும் பல விதமாக உருவகிக்கின்றனர்.
ஐந்தாவது முகம் உடலில் இருந்து வெளியேறும் ஆவிகளின் அதிபதியாக மேல் உலகங்களைக் குறிப்பிடும் வகையில் ஈசானன் என்று அழைக்கப்படுகிறது. பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே காலத்தின் பிடியில் கட்டுண்டு பூவுலகில் வாழும் மனிதர்களுக்கு நன்மைகள் புரியும் வகையில் ஐந்தாவது முகத்தை அகற்றி நான்கு முகங்களுடன் கூடிய சதுர்முக லிங்கத்தை அமைத்து வழிபடுவது மரபாக இருந்து வருகிறது. சக்தி வாய்ந்ததாகக் கருதபடும் சதுர் முக லிங்கத்தைப் பிரம்ம லிங்கம் என்றும் குறிப்பிடுகின்றனர். இத்தகைய லிங்கத்தை வழிபட சிறப்பான விதிகளும் இருக்கின்றன.
சதுர்முக லிங்கம் ஆகம முறைப்படி அமைக்கப்பட்டால், நான்கு முகங்களுக்கும் நேராக சந்நிதியில் நான்கு வாயில்கள் அமைக்கப்பட வேண்டும். மேலும் ரிக், யஜூர், சாம, அதர்வண வேத முறைகளின்படி ஒவ்வொரு முகத்துக்கும் ஒவ்வொரு வேதத்தால் பூஜை செய்ய வேண்டும். நேபாளத்தில் அமைந்துள்ள புகழ் பெற்ற பசுபதீஸ்வரர் கோயிலில் மூலவரான பசுபதிநாதர் சதுர் முக லிங்கம் ஆகும். இந்தக் கோயிலில் நான்கு முகங்களுக்கும் நான்கு வாயில்கள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு முகத்துக்கும் ஒவ்வொரு வேதப்படி பூஜைகள் நடைபெறுகின்றன. இவ்விதம் அமையப் பெறும் கோயில்களுக்கு ‘சர்வதோபத்ராலயம்’ எனப்பெயர்.
சதுர்முக லிங்க சந்நிதிகள் பல்வேறு சிவன் கோயில்களில் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆந்திர மாநிலத்தில் காளஹஸ்தியில் உள்ள சதுர்முக லிங்கம் பிரசித்தி பெற்றதாகும். தமிழகத்தில் அட்ட வீரட்ட ஸ்தலங்களில் ஒன்றான, பண்ருட்டியை அடுத்த திருவதிகையிலும், பஞ்ச பூதஸ்தலங்களில் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலையிலும், நீர்ஸ்தலமான திருவானைக்காவிலும் காஞ்சீபுரத்தில் உள்ள கச்சபேஸ்வரர் கோயிலிலும் அமைந்துள்ள சதுர் முக லிங்கங்கள் புகழ் மிக்கவையாகும்.
ச்துர்முக லிங்கத்தை நான்கு முக ருத்ராட்சத்தால் அலங்கரித்து நால் வகை வில்வங்களால் அர்ச்சனை செய்து வழிபடுபவர்கள் எட்டுத் திக்கும் புகழ்பரப்பும் பேரறிஞர்களாய் விளங்குவார்கள் என்று சைவ சமய ஆகமங்கள் கூறுகின்றன.
நன்றி காமகோடி |